Tuesday, September 28, 2004

பொறுக்கியது.....

K6-all

தமிழகத் தேர்தல் - என்ன பிரியாணியோ..??


ayu01

ச்...ச்ச்...மாட்டிக்கிச்சு.


p5


ம்...நடங்க அண்ணாச்சி . பூஜைக்கு நேரமாச்சி


Monday, September 27, 2004

அருண் கொலட்கர்

வாழ்க்கை

வண்ணத்துப்பூச்சி

வயசாளி

ஆல்ஃபபெட்

ஒரு புத்தகம்

காலா கோடா ( kaalaa Ghodaa) - புத்தக விழா

ஒரு செவ்வி

ரசிகரின் அறிவிப்பு - இரா.முருகன்

தமிழ் மொழிபெயர்ப்பு - I - இரா.முருகன்

தமிழ் மொழிபெயர்ப்பு - II - இரா.முருகன் ( ஆங்கில மூலம்)

செய்தி

கவிஞரின் மறைவுக்கு என் அஞ்சலி....!!!


கமலஹாஸனும் ஹரி அண்ணாவும்...

பிரகாஷ் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையினால், "கல்கி எல்லாம் என்னா நைனா..பிசாத்து. இதுக்கெல்லாம் போய் விரதம் எடுக்கணுமா" என்று நான் எழுதப்போக, மாயவரம் மாஃபியா " ஆஹா..அடுத்தது மூக்கன் பெரும்பத்திரிக்கைகளை தாக்குகிறான் " என்று சிலிர்த்தெழுந்து, மெய் சிலிர்க்க மயிர்பொடிக்க சங்கநாதம் செய்து விட்டார்கள்.

ராம்கியின் பின்னூட்டத்தில் இருந்த என் ஒரு வரிதான் நிசம்.

khvsha

போகட்டும். விகடனில் கற்றது பெற்றதும் பகுதியில் கூட சரியாக பத்தி பிரிப்பதில்லை என்று பார்த்தீர்களா. புத்தகம் முழுக்க மலிந்து விட்ட அச்சுப் பிழைகள் வேறு. தருமத்திற்கு தரப்படுவது என்பதால் இணைய விகடனை அவர்கள் கண்டுகொள்வதில்லையா..?? படிக்கவே எரிச்சலாக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று "ஐ லவ் யூ விகடன் " என்று ஒரு தொடர். ஹரி அண்ணாவுக்கு பிரஷர் ஏற்றக்கூடிய ஒரு கட்டுரையை நம்ம கமலஹாஸன்
எழுதி இருக்கிறார். அதிலிருந்து...

ராவணன் காதலில் நியாயம் இல்லாமல் போனாலும் நேர்மை இருப்பதைப் பாருங்கள் என்பேன்.

பலவந்தம் செய்ய விரும்பாத ராவணனின் காதல் கடிதமே அசோகவனம். ராமன் சோகமாக வனத்தில் தேடி அலைந்தது போலவே, அவள் மனம் மாறமாட்டாளா என்ற ஏக்கத்தில் ராவணனின் மனமெல்லாம் அசோக வன வாசம் செய்தது. இந்த நியாயமில்லாத... ஆனால், நேர்மையான காதலுக்காக ராமனின் படையைப் போரில் எதிர்கொள்ளவும், போரில் மாளவும் துணிந்தான் ராவணன். சாகும்தறுவாயில்கூட காதலோடுதான் செத்திருப்பான் ராவணன். ராமனுக்குக் கடைசி வரையில் அப்படியரு வெறித்தனமான காதல் இருந்ததாகத் தகவல் இல்லை. அயோத்தித் துணிகளைச் சலவை செய்யும் தொழிலாளி, ராமனின் மனதைக் கறைப்படுத்தியதாகத்தான் நமக்கு வந்தடைந்த கதைகள் சொல்கின்றன.


ம்...ம்.. இன்ட்ரஸ்டிங்....

மீரா - அண்ணா - பெனகல்

கொஞ்ச நாள் முன்பு சந்தோஷ் வலைப்பூவில் காந்தி - அண்ணா - துக்ளக் என்ற ஒரு பதிவு வந்தது. காந்தியாரை கடவுளாகப் பார்க்கும் மனிதர்களிடையே கொஞ்சம் வித்தியாசப்பட்டு ஷ்யாம் பெனகல் எடுத்த படத்தைப் பற்றி நான் இங்கே எழுதி இருந்தேன். இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கும் இந்த செய்தி காந்தியடிகளுக்கும் மீரா பென் என்ற பெண்மணிக்கும் இருந்த ஸ்நேகிதம் பற்றி சுதீர் காக்கர் என்பவர் எழுதி இருக்கும் புத்தகத்திலிருந்து எடுத்து இட்டு இருக்கிறது.

சும்மா - ஒரு தகவலுக்கு.

Friday, September 24, 2004

தனியே..தன்னந்தனியே...

மாயவரம் பக்கத்தில் உள்ள கோமல் என்ற என் சொந்த கிராமத்துக்கு போகும்போதெல்லாம் அங்குள்ள வீடுகளில் மாமனார், மாமியார், பிள்ளைகள், மருமகள்கள் மற்றும் குழந்தைகளோடு வாழும் குடும்பங்களைப் பார்த்தால் ஆச்சரியமாகவும், ஆசையாகவும் இருக்கும். என் இளமைப் பருவத்திலேயே, மாயவரம் மாதிரியான ஊர்களிலேயே, அம்மாதிரியான பெருங்குடும்ப வாழ்க்கைகள் அருகி வந்த காலம். இத்தனை கூட்டத்தில் இருக்கும் கோப தாபங்களையும், பிரச்சினகளையும் சகித்துக் கொண்டும், ச்ந்தோஷமாக வாழ்ந்தது மட்டுமல்ல, மெரினாபீச் போல கூடம், சமையலறை என இருந்த வீடுகளிலிருந்தே இனிய "இல்லறமும்" நடத்தி இருக்கிறார்கள். மிகப் பெரிய காரியம் இது. கொஞ்சம் அசந்தாலும், மானம் போய் விடக்கூடிய சூழலில், பருவயதில் உள்ள குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, யாருக்கும் எந்த பிரச்சினையும் வராமல் கணவன் மனைவியாக வாழ்வதென்பது சவால்தான்.

அவள் விகடனில் என் டைரி என்ற பக்கத்தில் ஒரு நகர்ப்புற வாசகி எழுதி இருக்கிறார்.

நாங்கள் குழந்தையாக நினைக்கும் எங்கள் மகள் இப்போது பத்தாவது படிக்கிறாள். எப்போதும் அவள், நான், என் கணவர் மூவரும் ஒரே படுக்கையில்தான் படுப்போம். அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகுதான் எப்போதாவது நானும் என்னவரும் நெருக்கமாக இருப்போம். அன்றும் அப்படித் தான்... ஆனால், அவள் தூங்கிவிட்டாள் என்று நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது. இடையில் விழித்துப் பார்த்திருக்கிறாள். அதனால் வந்ததுதான் அந்த வெறுப்பு. மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் தொடர்கிறது. வீட்டில் நிம்மதியே இல்லை. எங்கள் மகள் பழையபடி எங்களுக்குக் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? ஜடமாக உலவிக்கொண்டிருக்கும் எனக்கு நல்ல வழி சொல்லுங்கள் தோழியரே...’’


