Thursday, January 12, 2006

வாழ்த்துகள் மலேசியா ராஜசேகரன்!!!!

இந்த வார அவள் விகடனில் ஒரு பணிப்பெண்ணின் தன்மானப் போராட்டம் என்ற தலைப்பில் மலேசியா ராஜசேகரன் சென்ற பதிவில் குறிப்பிட்ட "டிப்ஸ்" சம்பவம் வந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராஜசேகரன் ஐயா.

அவள் விகடனில் இருந்து:

சீனாவின் உட்புறங்களில் பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், கேளிக்கை மையங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ‘டிப்ஸ்’ வாங்க மறுத்துவிடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், ‘‘சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. செய்யும் வேலைக்கான ஊதியத்தில் நாங்கள் குறியாக இருப்போம். அது அல்லாது, ‘சன்மானம்’ என்று தரப்படுவதை வாங்குவது என்பது எங்கள் கலாசாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது!’’ என்றார்கள்.

இதுகுறித்து நான் நேரில் கண்ட சுவாரஸ்யமான ஒரு சம்பவம்... ஒருமுறை, சீனாவில் உள்ள ‘ஹ§னான்’ மாநிலத்தின் தலைநகரமான ‘சங்ஸா’ என்கிற ஊருக்கு போயிருந்தேன். அங்கு நானும் ஒரு நண்பரும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து இருந்த மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதி இருவர் இருந்தனர்.
தங்களின் சாப்பாட்டுக்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையில் இருந்து 30 யுவானை (ஹிஷி$ 3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பரிமாறிய சீனப் பணிப்பெண்ணிடம் ‘டிப்ஸாக’ நீட்டினார். அந்தப் பெண் அதை வாங்க மறுத்துவிட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருக்கவும், அந்த அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் தோள்களையும் ‘சரணடைந் தேன்’ என்கிற பாணியில் உயர்த்திக் காட்டிவிட்டு, அந்தப் பணத்தை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.


மனைவியிடம் பேசிக்கொண்டே உணவகத்தின் வாசல் வரை போனவர், திரும்பிப் பார்த்தபோது, அந்தப் பணிப்பெண் கையில் சில தட்டுகளோடு உணவகத்தின் பின்னே இருந்த சமையற்கட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
உடனே, அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளை போல் கிடுகிடு என்று ஓடி வந்து, அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது அந்த 30 யுவானை வைத்துவிட்டு, கிடுகிடு என்று ஓடி மனைவியோடு, வீதியில் சென்ற கூட்டத்தில் கலந்துவிட்டார்.


சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்தப் பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டார். பணத்தை சட்டென்று எடுத்துக்கொண்டு உணவகத்தின் வெளியே ஓடினார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், நண்பரும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்துவிட்டோம். எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால், அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து நானும் சென்றேன்.

பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதியை தேடியபடி, நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு, உணவகத்தில் இருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்குச் சாலையில் அவர்கள் ஒரு டாக்ஸியில் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின்தொடர்ந்து சென்ற நான், டாக்ஸி நின்றிருந்த இடத்துக்கு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். டாக்ஸியை அணுகிய அந்தப் பணிப்பெண் ஓட்டுனரின் கதவைத் தட்டி டாக்ஸியை நிறுத்திவிட்டு, பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதி யிடம் ஜன்னல் வழியாக அந்த 30 யுவானை நீட்டியபடி, முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். விடாது போராடி, அந்த அமெரிக்கரிடம் பணத்தை ஒப்படைத்த பின்னரே, அங்கிருந்து நகர்ந்தார்.

நான் நாற்பது நாடுகளுக்கு போய் வந்த அனுபவம் உள்ளவன். இத்தகைய ‘தன்மான உணர்வை வெளிக்காட்டும்’ ஒரு சம்பவத்துக்கு ஒப்பான சுற்றுப்பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. & மலேசியா

