Thursday, July 06, 2023

மாமன்னன் 

-----------------------------




 மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் 

உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழைப்பதை கேட்டிருக்கிறீர்களா ? என்றார் மாரி செல்வராஜ் தன்னுடைய செவ்வி ஒன்றில். This is the one line for the movie !!!! அதன் சம்பந்தமாக அவருடைய கவிதையும் இதோ: 


மனிதர் பக்காவான ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கிறார். அதில் தங்கர் பச்சான்  படம் பார்ப்பது போல ஒரு உணர்வையும் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு, தன் மனதுக்கு பிடித்த நடிகர்களை வைத்து, தனக்கு மிகத்தெரிந்த ஒரு சப்ஜெக்டை , தனக்கே உரித்தான அருமையான திரைமொழியில்  எடுத்திருக்கிறார். 

தம்பி வெள்ளைக்கார படமா பாத்து பாத்து ரொம்ப கெட்டுப் போயிருக்குது :-) superb Inserts.

வசனங்கள் அருமை.  பரியேறும் பெருமாளில் குமுறித் ததும்பிய  கோபம், மெல்ல மெல்ல பின் வரும் படங்களில் ”லாவா”  கணக்காக உருகி வருகிறது.   Hope he does not consider caste oppression as his only USP. கமலை வத்துக்கொண்டே தேவர் மகனைப் பற்றிய விமரிசனம் செய்து சூட்டைக் கிளப்பாமல் இருந்திருந்தாலும் கூட இந்த படம் ஹிட்டாகி இருக்கும். படமுதலாளிக்கு இந்தப் படத்தின் மூலமாக வரும் பணத்தை விட மற்ற விஷயங்கள் முக்கியம் என்பதால் அவரும் வசூலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டு இருந்திருக்க மாட்டார்.  மாரி சொல்வது போல  ”உட்கார வைத்து”  பேசுவதும் அரசியல்தான் ;-) 

படத்தைப் பார்த்து நான் ஃபஹத் பாசிலின் வெறித்தனமான ரசிகனாகிப் போனேன். அசப்பில் என் சின்னா சித்தப்பா போலிருக்கும் ஃபகத் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார். பணமும் , ஜாதியும், அரசியல் பவிசும் கலந்து மின்னும் ஒரு ஃபியுடலிச ராட்சஸன். அவருக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். 

வடிவேல் பண்பட்ட நடிப்பைத் தந்திருக்கிறார். இசக்கியிடம் வெளிப்பட்ட அப்பாவித்தனம் இல்லை. பட்டியல் இனத்து அரசியல்வாதியிடம் வெளிப்படும் ஒரு இயலாமை, உள்ளூறும் ஒரு குமுறல், அவ்வப்போது வெளிப்படும் பாடல் என்று இயல்பாக நடித்திருக்கிறார். மீட்டருக்கு மீறாத வார்ப்பு. கேட்டு வாங்கிய  மாரிக்கு  ஒரு சபாஷ். 

படத்தில் வரும் மற்ற யாவருமே இந்த மேலே குறிப்பிட்டவர்களுக்கு  துணையாக நின்றிருக்கிறார்கள் - ரஹ்மான், கீர்த்தி, லால்  உள்பட. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் கூட உறுத்தவில்லை. தேவையான அளவுக்கு மட்டுமே இருக்கிறது. 

படத்தில் உதயநிதி பன்றி வளர்ப்பதையும், அவர் அம்மா அந்த பன்றிக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பதையும் பார்க்கும்போது நமக்கு வருகிறதே ஒரு உணர்வு - அதைப் போக்கவே மாரி செல்வராஜ்கள் ஆயிரம் படம் எடுக்க வேண்டும். பாரதிராஜா “ அன்னக் கொடியும் கொடி வீரனும் “ படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த கதானாயகன் பன்றி  வளர்ப்பதாக காட்டி இருப்பார். ”இந்தாளுக்கு மனசு பெரிய ம*ருன்னு நெனப்பு. இந்தக் காலத்துல யார் பன்றி வளர்க்கிறா. அவங்கள்ளாம் எப்படி முன்னேறி வந்துட்டாங்க தெரியுமா” என்று கோபத்துடன் கேட்டார் என் வீட்டம்மிணி. மற்றவர்கள் இழிவென காட்டுவதை தன் அடையாளமாக தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு ”நீலம்” பலம் பெற்றிருக்கிறது. பொறுப்போடு கூடிய பலம் தான் இந்த சமூகம் வேண்டுவது 

வாழ்த்துகள். வளர்க. வெல்க.  