தானும் தன் கணவனும் நெருக்கமாக இருக்கும்போது, பார்த்துவிட்ட தங்கள் பதின்ம வயது மகள், தன் கூட பேசவே பேசாமல் முரண்டு பிடிப்பதாக புலம்பி இருக்கிறார். மிக அவஸ்தையான அனுபவம் இது. குழ்ந்தைகளுக்கு வெளியுலகில் இருந்து கிடைக்கும் செய்திக் கடலின் நடுவே இது மாதிரியான விஷயமும் சரியாக வந்து சேர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் தவறாக வந்திருந்தாலோ, அல்லது அடிப்படை அறிவே இல்லாதிருந்தாலோ, தன் தாயும் தந்தையும் "இப்படி" ஏன் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று நினைக்கவே வாய்ப்பிருக்கிறது. அரைகுறையாக தெரிந்தாலோ, இன்னமும் மோசம். பிஞ்சு மனசில் அந்தக் காட்சி பதிந்து, மாறாத வடுவை ஏற்படுத்தி விடும்.

aval

( மாடல் : ஸ்ரீதேவி விஜயகுமார் ..ஹி..ஹி..)

இந்தியாவில் குழந்தைகள் தன் தந்தை தாயுடன் தூங்குவதுதான், மத்யமர் குடும்பங்களில் இன்றும் காணப்படுகிறது. தனி ரூம், தனி பெட், பக்கத்தில் கரடி பொம்மை, போஸ்டர் சுவர்கள் எல்லாம் சினிமாவில் மட்டும் காணக்கிடைக்கும் காட்சிகள். ஆனால் அமெரிக்காவில் குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களிலேயே தனியாக போட்டு விடுகிறார்கள். பக்கத்தில் "சைல்ட் மானிட்டர்" பொம்மைகள் போன்ற சமாசாரங்களினை வைத்து விட்டு, அப்பா அம்மா மாஸ்டர் பெட்ரூமில்தான் தூங்குகிறார்கள். சிலவீடுகளில் இதற்காகவே ஆயாக்கள் வேறு.

" இவர்களுக்கு குழந்தையை விட தங்கள் வாழ்க்கைதான் முக்கியம். அவர்களைப் பார்த்துக் கொள்வதை விட்டு வேறு என்ன வேலை இவர்களுக்கு...??? சின்ன வயதில் இவர்களே தன் குழந்தைகளை தனி ரூமில் தள்ளுகிறார்கள். பருவ வயதில், குழந்தைகள் தங்கள் ரூமில் நுழைந்து தனியே இருக்க விரும்பினால் சந்தேகப்படுகிறார்கள். இப்படி ஒட்டுறவில்லாமல் இருப்பதால்தான் வயதானதும், அமெரிக்கர்கள் எல்லாரும் தங்கள் கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்துக்கு விரட்டப்படுகிறார்கள்" போன்றவைகளைக் கூறும் இந்தியர்கள், குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை தனியே விட்டு, வளர்க்க கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று தோன்றுகிறது. குழ்ந்தைகளை தனியே விட யோசிப்பவர்கள், மேற்கண்ட தாயாரைப் போலத்தான் தானும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் - கவனம் இல்லாவிட்டால்.


Wednesday, September 22, 2004

விரதம்..?? !!!

இனிய நண்பர் ஐகாரஸ், நேற்றுடன் தன் விரதத்தை முடித்து விட்டதாக மறுபடியும் வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி இது என்றாலும், விரதம் எடுத்த காரணம் என்ன என்று படித்தபோதுதான் ஆச்சரியமாக இருந்தது.

கல்கியிலோ, விகடனிலோ அல்லது அச்சு ஊடகங்களிலோ, தன் படைப்பை பிரசுரித்தல் என்பது அவ்வளவு பெரிய காரியமா..?? அதுவும் இன்று அச்சு ஊடகங்கள் இருக்கும் தரத்தில் அது என்ன அவ்வளவு சிரமமான காரியமா..?? பிரகாஷுக்கு கைவந்திருக்கும் எழுத்து லாவகத்திற்கும், நகைச்சுவைக்கும், அவருடைய வாசிப்பு அனுபவத்தினையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது அவருடைய அச்சு உலகத்தின் மீதான பிரமிப்பு (?!!!) கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

நான் படிக்கும் இணையப்பக்கங்களில் விகடனுக்குத்தான் முதலிடம். ஆனால் விகடனில் கூட எல்லா பகுதிகளும் படிக்கும் படியாகவா இருக்கின்றன. சிறுகதைகள் படிக்கும் வழக்கம் சுத்தமாக போய் விட்டது. கழுகு, கற்றதும் பெற்றதும், மியாவ், ஹாய் மதன், கவிதைப் பக்கம், தலையங்கம், ரொமான்ஸ் ரகசியங்கள் என்று ரொம்ப செலக்டிவ் ஆகத்தான் படிக்கிறேன் இப்போது. என்னைப் பொறுத்தவரை வலையேறி இருக்கும் அச்சுப்பத்திரிக்கைகளை விட, இணைய உலகம் எத்தனையோ மேல். ஓரளவிற்கு, எந்தவித காம்ப்ரமைஸ்களும் பண்ணிக்கொள்ளாமல் எழுத்துக்கள் யோக்கியமாக இருக்கிறது இங்கே. எது எதற்கு, எந்த வலைப்பூ படிப்பேன் என்று நான் பட்டியலிட தேவையே இல்லாத அளவிற்கு, கிட்டத்தட்ட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்று எல்லார்க்கும் தெரியும். புதிதாக அச்சு உலகிலிருந்து வரும் எழுத்தாளர்களும், இணையத்தில் அருமையாக கட்டுரை எழுதுகிறார்கள். ( அர்த்தமண்டபத்துக்காரை போல சிலர் அலட்டிக்கொண்டாலும்...)

எனக்குத் தெரிந்து, இணைய எழுத்தாளர்கள் திறமை அச்சுப் பத்திரிக்கைகளால் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தானே முன்வந்து வாய்ப்பு கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நண்பர் பொன்.முத்துகுமார் எழுதிய அமெரிக்க வாழ்க்கை கவிதையை விகடன் சிலாகித்து இருந்தது. உஷா மாமி, ஹரன் பிரசன்னா ஆகியோர் படைப்புகள் ஏற்கனவே பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாயவரத்தான் ரமேஷ்குமார் அவ்வபோது விகடன் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுகிறார். நன்றாக எழுதக்கூடிய வேறு சில வலையர்களும் அச்சு ஊடகங்களில் முயன்றால் நிச்சயம் கவனிக்கப்படுவார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

டாபிகலாக எழுதுவதும், எளிமையாக எழுதுவதும், கொஞ்சம் கவர்ச்சி மசாலா( கதைகளில்) சேர்ப்பதும்தான், பெரும்பத்திரிக்கைகளில் எழுத சுருக்கமான வழி. அது இணைய எழுத்தாளர்களுக்கு பிடிக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் - மறுபடியும் வலைப்பதிய வந்தமைக்கு.



Tuesday, September 21, 2004

பன்னீரைப் போற்றுதும்....

