Wednesday, March 30, 2005

தயாராகும் அமெரிக்கா

"Any job which can be reduced to a set of rules is at risk"

BPO வில் இருந்து KPO - Knowledge process outsourcing நோக்கி
போய்க்கொண்டிருக்கிறது என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, வெளிநாட்டுக்குப் போகும் வேலைகளை பற்றி இனிமேல் கவலைப்பட்டு ஆவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது.



ஹைடெக் வேலைகள் இப்படியே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தால் அமெரிக்காவில் இனி Service Industry மட்டும்தான் பிழைக்கும் என்கிற பயமுறுத்தல்களுக்கு நடுவே இனி வரும் காலத்தில் பிழைக்க வேண்டுமானால், அமெரிக்கர்கள் எங்கே கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறார் டேனியல் பிங்க்.

இது என்னுடைய சகோதரர்களுக்கு எட்டட்டும் என்று இங்கே தந்திருக்கிறேன்.
அமெரிக்கர்களுக்கு நம்முடைய மேலாண்மை நிபுணர்களைப் பற்றியும், இடம் பாத்து தட்டுபவர்களைப் பற்றியும் சரியாகத் தெரியாதோ என்ற எண்ணம் இந்தக் கட்டுரையை படிக்கும்போது வந்து கொண்டே இருந்தது. என்னதான் ப்ரொக்ராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்தாலும், பர்ஸனல் டச் இல்லாவிட்டால் எந்த வேலையிலும் சோபிக்க முடியாது. வலது மூளையைப் பயன்படுத்தும் Conceptual Age க்கு ரெடியாக சொல்லும் ஆசிரியர் கட்டுரையை இப்படி முடிக்கிறார்.

Do something Foreigners cant do cheaper, something computers cant do Faster.

கொடுமையடா சாமி..என்று முதல வாசிப்புக்கு தோன்றினாலும், அவர்களுடைய நியாயமான பரிதவிப்பு புரிகிறது. அடுத்த தாவலுக்கு தயாராகும் அவர்கள் லாவகம் புரிகிறது. கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

பி.கு: Firefox உலாவியின் கண்டறிஞரைப் பற்றியும், உலாவி பற்றியும், Bill gates ..watch your Back என்ற ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கிறது. அதுவும் சுவாரசியமாக இருக்கிறது.

Friday, March 25, 2005

46, பாணாதுறை தெற்கு, கும்பகோணம்

இங்கேதான் ஒரு காலத்தில் நெக்ஸஸ் சர்வீஸ் செண்டர் இயங்கிக் கொண்டிருந்தது. முக்கிய கிளை 15-20 ஊழியர்களோடு திருச்சியில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தஞ்சாவூர் / மாயூரம்/ திருவாருர்/ கும்பகோணம் பகுதி வாடிக்கையாளர்களுக்கு உடனடி கவனிப்பு வேண்டுமென்பதால் ஒரு சேல்ஸ் ஆசாமியையும், சர்வீஸ் பிரகஸ்பதியையும் பிடித்து, கும்பகோனத்தில் ஒரு வீட்டை பிடித்து, கம்யூட்டர்/ போன்/டெலக்ஸ் மெஷினோடு கொஞ்சம் ஸ்பேர்ஸ் கொடுத்து, உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

சர்வீஸுக்கு நான். சேல்ஸுக்கு வெங்கடேஷ் ராமானுஜம். பேரென்னவோ ரெண்டுபேருக்கும் சுத்த ஐயங்கார் பேரென்றாலும், பண்ணுவதெல்லாம் அதற்கு சம்பந்தமில்லாத வேலைகள். காலை மாயவரத்திலிருந்து சரவணாவோ, தாஜுதீனோ, செந்திலோ பிடித்து நான் வர, ஆர்வி தஞ்சாவூரிலிருந்து வருவான்.
வந்தவுடனேயே Menthol plus/ Gold kings உடன் கொஞ்சம் கதை அடித்து காப்பி செலுத்தி விட்டு, திருச்சிக்கு போன் பண்ணி மேனேஜருக்கு மஸ்கா போட்டு விட்டு, ஒரு பதினோரு மணிக்கு எழுத்து (கொசு விரட்டியாகவும்) உபயோகித்துக் கொண்டிருந்த என் வெஸ்பாவில் உலா போவோம். சோழனோ, சிட்டி யூனியன் பேங்கோ, டெலிகாம் டிபார்ட்மெண்டோ கொஞ்ச நேரம் போய் ஜல்லி அடித்து விட்டு, மாமி மெஸ்ஸில் போய் அவர்கள் பெண்ணை சைட் அடித்துக் கொண்டே நன்றாக கொட்டிக் கொண்டு, மறுபடியும் ஒரு மெந்த்தால்/கிங்க்ஸ்ஸுக்கு பிறகு ஆபிசுக்கு வந்து பேசிக் கொண்டே கொஞ்சம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டு ( ஆமாம்...மதியம்தான்..) , 2:30 போல எழுந்து, மடத்துத் தெரு வெங்கட்ரமனாவில் கடப்பா/அசோகாவுடன் ஒரு ரவாதோசை/ காப்பி சாப்பிட்டுவிட்டு வேட்டை மறுபடியும் தொடரும். வேலை என்னவோ இப்படி ஜாலியாக போனாலும், வியாபாரம் ஏகத்துக்கும் செழித்துக் கொண்டிருந்தது. துடியான சர்வீஸ் இஞ்சினியர் காரணமோ ..என்னவோ..?? :-). அருமையான காலங்கள் அவை. மேற்பார்வை பண்ண யாரும் இல்லாமல், பெருமைக்கும் எங்கள் சிறுமைக்கும் நாங்களே காரனமாக இருந்ததால் எனக்கும் ஆர்விக்கும் மிக அருமையான நட்பு உருவாகியது. வாழ்வில் முப்பது வயதுக்கு முன்பு ஏற்படும் நட்புகளை போல பிற்காலத்தில் ஏதும் அவ்வளவு புரிந்துணர்வுடனும், அருமையாகவும் தோன்றுவதே இல்லை என்று நெகிழ்சியோடு நினைக்கிற வகையில் ஆர்வியுடனும், இன்னும் பல நெக்ஸஸ் நண்பர்களுடனும் நட்பு தொடர்கிறது.

