Friday, April 29, 2005

சன் டீவி

ஆஹா...ஜென்ம சாபல்யம்.

வெகு நாட்கள் கழித்து சன் டீவி மறுபடி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ, கொஞ்சம் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது. காலை வேலைகளில் பார்க்க முடியாமல், சாயங்காலம் வந்தால் செல்வி, மனைவி, கணவனுக்காக என்று ஒரே சீரியல் மயம். விரும்பிப் பார்க்கும் செய்திகளும் சவ சவ என்று இருக்கிறது. செய்தி வாசிக்கும் அம்மணிகளின் அலங்காரம் தவிர்த்து.
மற்றபடி நண்பர்கள் சொன்னது போல பிளட்பிரஷர் ஏறும் அளவிற்கு எந்த செய்திகளின் விவரிப்பும் தற்போது இல்லை.

விளம்பரங்களில் ஏகப்பட்ட செல்ஃபோன்களையும், கார்கள்/suv களையும் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு நகைக்கடை விளம்பரத்தில் வந்த பெண்களை " ஹி..ஹி..இப்பல்லாம் மாடல்களே இவ்ளோ அழகா இருக்காங்களா" என்று வியந்தபோது, "ம்..நல்லா கண்ணாடிய தொடைச்சிட்டு பாருங்க. எல்லாருமே நடிகைகள்" என்று நங் என்று விழுந்தது. ஏகப்பட்ட பாட்டுகள் இரவு 10 மணிக்கு மேல் திரைமசாலாவில் ஒளிபரப்பாகிறது. கண் விழித்துப் பார்க்க முடியாததால், DVR ல் எல்லாவற்றையும் டைம் செட் பண்ணி ரெகார்ட் செய்து வைத்து விட்டு மறுநாள் சாயங்காலம் சீரியல் ஓடிக்கொண்டிருக்கும்போது, பார்க்கிறோம். "சன் டீவியின் கமல் மாலை" யும், "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டும் சூர்யாவின் நாவில் விளையாடுகிறது.

அன்று காலை யதேச்சையாக பார்க்கும்போது சத்யராஜ் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரிஜினல் ரங்கராஜ் கேள்வி கேட்க, டோப்பா மாட்டி பான்கேக் தடவிய ரங்கராஜ் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ரெகுலர் சத்யராஜ் பிராண்ட் லொள்ளு என்றாலும், அவர் சொன்ன பல விஷயங்கள், அவர் ஞாபகப்படுத்திய பல பழைய படங்கள் திறமைக்கு சான்றாக இருந்து இத்தனை வருடம் ஃபீல்ட் அவுட் ஆகாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தன. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி அத்தனை கண்டுகொள்ளாமல், கூத்தாடி ஸ்டைலில் "வெளியிலிருந்து" பதில் சொன்ன சத்யராஜ், நிஜமாவே நன்றாக பதில் சொன்னார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே, பாலைவன ரோஜாக்கள், போன்ற படங்களில் எல்லாம் நடித்து அசத்தியவர் தன்னுடைய விமரிசன லொள்ளால், மகாநடிகன் போன்ற படங்களில் - அவர் உண்மையை சொன்னாலும்- கூட, பல தரப்பில் இருந்தும் எதிரிகளை சம்பாதித்துக் கொள்வது வேதனைக்குரியது

******

கொஞ்ச நாள் ட்ராஃப்ட் ஆக வைத்திருந்து விட்டு இன்று மறுபடி தொடர்கிறேன் - தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சிகள் பார்த்து விட்டு.

*******

வழக்கம் போல தமிழ்ப்புத்தாண்டுக்கு சாமி கும்பிட்டு விட்டு, நெற்றியில் உள்ள விபூதியை அழித்து விட்டு ஆஃபிஸ் போவதற்குமுன், காலை ஏழரையில் இருந்து இரவு வரை எல்லாவற்றையும் ரெகார்ட் செய்யுமாறு செட் பண்ணிவிட்டுப்ப்போய், மாலையில் வந்து பார்த்தேன்.

