Saturday, October 15, 2005

மறுபடியும் தங்கர் சாமி

மறுபடியும் எங்க வட்டார வழக்கோட ஒரு படம். சன்னமா மழை பெய்யும்போது ஜன்னலருகே உக்காந்தா மாதிரி வாசம்.

கொஞ்சம் இடிச்சத்தம் ஜாஸ்தி. அவ்வளவுதான்.!!!



நேத்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாத்தேன். கூச்சல் அதிகமா உள்ள ஒரு குடும்பக்கதை. கொஞ்சம் அசந்தாலும் வி.சேகர் படமாயிடும் போல ஒரே சலசலப்பு படம் முழுசும். அழகி படத்தில் இருந்த மென்மை, சொல்ல மறந்த கதையில் கொஞ்சம் குறைந்து, சி.ஒ.அ.சாமியில் துள்..ளியுண்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

நாயகர்கள் யாரும் கிடைக்காததால், தான் நடிதேன் என்கிறார் தங்கர். காமிராவைப் பார்க்காமல் பேசும் கான்ஷியஸ்நெஸ்ஸை தவிர்த்து விட்டால் காரெக்டர் அவருக்கென்றே தைத்த மாதிரியான சவடால் கேரக்டர். இந்த மாதிரி பொறுப்பத்த ஷோக்கு தகப்பன்களை மாயவரம் ஏரியாவில் நிறையப் பார்க்கலாம். நிலபுலன்களோடு வாழ்ந்த அப்பா/தாத்தா காலத்தின் சொகுசுகளை விட முடியாமல், அதே சமயம் நிலம், தோப்பு, துரவு வழியாக வந்து கொண்டிருந்த வருவாய் மடை அடைந்து, இந்த தலைமுறையிலோ, போன தலைமுறையிலோ மாத சம்பள அரசு வேலைக்கு போகத் தலைப்பட்டிருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் இப்படித்தான் திரிவார்கள். அவர்களுக்கு இப்படித்தான் குத்துவிளக்கு கணக்காக மனைவி இருப்பாள் - எல்லாப் பக்கமும் இடி வாங்கிக் கொண்டு.

நவ்யா நாயர் பாந்தம். குரல் கொடுத்த அம்மணி மறுபடியும் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். போகிற போக்கில் ஐயப்ப சாமிக்கு மாலை போடும் சாமிகள் பற்றியும் நிறைய நக்கல். ஆனால் தேவையில்லாமல் தனுஷை வம்புக்கு இழுத்திருக்கிறார். தங்கருக்கு தான் படம் எடுப்பதை விட மற்றவனெடுப்பதெல்லாம் படம் அல்ல என்று தோண ஆரம்பித்திருப்பது கஷ்டகாலம். ஒன்று தங்கரின் அரசியல் சகவாசம் குறைய வேண்டும்.அல்லது பேய்க்கதைகளில் வருவது மாதிரி கொஞ்ச காலத்துக்கு அவர் நாக்கு மேலண்ணதோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.

" துறவு என்பது எல்லாவற்றையும் விட்டு விலகி ஓடுவதல்ல. எல்லாவற்றையும் அணைத்துக் கொள்வது என்றார் சுவாமி.அவன் தடேரென்று காலில் விழுந்தான்" ' என்று மாலன் எழுதின கதையின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன படத்தினை பார்த்து விட்டு.

13 comments:

  1. சுந்தர்
    உங்கள் பதிவில் எழுத்துரு மாற்றிவிட்டீர்களா? எனக்கு தெரியாத மொழி வடிவம் தெரிகிறது:(

    ReplyDelete
  2. ்சி திரைப்படத்தைப்பற்றிய நல்ல ஒரு அறிமுகம், மிக்க நன்றி. நானும் பார்க்கலாமென்றிருக்கிறேன், பார்க்கலாம்.

    ReplyDelete
  3. நானும் பார்த்தேன்.
    முதலில் நாயகனாகக் களமிறங்கிய துணிவுக்குப் பாராட்டுக்கள்.
    சாமியாராகி வந்தவுடன் அவர் பண்ணும் கூத்துக்களைப் பார்த்துவிட்டு, மற்றவர்களைப் பழிவாங்கத்தான் இப்படி நடிக்கிறாரோ என்றுதான் நினைத்தேன். பிறகுபார்த்தால் உண்மையிலேயே சாமியாகிவிட்டார். ஆனால் மாலை போடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் ஒருவர், நண்பர்கள் கேலி செய்துவிட்டார்களென்பதற்காக கணநேரத்தில் மாலைபோட முடிவெடுப்பதும், திடீரென்று முற்றும் துறந்து வாழ்வதும் நம்பகத்தன்மை குறைவாயிருக்கிறது.

