Monday, November 29, 2004

இருள்நீக்கி சுப்ரமணிய சேவை

கருணாநிதி செய்யாததை ஜெ செய்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டேன். பெரியார் செய்ய முடியாததை இருள்நீக்கி சுப்ரமணியன் (எ) ஜெயேந்திரர் செய்து விடுவார் போலிருக்கிறது. இன்று காலை உஷாவைப் பற்றியும், அனுராதா ரமணணைப் பற்றியும், ஸ்வர்ணமால்யாவைப் பற்றியும், இன்னமும் சந்தேக லிஸ்டில் இருக்கும் பல அழகிகளைப் பற்றியும் என் மராட்டிய நண்பரிடம் பிரஸ்தாபித்த போது, " அட...விஸ்வாமித்ரரே மேனகையிடம் மயங்கலையா..?? இதற்கெல்லாம் புராணத்திலேயே முன்னுதாரணங்கள் இருக்கிறதே" என்றார் குசும்பாக சிரித்தவாறே.

"வென்றால் அண்ணா வழி. தோற்றால் பெரியார் வழி" என்பார் கருணாநிதி அடிக்கடி. சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கத்தாமல், பிராமணர்களின் ஓட்டுகளுக்காக சங்கரமடத்துக்கு பரிதாபப்படுவது போல நடித்து ஓட்டுப் பொறுக்கி வேலை பார்க்காமல், இதைப் போல ஜெ எடுத்திருக்கும் உருப்படியான நடவடிக்கைகளையும் குறை சொல்லாமல் கட்சி நடவடிக்கைகளையும், தேர்தல் ஜாலங்களையும் உருப்படியான ஆட்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, ரிடையராவது நல்லது.

இல்லாவிட்டால் மக்கள் 2005 தேர்தலில் அனுப்பத்தான் போகிறார்கள்.


வெகுநாள் கழித்து.....

அப்படி ஒன்றும் பெரிய ஊர்சுற்றல் இல்லை கடந்த நான்கு நாட்களில். ஆயினும் குடாப்பகுதி வரை செல்ல வேண்டி வந்தது. சென்னையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் B1 விசாவில் வேலைவிஷயமாக வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, வசமாக Blade போட்டுவிட்டு, வந்ததற்கு Mysteryspot மற்றும் Santacruz Beach பக்கமாக ஒதுங்கிவிட்டு, வரும் வழியில் இரவில் CA-17 மலைப்பாதை வழியாக அவரை பயமுறுத்திக்கொண்டேகாரை ஒட்டிவந்து, தமிழ் வழக்கப்படி நண்பனின் வீட்டில் மாயவரத்தானால் "பாடல்" பெற்று வரும் சன் டீவி பார்க்க நேர்ந்தது. ( ஹப்பா...ஹப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய வாக்கியம்...)

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\img1040112020_1_1

சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து, பயங்கர ஒல்லியாகிப் போய், Glamour கூடினாலும், இன்னமும் அதே நக்கல். சுற்றிலும் அதே சப்பை பையன்கள்/பெண்கள். என்றாவது ஒரு நாள் இவர் சிட்டி பையன்கள்/பெண்களுடன் இதே மாதிரி உட்கார்ந்து, இப்படியே பேசி பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சாதாரண கோடை பெரிய கோடாக காட்ட, பக்கத்தில் சின்ன சின்ன கோடுகளை வரந்து காட்டும் பீர்பால் தந்திரம்தான் இதுவும். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் ஜூனியர் விகடன் கழுகு இந்த வாரம் ஸ்வர்ண்மால்யாவைப் பற்றி வெளியிட்டுள்ள செய்திகள் நினைவுக்கு வந்து நெருடியது. செய்திகள் உண்மையானால் எதற்காக இந்தப் பெண் இந்த மாதிரி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறது என்று தோன்றியது. சினிமா ஆசையா..?? புகழா..?? பணமா..?? எதை விரும்பினாலும் , அது கிடைத்தவுடன், உடனே தேடியது இதைத்தானா என்று சடாரென்று அலுப்பு வந்து அடுத்ததை தேடும் மானிட வாழ்க்கையின் அந்தமில்லா, அர்த்தமில்லா வேட்டை இந்தப் பெண்ணுக்கு, இத்தனை படித்த பெண்ணுக்கு தெரியாதா..?? அப்படியானால் படிப்பினால் என்ன பயன்...?? சோதனைச்சாலையில் பியூரெட்/பிப்பெட்டுடன் மல்லாடுவதும், கம்ப்யூட்டர் புரொக்ராம் எழுதுவதுடன் படிப்பு நின்று விடுகிறதா..???. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\402833416

மற்றபடி சன் டீவி அதே ஸ்டைல். எல்லாவற்றிலும் நடுநடுவே சம்பந்தமே இல்லாமல் சினிமா பாட்டு, இலவச தேங்காய் எண்ணெய் வழங்கும் பெஸ்ட் கண்ணா பெஸ்ட், என்று வியாபாரம் இன்னமும் கனஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மாறன் பிரதர்ஸ். சர்ச்சைக்குரிய எதையும் நான் பார்த்த வரையில் பார்க்கவில்லை.

சன் டீவி இணைப்பை கூடிய சீக்கிரம் துண்டிக்காவிட்டால், மாயவரத்தானுக்கு ரத்த அழுத்தம் கூடும். துண்டித்துவிட்டால் பாவம் அவர் வலைப்பூவில் என்னத்த எழுதுவார் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

பதில் - அவர் வலைப்பூவின் தலைப்பிலேயே இருக்கிறது.

Thursday, November 25, 2004

உடன்பிறப்பே...மகிழ்ச்சி...

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\TG

அமெரிக்காவில் நியூயார்க் மாநகரிலே வருடா வருடம் நன்றியறிவித்தல் தினத்தன்று ஒரு பேரணி நடக்கும். அண்ணாவும், நானும், பெரியாரும் நடாத்திய பேரணி போலல்லாமல், குழந்தைகள் மனத்தை கொள்ளை கொள்ளும் விதமாக நையாண்டி முக நாயகர்களும், நளின உடை நாரீமணிகளும் , அலங்கார ஊர்திகளும், வண்ண வண்ண பலூன்களும் அணிவகுத்து வரும். இரண்டே முக்கால் மைல் நீளமாய் வந்த அந்த பேரணியிலே, இன்று "ஷககலக்க பேபி,...ஷக்கலக்க பேபி " என்று தமிழன் இசையமைத்த பாட்டுக்கு மங்கையரும், காளையரும் இந்திய முறையில் நடனமாடி, உடல் குலுக்கி, ஆடிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழன் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடாமல், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பாடியது நயவஞ்சக நெஞ்சம் கொண்ட வடவரின் சதி என்றாலும், தமிழன் வரும் காலங்களில் அதையும் முறியடிப்பான் என்று கூறி , உன்னை நான் வாழ்த்துகிறேன் இந்த நாளில்.

- மு.க

( சொன்ன ஆள்தான் நம்ம ரீலு. நியூஸ் நெஜம்தானுங்க...வசுந்தரா தாஸ் வந்திருக்காங்க என்று எல்லே வில்லோன் சொன்னதுக்கும், இதுக்கும் ஏதும் லிங்க் உண்டுங்களா..?? ஹி..ஹி..)

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\v12


Wednesday, November 24, 2004

என்ன தேடறீங்க..??