19050201

அடியவரை முன்னிறுத்தி ஆண்டவனைக் கண்ட
வடிவழகி ஆண்டாளைப் போல - விடியுமென்று
வென்னீரை காலிலே ஊற்றித் துடித்திருந்த
பன்னீரைப் போற்றுவோம் வா..!!

கள்ள மறிந்திடார் கண்களால் நன்மை செயும்
உள்ளத்தைக் காட்டி உணர்வுகளை மூடியே
வாளின் நுனிமீது வீற்றிருந்த வல்லவர்தம்
தாளினைப் போற்றுவோம் வா.!!

கண்கள் திறந்திருக்க காதுகளில் கெட்குமொலி
அன்னையின் நாமமென ஆசையாய்ச் சொல்லி
மரபுதனை மீறாமல் மாத(ம்) ஐந்து ஆண்ட
துறவியைப் போற்றுவோம் வா..!

இன்னும் பலவாறாய் ஏதேதோ சொல்லிநாம்
பின்னிப் புகழ்ந்தாலும் பற்றாது - எண்ணியதைச்
சொல்லாமல் விட்டாலும் சோர்வினைக் கொள்ளாத
நல்லோரை நாடுவோம் வா.


பதவியை பாதுகாத்து, அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, பவ்யமாய வெளிவந்த பன்னீரை தமிழகம் மறந்து விடுமோ என்று கவிஞர் சின்னக்கண்ணன் "என் பாட்டுடைத் தலைவன்" என்ற தலைப்பில் தினம் ஒரு கவிதையில் கவி பாடினார். ரொம்ப வித்தியாசமான கருப்பொருள் என்று தெரிவு செய்து சேமித்து வைத்திருந்தேன். ஜெயலட்சுமி "குண்டு" வெடித்திருக்கும் இச் சூழ்நிலையில் சின்னக்கண்ணன் மறுபடி கவிதை எழுதுவாரோ என்னவோ... என் பங்குக்கு ஒரு நாலு வரி....

பொட்டி கொடுத்தேன் என்று சொல்கிறாயே ஏட்டி..
கட்சிக்குள்ளெ இரண்டாமிடம் பிடிக்க ஏகப்பட்ட போட்டி
அந்தக் கழக ரத்தங்கள் கூடி கொணர்ந்ததிந்த குட்டி
விட்டதய்யா பன்னீரை மாட்டி...

( ஹி.ஹீ.. சிலம்பரசன் அப்பா எங்க ஊருதான்......)

18201311

Monday, September 20, 2004

IKEA

வீடு வாங்கினதின் பக்க விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. அபார்ட்மெண்டுகளில் தங்கி இருந்தவரை ஒரு பிரச்சினையும் இல்லை. மாதா மாதம் சமர்த்தாக வாடகை கொடுத்து விட்டு மல்லாந்து
கிடக்கலாம். வேறு உபத்திரவம் இல்லை. ஆனால் சொந்த வீட்டு பொறுப்புகள் அசர அடிக்கிறது. கொல்லை வாசலுக்கு புல் வெட்டுவது முதல், சுவற்றில் ஆணியடித்து ஏதாகிலும் மாட்டுவது வரை, எல்லாமே தமாஷ்தான். ஆணியும் எங்கு பார்த்தாலும் அடித்து விட முடியாது. மேக்கப் போட்ட கோடம்பாக்கத்து தாரகைகள் போல வெளியிலிருந்து பார்க்க அழகா இருந்தாலும், தப்பான இடத்தில் ஆணி அடித்தால், ப்ளாஸடர் ஆஃப் பாரிஸ் பொத்துக் கொண்டு விடும். ஆமாம் ...அட்டை வீடுதான். கலிஃபோர்னியா மாநிலத்தில் நிலநடுக்க சாத்தியங்கள் அதிகம் உள்ளதால் மரத்திலும், அட்டையிலும், தம்தூண்டு காங்க்ரீட்டிலும் தான் வீடுகள்...!!!

36970_XXXXXXXX_S6

இந்த வீட்டுக்கு, அதுவும் இத்தனாம் பெரிய வீட்டுக்கு சாமான்கள் வாங்கிப் போடா விட்டால், "தனியே" இருக்க பயமாக இருக்கிறது. பேசினால் வீடு முழுக்க எக்கோ அடிக்கிறது. மாசா மாசம் வீட்டுக் கடன் கட்டுவதற்கே பாதி சம்பளம் கயண்டு விடுவதால், ஃபர்னிச்சர் என்பது இப்போதைக்கு லக்ஸூரி என்று முடிவு செய்துவிட்டு, தேவையானது வாங்கிக் கொண்டது போக மிச்சத்துக்கு மோட்டுவளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். $100 shops என செல்ல்மாக அழைக்கப்படும் Lowes, Home depot, Bed Bath and Beyond, costco, sam's club போன்றவை பக்கம் போகவே நடுக்கமாயிருக்கிறது. கட்ந்த மூன்று மாதங்களாக அத்தனை கடையிலும் செம வேட்டை. பலனாய் நான் கண்டது க்ரெடி கார்ட் நடுவே ஒரு ஓட்டை.

சொல்ல வந்தது அதுவல்ல...

IKEA என்கிற ஸ்டோர் நன்றாக இருக்கிறது என்றார் நண்பரொருவர். ஸ்காண்டிநேவியன் செயின் அது. அந்த ஸ்டோர் சாக்ரமண்டோ வரவில்லை என்பதால், 90 மைல் காரோட்டிச் சென்று, கான்கார்ட் முருகனை தரிசித்த பிறகு அங்கே சென்று வந்தேன்.

அட..அட...அடா. அருமையான கடை அது. எத்தனை வகை. எத்தனை வண்ணம். எத்தனை மாடல். எத்தனை கற்பனாசக்தி. எத்தனை மலிவு. கண்டிப்பாக ஒரு நாள் முழுக்க அலைந்தாலும் வெல்லப் பாக்கெட்டுக்குள் விழுந்த சிற்றெறும்பு போல மலைத்துப் போய் நிற்பது திண்ணம். குட்டி குட்டியாக சாமான் வாங்கிப் போட்டுக் கொண்டு, "ஆஹா..அழகழகான பொருட்களை அசத்தல் விலையில் வாங்கியாகி விட்டது" என்று நினைத்துக் கொண்டே வெளியே வந்து பில்லைப் பார்த்தால் கொஞ்சம் மயக்கம் வந்தது.

அதுதான் IKEA வின் வெற்றி.

நண்பர்களும் முயன்று பார்க்கலாம்.

