Wednesday, July 21, 2021

சார்பட்டா பரம்பரை 

--------------------------------------------

 சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம்ப்ளேட்டு கதைதான். ஆனால், களமும், மனிதர்களும், மொழியும், அரசியலும், காலப் பரிணாமங்களும் வெளிப்பட்ட விதம் அத்தனை அழகு. 

சந்தேகமில்லாமல் பசுபதிதான் ஹீரோ. குஸ்தி வாத்தியாராக முறுக்கும், மிரட்டலும், பார்வையும், பரிதவிப்புமாக அத்தனை பாந்தம். 1970 களின் கழக கண்மணியாக கெத்து காட்டுகிறார். அடுத்த அம்சமான தேர்வு ராமனின் மாமா முத்துராஜ் . அகண்ட முட்டிகளும், புலிநக டாலரும், தூக்கி வாரிய சிகையுமாக ஆண்ட பரம்பரை அலட்டலை  கண்ணுக்குள் கொண்டு வருகிறார். மற்றொரு குறிப்படத்தக்க தேர்வு Dancing Rose.  மலையாள நடிகர் போல. He is a treat to watch. நல்லவரா கெட்டவரா என்று ஆர்யாவை மட்டுமல்ல, நம்மையும் குழப்பும் ஒரு பாத்திர படைப்புடன் கலையரசன். வாழ்க்கையில் இப்படி நூறு முகம் காட்டும் ஆறுமுகங்களை நாம் நிறைய பார்த்திருக்கக் கூடும். நடிகர்களில் இவர்களுக்கு அப்புறம்தான் ஆர்யா, தஷ்ரா, சஞ்சனா, ஆர்யாவின் அம்மா, நெல்லை விஜய் மற்ற எல்லோரும். 

  தமிழில் பீரியட் பிலிம்களில் மேட்டுக்குடியினர் வாழ்க்கைதான் பிரதானமாக விவரணையில் வரும்.ஜட்கா வண்டியும், வெள்ளி கூஜாவும், கார்நாடக சங்கீதமும், பால் சாதமும்,  வெற்றிலை ஜோரும், சதிருமாக. எளிய மனிதர்கள் புழங்கும் இடங்கள்,  அவர்கள் வாழ்க்கை முறைகள், தொழிற்படும் இடங்கள், அவர்கள் உணவு, ரொமான்ஸ், அரசியல், போன்ற எதுவுமே  இத்தனை நுணுக்கமாக விவரிக்கப்பட்டதில்லை . 

குத்துசண்டை ஆட்கள் வன்முறைக்கு மனதில் இடம் தந்ததால்,  எத்தனை எளிதாக குற்ற வயப்படுகிறார்கள் என்று அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் சொல்லி சொல்லி வடித்திருக்கிறார்கள் . ரஞ்சித்தின் படங்களில் பெண்கள், கே. பாலச்சந்தரின் படங்கள் போலவே சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒரு செய்தி இருக்கிறது :-)  

இசை, ஒப்பனை, கலை, சண்டைக்காட்சிகள், காமிரா எல்லாமே அழகான பெண்ணுக்கு சிரத்தையாக அலங்காரம் செய்தது போல படத்தை  இன்னமும் தூக்கி நிறுத்துகிறது.  ரஞ்சித் இன்னொருமுறை தான் யார் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அவர் படங்களே அவர் அரசியலுக்கு சரியான வாகனம் என்பதால், இதையேஅவர் இன்னும் சிரத்தையாக செய்யலாம். 

சார்பட்டா  -  பார்த்தாலே போதும். சல்பேட்டாவே தேவைப்படாத போதை.  



