Monday, February 28, 2005

என் பங்குக்கு ....



இளவரசிகள் அழகாக
இருக்கிறார்கள்.
செல்வத்தில்
மிதக்கிறார்கள்
எல்லா இளவரசிகளும்
ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள்.
சோதனையாக அவர்களுக்கு
ஏழை வாலிபனைத்தான்
பிடிக்கிறது
வாலிபர்கள் கோழைகளாக
இருக்கிறார்கள்
ஆனால் ஆசை இருக்கிறது
அது கண்ணை மூடிக்கொண்டு
தேன் குடிக்கச் சொல்கிறது
கொஞ்ச நாள்.

மூழ்கியவர்கள்
"முருகன்" ஆகிறார்கள்

மீண்டவர்கள்
கவிதை எழுதுகிறார்கள்

ஹி..ஹீ..நேத்துதான் "காதல்" பாக்க ஆரமிச்சிருக்கேன்.

ஆஸ்கார் 2005

எந்தப் படங்கள் பார்க்கப்படவேண்டியவை என்ற தகவலுக்காகவும், யாரார் எப்படி எப்படி வருகிறார்கள் என்று பொது அறிவை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் ஆஸ்கார் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பதுண்டு. நேற்றும் பார்த்தேன்.



E Channel ல் பார்க்க ஆரம்பித்தபோது விருந்தினர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேட்டி எடுத்த ஸ்டார் அம்மணி ஒவ்வொருவராக கூப்பிட்டு கலாய்த்துக் கொண்டிருந்தார். அம்மாவும், பொண்ணுமாக வரும் பேட்டியாளர்களைப் போல இல்லாமல் இவருடைய கேள்விகள் கொஞ்சம் சவ சவ என்று இருந்தன.

ஜெனிஃபர் லோபஸ், கேமரூண் டியஸ், டென்ஸல் வாஷிங்டன், டாம் ஹேங்கஸ், டாம் க்ரூஸ், நிகோல் கிட்மேன் போன்ற பெருந்தலைகள் மிஸ்ஸிங். க்ரிஸ் ராக் தன்னுடைய முன்னுரையில் புஷ்ஷை புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாமினேட் செய்யப்பட்டிருக்கும் படங்களை பார்த்தீர்களா என்று பொதுமக்கள் சிலரிடம் அவர் எடுத்த பேட்டி நடுவே ஒளிபரப்பப்பட்டது. நல்ல படங்களுக்கு ஹாலிவுடிலும் இருக்கும் "மதிப்பு" தெரிய வந்தது.

சில வருடங்கள் பரிசு வழங்கப்பட்டபோது, ஒரே படமே ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிக்குவிக்க மற்றவர்கள் விசனப்பட்டனர். அது போல அல்லாது, இந்த வருடம் நாமினேட் செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவில் பரிசு வென்றன. ஏவியேட்டர் படத்துக்காக மார்ட்டீக்கு பரிசுகிடைக்கும் என எதிர்பார்த்தேன். பாவம்..ஐந்தாவது முறை தவறவிடுகிறாராம். பரிசு கிடைத்த படங்களை குறித்து வைத்து ஒவ்வொன்றாக பார்க்க முயற்சிக்க வேண்டும்.

Oscar Acceptence speech எல்லாவற்றையும் இங்கே தொகுத்து வைத்து, எது நன்றாக இருக்கிறது என்று ஓட்டுப்போட சொன்னார்கள். தொண்டை தழு தழுக்க பேசிய டாம் ஹாங்க்ஸ் பேச்சும், என்ன பேசுவதென்றே தெரியாமல் திக்கித் திணறி பார்வையாளர்களை சிரிக்க வைத்த கருங்குயில் ஹாலிபெர்ரியின் பேச்சும் மிகப் பிரசித்தம். இந்த வருடம் ஹில்லாரி ஸ்வாங்க் நிதானமாக பேசினர். மார்கன் ஃப்ரீமேன் கம்பீரமாக பேசி மனதை அள்ளினார். ஜேமி ஃபாக்ஸைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ரமணிதரன் சொன்ன படம் ( Motorcycle diaries) ஒன்றின் பாடலை அந்தானியோ பண்டாரஸ் பாடினார். அந்த பாடலுக்கு ( original score) பரிசு கிடைத்தது. க்யூபாவின் புரட்சிக்கு வித்திடுமுன் சேகுவராவும், அவர் நண்பரும் தென்னமெரிக்க நாடுகள் முழுதும் மோட்டார் பைக்கிலேயே போய்வந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்ட கதை என்று எழுதி இருந்தார். அதையும், ஹோட்டல் ருவாண்டாவையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

மேலும் தகவல்களுக்கு.

