Friday, May 28, 2004

ரசித்துப் படித்தது
===============


http://www.thinnai.com/pl0527043.html

தோழர் நாயனார் தொடங்கி, எது கேட்டாலும் நெய்யுடன் தரும் தற்கால அழுக்கு MTR வரை...

ம்..ஹூம்..

என்ஜாய் சுந்தரா.....
====================

மீட்டிங் என்றாலே அயல்நாடுகளில் பணிபுரியும் - குறிப்பாக - கணிப்பொறிக் கூலிகளுக்கு தெரியும் என நினைக்கிறேன். 15-20 பேர் ஒரு ஹாலில் கூடி, காஃபியும், ஜோக்குமாக வேண்டாத கதைகள் பேசி, பேச வந்த விஷயத்தையே மறந்து கூத்தடித்து விட்டு , கடைசியில் யாராவது கன்சல்டன்ட் தலையில் எல்லா வேலைகளையும் கட்டிவிட்டு , அடுத்த வெகேஷனை ப்ளான் பண்ணப்போவது வழக்கம்.அதிலும் அமெரிக்கர்கள் அதிகம் உள்ள குழு என்றால் கேட்கவே வேண்டாம். ஏதாவது இந்திய/சீன பலிகடா மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு தலையாட்டிக் கொண்டே இருக்கும். வீக் எண்டோ, இரவு நேரமோ அந்த ஆட்டுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. தன்னுடைய தேவை குழுவுக்கு அதிகமாக இருப்பதே அந்த ஆட்டின் பெருமையாகிப் போய், இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்யும்.

கடந்த 20 தினங்களாக இந்த ஆட்டின்..ஸாரி...என் வேலையும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. குழுவில் பணிபுரியும் இன்னொரு நண்பர், தன்னுடைய வருடாந்திர லீவுக்கு இந்தியா செல்கிறார். அவர் இல்லை என்றால் குழு கருணாநிதி இல்லாத திமுக மாதிரி. மிச்சம் இருக்கும் அமெரிக்கத் தாத்தாவுக்கு மெயில் போடத் தெரியும். மீட்டிங் போகத் தெரியும், ஜோக்கடிக்கத் தெரியும். பணிபுரியும் Calpers , அதிகம் பணம் புழங்கும் கலிஃபோர்னியா அரசுத் துறைகளில் ஒன்று. அதனால் சப்போர்ட் தேவைகள் அதிகம். தினமும் 650 பயனாளர்கள் உபயோகிக்கும் என்டர்ப்ரைஸ் அப்ளிகேஷன். அதனால் மூக்கன் ஜூன் மாதம் முழுக்க படாதபாடு படப் போகிறான். கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

If Rape is inevitable, Relax and Enjoy...!!

Thursday, May 27, 2004

வசூல் ராஜா ...??
=================

"அவ்வையார் குதிரை ஏறணும்னு நினைக்கலை. அவங்க கவிதை ஏறினாங்க. அதுனாலதான் அவங்கள நாம இன்னம் பேசறோம்" என்று மதன்/கண்ணண் பேட்டியில் கமல் சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் அடிமனசில் அவருக்கு வசூல் சக்கரவர்த்தி ஆசைதான் அலைமோதுகிறது போல.

p14


முன்னா பாய் M.B.B.S , வசூல் ராஜா M. B.B.S ஆகிறது தமிழில். பெயர் வைக்க ஆசைப்பட்டவர்கள் ஏன் இம்மாதிரி பெயரிட்டார்கள் என்று தெரியவில்லை. தெலுங்கு பட டைட்டில் கெட்டது போங்கள்..!!! கமல் என்கிற மாபெரும் கலைஞனே ஜீவிக்கறதுக்கு, தான் வசூல் மன்னன் என்கிற கட்டாயத்தில் இருந்தாகணுமா..??என்ன குறை அவருக்கு...?? பணத்துக்கு பணம், படத்துக்கு படம், அப்பப்ப புதிய ஸ்நேகிதிகள், டைட்டில் கார்டில் பேர் மட்டும் போட்டுகிட்டு பேசாம வந்துபோக டைரக்டர் பொம்மைகள், அவர் பரிசோதனை முயற்சிகளுக்கு பணம் செலவு பண்ண தாணு மாதிரி தயாரிப்பாளர்கள்....