ராஜசேகரன்

Thursday, January 05, 2006

இரண்டு முறை காணாமல் போன பதிவு

1. சீன சமூகத்தில் படிப்பு

சீனர் தம் பிள்ளைகளின் படிப்பில் அளவுக்கு அதிகமான நாட்டம் காட்டுவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சீனர்கள் வீடு வாசல்களை விற்று தம் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஒரு மிச சாதாரண நிகழ்வு. இப்போது எல்லா இன மக்களும் தம் பிள்ளைகளின் படிப்பின்பால் அதிகமான நாட்டம் காட்டுகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், சீனர்களிடம் இந்த தாக்கம் எப்போதும் சற்று கூடுதலாகவே இருந்திருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எனக்கு தெரிய மலேசியாவில் ஒரு 30 - 40 வருடங்களாக மார்க்கட்டில் காய்கறி விற்கும் சீனர் கூட இரவு பகலாக உழைத்து தம் பிள்ளைகளை ஐரோப்பா, அமெரிக்கா என்று அனுப்பி சிறந்த பல்கலைகழகங்களில் நல்ல படிப்புக்களை படிக்க வைத்து விடுவார். இது ஏதோ அத்தி பூத்தார் போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்காதீர்கள். மலேசியா முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும், சிற்றுர்களிலும் இது ஆயிரக்கனக்கான சீன குடும்பங்களால் செயல் படுத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு.
சீனர்கள் படிப்பிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லா இனங்களுக்கும் பொருந்தும் பொதுவான காரணங்களை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று பிரத்தியேகமான பாரம்பரிய சரித்திர காரணங்கள் சில உள்ளன. அவற்றில் முக்கிய இரண்டை இங்கு விளக்குகிறேன் :-

அ). ( Confuciunism ) கன்பியூசியனிசத்திின் தாக்கம்

சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை. இவர் வாழ்ந்த காலத்தில் சீன நாட்டில் இவருக்கு ஓரளவே வரவேற்பே இருந்தது என்றாலும், இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர், கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்தர்களான ஆன சிஷ்யபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, /கன்பியூஷியனிஸம்/ எனும் வாழ்க்கை வழிமுறை தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.

கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றினஅடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாளும் அரசனின் பல கடமைகளிலுல், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமையும் ஒன்று" என்பதுதான்.

காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன. அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸத்தை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமல்படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது.
ஆதலால் 2,000 வருடங்களுக்கு முன்பிருந்தே படிப்பின் ஆழமும், அதன் தன்மையும் மற்ற இனங்களை காட்டிலும் சீனர்களுக்கு மிகப் பரவலாக தெரிந்தும், புரிந்தும் இருந்திருக்கின்றது.

1 ஆ). (Chinese Imperial Examination) சீன அரசு தேர்வு பரிட்சையின் தாக்கம்

சின நாட்டின் சரித்திரத்தில் கி.பி. 600 ஆம் ஆண்டின் வாக்கில் 'சுயி' என்ற அரசன் தான் பல பாகங்களாக சிதறுண்டு கிடந்த சீன நாட்டை ஒன்று சேர்த்தவன். அப்படி ஒன்று சேர்க்க பட்ட நாடு மிக பெரிய, பறந்த பிரதேசமாக இருந்ததால், அதன் நான்கு திசைகளிலும் இருந்த நகரங்களையும், சிற்றுர்களையும், கிராமங்களையும் நிர்வகிக்க அரசனுக்கு திறமையான பல நிர்வாகிகள் தேவை பட்டனர். அதற்கு முன் அரசு நிர்வாகத்தை பார்த்து வந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது அரசனுக்கு அதிகமான நம்பிக்கை இல்லாது இருந்ததால், நாடு முழுவதிலும் உள்ள திறமைசாலிகளை அடையாளம் காண வேண்டி 'அரசு தேர்வு பரிட்சை' (imperial examination) என்ற தேர்வு முறையை துவக்கினான். ஆறிலிருந்து, பன்னிரண்டு நிலைகளை உடைய இந்த பரிட்சை முறை எத்தனையோ மன்னர்களும், சாம்ராஜியங்களும் வந்து போயிருந்த சூழ்நிலையிலும் நிறுத்த படாமல் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை தொடர்ந்து 1,300 வருடங்கள் அமுலில் இருந்திருக்கின்றது.

இந்த பரிட்சையில் சீன நாட்டில் பிறந்த யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்ற நிலை இருந்திருக்கின்றது. காப்பியங்கள், சீன இலக்கியம், ராணுவ வியூகங்கள், வரி மற்றும் நிதி நிர்வாகம், விவசாயம், பூலோகம், சட்டம், எழுத்து வண்ணம் (calligraphy), ஓவிய கலை என்று பல கலைகளை உள்ளடிக்கிய இந்த பரிட்சை முறையின் கடைசி நிலையில், பரிட்சைக்கு அமர்பவர்கள் தொடர்ந்து 72 மணி நேரம் வரை பரிட்சிக்க பட்டிருப்பதாக சரித்திர ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். பண்டைய சீனாவில் இந்த பரிட்சைகளில் வெற்றி பெற்றவர்கள்தான் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் அரச நிர்வாகிகளாக அமர்த்த பட்டனர்.