Saturday, October 01, 2022

பொன்னியின் செல்வன்  - 1 



 நம் தோட்டத்தில் செடி வளர்ப்போம். நமக்குத்  தெரிந்த அளவில் அதை பாதுகாத்து,  அதற்கு உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி, நிழல் பார்த்து வளர்த்த காய்களை வீட்டில் சமைத்து, சாப்பபிடும்போது - அந்த ருசியில் அல்ல - அந்த செயலில் ஒரு நிறைவு வருமே - அப்படி ஒரு நிறைவு பொன்னியின் செல்வன் பார்த்ததில். புத்தமங்கலத்து புண்ணியவான் கனவில் நிர்மாணித்த பொன்னுலகம் வெள்ளித்திரையில் நனவாகி இருக்கிறது. வாழ்த்துகள். 

  • த்ரிஷா, கார்த்தி, ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பும், உடல் மொழியும், பார்வையும், அர்த்தமுள்ள மெளனங்களும் அருமை.  என்னளவில்,  இவர்கள் தனக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள்.
  • பிரகாஷ் ராஜ், சரத்குமார் , விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு - ஒகே. விக்ரம் சில பல படங்களின் சாயல் வர நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு உடல் ஒத்துழைத்த அளவுக்கு குரல் மற்றும் கண்கள் ஒத்துழைகவில்லை. 
  • பூங்குழலியை கதையில் பார்த்தவர்கள் திரையில் பார்த்தால் ஏமாற்றமே வரும்  கத்தரிக்கு தப்பிய காட்சிகளில் அவள் குண விசேஷம் வெளிப்படவே இல்லை 
  • பார்த்திபன், ரகுமான், அஷ்வின் , மோகன் ராமன், நிழல்கள் ரவி போன்றோர் அய்யோ பாவம் ரகம். மோகன் ராமனுக்கு  அநிருத்தரின் தலைப்பாகையும் இல்லை. மிடுக்கும் மிஸ்ஸிங். 
  • வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானுக்கும் கதையில் ஒரு சிநேகபாவமான உறவு இருக்கும். படத்தில் வந்தியன், திருமலையை கொஞ்சம் முரட்டுத்தனமாக நடத்துவது போல் இருந்தது. ஒரு வேளை தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்று மணி நினைத்தாரோ? ;-) போலவே, இலங்கை அரசர்கள் எல்லாம் ஜேப்படித் திருடர் களையோடு இருக்கிறார்கள். 
  • பல நடிகர்களை கண்டு கொள்வதே பெரிய பாடாக இருந்தது. தாடிக்குள் தோண்டி எடுத்து பார்த்ததில் கிஷோர் மட்டும் புலனானது. ரியாஸ் கான், லால், மற்றும் பலரை அகழ்ந்து எடுத்தால் சொல்லுங்கள். 
  • சாய் பல்லவி, நயனதாரா, அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பசுபதி, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, சத்யராஜ், மாதவன், பிரசன்னா, அர்விந்த் சாமி, சித்தார்த் போன்றோர்கள் பாத்திர வடிவமைப்பின் போது மணியின் நினைவில் வந்தார்களா என்று தெரியவில்லை. 
  • வசன உச்சரிப்பு பல பாத்திரங்களுக்கு, பல இடங்களில் ததிங்கிணதோம். ஆனால் நவயுக தமிழனுக்கு அது பெரிய குறையாக தெரிய வாய்ப்பில்லை. அதே போலவெ கதையை படித்த தலைமுறைக்கு இந்த படம் நெஞ்சில் ஒட்டுவது போல, படிக்காதவர்களுக்கு புரியுமா/ பிடிக்குமா என்று விளங்கவில்லை. வசூலானால் சரி. அத்தனை செலவு செய்யாததால் லைகா will like it. ;-) 
  • ஏ ஆர் ரஹ்மான் படத்தினை “ரோமாபுரி பாண்டியன்”  என்று நினத்தாரோ என்னவோ, பொன்னியன் செல்வன் பிஜிஎம் மில் நிறைய அன்னிய வாடை. இளையராஜா செய்திருந்தால், இசையின்  தாக்கம் படத்துக்கு வேறு உயரத்தினை  அளித்திருக்கும். 
  • ஜெயமோகன் பேனா பல இடங்களில் அமரர் கல்கியின் ஒரிஜினல் வசனங்களை எடுத்தாண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கு, வணிக எழுத்தாளர் வசனம்தான் ஒத்து வரும் என்று ஆசான் கண்டுணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். :-) 
  • குமரவேல், மணி மற்றும் ஆசானின் திட்டமிடலை மீறியும் பல இடங்களில் கதையோட்டத்தில் தொய்வு இருந்தது. 
  • படத்தின் ஆகப்பெரிய பலம் மணிரத்னம். ஒரு வாசக மனநிலையில் இருந்து, இந்தக் கதையை தான் பார்த்த,  தான் புரிந்து கொண்ட விதத்தில் , தன் திரைமொழியுடன் படத்தில் கொடுத்திருக்கிறார். அந்த தைரியத்துக்கு என் தலைவணக்கம்.  
  • கல்கியின் தாக்கம் தலைமுறை கடந்தும் வீரியம் பெரிதும் இழக்காமல் திரையில் மலர்ந்திருக்கிறது 
பொன்னியன் செல்வன் இரண்டாம் பகுதிக்கும்,  பிறகு சிவகாமியின் சபதத்திற்கும் காத்திருகிறேன். :-) 


