Wednesday, May 23, 2018

இன்னா நாற்பது ....

 

மீசை நரை போக்க
பொறுமை ஏகம் தேவைப்பட
ஆசை நுரை மட்டும்
சுழித்துப் பிரவகிக்கிறது
இன்னமும்....
யோசித்துக் களைத்த மூளை
கொஞ்சம் உருகியும் வழியவே
பின்னுச்சியில் சூரிய உதயம்...
இணையாய் இருந்த மனைவி
துணையாகி... தூணாக
வெளிச்சத்தில் சிரித்துக் கொண்டு
விட்டம் பார்த்து விடிகாலை
இருட்டில் யோசனைகள்.....
மாரடைப்பில் ஏகும் அகாலர்களை
நினைக்கையில் மட்டும்
பயம் வருகிறது,
கொஞ்சம் சுயம் அழிகிறது!!
பருவம் எட்டிப் பார்க்கும்
பதின்மர்களைப் பார்த்தால்
கொஞ்சம் பாவமாகவும்
கொஞ்சம் கோபமாகவும் இருக்கிறது.
பணம் எவ்வளவு இருந்தாலும்
மனம் மட்டும் எதன்பொருட்டோ
கலங்கிக் கொண்டே இருக்கிறது.
அகவை நாற்பது என்பது
அகத்துக்கும் தெரிகிறது.
அவனிக்கும் தெரிகிறது.

Tuesday, May 15, 2018

பாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி

நன்றாக நினைவிருக்கிறது.

கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில் தங்கியிருந்தபோது நடந்தது - இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஏதோ வேலையாக வெளியே போய்விட்டு ரூமுக்கு திரும்பியவன் சீக்கிரம் தூங்கி விட்டேன். இரவில் தண்ணீர் குடிக்க எழுந்தபோது பக்கத்து அலமாரியில் பாலகுமாரனின் “முன்கதை சுருக்கம்” பார்த்தேன். படிக்க ஆரம்பித்தவன் பித்தளை குடத்தின் பக்கம் நின்று கொண்டே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டேன்.

அப்பேர்ப்பட்ட சக்தி அந்த எழுத்துக்கு.



அதற்கு முன்பே அவர் நாவல்கள் படித்து இருந்தாலும் ”முன்கதை சுருக்கம்” என்னைப் புரட்டிப் போட்டது. பாலகுமாரனை படிக்கிறேன் என்று சொன்னவர் எல்லாம் ரொம்ப பிடித்துப் போனார்கள் - அன்பானவர்கள். உணர்ச்சி வசப்படுகிறவர்கள் .நம்மைப் போலவர்கள் என்று தோன்றி விட்ட அணுக்கம் காரணமாக இருக்கலாம்.

அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்தபோது அவரை கல்லூரி விழாவுக்கு நேரில் அழைத்திருந்தோம். அவர் பேச்சு பிடிக்கவில்லை எனினும் அவர் மீதான வாஞ்சை தொடர்ந்தது. அவர் வீட்டுக்கு போய், அவர் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவர் கூட அமர்ந்து பேசும் ஆர்வமெலாம் இல்லை. இப்படி பார்க்கப் போன என் நண்பன் முத்துகுமாரை (அப்போழுது பார்ப்பதற்கு ”நை” யென்று இருப்பான்) “உங்களுக்கு வயித்துல ஏதோ ப்ராப்ளம் இருக்கலாம் முத்துகுமார்” என்று அவர் சொன்னதை அவன் சீலாகிக்க,  அதற்கு பிறகு பாலகுமாரனை அவனிடம் குறிப்பிடும்போதெல்லாம் “ உங்க டாக்டர்” என்றே சொல்வேன். இன்று காலை அவர் மரணச்செய்தியைக் கூட அவனிடம் அப்படித்தான் பகிர்ந்தேன். :-( 

சுஜாதாவை படித்தாலும் அவர் எழுத்து மூளைக்கு, பாலாவின் எழுத்து மனசுக்கு என்ற தெளிவான வரையறை வந்திருந்தது, பாலா  சினிமாவுக்கு போனது, முதலில் எழுத்து சித்தராக - பிறகு நிஜ சித்தராக ஆனது எல்லாம் பின்னாளில். அவர் வரலாற்று புதினம் எழுதும் காலத்தில் எல்லாம் நான் அவரை கடந்து வந்திருந்தேன். ஆனால் எல்லா காலத்திலும் எல்லா அவதாரங்களிலும் அவர் அன்பையே முதன்மையாக வைத்திருந்தார். அதனால் விளைந்த எந்த அவப்பெயர்களுக்கும் அஞ்சவில்லை ஒருவேளை வைத்யனாத சுவாமி மாதிரி தகப்பன்கள் வாய்த்திருந்தால் எல்லோருக்கும் அந்த ”தில்” வந்திருக்குமோ என்னவோ.

