Monday, September 26, 2005

கிழட்டு அனுபவங்கள்(4) - மலேசியா ராஜசேகரன்

இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட NEW ECONOMIC POLICY சொன்ன காலத்தில் முடிவடையவில்லை. வெவ்வேறு காரணங்கள சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தோடு இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்று சட்டமாக்கப் பட்டதோடு நின்றுவிட்டது. மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் எல்லா நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறிவிட்டது.

அரசாங்க வேலைகளில் தொண்ணூறு சதவீதம் மலாய்க்காரர்களுக்கு என்று ஆகி விட்டது. ஆரம்பத்தில் அரசாங்க டென்டர்களில் மலாய் நிறுவனங்களின் விலை பதினைந்தௌ சதவீதம் வரை கூடுதலாக இருந்தால் பாதகமில்லை, ப்ராஜெக்டுகள் அவர்களுக்கே வழங்கப் பட வேண்டும். விலை வித்தியாசம் அதையும் மிஞ்சினால் மட்டுமே மற்ற இனத்தவருக்கு ப்ராஜக்ட் வழங்கப் படவேண்டும் என்று ஒரு கொள்கை இருந்தது. ஆனால் தற்பொழுது எல்லா அரசாங்க டெண்டர்களுமே மலாய் நிறுவனங்களுக்கு ம்ட்டும்தான் என்று ஆகி விட்டது.

அதேபோல் பல்கலைக்கழக நுழைமுக படிப்பு - மலாய் இனத்தவருக்கு மெட்ரிக்குலேசன் என்ற கல்விமுறையின் கீழ் சொல்லிக் கொடுக்கும் அதே கல்லூரி விரிவுரையாளர்களே பரிட்சைத் தாளைத் தயார் செய்து, அவர்களே மதிப்பெண் போட்டு, அதுவும் போதவில்லை என்றால், மறுபடியும் மாணவரை பரிட்சை எழுதச் சொல்லி, மற்றோரு முறை பரிட்சைத் தாளை திருத்தும் சலுகைமுறை மலாய்க்காரர்களுக்கு. STPM என்று சொல்லப் படும், உலகத்திலேயே மிகக் கடினமான பல்கலைக்கழக நுழைமுகத் பொதுத் தேர்வுகளில் ஒன்று மற்றஇன பிள்ளைகளுக்கு. அப்படியும் சீனக் குழந்தைகள் முண்டி அடித்து படித்து பிரமாதமாகப் பாஸ் பண்ணி விடுவார்கள். இதை முடுக்குவதற்கும் ஏதோ வேலை நடந்து கொண்டுவருகிறார் போல் தோன்றுகிறது..

அரசாங்கத்தை அமைத்துள்ள கூட்டனியில் பெரும்பான்மையுடைய மலாய் கட்சியின் சென்ற ஆண்டுக் கூட்டத்தில், உயர் கல்விஅமைச்சர் (ஒரு மலாய்க்காரர்) "நான் உயர் கல்விக்கான அமைச்சராக இருக்கும் வரையில் மலாய் இன பிள்ளைகளுக்கான போது பல்கலைக் கழக இட ஒதிக்கீடு கூடுமே ஒழிய குறையாது. எக் காரணத்தைக் கொண்டும் குறைய் விடமாட்டேன்" என்று சூளு ரைத்தார். இந்த வருட STPM பரிட்ச்சை முடிவுகள் வெளிவரும்போது பார்த்தால், எல்லா பாடங்களிலும் 'A1 எடுத்த மற்ற இன மாணவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் 700+ லிருந்து, 400+ ஆக குறைந்திருந்தது. மலாய் மாணவர்களுல் மெட்ரிக்குலேசன் முறையில் எல்லா பாடங்களிலும் 'A1' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடி இருந்தது.

மலாய்க்காரர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் வரலாற்றிலேயே இதுதான் பொற்காலமாக இருக்க வேண்டும். NEP என்பது அவர்களுக்கு கிட்டிய வரப் பிரசாதம் என்றே கூறவேண்டும். கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளில் மலாய் இனம் கண்டுள்ள மாறுதல் பிரமிக்கத் தக்கதாய் உள்ளது. உலகிலேயே இவ்வளவு சொற்ப காலத்தில் இத்தகையதொரு பிரமிக்கத் தக்க சமூக - பொருளாதார சீர்திருத்த திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டிருப்பது மலேசியாவில்தான் என்பதை UN, WORLD BANK, IMF போன்ற எல்லா அமைப்புகளுமே ஒருமித்தமாய் ஒத்துக் கொண்டிருக்கின்றன. :-)

ஒரு காலத்தில் பரிதாபப் படும் நிலையில், நலிந்து போய்க் கிடந்தது மலாய் இனம். ஆனால் NEP க்கு அப்புறம் அவர்களுக்கு வந்துள்ள கம்பீரம், மனத் தெம்பு, வாழ்க்கை முறை யாவுமே மற்றவரை பிரமிக்க வைக்கும் நிலையில் உள்ளன. இவற்றை எல்லாம் போகட்டும் என்று நாம் பெருந்தன்மையோடு மனதை தேற்றிக்கொண்டாலும், ஒரு விஷயம் மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. 35 ஆண்டுகளாக எல்லா விதத்திலும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து ஊட்டப் பட்டதின் பின்விளைவு என்னவாகி விட்டது என்றால், 40 வயதுக்கு குறைந்த அத்தனை மலாய்கார குடிமகனும் படிப்பிலிருந்து, வேலைவாய்ப்பிலிருந்து, தொழில்துறை லைசன்சுகளிலிருந்து, வீடுவாசல் வாங்குவதில் சலுகைகளிருந்து, எல்லா விதத்திலும் தங்களுக்கு முதல் சலுகை வழங்கப் பட வேண்டும் என்பதை 'பிறப்பு உரிமையாக' நினைக்கத் தொடங்கி விட்டனர். இவர்களின் எண்ண ஒட்டத்தைக் கண்டு மலாய் இனத்தின் முதிய தலைவர்கள் யாவரும் பயப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால் மனதில் என்ன நினைத்தாலும், ஜனத்தொகையில் மலாய் இனத்தவர்கள் 63 சதவீதம் இருப்பதால், இவர்களைத் தட்டிப் பேச இங்கு யாருக்குமே துணிச்சல் இல்லை. அத்தோடு தட்டிப் பேச முற்பட்ட சில ம்லாய் தலைவர்கள் 'இனத் துரோகிகள்' என்று முத்திரை குத்தப் படுகிறார்கள்.