Sunday, June 26, 2022

 அவர்கள் 


கலவர முடிவில் 

ராமனுக்கு கோவில் 

கட்டும்போதும் 

காஷ்மிரை சிறைக்குள்

தள்ளிய போதும் 

சமூகநீதிக்கு சததமில்லாமல் 

சங்கூதிய போதும் 

சாவர்க்கருக்கும்

கோட்சேவுக்கும்

பரிந்த போதும்  

எமக்கு பதறவில்லை 

தத்தித் தத்தி

திருக்குறள் ஓதும்போதும் 

இசுலாமிய பட்டியலின ஆட்களை

 கட்சியிலும் ஆட்சியிலும் 

தேடித்தேடி 

சேர்க்கும் போதும் 

எமக்கு கலவரம் வருகிறது. 


விராட பருவத்தில் விலை போன

விபீஷணி 

துரியோதனின் துடையேறி அமர்ந்த 

பாஞ்சாலி 

துரோகத்திற்கு துணைபோகும் 

தூண்டிற்புழு  

பட்டியலின மலைவாழ் 

மக்களுக்காய் உறும மறந்த 

திரெளபதி முர்மு. 

விநோதமான பெயர் என்கிறார்கள் 

ராம்நாத் கோவிந்தையும் 

எல் முருகனையும் 

கிருஷ்ணசாமியையும் 

அர்ஜுன் சம்பத்தையும் 

நினைத்துக்கொள்ளுங்க:ள் 

பெயரில் என்ன இருக்கிறது. 

வடதேச வியாபாரிகளுக்கு 

இவர்கள் வெறும் 

தொழிற்படு பொருட்கள்.  


Saturday, June 11, 2022


 விக்ரம் கமலின் நெடுநாளைய மெகா-வசூல் கனவை நனவாக்கி இருக்கிறது. வாழ்த்துக்கள்.   ஆனால் கமல் ரசிகனாக எனக்கு இது  மனசுக்கு உகந்த படமில்லை. வசூலுக்காக  எத்தனை நிறைய சமரசங்கள் ??!! - முதல் பாதி அவர் இல்லவே இல்லை. கமல் ஊமையோ  என்று கூட நினைத்தேன். இரண்டாம் பாதியில் கொஞ்சம்  ஈடு கட்டி  விட்டார். 

ஆனாலும் கூட ரொம்ப conscious ஆக  underplay செய்வது போல் ஒரு பரிதாபம். சிவாஜிக்கு கடைசி காலத்தில் நிகழ்ந்தது - ஒரு ரூவா குடுத்தா நால் ரூவாக்கு நடிக்கிறாருப்பா - தனக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்கிற அதீத எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது போல ஒரு தோணல்.  

de-ageing டெக்னாலஜி உபயோகித்து இருப்பதாக சொன்னார்களே ? யாருக்கு?  