பல காரனங்களால், நெக்ஸஸில் இருந்து மூலைக்கொன்றாக 1999ல் பலரும் பறந்தோம். அல்கோபாரிலும், சவூதியிலும், துபாயிலும், சென்னையிலும், நியூஜெற்ஸியிலும், சன்னிவேலிலும், சாக்ரமண்டோவிலும் தினாரும், ரியாலும், டாலரும், லட்சங்களுமாக எல்லோரும் இருக்க, ஆர்வி மட்டும் தஞ்சாவூரிலேயே இருக்கிறான். காரணம்,நாங்கள் எல்லோரும் வெளிக்கிளம்பிய 1999-2000ல் ஆர்வியின் தகப்பனார் தவறிப் போனார். அதனால் மூத்தபிள்ளையாகிய அவன் மட்டும் குடும்பத்துடன் தங்க வேண்டிய நிர்ப்பந்தம். உடல்நிலை சரியில்லாத சகோதரி மற்றும் அம்மா, இவற்றுடன் அவன் குடும்பம், இரண்டு பெண் மகவுகள் என்று சூழ்நிலை அவனை அங்கே கட்டி வைக்க, தளராமல் HCL/ WIPRO/ ACER கம்ப்யூட்டர்களுக்கு டீலர்ஷிப் எடுத்து, கம்பெனி நடத்தி வந்தான் ஐந்து வருடமாய். குறைந்து கொண்டே வரும் profit margin, கட்டுப்படுத்த முடியாத establishment expenses என்று பூதாகாரமாக வளர்ந்து போக, நேற்று இரவு பேசிக் கொண்டிருக்கும் போது பிஸினஸை மூடிவிட்டு வேலை பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த மாதிரி ஒரு பருவத்தில் வாழ்க்கையில் ஆறு வருடங்களை இப்படி இழந்து விட்டானே என்று ஒரே வருத்தம்.

ஆர்விக்கு வெளிநாட்டில் வேலை செய்ய ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. நான் சிங்கப்பூரில் இருந்தவன் என்றாலும் வெளிவந்து ஆறு வருடம் ஆனதால் நடப்பு நிலவரம் தெரியவில்லை. எப்படி வேலை வாங்குவது என ஐடியா இல்லை. யாராவது ஸ்பான்சர் செய்வார்களா, ஏஜெண்டுக்கு பணம் கொடுத்தால் ஆகுமா என்ற எந்த விவரமும் இல்லை. சிங்கை நண்பரகள், மற்றும் அமீரக நண்பர்கள்/மலேசிய/UK நண்பர்கள் யாராவது ஏதேனும் வழிகள் சொன்னால் சந்தோஷப்படுவேன். ஆர்விக்கு பன்னிரண்டு வருஷம் மார்க்கெட்டிங் எக்ஸ்பீரியன்ஸ், சரளமான ஆங்கிலப் பேச்சு, பேசுபவர்களை நம்ப வைக்கும் திறமையோடு நல்ல (கணிணி) டெக்னிக்கல் அறிவும் உண்டு. இந்த உதவியை செய்தீர்கள் என்றால் என் சொச்ச காலத்துக்கு நிம்மதியாக தூங்குவேன். ஏதாவது பணம் கொடுத்து செய்ய வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை.

உங்கள் தகவல்/உதவிக்கு எனது முன்கூட்டிய நன்றிகள்.

