Friday, February 27, 2004

நம்பிக்கையளிக்கக் கூடிய 10 இணைய எழுத்தாளர்கள்

விகடன், குமுதம் , தமிழ்சினிமா.காம், சி·பி, வெப் உலகம் என்று இணையத்தில் தமிழ் படித்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. இப்போது கணிணி முன் உட்கார்ந்தால், ராயர் காப்பி க்ளப், மரத்தடி, திண்ணை, காலச்சுவடு , திசைகள், வலைப்பூக்கள் என்றுதான் எலி ஓடுகிறது. எழுதுபவர்கள் எல்லாம் மேலதிகமாக இளைஞர்கள் என்பதால், எழுத்தில்
முதிர்ச்சி தெரிகிறதோ இல்லையோ, கலகலப்பும், விறுவிறுப்பும், அதிகமாக தெரிகிறது. அதுவும் எல்லாரும் நம்ம ஜாதி ( அதான் சார்..கணிணிக் கூலி) என்று நினைக்கும்போது கொஞ்சம் கூடுதல் பரிவு. அவர்கள் எழுத்துக்களில்
நம்மை அடையாளம் காணமுடிகிறது போல் ஒரு தோணல். பாரா சொன்னபடி எதிர்காலத்தில் பிரபல எழுத்தாளர்கள் , இணையத்தில் இருந்து தான் வருவார்கள் போல.... சந்தோஷம் !!!!

அது இருக்கட்டும்.

கோக் பாட்டிலின் அடிப்பகுதியை உடைத்து போட்டது போல் ஒரு கண்னாடியை மாட்டிக் கொண்டு தனம் தினம் நான் வலையில் மேய்ந்ததில் கீழ்வரும் ஆட்கள் , நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.


1. ஹரன் பிரசன்னா - இளைஞர். தாமிரபரணித் தீரர். உணர்ச்சி பூர்வமான படைப்புகளுக்கு சொந்தக்காரர். மனவியல் கூறுகளும் அதிகம் உண்டு இவர் எழுத்துக்களில். கல்யாணம் ஆகாததால் எழுதக் காரணமும், நேரமும் நிறைய இருக்கிறது. இந்த வேகமும், ஆர்வமும் குறையக்கூடாது.

2. எம்.கே.குமார் - சிங்கை வாசியான இவர் எழுத்துக்கள் எனக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்தது என்றதுமே இவரை நான் பெரிய இலக்கியவாதி ஆக்கி விட்டேன். இவரும் உணர்வு பூர்வமான எழுத்துக்கு சொந்தக்காரர்.
தமிழ்நாட்டு கிராமத்து இளைஞனின் உள்ளத்தை இழக்காது இருப்பதால் படைப்புகள் ·ப்ரெஷ்ஷாக இருக்கின்றன

3. பீ.கே.சிவகுமார் - எழுதுவதை விட படிப்பதற்கு நேரம் அதிகம் செலவிடும் ஆசாமி. விவாதங்களில் விடாக்கண்டர். சமீபத்தில் மரத்தடியில் சக்கைப் போடு போட்ட கதை/கவிதை போட்டி இவர் மூளைக்குழந்தைதான். புனைவுப் படைப்புகளை விட கட்டுரையாளராகவும்/ பத்திரிக்கையாளராகவும் வெற்றி பெறுவார்.

4. ஐகாரஸ் பிரகாஷ் - தோழமையான படைப்பாளி. ' சிந்தனையாளன் போல யோசிக்க வேண்டும். ஒன்றுமே தெரியாதவன் போல எழுத வேண்டும் ' என்று (அவர்) வாத்தியார் சொல்வதை எழுத்துக்கு எழுத்து பாவிப்பவர். சிரிக்கச் சிரிக்க எழுதும் அவர் , அடிப்படையில் ரெம்ப ஸீரியஸ் படிப்பாளி என்று பட்சி சொல்கிறது.

5.நம்பி - இவரும் சிங்கை வாசிதான். ஆரம்ப காலங்களில் காலேஜ் கலக்கல்ஸ் என்று விடலைப் பருவ நினைவுகளை ரீவைண்ட் செய்தபோது அவ்வளவாக ரசிக்கவில்லை. நாராய் நாராய் கவிதையை நவீனப்படுத்தியபோது தான் அட! என்று திரும்பிப் பார்த்தேன். சிங்கப்பூர் கப்பலில் இருக்கும் காக்காய் கதை அவரை குபீரென்று உச்சத்துக்கு தூக்கி விட்டது எனக்குள். மாலன் கையால் 'தைப்பூசத்துக்கு' ஷொட்டு வாங்கியவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்

6. சொக்கன் - லாவண்யா என்று தினம் ஒரு கவிதை இணையக்குழு மூலமாக அறிமுகமான இந்த இளைஞர் சரியான துறு துறு. 1000 பேர் கொண்ட ஒரு கவிதைக்குழுவை வத்துக் கொண்டு, வேலை பார்த்துக் கொண்டு, புதிதாக கல்யானம் செய்து கொண்டு, வாரப்பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டு, மடலாடும் குழுக்களிலும் எழுதிக்கொண்டு, அம்பானியையும்
ருஷ்டியையும் பற்றி எழுதிக்கொண்டு, டேட்டாபேஸ் அட்மின் ஆக வேலை பார்த்துக்கொண்டு...மூச்சிரைக்கிறது.

7. உஷா - இந்தத் துடுக்கு (:-)) ) மாமிக்கு விடாமுயற்சி ஜாஸ்தி. எழுதி, எழுதி, எழுதி எழுதி, தமிழை ஒரு வழி செய்து, ' பிள்ளை நிலா' வில் கவர்ந்து விட்டார். ஆரம்பகாலங்களில் எல்லாரும் அசட்டை செய்த இவர் எழுத்து, இந்த இடம் அடைந்ததற்கு மரத்தடியும் ஒரு காரணம். ஒரு பக்க அளவைத் தாண்டி இவர் கதை எழுதப் பழகிக்கொள்ள வேண்டும். நகைச்சுவை இவருக்கு நன்றாக வருகிறது.

8. எல்லே ராம் - சிரிக்க சிரிக்கப் எழுதும் இவர், அதுபோலவே பேசவும் கூடியவர். கவிதைகள் திடீரென்று உசக்கத் தூக்கி விட்டு விடும். கால் வாரல், நக்கல், குசும்பு, என்று அந்த தஞ்சை மண்ணுக்கே உரிய அத்த்னை குணாதிசயமும் எழுத்துக்களில் பொங்கி வழியும். நான் கருத்து சொல்ல தேவைப்படாத ஸீனியர் எழுத்தாளர். இருப்பினும் இணையம் வழியே எனக்கு அறிமுகமானார் என்பதால் இந்த லிஸ்ட்டில் வருகிறார்.

9. ஆசாத் பாய் - ரொம்ப பாஸிட்டிவ்வானவர். எழுத்துக்களும் அப்படியே. கவிதை, கானா, சினிமா, மேனேஜ்மெண்ட், எம்.ஜி.ஆர், கஜல் என்று பாய் சாகேப் தொடாத துறையே இல்லை. பால் மாதிரி மனசு. பாய்க்கு வயசு நாப்பதுங்கறதை
நம்பவே முடியாது. எழுத்தில் இளமை கொப்பளிக்கும்.

10. சேவியர் - எழுத்தில் வைரமுத்து சாயலடிக்கிற கவிஞர். விவாதங்களை விட எழுதுவதில் ஈடுபாடு உள்ளவர். சில சிந்தனைகள் அபாரமாக இருக்கும். இந்த வயசிலேயே பல்வேறு கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளார். நிறைய எழுதிகொண்டிருந்த இவர் தற்போது கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறார்.

கவிஞர்களுக்கு தேவையான இடைவெளி இது.



இந்த லிஸ்ட்டில் யாரவது விடுபட்டுப் போயிருந்தால் அவர்கள் ரொம்பப் பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்.


நேற்று இரவு சி.என்.என் டீவியில் அமெரிக்க டெமாக்ரட்டிக் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விவாதத்தை ஒலி பரப்பினார்கள். வேட்பாளர்கள் நால்வரும் மிக நாகரீகமாக வாதம் செய்ததைப் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். பொருளாதாரம், மருத்துவ வசதி, சர்வதேச தீவிரவாதம், ஒருபால் திருமணங்கள் என்று விவாதத்தின் தலைப்புகள் பொதுத்தன்மை உடையனவையாக இருந்தன. டெமாக்ரடிக் நாமிநேஷனுக்கான விவாதகளமாக இருந்தாலும், புஷ்ஷை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் பேச்சிலும் தொனித்ததால் பேச்சில் சூடு இருந்ததே தவிர ஒருவரை ஒருவர் கால் வாரிக் கொள்ளும் தொனி தெரியவில்லை.

அதிக இடங்களில் வென்று முதலிடத்தில் இருக்கும் ஜான் கெர்ரி, ஜான் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரும் பரஸ்பரம் புகழ்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும்தான் பேச அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டார்போல ஒரு பிரமை. டென்னிஸ் குசினிச் என்ற வேட்பாளர் தன் பக்கம் கவனத்தை ஈர்க்க அதிக பிரயத்தனம் செய்தாலும், அது வேலைக்கு ஆகவில்லை.

எது எப்படியோ, ஜெயிக்கப்போவது ஏதோ ஒரு ஜான்....

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஜெ வையும், கலைஞரையும் ஒரே மேடையில் உட்கார வைத்து விவாதம் செய்ய விட்டால் எப்படி இருக்கும் என்று சற்றே கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன்.

மத்தியானம் சாப்பிட்ட லஞ்ச் உடனே செரித்து விட்டது.


Thursday, February 26, 2004

பெரகாசு வலைப்பூ ஆசிரியராய் போன வாரம் பொறுப்பேற்றபோது
என் வலைப்பூவை பற்றி எழுதி இருந்தார்.

அதன் விளைவே மக்கள் , என் வலைப்பூவைப் பார்த்து விட்டு
பின்னூட்டம் கொடுத்திருந்தார்கள் என்று இப்போது விளங்குகிறது.

ஆனால் சின்னி ஜெயந்த் ஸ்டைலில் கில்மா, சில்பான்ஸ் என்று விவரித்து இருந்த இந்த வரிகளுக்குத்தான் அர்த்தம் புரியவில்லை.

""" இந்த ஒரு வாரம் எதைப் பத்தி வேணாலும் எழுதுவேன். புது வலைப்பதிவுகளைப் பத்தியும் இருக்கலாம். (சக்ரமண்டோ சுந்தர்ராஜன், நம்ம அஜித் பாலகிருஷ்ணன் உபயத்துலே ஒண்ணு ஆரம்பிச்சுருக்காராம். {அஜித்து, நம்ம ரிடி·ப் தளத்தோட பொறுப்பாளி} போய்ப்ப்பாத்தேன் அட்டகாசமா இருக்கு.) அல்லது கில்மா மேட்டராவும் இருக்கலாம். அது என் மூடையும், உங்க கெட்ட நேரத்தையும் பொறுத்தது """"

பெரகாஸ¥, கொஞ்சம் சொல்லுங்க ராசா...