C:\Thanksgiving

Thanksgiving Dinner ல் கட்டாயம் இடம்பெறும் ஐட்டங்கள் வரிசையில் வான்கோழிக்கும், பூசணி கேக்கிற்கும், சோளரொட்டிக்கும் பெரிய இடம் உண்டு. பொங்கல் அன்று பானையைப் போல், தீபாவளியன்று பட்டாசைப் போல், காரடையான் நோன்புக்கு கயிறு போல் ( அடை போல்..??!!) , இங்கே இன்று வான்கோழி.

இப்போ படம் புரிகிறதா... ?? டின்னர் டேபிளுக்கு போக பயந்து, வேறு டேபிள் லாம்ப் ஆக கோழி.

ஸார் கீழே தேடிக் கொண்டிருக்கிறார்.

Thanksgiving Holidays

அடுத்த நான்கு நாட்களுக்கு அமெரிக்காவில் விடுமுறை. இன்னொரு நீள்வாரயிறுதி. இன்னொரு Sale மேளா. இன்னொரு பரபரப்பு நெடுஞ்சாலைத் தினங்கள். வான்கோழியோடு விருந்துகள்.

இந்த விடுமுறையின் அர்த்தம் தெரிய வேணுமாயின்,

இங்கே க்ளிக் குங்கள்.

Happy Thanksgiving Holidays...!!!

Tuesday, November 23, 2004

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிமை உணர்வைத் தவிர, கிட்டத்தட்ட இங்கிருக்கும் மற்ற எல்லா அசெளகரியங்களும் எல்லா இடத்துக்கும் பொதுவானவையே. தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நம் மக்கள் தனித் தனி தீவுகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மன்றம், அஸோஸியேஷன் என்று வைத்துக் கொண்டால் சச்சரவுகள் இருக்கத்தான் இருக்கின்றன. கோஷ்டி கீதங்கள் இருக்கின்றன. இவையும் இங்கு காணப்படும் புதிய விஷயமில்லை. சுயமாய் சிந்திக்ககூடிய மக்கள் எங்கெல்லாம் கூடி ஒரு செயலில் ஈடுபடுகிறார்களோ அங்கெல்லாம் நிகழக்கூடிய இயல்பான உரசல்கள் அவை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கும் குழப்பம், தமிழில் தொடருவதா..தெலுங்கில் மாட்லாடுவதா.. இல்லை வடமொழியில் கழறுவதா என்பது வரையில் தொடர்கிறது. பார்ட்டிகளில் ஸ்டாக் மார்க்கெட்டைப் பற்றி பேசுகிறார்கள். பச்சை அட்டை கிடைக்காதவர்கள், prioriy date பற்றி பேசுகிறார்கள். வீடு வாங்கிய லோன் APR பற்றி பேசுகிறார்கள். "எப்ப ஊருக்கு போறிங்க. ஐடியா இருக்கா " என்று கேட்டால் மனிரத்னம் ஸ்டைலில் "தெரியலை" என்கிறார்கள்.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\prabanjan_with_kavithapub

பிரபஞ்சன் அமெரிக்கா வந்துவிட்டு ஊருக்குப் போய் ஆற்றிய ஒரு கேவலமான உரையின் சாராம்சத்தை வெங்கடேஷ் எடுத்துப் போட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு வருகிற 15-30 நாட்களில், அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு கருத்து, அதை சரியாகக்கூட அலசிப் பார்க்காமல், ஊருக்குப் போய் மற்றவர்களிடம் இந்த பிமபத்தை பற்றி பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது "கொல்" என்ற சிரிப்புச் சத்தம் எழ ஒரு பேருரையை நிகழ்த்தி இருக்கிறார்.

//அமெரிக்கத் தமிழர்களில் பலர் 30 வருடக் கடன்காரர்கள். வீடு, கார் ஆகியவற்றுக்கு அவர்கள் வாங்கும் 30 ஆண்டுக்கடன், அவர்களைத் திரும்பி வரவே விடாது //

திரும்பி வரவேண்டும் என்று விரும்பி விட்டால், வீடு, கார் ஆகியவற்றை விற்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும், அது எத்தனை எளிது என்பதையும், அத்ல் எத்தனை லாபம் வரும் என்பதையும் யாராவது பிரபஞ்சனுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஒரு நான்கு வருடம் வாங்கிய வீட்டில் இருந்து விட்டு , பிறகு அதை விற்றால் போதும், ஊருக்கு வந்துவிட்டு பிறகு ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

//பெரும்பாலான தமிழ் வீடுகளில், வாரத்திற்கு ஒரு முறை சமைக்கிறார்கள். சனிக்கிழமை இரவு. அதையே அடுத்து வரும் மூன்று நான்கு நாள்களுக்கு வைத்துக்கொண்டு ஓட்டிவிடுகிறார்கள்.//

தினசரி சமைக்க வேண்டும் என்று எந்த ஸ்மிருதியில் எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணுக்கு சமையல்அறையில் இருந்தும், பிள்ளைபேறிலிருந்தும் விடுதலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள் பிறந்த மண்ணில்தான் இவரும் பிறந்திருக்கிறார் என்று நினைக்கவே ஆச்சரியமாயிருக்கிறது. அது சரி...இரண்டு பேரும் வேலை பார்க்கும் சென்னை இல்லங்களில் நிதமும் சமைக்கிறார்களா என்ன..?? பாதி நேரம் Eat-out என்கிறான் தோழன்.

//சமீபத்திய பெரிய சீரழிவு, சன் டிவி. //

சன் டீவி கட்டாயம் இல்லிங்கோவ். இலவசமா கனெக்ஷன் குடுக்கறதில்லை. வேணுன்னா பாக்கலாம். என் வீட்டில் இல்லை. வேலியிற போற ஓணாணை எடுத்து ..சரி சரி..புரியும்.

// நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை //

ஹெஹ்..ஹெஹ்..ஹே....!!!

//அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது //

இதை சென்னவர்தான் இதையும் சொல்லி இருக்கார். நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

1950, 60களில், அந்தணர்கள் படித்தவிட்டு, அமெரிக்காவுக்கு முதலில் குடிபோனார்கள். அவர்களைத் தொடர்ந்து, 70களில், அந்தணர்கள் அல்லாத பிற முற்பட்ட வகுப்பினர் - முதலியார்கள் போன்றோர் - குடியேறினார்கள். அதன் பின்னரே, பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குடியேறினார்கள்.

//நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்//

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி நவீன இலக்கியவாதிகளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எல்லாருக்கும் அவர்களைத் தெரிகிறது. இல்லையா எழுத்தாளர் ஸார்...??

அமெரிக்கா ஒரு பரந்த நாடு. குடியேறிகளின் நாடு. திறமையும், வாக்கு வன்மையும், adaptability யும் இருந்தால் இங்கு கனஜோராக இருக்கலாம். இந்தியர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். எத்த்னையோ துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். மூன்றாவது பெரிய/ வசதியான
வந்தேறி சமூகம் என்று குறுகிய காலத்தில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதி நாள்களில் உழைத்த உழைப்பை பார்த்து விட்டுத்தான், இன்னமும் குறைந்த விலையில் இந்த அறிவை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே என்று வேலைகள் கடல்தாண்டி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தியாவின் அந்நியச்செலாவணி கூடி இருக்கிறது GDP அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களை இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு பகுதி காசில்தான் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

நாமக்கல் ராஜா எழுதியதைப் படித்ததும் தோன்றிய விஷயங்கள் இவை. அது சரி...அந்துமணி கமெண்டைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே என்று கேட்கிறீர்களா...