குழலும் யாழும்

நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இங்குள்ள லக்ஷ்மி நாராயண் கோவிலில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன். நண்பரின் மகள் பாடப்போகிறாள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க குழந்தைகளே பாடுகிறார்கள் என்று கீதாபாரதி என்ற அமைப்பு அறிவித்திருந்ததால் இரட்டிப்பு சந்தோஷம் எனக்கு. குழந்தைகள் பேசினாலே மயங்கிப்போய் கேட்டுக் கொண்டிருக்கத் தோன்றும் எனக்கு. அவர்களின் கீச்சுக்குரலை வைத்துக் கொண்டு பாடினால் பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயிலும் விழுந்தது போல் அல்லவோ..?? மேலும் சூர்யாவை இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துப் போனால், புதிதாய் வால் முளைத்த
வானரம் போல் விடாது துள்ளிக்கொண்டிருக்கும் அவன், ஒரு இடத்தில் உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் பழகுவானே என்ற ஆசையும். யாருக்கும் சொல்லாத அப்பாவின் ஆசையும் அதில் இருந்தது. அது அப்புறம்....:-)

குழந்தைகள் குறை வைக்கவில்லை. அவர்கள் பாடுவதே பெரிய விஷயம். அதிலும் அத்தனை பெரிய ஹாலில், வாத்யங்களோடு, ஸ்ருதியை அமைத்துக்கொண்டு, உச்சரிப்பு சிதறாமல், பயப்படாமல், அவ்வப்போது மக்கர் செய்த மைக் முன் அமர்ந்து பாடுவது என்பது உண்மையிலேயே பெரிய காரியம்தான். ஸ்கூலுக்கு போனால் பீட்ஸா/பர்கர்/ ராக்/பாப் என்றும், வீட்டுக்கு வந்தால் பட்டுப்பாவடை/ஜிமிக்கி/கர்நாடக ஹிந்துஸ்தானி என்று இத்தனை சுலபமாக எப்படி மாற்றங்களை சுவீகரித்துக் கொள்கிறார்கள் என்று வியந்தபோது "குழந்தையின் இதயம் வேண்டும்" என்று பராசக்தியிடம் இறைஞ்சிய முண்டாசுக்காரன் நினைவுக்கு வந்தான்.

குழந்தைகள நிகழ்ச்சிக்கு அடுத்து ஒருவர் அருமையாக சிதார் வாசித்தார். பால்குடித்த கன்றுபோல வாத்தியத்தில் மேலும், கீழும் துள்ளி ஓடிய அவர் விரல்களை பார்ப்பதும், அந்த சுநாதத்தில் லயிப்பதும் மிகுந்த பரவசமாக இருந்தது. ஒடிசி ஆடிய இரானியப் பெண், அருமையான பாவங்களுடன் விழிகளால் மொழி பேசிய நபீசா முகம்மது, தபலா வாசித்த ஜில்பா போட்ட அமெரிக்க இளைஞன், மூச்சு விடவே சிரமப்படும் வயதிலும் ஆர்வத்துடன் புல்லாங்குழல் வாசித்த பெரியவர் ஜகந்நாதன், அருமையாக விளக்கு நடனம் ஆடிவிட்டு சடாரென்று ஜீன்சுக்கு மாறிவிட்ட யவதிகள் என்று அது ஒரு இனிய, களேபரக் கலாசாரக் கலவை.

**** புதிதாய் கேம் கார்டர் வாங்கி இருந்த ஒருவர் கண்ணாலேயே பார்க்கவில்லை. மேடையில் கொஞ்சும் குளுவான்களை பாராமல், புது சூடிதார் போட்டு வந்திருந்த தன் மனைவியை ( ?!!!) பல கோணங்களில் எடுத்துக் கொண்டிருந்தார். பாத்ரூமுக்கு போகும்போது அவர் அதை ஆஃப் பண்ணிவிட்டு போக வேண்டுமே என்று நான் லக்ஷ்மி நாராயணனை வேண்டிக்கொண்டிருந்தேன்.

**** வழக்கம்போல வியாபாராதி விஷயங்களும் அவ்வபோது குழந்தைகளின் ஆசிரியர்களால் தெளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. என் முகவரி இது, என் தொலைபேசி எண் இது. கற்றுக் கொள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கை விட்டுப் போனார்கள்

**** தன் குழந்தைகளின் நிகழ்ச்சி முடிந்ததும், பெற்றோர்கள் சடார் சடாரென்று எழுந்து போனது வருத்தமாக இருந்தது

**** பாடிய யுவதிகள் / ஆன்டிகள் ( Aunties) நவநாகரீக உடைகளை விட புடைவைகளிலும், ஆபரணங்களிலும் அழகாக இருந்தார்கள். மூக்கன் கண்ணாடி பவர் போதவில்லை நேற்று. :-)

Friday, September 17, 2004

அம்மா...அம்மம்மா...

Jayalalitha

காலையில காப்பியோட
எழுப்பலையிண்ணா
வெந்நீரு மூஞ்சியில

பல்லு வெளக்க
ப்ரஷ்ஷை காணுமுன்னா
நாலஞ்சு தட்டுவாணி பட்டம்

குளிக்கையில துண்டு
வைக்கலைன்னா
உம்ம கொடிக்கம்பு
எம் முதுகு குத்தும்

வெள்ளைச் சட்டை
கொஞ்சம் பழுப்பானா கூட
உம்ம நாக்கு
பாம்பா கொத்தும்

இட்டிலி "பொசு பொசு" ன்னு
இல்லையின்னா
வட்டில் வந்து
எம் மூஞ்சு பேக்கும்

பகலு முழுக்க வேலை செஞ்சு
ஓஞ்சு கெடந்தா
ராவிக்கு வந்து
மறுபடியும் உசுரை வாங்கும்

அந்த ...

பாழாப்போன பாவி மனுசன்
கட்சி ஆபீசு போனா மட்டும்
கட்சி தலைவி "அம்மா" காலுல
"பொத்து பொத்து" ந்னு
விழுந்து எழும்புதாரு.
கையை, காலை
கட்டிகிட்டு
அசிங்கமா வாலாட்டுதாரு.

பழிவாங்குதுய்யா ஒன்னை
இந்த உலகமுன்னு
நெனைக்க ஏலாம
எம் பாவி மனசு பதறுதய்யா...

-

இப்படிக்கு

ஹேமமாலினி
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மனைவி
சித்தாம்பூர்

Thursday, September 16, 2004

இசை என்னும் மாயமான்

எந்தப் பருவத்தில் பாட்டுப் பித்து பிடித்தது என்று தெரியவில்லை. சந்தேகமில்லாமல், பொங்கலுக்காக அப்பாவுடன் சேர்ந்து அதிகாலையில் எழுந்த திருப்பாவைக் காலங்கள் தான் என்று நினைக்கிறேன். அத்தனையும் பாடி முடித்து கோயிலுக்கு போய் விட்டு நேராக காளியாகுடிக்கு போய் சாப்பிடும் பொங்கல் தான் என் இளமைக்கால சங்கீத ஊக்கி. கணீரென்று இருக்கும் குரலால், பாட்டுப் பாடவும் முடியும் என்று தோன்றிய கணத்திலேயே ஸ்கூல் ப்ரேயர் பாடும் கூட்டத்தில் ஒரு ஆளாகி விட்டேன். "அணுத்தோறும் கரந்தே" என்று ஆரம்பிக்கும் பாடலை +2 முடிக்கும் வரை தினமும் பாடிக் கொண்டிருந்தேன். பிறகு லோக்கல் பாட்டுப் போட்டிகளில் பெண் குரலில் பாடி கொஞ்சம் பரிசுகள் . இது மகரக்கண்டம் வருவதற்கு முன்பு. அந்த நாளிலேயே கர்நாடக இசை கற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசை. அப்பாவிடம் கேட்டதில், "ஹிந்தி க்ளாசுக்கு போடா..அதுதான் உபயோகமா இருக்கும்" என்று சொல்லி விட்டார். அதனாலேயே கர்நாடக இசை மேல் தனி பரிவு வந்து விட்டது. பதினொன்றாவது படிக்கும்போது, என் ஜானகி குரல், தடேலென்று இளையராஜா குரலாகி விட்டது. பின்பு மெல்லக் குழைந்து எஸ்.பி.பி மாதிரி நின்றது.

