Sunday, November 22, 2009

எமக்குத் தொழில்....




கொள்கையேதுமில்லை
பிறந்தபோழ்து என்னிடத்தே
வயிற்றுப்பாட்டுக்கும் கதகதப்புக்கும்
அண்டிக் கொள்வதன்றி.
வளர வளர
சுற்றமும் நட்பும்
கண்டதும் கல்வியும்
இளமையும் செலுத்திய திசை
குறுகுறு பயணங்கள் ...
கம்யூனிஸ்ட் என்றார்கள்
மதவாதி என்றார்கள்
இடது சாரியோ வலது சாரியோவென
இரகசியம் பேசினார்கள்.
பொருள்முதல்வாதி என்றுகூட
பொருமினார்கள் வறியர்கள்
இனவெறியன் என்றார்கள்
ஒரு சாரார்.
ஆணவமும் அகந்தையுமே
ஆன்மீக போர்வையில் கொலுவிருக்கிறது
என்றோரும் உண்டு.
குழந்தையாகவே இருக்கிறேன்
இன்னமும் நான்
மாற்றங்கள் ஏதும் இல்லை
வருடங்கள் கழிந்ததைத் தவிர
எழுத்தை மதிக்கின்ற
இடத்திலா இருக்கிறேன்
கொள்கைக்கு தாலி கட்டிக் கொள்ள..??


Wednesday, November 18, 2009

கண்ணதாசன் எழுத்து....


தன்னுடைய ஆளுமையை தனக்குப் பின்னும் கூட பிறர் வழியே இணையமெங்கும் விசிறியடிக்கும் சுஜாதாத்தாவின் அணுக்கமான விசிறியின் கிறுக்கலிருந்து வேட்டைக்காரன் பாட்டு லிங்கைப் பிடித்தேன். போனதேன்னவோ “ ”ஏன் உச்சி மண்டைய்ல சுர்ருங்குது..” என்கிற பாட்டைக் கேட்கத்தான்.


என்னவோ என் நேரம் எல்லா பாட்டையும் டவுன்லோடினேன். அதிலிருந்து காரில் இதே பாட்டுத்தான் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. ”கரிகாலன் குழல் போல” என்று ஆரம்பித்து காதில் கரையும் அந்தப் பாடல் பிடித்திருப்பதற்கு காரணம்...


பாட்டில் உள்ள அருந்தமிழா..?

கொஞ்சலும் சிருங்காரமும் நிரம்பிய பெண்குரலா..?

இசையா..?

தாளக்கட்டா..?

படத்தின் நாயகி அனுஷ்காவின் சன் டீவி பேட்டியை நான் பார்த்ததாலா..?

பாடலில் நிரம்பி வழியும் ஏகப்பட்ட ரொமான்ஸா..?


ஏதோ ஒன்று ... சரியாகப் படமாக்கப்பட்டால், எல்லா டீவியிலும் டாப் டென்னில் தமிழ் கூறும் நல்லுலகம் குறைந்தது நான்கு மாதம் பார்க்கப் போகிறது. காதலர்கள் ரகசியமாக ப்ளூ டூத்திக் கொள்ளப் போகிறார்கள். கல்லூரி மேடைகளிலும் கன்னிகளும், தமிழ்ச்சங்க விழாக்களில் ஆன்டிகளும் இன்னம் ஒரு வருடத்துக்கு தங்கு தங்கென்று குதிக்கப் போகிறார்கள். என்னைப் போன்ற மாமாக்கள் கார்களில் கேட்டுக் கொண்டே கன்னம் சிவந்து அபத்தமாக சிரித்துக் கொண்டே அடுத்தவன் ட்ரங்கில் புதிதாக வாங்கிய மஸ்டாங்கை செருகப்போகிறார்கள். :-) :-)


வாழ்க.. வாழ்க. !!

சங்கிலி


சந்திக்கின்ற சந்தர்ப்பங்களை
தொலைபேசி நினைவூட்டுகிறாய்.
உடல்நலம் விசாரித்தால்
விசாரிக்காது போனவனை
அலுத்துக் கொள்கிறாய்
சாதாரணப் பேச்சைக்கூட
மர்மமான பார்வையால்
அழகாக்குகிறாய்.
உன் தோழிகளிடம் பேசினால்
உனக்கு அவர்களைப் பிடிப்பதில்லை.
என்னிடம் பேசுகையில்
காரணமில்லாமல் சிடுசிடுக்கும்
உன்னவனின் பதட்டம்
புரிய புன்னகைக்கிறேன்.
சந்திக்கும்போதெல்லாம் உன்
அணைப்பில் இறுகும்
என் பிள்ளையைப் பார்க்க
கொஞ்சம் பொறாமையாயும்
கூச்சமாயும் இருக்கிறது.
அன்பு செலுத்துவதைக்கூட
ரகசியப்படுத்திவிட்டன
பிணைத்துக்கொண்ட உறவுச்சங்கிலிகள்...
.....முன்பே பார்த்திருக்கலாம்



 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...