Friday, February 25, 2005

செல்வமணிக்கு பிடிக்காத கவிதை



பச்சை நிற முட்களை
மறைக்கும் நினைவேயில்லாமல்
அடர்த்தியின்றி தளிர்த்திருக்கும்
இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா
வெள்ளை ரோஜா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்தபோது கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருக்கிறது.

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச் சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரே ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது

யாரும் பார்க்கும் முன்பு.

- பூமா. ஈஸ்வரமூர்த்தியின் " கடற்கரைக் கால்கள்" தொகுப்பில் இருந்து

நான் கொடுத்திருக்கும் தலைப்புக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் நிஜரோஜாவை பற்றிய இந்தக் கவிதை எழுதி இருக்கும் இதே கவிஞர்தான்

இருபது வரிகளில்
பதினைந்து வருஷம் முன்பு
கவிதையொன்று
எழுதியிருந்தேன்

என்று ஆரம்பித்து வெற்றுத்தாளில் முடியும் அந்த அடர்த்தியான, செறிவான, நிறைவான கவிதைக்கு சொந்தக்காரர். :-)

மின்னணு அரசியல்



" எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு முறையில் குறைபாடுகள் இருப்பதாக திரும்பத் திரும்ப சொல்லி இங்கே அரசியல் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.

அந்த மெஷின் வடிவமைப்பில் பங்கு கொண்டவன் என்ற முறையில் நான் சொல்கிறேன்.... இந்தச் சந்தேகம் தேவையற்றது. இந்த இயந்திரத்தின் உள்ளே இருப்பது ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர். அது ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் உள்ள ராம் என்னும் ரீட் ஒன்லி மெமரியில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அந்த ஈசனே வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒரு எழவும் தெரியாது. இந்த நம்பருக்கு இத்தனை வோட்டு என்று போடப்போடக் கூட்டிக் கொண்டே செல்லும். இறுதி யில் இன்னாருக்கு இத்தனை வோட்டு என்ற பட்டியலைத் துல்லியமாக அறிவிக்கும்.

வேட்பாளரின் கட்சியெல்லாம் அதற்கு பொருட்டல்ல. சீரியல் நம்பர்தான் முக்கியம். இந்த சீரியல் நம்பர் ஆங்கில அகர வரிசைப்படி கொடுக்கப் படும். இதன் செயல்பாட்டை எந்தக் கட்சியும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாது. காரணம், அந்தக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு நம்பரில் இருப்பார்கள். இந்த மெஷினை ஒரு தட்டு தட்டினாலே வேறு ஒருத்தருக்கு வோட்டு போய்விடும் போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் கோர்ட்டில் சொல்லப் பட்டபோது குபீரென்று சிரிப்பு வந்தது. மிக எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த மெஷினிடம் பொய்யோ, வஞ்சமோ, லஞ்சமோ கிடையாது. இது அமெரிக்கத் தேர்தல் முறையைவிடத் துரிதமானது. இதிலிருந்து பழைய வாக்குச்சீட்டு முறைக்குப் போவதென்ற பேச்சே தேவையற்றது.’’

என்ன கோபம் வருகிறது பாருங்கள் சயின்ஸ் வாத்தியாருக்கு..!!!. அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்...

