Wednesday, June 13, 2018

காலா - இருளும் ஒளியும்


இந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவையும் பயன்படுத்த வேண்டியதில்லை.. அல்லது பேசாமல் அரசியலில் குதித்து தொல். திருமாவுக்கு உதவலாம். அல்லது முழு நேர எழுத்தாளர் ஆகலாம். அதீத ஆர்வக் கோளாறு .. பாவம்.  

கபாலியில் கதையும் கொஞ்சம் சேர்த்து பிரசாரமும் இருந்தது. இதில் 70 விழுக்காடு பிரச்சாரமும், கொஞ்சமே கொஞ்சம் மற்றதும் ஆனால் ரஜினியை உபயோகப்படுத்திய காரணத்திற்காக மோடி பக்தாளை எல்லாம் இதற்கு முட்டு கொடுக்க வைத்திருப்பது .. சூப்பர்.

ரஜினிக்கு இந்தப் படம் நல்ல பயன் அளித்திருக்கும் - தூத்துக்குடியில் அவர் ஹரிதேவ் அப்யங்கர் போல பேசாமல் இருந்திருந்தால். :-)

மற்றபடி ரஜினி பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறார். நம் வீடுகளில் இருக்கும் குறும்புக்கார தாத்தாக்களை நினைவு படுத்துகிறார். சில காட்சிகளில் மிக இயற்கையாக ஸ்கோர் செய்கிறார்.
சில காட்சிகளில் முகபாவங்கள் ஒத்துழைக்காமல் சங்கடப்படுத்துகிறார். மொத்தத்தில் இப்பேர்ப்பட்ட ஆளை அரசியலுக்கு காவு கொடுத்து விட்டோமே என்று வருந்த வைக்கிறார்.  ஈஸ்வரி ராவ், நடிப்பதற்கு ஏதுவான பாத்திரம். தூள். ஹ்யூமா குரோஷி அந்தளவு ஒட்டவில்லை. மற்றபடி அந்தப் பெரிய குடும்ப பட்டாளத்தில் ஒட்டுவது கனியும், கண்டனும். என்னதான் மணிகண்டன் ( லெனின்)  என்.ஜி.ஓ மூலமாக தாராவியை புதிதாக்க முயன்றாலும், பின்னணியில் நாநா (ஹரிதேவ்) இருப்பது  தெரியாமாலா இருப்பார். ரஞ்சித்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவும், விவேகமும் இவ்வளவுதானா?

நானா படேகர் அற்புதம். பாலா சாஹேப் அவர்களை நினைவுபடுத்தும் முயற்சி. அருமையான நடிப்பு. சில காட்சிகளில் ரஜினியை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார். முக்கியமாக ஈஸ்வரி//செல்வம் முடிவுக்கு பிறகு, காலா அவரை அவர் வீட்டில் சந்திக்கும் காட்சியில்  நானா பேசும் வசனங்களும், பாடி லாங்வேஜும் - முதுகுத் தண்டு சில்லிட்டு விடுகிறது. அவருடைய பாத்திரப்படைப்பு ( casting and costume) முழுக்க அவரே வடிவமைத்ததாக கேள்வி. பலே...

அஞ்சலி பாட்டீல் கொஞ்சம் over hyped. ஆனால் அவருடைய மராத்தி என்னுடைய பம்பாய் நினைவுகளை கிளறி விட்டது. அந்த வகையில் நன்றி.. கமலின் ஹேராம் வந்த போது இது தமிழ் படமாகவே இல்லை. ஏகப்பட்ட மொழிகள் கலந்து சாதாரண  சினிமா ரசிகனுக்கு புரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். Are they domesticated now by Masthaan ji? :-) 