நா என்ன ரொம்ப 'பப்பிஷேம்' ஆகவா எழுதுறேன்.????
Boys பொன்மொழிகள்
-------------------

நாம்எடுத்துக் கொள்வதுதான் வாழ்க்கை .எப்போதும் அபபடித்தான் இருந்தது ,
இருக்கும். வாழக்கை மட்டும் மகிழ்ச்சி தராது அதை விரும்ப வேண்டும்.
வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும தரும் நிரப்ப வேண்டியது உன்
சாமர்த்தியம்


எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை
நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்


தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள்
நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள் , முடியும்
என்றால் முடியும்


தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான
தோல்வி.. தோல்வி உங்களைஅடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால்
இன்னும் தப்புகள் செய்வேன்


களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து
நட்சத்திரங்களைச் சாடுங்கள்


மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை
ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது


வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்


சின்னக் காரியங்களை நன்றாக இப்போது செய்யங்கள் நாளடைவில் பெரிய
காரியங்கள் உங்களைத் தேடிவரும் எல்லா ஆரம்பங்களும் சிறியவையே
ஆரம்பிப்பதுதான் கடினம்


வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்கு காரணம் அவை உழைப்பு
வடிவத்தில் வருவதால் இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது


கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை
இருக்கிறது மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!


யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள்ஆயிரம்பேர்,ஒவ்வொருவரும்
நமக்கு ஒருநல்ல காரியம் செய்திருக்கிறார்கள் உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்
குணத்திலும் எண்ணத்திலும் வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்


நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக்
கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்

(சுஜாதாவின் பொன்மொழிகள் - நன்றி:மரத்தடி)
சமீப காலங்களில் பார்த்த குறிப்பித்தகுந்த 'குத்து' பாட்டு என்றால் அது "பார்த்திபன் கனவு " படத்தின் முதல் பாடல்தான்.

ஆடுபவர் நந்திதா என்று பாரதிராசாவால் நாமகரணம் செய்யப்பட்ட ஜெனி·பர்.டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகள். ஈரநிலத்தில் கதாநாயகியாக நடித்தவர் இதில் இந்த ஒரு பாடலுக்கு போட்டிருக்கும் ஆட்ட்ட்டம்...கலக்கல்... மரத்தடி தளபதி கேவீ.ராசாவால் பாடல் பெற்ற 'லைப்பாய்' வசனத்துக்கு சொந்தக்காரர்.

பாடும் பெண்மனியும் சளைத்தவரல்ல. ஜெனி·பரின் இடுப்பு இந்த வளைசல் வளையும் என்று தெரிந்தோ என்னமோ, 'சுதி'யாக பாடி இருக்கிறார். 'மம்முத ராசா ' பாடிய குரல்காரர் என்று நினைக்கிறேன்.

அதைத் தவிரவும், சமீப காலங்களில் பார்த்த நல்ல படம் என்று பா.கனவை தைரியமாக சொல்லலாம்.

அந்தப் படம் பார்த்ததற்கு அது மட்டும் காரணமில்லை...

இதுவும்தான்...
Gay marriage க்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என அமெரிக்கா அமளிதுமளிப் பட்டுக்கொண்டிருக்கிறது. எலெக்ஷன் நேரமாதலால் இப்போதைய அதிபருக்கும், அதிபர் பதவிக்கு போட்டு போடுபவர்களும் இவ் விஷயத்தில் தன்னுடைய கருத்தினை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்

ஈதிப்படி இருக்க, ஒருபால் புணர்ச்சியாளர்களையும், அவ்விதமான உணர்ச்சிகளயும் தவறல்ல என்று தமிழ் இனையக்குழுக்களில் பெரிய எழுத்தாளர்கள் நிறைய பேர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பம்மல் சம்பந்த முதலியார் குழுவில் உள்ள 'லேடி ரங்கா ' என்பவரைப் பற்றி எழுதி ' ஒருபால் புணர்ச்சி மேற்கத்திய ஒழுக்கச்சிதைவின் அடையாளம் ' என்று சொல்பவர்க்கு இதெல்லாம் தெரியாது போலும் ' என்று சமீபத்தில் முருகன் எழுதினார்.

இயற்கைக்கு முரணான இவ்விதமான ஆட்களை , அனுதாபத்தோடு பார்க்கச்சொல்லும் நம்மவர்கள் விபசாரம் பற்றியும், 'காய்கறிக்காரி குனிந்தபோது தராசுத் தட்டு தெரிந்தது ' என்று சொன்ன அ.மார்க்ஸ் பற்றியும் வக்ரம் என்று கூறுகிறார்கள். விபசாரம் தவறு என்று சொல்கிற அரசுதான் மும்பையிலும், கல்கத்தாவிலும் அதனை அனுமதித்து இருக்கிறது.
ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு முரணாக அவளிடம் உறவு கொள்வதுதான் தவறே தவிர, 'வரைவின் மகளிர்' என்று இலக்கியமே அடையாளப்படுத்தி வைத்திருக்கிற விபசாரிகளை, அவர்கள் தொழிலை அங்கீகரிப்பதுதான்
சமூகத்துக்கு நல்லது. இல்லாவிடில் கள்ளக்காதல் செய்திகளும், இளம் சிறுமியர் பாலியல் பலாத்காரப்படுத்தப்படும் செய்திகளும், ஓரினப் புணர்ச்சியாளர்களையும் பற்றி கொட்டை எழுத்தில் போடும் நாளிதழ்கள், வேறு செய்தியே போட முடியாது. (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழக்கூடிய முறையான) செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை நம் குறைபாடு என்ற எண்ணத்தோடு அணுகுவதுதான் பிரச்சினை.

சமீபத்தில் காதலர் தின விகடன் இதழில் சுஜாதா விஞ்ஞான ரீதியாக காதலை விளக்கியிருந்ததும் நெளிய வைக்கும் விஷயம்தான். காதல் என்பது 'உறுப்புகளில் ரத்தம் பாய்கிற சமாச்சாரம் என்பதும், பாதையை வழுவழுப்பாக வைக்க ஹார்மோன் செய்யும் அதிசயம் ' என்றெல்லாம் நம் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு தெரிய வேண்டியதில்லை. Love is nature's way of ensuring pregnancy என்பது மீசை முளைக்கிற பருவத்தில் இருக்கிறவர்களுக்கு தெரிந்தால் விளைவுகள் விபரீதமாகும். அவர்களைப் பொறுத்தவரை காதல் தெய்வீகமானது என்று நினைத்தால்தான் அவர்கள் வயதிற்கும் , படிப்பிற்கும் நல்லது. ஏதாவது ஒரு புள்ளியில் அவர்கள் மனம் லயித்தால்தான், வேறு விதமான வடிகால்கள் அந்த வயதில் அவர்கள் தேடிக் கொள்ள மாட்டார்கள். பிற்காலத்தில் பக்குவமும், முதிர்ச்சியும் வந்தவுடன் இந்த விஷயங்கள் தெரிந்தால், பாதகமில்லை. எனவே எத்தனை கடிதங்கள் எழுதினாலும் பரவாயில்லை, காதல் கவிதைகள் எழுதிப் பெருமூச்சு விட்டாலும் பரவாயில்லை,
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளை இயல்பாக இருக்க விடுங்கள்.

அவர்களிடம் ' ... மாயாமல் மாயும் மனிதருக்கே ' என்று உங்கள் அ.ஜீ வித்தனத்தை காட்டாதீர்கள்.

ராயர் காப்பி க்ளப்பில் 'குட்டி ஹமாம்' என்றொரு புது முகமூடி.

மட்டுறுத்துநர்களும் , க்ளப் முக்கியஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு
அந்த முகமூடிக்கு பதில் எழுதுவதைப் பார்த்தால் , சா.கணேசன் சார் மறுபடி
மணக்க, மணக்க வந்திருக்கிறாரோ என்றொரு சம்சயம். எல்லே ஸ்வாமி சாரும்
'ஞானபண்டிதா..' என்கிறார்.

முகமூடிகளுக்கு அனுமதியில்லை, அவர்கள் எழுதுவதை ஊக்குவிப்பதில்லை
என்று ஆதிகாலத்தில் சவுண்டு விட்ட க்ளப், ரொம்பத்தான் மாறிப்போச்....

கூடவே, பரமாச்சாரியாளின் அனுக்ரஹத்தோடு புத்தக வெளியீட்டு வெளியீட்டு விழாக்களின் விளம்பரங்களும்...

வாழ்க...பலே..பலே...

Wednesday, February 25, 2004

பின்னூட்டம் அளிக்கும் வசதி சரியாக செயல்படுகிறதா என்பதற்காக செய்யப்படும் சோதனை இடுகை இது.


சோதனை இடுகை இது.


பி.கு: பெயரிலி வலைப்பதிவு உருமாற்றம் நிகழ்ந்தவுடன் , செய்திகளில் கலகலப்பு குறைந்து விட்டது.

ஏதாவது செய்யுங்கோவேன் ஸார்..
அப்பாடா...

இன்று என் பழைய வலைப்பூவில் இருந்து எல்லாவற்றையும் இங்கே
கடத்தி முடிக்க முடிந்தது.

நண்பர்கள் படித்து விட்டு கருத்து சொன்னால் சந்தோஷம்.

அதிரடி செய்திகள் :

1 . சொக்கன் திரும்பவும் ரா.கா.கி யில் நுழைந்திருக்கிறார். வந்தவுடன் ஏஞ்சலாரைப் பற்றி பேசுகிறார். பாவம் எல்லே.

2. திண்ணை செய்தி, மரத்தடியில் உண்டாக்கிய சலசலப்பு பெங்களூர் காப்பி கடை காரருக்கு எட்டி விட்டது. வழக்கம் போலவே அவர் கொதித்த்த்துப்ப்ப் போய் , அதே திண்ணையில் அடுத்த வாரம் எழுதுகிறாராம். அடப் பாவமே...
யாராரோ செய்ய முடியாத பேருதவியை ஜெயா வைகோவுக்கு செய்து
விட்டார்.வைகோவாலேயே கூட தன் இமேஜை இந்த அளவு தூக்கி நிறுத்தி
இருக்க முடியாது.

பொடா சட்டத்தில் சிறை பிடிக்கப் பட்டு வெளி வந்த தினத்தில் இருந்து
வருக்கு கிடைத்திருக்கும் மீடியா கவரேஜ் எந்தக் காலத்திலும் அவருக்கு
கிடைத்ததில்லை.

சிறை மீண்டு வெளிவந்த நாளில் , சிறை வாசலிலேயே ' ஆம் . நான்
இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறேன் ' என்ற சொல்ல நிஜமாகவே தைரியம்
வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலைக்காகவே விடுதலைப் புலிகளையும் ,
இலங்கைத்தமிழர்களையும் வெறுத்த தமிழக மக்கள் பலர் , இவருடைய உறுதியும்
, தொடர்ந்த ஆதரவும், அவர்களுடைய நிலைப்பாட்டை பரிசீலிக்க
வைத்திருக்கிறது. சபாஷ்...

நம் கவலை எல்லாம் ஒன்றுதான்.

கதறி அழும், காலில் விழும் தொண்டனை பளாரென்று அறையும், இன்னபிற
உணர்ச்சி வசப்பட்ட செயல்களை வைகோ குறைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய
தலைவர் கருணாநிதியிடம் இருந்து நிதானத்தையும், திட்டமிடலையும் ,
ராஜதந்திரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

திமுக என்ற இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு மிக சீக்கிரமே இவரிடம்
வரும் சூழ்நிலையில், இம் மாதிரி உணர்ச்சிக் குவியலாய் இருப்பது அவருக்கு
நல்லதல்ல.


நண்பர்கள் முதலில் மன்னிக்க வேண்டும்.

வெகு நாட்களாக என் வலைப்பூவில் தொடர்ந்து எழுத முடியவில்லை.

பார்த்துக் கொண்டிருக்கும் கணிணிக் கூலி உத்தியோகத்தில் எதிர்பாராமல் ஏகப்பட்ட வேலைப்பளு.

பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அத்த்னை பேரும் மறக்காமல் இயங்கு எழுத்துருவில் மாற்றியமைக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

மரத்தடி தளபதியின் வலைப்பூவை படித்து , இதை செய்ய உத்தேசம்.

எல்லாம் வல்ல இரைவன் எனக்கு நேரமும் , பொறுமையும் அளிக்க வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வார கற்றதும் பெற்றதும் பக்கத்தில் கனிமொழியின் கவிதையை
சுஜாதா சாம்பிள் காட்டியிருக்கிறார்.

கனிமொழியின் மொழியில் நாசுக்கு அதிகம். அவர் தகப்பனார் மாதிரி நேரடி தாக்குதல் இல்லை.

அவருடைய பெண்மை மிளிரும் அழகைப் போலவே கவிதையும் கச்சிதம்.

ஜேனட் ஜாக்ஸன் , டிம்பர்லேக் செய்த காரியத்தைப் பற்றி ஆளாளுக்கு எழுதித் தள்ளிவிட்டார்கள்.

அத்ற்கு கண்டணம் தெரிவிக்கும் சாக்கில், எல்லாரும் அந்தக் காட்சியையே ஏகப்பட்ட முறை
எல்லா சானல்களிலும் டெக்னாலாஜி மசமசப்புடன் ஒளிபரப்பி, அந்தத் தருணத்தின் த்ரில்லை
திரும்பத் திரும்ப அனுபவித்துத் தள்ளுகிறார்கள்.

இத்தனையும் நடப்பது அமெரிக்காவில்...

இந்தியா மாதிரி நாட்டிலாவது இது பெரிய ந்யூஸ் ஆவது அதிசயமில்லை.
படங்களில் படு மோசமான காட்சிகள், தனியாக அடல்ட் சேனல்கள்,
ந்யூட் பார்கள், நைட் க்ளப்புகள், அடல்ட் மாகஸின்கள், டேட்டிங் ,
எஸ்கார்ட் செர்வீஸஸ் போன்ற எல்லாவிதமான கேளிக்கைகளுக்கும்
குறைவில்லாத, செக்ஸ் என்றால் பாவமா ..?? என்று கேள்வி கேட்கின்ற
அமெரிக்காவில், ஒரு பாடகி, அதுவும் கிளுகிளுப்பான அங்க
அசைவுகளுக்கு பேர் போனவர், மேலாடை விலக்கி மார்பை
ஒரு மைக்ரோ செகண்டு காண்பித்ததற்கு இந்தக் கூத்து...

அமெரிக்கர்கள் வித்தியாசமானவர்கள்...

இந்த வார ஜூனியர் விகடனில் ராமதாஸ் அட்டைப்படம்.

பெரிய கட்சிகளும், பத்திரிக்கைகளும் இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்
தருகிறார்கள் என்று புரியவில்லை. ஜாதியை அடிப்படையாக வைத்து அவர் துவங்கிய
வன்னியர் சங்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று புனைப் பெயர் சூடிக் கொண்டு
ஒவ்வொரு தேர்தலுக்கும் தி.மு.க/ அதிமுக என்று மாறி மாறி சவாரி செய்து
வேகமாக வளர்ந்து வருகிறது.

இது மிக கவலை தரும் விஷயம். பெரிய கட்சிகளின் ஊழலும், குடும்ப அரசியலும்
காலில் விழும் கலாசாரமும் ஒழிய வேண்டும் என்ற விஷயத்தில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் , எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைத்து , ஒரு போதுவான நோக்கத்துக்காக
போராடுவதாக சொல்லிக் கொள்ளும் அவர்களுடைய கட்சிகளுக்கினையாக, பா.ம.க வும்
வளருவது, ஜாதிய ரீதியாக தமிழகத்தை பிளவு படுத்தும். அதிக குழப்பங்களுக்கு
வழி வகுக்கும்.

இந்த டாகடரைப் பின்பற்றி தேவர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும்,
முதலியார்களும், சிறுத்தைகளும் இப்போது வளரமுடியாவிட்டாலும், வளர்ந்து வரும்
பா.ம.கா வால் வன்னியர் அடையும் நன்மைகளைப் பார்த்து விட்டு மற்ற இன மக்களும்
ஜாதிய ரீதியாக தன் வேட்பாளர்களுக்கே நாளடைவில் ஓட்டளிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அது நடந்தால், தமிழ்நாட்டை ஆண்டவன் என்ன..?? யாராலும் காப்பாற்ற முடியாது

ஒரு தேர்தலிலாவது திமுகவும் , அதிமுகவும் தீவிரமாக முடிவெடுத்து பா.ம.க வை
தனியே விடவேண்டும். வன்னியர் பகுதிகளில் அவர் செயித்தாலும் பரவாயில்லை,
அப்போதுதான் அவர் வளச்சி அந்தப் பகுதிகளோடு நிற்கும்.
நேற்று Bay Area சென்று வந்தேன்.

வருடாந்திர Tax-filing முடிக்க வேண்டிய வேளை இருந்ததால், தர்மராஜ் என்ற நண்பரின்
கடைக்குச் செல்ல வேண்டி இருந்தது. அவர் உள்ளே காரியமாக இருந்ததால், கடையில் இருக்கும்
புத்த்கங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.இணைய்ப் பெரிசுகள் பரிந்துரைத்த பல புத்தகங்கள் அந்தக் கடையில்....

வேலை முடிந்தவுடன் , தேர்வு செய்து வைத்திருந்த புத்த்கங்களை அவர் முன் போட்டு ' எல்லாவற்றுக்கும் விலை சொல்லுங்க சார் ' என்றேன். 'ஒரு பைசா கூட வேண்டாம் சுந்தர். ·ப்ரியா எடுத்துக் கொள்ளுங்கள். விருப்பமிருந்தா 'சங்கரா ஐ ·பவுந்தேஷன்' உண்டியல் இருக்கு. அதில் ஏதாவது போடுங்க என்றார்.

சந்தோஷத்தோடு போட்டு விட்டு நடையைக் கட்டினேன். வாழ்க தர்மராஜ் and mailbag.com.

எடுத்து வந்த புத்த்கங்கள் :

புத்ர லா.ச.ரா
அபிதா - லா.ச.ரா
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
கடற்கரைக் கால்கள் - பூமா.ஈஸ்வரமூர்த்தி
மாறுதடம் - சுப்ரபாரதிமணியன்
உயிரைச்சேமித்து வைக்கிறேன் - எஸ்.சங்கரநாராயணன்
யாருடனும் இல்லை - அழகியசிங்கர்
406 சதுர அடிகள் - அழகியசிங்கர்

படித்து விட்டு ஒன்று ஒன்றாக எழுதுகிறேன்.
இணையவெளியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்களின் எண்ணிக்கை ஜாஸ்தியாக இருக்கிறது. இந்தத் தலைமுறை மெட்ராஸ்காரர்களாக இருந்தாலும் , முன் காலத்தில் காவேரிக்கரையிலிருந்து புறப்பட்டு வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

கூடவே தாமிரபரணிக்காரர்களும், யாழ்ப்பாணத்துக்காரர்களும்

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு கம்ப்யூட்டர் சென்டர் தான். கல்லூரிக்கு கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் தான். போறியியல் படித்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும் என்ற மாயையை உடைத்து , எல்லோரையும் டாலர்களிலும், பவுண்டுகளிலும் , லட்சங்களிலும் புழங்க விட்டது நிஜமாகவே புரட்சி தான்.

அப்படி வந்த மக்கள் தான் , ஏதாவது ஒரு செயலியை இறக்கிக் கொண்டு, தமிழ் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்நாட்டில் கூட தமிழ் எழுத/படிக்க யோசிக்காதவர்கள், அயல்தேசம் வந்ததும் தமிழ்நேசர்களாகி விடுவது ஒருவகையில் அதிர்ஷ்டம்தான்.

எனக்குத் தெரிந்த இணையவெளி தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள்:

எல்லே ராம் - மாயவரம்
பத்ரி - நாகை
வெங்கட்டு - ஒரத்தநாடு / கும்பகோணம்
ஹரிகிருஷ்ணன் - மன்னார்குடி (??)
நம்பி
பா.ராகவன் ( திருக்கண்ணமங்கை)
புகாரி
பரிமேலழகர்
உஷா ராமச்சந்திரன்
கே.வி.ராஜா
ரமேஷ்குமார் அலையஸ் ரஜினி ராம்கி
அருண் வைத்யநாதன்


ஹி..ஹி..நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான்.

அமெரிக்க தேர்தல் வரும் அக்டோபர் மாதம்.

இப்போதிலிருந்தே களைகட்டத் துவங்கி விட்டது தேர்தல் பிரசாரம். நம் ஊரைப் போல இல்லாமல், டெமாக்ரட்டிக் கட்சியிலேயே ஏழெட்டு பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். நம் ஊரில் காங்கிரஸ் என்றால் நேரு குடுமபத்தில் யாராவது ஒருவர், பி.ஜே.பி என்றால் அடல்ஜி, திமுக என்றால் கலைஞர் குடுமப்த்தில் இருந்து யாராவது ஒருவர், அதிமுக என்றால் அம்ம்ம்மா..என்று ஒப்புக்கு செயற்குழு, பொதுக்குழு என்று கூட்டி, பிரியாணி போட்டு, முடிவு பண்ணி விடுவார்கள். இங்கு அதில் கூட பிரம்மாண்டம்தான்.உள்கட்சி தேர்தல்களே மாநிலம் மாநிலமாக நடக்கிறது.

ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த ஹோவர்ட் டீன் இப்போது மிக மிக பின் தங்கி இருக்கிறார். அசப்பில் நம்ம ஊர் வையாபுரி மாதிரி இருக்கும் ஜான் கெர்ரி முன்னனியில். அவரைப் பற்றி அதிகமான மீடியா கவரேஜ் அவர் ஏழு மாநிலங்களில் ஜெயிப்பதற்கு முன் இல்லை. இப்போதுதான் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பற்றி எழுதுகிறார்கள்.

யாரோ ஜெயிச்சு வரட்டும். கலி·போர்னியா சர்வீஸ் சென்டரில் பச்சை அட்டை அப்ரூவல் அதிகமானால் சந்தோஷம்தான்.

கமலஹாஸன் கவிதை

தாயே, என் தாயே !
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே,
குடித்த முதல் முலையே.
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி. சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் வித்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே
நீயும் என் காதலியே
எனதம்மை போல.
என்னைப்பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்

(நன்றி: விகடன் தீபாவளி மலர் - 2003)


( கமலஹாஸன் கவிதை...மரத்தடி பி.கே.எஸ் மடலில் இருந்து உருவியது . ஆழமான கவிதை )
இனிய முருகன்,

நிச்சயமாய் அவருடைய அந்தரங்கத்தைப் பற்றி பேசவில்லை...

நான் ஜே.கே வை ஒரு காட்டாறு போல கற்பனை செய்து வைத்திருந்தேன். தனக்கு சரி என்று படுகிற விஷயங்களை தெளிவாக சொல்லும் ஆளாய், தனக்கு உடன்பாடில்லாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதக்காரராய், ஒரு சிங்கம் போலத் தான் உருவகப்படுத்தி வைத்திருந்தேன்.