தாத்தாவின் புத்தகம் ஒன்றில், கேரளாவில் உள்ள பரூரில் முதன் முறை சோதனை முறையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி எழுதி இருந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதை பரவலாக உபயோகப்படுத்தி, வெற்றியும் பெற்று விட்ட இத்தனை ஆண்டுகாலம் கழித்து ஜெ இதை ஒரு பிரச்சினையாக கிளப்பி, தங்கள் பாராளுமன்றத்தேர்தல் தோல்விக்கு காரணம் தேடிக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இப்படியெல்லாம் நொட்டை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஜெ பேசாமல் இன்னும் உருப்படியாக ஏதாவது செய்தாலே போதும். இன்னும் எத்தனை போலி சாமியார்களும், சந்தனக்கடத்தல்காரர்களும், சைக்கிள் பாகங்களுக்கு தமிழ்பேர் தெரியாத மாஜி சைக்கிள் கடைக்காரர்கள் இருக்கிறார்கள். ??? :-)

அமெரிக்க தேர்தலில் இந்த இயந்திரத்தால் நடந்த குளறுபடிகளை காரணம் காட்டும் நம்ம அரசியல் அபிஷ்ட்டுகள் இதை எல்லாம் படித்தார்களா என்று தெரியவில்லை. எப்படியோ அம்மா சொன்னதற்கு ஜால்ரா ( சுப்புவின் பேட்டி) அடித்தால் போதும் என்பதுதான் பாதிபேருக்கு தினசரி வேலையாக இருக்கிறது.

சுஜாதாத்தா ஜாக்கிரதையாக இருக்கவும். அம்மாவின் தொண்டர்கள் ஆட்டோ ஆட்டென்று ஆஆஆ...ட்ட்டி விடப் போகிறார்கள்...பாவம். வயசான காலத்தில் இதெல்லாம், இத்தனை கோபம் அவருக்குத் தேவையா..??

துள்ளித்திரிந்த காலம்



ஆடி மாதக் காவேரியில் குளித்த மாதிரி இருந்தது ஒரு வருடம் முன்பு.

நமக்கே நமக்கான இடம். அதிலே மற்றவர் கருத்தை தெரிந்து கொள்ள வசதி. நியாயமோ அநியாயமோ, தணிக்கை செய்யப்படாத கருத்துகள் என்று மிக சுதந்திரமாக இருந்தது. நிறைய எழுதினேன்.

என்னைப் பற்றி...என் நண்பர்களைப் பற்றி ... படைப்புகளைப் பற்றி ... கருத்து வேற்றுமைகள் பற்றி.

இப்போது கொஞ்சம் நிதானம் வந்திருக்கிறது( தா..??) . மனதில் எழும் உணர்வுகளை எல்லாம் எழுதுவது மட்டும் முக்கியமல்ல, அதை கூடியவரை நாசுக்காக தெரிவிக்க வேண்டும் என்கிற நிதானம். பளீரென்று முகத்தில் அறைந்தாற்போல எழுதுவது முன்னர் பிடித்த அளவுக்கு இப்போது பிடிக்கவில்லை. நமக்கு அது விடுதலை உணர்வை தந்தாலும், எதிராளிக்கு, சம்பந்தப்பட்டவருக்கு அது எப்படி இருக்கும் என்று சில தருணங்களில் புரிந்தது. சுற்றி சுழற்றி எழுதுவது தந்திரம்..அதில் உண்மையில்லை என நினைத்திருந்தேன். அது இப்போது கொஞ்சம் தணிந்து இருக்கிறது.

உலகத்தில் உண்மை என்றும், பொய் என்றும் நல்லதென்றும் கெட்டதென்றும் ஒன்றும் இல்லை. காலம் தான் எல்லாம். காலமே கடவுள்.

ஒரு வருட காலத்தை இன்றோடு கடந்திருக்கும் என் வலைப்பூ எனக்கு மறுபடியும் நினைவூட்டி இருக்கும் உண்மை இது.

நண்பர்களுக்கு நன்றிகள்... வணக்கங்கள்.

Wednesday, February 23, 2005

அப்படியா..???



கொஞ்ச காலம் கழிச்சி நான் இப்படி இருப்பேனோ..??

நெனைக்கவே தமாஷா இருக்கு..!!!!

படம்: முரசொலி கதாநாயகர் EVKS இளங்கோவன்

மருத்துவர் மாலடிமைக்கு யோசனைகள்

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

பள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளை மூட வேண்டும்.
......
.......
.......

தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்

கோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.

விஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.

மேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.

பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.

பஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.

வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.

கட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.

மக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்

பாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் தடை செய்து விட வேண்டும்.

திருமாவளவன் சொல்வதை எல்லா தலித் மக்களும் கேட்க வேண்டும். அவர் நான் சொல்வதைக் கேட்பார்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...