ரஞ்சித் முதலில் தான் யார். தன் முக்கிய நோக்கம் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். தன் பிரசாரங்களுக்கு சினிமா மீடியாவை இந்தளவு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தயாரிப்பாளர் தலையில் துண்டுதான் போட வேண்டும் லட்டு மாதிரி தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை இப்படி ஓவராக பிரசாரம் பேசி கடுப்பேற்றினால மறுபடியும் திருநின்றவூருக்கு டிக்கேட் எடுக்க வேண்டியதுதான். சினிமாவில் முதலில் கலை/craft முக்கியம். அப்புறம் தான்   மெசேஜும் மற்ற புடலங்காயும். நல்ல parallel cinema எடுக்க அவர் சீக்கிரம் கற்றுக் கொள்ளட்டும். அதற்கு தமிழ் சினிமாவில் ஏற்கனவே நல்ல முன்னுதாரணங்கள் உண்டு. அவரை ஏத்தி விடுகிறவர்களை பார்த்து ஏமாந்து போகாமல்  சீக்கிரம் விழித்துக் கொள்ள வேண்டும்.
காலா  - கொட்டாப்புளியால் கொசு அடித்திருக்கிறார்கள் :-(

Sunday, June 03, 2018

தமிழ்வானின் விண்மீன் - முக - 95

“ஆகாரத்திற்காக தடாகத்தில் உள்ள அழுக்கைச் சாப்பிட்டு சுத்தப்படுத்துகிறதே மீன்.

அதுபோலத்தான்  நான். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்து இருக்கிறது”

இது கலைஞரின் வசனம் அல்ல. அவர் வாழ்க்கையின் சுருக்கம் என்றே நினைக்கிறேன்.
தமிழ் பிடித்தவனுக்கு கலைஞர் கருணாநிதியைப் பிடிக்கும். மற்றதெல்லாம் பிறகுதான். 



எவனைக்  கண்டால் எதிர்முகாமுக்கு எட்டிக்காயாய் இருக்கிறதோ, எவனைக் கண்டால் எதிரிக்கு பீதி பெருகுகிறதோ - அவனே உன் தலைவன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பார்த்தால் பெரியாரை அல்ல, அண்ணாவை அல்ல - கருணாநிதியைக் கண்டால்தான் என் எதிர்முகாம் நண்பர்களுக்கு கிலி வருகிறது. அவர்களுக்கெல்லாம் கடந்த ஒரு வருடமாக கொண்டாட்டம். தன் கரகரத்த குரலில் கழகக் கண்மணிகளை மட்டும் அல்ல, தமிழகத்து மக்களை எல்லாம் கட்டிப் போட்டிருந்த  அந்த காந்தக் குரல், கூர் வாளினையொத்த அந்த மூளை களைத்துக் கிடக்கிறது. தமிழக அரசியல் கலகலத்துக் கிடக்கிறது. பட்டத்து இளவரசன் பலவீனப்பட்டு நிற்கையில்,  சிஸ்டமும், மய்யமும், எடுபிடிகளும், கரன்(சி)களும், சே(வ)கர்களும், கூஜாக்களும் நாளொரு அறிக்கையும் பொழுதொரு பேச்சுக் கச்சேரியுமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதிர்ப்பாட்டு பாடி சிக்ஸர் அடிதத தலைவன், பேரக்குழந்தைகளுக்குபந்து போட்டுக் கொண்டிருக்கிறான் -கோபாலபுரத்தில். ”முதுமையில் அனைவருக்கும் வரும் நிலை” என்பதான நிதர்சனத்தையும் மறந்து விட்டு, “பாரு.. இந்தாளுக்கு இன்னும் சாவு வரலை. பண்ணின பாவம்” என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

எப்போது என்று நினைவில்லை. அப்பா கலைஞர் கூட்டங்களுக்கு சிறுவயதில்கூட்டிப் போக ஆரம்பித்தார். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழார்வலர். அரசு ஊழியர்களுக்கு நல்லது செய்தவர் என்று அப்பாவுக்கு கலைஞரைப் பிடிக்க பல காரணங்கள். ”டோப்பா” தலையனால் தமிழ்நாடு கெடுகிறது என்பார் அடிக்கடி. அப்போதெல்லாம் மயிலாடுதுறையில் நகரப்பூங்கா அருகே அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும். அரசியல் தாண்டி கலைஞர் பேச்சினைக் கேட்க வேண்டியே கூட்டம் வரும். ”உடன்பிறப்பே” என்று அந்தக் கரகரத்த குரலில் அவர் துவங்கும்போதே கூட்டம் ஆர்ப்பரிக்கும். அந்த வயதில் மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போடும் அவர் ஆளுமை வியப்படைய வைக்கும். இத்தனைக்கும் அந்தக் காலங்களில் அவர் ஆட்சியில் இல்லை.

