Wednesday, September 22, 2004

விரதம்..?? !!!

இனிய நண்பர் ஐகாரஸ், நேற்றுடன் தன் விரதத்தை முடித்து விட்டதாக மறுபடியும் வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி இது என்றாலும், விரதம் எடுத்த காரணம் என்ன என்று படித்தபோதுதான் ஆச்சரியமாக இருந்தது.

கல்கியிலோ, விகடனிலோ அல்லது அச்சு ஊடகங்களிலோ, தன் படைப்பை பிரசுரித்தல் என்பது அவ்வளவு பெரிய காரியமா..?? அதுவும் இன்று அச்சு ஊடகங்கள் இருக்கும் தரத்தில் அது என்ன அவ்வளவு சிரமமான காரியமா..?? பிரகாஷுக்கு கைவந்திருக்கும் எழுத்து லாவகத்திற்கும், நகைச்சுவைக்கும், அவருடைய வாசிப்பு அனுபவத்தினையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது அவருடைய அச்சு உலகத்தின் மீதான பிரமிப்பு (?!!!) கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

நான் படிக்கும் இணையப்பக்கங்களில் விகடனுக்குத்தான் முதலிடம். ஆனால் விகடனில் கூட எல்லா பகுதிகளும் படிக்கும் படியாகவா இருக்கின்றன. சிறுகதைகள் படிக்கும் வழக்கம் சுத்தமாக போய் விட்டது. கழுகு, கற்றதும் பெற்றதும், மியாவ், ஹாய் மதன், கவிதைப் பக்கம், தலையங்கம், ரொமான்ஸ் ரகசியங்கள் என்று ரொம்ப செலக்டிவ் ஆகத்தான் படிக்கிறேன் இப்போது. என்னைப் பொறுத்தவரை வலையேறி இருக்கும் அச்சுப்பத்திரிக்கைகளை விட, இணைய உலகம் எத்தனையோ மேல். ஓரளவிற்கு, எந்தவித காம்ப்ரமைஸ்களும் பண்ணிக்கொள்ளாமல் எழுத்துக்கள் யோக்கியமாக இருக்கிறது இங்கே. எது எதற்கு, எந்த வலைப்பூ படிப்பேன் என்று நான் பட்டியலிட தேவையே இல்லாத அளவிற்கு, கிட்டத்தட்ட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்று எல்லார்க்கும் தெரியும். புதிதாக அச்சு உலகிலிருந்து வரும் எழுத்தாளர்களும், இணையத்தில் அருமையாக கட்டுரை எழுதுகிறார்கள். ( அர்த்தமண்டபத்துக்காரை போல சிலர் அலட்டிக்கொண்டாலும்...)

எனக்குத் தெரிந்து, இணைய எழுத்தாளர்கள் திறமை அச்சுப் பத்திரிக்கைகளால் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தானே முன்வந்து வாய்ப்பு கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நண்பர் பொன்.முத்துகுமார் எழுதிய அமெரிக்க வாழ்க்கை கவிதையை விகடன் சிலாகித்து இருந்தது. உஷா மாமி, ஹரன் பிரசன்னா ஆகியோர் படைப்புகள் ஏற்கனவே பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாயவரத்தான் ரமேஷ்குமார் அவ்வபோது விகடன் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுகிறார். நன்றாக எழுதக்கூடிய வேறு சில வலையர்களும் அச்சு ஊடகங்களில் முயன்றால் நிச்சயம் கவனிக்கப்படுவார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

டாபிகலாக எழுதுவதும், எளிமையாக எழுதுவதும், கொஞ்சம் கவர்ச்சி மசாலா( கதைகளில்) சேர்ப்பதும்தான், பெரும்பத்திரிக்கைகளில் எழுத சுருக்கமான வழி. அது இணைய எழுத்தாளர்களுக்கு பிடிக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் - மறுபடியும் வலைப்பதிய வந்தமைக்கு.



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...