இஞ்சினியரிங் காலேஜ் போன பின்னும் பாட்டுப் பைத்தியம் போகவில்லை. ஹாஸ்டலில் இரவு நேரங்களில் கச்சேரி வைத்துக் கொண்டு, கல்லூரி கலை விழாக்களில் பாடிக்கொண்டு, இருந்ததில் ஆரம்பித்தது கல்லூரி ம்யூசிக் ட்ரூப்புக்கு கருவிகள் வாங்க அலைவது என்று கொஞ்சம் தீவிரமாகியது. மேடையில் பாடுவது கடலை சாகுபடிக்கும் உபயோகப்பட்டது என்கிற ஒரு கொசுறுப் பயன் கூட .

மூன்றாவது வருடம் படிக்கும்போது, காரைக்குடியில் சுப்ரமணியபுரம் சிவன்கோவிலுக்கு அருகே ஒரு பாட்டு டீச்சர் அகப்பட்டார். அவர் சொன்னதன் பேரில் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து, நீராகாரத்தில் நெய் விட்டுக் கொண்டு சாதகம் பண்ணப் புறப்பட்டதில், என் தாயாருக்கு பயம் வந்து விட்டது. " என்னடா..படிக்கறதுக்கு கூட இத்த்னை சீக்கிரம் எழுந்ததில்லை..இது என்ன..?? " என்று ஆச்சரியப்பட்டவருக்கு, என் கூடவே பாட்டு கற்றுக்கொள்ள வரும் இன்னோரு பெண் மேலும் கோபம் + சந்தேகம் + வருத்தம் வர, அந்த வகுப்பும் "ஊத்தி" மூடப்பட்டது.

editorial_203

அதற்கப்புறம் ஓடுவதற்கே நேரம் சரியாக இருந்ததால், பாட்டு க்ளாஸ் மட்டுமல்ல, பாடுவதே மறந்து விட்டது. காரில் போகும்
போது பாடிக் கொண்டே ஓட்டினால், "CD palyer வேணா போட்டுக் கொள்ளுங்களேன் " என்கிறாள் சூர்யாவின் அம்மா. இத்தனை நாள் கழித்து கிடார் க்ளாஸ் சேர்ந்திருக்கிறேன். மெக்ஸிகன் வாத்தியார். ஏராளமான இளைஞர்கள் என்று கனஜோராக ஆரம்பித்த வகுப்பு, படு கடினமாக இருக்கிறது. வெளிப்பார்வைக்கு மிக எளிதாகத் தெரிந்த வாசிப்பு, அவ்வள்வு இலகு இல்லை . இத்தனைக்கும் கார்ட்ஸ் கூட தாண்டவில்லை. நரம்பை அழுத்திப் பிடித்து கொண்டு strum செய்வதில் விரல் நரம்புகள் வலிக்கின்றன. கைகளில் அழுந்தி கிடார் நரம்புகள் சோதிக்கின்றன. கைகளை ஆர்க் மாதிரி வளைத்துகொண்டு வாசிக்க முடியாமல், எல்லா நரம்புகளிலும் விரல் பட்டு அபஸ்வரம் தட்டுகிறது. வாத்தியார் வேற கோபக்காரர். க்ரூப்பாக கார்ட்ஸ் வாசிக்கும்போது, கொஞ்சம் தவறினாலும் அக்னிப்பார்வை வீசுகிறார். கூட வாசிக்கும் அமெரிக்க இளசுகளோ குளத்தில் போட்ட மீன் குஞ்சுகள் மாதிரி வாசித்துத் தள்ளுகிறார்கள்.

இத்தனை பயத்திலும், சங்கடத்திலும், ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்கு வழி தவறி வந்துவிட்ட அரைக்கிழம் போல திரு திருவென்று விழித்துக் கொண்டிருக்கிறேன்.

இதெல்லாம் முன்னாடியே முடிச்சுருக்கணும். என்ன பண்ண..??

Life would have been much more better if second thoughts had come first.



ஹம் தும் - ஒரு ஆச்சரியம்

ஹிந்தி படங்களின் அளவுக்கு மீறிய வியாபார உத்திகளில் எனக்கு எப்போதும் எரிச்சல் உண்டு. இந்த அதீதமான வர்த்தக உத்தியே என்னை அந்தப் படங்களை அடிக்கடி பார்க்க விடுவதில்லை என்றாலும், என் ரசனையை ஒத்த நண்பர்களின் கருத்து கிடைத்தால், சில படங்கள் பார்ப்பது வழக்கம்.

still12

நேற்றிரவு "ஹம் தும்" பார்த்தேன். நல்ல படம். ரொப்ம வித்தியாசமான படம் கூட. படமும் ஆடம்பரமாகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை கேரளத்து கால்வாய்களில் துடுப்பைத் தொடாமல், நீர் போக்குக்கு போவது போல, நியூ யார்க், பாரிஸ், மும்பை என்று சுற்றி வந்தாலும், நம்பமுடியா சினிமாத்தனங்கள் அங்கங்கே தலை நீட்டினாலும், நல்ல வசனங்களாலும், நல்ல நடிகர்களாலும் காப்பாற்றப்பட்டு
நிறைவைத் தந்தது.

படத்தின் நாயகன் ஒரு ஜொள்ளுப் பார்ட்டி ( படம் எனக்குப் பிடித்த காரணம் இது மட்டுமல்ல...) . எந்தப் புள்ளியிலும் மையம் கொள்ளாமல் சந்து முனையில் சிந்து பாடும் ரகம் ( நன்றி : சபாநாயகர்) . அவனுடைய ஜொள்லீலைகளில் குறுக்கே வரும் பெண்ணொருத்தி அவனுடைய வாழ்க்கையில் மறுபடியும், மறுபடியும் வருகிறாள். ஒவ்வொரு முறை குறுக்கிடும்போதும், முற்றிலும் வேறான குணமுள்ள அவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி மெல்ல மெல்ல குறைகிறது. இந்த விஷயம் அவளுக்கு முதலில் தெரிந்து, அவனை நேசிக்க துவங்க, அவனோ தான் அவளை நேசிப்பதையே குற்றம் என தாழ்வுணர்ச்சியில் நினைத்துக் கொண்டு தவிக்க, கடைசியில் அவள் நேசம் தெரிந்து அவளை நோக்கி ஓடும்போது அவள் பறந்து விடுகிறாள். அவனுக்குள் இருந்த சிறுவன் அடிபட்டு, அவன் மெளனமாகி விடுகிறான்.