இத்தனை வயசுக்கு அவருக்கு ஆக்ஷன் ஹீரோ, வசூல் மன்னன் ஆசையா..??

சகலகலாவல்லவனில் குட்டை பெஞ்சு சுற்றியதிலும் வேறு பல படங்களில் ஏற்றுகொள்ள முயற்சி செய்த ஆக்ஷன் ரோல் எல்லாம் பொருந்தாமல் போனது அவருக்குத் தெரியுமில்லையா..?? என்னைக் கேட்டால், நடிகராக அவர் இருந்து சாதித்ததைவிட இயக்குநராக அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இப்படி ஒரு ஆசாமி, அன்பே சிவத்தையும்,குணாவையும், மகாநதியையும், தேவர் மகனையும், நாயகனையும் குடுக்கறதை விட்டுட்டு, எதுக்காக இந்த மாதிரி வசூல் முயற்சிகளில் இறங்குகிறார்.வசூல சக்கரவர்த்திகளுக்கு இருக்கக்கூடிய அரசியல் அபிலாஷைகளும் ஸாருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன்...ஏன்..ஏன்..???

இதற்கெல்லாம் ஆசைப்படவேண்டாம் கமலஹாஸா...ஒழுங்காய் உன் வேலையைப் பார்..!!!!!!!


Monday, May 24, 2004

வேண்டல்

==========

ஆஸ்திக்காக பிறக்க வரம்
சிரமப்படுத்தாமல் விழும்
தொப்புள் கொடி
செயற்கைப் பால் குடிக்காத
சிசுப்பருவம்
நண்பர்கள் பொறாமைப்படும்
செல்வீகம்
பசிக்க பசிக்க
சோறிடும் அம்மா
கேட்காமலேயே பணம்
தர ஒரு 'டாடி'
தயாநிதி மாறனுக்கு கிடைத்ததைப்
போல ஒரு தாத்தா
ஹோம் ஒர்க் தராத
அழகு டீச்சர்
டொனேஷன் தராமல்
இஞ்சினியரிங் சீட்
எக்ஸ்பீரியன்ஸ் கேட்காத
முதல் வேலை
பிரச்சினை தராத மேனேஜன்
மூணு வருசத்தில்
நியூஜெர்ஸி டிக்கெட்
ஒரு வருடத்தில் க்ரீன் கார்ட்
விபசாரி சொல்லும் முன்னே
ஒரு கல்யாணம்
அதிகம் பேசாத
அழகு மனைவி
பேசிக்கொண்டே இருக்கும்
பிரிய பிள்ளை

பட்டியல் இ·தனில்
பாதி கிடைத்தால்
நானொரு சராசரி
முழுசும் கிடைத்தால்
நானொரு
திராட்சைப்பழ
சோம்பேறி


பி.கு : உதைக்காதீங்க...ச்சும்மா..ஜாலிக்கு எழுதினது.

Sunday, May 23, 2004

சூரியனுக்கே டார்ச் லைட்
========================

இந்த வாரம் என்னுடைய இன்னுமிரண்டு நண்பர்கள் வலைப்பூவுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவனை லேட்டாகப் பார்த்த தவறு என்னுடையது.