ஏழ்மை நிலையில் பாமர வாழ்க்கை வாழ்ந்து வந்த அன்றைய சீனர்கள், இந்த பரிட்சையை தங்களை ஏழ்மையிலிருந்து மீள வைக்க கூடிய ஒரு ஏணியாகவே நினைத்தனர். ஒரு குடும்பத்தை சார்ந்த ஆண்மகன் ஒருவர் இந்த பரிட்சையில் தேர்ச்சியுற்று அரசாங்க அதிகாரியாக நியமிக்க பட்டால், அவரால் அவரின் குடும்பம் மட்டுமல்லாது, அவர் பிறந்த கிராமமே வளமடைந்துள்ளது. இதனால் 1,400 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனர்கள் தம் பிள்ளைகளை படிக்க தூண்டும் இயல்பு உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த பரிட்சை முறை பண்டைய சீனாவிலிருந்து ஜப்பான், கொரியா, வியட்னாம் அகிய நாடுகளுக்கும் பறவியுள்ளது. பிறகு சமீபமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்து ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரர்களும் உலகம் முலுவதும் பரந்து விரிந்து கிடந்த தங்கள் காலனிகளை நிர்வாகம் செய்வதற்கென்று அனுப்பிய நிர்வாகிகளை, சீனர்களின் இந்த பரிட்சை முறையை உதாரணமாக கொண்டுதான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர் என்று சீன ஆராய்ச்சிளார்கள் கூறி வருகின்றனர)்.

2. சீனர்களும் உழைப்பும்

சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி சீனர்கள் பெரும்பாலும் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள். கடின உழைப்பு என்பது அவர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 50 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும்்் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.

3). தொழில் போட்டியாளர்களாக சீனர்கள்

சீனர்கள் வியாபாரத்தில் பயங்கரமான போட்டியாளர்களாக் இருப்பார்கள். இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும். தொழிலில் போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடுவதே கிடையாது். இதற்கு எத்தனையோ உதாரணங்களை உள்ளன, ஆனால் ந்ம யாவருக்கும் பரிச்சயமான சூழலிலிருந்து ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடா வருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40 - 50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், சீன வியாபாரிகள்தான். இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை. இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் இங்கு தங்களின் விலையை சட்டென்று குறைத்து விடுவார்கள். இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல்் சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றிவிட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி விடுவார்்்.

4). சீனர்களும் எண்களும், வர்ணங்களும்

சீனர்கள் அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புபவர்களும் கூட. சீனர்களுக்கு '8' மிகவும் அதிர்ஸ்டமான எண். அதேபோல் '4' துரதிர்ஷ்டமான எண். இதற்கு காரணம் சீன மொழியில் எட்டு என்ற சொல் தனம், பொருள் எனும் ஒலியை ஒட்டியதாக இருக்கும். அதே சமயம் நான்கு என்ற சொல் மரணம் என்ற ஒலியை ஒட்டியதாக இருக்கும். இதனால்தான் தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான மாநகரங்களில் பல மாடி கட்டிடங்களில் நான்காவது மாடியை '3A' என்று குறிப்பிடுவார்கள், அதே போல வர்ணங்களில் சீனர்களுக்கு பரவலாக பிடித்த வர்ணம் சிவப்பு. அவர்கள் கலாச்சாரத்தில் சிவப்பு வர்ணம் சந்தோஷம், புகழ், செல்வம் ஆகியவற்றை குறிக்கும்.