சைஃப் அலிகானும், ராணியும் நடித்திருக்கும் இந்தப் படம் சர்வ நிச்சயமாக இந்தி சினிமாவுக்கு புதுசு. பாதி பேருக்கு வசனங்களின் உண்மையான, உன்னதமான அர்த்தம் புரிந்திருக்குமா என்பதே சந்தேகம். எல்லா parallel சினிமாக்களிலும் காணப்படும் இரண்டடுக்கு அம்சத்தை டைரக்டர் அட்டகாசமாக கையாண்டிருக்கிறார். பாடல்களும் நன்றாயிருக்கிறது. ராணி வழக்கம்போல அந்த "டெமி மூர்" குரலிலும், கதை பேசும் கண்களிலும் "ஊடு" கட்டி அடித்திருக்கிறார். சல்மான்கானுக்கு அட்டகாசமாக பொருந்தி இருக்கக்கூடிய பாத்திரத்தை சைஃப், சட்டையை அடிக்கடி கயட்டிக் கொண்டு, விளையாட்டுப் பிள்ளையாக அருமையாக செய்திருக்கிறார். கதையின் ஓட்டத்தோடு ஒரு கார்ட்டூன் ஸ்ட்ரிப் கூடவே வருகிறது. கதையின் போக்கை துரிதப்படுத்த, கதையை எளிமையாக சொல்ல பயன்பட்டிருக்கும் இந்த உத்தி எனக்கு ரொம்ப புதுசு.

still1

பழுத்துபோன ரத்தி அக்னிஹோத்ரியும், ராயல் தாடியோடு ரிஷிகபூரும் நடித்திருக்கிறார்கள். ராணியின் அம்மாவாக வரும் டீவி நடிகையும், ஓரிரு காட்சிகளில் விளக்குக் கம்பம் போல வந்து போகும் அபிஷேக்கும் பாந்தம்.
தாராளமாக, தைரியமாக நீங்களும் முயற்சி செய்யலாம்.


Sunday, September 12, 2004

காந்தி - பெனகல் பார்வையில்

gandhi1

சின்ன வயசில் ரிச்சர்ட்டு அட்டன்பரோவின் "காந்தி" பார்த்தது நினைவிருக்கிறது. தனக்கும், தன் பிள்ளைக்கும் புரிகிறதோ இல்லையோ, படத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று மாயவரம் விஜயா தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போன என் தாயாரை இப்போது நினைத்தாலும் வியக்கத் தோன்றுகிறது.

நெடுநாள் கழித்து, நேற்று ஷ்யாம் பெனகலின் " The making of Mahathma" என்ற ஆங்கிலப் படத்தை பார்க்க நேரிட்டது. பெனகல் ஸ்டைல் ரொம்ப ஆச்சரியமூட்டவில்லை. இந்த உத்திகள் எல்லாம் ஏற்கனவே கமலஹாஸனால் அவருடைய தமிழ்ப்படங்களில் எடுத்தாளப்பட்டிருந்ததால் அத்தனை வித்தியாசமாக இல்லை. விவரணப்படத்திற்குரிய களமாக இருந்தாலும், மற்ற படங்களைப் பார்ப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தது . அதற்குக் காரணம், ஷ்யாமின் அநாயாசமான டைரக்ஷனாக இருக்கலாம்.

முழுக்க முழுக்க காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று பிறகு எங்கோ படிக்க நேரிட்டபோதுதான் தெரிந்தது. இது முன்னமே தெரிந்திருந்தால் படம் ஆரம்பித்த கணத்திலிருந்து இந்திய சுதந்திர போராட்ட காலத்தை பற்றிய விவரணைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை தவிர்த்திருக்கலாம். ஓரளவில் பின்னாளில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கெல்லாம், ஒரு ஒத்திகை மாதிரி தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அமைந்திருந்தன என்று தோன்றுகிறது. சத்யாகிரஹம் என்றால் passive resistance என்று படத்தில் பல இடங்களில் காந்தி சொல்கிறார். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டம் ஏன் வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, சமீபகால உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் என்னளவில், ஆக்கிரமிக்க வெறி கொண்டு அடக்க நினைக்கும் மாற்றானுக்கு எதிராக Non-Violence என்னும் ஆயுதத்தை பயன்படுத்த நிறையவே violence வேண்டும். ரயிலிருந்து தள்ளி விடப்படும்போதும், வண்டியில் போகும்போது அடிக்கப்படும் போதும்,
கோர்ட்டில் தலைப்பாகை எடுக்குமாறு அறிவுறுத்தப்படும் போதும், நடு ரோடில் குண்டர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு விழும்போதும், காந்தியாக நடித்தவர் கண்ணில் அந்த வயலன்ஸ் தெரிந்தது.

அதே போல விடுதலை யாரிடமிருந்து வேண்டும் என நினைக்கிறாரோ, அவர்களுடன் இணக்கமான முறையில் உறவு கொண்டு சில அதிரடி முடிவுகளை எடுக்கவும் காந்தியார் தயங்கி இருக்கவில்லை. கூட இருக்கும் நண்பர்கள் காந்தியை துரோகி என்று கூறியபோதும், பணம் பெற்றுக் கொண்டு வாக்கு மாறி விட்டார் என்று இழித்துரைக்கப்படும்போதும் அதே non-violence அவருக்கு கை கொடுத்திருக்கிறது. எடுத்த முடிவில் பிடிவாதமாகவும், உறுதியாகவும் இருந்தாலும், எதிர்ப்புகளுக்கு அயராமல், முன்செல்ல அவருக்குள் இருந்த ஜோதி அவருக்கு வழிகாட்டி இருக்கிறது.

GANDHI

மற்ற தலைவர்களின் மனைவிகளைப் போலவே கஸ்தூரிபாயும் அலைக்கழிக்கப் பட்டது தனிக்கதை. அதை எத்தனை படம் எடுத்தாலும் சொல்லத் தீராது. சின்ன வயசில் "சத்திய சோதனை" படித்திருக்கிறேன். இத்தனை வருடம் கழித்து, மகாத்மாவின் புனிதத்தைப் பற்றி கேள்விகள் எழுப்பும் நவகால பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், கட்சிகள் தூண்டி எழுப்பும் மீள்பார்வைகள் தாண்டி அந்தப் புத்தகத்தை மறுபடியும் புரட்ட வேண்டும் என ஆவலாயிருக்கிறது.

Friday, September 10, 2004

SKYPE - எனக்குப் புதுசு

ஸ்கைப் என்கிற இந்தப் புதிய செயலி சர்வதேச தொலைபேச வசதியாயிருக்கிறது. குறைந்த கட்டணம். நல்ல வாய்ஸ் குவாலிட்டி. வலையிலிருந்து இறக்கி, உங்கள் கணிணியில் நிறுவிக்கொண்டால், அமெரிக்க உள்ளூர் நண்பர்களுடன் பேச இலவசம். இந்தியாவிற்கு தொலைபேச யூரோவில் கட்டணம்.

முயன்று பாருங்களேன். தகவல் தந்த வில்லோனுக்கு வந்தனம்.

Wednesday, September 08, 2004

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ

திருப்பாவையில் மேற்கண்ட வரிகள் வருகிறதென்று நினைக்கிறேன். தேன்சிட்டுக்கு பிறகு "காணாமல் போனவர்கள்" லிஸ்டில் எழுதலாமென்று நான் யோசித்து வைத்திருந்த பெயர் எல்லே ராம் அலையஸ் ஏஞ்சல் ராமச்சந்திரன். தனிப்பட்ட காரணங்களாலும், வேலைகளாலும் இவ்வளவு நாட்கள் எழுதாமலிருந்தவர், ம.ஆ.வி.கொண்டாட்டத்துக்காக, தலை நீட்டினார். நீட்டிய தலையில் பூத்தூவி, மாலை போட்டு, (கழுத்தில் துண்டை இறுக்கி) வலைப்பூவுக்கு கூட்டி வந்தவர்கள் பெயரை நான் மறுபடி சொன்னால், மறுபடியும் யாராவது ஆட்டுவித்தால் யாரொருவர் பாடுவார்கள்.

