Friday, November 05, 2004

அடுத்த கட்டம்

ராமதாஸ¤க்கு இத்தனை அரசியல் சாதுரியம் வந்ததற்கான காரணங்கள் விளங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மறதியையும், உணர்ச்சி வேகத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறுவதில் நம்ம அண்ணன், மோடி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறார். ஆதி காலத்தில் இருந்து, அவருடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்கின்றவர்களுக்கு இது தெளிவாகப் புரியும்.

வெறும் ஜாதிக்கட்சியாக ஆரம்பித்த வன்னியர் சங்கம், இன்று பாட்டாளி மக்கள் கட்சியாகி விசுவரூபம் எடுத்து நிற்பதற்கு, அவருடைய ஜாதிப்பாசம் மட்டும் காரணமல்ல. பதவி மீதும், பதவி தவிர்த்து கிடைக்கும் அதிகாரம் மீதும், பணபலம் மீதும் அவருக்கு இருக்கும் வெறியே என்பது வெளிப்படை. அதிமுக ஆட்சியில், எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டங்களில்தான், முதல் முறையாக வன்னியர் சங்கத்தின் போராட்ட அராஜகம் ஆரம்பித்தது. சரியாக செயல்படாத ஒரு அரசாங்கம், கனிவாக நடந்து கொண்டதால், அது அந்த ஜாதிக்கட்சிக்கு வெற்றியாக முடிந்தது. அங்கு ஆரம்பித்த அவர் பயணம், இன்னமும் கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது.

பின்னர் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியது கூட, ஜாதி ரீதியாக மட்டும் செயல்பட்டால், எல்லா மக்களின் ஓட்டுக்க்ளையும் பெற முடியுமோ என்கிற டாக்டரின் சந்தேகத்தினால் மட்டும் விளைந்ததே. திமுக, அதிமுக என்று மாறி மாறி சவாரி செய்ததில் முகம் இழந்த தேசியக்கட்சிகளைப் போல, பா.ம.க இழக்காமல் இருக்கக் காரணம், காலத்துக்கு ஏற்றார்போல பரபரப்பு கிளப்பி, மக்களின் கண்ணில் மண்ணைத் தூவும் வித்தையை திறம்பட செய்வதே. தமிழ் மொழி பாதுகாப்பு, தலித் மக்கள் முன்னேற்றம், விடுதலைப்புலி ஆதரவு, சினிமா எதிர்ப்பு, பசுமைத் தாயகம் என்பதெல்லாமே டாக்டரின் சந்தர்ப்பவாதத்துக்கு பகட்டான முலாம் பூச மட்டுமே.தனியொருவனாக அங்கும் இங்கும் தாண்டிக் கொண்டிருந்தால், தன் நீண்டகால திட்டங்களை நிறைவேற்ற இயலாதென, இப்போது மற்ற ஜாதிக்கட்சிகளையும் அழைத்து, மூன்றாவது அணி உருவாக்கி, திராவிட கட்சிகளிடமும், மற்ற கட்சிகளிடமும் பேரம் பேசி, தமிழ்நாடு/புதுச்சேரி ஆட்சிக்கட்டில்களை குறிவைக்கும் அடுத்த கட்டத்துக்கு இறங்குகிறார். இந்த வாரம் திருமாவளவனுடன் சேர்ந்து விகடனில் அவர் அளித்துள்ள வாக்கிங் பேட்டியை இந்த முயற்சிகளுக்கான அச்சாரமாகவே நான் காண்கிறேன்.

தமிழ்நாட்டை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது போலிருக்கு...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...