வந்தியத்தேவன் :

ரொமாண்டிக்கான பிம்பத்தை உருவாக்கும் இந்தப் பெயருக்கு உரிய ஆசாமிக்கு கல்யாணம் ஆகி, குந்தவையுடன் குடித்தனம் செய்கிறான் அரிசோனாவில். வேலைப் பார்ப்பது "பெரிய நீலத்திற்கு". திருக்குமர மகேந்திரன், முத்தமிழ் மகரந்தன் ஆகியவர்களை பெற்றெடுத்த அனிச்சமலர், இந்த வந்தியத்தேவனின் குந்தவை என்றால் இவனுடைய தமிழ் (வா)நாக்கு பற்றி கொஞ்சம் விளங்கும் என்று நம்புகிறேன். போதாதவர்கள் , இவன் இயற்பெயர் திருஞானசம்பந்தம் என்பதறிக.
கல்லூரியிலேயே கவிதை எழுதியவன். இவன் எங்கள் கல்லூரி பத்திரிக்கை சங்கமத்தில் எழுதிய "தேர்தல்" கவிதை அன்றிரவு என் தூக்கம் தொலைத்தது. என்னைப் போலவே உணர்ச்சிவசப்படும் ஆசாமி. "வெடித்தவுடன் (ப)(ம)றந்து போகும் வெண்பஞ்சுக்காய்" என்று அவனே சொல்கிறபடி. "என் மன வானில்' ராஜ்குமாரும் இவனும் ஒரு ஈட்டுப் பிள்ளைகள். இவனை இங்கே படிக்கலாம்.

அநாமிகா :

பெயர் சொல்லும் சேதி இவனுக்கு முற்றும் பொருந்தும். "ச்சுப்பா ருஸ்தம்" "மிண்டா பூச்சா ' போன்ற வேற்றுமொழி சொற்களுக்கு அர்த்தம் தெரிந்தவர்களுக்கு இவன் குணம் விளங்கும். ஆர்ப்பாட்டமில்லாத ஆள். இவன் கோபம் வெளியே தெரிந்து ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். ( போதும் என்று நினைத்துக் கொண்டேன் !!!! ). மைக்ரோசா·ப்ட் ஆசாமி, சியாட்டில் நகரில் வேலை பார்க்கிறான். செல்வங்கள் சுந்தர், மீனா ஆகியோருடன் அமுத வாழ்க்கை வாழ்கிறான். கருணையும் கனிவும் உள்ள அறிவு ஜீவி. இவனுடனான சமீபகால தொலைபேசி உரையாடல்களில் சற்றே அவசரம் தொனிக்கும் இவன் குரல் தந்த சேதியில், இவனுக்கு வலைப்பதிய நேரமிருக்காது என்று வலைப்பதிவுக்கு அழைக்காமல் வாளாவிருந்து விட்டேன். பழம் தானே கனிந்து விட்டது. இதைச் சுவைக்க
இங்கே செல்லலாம்.


இந்தியா ...இந்து தேசமா..??
===========================

இந்தியாவின் பதினாலாவது லோக் சபை பற்றிய செய்தி சி.என்.என் இல்
இப்படி வெளயிடப்படுகிறது.

"இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவில், ஜனத்தொகையில் 2 சதவீதமே உள்ள சீக்கிய சமூக பிரதம மந்திரிக்கு ஒர் முஸ்லிம் ஜனாதிபதி பதவிப்
பிரமாணம் செய்து வைத்தார் "

நல்லவேளை..சோனியா செய்தது நல்ல வேலை.

Friday, May 21, 2004

சாவித்திரிகளுக்கு அஞ்சலி
========================

இன்றைய தினகரன், தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மனைவி சாவித்திரி அம்மாள் தஞ்சை மாவட்டம் மேக்கிரிமங்கலத்தில் இயற்கை எய்தினார் என்று செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த அம்மாள் உயிருடன் இருந்திருந்தால் அந்த செய்தியை பார்த்து விட்டு வறட்டு சிரிப்பொன்றை வெளியிட்டு இருப்பார். கல்யாணம் ஆகி பாதி நூற்றாண்டுக்குப் பிறகு, கோ.சி.மணியின் மனைவியாக அவர் வெளியுலகுக்கு அறியப்பட்ட தருணம் இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

காரணம், கோ.சி.மணியின் மனைவி அவர் மட்டும் இல்லை.