பழைய சகாக்களை கொண்டே வரணும் போல ஒரே அழிச்சாட்டியமா.. அதுவும் பேர் கூட  உப்பிலி.  ( ராமன்,  முகுந்தன்  எல்லாம் எங்கப்பா? ;-) ) 

நடிப்பில் மட்டும் அல்ல- படத்தின் ஆக்கத்திலும் விலகி - ஒரு தயாரிப்பாளர் நிற்கக்கூடிய தூரத்திலேயே -  இதில்  நின்றிருக்கிறார். அய்யோ பாவம். திரைக்கதையில் கமல் கை வைத்திருந்தால் விஸ்வரூபம்-1 ல் நிகழ்ந்தது போல ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கும். இப்போது போல கொஞ்சம்  “பஜ்” ஜென்று இருந்திருக்காது. 

பஹத் பாசிலுக்கு நல்ல ரோல்தான். ஆனால் எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுவது போல அத்தனை பெரிய அப்பாடக்கர் இல்லை. கொஞ்சம் உடம்பை தேத்தி இருக்கனுமோ? ஏதோ மிஸ்ஸிங் . சில இடங்களில் அந்த அகோர இளிப்பு மட்டும் அற்புதம். 

”மெகா சைஸ்” விஜய் சேதுபதியும் கொஞ்சம் ஏமாற்றம்தான்.  வில்லன் ரோல்களும் வரவர போர் அடிக்கிறது . மாத்தி யோசி மசெ. 

ஸ்வாதிஷ்டா  களை. உடம்பை குறைத்தால்  நன்றாக இருக்கும் என்கிறான் தோழன். எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை. ஃபகத்துக்கு ஜோடியாக காயத்ரியை எங்கே பிடித்தார்களோ. லக்கி

ஏஜெண்ட்  டீணா எதிர்பார்த்த சீன் தான். எனவே புஸ்வரூபம். 

காளிதாஸ் ஜெயராமும் இந்தப் படத்தில் இருக்கிறார். அவர் ”நடித்த”  போர்ஷன்கள் கத்திக்கு இரையாகிவிட்டது போல. 

நரேன்-  ரொம்ப பாவம். 

எல்லோரும்ம் சொல்வதை போல ரோலக்ஸ் ரோலுக்கு  ரஜினி வந்திருந்தால் நம் மண்டைக்கு ரத்தம் பாய்ந்திருக்கும். கமல் கருணாநிதி மாதிரி. யோசித்து தான்  செய்திருப்பார் ;-)  அட்லீஸ்ட் சத்ய்ராஜ் வந்திருக்கலாம். 

அநிருத் பேபிக்கு இது காலம்.  அடித்து ஆடுகிறது அந்த ஊசிப்பட்டாசு. போற போக்கைப் பாத்தால்  கீர்த்தி சுரேஷை லாவிக்கொண்டு போய்விடும் போல  இந்த நட்டுவைத்த நட்ராஜ் பென்சில்

படம் நன்றாக ஓடுவதால், இந்த படம் எல்லோருக்கும் புரிந்து விட்டது என்று நான் நம்பவில்லை. அவரவர்க்கு வசதியான channelல் , அவரவர் மலர்நீட்ட  உயரத்தில் கண்டு  களிக்குமாறு டைரக்டர் வெங்காய வேலை பார்த்திருக்கிறார். That is Brilliant 

இதன் விளைவாக : 

மருதநாயகம் தூசி தட்டப்பட்டால் மகிழ்ச்சி 

மக்கள் நீதி  மையம் கொஞ்சம் அமைதியானால் மகிழ்ச்சி 

புதிய திறமையாளர்களுக்கு இந்த வெற்றியின் விளைவால்,  ராஜ்கமல் வாய்ப்பு வழங்கினால் சந்தோஷம். 

இந்த LCU மூலம் சினிமாவே சீரியல் ஆகி தொழில் தழைத்தால் உன்னதம். 

விக்ரோம்... தட்ரோம் .. தூக்ரோம். 

Wednesday, July 21, 2021

சார்பட்டா பரம்பரை 

--------------------------------------------

 சாதாரணன் உந்தப்பட்டு,  ஜெயித்து, தடுமாறி மறுபடியும் பாட்டையை பிடிக்கும் டெம்ப்ளேட்டு கதைதான். ஆனால், களமும், மனிதர்களும், மொழியும், அரசியலும், காலப் பரிணாமங்களும் வெளிப்பட்ட விதம் அத்தனை அழகு. 