இதற்கு நடுவில்தான் இங்கு உள்ள இந்தியரின் வாழ்க்கை ஓட்டம் தட்டுத் தடுமாறிப் போய்க்கொண்டு இருக்கிறது. சரி சீனர்கள் இதை எல்லாம் எப்படி சாமாளிக்கின்ரார்கள் என்று கேட்டால். அவர்களின் DNA யே வேறு. இத் தொடரில் வரும் அடுத்த பாகம் 5 ம், 6 ம் அவர்களைப் பற்றியதே. அவற்றில் மலேசியாவில் உள்ள சீன இனத்தவரைப் பற்றி விரிவாக சொல்கிறேன்.

இப்போது நம் இனத்தைப் பார்ப்போம். முந்தைய தொடரில் கூறியதுபோல், மலாயா நாட்டிற்கு வந்த இந்திய (குறிப்பாக தமிழ் இன) 'ஸ்டோக்கின் குவாலிட்டி' சிறிது கம்மியானதாகப் போனதால், இங்கு உள்ள தமிழர்கள் கிடைத்த வாய்ப்புக்களை முறையாக பயன் படுத்த தெரியாது, இந் நாட்டில் இருக்கும் இனங்களிலேயே நலிந்த இனங்களின் ஒன்றாக தத்தளித்துக் கொண்டு இருக்கின்றனர். 30 - 40 வருடங்களுக்கு முன்பாவது இங்கு இருந்த ரப்பர் எஸ்டேடுகளில் கூட்டமாக வாழ்ந்து, ஏழைகளானாலும் ஒரு குறிக்கோளுடனான வாழ்க்கை முறையை கொண்ட ஒரு இனமாக சிறிது கவுரவத்தோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக, எஸ்டேட்டுகளில் 'குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வதோடு, கடினமாக உழைப்பவர்கள்' என்ற காரணத்தினால் இந்தோனீசியாவிலிருந்து வரும் கள்ளக் குடியேறிகளுக்கு எஸ்டேட் வேலைகளும் சென்று விடுகின்றன. இதனால் நம் இன இளைஞர்களும் எஸ்டேட் வேலைகளை வெறுத்து ஒதுக்கி, நகர்ப் புறங்களுக்கு வேலை தேடி வந்து விட்டனர்.

***************************

இப் பாகத்தை இன்று முடிக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆதலால் இந்தப் பாகத்திற்கு இன்னொரு பகுதி எழுதிவிட்டு, பாகம் 5 க்கு செல்கிறேன். நான் இவ்வளவு விரிவாக எழுதுவது போர் அடித்தால், வாசகர்கள் தயவு செய்து எனக்கு உங்கள் கருத்தை சொல்லுங்கள். விரும்பினால் என்னை தனிமடலிலும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு முன் தமிழில் எதையுமே எழுதி எனக்கு பழக்கமில்லை என்பதால் உங்கள் கருத்தினை வைத்து சொல்லுவதி சற்று இலகுவாக்கிக் கொள்கிறேன். தமிழ்மணத்தில் இப்படி ஒரு தொடருக்கு வரவேற்பு இருக்குமா என்பதே சந்தெகமாக இருந்தது. அது இப்போது நீங்கி இருக்கிறது. உங்களுக்கு எனது நன்றிகள்.

4 comments:

  1. I am reading this regularly. It is interesting and informative.

    Thanks!

    ReplyDelete
  2. எந்த நாட்டில் வாழந்தாலும் தமிழன்
    தமிழன் தான்.நானும் தொடர்ந்து
    வாசித்தே வருகிறேன்.மலே தமிழர்களின்
    பின்னணி,வரலாறு,வாழ்க்கை முறைகள்
    என்பனவற்றை அறிய ஆவலாகவே
    உள்ளோம்.எனவே தொடருங்கள் இப்படியே.

    ReplyDelete
  3. நீங்க விளக்கமாத்தான் எழுதுங்கோ.

    முழுவிவரமும் கிடைச்சா நல்லதுதானே மேட்டரைப் புரிஞ்சிக்கறதுக்கு.

    ReplyDelete
  4. தொடர்ந்து விரிவாகவே எழுதுங்கள், படிக்க நாங்கள் இருக்கிறோம். நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது - உங்களின் தொடரின் மூலம்.

    கடந்தவாரம் இங்கு (சிங்கையில்) பத்திரிக்கையில் படித்த சேதி: மலேசியாவில் தமிழர் ஒருவர் கார்/காடிகளை இறக்குமதி செய்யும் விற்பனைக்கு முயற்சிப்பதாகவும் அதற்கு அரசு அனுமதியளிக்க மறுப்பதாகவும் (அந்த வியாபாரம் பூமிபுத்ராவுக்காம்) அதையெதிர்த்து நீதிகேட்டு நீதிமன்ற படியேறியேறியிருப்பதாகப் படித்தேன். இதுபோன்று யார்யார் என்ன செய்யவேண்டும் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறதா!?

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...