வயது வளர வளர அவர் மேடைப் பேச்சு தாண்டி அவர் யார், பின்புலம் என்ன? திமுக என்ற கட்சி மற்ற
கட்சிகளிலிருந்து வேறுபட்டு எப்படி உட்கட்சி ஜனநாயகத்தை பேணுகிறது. சினிமா பின்புலம் இருந்தாலும் கருணாநிதி எப்படி அதையும் தாண்டி எல்லாரிடமும் ஒரு மரியாதையை பெற்றிருக்கிறார் போன்ற விஷயங்கள் ஈர்க்க ஆரம்பித்தன. சிறுவயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததால் ஜூனியர் விகடனும் துக்ளக்கும் அரசியல் செய்திகளை கொடுத்துக் கொண்டே இருந்தன. இதன் மூலமே அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடந்த குழப்பங்கள், கூத்துகள், ஜெயலலிதாவின் வளர்ச்சி போன்ற போக்குகள் உடன் தெரிநதன. கருணாநிதி ஜெயலலிதாவுடனும் அரசியல் செய்ய ஆரம்பித்தார். இப்போது ஜெயலலிதாவின் அரசியல் சரித்திரமும் முடிந்த நிலையில் கோபாலபுரத்தில் மறுபடியும் குழந்தை போல அமர்ந்து இருக்கிறார்.

   கருணாநிதியின் சுயநலம் பற்றி, அவர் ஊழல் பற்றி, அவர் சந்தர்ப்பவாதம் பற்றி பேசுவோர் உண்டு. அப்படி பேசுபவரில் எப்படியாவது அவர் ஆளுமையை கறைப்படுத்தி விடலாம் என்று பேசுபவரை பற்றி கவலை கொள்ளாவிடினும், நடுநிலையோடுஅவரை விமரிசிப்பவர்களிடம் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். கக்கனைப் போலவும், நல்லகண்ணுவைப் போலவும்  
இருந்திருந்தால் அவருக்கு நல்லவர் என்ற பேர் கிடைத்திருக்குமே ஒழிய,  அரசியல் அதிகாரத்தோடு தமிழக மக்களுக்காக அவர் என்னவெல்லாம்   செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதையெல்லாம் செய்திருக்க முடியாது. தவிரவும்- அவர் வானத்திலிருந்து இறங்கி வந்து விடவில்லை. இந்த சமுகத்திடம் இருந்துதான் தலைமைப் பதவி நோக்கி போனார். அவரிடம்  இருப்பதாக சொல்லப்படும் குறைபாடுகள்
யாவும் இந்த சமூகத்திடம் உண்டு. இந்தக் காலத்தில், இப்படிப் பட்ட மக்களுக்கு இவனே தலைவனாக இருக்க வாய்க்கும். தேனை எடுததவன் புறங்கையை நக்கியதை பற்றியே பேசாமல், அந்தத் தேனை எடுத்து யாருக்கு ஈந்தான். அவனால் வெகுமக்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணுகையில் புரிய வேண்டியது புரியும். 

கலைஞர் தனக்கு வரும் எதிர்ப்புகளையும் விமரிசனங்கலையும் பற்றி,  அது தன் சாதிய பின்புலத்தினால் தன் மீது அதிகமாக ஏவப்படும் அடக்குமுறை என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியம் ஏற்படும். நான் பிறந்த மாயவரத்தில், என் பள்ளி நட்களில் அனைத்து சாதியினரும், மதத்தினரும் வித்தியாசமில்லாமல் நன்றாகத்தான் பழகுவார்கள். அக்ரஹாரங்களிலும் மகாதான/ பட்டமங்கல தெருக்களிலும் இருக்கும் நண்பர்கள் எந்த வேற்றுமையும் பாராட்டி பழகியதில்லை. இப்படி இருக்கையில் அவர் கூற்று எனக்கு ஆச்சரியமளித்தது உண்மை. ஆனால் அவர் விஷயத்தில் இது ஓரளவு உண்மைதான் என்று இப்போது தோன்றுகிறது.அவருடைய அரசியல் எதிரிகள் அவர் பிறந்த  சாதியை பற்றி மட்டமாக பேசி அவரை தாழ்த்த நினைப்பதை கேட்கும் போது வரும்
கோபத்துக்கு அளவில்லை. அவரை எதிர்கொள்ள இதை விட்டால் அவர்களுக்கு வேறு விஷயமா இல்லை என்று அயர்ச்சியாகிறது. ஆனால் இதையும் தாண்டி தன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் சின்னக் குத்தூசி தியாகராஜன் போன்றவர்களையும், தன் யோகா குருவையும் வைத்திருந்தார். நட்புக்கும், கொள்கைக்கும் நடுவே கோடு போட்டுக் கொண்டு, எதற்கும் பங்கம் வராமல்  வாழ்வதிலும் என் போன்றவர்களுக்கு அவரே முன்மாதிரி ( என்பது என் நண்பர்களுக்குத் தெரியும் :-)  )

