Wednesday, December 28, 2005

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்



சீனர்களின் சமூக, கலாச்சார கூறுகளும் சம்பிரதாயங்களும்

நான் இதற்கு முன் எழுதிய ' கிழட்டு அநுபவங்கள்' தொடரில் சீனர்களைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதியிருந்நேன். அதை படித்த சில வாசகர்கள் சீனர்களை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக பின்னூட்டம் விட்டிருந்தனர். அதன்படி நானும் டிசம்பர் மாதம் ஒரு பதிவை எழுதுகிறேன் என்று கூறி சென்றிருந்தேன். அதை இப்போது நிறைவு செய்ய வந்துள்ளேன். துளசி கோபால, பெத்த ராயுடு, சிகிரி நீங்கள் கேட்டு கொண்டதற்காக இதோ சீனர்களின் இயல்பை குறிக்கும் மற்றோரு பதிவின் இரண்டு பகுதிகளில் முதற் பகுதி .....

1. இனம், மொழி , மதம் ஆகியவற்றின் தாக்கம்

சீனர்களிடம் ஒருமைபாட்டு தன்மை மிகவும் அதிகம். எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தர்ம காரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணங்களானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுவர். மற்ற நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும், சீனர்களிடம் இந்த இயல்பின் தாக்கம் சற்று அதிகம் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான். இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் /'ஹான்'/ என்று அழைக்க படும் ஒர இன வம்சாளியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். மதம் என்பதின் தாக்கமும் சீனாவில் அதிகம் கிடையாது. ஜனத்தொகையில் 7 விழுக்காட்டினர் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவும், 4 விழுக்காட்டினர் கிருஸ்த்துவர்களாகவும், 4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும் இருப்பர். மீதி 85 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் தழுவாதவர்கள். அதனால் வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீன மக்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் நடைமுறையில் நீங்கள் பார்க்க முடியாது.

சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்தில உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் மொழிப் பிரச்சன, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் பொதுவாக வராது இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே இருக்கும். சீனப் பிள்ளைகள் 16, 17 வயது முதலே ஊரே அறிய காதல் வயபட்டு விடுவர். காதல் என்பது சீன கலாச்சாரத்தில இயல்பான, இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கைப் பரினாமங்களில் ஒன்று.

மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜையில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக பார்க்கலாம். மலேசியாவில் சில சமயங்களில் சீன வியாபார ஸ்தலங்களில் சீனர் அல்லாத பிற இனத்தவர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், வேலை ஆட்களாக இருப்பார்கள். சாப்பாட்டு நேரத்தில் பார்த்தால் அந்த இந்திய தொழிலாளிகளும் முதலாளியோடு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து, சீனர்களை போல மூங்கில் குச்சிகளைக் கொண்டு சாதம் பரிமாறப் படும் வட்ட கிண்ணத்தை வாயருகில் வைத்து குச்சியை கொண்டு சாதத்தை வாயினுல் தள்ளி, பாரம்பரிய சீனர் பாணியில், முதலாளியும் தொழிலாளியும் ஒரே பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து உண்பதை மலேசியாவின் அத்தனை சிற்றூர்களிலும் அவ்வப்போது பார்க்கலாம்.

2. தன்மான உணர்வு

அண்டை வீட்டானாகவும், நண்பனாகவும் , சக ஊழியனாகவும, சமீபமாக உறவினனாகவும் சீனர்களோடு ஐம்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தவன் என்கிற வகையில் ( நான்கு வருடங்களுக்கு முன்பு என் பெரிய தகப்பனார் ஒருவரின் பேரன் தன்னோடு வேலை செய்த ஒரு சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சுவாரஸ்யமான அநுபவம். ஆரம்பத்தில் "இனம் மாறி திருமணமா?" என்று நாங்கள் குழம்பினாலும், பின்னர் எல்லோருமே ஒருமித்து அமோதித்து, அந்த திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால் அதே நேரத்தில அந்த பையன் ஜாதியத்தில் குறைந்த ஒரு தமிழ்பெண்ணை தான் காதலிப்பதாக வீட்டுக்கு கூட்டி வந்திருந்தால், எங்கள் குடும்ப சூழலில் அவரின் விருப்பம் பரவலாக ஆமோதிக்க பட்டு ஏற்று கொள்ள பட்டிருக்குமா என்று என்னை நானே அடிக்கடி கேட்டு கொள்வது உண்டு .

:-) ...... "என்ன புன்முறுவல் ?" என்று கேட்கிறீர்களா ? .... நம் இனத்தோடு ஒட்டி பிறந்த சாதியம் என்ற சாபத்தை நினைத்து பார்க்கிறேன், ஒரு சிறு வரண்ட விரக்திப் புன்முறுவல் என்னையும் அறியாமல் பூக்கின்றது. சமயம் கிடைக்கும் போது சாதியத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட அநுபவங்களையும், எண்ணங்களையும் ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்....இது மேலோட்டமாக எழுதப்பட முடியாத, ஆழமாக யோசித்த பின்னரே எழுதக் கூடிய ஒரு விஷயம் என்பதனால், இந்த கட்டுரையை தாமதித்தே பதிப்பிக்க முடியும் ), சீனர்களை பற்றி எனக்கென்று சில ஆழமான தனிமனித அபிப்பிராயங்கள் உண்டு. இந்த வகையில் சீனர்களிடம் தன்மான குணம் அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஐம்பது வருட அன்றாட வாழ்க்கை அநுபவத்தை மையமாக கொண்ட ஒரு தனிமனித கருத்து என்றாலும், இந்த கூற்றுக்கு ஆதரவாக ஒரு சில நடைமுறை உதாரணங்களையும் என்னால் காண்பிக்க முடியும்