ko.si.mani


நான் மாயவரத்துக்காரன். மேக்கிரிமங்கலம் எங்களூரிலிருந்து 15 கி.மி தான். என் தமக்கையின் மாமனார் வீடு அங்கேதான் இருக்கிறது. அடிக்கடி அங்கே போய் வந்தமையால், மணியின் பிரபல்யமும், அவருடைய அரசியல்/பர்சனல் வாழ்க்கையும் ஓரளவிற்கு தெரியும். அந்த அம்மாள் உயிருடன் இருந்தவரை மணிக்கும், அவருக்கும் தொடர்பே இல்லை. மேக்கிரிமங்கலத்தில் சிறிய கிராமத்து வீட்டில் மூத்த மனைவி மாடுகளை பார்த்துக் கொண்டு இருக்க, மணி ஆடுதுறை பங்களாவில், தனக்கு பிடித்த ஒரு முன்னாள் நாடக நடிகையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்.வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.தன் வாழ்க்கை இப்படிப் போய் விட்ட நிலையில், சாவித்திரி அம்மாள் சற்றே மனம் குழம்பி, இவ்வளவு காலமும் சித்தப் பிரமை பிடித்து சுற்றிக் கொண்டிருந்தார். இந்தியா டுடே ஒரே ஒருமுறை அவரை(யும்) பேட்டி கண்டு எழுதியது.மணியின் அரசியல் பலமும், செல்வமும சாவித்திரி அம்மாளுக்கு பிறந்த பிள்ளைகளை கூட தாய்க்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் அடக்கி விட்டது.

இத்தனை வருடம் கழித்து அவர் உடல்தான் இறந்திருக்கிறது.

தமிழக அரசியலில் இம் மாதிரியான கதைகள் புதிதில்லை. ஆணாதிக்க சமூகத்தின் மிச்சங்களாக அரசியலிலும், பெருந்தனக்காரர்கள் வீடுகளுகளிலும், பண்ணையார் வீடுகளிலும் இந்த பல(கா)தார வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிவாழ்க்கைக்கு, கொள்கை கோஷங்களுக்கு, தாய்மார்களுக்கு பேராதரவு தரும் கனவான்களும், பெரிய மனிதர்களும் இம் மாதிரி, பல் போன வயதில், பல் முளைக்கும் குழந்தைகளை பெற்று 'பெரு'வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், அரசியல்வாதிகள்....கொடி ஏற்றி கட்சிக் கிளை திறக்கும் ஊரிலெல்லாம் மனைவிமார்கள். அதிலும் இரண்டாவது, மூன்றாவது மனைவியாக வரும் பெண்கள் எல்லாம் அந்த நிலைக்கு எப்படி ஒத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. சாவித்திரி அம்மாளுக்காவது, சாகும்போது பத்திரிக்கையில் பேராவது வரும். அந்த நாடக நடிகை சாகும்போது யாருக்குத் தெரியப் போகிறது. அது ஒரு மனிதப் பிறவியின் சாவாக இல்லாமல், முன்னாள் அமைச்சரினால் வெறும் துவாரமாகப் பார்க்கப்பட்ட ஒரு பெண்ணின் சாவாக அல்லவா இருக்கும்...!!!

இந்தியாடுடே வில் ராஜாத்தி அம்மாளின் பேட்டி ஒரு முறை வந்திருந்தது. மனைவி என்ற சரியான அந்தஸ்து இல்லாமல், கருணாநிதியின் தொடர்பில் இருந்ததில், சமூகத்தில் தானும் கனிமொழியும் சந்தித்த சவால்கள், அவமானங்கள் ஆகியவற்றை, சற்றே தயக்கத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். மனம் கசிந்து போனது.அந்த வலிதான் கனிமொழியை கவிதை எழுத வைத்திருக்கிறது என்பேன். கோர்ட்டில் எப்போதோ ஒருமுறை கேட்டபோது, " கனிமொழி என் மகள்..ராஜாத்தி அவள் அன்னை' என்று கலைஞர் சொன்னதாய் அவர் அபிமானிகள் புளகாங்கிதப்பட்டுப் போவார்கள். தமிழை வைத்து செய்யும் பொறுக்கித்த்னம், மோசடி, மோடி வித்தை அது என்பேன் நான். 'இருவர்' படத்தில் கூட இந்த இருதார பிரச்சினை தமிழ்ச்செல்வனின் மூத்த மனைவியை எப்படி வாட்டுகிறது என்று தமிழ்செல்வன் கார் இரண்டாம் வீடு போகும்போது காட்டி இருப்பார்கள்.