    நீங்கள் சொன்னமாதிரி, வாய்தான் தங்கருக்குப் பிரச்சினை.

    ReplyDelete
  4. பத்மா,

    நானொன்றும் மாற்றவில்லையே.
    இன்னமும் பிரச்சினை உள்ளதா..??
    சில் சமயம், எழுத்துரு சரியாக இறங்காவிட்டால், பிரச்சினை ஏற்படும். அது காரணமோ...??

    அன்பு, கொழுவி, நன்றி.

    ReplyDelete
  5. click on Internet explorer menu :

    view ---> encoding --> unicode

    அது சிலசமயம் தானாகவே western-European க்கு செட் ஆகி விடுகிறது. அது பிரச்சினையாக இருக்கலாம். :-(

    ReplyDelete
  6. ஹி..ஹி.. நவ்யா மாதிரியான அழகான அக்காக்களும் மாயவரம் பக்கம் உண்டுன்னு சொன்னா மறுக்கவா போறீர்?!

    பைதபை, இவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு ஸ்டில்லை எடுத்துப் போடறதுக்கு எனக்கொரு மெயில் தட்டிவுட்டா விதவிதமா ஸ்டில் அனுப்பிச்சுருப்பேனே... நவ்யாவோட ஸ்டில்!

    ReplyDelete
  7. சுந்தர்,

    கடைசி பாரா சூப்பர். சன் டிவி, ஜெயா டிவி சினிமா நிகழ்ச்சிகளில் பெரும்பாலான காட்சிகளை காண்பித்தனர். நான் முழு படம் பார்க்கவில்லையெனினும், சி.ஒ.அ படம்
    பிடித்திருந்தது (!). நவ்யாவும், தங்கரும் நன்றாக செய்துள்ளனர். இதே போல ஏ.வி.எம் ராஜன் ஒரு படத்தில் (இரட்டை வேடம்?) குடும்பப் பொற்ப்பிலிருந்து தப்பித்து ஓடி சில
    பிரச்னைகள் வரும். என்ன படம் என்று ஞாபகமில்லை.

    கடைசி பாரா சூப்பர். (நவ்யாவின் ஸ்டில்லும் தான்)

    - அலெக்ஸ்

    ReplyDelete
  8. மறுபடியும் எங்க வட்டார வழக்கோட ஒரு படம்.
    >>>
    தேடித்தேடித்தான் கண்டுபிடிக்கணும்.

    காமிராவைப் பார்க்காமல் பேசும் கான்ஷியஸ்நெஸ்ஸை தவிர்த்து விட்டால
    >>>
    நல்லா ஒப்பிக்கிறார்.

    நாக்கு மேலன்னத்தோடு (சுழி சரியா..??..)
    >>>
    மூணு சுழி :)

    --
    ஊர்ப்பக்கம் நல்லா ஓடும்னு நெனைக்கிறேன். பந்தா பரமசிவன்கள் கண்ணாடியில் பார்த்தது மாதிரி இருக்கும் :)

    ReplyDelete
  9. நம்பி, இப்போது சரியாக த் தெரிகிறதா..??

    அலெக்ஸ்..தேங்க்ஸ்.

    பரி..சரி. :-)

    ReplyDelete
  10. சுந்தர்,

    <meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" />

    இந்த வரியைத் தூக்கி <head>க்கு அடுத்ததாகப் போடுங்கள். பிறருக்கு இருக்கும் எழுத்துருப் பிரச்சினைகள் தீரும்.

    பார்க்க:
    http://domesticatedonion.net/tamilblog/wakka.php?wakka=SettingContentType&v=1ceh

    ReplyDelete
  11. நன்றி செல்வா.

    மாற்றி இருக்கிறேன்.

    ReplyDelete
  12. சுந்தர்,

    இதோட ஒரிஜனல்'ச்சிந்தாவிசிஷ்டயாய ஷ்யாமளா' கிடைச்சாப் பாருங்க.
    ஸ்ரீநிவாசன் & சங்கீதா நடிச்சது.

    ReplyDelete
  13. பாகிறேன் துளசியக்கா..

    எனக்கும் சேட்டன்மார் படமுன்னா வளர இஷ்டம். :-). அதாரு சங்கீதாசேச்சி. நம்ம ராஜ்கிரண் பார்த்திபன் சாரோட நடிச்சிதே..அதுவா..??

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...