2000 ல் சிங்கப்பூரில் ஒரு நேரடி கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். மலேசிய எழுத்தாளர் திரு.பீர்முகம்மது கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழ்நாட்டில் அப்போது மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவி வந்தது. இந்தியாவெங்கும் மத ரீதியாக கலவரங்கள். சண்டைகள். சச்சரவுகள்...!! "இம் மாதிரியான சூழ்நிலையில், ஏற்கனவே அரசியல் தொடர்புகள் கொண்ட, உங்களைப் போல தெளிந்த சிந்தனையாளர்கள், அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கலாமா..?? உங்கள் பங்களிப்பு இந்தக் காலகட்டத்தில் தேவை..தயக்கம் ஏன் ? என்று வினா எழுப்பினேன். கூட்ட அமைப்பாளர், "அரசியல் கேள்விகள் கூடாது. அமருங்கள் " என்று கட்டளையிட்டார். இதை திரு ஜே.கே மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்,

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, கேள்வி மிக பொதுவானது. கட்சி சார்ந்ததல்ல.ஆயினும் அது ஒருங்கிணைப்பாளரால் தடை செய்யப்பட்டது. ஜே.கே யாவது அதை தாண்டி "இல்லை...இது சர்ச்சைக்குரிய கேள்வி இல்லை" என்று பதில் சொல்லியிருக்கலாம். அவர் ஏதும் சொல்லவில்லை. ஒருவேளை தன்னை அழைத்து அயல்நாட்டில் கூட்டம் போடுகிறவர்களுக்கு , சங்கடத்தை உண்டாக்க வேண்டாம் என்று நினைத்தாரோ..?? நானறியேன்...என்வரையில் விளைவுகளை பற்றி கவலைப்படாது, தனக்குத் தோன்றியதை எழுதும் ஜே.கே யின் உருவம் கலங்கிப்போனது உண்மை.

கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற பெரியவர்கள் , கூட்டம் முடிந்த பின்பு என்னிடம் பேசினார்கள். "உங்கள் கேள்வி சரிதான்..ஆனால் இங்கே அவர் ஏன் தயங்கினார் என்று தெரியவில்லை. நாளை நாங்கள் அவருடன் ஒரு மதிய உணவுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் கலந்து கொண்டால் அவருடன் ரிலாக்ஸ்டாக பேசலாம். " என்று அழைப்பு விடுத்தனர். கலந்துகொண்டு இதே கேள்வியைக் கேட்டேன். " கட்சி அரசியல் செய்தால்தான் என் அரசியல் கடமையை செய்வதாக நான் இப்போதெல்லாம் கருதுவதில்லை...அரசியலுக்கு வெளியிலிருந்தும் செய்யலாம்" என்றார். எனக்கு அது வெறும் சமாதானமாகவே பட்டது. மேலும், இந்த பதிலை பொதுக்கூட்டத்தில் சொல்ல தயங்கியது எனக்கு வியப்புத்தான்.

அடுத்த உரையாடல், தமிழ்நாட்டு சாட்டிலைட் டீ.வி பற்றியது.

தமிழ்நாட்டில் எந்த சானலை திறந்தாலும் ஒரே சினிமா மயம்தான். எல்லா நடிகர்களும் தமிழை கொலை செய்கிறார்கள். எனவே தமிழ்நாட்டில் தமிழை கொலை செய்கிறார்கள். புலம் பெயர்ந்தோர் / அயலகத்தமிழோர் தான் தமிழை வாழ வைக்கிறார்கள்..தமிழ்நாட்டு எழுத்தாளர் என்ற முறையில் இதையெல்லாம் கண்டிக்கலாகாதா? என்ற ரீ¢தியில் ஒருவர் பேசிக் கொண்டே போனார். இதற்கு சரியான முறையில் பதில் கூறி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தேன். இதற்கும் ஏமாற்றந்தான்.

"நீங்கள் பார்ப்பதெல்லாம் சினிமா நிகழ்ச்சிகள்...தமிழ்நாட்டில் எந்த நடிகர்/நடிகை தமிழகத்தை சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள். கேரளமும், கரநாடகமும், மஹாராஷ்டிரமும் , வங்காளமும் தன் நாடாக கொண்டவர்க்கு தமிழ் சரியாக வரும் என்று எப்படி நினைக்கலாம். நீங்கள் சொல்லும் அதே சேனலில்தான் "தினம் ஒரு குறள்" வருகிறது. சுகி.சிவம் பேசுகிறார். நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் வருகிறது. ரிமோட்டை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, நீங்கள் எதை பார்ப்பது என்பதை முடிவு செய்கிற அதிகாரம் உங்களிடம் இருக்கிற நிலை இருந்தும். நீங்கள் வெறும் சினிமா நிகழ்ச்சியைப்பார்த்து விட்டு " தமிநாட்டில் தமிழ் சாகிறது" என்று சொல்வது அபத்தம் என்று சொன்னேன். ஆயினும் அந்தக் கேள்வுக்கு ஜே.கே பதில் சொல்லியிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.

இன்னமும் பல கேள்விகள். அவ்வள்வு திருப்தியில்லத பதில்கள். போதுவாகவே அவரிடம் ஒரு நொய்மை தெரிந்தது. சரிதான் சிங்கத்துக்கு வயதாகி விட்டது என்று நினைத்துக்கொண்டேன்.

சுந்தர்ராஜன்

( ஜெயகாந்தன் உடனான என் சிங்கப்பூர் சந்திப்பு - ரா. கா.கி மடல்)
முருகன்,

இது ரொம்ப ஓவர்...

இந்த விவாதம் ஒவ்வோரு முறையும் இங்கே கிளம்பி, வேண்டாத திசையில் திரும்பி, பலத்த மனச்சேதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

எல்லா இலக்கிய வடிவங்களிலும் தரமான படைப்புகள் உண்டு. மலிவான, கவைக்குதவாத சமாசாரங்களும் உண்டு. அது தங்களுக்கே தெரியும். முந்தைய விவாதங்களில் நீங்களே இதை இங்கே எழுதி இருக்கிறீர்கள்.ஆயினும் திரும்பத்திரும்ப புதுக்கவிதையை/ அதை எழுதுபவர்களை, சமயமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் தூற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இதை எழுதின சுஜாதாவே "புதுநானூறு" என்று ஒரு பகுதியில் புதுக்கவிதைகளை அறிமுகப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல...உங்கள் குருநாதரே (மீரா) புதுக்கவிதையால் அறியப்பட்டவர்தான். நமது ராமின், கவிஞர்.வைத்தீஸ்வரனின், திரு. ஹரியின், புதுக்கவிதைகளை சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள். உங்களை நான் ரசிக்கத் தெரிந்து கொண்டதே உங்கள் புதுககவிதை தொகுப்பால் தான்.( ஒ.கி.பெ.தலைப்பிரசவம்...)

அப்படி இருக்¨காயில், புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவத்தை இந்த மிதி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் படங்களைப் பற்றி பேசுகையில் சோமன துடியைப் பற்றியும், செம்மீனைப் பற்றியும்,
தான் பேசுகிறீர்கள். இராம நாராயணன் படம் பற்றியும், (மலையாள)கே.எஸ். கோபால கிருஷணன் படங்களைப்பற்றி பேசி, அதனால் சினிமா எடுப்பதையே ** தடை** செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை.

கதைகளைப் பற்றி பேசுகையில் அசோகமித்திரன் பற்றியும், புதுமைப்பித்தனையும், தி.ஜா.ரா வையும் பேசுகிறீர்களே ஒழிய , அழகாபுரி அழகப்பனையும், புஷ்பா தங்கதுரை கதைகளுக்காக கதை எழுதுவதையே ** தடை** செய்ய வேண்டும் என சொல்வதில்லை.

புதுக்கவிதை பற்றி பேசும்போது மட்டும், பத்திரீகையில் வரும் தரமில்லாத புதுக்கவிதைகளுக்காக இதை தடை செய்ய வேண்டும் சொல்கிறீர்கள்.எனக்கு இந்த லாஜிக் சுத்தமாக புரியவில்லை.

எழுதுபவர்கள் செய்யும் தவறுகளுக்காக இலக்கிய வடிவங்களை குறை சொல்ல துவங்கினால், அதை எல்லாவற்றுக்கும் செய்யுங்கள். எழுதுபவர்கள் அதிகம், என்ணிக்கையும் அதிகம் என்பதற்காக பு.கவிதையை வையாதீர்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல, இதை பொதுப்படையாக "வார்த்தைக் கழிச்சல்" என வகைப்படுத்தும் எல்லா "பெரிசு"களுக்கும் ( வாத்தியார் உள்பட) சொல்கிறேன்.


- சுந்தரராஜன்



( புதுக்கவிதைக்கு வக்காலத்து வாங்கி, ரா.கா.கி யில் வீங்கியது)
மரணம்
========

வாழும்போது ஒரு விதமாயும்,
அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே
ஒருவிதமுமாய்
மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு
நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ
என நான் வியந்ததுண்டு ஒரு காலம் ...!!

**********

நாடாண்ட நடிகன் அவன்..
வாழுங்கால் வல்லவனாய் வாழ்ந்தானே ஒழிய
நல்லவனாய் வாழ்ந்திலன்...
விமரிசனம் தாண்டியவனும் அல்ல..
தாங்கியவனும் அல்ல...
காலன் அவனை அழைத்தபோது
ஊர் கூடி ஓலமிட்டது பொன்மனம் பூமியில் புதைந்ததாக...

ஆதிக்க வெறி பிடித்த ஆண்டை என்பர்
குலகல்வி திணிக்கப் பார்த்த குல்லூகப் பட்டரென்பர்
குறைகள் இல்லாமல் இல்லை, உண்டு அனேகம்
பூவுடல் நீத்தபின் மூதறிஞர் உதிர்ந்தார் என்பர்..

வஞ்சமுள்ள நெஞ்சம் உண்டு கஞ்சம் எனப் பழியும் உண்டு
குற்றமற்ற குணக்குன்று அல்ல..
திரையில் நடித்து , நிஜத்திலும் நடிக்கும்
மாபெரும் நடிகன்,
இயல்பாய் இருக்கப் பணித்தால் கூட
அதைப்போல் நடிக்க மட்டுமே முடிந்தவன்...
தலை சாய்ந்தபோது வையமே வாடியது
சிம்மக்குரலோன் சிதைந்ததாக

அரக்கி எனபர், கொடுங்கோலன் என்பர்
பல அரசுகளை பந்தாடும் படுபாவி என்பர்
நெருக்கடி நிலை கொண்டு வந்த நீலி என்பர்
கணவனை தானே கொன்ற காதகி என கதைப்பர்
தோட்டாக்கள் துளைத்து துடி துடித்து வீழ்ந்தபின்
அவரையே அன்னை என்பர்..

***************

மரணம்....

காலதேவன் தரும் இவ் விசேஷ அந்தஸ்து
மாய்மாலக்காரர்களை கூட
மகாத்மா ஆக்கி விடுகிறது...

மரணம் தின்றபின் மனிதனைப் பாடுவது
அதன் மீது மனிதனுக்கு இருக்கும் பயம் பொருட்டே...

செததபின் ஒலிக்கும் இந்த சிந்து
"எனக்கின்ணும் காலம் உண்டு"
என்றெண்ணும் விடுதலை உணர்வே..

**********

இறப்பில் அல்ல..இருப்பிலேயே நாம்
எப்போது
நேசிக்கப்படப்போகிறோம்...

இரஙகல் கூட்டத்தில் மட்டுமின்றி
இருக்கும்போதே நாம் எப்போது
பாராட்டுப் பெறப்போகிறோம்
உண்மையாய்....

பாராட்டுக்கள் பிணமாலை போலன்றி
நிஜமாலையை நேர்மையாய் பெறும்
அந்த நியாயமான கழுத்து

நம்மில் யாருடையது...???