இந்த விஷயத்தில் இன்னமும் ஆழமாகப் போகலாம். ஆனால் இது போதும். உங்களுக்குப் புரியும்.

இந்த மாதிரி பலதாரங்களை உருவாக்கி, அவர்கள் எல்லோரையும் கேவலப்படுத்துவதற்கு, அந்த கால ஸ்டைலில் அத்தர் தெளித்து, ஜாதிக்காய் மென்று , கையில் மல்லிப்பூ சுற்றிக் கொண்டு , மயில்கண் வேட்டியும், மஸ்லின் ஜில்பாவுமாக அவ்வப்போது சதிர் பார்த்து விட்டு வரலாம்.

குழப்பம் கொஞ்சமாவது குறையும்.


Wednesday, May 19, 2004

அலமாரியும் புத்தகங்களும்
=========================

வரவேற்பரையிலேயே
புத்த்க அலமாரியும் காலணி ரேக்குகளும்
நகரச்சந்தடி

அலமாரியில் இல்லாப் புத்தகம்
தந்ததொரு படிப்பினை
இரவலுக்கல்ல புத்த்கம்

தீண்டப்படாமல்
வருத்தப்பட்டு நிற்கும்
கண்காட்சியில் வாங்கிய
புத்தகங்களில் சில

சமையல் புத்தகம்
அலமாரியில் சேருமா?
மனைவிக்கும் எனக்கும் சண்டை

அலமாரியில் வைக்க முடிவதில்லை
வாசிக்க வேண்டிய மனிதர்களில்
சில மனிதர்களை



தி.ஒ.க சொக்கன் உணர்ச்சி வசப்பட்டு பாராட்டிய கவிதை. கூடவே நானும் அனுபவித்தது. பெண்மொழியை கொச்சையாக்கி ஏகடியம் பேசுகின்ற வெ.சா வையும் , உருப்படியான ஒருவரை பிரதமராக்கிய சோனியாவின் நோக்கங்களை சந்தேகித்தும், ஜெயலலிதாவின் ஈகோ பார்க்காத விட்டுக் கொடுத்தலை கேலி பேசியும் வருவோரை அலமாரியிலா வைக்க முடியும்...??

கவிதையின் நிசம் உங்களை சுடவில்லை..??

கவிஞர் இரா.சுந்தரேஸ்வரன். இளைஞர். சென்னைவாசி. ஒரு காலத்தில் CMS Computers ல் என் நண்பன் (இன்னொரு) சுந்தரேஸனோடு பணி புரிந்தார். மார்க்கெட்டிங் ஆசாமிகளிடம் இந்த மாதிரி கவிதை வருவது இனிய ஆச்சரியங்களில் ஒன்று. அவரை onlysun@yahoo.com ல் பிடிக்கலாம்.





Tuesday, May 18, 2004

வெளிப்பாடு

===========

முட்டையை உடைத்துக்கொண்டு
வெளியேறுகிறது
பறவைக்குஞ்சு

அத்துடன்
அதன் எல்லாத் தளைகளும்'
காத்திருத்தல்களும்
முடிவுக்கு வருகின்றன

நானும்
என் மேலோட்டை உடைக்க
நீண்டகாலமாய்
போராடி வருகிறேன்

இயற்கைக்கு புறம்பாக
அது
உருக்கினால் அமைந்திருக்கிறது

கடைசியில்
சில தட்டுமுட்டுச் சாமான்களையும்
நியாயங்களையும்
ஏற்பாடு செய்துகொண்டு
அங்கேயே தங்கிவிடுகிறேன்

எங்கேனும்
ஒன்றிரண்டு அக்கினிக்குஞ்சுகள்
வெளியேறி வரலாம்.