ஈழ விஷயத்தில் கலைஞர் மீதுள்ள குற்றச்சாட்டுகள், அவர் மீதிருந்த ஏகப்பட்ட   எதிர்பார்ப்புகள் வீணான விரக்தியில் சொல்லப்படுபவை.  தீவிரவாதத்தின் மீதான   9/11க்குப்  பிறகான உலகநாடுகள் பார்வை, இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு  வர முடிவதற்கான பாதைகள் மூடிய சூழல், 2009 ல் இலங்கை அரசின் போர்த்தந்திர  வியூகங்கள் போன்ற காரணிகள் காரணமாக, கலைஞர் என்றில்லை, அப்போது வேறொரு  முதல் அமைச்சர்  இருந்தாலும், எதுவும் செய்திருக்க இயலாது.  ஆனால் செய்ய முடியாத சூழலில் இருந்தவர்  தமிழினத் தலைவர் என்று சொல்லப்படுவதால் ஏச்சும் பேச்சும் இன்றும் தொடர்கின்றன. ஒருபுறம் இயக்கங்களை முட்டுக் கொடுப்பவர் என்ற குற்றச்சாட்டுக்காக இந்திய அரசால் நிந்திக்கப்படுவது, இன்னொருபுறம் தமிழினத்தலைவர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழினத்துக்காக ஏதும் செய்யாதவர் என்று பழிச்சொல் பெறுவது -  என்று மத்தள வாழ்க்கை அவருக்கு வாய்த்திருக்கிறது.

வயதும் மனமும் முதிர்ந்து யோசிக்கும் இந்தக் காலங்களில்,   கலைஞரின் சிறப்பு -  திராவிட சித்தாந்தங்களை தன் அரசியல் அதிகாரத்தின் மூலம் அரசு முறை கொள்கைகளாக்கி, சமூக நீதி என்பதை முன்னேறிய வகுப்பினர்கூட ( சற்றே முணுமுணுப்போடு ) ஒத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு 
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதுதான். இதன் நீட்சியே ஜெயலலிதாவின் 69% இட ஒதுக்கீடும்,  அதன் காரணமாக அவர் பெற்ற பெயரும். வெகுமக்கள் அரசியலை கையில் எடுக்காவிட்டால் தன் அறிவும், பலமும், எத்தனை தினமணிகளும், தினமலர்களும் முட்டுக் கொடுத்தாலும்
தவிடு பொடியாகும் எறு அவருக்குத் தெரியும். இன்றைக்கும் வட மாநிலங்களில் சமூகநீதி படும் பாட்டை பார்க்கையில், தமிழ் நாட்டு வெகுமக்கள் திராவிட கட்சிகளுக்கு எந்தளவு நன்றிக்கடன் பட்டு இருக்க வேண்டும் என்பது விளங்கும். விவரம் தெரியாத சில பேர் முக-வை வசைபாடும்போது
“ நீங்கள் குரலுயர்த்தி பேசும் இந்த அறிவும், சுதந்திரமும் அதன் பின்புலமாக நீங்கள் பெற்றிருக்கக்கூடிய கல்வியும்,  இந்த இயக்கம் தந்த பிச்சை. உங்கள் சோற்றுப் பருக்கைகள் ஒவ்வொன்றிலும் இவர்கள் பெயர்கள் எழுதி இருக்கிறது” என்று வாய் விட்டு கூவத் தோன்றுகிறது. ”வலிமையுள்ளது எஞ்சும் ” என்று சொல்லி கானக சித்தாந்தம் பேசாமல், மனிதத்தனமையோடு  திராவிட இயக்கங்கள் எடுத்த  நடவடிக்கைகள் புரிய வெகுநாட்கள் ஆகும்