சந்தேகமில்லாமல் பசுபதிதான் ஹீரோ. குஸ்தி வாத்தியாராக முறுக்கும், மிரட்டலும், பார்வையும், பரிதவிப்புமாக அத்தனை பாந்தம். 1970 களின் கழக கண்மணியாக கெத்து காட்டுகிறார். அடுத்த அம்சமான தேர்வு ராமனின் மாமா முத்துராஜ் . அகண்ட முட்டிகளும், புலிநக டாலரும், தூக்கி வாரிய சிகையுமாக ஆண்ட பரம்பரை அலட்டலை  கண்ணுக்குள் கொண்டு வருகிறார். மற்றொரு குறிப்படத்தக்க தேர்வு Dancing Rose.  மலையாள நடிகர் போல. He is a treat to watch. நல்லவரா கெட்டவரா என்று ஆர்யாவை மட்டுமல்ல, நம்மையும் குழப்பும் ஒரு பாத்திர படைப்புடன் கலையரசன். வாழ்க்கையில் இப்படி நூறு முகம் காட்டும் ஆறுமுகங்களை நாம் நிறைய பார்த்திருக்கக் கூடும். நடிகர்களில் இவர்களுக்கு அப்புறம்தான் ஆர்யா, தஷ்ரா, சஞ்சனா, ஆர்யாவின் அம்மா, நெல்லை விஜய் மற்ற எல்லோரும். 

  தமிழில் பீரியட் பிலிம்களில் மேட்டுக்குடியினர் வாழ்க்கைதான் பிரதானமாக விவரணையில் வரும்.ஜட்கா வண்டியும், வெள்ளி கூஜாவும், கார்நாடக சங்கீதமும், பால் சாதமும்,  வெற்றிலை ஜோரும், சதிருமாக. எளிய மனிதர்கள் புழங்கும் இடங்கள்,  அவர்கள் வாழ்க்கை முறைகள், தொழிற்படும் இடங்கள், அவர்கள் உணவு, ரொமான்ஸ், அரசியல், போன்ற எதுவுமே  இத்தனை நுணுக்கமாக விவரிக்கப்பட்டதில்லை . 

குத்துசண்டை ஆட்கள் வன்முறைக்கு மனதில் இடம் தந்ததால்,  எத்தனை எளிதாக குற்ற வயப்படுகிறார்கள் என்று அழகாக சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் சொல்லி சொல்லி வடித்திருக்கிறார்கள் . ரஞ்சித்தின் படங்களில் பெண்கள், கே. பாலச்சந்தரின் படங்கள் போலவே சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள். இதில் ஒரு செய்தி இருக்கிறது :-)  

இசை, ஒப்பனை, கலை, சண்டைக்காட்சிகள், காமிரா எல்லாமே அழகான பெண்ணுக்கு சிரத்தையாக அலங்காரம் செய்தது போல படத்தை  இன்னமும் தூக்கி நிறுத்துகிறது.  ரஞ்சித் இன்னொருமுறை தான் யார் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அவர் படங்களே அவர் அரசியலுக்கு சரியான வாகனம் என்பதால், இதையேஅவர் இன்னும் சிரத்தையாக செய்யலாம். 

சார்பட்டா  -  பார்த்தாலே போதும். சல்பேட்டாவே தேவைப்படாத போதை.  



 

Tuesday, May 04, 2021

கர்ணன்  - அக்மார்க் நெய்யில் தாளித்த மசாலா

----------------- 



நம் மனிதர்களை ஹாலிவுட் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.   படம் முழுக்க வாளும், வேலும், குதிரையும், யானையும் - போலிசுக்காக காத்திருக்கும் சுளுந்து ராத்திரி உட்பட.   காமிராவின் இளகிய கலர் palette ஐ காண்பதில் வில்லியம் வாலேஸ் திருநெல்வேலிக்கு வந்த மாதிரி ஒரு தோணல்.  முதல் படத்தில் தடுத்து ஆடிய மாரி, இரண்டாம் படத்தில் அடித்து ஆடி இருக்கிறார். படாத இடத்தில் பட்டு விடுமோ என்று பயந்து வருகுது.  