எல்லாருடைய ஏக்கத்தையும் யதார்த்தமாய் பதிவு செய்கிறது இக் கவிதை - மிக எளிமையாக.கடைசி வரிகளில் தேம்பும் இயலாமையோடு. சமீபத்தில் மரத்தடியில் பதில் சொன்ன இவர், சமஸ்கிருதப் பெயர் வைத்த இசுலாமியக் கவிஞராக குசும்பர்களால் பே(ஏ)சப்படுகிறார்.
மனமாரப் பாராட்டுகிறேன்
=======================

ஜெ வின் அதிரடி அறிவிப்புகள் மூலம் இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் அபார வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராகி இருக்கிறார் - அதுவும் போட்டி இடாமலேயே.

042355ma

ஜெ யின் சிறப்பு குணங்களாக எத்தனையோ சொல்லப்பட்டிருந்தாலும், இது நாள்வரை அதையெல்லாம் தன் அகம்பாவத்தாலும், ஆணவத்தாலும், திமிர்க்குணத்தாலும் கெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். எத்தனை தண்டனைகள் வழங்கப்பட்டாலும், நீதிமன்றத்தால் குட்டப்பட்டாலும், ப்த்திரிக்கைகளால் விமர்சிக்கப்படாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கை என்பதை தவறாய் புரிந்து கொண்டு, அந்த நூலிழை வித்தியாசத்தை கடந்து, தலைக்கனத்தோடு சுற்றி வந்திருக்கிறார். முதன்முறையாக மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி, தன்னை திருத்திக்கொள்ள, யாருமே எதிர்பார்க்காத அளவில் எனக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது திமுக தலைமைக்கு, கருணாநிதியின் காலத்திற்கு பிறகு அவர் இடத்தை பிடிக்க நினைக்கும் வைகோ மற்றும் ஸ்டாலினுக்கு, பாமக என்ற ஜாதீயக் கட்சியை வைத்து தோள் தட்டும் ராமதாஸுக்கு கிலியை கிளப்பியிருக்கும் ....சந்தேகமே இல்லை.

மக்களுக்காக ஆட்சி என்ற வாக்கியத்தை தாரக மந்திரமாக கொண்டு அவர் செயல்படுவாரேயானால், அவர் துணிவுக்கும், அறிவுக்கும், வேகத்துக்கும், அவருக்கு அரசியலில் இன்னமும் சொச்சம் இருக்கும் காலத்துக்கும் அவர் மிகப்பெரிய சக்தியாகி, தமிழகத்தை, தன்னை, தான் சார்ந்துள்ள அதிமுகவை, வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த முடிவை, " அடுத்த தேர்தல் வரை " என்று வர்ணித்த பாராவைப் போல நான் யோசிக்க விரும்பவில்லை. கொஞ்சம் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அவருக்கு இந்த யோசனையை கொடுத்த புண்ணியவான் - பச்சை ஸஃபாரி ட்ரஸ்ஸோடு, பைப் பிடித்துக் கொண்டு, மொட்டைத் தலையோடு, பிஷப் வாலர்ஸ் அவென்யூவில் நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டே - நன்றாய் இருக்கட்டும்.

Monday, May 17, 2004

சதவீதக் கணக்கு
===============

தோற்றுப் போனபின் கருணாநிதி ஒவ்வொரு தரமும் சதவீதக் கணக்கு தருவது வழக்கம். அதையே இம்முறை அதிமுகவும் செய்திருக்கிறது. அதிக சதவிகித ஓட்டு பெற்றது அதிமுக என்று காட்டும் அவர்கள், காங்கிரஸ் பெற்ற 14 சதம் ஓட்டுக்களும் அவர்களுடைய தனித்த செல்வாக்கினால் பெற்றது என்று சொல்வார்களானால், அது நகைப்புக்கு உரியதே.

சப்பைக்கட்டு கட்டுவதில் கழகங்கள் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.


நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தனித்தனியாக எவ்வளவு சதவீதம் ஒட்டு பெற்று உள்ளது என்கிற புள்ளிவிவரம்:

அ.தி.மு.க - 29.77%

தி.மு.க - 24.6%

காங்கிரஸ் - 14.4%

பா.ம.க - 6.71%

ம.தி.மு.க - 5.85%

பா.ஜ.க - 5.07%

இ.கம் - 2.87%

வ.கம். - 2.97%

சுயேச்சை

மற்றவர்கள் - 7.76%


தூங்குபவர்களை மட்டும்தான் எழுப்ப முடியும். அப்படி நடிப்பவர்களின் போர்வையை உருவி, முகத்தில் தண்ணீர் வாளியை கவிழ்த்தால்தான் எழுவார்கள்.


மாறாதவை
==========

முந்தைய பதிவில் நான் உபயோகப்படுத்தியது முன்னர் எடுத்த புகைப்படம் தான். தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடுக்கபட்டதல்ல. ஆயினும், உபயோகப்படுத்த வைத்தது ஜெ யின் அறிக்கை. மாநில பிரச்சினைகளை முன் வைத்து சந்தித்த தேர்தல் இது என்று தமிழகமே அறியும். ஆயினும் தோற்ற பிறகு, "இதற்கும் மாநில பிரச்சினைகளுக்கும் சம்பந்தமல்ல" என்று கூசாமல் அறிக்கை விட்டிருக்கிறார். தவறுகளைத் திருத்திக்கொள்ளும் எண்ணம் அவருக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதை காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.
அப்படி இருக்கையில், முந்தைய ஃபோட்டோ மட்டுமல்ல, இந்த ஃபோட்டோவும், அவருக்கு என்றும் பொருந்தும் என்றே இதையும் பதிப்பிக்கிறேன்.


kevalam

Friday, May 14, 2004

பராக் ... பராக்
==============


FP


வர்றது யாருய்யா.... சோனியாவா...?? தேர்தல் ரிசல்ட் எஃபெக்ட்டா..??

இல்லப்பா..... இது நம்ம "அம்ம்ம்ம்...மா.."

நாப்பதுல இல்ல..நானூறுல தோத்தாலும் "இது" மட்டும் கொறையாது.


நாள்தோறும்

============

பெருக்கத்துவங்கி மின்விசிறி நிறுத்த
பகல்தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க
காபி தந்து காய்கறி நறுக்கி காலையில் கட்டடுக்க
தோசைக்கரைத்து முகம் கழுவி வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்கவைத்து
சமையல் செய்து பரிமாறி தரை துடைத்து
பாத்திரம் ஒழித்துப் போட்டு
பசங்களை படுக்கையில் விட்டு
மேயப் பாக்கி இல்லாத பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து, இருட்டில்
மாடியேறி உலர்ந்த துணியும், விரிப்பில்
வடகமும் மொத்தமாக சுருட்டிவந்து
வாசல் கதவடைத்து, கூடம் விளக்கனைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள் , பெய் என்றாள்.


(நன்றி : தினம் ஒரு கவிதை இணையக்குழு )


கவிதையை எழுதினவர் யார் என்று சொல்லத் தேவை இல்லை. கவிஞர், படிப்பவர்களை கடைசி வரிக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்று விட்டிருக்கிறார்.... சரியான அறை.

சோகம் - இவர் இப்போது கவிதை எழுதுவது இல்லையாம்.

Thursday, May 13, 2004

மறுபடியும் நான்
===============

வெத்தலை போட்ட வாய் நம நம ன்னு இருக்கு...கொஞ்சம் ஏதாவது மென்னா தேவலை என்று எங்களூர் திண்ணைகளில் அடிக்கடி ஒரு வார்த்தையை கேட்கலாம்.

அது போல...

சரக்கு மாஸ்டராக இல்லை...சப்ளையராக கொஞ்ச நாள் அவதாரம் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.

