Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - I

முதல் ஆட்டம், இரண்டாம் ஆட்டம் என்று ·பர்ஸ்ட் ஷோ,செகண்ட் ஷோவை சொல்வார்கள் கிராமங்களிலும், கிராமம் மாதிரி இருக்கும் முனிசிபாலிட்டிகளிலும். இந்த ஆட்டம் என்கிற வார்த்தையே பழைய கூத்துக் கலாசார, நாடக கால வழக்கிலிருந்து வந்ததோ என்று எனக்கு ஒரு சம்சயம் உண்டு. பவளக்கொடி என்று எங்குபார்த்தாலும் சாணி தாளில் மாரியம்மன் தீமிதி காலங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். அதே போலவே சதிரும். தஞ்சை பாலாமணி என்ற சதிர் ஆட்டக்காரர் சுதந்திரபோராட்டத்தில் எல்லாம் பங்கு பெற்றதாககதை கேட்டதுண்டு.

காரைக்குடி அருகே கீழ்ச்சிவல்பட்டியில் கொஞ்சநாள் டூரிங் டாக்கிஸ் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட என் தாத்தாவைத் தவிர யாரும் ஸீஸனுக்கு போய் ஆட்டம் போட்டது இல்லை.

இப்போது இங்கே நான்.

இது டூரிங் டாக்கிஸோ, கூத்துக் கட்டலோ, பவளக்கொடியோ, சதிரோ இல்லை ரிக்கார்ட் டான்ஸோ, வந்தநாளுக்கு ஏதாவது பண்ண முடிந்தால் சந்தோஷம்தான்.

எங்கிருந்து ஆரம்பிப்பது.....??

ம்ம்... சொக்கன் ஆட்டோவில் கூட்டிவந்து ரா.கா.கி யில் ஏற்றிவிட்ட தினம் ஒரு கவிதைதொண்டரடிப்பொடிகளில் நானும் ஒன்று. அவர்கள் பேசும் விஷயம் புரியாமல் கை, வாய் மெய் பொத்திகொஞ்ச நாள் பயபக்தியோடு கேட்டுக் கொண்டிருகையில், யார் மூலமாகவோ மரத்தடி பற்றி தெரிய வந்தது.ரா.கா.கி மேல் பரம பக்தியோடு இருந்த எனக்கு க்ளப் முக்கியஸ்தர்கள் மரத்தடியில் நிறைய எழுதுவதைப்பார்த்து சற்றே எரிச்சல் கூட வந்தது. அதற்கு முன்பே நான் மரத்தடியில் துண்டு போட்டு வைத்திருந்தாலும்,ஏதும் எழுதியதில்லை. இளைஞர்கள் ஜாலியாகப் பேசிக் கொண்டு, கலாய்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைஎனக்கும் கொஞ்சம் ஜாலியாகவே இருந்தாலும்....எதோ ஒரு தயக்கம். இலக்கியம் இங்கே பரிமாறப்பட்டாலும், ஆதியில் இங்கே தனிமனித தொடர்புகளுக்கும், நட்புக்குமே முக்கியம் இருந்தது என்று நினைக்கிறேன்.இப்போதும் அப்படித்தானோ..?? மதியை நான் முதலில் படித்தது கோணல் பக்கங்களில். சாரு நிவேதிதா சொன்ன பெண்கள் எல்லாம் இப்படியே இருந்தால் இணையத்தமிழ் இன்னம் எத்தனை செழித்திருக்கும்என்று யோசிக்க வைக்கிற,(கறி தின்னு எலும்பு ஒதுக்கற - நன்றி: ஆப்பு) நபர்.

அவர் அழைப்பின் பேரில் இன்று இங்கே எழுதுவது சந்தோஷம்தான். ஆயினும் மற்ற குறுக்கீடுகள் அகன்றுமரத்தடியில் நானும் ரெகுலராக எழுத ஆரம்பிக்கும் நாள்தான் என்னைப் பொறுத்தவரை, எனக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான நாள்.

எழுதும் நாளன்று, என்னைப் போல பொடியனை, இணையத்தில் மட்டுமே தமிழ் படிக்கின்ற வாய்ப்பு இருக்கிறஒரு தான் தோன்றியை, குமுதம், கணையாழி, கலைமகள் இன்னபிற எண்ணிலடங்கா பத்திரிக்கைகளில் எழுதிபுகழ்பெற்ற ஒரு எழுத்தாளினி கூட சேர்ந்து மதி எழுத வைப்பது என் நல்லூழ்.

மாமியின் எழுத்தைப் படிக்கிறவர்கள், என்னையும் கொஞ்சம் சகித்துக் கொள்ளுங்கள். மூக்கனின் அதே கோணங்கித்தனங்களை இங்கேயும் அரங்கேற்ற இதோ வந்தேன்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...