ஸாரி... அந்துமணிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை...டைம் வேஸ்ட்.

Monday, November 22, 2004

எல்லே ராம் - யார்..??

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Ram_CloseUp3

தட்ஸ்டமில்.காம் என்கிற தமிழ் வலைப்பக்கத்தில் நைட் எஃபக்ட்டில் ஏஞ்சல் ராமச்சந்திரன் என்று(ம்) அழைக்கப்படும் எல்லே ராமின் பேட்டிக்(?)கட்டுரை.


C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\la-ram300

அன்றும், இன்றும் - அவரே -

ச்சே..காலம்தான் எத்தனை குரூரமானது - ஆள் இப்படி மாறிட்டாரே...

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வேறு நிலைகளை கற்பித்து,
நீ கழிப்பறையை சுத்தம் செய், நீ கொல்லையில் வேலை பார்த்து, மாடு கன்றுகளை பார்த்துக் கொள். நீ வீட்டை நிர்வகித்து , வியாபாரம்
பார்த்துக் கொள். நான் பூஜை செய்து, ஊருக்கு கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளேயே பல்வேறு நிலையில் உள்ளவர்களை நீங்கள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மேலானவாக இருந்து நான் மேய்த்துக் கொள்கிறேன் என்றார்கள். பூஜை செய்தவர்களுக்குள் புகுந்த புல்லுருவிகள், பின்கட்டுக்காரர்களை இன்னமும் அடக்கி வைக்க என்னென்ன வழிகள் உண்டோ, அத்தனைக்குமான காரணங்களை வீட்டு உறுப்பினர்களின் கடமை/விதிமுறைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட புத்தகத்தில் புகுத்தினர். பின்கட்டுக்காரர்களில் பிழைக்க விருப்பிய புல்லுருவிக் கூட்டமும், பூஜை செய்தவர்களை அண்டிப் பிழைத்தால், தாங்கள்
பின்கட்டுக்காரர்களிடையே சண்டியர்த்தனம் செய்யலாம் என்று யோசிக்க, வழக்கம்போல ஒற்றுமையின்மை குடிகெடுக்க, காலம் உருண்டோடியது. பூஜைக்காரர்கள் தங்களுக்குள்ளேயே சிலரை பூஜைக்காரியங்களுக்கும், கற்பிக்கும் வேலைக்கும் அமர்த்திவிட்டு, அவர்களில் ஒரு தலைவரை ஏற்படுத்திவிட்டு வெளிவிவகாரங்களில் கவனம் செலுத்தலாயினர். அவர்கள் வேறு வேலை செய்தாலும், தாங்கள் இன்னார்...இன்னது செய்து கொண்டு இருந்தோம் என்பதற்கு அடையாளமாக பூஜைக்காரியத் தலைவரை அடையாளப்படுத்தி வைத்திருந்தனர். அவ்வப்போது முன்கட்டுக் காரர்களிடையே பின்கட்டுக்காரர்களுக்காக பரிதாப்படுபவர்களும் ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த வாழ்வு இனி ஏலாது என்று பின்கட்டுக்காரர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி வேறு வீடு செல்லவும் விழைந்தனர். கடைசியில் ஒரு நாள், பூஜைக்காரர்களிடையே, பூஜை ரூமுக்குள்ளேயே நடந்த தகாத காரியங்கள் வெளிவந்தன. இத்தனை நாள் உயர்வென்றும், தெய்வீகமென்றும், தங்களுக்கு உரியதும், உகந்ததும் ஆகும் என்று சொல்லி கற்பிக்கப்பட்ட ஒரு விஷயத்தில் நடந்த அநியாயம் கண்டு பின்கட்டுக்காரர்கள் எள்ளி நகையாடினார்கள். தங்கள் மேன்மையை உணர்த்துவதற்கான அடையாளமாக தான் வைத்திருந்த ஒரு அமைப்பின் முகம் கிழிந்தது கண்டு கொதித்தார்கள் பூஜைக்காரர்கள். " இத்தனை கேள்விகள் இங்கே கேட்கிறாயே..பக்கத்து வீட்டு மனிதர்கள் இவ்வளவு அநியாயம் எல்லாம் செய்தார்களே...அங்கு போய் கேட்க முடியுமா..?? என்று கேட்கிறார்கள்.

தன் வீட்டுக்குள் இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு, அந்நிய வீட்டானைப் பற்றி என்ன சொல்ல...?? தாங்கள் இழந்த தங்கள் வீட்டின் உரிமையை, தங்களுக்கு தகுதி அதிகமாக இருக்கிரது என்று தாங்களே சொல்லிக் கொண்ட ஒரு கூட்டம் தவறிழைத்த பிறகும் விட்டுக் கொடுத்து விட்டு பஜனை பாடிக் கொண்டிருக்க முடியுமா..?? இனி வேறு எந்த வெளிக்கூட்டம் வந்து இதே வேலையை செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்பக்கூடாது என்பதற்காக, இந்தக் கூட்டம் செய்த வேலையை பின்கட்டுக்காரர்கள் தோண்டித் துருவி அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள்.

( சங்கராச்சாரி- யார் என்ற பேட்டிக்கட்டுரையிலிருந்து - கீழே ஒரு பகுதி - நன்றி. பி.கே. சிவகுமார்)

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சின்னக்குத்தூசி: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

முடியுமா என்று கேட்கும் நண்பர் அருணுக்கு என் பதில் தேவையா என்பதுதான்....!!!

மற்றபடி நான் சன் டீவி பார்க்கவில்லை. அவற்றில் உள்ள விமர்சனப் பிரசாரம் எந்த அளவு என்பது எனக்குத் தெரியாது. சன் டீவி இந்துக்களின் பிரச்சார பீரங்கியல்ல. தன் பிழைப்பை இன்னமும் வளப்படுத்த விரும்பும் ஏமாற்றுக்காரர்களில் இன்னொரு பகுதி அவர்கள்.

Saturday, November 20, 2004

லேட்டா அடிச்ச ஷாக்

வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.

ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!

'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். மீனா..ம்ஹூம்..என்ன்மா இருந்த பொண்ணு...sintex Tank மாதிரி ஆயிட்டுது.

அந்தக் காலத்தில் குமுதத்தில் வந்த "கோஸ்ட்" ( கிருஷ்ணகுமார் - ரா.கி.ரங்கராஜன்..??) மற்றும் குங்குமம்/சாவியில் வந்த "துளசிதளம்" - எண்டமூரி வீரேந்திரநாத கதைகளும் எவ்வளவோ தேவலை. ராஜேந்திரகுமார் கூட " இயங்கினான்.இயங்கிக்கொண்டே இருந்தான்" என்று A சமாசாரங்கள் தூவி கொஞ்சம் பேய்க்கதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு சின்ன வயதில் எல்லாம் பேய்ப்படங்கள் பார்க்கும்போது பீதியில் பேதியே ஆகிவிடும். "நூறாவது நாள்" படத்தைக்கூட என் அண்ணனின் மடியில் படுத்துக் கொண்டேதான் பார்த்தேன்.