இணைய சுதந்திரம் மூச்சு முட்டுகிறது

எல்லே ராம் என்ன எழுதுவார்...எப்படி எழுதுவார் என்று நான் சொல்லத் தேவையே இல்லை. வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன் என்று அவர் சொன்னவுடன் திரண்டு வந்து வரவேற்றவர்களில் பலபேர் சொல்வார்கள். எதை எழுதினலும், அதை அலுப்புத் தட்டாமல், படிக்கும் விதத்தில், சுவாரஸ்யமாக மீ(னா)னோ, தேனோ, மானோ கலந்து, விருந்து படைப்பதில் வல்லவர். சேதுவை வைத்து இவர் விளையாடி இருக்கும் சித்து விளையாட்டைப் பார்த்து இன்று காலையிலிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

கூடிய சீக்கிரம் மானமிழந்த மூக்கன் என்று இவர் ஒரு பதிவு போட்டாலும் ஆச்சரியப்படமாட்டேன். ஏற்கனவே "அறிமுகம்" தந்த அனுபவம்தான் இருக்கிறதே :-)


Tuesday, September 07, 2004

நன்றி

பெற்ற தாய்க்கும்
தமிழூட்டிய அப்பனுக்கும்
அறிவூட்டிய
ஆசிரியருக்கும்
நம்பிக்கை தரும்
அபிராமிக்கும்
தைரியம் தந்த
புத்தகங்களுக்கும்
மென்மையூட்டிய
கவிதைகளுக்கும்
அங்கீகாரம் தந்த
விகடன் தாத்தா
மற்றும்
ராயர் மாமாவுக்கும்
அலை பட்டு உருவம் மாறும்
கரையைப்போல
அடித்துத் திருத்தி
அணைத்துக் களித்து
புத்தி சொல்லும்
நேசர்களுக்கும்
துரோகத்தின்
வலியுணர்த்தியவர்க்கும்
இலவசமாக இணையத்தில்
இடம் தந்த
ப்ளாக்ஸ்பாட்டுக்கும்
இதயத்தில் இடம் தந்த
இனிய ஸஹ்ருதயர்க்கும்

என் நன்றிகள்.


இது என் இருநூறாவது பதிவு.


Saturday, September 04, 2004

நேரானவர்களுக்கு

இனிய ராஜ்குமார்,

சார்வினையோ, எதிர்வினையோ இல்லை என்ற அறிவிப்போடு நீ எழுதி இருந்தாலும், நேராக, நேர்மையாக, உன் பெயரிலேயே அதை எழுதி இருப்பதால் அந்த விஷயத்தை தொட்டவன் என்ற முறையில் இதற்கு பதில் அளிப்பது என் தார்மீகக் கடமையாகிறது.

சமகால நிகழ்வுகளை குறித்து கவனமில்லாமல் பழைய கதை பேசித் திரியும் வலைப்பூக்கள் கொஞ்சம் கூட இல்லை என்பது நமக்குத் தெரியும். " எதில் பார்த்தாலும் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும், தமிழக நடப்புகளை மட்டுமே அயலகத்தமிழர்கள் முழங்கி வருகிறார்கள். அயல்நாட்டைப் பற்றியும் அவர்கள் எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்" என்று நீ கூட எழுதி இருந்தாய். ஆனால், பெரியாரின் 125 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தியை மடற்குழுவில் பகிர்ந்து கொண்ட உடனேயே, பெரியாரின் பிராமண எதிர்ப்பு நிலையை காரணம் காட்டி, அதை திசை திருப்பும் நிகழ்ச்சி நடந்தது.

இது மட்டுமல்ல, இதற்கு முன்னர் கூட அவர் இதைப் போலவே முழங்கி வந்திருக்கிறார். யாரும் இதைப் பொருட்படுத்துவது இல்லை என்ற நிலை இருந்தாலும், பதில் சொல்லாமலேயே மெளனம் காத்தால், திரும்பித் திரும்பி சொல்லப்படும் பொய், உண்மையாகி விடக்கூடிய சாத்தியம் இருந்தால் நான் வாய் திறந்தேன். மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்கும், என் திருப்திக்கும் என்று எனக்கு இரு முகங்கள் இல்லை. எனவே அதை என் பதிவிலேயே என் பெயரிலேயே எழுதினேன்.

"திரும்பத் திரும்ப சமகால நிகழ்வுகளையும், அசிங்கங்களையும் சுட்டிக்காட்டி, உலகத்தில் உள்ள மற்றெல்லாரையும் குற்றம் சாட்டி விட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். இன்றைய அவலங்கள், சாதிப்பிரிவினைகள் எல்லாம் ஓரிரவில் முளைத்தெழுந்ததல்ல. ஓராயிரம் ஆண்டுகளாக நம்மை பீடித்திருக்கும் நோய். இத்தகைய மனோபாவங்கள் உருவாகக் காரணம் என்ன..?? யார் உபதேசித்து இது நடந்தது. கல்விமான்கள், ஆசிரியர்கள் என சமூகத்தை வழிநடத்திச்செல்லும் பெரும்பொறுப்பு ஏற்ற இனம் இத்தகைய நம்பிக்கைகளை சமூகத்திலே ஏன் புகுத்தியது என யோசித்துப் பாருங்கள்" என்று கேட்கிறேன். அதற்காக இன்றிருக்கும் அசிங்கங்களை, ஜாதியின் பெயரால நடக்கும் கூத்துக்களை , ஜாதிக் கட்சிகளை நான் ஆதரித்திருக்கிறேன் என்று உன்னால் ஒரு உதாரணம் காட்ட முடியுமா..?? நடக்கின்ற கேவலங்களுக்கு நாமெல்லாரும் கூட்டுப்பொறுப்பு ஏற்கவேண்டும். நான் செய்யவில்லை. நீ செய்யவில்லை என்று ஆள்காட்டி வேலை பார்க்கக் கூடாது என்ற வரலாறை துணைக்கழைத்தேன்.