இசைக்குயில்கள் என்ற பெயரில் நடிக நடிகைகளை பாடச்சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்தபோது ஸ்ரீகாந்த் ஆப்பிள் பெண்ணே நீ யாரோவை, கத்தரிக்கா வெண்டைக்கா ஸ்டைலில் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மீனா வந்தார். பீல்டவுட் ஆகி, தொழிலதிபர் கூட கல்யாணத்துக்கு காத்திருக்கும் வாட்டத்தோடு பாடினார் - ஒன்றா இரண்டா ஆசைகள் பாடலை. ஆல்பத்தில் எல்லாம் பாடி இருப்பவர் என்று நம்ப முடியவில்லை. காமெடி விவேக் வழக்கம் போல வந்து தானே எழுதிய பாடலை பாடி லந்து பண்ணிவிட்டுப் போனார்.
சங்கு ஊதுவேன் / ப்ளாட்ஃபாரம் தான் உனக்கு போன்ற வரிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். பின்னர் வந்தார் வசுந்தரா தாஸ். கொஞ்சும் நிலவு, கொஞ்சம் நெருப்பு பாடலை அத்தனை அநாயாசமாக ஹை பிட்ச்சில் பாடி மனதை கொள்ளை கொண்டது குழந்தை. காதல் சந்தியா தலை விரித்துப் போட்டுக் கொண்டு வந்து நினைத்து நினைத்துப் பார்த்தார். அதுவும் சுமார் ரகம்தான்.

பிறகு நயனதாராவை பேட்டி கண்டார்கள். அதிகம் கேட்க ஸ்கோப் இல்லாததால் ஐயா பாடல்களாக போட்டு தாக்கி விட்டார்கள். சினிமாவில் ஹோம்லியாக இருக்கும் பெண், பேட்டியில் மகா மாடர்னாக இருக்கிறது. தமிழ் தெரிந்தும், பேசினால் மதிப்பில்லை என்பதால் ஆங்கிலத்தில் மிழற்றியது. சப் டைட்டில் போட்டாவது இவர்களை பேட்டி எடுக்கத்தான் வேண்டி இருக்கிறது- இல்லாவிட்டால் வாயைத் திறந்து கொண்டு பார்த்து ஜொள் விட்டு விட்டு இப்படி வக்கணையாக வந்து எப்படி குறை சொல்லி எழுதுவது..? :-)
சதாவின் பேட்டி கூட மேலே சொன்னது போல்தான். அங்கேயும் சப்டைடில்ததான். இருவருமே வளர்ந்து வருபவர்கள் என்பதால் கூட நடிக்கும் நடிகர்களை வஞ்சனை இல்லாமல் புகழ்ந்தார்கள்.

*********
மறுபடியும் இன்று தொடர்கிறேன்

**********



சன் செய்திகளைப் பற்றி சொன்னேன் அல்லவா..?? இப்போது போனஸாக அமெரிக்க பசிபிக் நேரம் இரவு ஒன்பதரைக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி செய்திகளை காண்பிக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்தோடு பெரும்பாலும் கருணாநிதியின் பெயரையோ அறிக்கையொ செய்தியில் வந்தௌ விடுகிறது. நேற்று வந்த செய்திதான் படு தமாஷ். அப்துல்கலாம் இளைஞர்களை கனவு காணச் சொன்னார் என்பதற்காக, ஒரு இளைஞர் "தூங்கினாராம்". அவருக்கு கருணாநிதி அறிவுரை சொல்வது போல ஒரு அறிக்கை. " குடியரசுத் தலைவர் விழித்துக் கொண்டே எதிர்காலத்தைப் பற்றி கனவு காணச் சொன்னதை இப்படி நேரடியாக பொருள் கொண்டாயே தம்பி" என்று ஒரு அறிக்கை. விகடன் ஜோக் படிப்பது போல இருந்தது. :-) . செய்தி வாசிக்கும் நபர்களின் அங்க சேஷ்டைகள் அதற்கும் மேல். எதுகை மோனை எக்கச்சக்கமாக கொட்டி வைக்கப்பட்ட வார்த்தைகளை, செய்தி சேகரிக்கப்போன இடத்தில், இவர்கள் கை/கால்களை ஆட்டி ஆட்டி பேசும்போது, திமுக பேச்சாளர்களை பிடித்துக் கொண்டு வந்து செய்தி வாசிக்க விட்டா மாதிரி இருக்கிறது. அதை விட கொடுமை - செய்தி வாசிக்கும் ஒருவர் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, உடம்பை குலுக்கி, இந்த கையில் இருக்கும் பேனாவை அந்தக் கைக்கு துக்கிப் போட்டு, நர்த்தன நடராஜனாக செய்தி வாசிக்கிறார். அங்க சேஷ்டைகளில் காட்டும் ஆர்வத்தை செய்திகளின் தரத்தில் காட்டினால் புண்ணியமா போகும் சூரியக்குஞ்சுகளே..

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...