இத்த்னை அபத்தங்கள் இருந்தாலும் மேற்சொன்ன படத்தைக்கூட இரவில் பார்க்க ஆரம்பித்து, பாதியிலேயே அணைத்து விட்டு காலையில்தான் பார்த்தேன்.

அது சரி...பெயரென்ன "ஷாக்". மீனாவுக்கு ஷாக்..?? மீனாவால் பிரசாந்துக்கு ஷாக்..?? திரும்பி வந்த மஞ்சுவால் வாட்ச்மேனுக்கு ஷாக்..?? சரத்பாபுவுக்கு..?? தியாகராஜனுக்கு..?? அப்பாஸுக்கு..?? அப்பாஸ் அப்பாவுக்கு..??

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\meena010

எனக்கென்னவோ, இத்தனை குண்டா ஆயிட்டுதே மீனா..?? என்று "கர்ணன் பட நாயகி" மீனாவின் தாய்க்குலம், ராஜ்மல்லிகாவுக்குத்தான் ஷாக் ஆக இருந்திருக்கும்.

சீக்கிரம் மஹிளா காங்கிரஸ் பதவி இடம் மாறலாம்.

Friday, November 19, 2004

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்க வேண்டி இருந்திருக்கும்.

Thursday, November 18, 2004

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\is_p1

அட..அட..அட...

கலர் என்னமா மாறீட்டுது...

( முதல்வரோட பச்சை கலர், திருமதி ரஜினி புடைவையில்....அதைச் சொன்னேன்)

எப்படி கட்டுப்படியாகிறது...???

காரைக்குடி காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். சுப்ரமணியபுரம் சுகுமார் பில்டிங் அருகே உள்ள ஒரு ஷாப் கடையில் ( ஹி... ஹி..நடு செண்டர், க்யூ வரிசை மாதிரி) ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். 15 ரூபாய். வீட்டுக்கு கொண்டு வந்து இங்க் போட்டுவிட்டு, சட்டைபையில் செருகிக் கொண்டு காலேஜ் போனேன். போய் இறங்கியவுடன் பார்த்தால், பாக்கெட் எல்லாம் இங்க். என்னடா இது என்று டென்ஷனாகிப்போய், சாயங்காலம் மறுபடியும் அதே கடைக்குப் போய், " என்னங்க இது..?? நேத்துதான் உங்க கடையில பேனா வாங்கிப்போனேன். இப்படி ஒழுகுதே. இப்படி ஏமாத்தலாமா நீங்க..? " என்று நியாயம் கேட்க, அந்த வீணாப்போன கடைக்காரன் ஒரு முன்னாள் ரெளடியாம். கடையை விட்டு வெளியே வந்து ஓங்கி ஒரு அறை விட்டான். " என்னடா சொல்ற...?? ஏமாத்திட்டேன்னா..?? ஆமாம்..இப்ப என்னங்கிற..என்ன வேணா பண்ணிக்கோ.." என்றான் பாதகன். நேராக போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, பிரச்சினையாக்கிய பின், ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, புது பேனா கொடுத்தான். பின்னாளில் என் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியபோது கூட " என்னா மச்சி ..இப்படி விட்டுட்ட..ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கடையில பூந்து நாஸ்தி பண்ணி இருக்கலாமே" என்றார்கள். முக்கியமாய் எங்கள் "தலை" சகாயமணி. கேவலம் ஒரு பதினைந்து ரூபாய் பேனாவுக்காக, இத்தனை லொள்ளு பண்ணினான் அந்தக் கடைக்காரன்.

அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் குறித்து நண்பர்களிடம் இருந்து எத்தனையோ கேள்விப்பட்டு இருந்தாலும், நேற்று எனக்கு நிகழ்ந்ததை பார்த்தவுடன், என்னால் நம்பவே முடியவில்லை. மூன்றரை வருடங்களுக்கு முன் காஸ்ட்கோவில் ஒரு யுரேகா வேக்குவம் க்ளீனர் வாங்கினேன். இத்த்னை காலம் ஜம் என்று வேலை செய்து கொண்டிருந்தது. சமீப காலமாக கார்ப்பெட்டில் உள்ள குப்பைகளை சரியாக எடுப்பதில்லை. சரி..புதுசு வாங்க வேண்டியதுதான் என்று மார்க்கெட் வேட்டையை ஆரம்பித்தேன். இதற்கிடையில், யாரோ " காஸ்ட்கோவுக்கே கொண்டுபோனால், அவன் யுரேகாவுடன் தொடர்பு கொண்டு ஏதாவது செய்வான்" என்று சொல்ல, நேற்று எடுத்துச் சென்றேன். ரசீது இருக்கா என்று கேட்டவன், இல்லை என்றதும், என்னுடைய மெம்பர்ஷிப் ஹிஸ்டரியை கம்ப்யூட்டரில் பரிசோதித்து, அந்தப் பொருளை அங்கேதான் வாங்கி இருக்கிறேன் என்று ஊர்ஜிதம் செய்து விட்டு.......நம்பினால் நம்புங்கள்...அதன் மொத்த விலை மற்றும் வரியையும் சேர்த்து $150 ஐ எண்ணி என் கையில் வைத்தான். நம்பவே முடியாமல் திரு திரு என்று விழித்து விட்டு உடனடியாக அங்கேயே ஒரு புது வேக்குவம் க்ளீனர் வாங்கி விட்டு மப்பாகிப்போய் வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகுதான் மக்கள் சொன்னார்கள், காஸ்ட்கோவில் வாங்கும் - அனேகமாக - எல்லா பொருளுக்கும் Life time warranty யாம். வீட்டு உபயோக சாமான் லிஸ்டில் இங்கு கிடைக்காத பொருளே இல்லை எனலாம். costco வில் மேட்ரிமோனியல் சர்வீஸ் கூட ஆரம்பித்தால் தேவலை...ஹி ஹி..

இதன் தொடர்பில் சில அராஜகங்கள்:


1. January 2000: Kathleen Robertson of Austin Texas was awarded $780,000.00 by a jury of her peers after breaking her ankle tripping over a toddler who was running amuck inside a furniture store. The owners of the store were understandably surprised at the verdict, considering the misbehaving tyke was Ms. Robertson's son.

2. June 1998: A 19 year old Carl Truman of Los Angeles won $74,000.00 and medical expenses when his neighbor ran his hand over with a Honda Accord. Mr. Truman apparently didn't notice someone was at the wheel of the car whose hubcap he was trying to steal.

3. October 1998: A Terrence Dickson of Bristol Pennsylvania was exiting a house he had finished robbing , by way of the garage. He was not able to get the garage door to go up, because the automatic door opener was malfunctioning. He couldn't re-enter the house because the door connecting the house and garage locked when he pulled it shut. The family was on vacation, so Mr. Dickson found himself locked in the garage for eight days. He subsisted on a case of Pepsi he found, and a large bag of dry dog food. This upset Mr. Dickson, so he sued the homeowner's insurance claiming the situation caused him undue mental anguish. The jury agreed to the tune of half a million dollars and change.

4. October 1999: Jerry Williams of Little Rock Arkansas was awarded $14,500.00 and medical expenses after being bitten on the buttocks by his next door neighbor's beagle. The beagle was on a chain in it's owner's fenced-in yard, as was Mr. Williams. The award was less than sought after because the jury felt the dog may have been provoked by Mr. Williams who, at the time, was shooting it repeatedly with a pellet gun.