( வெகு நாட்களுக்கு முன் வந்த திண்ணைக் கவிதை...)

புதுசா எழுதினதை தவிர , என் Rkk கோப்புல இருந்த எல்லா சமாச்சாரத்தையும் வலைப்பூவுல போடலாம்முணு உத்தேசம்.

குழப்பமா இருந்தா கொஞ்ச நாளைக்கு கண்டுக்காதிங்க.

எல்லாமே குழம்பித்தான் தெளியும்.

அடிப்படையில் பத்திரிக்கைத் துறைக்கு போயிருக்க வேண்டிய ஆள் நான்.

மனசுக்கு புடிச்சதை செய்யணும்னா, அதுக்கு வயிறு நிறையணும்டா...அதனால் மொதல்ல உன் மார்க்குக்கு , ·ப்ரியா கிடைக்கிற இஞ்சினியரிங் படி , அப்படின்னு அப்பா சொல்ல, அழகப்ப செட்டியார் காலேஜ் , காரைக்குடில படிக்கப் போன ஆளு.

கி.ரா ஒரு முறை சொன்னார். " நான் மழைக்காகத்தான் பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கினேன். ஒதுங்கினவன் , அங்கயும் மழயையே பாத்துக் கிட்டு இருந்திட்டேன் "

அதுதான் ஞாபகத்துக்கு வருது.

சேந்தது இஞ்சினியரிங்கே ஒழிய, அங்க பண்ணது அத்தனையும் இதே வேலைதான்.

கல்ச்சுரல் பெஸ்டிவல், பாட்டு, அறுவைப் போட்டி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், காலேஜ் மாகஸின் எடிட்டர் , ஜூனியர் விகடன் பத்திரிக்கையாளர் பயிற்சித் திட்டம் , அப்படின்னு படிப்புக்கு சம்பந்த்மில்லாத விஷயங்கள்.

படிச்சு முடிச்சு 12 வருஷம் கழிச்சும் தமிழ் துரத்துது.

சரி..அதுக்கு இப்ப என்னங்கிறீங்களா..??

ஏதோ..சொல்லணும்னு தோணிச்சு ...நேரம் இருக்கு..பாண்ட்விட்த் இருக்கு. எகலப்பை ·ப்ரீயா கெடைக்கீ...சொல்றேன்.

ஆளாளுக்கு மடலாடும் குழுக்களில் "முகமூடித் தொல்லை தாங்கலை..தாங்கலை" என்று புலம்புகிறார்களே ஒழிய, எல்லோரும் அதை உள்ளுக்குள் ரசிப்பதாகவே தோன்றுகிறது.

பின் என்ன..?? 'பெயரிலி' யின் வலைப் பக்கத்தில், எத்த்னை ஆட்கள் பின்னூட்டம் தருகிறார்கள் தெரியுமா..?? பின்னூட்டம் தருபவர்களைத் தவிர ஏராளமான பேர் படிக்கிறார்க என்றும் தெரிகிறது.மடலாடற் குழுக்களில் அந்தப் பக்கத்தைப் பற்றி கிட்டத்தட்ட நிறைய்ய பேர் எழுதி விட்டார்கள்.

என்னைப் பொறுத்த்வரை, அப்படி எழுதுவது இன்னமும் ஒரு படி அதிகம் சுதந்திரம் அளிக்கிறது என்று நினைக்கிறேன். காட்டாறு மாதிரி. இன்னோரு பலனும் இருக்கிறது. எத்த்னை பேர் மாற்றி நவராத்திரி ஜிவாஜி ஸ்டைலில் எழுதினாலும் , "அட..என் எழுத்து நடை இத்த்னை பேருக்கு , 'இது நாந்தான் ' என்று கண்டுபிடிக்க வைக்கிறதே " என்ற் சந்தோஷம். identity crisis..??

எனக்குத் தெரிந்த பெரு மதிப்பிற்குரிய ஸ்ஸ்ஸீரியஸ் கவிஞர் ஒருவர் இது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட முகமூடிகளில் உலா வருகிறார்.ஆனால் , தமிழ் இணையத்தில் தவிர்க்க முடியாத ஆசாமி அவர். தனிப்பட்ட முறையில் பலருடன் அன்பு பாராட்டி ஊடாடி வருகிறார்.

அவருடைய பெயர்கள் அத்த்னையையும் ஊகித்து, அவருடைய உண்மையான பெயரையும் எழுதுபவர்க்கு, கந்தனின் பெயரில் ஒரு விசேஷ அர்ச்சனை செய்து, பஞ்சாமிர்த பார்சல் அனுப்பி வைக்கப்படும்.

ராயர் காப்பி க்ளப்பில் இருந்தபோது , மெதப்பாக ' "வலைப்பூவா..?? தனிப்புலம்பல்யா அது ' என்று ஏஞ்சல் ராமச்சந்திரனுடன் ( நன்றி: ரமணீதரன்) சேர்ந்து கொண்டு வெங்கட்டை விவாதத்திற்கு இழுத்தது நினைவுக்கு வருகிறது.

இப்போது நானும் வலைப்பூக்களில் தொடர்ந்து எழுத உத்தேசித்து இருக்கிறேன்.மதியக்காவிடம் மடல் பொட்டு தமிழ் வலைப்பூ இணைப்புகளில் சேர்த்து விட வேண்டியதுதான்.

தனிப்புலம்பலோ..., என்னவோ, இந்த மாதிரி கட்டற்று இருப்பது பிடித்திருக்கிறது. குழுக்களில் இம்மாதிரி , விஸ்ராந்தியாய் நமக்குப் பிடித்ததை எழுத முடியாது. தனி மடல் போட்டாலும் பொதுவில் போட்டு விடுவார்கள். வம்பு...

திருவிளையாடல் ஞானப்பழத்தை கோட்டை விட்ட 'ஸ்ரீதேவி' பேசுவது போல், ' எங்கோ போகிறேன்..எனக்கென்று ஓர் உலகம் ..எந் நாடு..என் மக்கள்..."

என்று...

இதுதான் என் "பழனி"

அலுவலகத்தில்தான் கணிணியைக் கட்டிக்கொண்டு அழவேண்டி இருக்கிறதே என்று , இணையத்தில் நடக்கும் கணிணி சம்பந்தமான விவாதங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது வழக்கம்.

கும்பகோணம் வெங்கட்டு , சுஜாதாவை எதிர்த்து சங்கநாதம் செய்யும் லினக்ஸ் விஷயத்திலும் அப்படியே இருந்தேன். இது சம்பந்தமாக என் அலுவலக மராத்தி நண்பனிடம்
தமிழில் லினக்ஸ் வந்து விட்டதை சந்தோஷமாய் சொன்னேன்.

"why do you want Linux in Tamil..?? - his question

" Because, all my tamilianas from remote area can use the technology with out worrying about the Language ..

But, If those guys are not able to understand simple commands like "save""save as " as in Original Linux, What they will do with the technology which needs more skill .."

நியாயமான கேள்வியாய் தான் படுகிறது எனக்கும்.

வெடி
=====

அப்போதெல்லாம் தீபாவளி வருவதற்கு இரண்டு மாதம் முன்னரே ஒரே பரபரப்பாயிருக்கும்.விநாயகர் சதுர்த்தி வரும்போதே அதன் சாயல் தெரிந்துவிடும். முதல் அடையாளம் சின்னக்கடைத்தெருவில் வரும் பட்டாசுக் கடைகள் தான். மற்ற நேரத்தில் சோனியான பையன் காத்தடிக்க பஞ்சர் பார்க்கும் கனகு, தீபாவளியானால் பட்டாசுக்க் கடை வைத்து விடுவார். போன வருசத்து சரக்குகளையெல்லாம் எடுத்து தூசி தட்டி, வெயிலில் காய வைத்து, முதலில் விற்றுத் தீ¢ர்ப்பார். பிறகே வரும் துப்பாக்கிகள். அலுமினியப் பளபளப்பில், கருப்பு மினுக்கலில், இரட்டைக் குழலோடு சரம் சரமாக சணலில் கட்டித் தொங்கும். ஸ்கூல் போகும் போதும் வரும்போதும் ஆசை ஆசையாய் எட்டிப்பார்த்து , எச்சில் விழுங்கி, வீட்டில் கோரிக்கை வைத்து கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு , கிடைக்கும். பின் கேப்புகள். வாங்கி சுருள் சுருளாய் கோர்த்து, வெடிக்கும்போது ...அப்... ப்....பா ஜென்ம சாபல்யம் தான். +1 படிக்கும்போது கூட காலாண்டு தேர்வு ஹாலில் சுருள் கேப்பு வெடித்தது ஞாபகம் இருக்கிறது.

60 நாளைக்கு முன்பிருந்தே வெடி வாங்க லிஸ்ட் தயாராகும். குருவி வெடி, யானை வெடி, லக்ஷ்மி வெடி, டபுள் ஷாட் என்று எழுதி வைத்து, எங்கு வாங்கலாம். சிவகாசியில் நேரே வாங்கினால் விலை குறைவாமே..ஸ்கூல் ·ப்ரெண்ட் எத்தனை ரூபாய்க்கு வாங்கினான். நாம் அவனை விட அதிகம் வாங்க வேண்டுமா..??என்று பல பல கேள்விகள் . சந்தேகங்கள். ஆசைகள். அபிலாஷைகள். சில பேர் வீ ட்டில் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். விட்டு வாசலில் உட்கார்ந்து ( டேய்...அவங்க வீட்டு வாசல்ல போய் உட்கார்ந்து 'பே' ந்னு பாத்துகிட்டு நிக்காதடா - அம்மா) அவர்கள் வெடிப்பதை, வீட்டுக்கும் வாசலுக்குமாய் ஓடி ஓடி ஊதுபத்தியால் திரியில் வைத்து விட்டு வருவதை, அவர்கள் த்ரில்லை, வெடிப்புகை வாசனையை ஏக்கத்தோடு உக்காந்து பார்த்து விட்டு, வீட்டுக்குள் வந்து என் வெடி லிஸ்டை இன்னொரு தடவை சரி பார்த்துவிட்டு கனவுகளுடன் தூங்கிப் போவேன்.

தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு தடக்கென்று அப்பா வெளி ஊரிலிருந்து வெடி வாங்கி வந்து விடுவார். பிரித்துப் பார்த்தால்
எல்லாம் மத்தாப்பு, தீப்பெட்டி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வானம் என்று தலையில் இடி விழும். கேட்டால்" சீ..நீ சின்னப் பையன். வெடி யெல்லாம் வெடிக்கக்கூடாது. மத்தாப்பு போதும்' என்ற கண்டிப்பு . தீபாவளிக்கு தீபாவளி வந்து போனதே ஒழிய , நான் பெரியவனாகவெ இல்லை. அப்பாவின் மத்தாப்பு பாக்கெட்டுகளும் குறையவே இல்லை.

மெல்ல மெல்ல இதில் நாட்டம் குறைந்து, தீபாவளி புது ட்ரெஸ், புது படங்கள், சாட்டிலைட் டீவி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று வேறு திசையில் பயணப்பட்டது மனசு. காலையில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு சாஸ்திரத்துக்கு இரண்டு வெடிகொளுத்திப் போடுவது வரை வந்தது நினவுக்கு இருக்கிறது. பிறகு வேலை தேடி வெளியில் பயணப்பட்டு, சில வருடங்கள் தீபாவளி எப்போ வருகிறது என்பதே மறந்து போய், வாழ்க்கையில்/ மனதில் ஏகப்பட்ட வெடிகள் வெடித்து ரணப்பட்டு, புகை மூட்டமாய் போய், மீண்டு, தெளிந்து ,மணமாகி, லாப் டாப்பில் cracker.exe யை வெடித்துப் பழகிய பிளளையோடு ஊருக்கு தீபாவளிக்கு போனேன். அப்பா தீபாவளி சாமான் வாங்க லிஸ்ட போடச்சொன்னார்.