5). புது வருட பிறப்பின் போது சீனர்கள் கடைபிடிக்கும் சில சம்பிரதாயங்கள்

சீனர்கள் புது வருட பிறப்பின் முதல் நாள் இரவிலிருந்து மூன்று நாட்களுக்கு வீட்டை பெருக்க மாட்டார்கள். காரணம் வீடுக்கு வந்த அதிர்ஷ்டத்தை நாமே கூட்டி வெளியே தள்ளினால்் போல் ஆகிவிடும் என்று அவர்களுக்கு ஒரு ஐதீகம்.
சீன புத்தாண்டின் முதல் நாள் இரவு சீனர்கள் ஒரு பெரிய குடும்ப விருந்தை சமைத்து, மூதாதையர்களை வணங்கி, அவர்களுக்கு உணவு படைத்து, குடும்பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து யாவரும் உண்பர். அடுத்த 15 நாட்களுக்கு அனுசரிக்க படும் புத்தாண்டு வைபத்திலேயே, குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த விருந்தில் கலந்து கொள்வதுதான் மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப் படுகிறது். பொருள் ஈட்டுவதற்கென்றும், படிப்பிற்கென்றும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் யார் எந்த திசைக்கு போய் வசித்து வந்தாலும சரி், இந்த விருந்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன புத்தாண்டின் போது அவரகள்் குடும்பத்தோடு நிச்சயமாக தகப்பன் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இது இன்றளவும் சீனர்கள் போற்றி கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களில் ஒன்று. நடைமுறையில் இந்த குறிப்பிட்ட சம்பிரதாயத்தின் ் தாக்கம் என்ன வென்றால், புது வருட பிறப்பின் போது வீட்டிற்கு போகும்போது கடந்த வருடம் எப்படி இருந்தது என்று எல்லோரும் கேட்பார்களே, என்ற உத்வேகத்திலேயே சீனர்கள் வருடம் முழுவதும் தம்மை மேம்படுத்தி கொள்ள இன்னும் கூடுதளாக உழைப்பார்கள்.

6). வேலை செய்யும் இடங்களில் சீனர்களை அனுகுவதற்கான டிப்ஸ்

அமெரிக்க, கனேடிய ், ஐரோப்பிய சீனர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆதலால் நான் இங்கு கூறுவது அந்த சூழ்நிலைகளுக்கு பொருந்தாமல் இருக்கலாம். இந்த பாரா மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்தியாவிலிருந்து போய் சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்களுக்காக எழுத பட்டது.

- இயல்பிலேயே சீனர்கள் சிறிது arrogantஆன பேர்வழிகள் தான். மற்றவர்களின் உணர்ச்சிகளை பற்றி அவர்கள் அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள். இது ரூட்டீனான ஒரு உண்மை. இதை பற்றி அவர்களோடு வேலை செய்யும் நாம் கவலை பட்டோ, மனம் வெதும்பியோ ஆக போவது ஒன்றுமில்லை. ஆதலால் சீனர்கள் மெஜாரட்டியாக உள்ள நிர்வனங்களில் வேலை செய்பவர்கள் சிறிது எதார்த்தமாக எதையும் எடுத்து கொள்வது நல்லது.

- சீனர்களோடு வேலை செய்யும் இந்தியர்கள் தங்களின் உடை உடுத்தலில் அக்கறை காட்டுவது மிக மிக முக்கியம். காரணம், மண்டையின் உள்ளே உள்ள மூளை நன்றாக வேலை செய்வது தான் முக்கியம்் என்று நினைப்பது நமது கலாச்சாரம். ஆனால் மூளை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மனிதனின் வெளி தோற்றமும் இருக்க வேண்டும் என்று நினைப்பது சீனர்களின் கலாச்சார கூறு. அதனால், ஒரு சராசரி சீனர் நம்மை விட துணிமணிக்கென்று இரண்டு, மூன்று மடங்கு அதிக பணம் செலவு செய்வார். அவரோடு ஒத்த லெவலில் நாம் பழக வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஒன்று உண்டு என்றால்், அதற்கான முதல் கட்ட தயார் நிலை, நமது உடுப்பை தயார் செய்வது கொள்வது தான்.

- வேலையில் உங்கள் திறமையை பலரும் உணரும் வகையில் காண்பியுங்கள். தேவை பட்டால் internal memo மூலம் நீங்கள் செய்து முடித்த வேலையின் கூறுகளை பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இப்படி நீங்கள் உங்களின் வேலை சம்மந்த பட்ட விஷயங்களை ரெக்கார்டு பண்ணுகிறீர்கள் என்று தெரிந்தாலே, உங்கள் மேல் அனாவசியமான extra work load ஐ தினிக்க பொதுவாக மற்றவர்கள் பயப்படுவார்கள். நான் சீனர்களோடு வேலை செய்த காலத்தில் இந்த அனுகுமுறை எனக்கு மிகவும் உதவியாக இருந்ததது.

- சீனர்களை விட நமக்கு அபாரமாக வாய்த்த வித்தை 'சொல் வித்தை'. நமக்கு உள்ள அளவுக்கு சீனர்களுக்கு மொழி வளம் ஏற்படுவது கிடையாது. இந்த உண்மை சீனர்களுக்கும் மிக நன்றாக தெரியும். ஆதலால் உங்களுக்கு ஆங்கில மொழி வளம் நன்றாக இருந்தால், அவர்களிடம் பழகும்போது அந்த அட்வாண்டேஜை உங்களுக்கு சாதகமாக பல வகையில் பயன் படுத்தி கொள்ளலாம்.