5. May 2000: A Philadelphia restaurant was ordered to pay Amber Carson of Lancaster, Pennsylvania $113,500.00 after she slipped on a spilled soft drink and broke her coccyx. The beverage was on the floor because Ms. Carson threw it at her boyfriend 30 seconds earlier during an argument.

6. December 1997: Kara Walton of Claymont, Delaware successfully sued the owner of a night club in a neighboring city when she fell from the bathroom window to the floor and knocked out her two front teeth. This occurred while Ms. Walton was trying to sneak through the window in the ladies room to avoid paying the $3.50 cover charge. She was awarded $12,000.00 and dental expenses.

7. And just so you know that cooler heads do occasionally prevail: Kenmore Inc., the makers of Dorothy Johnson's microwave, were found not liable for the death of Mrs. Johnson's poodle after she gave it a bath and attempted to dry it by putting the poor creature in her microwave for, "just a few minutes, on low," The case was quickly dismissed.

நண்பர் ஒருவர் அளித்த பின்னுட்டத்தில் இருந்து, மேலே குறிப்பிட்டவை
ஜோக் என தெரிகிறது. அதன் தொடர்பாக இதோ

Wednesday, November 17, 2004

மரத்தடி தந்த யோசனை

மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.

இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தது எது எனவும் கேட்டால், அந்தத் தகவலும் உதவும்.

இப்படிப்பட்ட தகவல்களை சேர்த்து வைத்தாலே போதும். படிக்கத் தோதான வலைப்பூக்களை தேர்ந்தெடுப்பதும், எப்படி மதிப்பிடுவது என்பதும், வாத்தியார் தேர்ந்தெடுக்க சொல்வதும் தேவை இல்லை. ஏனெனில், நாம் எழுதும் பல கட்டுரைகளை நாமே கால ஓட்டத்தில் மறந்து விட வாய்ப்பிருக்கிறது. கண்ணுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வைக்காவிட்டால் இணையத்தில் கோஷ்டி அரசியல் நடக்கிறது. முகமூடி கலாசாரம் தாங்கவில்லை. தனிமனித தாக்குதலும், ஜாதி சண்டைகளும் தான் நடக்கிறது என்று மேலோட்டமாக அறிக்கை விடுபவர்கள் சொல்வதுதான் உண்மை என்று எல்லோரும் நினைக்கும் அபாயம் இருக்கிறது.

மரத்தடி மடலாடற்குவில் கிடைக்கும் விஷயங்களை மரத்தடி.காம் சேகரித்து வைத்து இருப்பது போல, வலைப்பூக்களில் இருந்து தேர்நதெடுக்கப்பட்ட கட்டுரையின் சுட்டிகளை தமிழ்மணம்.காம் தளத்தில் வைக்கலாம்.

இந்த முயற்சிக்காக என் உழைப்பும் பங்களிப்பும் யார் கேட்டாலும், எந்த விதத்திலும் செய்கிறேன்.

Tuesday, November 16, 2004

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நிலம். அங்கே புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" என்று பாவேந்தரைத்தான் துணைக்கு அழைக்க முடியும்.

நிற்க. என் தமக்கைகளை வீட்டில் நன்றாக படிக்க வைத்தார்கள். ஆயினும் அதுவும் போதாமல் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கணவ்ர்களின் ஒப்புதலோடு தொடர்ந்து அஞ்சல் வழி கல்வி பயின்று, பிறகு அவர்களிடம் சண்டை பிடித்து வேலைக்கும் செல்லத் தலைப்பாட்டார்கள். பெணகளை வேலைக்கு அனுப்பவது கவுரவக் குறைச்சல் என்ற மனோபாவம் உடைய தன் கணவர்களை சமாதானப்படுத்தி, வேலைக்கு செல்ல என் சகோதரிகள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம்தான். வேலை செய்ய ஆரம்பித்து இத்தனை வருடம் கழித்து, அதனால் விளைந்த பொருளாதார, சமூக பயன்களைப் பார்த்து, தன் குழந்தைகளை பொறியியல் படிக்க வைத்தார்கள் என் சகோதரிகளின் வீட்டில்.

பொறியியல் படித்து முடித்து என் சகோதரியின் மகள் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். முன்னைபோல படித்து முடித்தவுடன் கல்யாணம் என்றில்லாமல் வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்க முயல்கின்ற பெண்களின் காலம் இது என்று என் சகோதரியும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து கூடத் தங்கிக் கொண்டு இருந்தார். A job is something which keeps you warm between college and marriage என்று பெண்களை பார்த்து பெரியவர்கள் சொல்கின்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
எல்லா பட்டதாரிகளுக்கும் ஏற்படுகின்ற சிரமங்கள் - வேலையில் முன் அனுபவம் - அவளுக்கும் ஏற்பட்டதால் வேலை கிடைக்காமல் NIIT கோர்ஸ் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்த இடைவெளியில், சரி வேலைதான் கிடைக்கவில்லை. நல்ல பையனாக பார்த்து கல்யானம் பண்ணிக் கொடுத்து விடலாம் என்று விளம்பரம் செய்த போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பழைய காலத்தில் சொல்லப்பட்ட (பெண்களின்) கல்யாணத் தகுதிகளோடு இப்போது பெண்ணுக்கு கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் வேலையும் குறைந்த பட்ச தேவையாகி விட்டது. கேட்பவர்கள் தங்கள் தகுதியைக் கூட அதற்கு முன் நினைத்துப் பார்ப்பது இல்லை. பெண்ணின் சுயசார்புக்காக நாம் உபதேசித்த படிப்பும், வேலையும் அவளுடைய சுதந்தரத்தை பாதித்து, அவள் தகுதியையே கீழிறக்குவது நல்லதற்கா, கெட்டதற்கா என்று தெரியவில்லை. வேலைக்குப் போவதும் , போகாததும் அவளுடைய இஷ்டம் என்றில்லாமல், இவையாவும் அவளாய் தேடிப் பூட்டிக் கொண்ட கொள்கின்ற
பொன் விலங்காய் ஆகிப் போகுமோ..??

ஏகத்துக்கும் எல்லாரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்க நேற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு நேற்று வேலை கிடைத்த செய்தி அறிந்தேன். இனி குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாள் அந்தக் குழந்தை.

இனி வருவார்கள் ....21 ஆம் நூற்றாண்டின் இளவரசர்கள் வரிசை வரிசையாய்.

Friday, November 12, 2004

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பணம் கொடுக்காமல் யாரோ பொருளை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதை சொல்லும் விதமாக பீப்.பீப் என்றது. ( சிங்கப்பூரில் உள்ள ஸ்டோர்களில் இது கொஞ்சம் சத்தமாகவே கத்தும். தொடர்ந்து கேட்டால் " ஓடறான். ஓடறான்." என்று கத்துவதுபோல் இருக்கும்)
உடனே கவுண்டர் அம்மணி, ஓடினாள். ஒரு மெக்ஸிகன் இளைஞன், இரண்டு தோள்களிலும் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு சர்வசாதாரனமாக நடந்து போனான். கவுண்டர் அம்மணி ஓடிவருவதிப் பார்ததும், சர்வசாதாரணமாக ஓவர் கோட்டை நெகிழ்த்தி, முழங்கைக்கும் சற்றே நீளமான கத்தியை எடுத்துக் காட்ட, கவுண்டர் அம்மணி, பேச்சடைத்து நின்று விட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மூச்சு நின்று விட்டது. அத்த்னை பெரிய பளபளப்பான வாளை சமீபகாலங்களில் நான் எங்கும் பார்த்ததில்லை. நல்லவேளை துப்பாக்கி வைத்துக்கொண்டு தாறுமாறாக சுட்டுவிட்டு ஓடியிருந்தால் என்ன ஆகி இருக்கும். "கடைக்குப் போனால் பர்ஸில் பனம் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று நெனைச்சுகிட்டு இருந்தேன். வாள் எடுத்துகிட்டு போனா போறும்போலிருக்கே " என்று திரும்ப காரில் வரும்போது மனைவியிடம் கமெண்ட் அடித்தாலும், கொஞ்சம் உதறலாகவே இருந்தது.