”அடர்ந்து அருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு” என்ற ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையின் மொழி ஆக்கமும், அயன் ராண்டின் பரிச்சயமும்,   கொஞ்சமே கொஞ்சம் இப்போது கை வந்திருக்கும் நிதானமும், எவ்வளவு கெட்டவர் என்றாலும் அவர்கள் தரப்பு நியாயமும் யோசிக்கும் மனசும், தியானம் மீதான ஈர்ப்பும், பிறரை பாதிக்காத சுயநலத்தின் அழகும்,  தமிழ் எழுத்து மீதான பிரியமும், இவ்வளவு ஏன் - என் செல்வன் சூர்யாவை அவனுக்கு பிடித்திருக்கின்ற துறையிலேயே கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிற விடுதலை உணர்வும்,  துணிச்சலும் அவர் தந்தவைகள். 

அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள்,  தாயுமானவன்,  கரையோர முதலைகள், உள்ளம் கவர் கள்வன், கல்யாண முருங்கை, நெட்டி பொம்மைகள், நிழல் யுத்தம், இன்னும் எத்தனை எத்தனை எததனை .. சொல்லித் தீராத எழுத்து வரிசை. இப்பொழுது படமாக வெளி வந்திருக்கும் நடிகை  சாவித்ரி கதையை அப்போழுதே “ என் கண்மணீ” என்று எழுதினார் நாவலாக. இன்று அவரை வணிக எழுத்தாளர் என்கிறார்கள். எங்கள் காலத்தில் வணிக எழுத்து என்றால் அழகாபுரி அழகப்பனும், புஷ்பா தங்கதுரையும், ராஜேஷ்குமாரும்தான்.  படிக்கும் எங்களுக்கு அவர் வணிகம் செய்பவராக தோன்றியதே இல்லை.

அவர் இறப்பு எனக்கு அதிர்ச்சி இல்லை. முகநூலில் அவர் போடும் நிலைத்தகவல் ஊடாக அவர் உடல் நலம் அறிந்திருந்தேன். ஓரளவு எதிர்பார்த்துதான். ஆனால் இவ்வளவு பெரும் ஆளுமைகள் சட்டென்று சருகாகும்போது வாழ்வின் அநித்யம் சரேலென்று விசுவரூபம் எடுக்கிறது. சுஜாதா தவறிய போது ஞானத் தந்தையை இழந்தது போலிருந்தது. இப்பொழுது மனதுக்கினிய தோழன் விடை பெற்றது போல் இருக்கிறது 



தாயையும் தமக்கையையும் தவிர பிற மாதரை தாரமென்றே கருதி வந்த தமிழுலகில் ”ஸ்நேகிதி” என்ற வார்த்தைக்கு உயிருட்டி அதை  உறவுக் கூட்டத்தில் ஒருவராகவே ஆக்கி விட்ட பெருமை பாலாவுக்கே. அவர் இறப்புச் செய்தியை கூட அவர் வழியே உணர்ந்த என் ஸ்நேகிதிகளிடம் தான் உடனே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அவருடைய ஒரு கவிதையை எழுதுகிறேன். நினைவில் இருந்து எழுதுவதால் பிழைகளுக்கு மன்னிக்கவும். 

என் படைப்புக்கு பாராட்டாய் கன்னத்தில் கட்டித் தழுவி  முத்தமிட்டவனை
விலக்கத் தோன்றுகிறது
அவன் வியர்வை நாறுகிறது
ஆற்றங்கரையில் அமர்ந்து நான் காசுக்கு அரைபடி நீர் விற்க
வாங்கிப் போகிறவனை காதலிக்க முடியவில்லை
முட்டாளே உன்னேதிரே மகாநதி
நீந்திக் குளி

----000 -----000 ----000 ----

விற்கத் துவங்கியதும் வாங்கும் கூட்டம் கண்டு
மலைத்துப் போனவன் பொய்யன்
நீ நீந்திக் குளித்திருந்தால்
யாரேனும் முங்கிக் குளித்திருப்பர்
கரையோரம் காலேனும் நனைத்திருப்பர்
நீந்திக் குளித்தல் விட்டு
காசுக்கு உன்னிடம் வாங்கித் தெளித்தவர் போக
நீயும் குளிக்கவில்லை
அவனும் குளிக்கவில்லை
மகாநிதியின்
மீன்கள் மட்டுமே
குளிக்கின்றன இடைவிடாது

----000 -----000 ----000 ----

மீன்களை குரங்குகள் படித்து
கரையிலே போட்டன
உனக்கெதற்கு இந்த வேலை உண்ணவா முடியும் உன்னால்
பார்த்தோர் ஞானி கேட்டார்
நதியிலே மூச்சு முட்டி
மீனேதும் சாகாதிருக்க வலையாலே உதவி செய்தோம்
வாழ்த்துங்கள் சாமியென்றன
குரங்குக்கோ புத்தி குறைவு
ஞானிக்கோ நெஞ்சில் துக்கம்
மீனெல்லாம் பாறை மீது
யார் வருவார் நம்மை மீட்க.

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...