வரலாறைப் படிக்காத சமூகம், தன் கடந்த கால தவறுகளை மறந்தும், தெரிந்தே அதை மூடி மறைக்கவும் வரும்பும் சமூகம், தன் பாரம்பரியத்தின் பலமும் பலவீனமும் தெரியாத சமூகம், எதிர்காலத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அதை முதலில் நினைவு கொள். வரலாறு நினைத்துப் பார்க்க தேவை இல்லாத சொகுசான இடத்தில் நாமெல்லாரும் இருக்கிறோம் என்பதற்காக, ஒடுக்கப்பட்டவர்கள் எல்லாரும் இப்போது இன்புற்று வாழ்கிறார்கள் என்று நீ நினைத்தாயானால், நீ மகிழ்ச்சியாக, கவிதை எழுதிக் கொண்டிரு என்று வாழ்த்துவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

பெரியாரின் காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கம் இன்றும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது என்று நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் அதே அளவிற்கு பிராமண எதிர்ப்புப் பிரசாரமும் இன்று குறைந்திருக்கிறது என்பதனையும் ஒப்புக்கொள்கிறாயா..??. அது குறைந்திருப்பதால்தான், வரலாறை திரும்பிப்பார்க்க தேவை இல்லை என்று உன்னைப் போன்றவர்கள் நினைப்பதால்தான், " நாங்கள் ஒன்றும் செய்யவில்லை" என்று அவரவர்கள் கை கழுவி விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுடைய ஆளுமையை ஏற்றுக்கொள்ளாத பிற இன மக்களை எல்லோரும் கேள்வி கேட்போம். ஆனால் அவன், உயர்ந்த சாதி என்ற அடையாளம் கொண்டோரால், இன்னமும் புத்தி ரீதியாக, மன ரீதியாக அவமானப்படுத்தப்படுவதையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன்.
அவன் "இடம்" எது என்று அவனுக்கு சொல்லப்படும்போது, அவன் தனக்குக் கீழானவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடத்தில் தன் ஆளுமையை செலுத்துகிறான் - இன்னமும் வேகத்தோடு. ஓரிடத்தில் விதைக்கப்பட்ட வினை, மற்றொரு இடத்தில் விருட்சமாகிறது. விதைப்பை நிறுத்துங்கள் என்கிறேன். எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்கிறேன். நம் கேள்விகள் எல்லாத் திசைகளிலும் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

நீ கேட்க விரும்பாத கேள்விகளுக்காக, உன்னையே நீ திருப்திப்படுத்திக் கொண்டு "எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்" என்ற மாய உலகில் வாழ்வது போல நான் வாழ விரும்பவில்லை. இதனால் எனக்கு வரக்கூடிய தொல்லைகள், கிடைக்கக்கூடிய புது எதிரிகள், இன்னமும் ஜாடைப் பேசித் திரியும் முகமூடிகள் ஆகியவை பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் எதற்கும் தயார்.


Thursday, September 02, 2004

பெரியார் சர்ச்சை

பெரியாரின் பெயரை வைத்து மறுபடியும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது ரா.கா.கி நண்பர்கள் மத்தியில்.

யாரோ ஒரு முகமூடி தனக்குப் பூணுல் மாட்டி விட்டு வேடிக்கை பார்த்து எழுதுவதாக ஆப்பு எழுதியபோது புலம்பிய நண்பர் திருமலை, அப்படி எழுதப்பட்டதற்கான காரணம் சரியென நிரூபித்து வருகிறார். எப்போது பிராமணர்கள் பற்றிய விமரிசனங்கள் முன் வைக்கப்பட்டாலும், கச்சை கட்டிக் கொண்டு இறங்கி, அவர்கள் ஏதும் செய்வதில்லை. அவர்கள் செய்வதை விட ஆதிக்க ஜாதியினர்தான் அதிகம் செய்கிறார்கள். அவர்கள் பாவம். என்று ஹூங்காரம் செய்கிறார்.

பிராமணர்களின் ஜாதி உணர்வு பெருவாரியாக இன்றில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இது எல்லாம் ஆரம்பித்த இடம் எங்கே..??
வர்ணாஸ்ரம தர்மத்தை வேதங்கள் மூலம் உபதேசிக்க ஆரம்பித்தவர் யார்..??
இன்னமும் எண்ணிலடங்காத கொடுமைகளை, அரசர்களுக்கு தங்களிடம் இருந்த செல்வாக்கின் மூலமும், அதன் மூலம் தாங்கள் பெருக்கிய செல்வத்தின் மூலம், பரம்பரை பரம்பரையாக தாங்கள் திரட்டிய புத்திக் கொழுப்பை வைத்து பேயாட்டம் ஆடியதும், மறக்கக்கூடிய கடந்த காலங்களா..?? அவர்கள் உபதேசித்த ஜாதியை, ஜாதிபெருமையை ஆதிக்க ஜாதிகளின் மனதில் விதைத்து விட்டு " எங்கள் வேலை முடிந்தது" என்று ஓய்வெடுக்கிறார்கள் என்று நாமெல்லொரும் நினைப்பதற்கும் முகாந்திரமிருக்கிறது அல்லவா..??

திருமலையின் சட்டையை கயட்டி முப்புரி நூலும், முத்தணி மார்பும் தேடி, அவரை காய்ச்சுகிறேன் என்று அவர் சொல்வதற்கு முன்னால், என்னுடைய பிராமண நண்பர் ஒருவர் எழுதிய கவிதையை இங்கே தருகிறேன். அந்த நேர்மை எல்லார்க்கும் இருக்கிறதா..??

எச்சிலை முழுங்கினேன்!

தண்ணீர் தெளித்தவர்களிலிருந்து,
இரண்டு குவளை வைத்தவர்கள் வரை
கேள்வி கேட்கக் குரலெடுத்தேன்...
'பூணூலை உதறிவிட்டு வா' என்றொரு
குரல் எனக்கு ஆணையிட்டது.

இயற்கையை வணங்கவும்,
உலக அமைதிக்குப் பிரார்த்தனை செய்யவும்
சொல்லிக் கொடுத்தப் பூணூலை
எனக்குப் பிடிக்குமேஎன்று பதில் சொன்னேன்.
என் பதிலை ஏளனம் செய்து
பூணூலையும் அறுத்தனர் சிலர்.

ஆலயத்துக்குள் நுழையவும்,
தேரை இழுக்கவும் அனுமதி
மறுத்துவர்களைஅறைவதற்குக்
கையை ஓங்கினேன்...
'பிள்ளையார் சிலைக்குசெருப்பு
மாலை போடு' என்று ஒரு கை
எனது கையை முறுக்கியது.

பாலும் தேனும் கொடுக்காமலே
சங்கத்தமிழும் சந்தோஷங்களும்
தந்த தும்பிக்கை கணபதியைப் பிடிக்குமே
என்று பதில் சொன்னேன்.

எனது பதிலை நையாண்டி செய்து
என் கழுத்திலும் செருப்பு மாலை
அணிவித்தனர் சிலர்.

இந்தச் சிலரின் மீதுஎனது
வெறுப்பையெல்லாம் உமிழலாம்
என்று தயாரான தருணத்தில்
இன்று அவர்களின் வலியை
நான் உணர்ந்தாற்போல்,
எனது ரணங்களை
அவர்களின்வழித்தோன்றல்கள்
உணரக்கூடுமென்று நம்பி...

எச்சிலை முழுங்கினேன்.

- அருண் வைத்யநாதன்

ஜெயலலிதா பண்ணுகிற அட்டுழியங்களை, ஊழல்களை பேசும்போது "இவையெல்லாம் கருணாநிதி ஆரம்பித்து வைத்த திருக்காரியங்கள். இதை விட அதிகமாக பண்ணி இருக்கிறார் அந்தாள்" என்று ரிஷிமூலம் எல்லாம் பார்த்து கனஜோராய் பேசுகிற திருமலை, இதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்தவரை போல நடந்து கொள்வதேன் என்பது எனக்குப் புரியவில்லை.

உங்களுக்கு..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...