போலிஸுக்கு ஃபோன் பண்ணிவிட்டு, கவுண்டர் அம்மணி மறுபடியும் இரண்டு டாலருக்காக தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்தது தனிக்கதை.

என்னமோ நடக்குது

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நடந்திருக்கும் கைது சம்பவம். அதே சமயத்தில் எந்த அளவுக்கு இது போகப்போகிறது...என்பதும் புரியவில்லை. ஹிந்து மதம் என்றால் அது சங்கரமடம் என்று நினைப்பவர்களின் நம்பிக்கையில் பெரிய அடி விழுந்திருக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான். ஹிந்து மதத்திற்கும், கடவுள்களுக்கும், சுலோகங்களுக்கும், ஆசார அனுஷ்டானங்களை பேணுவதற்கும் நாங்கள்தான் அத்தாரிடி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் ஜெயேந்திரரை போற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் "அவா" என்கிற பொதுபெயரில் அருண் சொன்ன வலைப்பதிவர் அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். மற்றபடி,
வகுப்பு வித்தியாசம் இல்லாமல், யோசிக்கத் தெரிந்த எல்லாருமே காலம் காலமாக ஜெயேந்திரரின் நடவடிக்கைக்களை கண்டித்தே வந்திருக்கிறோம்.
திருவாளர் சோ கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் சாமியாரை இந்த வழக்கில் கோர்க்க வலுவான சாட்சியங்கள் கிடைத்த பிறகே அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.

ஹிந்து மதத்தை சாமியார்களின் பிடியிலிருந்தும், மடங்களின் பிடியிலிருந்தும் விடுவிக்க காலமும் நேரமும் கூடி வந்திருப்பது போல தோன்றுகிறது. இறை வழிபாட்டின் உண்மையான அர்த்தத்தையும், நாத்திகவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக கடவுள் முன் அனைவரும் சமம் என்கிற கருத்தை அழுத்திச் சொல்லவும் இம்மாதிரியான நடவடிக்கைகள் உதவுமானால், குரல் உயர்த்தி உயிர் விட்ட அந்த ஏழை பிராமணனுக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றிகள்.

என்ன நியாயம் கிடைக்கப் போகிறது சங்கரராமனுக்கு என்று பார்ப்போம்.

Thursday, November 11, 2004

சென்னையில் அபார்ட்மெண்ட் தேவை

சென்னை அமிஞ்சிக்கரை/அண்ணாநகர் பகுதியில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு Single Bedroom Apartment தேவை. சிஸ்கோவில் பணிபுரியும் என் நண்பன் பணி விஷயமாக சென்னை வருகிறான். தனது குடும்பத்துடன் அங்கே தங்க உத்தேசித்துள்ளான். திசம்பர் முதல் தேதியிலிருந்து கிடைத்தால் வசதியாக இருக்கும். வேறு வழிகளிலும் முயற்சி செய்யப் போகிறேன்.இருந்தாலும் இங்கே போட்டு வைக்கலாம் என்றொரு எண்ணம். அபார்ட்மெண்ட் மட்டுமல்ல, அதை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்ஸிகள்/ புரோக்கர்கள் இருந்தாலும், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

Wednesday, November 10, 2004

சூட் போட்ட நரகாசுரன்

நேத்து நவன் பகவதியோட வலைப்பூவில் Sorry சொல்லும் நூற்றுக்கணக்கான ஃபோட்டோக்களை பார்த்ததும், எனக்கு எலெக்ஷன் ரிசல்டைப் பற்றி ல்ண்டன் டெய்லி மிர்ரர் போட்ட கவர் தான் நினைவுக்கு வந்தது. அது கீழே :

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\daily_miiror

விஷயம் அதோடு முடியவில்லை. இன்று காலை NPR சானலில் கேட்ட பல தகவல்கள் அண்ணனின் பிரதாபங்கள் இன்னமும் எத்தனை தூரம் போகப் போகிறது என்பதை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருந்தன. தன்னை Conservative என்று பகிரங்கமாக சொல்லிக்கொண்ட, அவர்கள் எடுக்கும் நிலைகளுக்காக பாடுபடுகிற ஒரு அதிபர் இரண்டாம் முறை பலத்த செல்வாக்கோடு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், என்னென்ன செய்யப்போகிறார் என்று பழுத்த கன்சர்வேட்டிவ் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். வயிற்றுக்குள் ஆட்டோ ஓடியது.

பிறகு பொருளாதார வல்லுநர் ஒருவரிடம் அமெரிக்காவின் வரலாறு காணாத 425 பிலியன் டாலர்கள் பற்றாக்குறை பற்றிக் கேட்கப்பட்டது. மேலும் பேபிபூமர்களின்( Baby Boomers) முதல் அலை ஓய்வுபெறும் போது, பற்றாக்குறை ஆகக்கூடிய ஃபெடரல் அரசாங்கத்தின் கையிருப்பும் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும்..?? அத்தோடு புஷ் அரசாங்கம் கொடுக்கும் வரி விலக்கும் கஜானாவை காலி செய்து விடுமே எனக் கேட்க, அவர், " ஆமாம்..நிலைமை கவலை அளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, புதிதாக போர் ஏதும் வராதவரை பிரசினை வெளித் தெரியாது. ஆனால் இருக்கிற பற்றாக்குறை தீரவே பல வருடங்களாகி விடும். social security benefits இப்போது கிடைப்பதைக் காட்டிலும் இன்னமும் குறைந்து விடும், அப்படியும் பிரச்சினை சமாளிக்க முடியாமல் போனால், வெளியிலிருந்து ஏகத்துக்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். அல்லது வட்டி விகிதத்தை எக்கச்சக்கத்துக்கு ஏற்ற வேண்டி இருக்கும். பொருளாதார வல்லரசு என்று பெயர் பெற்றிருந்த அமெரிக்கா, அதிக கடன் வாங்கி, விரலுக்கு மீறி வீங்கி விட்ட நாடாக உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்க வேண்டும்" என்றார். அமெரிக்காவை Bankrupt ஆக்குவதுதான் லட்சியும் என்று முழங்கிக் கொண்டிருக்கிற லேடன் மனதில் வந்து போனார்.

எல்லா தீபாவளியும் நரகாசுரன் வதத்துக்காகத் தான் கொண்டாடுவாங்க. ஆனா, இந்த தீபாவளி மட்டும் இந்த நவீன நரகாசுரனுக்கு கையில பதவிங்கிற தீவட்டி கொடுத்துட்டு, அதை அவன் எங்க வைப்பானோ...எதைக் கொளுத்துவானோ ன்னு புலம்பற மாதிரி ஆயிட்டுது.