ஆனால் ஒன்று - தமிழ்நாட்டில் இன்று, அன்றிருந்தது போல சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஓரளவு எல்லா வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கிறது. எனவே வெகுமக்களிடம் 1960-1970 களில் இருந்த கோபம் இல்லை. சமூகத்தில் பெருவாரியாக எல்லா வகுப்பினரிடையேயும் ஒற்றுமை நிலவுகிறது - அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சாதி சண்டைகளை தவிர. இன்றிருக்கும் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகளின் தேவை இல்லை என்று தோன்றலாம். ஆனால் மக்கள் போராடி பெற்ற உரிமையையும் சுதந்திரத்தையும் பேணுவதற்காவவாது அந்தக் கட்சிகளின் இருப்பும், அவர்களின்  அரசியல் அதிகாரத் தேவையும் இன்றும் உள்ளது. இந்தியா ஒரு ஃபெடரல் அமைப்பு என்பதையே மறந்து விட்டு மாநிலங்களையும் அதன் அடையாளங்களையும் ஒழித்து, மைய நீரோட்டம் என்ற பெயரில் நம் தனித் தன்மைகளை காணாது ஆக்க டெல்லி கட்சிகள் முயன்று, அதன் காரணமாக ஒவ்வொரு விதமாக தமிழகததை நசுக்கும் முயற்சிகளில் இறங்கும்போது,  பிரதேசக் கட்சிகளின் ஒற்றுமையும் வீரியமும் இன்னும் ஓங்க வேண்டும்.

இந்தக் காலத்தின் தேவைக்கு இன்னும் ஒரு கலைஞர் வேண்டும்..

மு.க களைத்துக் கிடக்கையில் எங்கள் ஆவலாதியை தீர்க்கப் போகும் அந்த தலைவன் யார் என்று காத்துக் கிடக்கிறோம்.  

முன்னர் எழுதியவை :

குப்பத்து ராஜா - http://mynose.blogspot.com/2016/05/blog-post_15.html

கவனம் - தி.மு.க - http://mynose.blogspot.com/2016/05/blog-post.html

கருவின் கவிதை - http://mynose.blogspot.com/2011/05/blog-post.html

 

Wednesday, May 23, 2018

இன்னா நாற்பது ....

 

மீசை நரை போக்க
பொறுமை ஏகம் தேவைப்பட
ஆசை நுரை மட்டும்
சுழித்துப் பிரவகிக்கிறது
இன்னமும்....
யோசித்துக் களைத்த மூளை
கொஞ்சம் உருகியும் வழியவே
பின்னுச்சியில் சூரிய உதயம்...
இணையாய் இருந்த மனைவி
துணையாகி... தூணாக
வெளிச்சத்தில் சிரித்துக் கொண்டு
விட்டம் பார்த்து விடிகாலை
இருட்டில் யோசனைகள்.....
மாரடைப்பில் ஏகும் அகாலர்களை
நினைக்கையில் மட்டும்
பயம் வருகிறது,
கொஞ்சம் சுயம் அழிகிறது!!
பருவம் எட்டிப் பார்க்கும்
பதின்மர்களைப் பார்த்தால்
கொஞ்சம் பாவமாகவும்
கொஞ்சம் கோபமாகவும் இருக்கிறது.
பணம் எவ்வளவு இருந்தாலும்
மனம் மட்டும் எதன்பொருட்டோ
கலங்கிக் கொண்டே இருக்கிறது.
அகவை நாற்பது என்பது
அகத்துக்கும் தெரிகிறது.
அவனிக்கும் தெரிகிறது.

Tuesday, May 15, 2018

பாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி

நன்றாக நினைவிருக்கிறது.

கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில் தங்கியிருந்தபோது நடந்தது - இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஏதோ வேலையாக வெளியே போய்விட்டு ரூமுக்கு திரும்பியவன் சீக்கிரம் தூங்கி விட்டேன். இரவில் தண்ணீர் குடிக்க எழுந்தபோது பக்கத்து அலமாரியில் பாலகுமாரனின் “முன்கதை சுருக்கம்” பார்த்தேன். படிக்க ஆரம்பித்தவன் பித்தளை குடத்தின் பக்கம் நின்று கொண்டே முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டேன்.

அப்பேர்ப்பட்ட சக்தி அந்த எழுத்துக்கு.



அதற்கு முன்பே அவர் நாவல்கள் படித்து இருந்தாலும் ”முன்கதை சுருக்கம்” என்னைப் புரட்டிப் போட்டது. பாலகுமாரனை படிக்கிறேன் என்று சொன்னவர் எல்லாம் ரொம்ப பிடித்துப் போனார்கள் - அன்பானவர்கள். உணர்ச்சி வசப்படுகிறவர்கள் .நம்மைப் போலவர்கள் என்று தோன்றி விட்ட அணுக்கம் காரணமாக இருக்கலாம்.

அழகப்பா பொறியியல் கல்லூரியில் படித்தபோது அவரை கல்லூரி விழாவுக்கு நேரில் அழைத்திருந்தோம். அவர் பேச்சு பிடிக்கவில்லை எனினும் அவர் மீதான வாஞ்சை தொடர்ந்தது. அவர் வீட்டுக்கு போய், அவர் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அவர் கூட அமர்ந்து பேசும் ஆர்வமெலாம் இல்லை. இப்படி பார்க்கப் போன என் நண்பன் முத்துகுமாரை (அப்போழுது பார்ப்பதற்கு ”நை” யென்று இருப்பான்) “உங்களுக்கு வயித்துல ஏதோ ப்ராப்ளம் இருக்கலாம் முத்துகுமார்” என்று அவர் சொன்னதை அவன் சீலாகிக்க,  அதற்கு பிறகு பாலகுமாரனை அவனிடம் குறிப்பிடும்போதெல்லாம் “ உங்க டாக்டர்” என்றே சொல்வேன். இன்று காலை அவர் மரணச்செய்தியைக் கூட அவனிடம் அப்படித்தான் பகிர்ந்தேன். :-( 

சுஜாதாவை படித்தாலும் அவர் எழுத்து மூளைக்கு, பாலாவின் எழுத்து மனசுக்கு என்ற தெளிவான வரையறை வந்திருந்தது, பாலா  சினிமாவுக்கு போனது, முதலில் எழுத்து சித்தராக - பிறகு நிஜ சித்தராக ஆனது எல்லாம் பின்னாளில். அவர் வரலாற்று புதினம் எழுதும் காலத்தில் எல்லாம் நான் அவரை கடந்து வந்திருந்தேன். ஆனால் எல்லா காலத்திலும் எல்லா அவதாரங்களிலும் அவர் அன்பையே முதன்மையாக வைத்திருந்தார். அதனால் விளைந்த எந்த அவப்பெயர்களுக்கும் அஞ்சவில்லை ஒருவேளை வைத்யனாத சுவாமி மாதிரி தகப்பன்கள் வாய்த்திருந்தால் எல்லோருக்கும் அந்த ”தில்” வந்திருக்குமோ என்னவோ.

”அடர்ந்து அருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு” என்ற ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையின் மொழி ஆக்கமும், அயன் ராண்டின் பரிச்சயமும்,   கொஞ்சமே கொஞ்சம் இப்போது கை வந்திருக்கும் நிதானமும், எவ்வளவு கெட்டவர் என்றாலும் அவர்கள் தரப்பு நியாயமும் யோசிக்கும் மனசும், தியானம் மீதான ஈர்ப்பும், பிறரை பாதிக்காத சுயநலத்தின் அழகும்,  தமிழ் எழுத்து மீதான பிரியமும், இவ்வளவு ஏன் - என் செல்வன் சூர்யாவை அவனுக்கு பிடித்திருக்கின்ற துறையிலேயே கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிற விடுதலை உணர்வும்,  துணிச்சலும் அவர் தந்தவைகள். 