- முற்றும் -

இந்த பதிவோடு நண்பர் சுந்தரராஜனின் வலைபதிவில் என் கட்டுரைகளை பதிப்பதை நிறுத்தி கொள்ள விரும்புகிறேன். இதற்கு மேலும் நண்பரை நான் சிரம படுத்துவது முறையாக பட்வில்லை. இதற்கு பின்னர் நான் எதுவும் எழுத விழைந்தால் எனக்கென்று ஒரு தனி வலைபதிவை துவக்கி, அதில் என் கட்டுரைகளை பதிப்பிடுகிறேன். நன்றி. வணக்கம்.

Monday, January 02, 2006

பொங்கும் பூம்புனல்


சிலோன் ரேடியோ மேட்டர் இல்லை..லோக்கல் நியூஸ் இது.

சென்னையிலும் சிதம்பரத்திலும் டீவி வழியாக பார்த்த வெள்ளம் சாக்ரமண்டோவுக்கும் வரும் என்று நினைத்தேனா..?? கடந்த ஒரு வார காலமாக கனமழை, சுற்றிசுழன்று அடிக்கும் காற்று என்று எங்கள் ஏரியா அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் வயிற்றில் பயமூட்டை கட்டிக் கொண்டு மணல் மூட்டை மேல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். மழையினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல நெடுஞ்சாலைகள் மண்சரிவுகளால் மூடப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவசர அவசமாக தண்ணீரை வழித்து கொட்டிவிட்டு, மேக்கப் போட்டுக் கொண்டு மீடியாவுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட லெவிகள் எல்லாம் காற்றுக்கும் மழைக்கும் முன்னால் எப்படி தள்ளாடுகின்றன என்று நீர்மானகைத் துறை அதிகாரிகள் கவலை படிந்த முகத்துடன் புள்ளிவிவரம் சொல்கிறார்கள். எங்கள் அலுவலகத்துக்கு முன்னே உள்ள ராட்சத மரம் ஒன்று வேரோடு பெயர்ந்து, சாலையில் போய்க் கொண்டிருந்த கார் மேல் விழுந்திருக்கிறது. நல்ல வேளை காரோட்டிக்கு காயம் இல்லை. எல்லாருக்கும் கட்ரீனா ஞாபகம் வந்து தொலைக்க, ஓஃபிஸ் ஓஃப் எமர்ஜென்சி மேனெஜ்மெண்டிலிருந்து கொடுத்திருக்கும் வெள்ள முன்னேற்பாடுகளை பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். சாக்ரமண்டோவுக்குள்ளே பின்னி ஓடும் அமெரிக்கன் ஆறும், சாக்ரமண்டோ ஆறும் கரைபுரண்டால், நாங்கள் எல்லாம் தரை புரள வேண்டியதுதான். அதிலும் எங்கள் வீட்டீற்கு முப்பது அடி சமீபமாக சாகரமண்டோ ஆற்றிம் வெள்ள நீர் வடிகால் வாய்க்கால் ஓடுகிறது.

வெளியே இவ்வளவு களேபரம் என்றால் என் இல்லத்தில் அதைவிட அதிகம். பள்ளிக்கு செல்லும் பாலகர்கள் எல்லாம் இந்த சீஸனில் அறிவோடு கொஞ்சம் வைரஸையும் விட்டுக்கு எடுத்து வருவார்கள் - மற்ற குழந்தைகளிடம் இருந்து. சூர்யா போன வாரம் எடுத்து வந்த ஃப்ளூ வைரஸ் முதலில் அவனைத் தாக்கி, அவனிலிருந்து வீட்டம்மாவுக்கும் பரவி, இரண்டு பேரும் தும்மலிலும் ஜூரத்திலும் இருமலிலும் கடந்த ஒரு வாரமாக எசப்பாட்டு பாடிக்கொண்டிருக்க, நான் கிலியோடு தனி ரூமுக்கு ஒதுங்கி விட்டேன். காரணம்- டாக்டர் கொடுத்த எச்சரிக்கை - அடுத்த இலக்கு நான் என்று. வீட்டு நிலவரத்தால் வெள்ள நிலவரம் தெரியாது, இன்றுதான் விலாவரியாக படித்து பயந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்.

சில நேரம் நியூஸ் பார்க்காமல் இருப்பதே நல்லதுதான்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...