தனுஷ் அச்சு அசலாய்  கர்ணனில் ஒட்டிக் கொள்கிறார். அவர் வீடும் மனிதர்களும் ரத்தமிமும் சதையுமாக  அதைவிட அசல்.  அவருக்கும் லாலுக்கும் உள்ள அன்னியோன்னியமும், அக்காவுடனான அவர் உறவும்  இதம் 

அருமையான  செட். கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். தலித் வாழ்வு அதன் வீரமும், வீச்சமுமாக காமிராவின் வழியே  இறங்கி இருக்கிறது. பாரதிராஜாவின் படத்தில் தெரியும் பன்றிகளுக்கும், பருத்தி வீரன் / கர்ணனில் தெரியும் பன்றிகளுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். சாவு வீட்டில்  தனுஷுடன் ஆட்டக்காரிகள் ஆடும் நடனமும் அவ்விதமே ரஜிஷா விஜயனின் அறிமுக ( மெல்லிய) ஆட்டமும், ஆம்பிளை சட்டையும், ஆசையும் அவ்வளவு நிஜம்  அவர் பெயர் திரெளபதையாம். - கர்ணனின் காதலி திரெளபதை.  மாரி - you are such a rebel !!!   

மாரி நல்ல கதை சொல்லி. படம் துவக்கத்தில் இருந்து அழகாக உள்ளே கை பிடித்து கூட்டி செல்கிறார். கடலுக்குள் இறங்குவது மாதிரி  - திரும்பி பார்க்கும்போதுதான் எவ்வளவு ஆழமான இடத்துக்கு வந்து விட்டோம் என்று புரிகிறது. மீன் வெட்டும் வாளும், கால் கட்டும் கழுதையும் என்ன குறியீடுகளோ .. விளங்கவில்லை  நட்டியின் உள்ளுறை  ஜாதி வெறி - முதன்முறை கிராமம் வரும்போது  படிப்படியாய் கொந்தளிக்க துவங்கும் அவர் மனது - வைத்தவனின் முகத்தை பார்க்காமல் அவன் கையை  பார்க்கும் ரெளத்ரம் -- wow. மாடசாமி மகன் துரியோதனனா என்ற என்ற அவரின் எகத்தாளக் கேள்விக்கு  கந்தையா மகன் கண்ணபிரானா இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன என்ற  கர்ணனின் பொருமல் புரிகிறது. ரங்காச்சாரியின் மகன் ரமேஷ் முறுவலிக்கக் கூடும் ;-) 

திருஷ்டி பொட்டுகள்  

1. ஊருக்கு அனுப்பி விட வந்த  தனுஷின் அப்பா  வாள் எடுத்துக் கொடுக்கும் இடம். 

2. முதல் காட்சியில் தெருவில் சாகக்கிடக்கும் பெண் குழந்தையை காணாமல் ( ?!!)   கடக்கும் பஸ்கள். 

3. போலீசை சிறுபிள்ளைத்தனமாக எதிர்க்கும் சினிமா கிராமம்  

4. தனுஷ் மழையில்  பேசும் வசனம்

போலீசை கொன்றால் ஊருக்கு பஸ் வரும் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுதல்.  மாரி அடுத்த படத்தில் அறிவாயுதம் ஏந்தி கலெக்டராகும் ஒரு தலித்தை கதானாயகனாக்க வேண்டும். அப்போதுதான் நாராயண குருவின் உள்ளம் குளிரும்.

Friday, November 27, 2020

 சிகரெட்

--------------



வாசனையாய்
வடிப்பானோடு
அரச அளவில்
அடர்பச்சையில்
காட்டமாய்
இப்படியாக
வகைக்கொன்றாய்
பல உண்டு
அந்தப் பெட்டியில்....
கவிதைக்கொருவன்
படிப்புக்கொருவன்
பந்தப்பட ஒருவன்
இச்சைக்கு ஒருவன்
உதவிக்கொருவன்
என பலபேர்
தோழமைக்கிருந்தும்
சகலரையும் புறந்தள்ளி
வேறு வாழ்க்கை புகும்
ஸ்நேகிதிக்கு
இந்தப் பலநாள்
பரிச்சயமும்
பெற்ற ஆசுவாசமும்
திடீரென்று
இஃதொரு
ரகசிய தவறென்று
மனப்பெட்டியில்
புலனாவது
போல


 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...