 

Tuesday, May 04, 2021

கர்ணன்  - அக்மார்க் நெய்யில் தாளித்த மசாலா

----------------- 



நம் மனிதர்களை ஹாலிவுட் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.   படம் முழுக்க வாளும், வேலும், குதிரையும், யானையும் - போலிசுக்காக காத்திருக்கும் சுளுந்து ராத்திரி உட்பட.   காமிராவின் இளகிய கலர் palette ஐ காண்பதில் வில்லியம் வாலேஸ் திருநெல்வேலிக்கு வந்த மாதிரி ஒரு தோணல்.  முதல் படத்தில் தடுத்து ஆடிய மாரி, இரண்டாம் படத்தில் அடித்து ஆடி இருக்கிறார். படாத இடத்தில் பட்டு விடுமோ என்று பயந்து வருகுது.  

தனுஷ் அச்சு அசலாய்  கர்ணனில் ஒட்டிக் கொள்கிறார். அவர் வீடும் மனிதர்களும் ரத்தமிமும் சதையுமாக  அதைவிட அசல்.  அவருக்கும் லாலுக்கும் உள்ள அன்னியோன்னியமும், அக்காவுடனான அவர் உறவும்  இதம் 

அருமையான  செட். கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். தலித் வாழ்வு அதன் வீரமும், வீச்சமுமாக காமிராவின் வழியே  இறங்கி இருக்கிறது. பாரதிராஜாவின் படத்தில் தெரியும் பன்றிகளுக்கும், பருத்தி வீரன் / கர்ணனில் தெரியும் பன்றிகளுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சாவு வீட்டில்  தனுஷுடன் ஆட்டக்காரிகள் ஆடும் நடனமும் அவ்விதமே ரஜிஷா விஜயனின் அறிமுக ( மெல்லிய) ஆட்டமும், ஆம்பிளை சட்டையும், ஆசையும் அவ்வளவு நிஜம்  அவர் பெயர் திரெளபதையாம். - கர்ணனின் காதலி திரெளபதை.  மாரி - you are such a rebel !!!   

மாரி நல்ல கதை சொல்லி. படம் துவக்கத்தில் இருந்து அழகாக உள்ளே கை பிடித்து கூட்டி செல்கிறார். கடலுக்குள் இறங்குவது மாதிரி  - திரும்பி பார்க்கும்போதுதான் எவ்வளவு ஆழமான இடத்துக்கு வந்து விட்டோம் என்று புரிகிறது. மீன் வெட்டும் வாளும், கால் கட்டும் கழுதையும் என்ன குறியீடுகளோ .. விளங்கவில்லை  நட்டியின் உள்ளுறை  ஜாதி வெறி - முதன்முறை கிராமம் வரும்போது  படிப்படியாய் கொந்தளிக்க துவங்கும் அவர் மனது - வைத்தவனின் முகத்தை பார்க்காமல் அவன் கையை  பார்க்கும் ரெளத்ரம் -- wow. மாடசாமி மகன் துரியோதனனா என்ற என்ற அவரின் எகத்தாளக் கேள்விக்கு  கந்தையா மகன் கண்ணபிரானா இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன என்ற  கர்ணனின் பொருமல் புரிகிறது. ரங்காச்சாரியின் மகன் ரமேஷ் முறுவலிக்கக் கூடும் ;-) 

திருஷ்டி பொட்டுகள்  

1. ஊருக்கு அனுப்பி விட வந்த  தனுஷின் அப்பா  வாள் எடுத்துக் கொடுக்கும் இடம். 

2. முதல் காட்சியில் தெருவில் சாகக்கிடக்கும் பெண் குழந்தையை காணாமல் ( ?!!)   கடக்கும் பஸ்கள். 

3. போலீசை சிறுபிள்ளைத்தனமாக எதிர்க்கும் சினிமா கிராமம்  

4. தனுஷ் மழையில்  பேசும் வசனம்

போலீசை கொன்றால் ஊருக்கு பஸ் வரும் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுதல்.  மாரி அடுத்த படத்தில் அறிவாயுதம் ஏந்தி கலெக்டராகும் ஒரு தலித்தை கதானாயகனாக்க வேண்டும். அப்போதுதான் நாராயண குருவின் உள்ளம் குளிரும்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...