நன்றி ரோசாவசந்த்

நண்பர் ரோசா வசந்துக்கு என் கருத்துக்களை முந்தைய பதிவில் எழுதுவதற்கு உன் நான் என்னையெ ஒரு முறை கேட்டுக் கொண்டேன் - இதை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று. ஏனெனில் கோபத்தில் நானும் அவ்வப்போது நிதானம் இழப்பவன்தான். ஆனால் வெளிப்பார்வைக்கு இனிப்பும், நாகரீகமும் உள்ள கனவான்களாக இருந்து கொண்டு உள்ளே புரையோடிப் போயிருக்கும் எண்ணங்களுக்கு சொந்தக்காரனல்ல. ரோசாவையும் கிட்டத்தட்ட அப்படியோரு மனிதராக நினைப்பதால், "நாம் நமக்கு சொல்லிக் கொள்வதையே கொஞ்சம் உரத்து சொல்லலாம்" என்ற எண்ணத்துடனேயே தயக்கத்தை விலக்கிவிட்டு எழுதினேன்.

எழுதியதை அவர் சரியாகவே புரிந்து கொண்டு பதிலிறுத்தார். இதற்கு மேலும் அந்த பதிவை பதிப்பித்த நிலையிலேயே வைத்திருந்து அது இங்கே ஒரு அறிவுரைத் தூணாக நிற்பதை விரும்பவில்லை. அதுவே அவர் புரிந்துணர்விற்கும், நாகரீகத்துக்கும் நான் கொடுக்கும் மரியாதை. மேலும் மேலும் நண்பர்கள் அந்தப் பதிவிற்கு பின்னூட்டமிட்டு, அந்த திரியை அணையாமல் இருக்க வைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில், அது என் பெட்டகத்தில் Draft ஆக வைக்கப்படுகிறது.

நண்பர் ரோசா தன் கேள்விகளையும், விமரிசனங்களையும் ஆக்கபூர்வமாக இப்போது போலவே தொடரவேண்டும் என மறுபடியும் வேண்டுகிறேன்.

வணக்கம்.

Thursday, March 17, 2005

மறுபடியும்

எதிர்பாராமல் கிடைத்த இந்த நீண்ட இடைவெளி நிறைய படிக்க நேரம் தந்தது. ஆரம்பித்தபோது இத்தனை நீண்டதாக இருக்கும் என்பது கூட தெரியவில்லை. தவிரவும் எழுதும் வலைப்பதிவர்களின் அலசலும், வீச்சும், விஷயகனமும் கொஞ்சம் கலவரப்படுத்தியதும் நிசம். ஏதாவது எழுத உட்கார்ந்தால் மண்டைக்குள் ஆட்டோ சத்தம் கேட்க ஆரம்பிக்க, எழுத ஆரம்பித்த பாதி பதிவுகள் Draft ஆகவே இருக்கின்றன. ஆனால் பின்னூட்ட சேவை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

மேலும் நான் பணிபுரியும் இடத்திலேயே என் வீட்டம்மாவும் வேலைக்கு சேர்ந்து விட்டதால், கொஞ்சம் நேர நெருக்கடி வேறு. காலை ஆறு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள், மதியம் இரண்டரை மணிக்கு வருகிறார்கள். எனவே காலை எழுந்து, என் கடன்களை முடித்து, விழித்தவுடன் தென்படும் அம்மா இல்லா வெறுமையை ஈடுகட்ட கொஞ்ச நேரம் சூர்யாவுடன் தாயுமானவனாய் சுற்றி, அந்த விக்கிரத்துக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம்/ நைவேத்தியம் இட்டு டே கேர் என்று சொல்லப்படும் நவீன நரகத்தில் இட்டு விட்டு அலுவலகம் செல்லும்போது தினமும் வலிக்கிறது.

அந்த வலிக்கு சொறிந்து கொள்ள வலைச்சுவரில் கிறுக்கி இருக்கலாம். செய்தவன் தான். ஆனால், இப்போது என்னமோ ஒரு அந்நியத்தன்மை வந்து விட்டது. மனசு விட்டு எழுத முடிவதில்லை. எழுதுகின்ற நம்மிடையே நேயம் குறைந்து, வார்த்தைகளை பிய்த்துப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறொமோ என்று ஒரு எண்ணம்.

இன்று வெங்கட்டின் பதிவில் எழுதியதும், நீச்சல் தெரிந்த தண்ணீர் மறந்த ஒருவன் வெகு நாள் கழித்து குளத்தில் விழுந்தவுடன் அனிச்சையாய் கை கால் அசைத்து மிதப்பது மாதிரி மேற்கண்டதை எழுதி விட்டேன். ரெகுலராக எழுதா விட்டாலும், தோணுவதை எல்லாம் எந்த உறுத்தலும் இல்லாமல் மறுபடி எழுதப் போகிறேன்.

ஒவ்வொண்ணா எழுதறேன்.

எங்க ஆரம்பிக்கலாம்....ம்.....நாராயணணின் சிலுக்கு...??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...