3. 'டிப்ஸ்' வாங்குதல்

சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய், குவாங்ஸ்ஷாவ், ஹாங்காங், சென்ஷன் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் /\' டிப்ஸ்\'/ வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது \'சன்மானம்\' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது. ஆதலால் \'டிப்ஸ்\' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் \'டிப்ஸ்\' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.

இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள ' ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் சத்தியமூர்த்தி என்கிற என் தமிழ் நண்பரும் அவரின் சீன மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர்.

தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( US$3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார். அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், சத்தியமூர்த்தியும், அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம். இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.

அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன். டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நான் 40 நாடுகளுக்கு போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய "தன்மான உணர்வை வெளிக்காட்டும்" ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது.

4. கல்விக் கடனுதவி

மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகளின் படிபபு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று \'ராம சுப்பையா எஜுக்கேஷன் பண்டு\' , \'எஸ்டேட் வர்கர்கஸ் ரீஹெபிலிடேஸன் பண்டு\', \'மலேசியன் இந்தியன் டெவலப்மெண்ட் பண்டு\' என்று பல ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பல்கலைகழகஙகளில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது. அதே போல தான் இந்த நாட்டில் \'பூமிபுத்திராக்கள்\' என்று அழைக்கபடும் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது.

ஆனால் சீனர்களின் நிலைமை வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பற்பல மடங்குகள் பெரிதாக இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு. நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.

இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன. ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.

இது ஒரு சிறு உதாரணம்தான். ஆனால் இதன் மூலம் நமக்கு தெரிய வரும் உண்மை என்னவென்றால் மலேசிய இந்தியர்களையும், மலாய்காரர்களையும் விட, மலேசிய சீன சமூகத்திடம் தன்மான உணர்வு அதிகம் என்பது தான்.

தொடரும்

மலேசியா ராஜசேகரன்

தொடர்பான சுட்டிகள்:

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து

10 comments:

  1. ராஜசேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னதில் எனக்கு மிகவும் பிடித்தவை ஆச்சர்யப்படுத்தியவை.

    //சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். //

    //மீதி 85 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் தழுவாதவர்கள். //

    //மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. //

    //சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்தில உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் மொழிப் பிரச்சன, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் பொதுவாக வராது//

    //நீங்களும் யாருக்கும் \'டிப்ஸ்\' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்//

    //தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.//

    // சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு.//

    ReplyDelete
  3. சீனா பற்றி இப்பொழுது நிறைய படித்து வருகிறேன். அத்துடன் இந்தக் கட்டுரையும் மிக உதவியாக உள்ளது, சீனர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு!

    ReplyDelete
  4. Dear Rajasekaran

    thanks for your article about chinese people. It should be a real eye opener for many folks.

    Having interacted with a few chinese friends in higher education university settings, I can attest to their hardwork.

    Murali

    ReplyDelete
  5. //சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். //

    கேண்டொனீஸ் (Cantonese) , மாண்டரினில் இருந்து வேறுபட்டது அல்லவா?

    சீனர்கள் மலேசியாவில் வணிகத்தில் கொடி கட்டி பறப்பதன் இரகசியம் பற்றிய விவாதத்தை வரும் தொடர்களில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. அடச்சே! அந்த மலேசியா, சிங்கப்பூர் சீனாகாரா க்ளையண்ட்டுடன் வேலை செய்து நொந்து நூலாகி இருக்கும் வேளையில் இந்த மாதிரி பதிவை படிக்கனுமுன்னு தலையெழுத்து :-) அவங்க எப்படி நிர்வாகத்துல நம்மளையெல்லாம் எரிச்சல் கிளப்ப வைக்கிறாங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? நுணுக்கி நுணுக்கி out of scope-ல் இருக்கும் எல்லா வேலையையும் நம் தலையில் கட்டுவதில் கில்லாடிகள்.

    ReplyDelete
  7. சீனர்களைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு கட்டுரை மிக உதவியாக உள்ளது. மிக்க நன்றி

    ReplyDelete
  8. //After reading your comments I have decided to add an additional paragraph on "How to approach a Chinese at the workplace" in my next part. //

    கட்டாயம் எழுதுங்கள். எதிர்பார்ப்புடன்...

    ReplyDelete
  9. Hi
    I am very happy to see the tips episode of this is being published in the Jan edition of Aval vikatan.

    All the best.

    Murali

    ReplyDelete
  10. நன்றி முரளி. முன்னமே கடிதம் எழுதி அனுமதி கேட்டார்கள். நான் அவரிடம் கேட்டு விட்டு சரி என்று சொன்னேன். பார்த்து விட்டு சொன்னமைக்கு நன்றி.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...