அகல்யா, மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள்,  தாயுமானவன்,  கரையோர முதலைகள், உள்ளம் கவர் கள்வன், கல்யாண முருங்கை, நெட்டி பொம்மைகள், நிழல் யுத்தம், இன்னும் எத்தனை எத்தனை எததனை .. சொல்லித் தீராத எழுத்து வரிசை. இப்பொழுது படமாக வெளி வந்திருக்கும் நடிகை  சாவித்ரி கதையை அப்போழுதே “ என் கண்மணீ” என்று எழுதினார் நாவலாக. இன்று அவரை வணிக எழுத்தாளர் என்கிறார்கள். எங்கள் காலத்தில் வணிக எழுத்து என்றால் அழகாபுரி அழகப்பனும், புஷ்பா தங்கதுரையும், ராஜேஷ்குமாரும்தான்.  படிக்கும் எங்களுக்கு அவர் வணிகம் செய்பவராக தோன்றியதே இல்லை.

அவர் இறப்பு எனக்கு அதிர்ச்சி இல்லை. முகநூலில் அவர் போடும் நிலைத்தகவல் ஊடாக அவர் உடல் நலம் அறிந்திருந்தேன். ஓரளவு எதிர்பார்த்துதான். ஆனால் இவ்வளவு பெரும் ஆளுமைகள் சட்டென்று சருகாகும்போது வாழ்வின் அநித்யம் சரேலென்று விசுவரூபம் எடுக்கிறது. சுஜாதா தவறிய போது ஞானத் தந்தையை இழந்தது போலிருந்தது. இப்பொழுது மனதுக்கினிய தோழன் விடை பெற்றது போல் இருக்கிறது 



தாயையும் தமக்கையையும் தவிர பிற மாதரை தாரமென்றே கருதி வந்த தமிழுலகில் ”ஸ்நேகிதி” என்ற வார்த்தைக்கு உயிருட்டி அதை  உறவுக் கூட்டத்தில் ஒருவராகவே ஆக்கி விட்ட பெருமை பாலாவுக்கே. அவர் இறப்புச் செய்தியை கூட அவர் வழியே உணர்ந்த என் ஸ்நேகிதிகளிடம் தான் உடனே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

அவருடைய ஒரு கவிதையை எழுதுகிறேன். நினைவில் இருந்து எழுதுவதால் பிழைகளுக்கு மன்னிக்கவும். 

என் படைப்புக்கு பாராட்டாய் கன்னத்தில் கட்டித் தழுவி  முத்தமிட்டவனை
விலக்கத் தோன்றுகிறது
அவன் வியர்வை நாறுகிறது
ஆற்றங்கரையில் அமர்ந்து நான் காசுக்கு அரைபடி நீர் விற்க
வாங்கிப் போகிறவனை காதலிக்க முடியவில்லை
முட்டாளே உன்னேதிரே மகாநதி
நீந்திக் குளி

----000 -----000 ----000 ----

விற்கத் துவங்கியதும் வாங்கும் கூட்டம் கண்டு
மலைத்துப் போனவன் பொய்யன்
நீ நீந்திக் குளித்திருந்தால்
யாரேனும் முங்கிக் குளித்திருப்பர்
கரையோரம் காலேனும் நனைத்திருப்பர்
நீந்திக் குளித்தல் விட்டு
காசுக்கு உன்னிடம் வாங்கித் தெளித்தவர் போக
நீயும் குளிக்கவில்லை
அவனும் குளிக்கவில்லை
மகாநிதியின்
மீன்கள் மட்டுமே
குளிக்கின்றன இடைவிடாது

----000 -----000 ----000 ----

மீன்களை குரங்குகள் படித்து
கரையிலே போட்டன
உனக்கெதற்கு இந்த வேலை உண்ணவா முடியும் உன்னால்
பார்த்தோர் ஞானி கேட்டார்
நதியிலே மூச்சு முட்டி
மீனேதும் சாகாதிருக்க வலையாலே உதவி செய்தோம்
வாழ்த்துங்கள் சாமியென்றன
குரங்குக்கோ புத்தி குறைவு
ஞானிக்கோ நெஞ்சில் துக்கம்
மீனெல்லாம் பாறை மீது
யார் வருவார் நம்மை மீட்க.

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...