பட்டாசு லிஸ்ட்டில் ஒரே மத்தாப்பாக பார்த்து விட்டு நிமிர்ந்த அப்பாவின் பார்வையை, அவரது புன் சிரிப்பை, அதன் அர்த்தத்தை எழுத எனக்கு ஆயிரம் விரல்கள் இருந்தாலும் போதாது

-I wrote this in Raayar kaapi klub during Diwali.
அன்புள்ள மாலன்,


"மே" மாத திசைகள் கண்டேன்...

மாணவர்களிடம் சமூகப் பொறுப்பு குறைந்து விட்டதாய் உங்கள் கட்டுரை விசனப்பட்டிருந்தது.சமூகப்பொறுப்பு என்று எதை சொல்கிறீர்கள்...வீதியில் இறங்கி போராடுவதையா..?? கொடி பிடித்து கோஷம் போடுவதையா..?? கொடுமை கண்டு பொங்கி எழுந்து , தன் மானசீக ஹீரோ போல மைக் பிடித்து பேசுவதையா..??

மாலன், இப்போதும் , எப்போதும் இளைய தலைமுறை விழிப்புடன் தான் இருக்கிறது. எதிர்ப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது உங்கள் காலத்தைப் போல் வெளிப்படையாகத் தெரியாமல் அடங்கிய எதிர்ப்பாய் கனன்று கொண்டு இருக்கிறது.

இல்லாவிடில் இந்நேரம் ரஜினி கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்திருப்பார். ப.சிதம்பரம் கட்சியை கலைத்து விட்டு அவரோடு ஐக்கியமாகி இருப்பார். ஜாதிக் கட்சிகளை பிராந்திய கட்சிகளும் அகில இந்திய கட்சிகளும் வால் பிடித்துக் கொண்டிருக்கும்.

விவாதங்கள் நிகழவில்லை என்கிறீர்களா..?? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்...இணைய வெளியில் கிடைக்கும் எவ்வளவோ மலிவான விஷயங்களை விலக்கி விட்டு , எத்தனை இனையக்குழுகளில் எப்படிப்ப்பட்ட விவாதங்கள் நடக்கிறது தெரியுமா..? தனக்கு சரி என்று படும் கொள்கைக்காகவும் , சரியான தீர்வை இனங்காணுதல் பொருட்டும் . கண்ணுகுத் தெரியாத மதிப்புக்குரிய நண்பர்களுடன் எத்தனை "மானசீக " மல்யுத்தம் நடக்கிறது தெரியுமா..??

சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தில் , அடுத்த ப்ராஜெக்ட் கிடைக்குமா என்ற நிலையற்ற வாழ்வில் , வேலைப் பளு நிறைந்த ஒரு திங்கட்கிழமை காலையில், எந்த தட்டச்சும் தெரியாத என்னை எந்த சக்தி இப்படி ஆவேசமாக இயக்கிக் கொண்டிருக்கிறது..??

எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் மாலன்...

"அரசியல் எல்லாம் வேண்டாம் சார்" என்று உங்கள் மாணவ நண்பரை எது சொல்லவைத்தது. இன்றைய அரசியல் நிலைமை அல்லவா..அதற்கு நீங்களும் ஒரு காரணம் தானே. பண்ணையார்களிடமும், ஜமீன்களிடமும் இருந்த அரசியலை சாமான்யனுக்கும் கொண்டு வருகிறோம் என துடை தட்டிக் கிளம்பிய திராவிட இயக்கங்கள், தனிமனித மதிப்புகள் கூட இல்லாத குப்பனுக்கும் , சுப்பனுக்கும் பதவி கொடுத்து அவர்களையும் ஊழல்வாதிகளாய் ஆக்கியத்துதான் மிச்சம். அந்த நோக்கம் நிறைவேற , மொழியின் பெயரால் உங்களைப் போன்ற மாணவ சக்திகளை உபயோகப்படுத்திக்கொண்டார்கள். திராவிட அரசியலை ஆரம்பித்து வைத்த பொறுப்பு உங்கள் தலைமுறை செய்த காரியம். அந்த காரியத்தின் விளைவை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நொந்து போன நாங்கள், எங்கள் வாழ்க்கைக்கான தேவையாக உள்ள பணத்தையும் அது தரும் பாதுகாப்பையும் தேடிவதில் என்ன குறை கண்டுவிட்டீர்கள்?. வீட்டை குறையுள்ள இடமாக விட்டு விட்டு நாட்டை திருத்த புறப்பட வேண்டுமா..? பின் எங்கள் தேவைகளுக்காக பொதுப்பணத்தில் கை வைக்க வேண்டுமா..?? என்ன மாற்றம் நேர்ந்து விடும் இத்னால்..தனி மனிததேவைகள் தீராமல் பொது வாழ்க்கை புனிதம் எங்கிருந்து வரும்.

நேர்மையான முறையில் எங்கள் தேவைகளை தீர்த்து விட்டு, பின் சேவைக்கு வருகிறோம் மாலன்.

எல்லாத்துறைகளிலும் ஒழுங்கின்மை தான். மறுக்கவில்லை. ஆனால், மற்ற துறையில் உள்ள ஒழுங்கின்மையைவிட அரசியல் துரையில் அதிகம் அல்லவா..?? மற்ற எல்லாவற்றிலும் உள்ள ஒழுங்கின்மை எங்கிருந்து வந்தது. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் ஒழுங்கற்றுப் போனதன் அவலம் தானே இது. "யதா ராஜா...ததா பிரஜா" என்பது உங்களுக்குத் தெரியாததா..??

இந்த தலைமுறை பொருள் தேடட்டும் மாலன்...சென்னையிலும், ஜெர்மனியிலும் , லண்டனிலும், அமெரிக்காவிலும் தன் வாழ்க்கைக்கான ஸ்திரத்தன்மையை தேடட்டும். வெள்ளை மேலாளர்களை பணிந்து சுந்தர்ராஜன் சேர்க்கும் இந்த டாலர்கள், சூர்யாவுக்காவது ஸ்திரத்தன்மை தந்து, அவன் சமூகப்பொறுப்பு வெளிவரட்டும்.

இப்பொதைய எங்கள் "அடங்கிய" எதிர்ப்பு எல்லாம் எதிர்கால நன்மைக்காகவே...

பொறுங்கள்...மாலன்..தூரம் அதிகமில்லை..


சுந்தரராஜன்
சாக்ரமண்டோ
கலி·போர்னியா.

பிகு:

திசைகள் மாலனுக்கு எழுதிய கடிதம்....

கலாம்

======


அரசியல்வாதிக்கு நாகரீகமும்
பத்திரிக்கையாளனுக்கு பொறுப்பும்
மாநில முதலமைச்சருக்கு நிர்வாகத் திறனும்
மாணவர்களுக்கு படிப்பார்வமும்
பெண்களுக்கு அடக்கமும்
சினிமா நடிகனுக்கு நடிப்பார்வமும்
காவல் துறைக்கு சட்டஅறிவும்

இருக்கிறதா என
கேட்காத இந்த தேசம்

அணுவிஞ்ஞானிக்கு அரசியல் தெரியாதென்கிறது

அமைதியை மட்டுமே விரும்பும் தேசம் என நடித்து
ஆயுத பலம் பெருக்கிய
இந்த அற்புத விஞ்ஞானிக்கு கெளரவம்
மறுக்கிறது...

அபூர்வம்தான்...
ஆனந்த விகடன் அட்டைபடத்தில்
வர வேண்டிய அபூர்வம்...



பிகு:

என் பதிப்பிற்குரிய கலாம் , ஜனாதிபதி ஆகியதில் குழப்பம் இருந்தபோது எழுதியது.
வளர்சிதை மாற்றம்
===================


கிட்டிப்புல் செய்து தரவும்
பள்ளியில் விட்டு வரவும்
கிரிக்கெட்டு மட்டைக்கு
வண்ணம் பூசவும்
தோளில் தூக்கி சாமி ஆடவும்
ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும்
காட்டாமணக்கில் குமிழி ஊதவும்
பால்யத்தில் பாதி நேரம்
என் தாத்தாவின் வயதை ஒத்த
வீட்டாள் முனுசாமி கூடத்தான்

சாப்பிடும் நேரம் மட்டும்
அவன் கொல்லை நடையிலும்
நான் கூடத்திலும்...
அவன் நீர் குடித்த குவளை கூட
நீர் தெளித்தே வீட்டுள் வரும்

வளர்ந்து , கிளைத்து
முதிர்ந்து வெளிப்படர்ந்து
திரைகடலோடி
ஐரோப்பிய தேசத்தினுள்
வெள்ளையை தவிர
மற்றதெல்லாம் கறுப்பெனவே அறிந்த
அயலகத்து மக்களுள்
இத்தனை கலந்தும்கூட
கண்ணுக்குத் தெரியாதொரு
சுவரை கடந்து விட்டு
தூக்கி வெளி வீசப்பட்ட
அந்த ஓர் நாளில்
சட்டென
கனவு கலைந்தது...


பி.கு:

வர்ண வித்தியாசம் தேசங்களில் மாறுபடும். இந்திய வெள்ளை, அமெரிக்காவில் ப்ரவுன். திண்ணையில் வெளிவந்தது .

இந்திய நவாபுகள் துரைசானிமார்களை சேவித்தது நியாபகமிருக்குமே...
உனக்காக
==========


அருகே கிடத்தி
கதை சொல்லி தூங்க
வைக்க தகப்பனுக்கு
சமயமில்லை
ஆதுரமாய் சோறூட்டி
விக்கலுக்கு நீர் தர
அன்னைக்கும்
வாய்க்கவில்லை
ஆண்டுக்கோர்முறை
தூர தேசத்தில் இருந்து
பரிவோடு எனை பார்க்க
பாட்டி மட்டும் வருவாள்..
பள்ளியில் என் ப்ரிய
மெக்ஸிகன் ஸ்நேகிதி
பின் என் கறுப்பின
விளையாட்டு தோழன்
அரிதாய் சில ஐரோப்பிய
சகாக்கள்
பகலின் தனிமையில்
என் ஜன்னலோரக் குருவி
கலர் கலராய் முகம் காட்டி
வெறுமை கொல்லும்
கார்ட்டூன் டீ.வி
திடுக்கென்ற விழிப்பு
தரும் துர்சொப்பனங்கள்

இத்தனை மட்டுமே
இருக்கும் என் சிறு உலகுள்

அம்மா . அப்பா மட்டும் ஓடி ஓடி
பொருள் சேர்ப்பர்

எல்லாம் எனக்காம்....!


பி .கு:

வேலைக்குப் போகும் தாய் தந்தையரைப் பற்றி குழந்தை நினைப்பதாய். திண்ணையில் வெளிவந்தது
நேற்றான நீ
============

கடிதங்களை பிரித்து
நாளாயிற்று

நிழற்படத்தை வருடி வருடி
நிஜம் மறக்க நேரமில்லை
இப்போதெல்லாம்

தினவாழ்வு அவசரத்தில்
எதிர்ப்படும்
சிறுசிறு நினைவுக்குமிழ்
வெளிச்சமெலாம்
வைரமென்று நெக்குருகி
நெகிழ்வதில்லை
நான் கூட

கண்முன் வாழ்வும்
அது தரும் சவாலும்
அடி வயிறு வரை தித்திக்கும்
உணர்வுக்கு உந்துதலாய்
ஜனித்த விதை வளர்வதையும்
அதை பாலூற்றி நீரூற்றி
என்னில் படர்ந்த கொடி
சீராட்டுவதையும் கண்டதில்

பொருக்குத் தட்டிய
வெளித்தோலுக்குள்
ரணம் மூடி வளர்ந்த
உள்தோலினுள் கிளரும்
நமைச்சலை மீறிய
சந்தோஷம்
நிஜம்....