நீங்களாச்சும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க. எங்க சின்னா சித்தப்பா போன வருஷம் தவறிப் போனதால எனக்கு தீபாவளி கிடையாது.




வாங்க பாய்...

Toastmaster, எம்.ஜி.ஆர், கஸல், இந்திப்படங்கள், கானா, அமீரகவாழ்க்கை, "தினம் ஒரு கவிதை" கவிதைகள், மார்க்க சிந்தனை, திர்லக்கண்ணி, யாத்கார் பாயா, மரத்தடி, ராயர் காப்பி க்ளப், OTIS போன்றதொரு ரகளையான கலவைக்கு சொந்தக்காரர் அபுல் கலாம் ஆசாத். ரா.கா.கி யில் என்னுடைய அந்த நாள் சகா. மடலாடற்குழுக்களையும், கவிதைகளையும் தொடர்ந்து வாசிப்போருக்கு அறிமுகமான பெயர். வயதில் அனுபவத்தில் பெரியவர்களிடத்தில் அவர் காட்டும் மரியாதையை தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு "அது பசப்பலோ..? " என்ற் சந்தேகம் கூட சில சமயங்களில் வரும். ஆனால் கொஞ்ச நாள் பாய் சாஹேபை தொடர்ந்து கவனிப்பவர்க்கு அது அப்படி தெரியாது. பாய் எழுதிய கானாக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. வாத்தியார் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கானாக்களுக்கும், வெண்பாவுக்கும் சொந்தக்காரர். எழுத்துகளில் தெரியும் மனித நேயத்துக்காகவும், பழசை மறக்காத பண்புக்காகவும், இந்தியனாக தன்னை உணரும் முஸ்லிமாக இருப்பதாலும். நாப்பது வயசு என்பதெ பிரதிபலிக்காத துள்ளல் எழுத்துக்காகவும் ஆசாத் பாயை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த நதியும் இங்கே வந்து கலந்து இருக்கிறது இப்போது.

வாங்க பாய்..வணக்கம்...


Tuesday, November 09, 2004

ஸ்பெஷல்

deepa18

கன்னம் மட்டுமல்ல, எல்லாமே குண்டு குண்டா இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. கீச்சுக் குரலில் பேசுவாள். நடந்து போவதே உருண்டு உருண்டு போவது மாதிரிதான் இருக்கும். வயசுக்கு ஏத்த மாதிரியும், அதுக்கு மெலும் வாளிப்பா இருந்தாலும், மூஞ்சு மட்டும் குழந்தை மாதிரி இருக்கும். நான் காலேஜில் கடைசி வருஷம் படிக்கும்போது, முதல் வருஷ மாணவியா வந்து சேந்தா. மெட்ராஸ் பொண்ணு.

காலெஜில படிக்கும்போது இந்த மெட்ராஸ்கார பசங்க பண்ற அழும்பு தாங்க முடியாது. எல்லாரும் தயங்கி தயங்கி, பொண்ணுக கிட்ட பேச ட்ரை பண்ணும்போது, இவனுங்க சர்வ சாதாரணமா போய் கடலை போட்டுட்டு வருவானுக. கேட்டா இதெல்லாம் பெரிய விஷயமாங்கிற மாதிரி அல்ப ஜந்துவை பாக்கிற மாதிரி பார்ப்பானுங்க. ஊருக்கு போவும்போது பஸ்/ட்ரெயின்ல சேந்து புக் பண்றதென்ன...வீக் எண்டுல சேந்து ட்ரீட் போறதென்னனு ஒரே அலம்பல்தான்...

நாலாவது வருஷம ஏதோ எக்ஸாம் எழுதறதுக்கு நான் மெட்ராஸ் போக வேண்டி இருந்தது. பாத்தா நம்ம பொண்ணும் பஸ்ல, ரெண்டு சீட்டு முன்னாடி அவ ஃப்ரெண்ட்ஸோட வந்திருக்கிறா. பேர்தான் ஃபைனல் இயர் பையனே ஒழிய, மனசுக்குள்ள இன்னமும் பால் ஐஸ் பொடியந்தான் நான். யார் வந்தா நமக்கென்னன்னு, நானும் என் ஃப்ரெண்டும், எங்க சீட்லேயே சமத்தா உக்காந்து அவங்களை சைட் அடிச்சுகிட்டு இருந்தோம். வண்டி கிளம்பி கொஞ்ச நேரம் ஆயிருக்கும். ரெண்டு பொண்ணுகளும் எழுந்து எங்க சீட்கிட்ட வந்தாங்க. எனக்கு எல்லா ஹார்மோன் சுரப்பியும் ஓவர்டைம் பண்ண ஆரம்பிச்சிட்டுது. தயங்கி தயங்கி " ஹலோ...எங்க சீட்டுக்கு பின்னாடி உட்கார்ந்திருக்க யாரோ ரெண்டு பேரு, சீட் இடைவெளி வழியா கையை நுழைச்சி கன்னா பின்னான்னு நடந்துகிறாங்க...அதனால நம்ம சீட்டை swap பண்ணிக்கிலாமா " ன்னு சாட்டிலைட் டீவி தமிழ்ல கேட்டாங்க.

மூக்கன் என்ன பண்ணியிருப்பான்..." ஆஹா..கவலையே படாதே. உன் ஃப்ரெண்டை இங்க அனுப்பு..நான் அங்க வந்து உக்காந்துகிறேன். அப்ப அவன் என்ன பண்றான்னு பார்ப்போம்" அப்படின்னு எல்லாருக்கும் பிடிச்ச ஒரு சொல்யூஷன் கொடுத்திருப்பான். ஆனா, அந்த நாள் வீணாப்போன சுந்தர்ராஜன் என்ன பண்ணான்...?? சத்தமே போடாம எழுந்து, தன் ஃப்ரெண்டையும் கூட்டிகிட்டு, அந்த பெண்கள் உட்கார்ந்திருக்கிற இடத்துக்கு போயிட்டு, அவங்களை தன் சீட்டுக்கு அனுப்பி, ஒரு நா ராத்திரி முழுக்க குஜாலா கடலை போடற அற்புதமான வாய்ப்பை இழந்துட்டான்.
அதுக்கு அப்புறம் தீபாவளி வரும்போதெல்லாம், மேற்படி சம்பவத்தை நினைச்சு நினைச்சு அவன் மனசெல்லாம் வலி.

அந்த பொண்ணு பேரு தீபா.. ( ஹி..ஹீ..இதுதான் நம்ம தீபாவளி ஸ்பெஷல்.படம் சினிமா தீபா )

Monday, November 08, 2004

வாசகன் படுத்தும் பாடு

காலையில் இருந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். ஆபிசிலும் வெட்டி முறிக்கிறார் போல வேலை ஒன்றுமில்லை. மடலாடற்குழுக்களில் இருந்து, கவனிக்க மறந்த நல்ல பதிவுகள் வரை, ஒரே படிப்புதான். ராயர் காப்பி க்ளப் களைகட்டி இருக்கிறது. கொலட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து இரா.மு வரிசையாக இட்டுக் கொண்டு இருக்கிறார். தியோ வான்காவை பற்றி ஒரு திரி கிளம்பி வழகமான பாட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பொடிச்சியின் பதிவை முழுக்க படித்து முடித்தேன். அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அந்த வலைப்பதிவிலும் சரக்குக்கு குறைச்சலில்லை. தொடர்ந்து படிக்கலாமெண்டு ...ஸாரி..படிக்கலாமென்று ஒரு உத்தேசம். ரா.சுப்புலட்சுமி முக்காட்டை விலக்கிய நேரத்தில் இந்த வீரலச்சுமி.....!! பாரா அடித்த கமெண்டில் இருந்த /- குறியை பதிவெங்கும் தேடிப்பார்த்தேன். அது, அந்தக் கமெண்டுக்கு பிறகு அழிக்கப்பட்டிருந்தால், அது அவரோ...? :-). இருக்கலாம். யார் கண்டது...!!