என்ன செய்வது...சமைக்க நேரம் இல்லையே.......( திரிசூலம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

Tuesday, May 04, 2004

ரசனைக்குறைவு
============

பிரபலங்களை பார்த்தது பற்றி நான் எழுதிய பதிவு , பல எதிர்வினைகளை உண்டாக்கி, திண்ணை இணைய இதழ் வரை எதிரொலித்திருக்கிறது. என் பதிவில் தான் ரசித்த கமெண்ட்டை , காசி தன் பதிவில் எழுதியதும், அதை அங்கேயே எழுதப்பட்டதாய் நினைத்து ( லிங்க் கொடுக்க மறந்து) , மதுவந்தி என்பவர் திண்ணையில் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய கட்டுரையை நேற்று திண்ணையில் தேடித் தேடி இளைத்தேன். நண்பர்கள் கண்டால் எனக்குச் சொல்லவும்.

மேற்படி விஷயத்தில் காசியின் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாளாவிருந்ததற்கு காரணம், எழுதுவது மட்டும் தான் என் வேலை என்று நினைத்ததால். நறுமணம் கமழும் என் மூக்கைப் போலவே அவர்களுக்கும் உண்டென்பதால். ஆனால் நேற்று காசியின் சமீபத்திய பதிவில், திண்ணைக்கு எழுதியதாய் அவர் சொன்ன அவர் விளக்கத்தைப் படித்த பிறகு, நான் என்ன நினைத்து அதை எழுதினேன் என்று சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

முதலாவது கழுவும் கமெண்ட் பற்றி சொன்னது நான் தான். சொன்னது 'பெரிசு' என்றாலும், அதை ஞாபகம் வைத்து என் பதிவில் போடுகிறேன் என்றால் என்னை அந்த அளவு பாதித்திருக்கிறது என்று அர்த்தம். எனவே அது என் கமெண்ட என்றுதான் கொள்ள வேண்டும். அதை 'ரஸனைக் குறைவு " என்று யாராவது சொன்னால் எனக்கு ஆட்சேபம் இல்லை. அப்படிப் பார்த்தால் சித்தர்களின் மெய்ஞானப் புலம்பல்களே ரசனைக் குறைவுதான்.

காதலில் கண்மண் தெரியாமல் , படிப்பை மறந்து அலையும் ஒருவனிடம் போய் காதலின் மேன்மையையும், மனிதனின் மிருக குணத்தை தெய்வீகமாக்கி அது பண்படுத்தும் மாயாஜாலத்தையும் , அழகியல் உணர்ச்சியோடு யாரும் பேச மாட்டார்கள். அப்படி பேசினால அது முட்டாள்தனம். அவனை அந்த உணர்விலிருந்து விடுவிக்க வேண்டுமானால் "நட்ட ... தொட்ட .... " என்றுதான் பேச முடியும். பேச வேண்டும். அழகியல் வேறு . யதார்த்தம் வேறு. இரண்டும் பின்னிப் பிணைந்தும், ஒன்றை ஒன்று மிகாமலும் போவது தான் வாழ்க்கை.

பிரபலங்களை,முக்கியமாக நடிகர்களை, தான் தந்த அவன் பிரபல்யத்துக்காக ஆராதித்து அவன் பின்னால் அலைந்து, நெக்குருகி, புல்லரித்து, புளகித்து அவன் பின்னால் அலையும் ரசிக மகா குஞ்சுகளின் மண்டையில் போட விழைவதே, அந்தப் பதிவின், முக்கியமாக, அந்த வாசகத்தின் நோக்கம்.

நோக்கம் நிறைவேறி விட்டதாகத் தான் தோன்றுகிறது.

Monday, May 03, 2004

அறிவிப்பு
=======

இறையருளால் எனக்கு கிட்டியிருக்கும் என் புதிய இல்லம் சம்பந்தமான பணிகளால், எனக்கு முன்புபோல உங்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்யும் 'பாக்கியம்' கிட்டாது என எண்ணுகின்றேன்.

எனினும் இயலும்போது எழுதுவேன்.

வேலைகளை முடித்து விட்டு விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...