திணிக்கப்பட்டதே
இத்தனை இதம் தந்தால்
நழுவிய கனவு
நனவாயின் எத்தனை
சுகித்திருக்கும்...??

வாழ்வு.....
இன்பக்கேணிதான்
முகரத்தான் மனக்குவளை
மலர வேண்டும்


பி.கு:

திண்னையில் வெளியாகியது. மறுபடியும் "அவள்" தான்..
மகாபலி
======

நிகழ்கால உவப்புகளும்
எதிர்கால கனவுகளும்
நெஞ்செலாம் நிறைந்துவழிய
நுரைக்க நுரைக்க காதலிக்க
எனக்கும் ஆசைதான்....

வாலிப உச்சத்தில்
காணாத உயரங்களும்
போகாத தூரங்களும்
எட்டிவிட,
வார இறுதி விடுமுறைகள்
எனக்கும் வேண்டும்தான்...

வேலைநாட்களில் கணிப்பொறியும்
ஓய்வுவேளையில் ஒயின் குப்பியும்
காரோடு வீடுமாய்
பூந்தொட்ட நடுவில்
புதுசாய் கட்டின பெண்ணோடு
சொகுசாய் குடியிருக்க
எனக்கும் விருப்பம்தான்...

மனிதனாய் வாழ விடவில்லை
இம் மண்ணுலகம்
மாவீரனாய் சாகிறேன்
சாதாரணனாய் வாழ இயலவில்லை
ரணப்பட்ட நிணமாகி
சரித்திரனாய் சாகிறேன்

மனிதம் செத்து மரணம்
தழுவும் என்னை
உலகம் அழைப்பதோ
மனிதவெடிகுண்டு
என்று....!!!


பி .கு:

நித்த்மும் நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்'தீன' தற்கொலைப்படை மரணங்களின் பாதிப்பு
மிடில் க்ளாஸ்
===============

மூன்று சக்கர சைக்கிளுக்கும்
பாலியஸ்டர் சட்டைக்கும்
பைநிறைய தீபாவளி வெடிக்கும்
முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும்
கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும்
அட்மிஷனுக்கு பணம் கேட்ட
விருப்பமான கல்லூரிக்கும்
சம வயசு நண்பர்களுடன்
ஆடித்திரிய சுற்றுலாவுக்கும்,
மனசுக்கு பிடித்தவளை மணப்பதற்கும்
மறுப்பாய் அம்மா சொன்ன பதில்

"நாம மிடில் க்ளாஸ் டா.."

அலுப்படைந்த மனசுக்கு
உருவேற்றி வெறியேற்றி
கணிணி கற்று
மானேஜனுக்கு ஊற்றிக் கொடுத்து
கண்டவனை காக்காய் பிடித்து
தூதரக வாயிலில் பகீரதம் பண்ணி
அயல் தேசம் வந்திறங்கி
லட்சங்களில் கார் வாங்கி
டாலரில் சம்பாதிக்கும் நான்
இன்று வாழ்வதும்
அமெரிக்காவில் அதே வாழ்வுதான்...

வசதி உசந்தது என்னவோ வாஸ்தவம்..

ஐம்பது ரூபாய் கடன் வாங்கினவன்
ஐந்நூறு டாலர் கடன் வாங்குகிறேன்...


பி.கு :

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் , நோ பீஸ் ஆ·ப் மைண்ட்........!! திண்ணையில் வெளிவந்த கவிதை
தாகம்
======

சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்

சரியா.....சரியா...சரியா....??

பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்...

கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ ...
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!


பி.கு:

ஏதோ கோபமா இருந்த போது எழுதி இருக்கேன். எதுன்னு ஞாபகம் இல்லை :-}}}
எங்கே நீ
=========

உனை தவறவிட்ட தருணங்களை
நினைக்கையில் மட்டும்
இவனுக்கு புனர்ஜென்ம
நம்பிக்கை பூத்துக்குலுங்குகிறது...

நேசித்த தேவதை நீ உன்வழியே போனதும்
கிடைதததை ஏற்காமல் மனம் ஒவ்வாமல்
வாழ்வினின்றும் விடுபட்ட உன் முகத்தை
உலகெங்கும் தேடுகின்றேன்...

அலுவலில்..
பயணத்தில்....
தினவாழ்வு அவசரத்தில்..
எழுதும் கவிதைகளில்...

டாஹோ மலைத்தொடரில்...
க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கில்...
கோல்டன் கேட் பாலத்தில்
நயாகரா நீர்வீழ்ச்சியில்...
எங்கோ கூடப்படித்த கருணாநிதியும்,
அகஸ்மாத்தாய் சந்தித்த ஆராவமுதனும்,
அப்பாவின் பால்ய நண்பரும்,
சிங்கப்பூர் செல்வசேகரனும்
என் கண்ணில் தட்டுப்பட

எங்கே நீ....???


பி.கு: "அழகி" யின் பாதிப்பில்..............

முகங்கள்

=========

பாலைவன ரத்தம்
பாய்வது நின்றது

பாலுக்கு அழுத குழவி
விண்ணுலகம் சென்று விட்ட
அன்னைக்கும்சேர்த்து அழ

மண்துகளைவிட
அங்கே....
வெடித்துகள் நிறைந்துபோக

கோலியாதிடம் தாவீத்
தோற்றான் இம்முறை...

0

நேற்றுவரை போற்றியோர்
உடைத்தெடுப்பர்
தன் தலைவன் சிலையை

தேடி அவன் கை
முத்தமீந்தோர்
பாதுகையால் அடிப்பர்
உருவப்படத்தை...

பார்த்தோர் தேகம்
பதறியே நடுங்கும்
அம் மாக்களின்
துரோகம் கண்டு

0

வெள்ளைதேசம் ஏகி இருக்கும்
வெளிதேச கூலிகள்
போர்க்கவலை உதட்டிருக்க
களிப்புறும் உள்ளூர

ரத்தம் குடித்த பொருளாதாரம்
சற்றேனும் நிமிர்ந்து நிற்க
இனியாவது வேலை
இலகுவாய் கிடைக்குமிங்கே..!!!


பி.கு:

ஈராக் போர் முடிவுற்றதை , ஒரு கணிணிக்கூலி/ டாலர் மெஷின் பார்வையில்

கிறுகிறுப்பு

அடுத்த நொடியில் என்ன
நிகழ்த்தும் என
தெரியாது யார்க்கும்...

நிகழ்ந்தவுடன்
ஒரு கூட்டமே
போட்டி போட்டு
இதை
தான் அப்போதே
சொன்னதாய்
கெக்கலிக்கும்...

ஏறவேண்டிய காரணங்கள்
இருந்தும் இறங்கும்
இறங்க முகாந்திரம்
இருந்தும்
ஏறும்

பணப்பை கனம்
கூடிக் கொள்ள
இதுவும் கவர்ச்சியைக்
கைகொள்ளும்
காலியாய் போனவுடன்
புரண்டு படுக்கும்
முரண்டு பிடிக்கும்

"மர்மம் அனைத்தும்
வெளிப்பட்டது...
கையாளும் சூட்சுமம்
கை வந்தது"
என
இறுமாந்திருக்கையில்
படேரென்று
தலையில் தட்டி
குப்புற வீழ்த்தும்

போயே போச்சு
எல்லாம்
என
வெறுத்துப்போய்
தலையில் கை வைத்தமர
ஸ்நேகமாய் மடியில்
சாய்த்து
மனநிலையை
மாற்றி விடும்

ஸ்டாக் மார்க்கெட்டும்
பெண்ணுமாய்
சட்டென்று இது
புலப்பட்டுப்போனால்....

அய்யா
நீர் பெற்றதும் அதிகம்
கொடுத்ததும் அதிகம்


பி.கு: ச்..சும்மா..ஜாலிக்கு எழுதியது

வந்ததிலும் சென்றதிலும்

========================

அலமாரியில்
உனக்குப் பிடித்த
நீள்கோட்டு சட்டைகள்
கள்ளப் புன்னகை பூக்கும்
மலையுச்சிப் பிள்ளையார்
பைத்தியம் போல் குடித்துவிட்டு
புலம்ப ஒரு காரணம்
ஆளில்லா தியேட்டர்களைப்
பார்த்தால் வரும் சிரிப்பு
வீடு புகுந்து பெண் தூக்கி
ஸ்நேகிதனுக்கு மணம் செய்ய
தேவைப்பட்ட வெறி
காசுக்கு வந்தவளிடம் கண்ணீரோடு
புணர்ந்துவிட்டு சொல்ல ஒரு கதை
சுமாராய் நாலைந்து
தன்னிரக்கக் கவிதைகள்
மண்டையில் குறைந்த மயிர்
கட்டுக் கட்டாய்
கடுதாசிப் பொட்டல்கள்
நிசப்தம் பயமுறுத்தும்
தூக்கம் கெட்ட இருட்டுக் குழி
அடர்தகட்டு ஒலிவரிக்குள்
அழுது தீர்க்கும் சினிமாக்காரன்
பெற்றவளிடம் கூட வந்துவிட்ட
அவநம்பிக்கை
பிரேதக் களையுடன் ஒரு
கல்யாண போட்டோ
பெருமுச்சோடு தாம்பத்யம்
உன் மேல் வைத்த பிரியத்தின்
மறுஜனன பயனாளியாய் ஒரு
பிள்ளை


பி.கு:

ஒரு தடவை ப்ரிய வலைக்குள் விழுந்ததற்கே இத்த்னை கவிதைகளா..?? எனக்கே ஆச்சரியம்தான்.

கையறு நேரம்

உப்பு வெடிக்கவில்லை
சேதி வந்தபோதோ
உள்ளே வெடித்தது.

செயற்கைக்கோள் தாமதத்தில்
போனமுறை பேசிய குரல்
இன்னமும் காதுகளில்

வழியனுப்ப நிற்கையில்
நிறையப் பார்த்த கண்கள்
இன்னமும் ஆழத்தில்

"நாங்களெல்லாம் காசுள்ள
அனாதைகளப்பா..."
என்ற வார்த்தையின் வீர்யம்
இன்னமும் தழும்பாய்

.......

டிக்கெட்டுக்கு ஆள் தேடவும்
ஏர்போர்ட்டுக்கு ட்ராப் கேட்கவும்
துணிமணியை அடுக்கிச்செருகவும்
டயாப்பர் மடக்கி வைக்கவும்
பாஸ்போர்ட்டு சரி பார்க்கவும்
பணத்துக்கு தோது பண்ணவும்
பில்களுக்கு காசோலை
வைக்கவும்
ஆபீசுக்கு லீவு சொல்லவும்
தேவைப்பட்ட நேரத்தில்
"எப்பிறப்பில் காண்பேனோ" என்று
அழுதிருக்கலாம்தான்

கொள்ளி போட போகாவிட்டால்
டாலர் வைத்தா கொளுத்தமுடியும்

எனை ஈந்தாளை..


பி.கு :

நண்பன் தாயார் இறந்தபோது , கூட இருந்து அவன் பயணத்துக்கு உதவிகள் செய்தபோது தோன்றியது

ரசவாதம்

========

பாடும்போது குரல்
உங்க மாதிரியே

விரலைப் பாரு
நீள நீளமா..
உங்க மாதிரியே

கீழ்க்கண்ணால பார்க்கிறான்
உங்க மாதிரியே

வாய் ஓயாம பேசுது
உங்க மாதிரியே

சொல்லும் பெண்ணையும்
சொன்னவளின் பிள்ளையையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
அப்பன்..

வாழ்வின்
பிற்பகலில்
வயதும் வீரயமும்
தலைக்கேறி
பிள்ளை அடையாளம்
துறக்கையில்
இவள் இதையே சொல்வாளா

என்று காலம் சிரித்திருக்கிறது.


பி.கு:

மகனாய் நான் தாண்டி வந்திருக்கும் நேரங்களை, தகப்பனாய் அறுவடை செய்ய நேர்வதை யோசித்தபோது ஜனித்தது.
மனக்கொல்லைக்கு எரு..???

தனியே

=====

கிறிஸ்துமஸ¤க்கு
ஜெபிக்கவில்லை
லேபர் டே வீக் எண்ட்
ஒரு அர்த்தமும் தரவில்லை
ஹலோவீன் வேஷமும்
இல்லை எனக்கு..!!
தாங்ஸ் கிவிங்...
கேட்கவே வேண்டாம்...

தீபாவளியும்..
சரஸ்வதிபூஜையும் ...
பொங்கலும்..
கொண்டாடிவிட்டு
காரில் போகையில்
பரபரவென்று நெற்றி
சந்தனத்தை
அழித்தழித்து
திரு திரு வென விழித்தபடி

ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள்...!!


( அமெரிக்க புலம்பல் )

ஆதங்கம்

=======

விடிகாலை விழிப்பு
நாளெல்லாம் உழைப்பு
வாரமிருமுறை எண்ணை முழுக்கு
செலவச் செழிப்பிலும்
புளி காரம் குறைந்த
அரைவயிற்றுச்சோறு
அச்சோறிலும் கட்டுகள் நூறு
மாதமொருமுறை வேப்பிலைச்சாறு
மதுதொடா பிடிவாதம்
பிறமாது தொடா பதிவிரதம்
அத்தனையும்.....
' உடம்பழிந்து சாவு வரலையே '
என எண்ணுகையில்
பயனற்றுப் போனது
பிளளைகள் எட்டி உதைத்த
பெருங்கிழட்டுப் பருவத்தில்


பி.கு:

அரிசிச் சோறு குறைத்து, சப்பாத்தி சாப்பிடும் டயட் கண்ட்ரோல் கொடுமை , இதை எழுத வைத்தது.

அமெரிக்கா

இன்னம் ஆறுமாசம்தான் இங்க..!!
இருக்கவே பிடிக்கலை
என்ன செய்ய...???
அப்பா அம்மால்லாம் வா வாங்கிறாங்க
ஊருக்கு போனா கூட நல்ல சம்பளம் கிடைக்கும்
பசங்கள இங்கே வளக்க இங்கே பயமா இருக்கு
ஸ்கூல்லயே ஷ¥ட்டிங் நடக்குதாம்..
வெள்ளைகாரனுங்க
மதிக்கவே மாட்டேங்கிறாங்க
உள்ளூற நிற வெறி இருக்கு..
அடுத்தமுற தாடி 'பாய்' எப்ப
குண்டு போட போறானோன்னு
பயமா இருக்கு
எகானமி மீளவே இல்ல..
டாலர் வேல்யூ வேற
குறைஞ்சிகிட்டே இருக்கு
மெடிக்கல் இன்ஷ¥ரன்ஸ் ப்ரிமியம்
கன்னாபின்னான்னு ஏத்திட்டான்
எங்க பாத்தாலும் பட்ஜெட் ப்ராப்ளம்
டெவலப்மெண்ட் ஒர்க் எல்லாமே
ஆ·ப்ஷோர் அவுட்சோர்ஸிங் தான்

சரி வந்து படு......
ஒரு அமெரிக்க குடிமனையாவது
உருவாக்குவோம்
செஞ்சா
க்ரீன் கார்டு ஈசியா கிடைக்குதாம்...!!
பாலம்
=======

ஜீஸஸ் க்ரைஸ்ட் யாரப்பா
கேட்டான் பிள்ளை..
முருகன் தம்பியோ..??
சந்தேகம் அவனுக்கு....
பள்ளியில் நண்பரெல்லாம்
க்ரிஸ்மஸ் கொண்டாடயில்
சர்ச்சில் ஜபிக்கையில்
க்ரிஸ்மஸ் மரம் வைக்கையில்
சான்டா க்ளாஸ¤டன் பேசுகையில்
வீட்டில் 'தனந்தரும் கல்வி தரும்'
சொல்லும் குழப்பம் அவனுக்கு...
அலைந்து தேடி க்ரிஸ்மஸ் மரம்
வாங்கி, அலங்கரித்து
லைட் பொருத்தி ஓய்ந்து போய்
போர்ச்சுகல் ஒயினும்
கோழி வறுவலுமாய்
உட்காருகையில்
போன் வந்தது..
'அண்ணாமலை தீபம்டா இன்னைக்கு..
பெரிய கார்த்திகை..
வாசல்ல ரெண்டு வெளக்கேத்தி வை..
இன்னைக்காவது 'சுத்தமா' இரு..
என்றார் அப்பா..


பி.கு:

திசம்பர் 2003 ல் எழுதிய கவிதை. எதிலும் பிரசுரம் ஆகவில்லை. கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்து என் பிள்ளை குதூகலிக்கையில் எழுதியது
நெறி
=====

ஸ்நேகம் கொண்டவளையே
மணமும் சேய்து நிறைவாய்
வாழும் நண்பனை கண்டு
எரிச்சல் மூண்ட போதும்
இத்தனை காலமும் கண் மூடி
ரசித்த பாட்டுக்கள் திடீரென
அபத்தமாய் போனதும்
பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில் நிற்க
அடமாய் உட்கார்ந்திருந்த போதும்
எத்தனை குவளை விஸ்கியிலும்
ஏறவே ஏறாத போதையிலும்
கடையாள் விநோதமாய் பார்க்க
நீ தடுத்திருந்த பளீர் பச்சையில்
உடுத்த எடுத்தபோதும்
சாலை கடக்க சிரித்து நடக்கும் ஜோடியொன்று
தினவு தீரவே அலைவதாய் நினைத்தபோதும்
தேடித்தேடி பட்டினத்தாரில் நட்டதையும்
தொட்டதையும் படித்தபோதும்
சட்டென்று எழுத கவிதைகளே கிடைக்காது
போனபோதும்தான்

தெரிந்தது...

உன்னை இழந்ததில் உண்மையில்
நான் இழந்தது எதுவென்று....


பி.கு:

திண்ணையில் வெளிவந்த இன்னோர் தன்னிரக்கக் கவிதை. காதல் தோல்வியைப் பற்றி எழுத
இந்த சுந்தரும் தேவை இல்லை.

ஆயினும் என் செய்ய..??

சொறிந்து கொள்ள சுகமான காயம் ...காரணங்களா முக்கியம்.?
அழகிப்போட்டி
==========

நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
நெஞ்சு நிமிர்த்தி
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்

" புற அழகு
பொருட்டல்ல...!!"


பி.கு:திண்ணையில் வெளிவந்த கவிதை. ஆனந்த விகடனில் Miss.World போட்டியை
பற்றி வந்த ஒரு கட்டுரையில் ஜெயித்த நங்கை எப்படி ஜெயித்தார் என்று எழுதி
இருந்தார்கள்.

உதட்டோரம் சிரிப்பும், உள்ளுக்குள் வெறுப்புமாய் எழுதியது...

பள்ளி நாட்களில் மேடையில் பேசிக்கொண்டிருந்த நான், படித்த தமிழ் புத்தகங்கள் விசேஷமாக சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை. எனினும் இன்னது என்றில்லாமல் , எது கிடைத்தாலும் படிக்கும் வழக்கம் என் வீடு எனக்களித்து இருந்த சுதந்திரம்.

எல்லோரையும் போலவே அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா , முத்து காமிக்ஸ் என்று படிக்க ஆரம்பித்தவன், சீக்கிரத்திலேயே குமுதம் , விகடன் என்று ப்ரமோஷன் ஆகி விட்டேன். தாத்தா விட்டு பழம் புத்தகங்களில் இருந்து
ஏடு ஏடாய்ப் போன ' பொன்னியின் செல்வன்' தான் குறிப்பிடத்தகுந்த முதல் நாவல். தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கே பெருமை சேர்க்கிற, இறும்பூது எய்தச் செய்கிற மகத்தான நாவல் அது. அதற்குப் பிறகு அதைப் பலமுறை படித்தேன். வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் படித்தாலும் வெவ்வேறு விதங்களில் கவரக்கூடிய நாவல் அது.

அதற்குப் பிறகு க்ரைம் நாவல்கள் வாசித்ததும், அரசியல் பத்திரிக்கைகள் படிக்கத் துவங்கியதும், ஜூனியர் விகடன் மாணவப் பத்திரிக்கையாளராக பயிற்சி பெற்றதும் இங்கே வெறும் கொசுறுத் தகவல்கள்தான்.

சிங்கப்பூரில் இருந்தபோது நண்பர் அரவிந்த் ஹரிஹரன் மூலமாக 'தினம் ஒரு கவிதை' இணையக்குழு அறிமுகமாகியது. அங்கு கவிதைகள் படிக்கத் துவங்கி,பிறகு எழுதத் துவங்கி, அக்குழுவின் மட்டுறுத்துநர் நண்பர் சொக்கன் மூலமாக ராயர் காப்பி கிளப் வந்து சேர்ந்தேன். பெரிய எழுத்தாளர்கள் எழுதும் அந்தக் குழுதான் என் படிக்கும் பழக்கத்தை மறுபடியும் உயிர்ப்பித்தது. அங்கு கிடைத்த பல நல்ல அனுபவங்கள் என் தமிழார்வத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது இந்த வலைப்பூ...

என்னுடைய பழைய , ஏற்கனவே பிரசுரமான கவிதைகளை அங்கங்கே தெளித்தும், ராயர் காப்பி கிளப்பில் எழுதிக் கொண்டு இருந்த காலத்தில் தனியே சேமித்து வைத்திருந்ததை எடுத்தும் இங்கே முதலில் இட உத்தேசம்.

முதலில் என் வலைப்பூவை ரீடி·ப் தளத்தில் வைத்திருந்தேன்.

படித்துப்பார்த்த மதி, பாலாஜி, காசி, ரமாசங்கரன் போன்ற நண்பர்கள்
இயங்கு எழுத்துறு முறைக்கு மாறுமாறு அறிவுறுத்தினார்கள்.

நேரமே கிடைக்காத சூழ்நிலையில் இவ்வளவு நாள் இதை செய்ய இயலவில்லை.

இன்றுதான் பொருந்தி உட்காருகிறேன்.

லீவு போட்டுவிட்டுப்போன என் மானேஜர் மார்க் ஹட்சிஸனுக்கு ஜே.
வலை எங்கும் மணம் பரப்பி பூக்கத் துவங்கிவிட்டவற்றுள்

எனக்கான பூ இது...

பிறந்ததற்கு அடையாளமாய்

சாமான்யார்கள்

பிள்ளைகளை விடுகிறார்கள்.

சரித்திர புருஷர்கள்

சரித்திரத்தில் தன் பெயர்

நடுகிறார்கள்.

நான் இப் பூவையாவது

மலரவைக்க முடியுமா என

பார்க்கிறேன்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...