மக்கள் இப்படி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும்போது, நாமளும் என்னத்தையாவது எழுதணும் என்று தோன்றவே இல்லை. உள்ளுக்குள் இருக்கும் வாசகன் " பொத்திக்கிட்டு பேசாம படி முதல்ல " என்கிறான். சுத்திச் சுத்தி எழுதனதையே திரும்ப திரும்ப என்னத்தை எழுத...

தளும்பினா ஏதும் எழுத வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Friday, November 05, 2004

craiglist.org

தலைப்பில் உள்ள தளம் உங்களுக்குத் தெரிந்தால், இங்கே நேரத்தை வீணாக்காதீர்கள். இது உங்களுக்கல்ல....

இணையத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற classifieds தளம் இது. சான்ஃப்ரான்சிஸ்கோவில் வசிக்கும் க்ரெய்க் என்கிற ஒரு டெக்னோ ஆசாமியின் தளம். அமெரிக்க டெக்னிக்கல் ஆசாமிகளில் ரெண்டு வகை...!! ரெண்டே வகை. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நோட்பேட் உபயோகிக்கக்கூட தெரியாமல், இந்திய/சீன மென்பொருளாளர்களை மேய்த்துக் கொண்டு, மீட்டிங் போய் வந்து, வெகேஷன்களில் நடுவே ஆபீசுக்கு வருபவர்கள் ஒரு வகை என்றால், இரண்டாவது பஸ் மண்டை வகை. பயங்கர சீரியஸ் ஆசாமிகள் இவர்கள். தனக்குப் பிடித்த சப்ஜெக்ட் இதுதான் என இனம் கண்டுகொண்டு, அதன்மேல் சரியான வெறியோடு அலைபவர்கள்.
அதைத் தவிர வேறு ஏதும் அவர்களுக்குத் தெரியாது. நமது இந்திய ஆசாமிகளோ, பலபட்டறைகள். இன்னது என்றில்லாமல், நாய் வாயை வைத்த மாதிரி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டு தேவைக்கேற்றார் போல சட்டை உரித்துக் கொள்வார்கள். இன்று D2K , PB என்றால் நாளை VB , நாளன்னைக்கு java, c# என்று survival க்காக நிறம் மாறும் நிரலாளர்கள்.

க்ரெய்க் அண்ணாச்சி ரெண்டாவது வகை அமெரிக்கர் போல. தனக்கென்று ஒரு வலைப்பதிவு வைத்திருக்கிறார். அதைவிட அவருடைய தளம் ரொம்ப புகழ் பெற்றது . ரொம்ப உபயோகமானது. கலர், படம், ஜிகிடி ஒன்றும் கிடையாது. content ஐயா content..!! அதில் உள்ள வரி விளம்பரங்களை படிப்பது எனக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு. Best of Craiglist என்று தான் ரசித்த விளம்பரங்களை வேறு பட்டியலிட்டிருக்கிறார். தளத்திற்கு ஒரு விசிட் உடுங்களேன்.. இதனை உபயோகப்படுத்திக்கொள்ள மிகக் கவர்ச்சிகரமான விலை வேறு...ஹி..ஹி..ஹி..தேசிகளுக்கு பிடித்த விலை.

அடுத்த கட்டம்

ராமதாஸ¤க்கு இத்தனை அரசியல் சாதுரியம் வந்ததற்கான காரணங்கள் விளங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மறதியையும், உணர்ச்சி வேகத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறுவதில் நம்ம அண்ணன், மோடி வித்தை காட்டிக் கொண்டு இருக்கிறார். ஆதி காலத்தில் இருந்து, அவருடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்கின்றவர்களுக்கு இது தெளிவாகப் புரியும்.

வெறும் ஜாதிக்கட்சியாக ஆரம்பித்த வன்னியர் சங்கம், இன்று பாட்டாளி மக்கள் கட்சியாகி விசுவரூபம் எடுத்து நிற்பதற்கு, அவருடைய ஜாதிப்பாசம் மட்டும் காரணமல்ல. பதவி மீதும், பதவி தவிர்த்து கிடைக்கும் அதிகாரம் மீதும், பணபலம் மீதும் அவருக்கு இருக்கும் வெறியே என்பது வெளிப்படை. அதிமுக ஆட்சியில், எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டங்களில்தான், முதல் முறையாக வன்னியர் சங்கத்தின் போராட்ட அராஜகம் ஆரம்பித்தது. சரியாக செயல்படாத ஒரு அரசாங்கம், கனிவாக நடந்து கொண்டதால், அது அந்த ஜாதிக்கட்சிக்கு வெற்றியாக முடிந்தது. அங்கு ஆரம்பித்த அவர் பயணம், இன்னமும் கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது.

பின்னர் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியது கூட, ஜாதி ரீதியாக மட்டும் செயல்பட்டால், எல்லா மக்களின் ஓட்டுக்க்ளையும் பெற முடியுமோ என்கிற டாக்டரின் சந்தேகத்தினால் மட்டும் விளைந்ததே. திமுக, அதிமுக என்று மாறி மாறி சவாரி செய்ததில் முகம் இழந்த தேசியக்கட்சிகளைப் போல, பா.ம.க இழக்காமல் இருக்கக் காரணம், காலத்துக்கு ஏற்றார்போல பரபரப்பு கிளப்பி, மக்களின் கண்ணில் மண்ணைத் தூவும் வித்தையை திறம்பட செய்வதே. தமிழ் மொழி பாதுகாப்பு, தலித் மக்கள் முன்னேற்றம், விடுதலைப்புலி ஆதரவு, சினிமா எதிர்ப்பு, பசுமைத் தாயகம் என்பதெல்லாமே டாக்டரின் சந்தர்ப்பவாதத்துக்கு பகட்டான முலாம் பூச மட்டுமே.தனியொருவனாக அங்கும் இங்கும் தாண்டிக் கொண்டிருந்தால், தன் நீண்டகால திட்டங்களை நிறைவேற்ற இயலாதென, இப்போது மற்ற ஜாதிக்கட்சிகளையும் அழைத்து, மூன்றாவது அணி உருவாக்கி, திராவிட கட்சிகளிடமும், மற்ற கட்சிகளிடமும் பேரம் பேசி, தமிழ்நாடு/புதுச்சேரி ஆட்சிக்கட்டில்களை குறிவைக்கும் அடுத்த கட்டத்துக்கு இறங்குகிறார். இந்த வாரம் திருமாவளவனுடன் சேர்ந்து விகடனில் அவர் அளித்துள்ள வாக்கிங் பேட்டியை இந்த முயற்சிகளுக்கான அச்சாரமாகவே நான் காண்கிறேன்.

தமிழ்நாட்டை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது போலிருக்கு...

Thursday, November 04, 2004

யாசர் அராஃபத்

யாசர் அராஃபத் அவர்களின் உடல்நிலை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ஏன் ஒரு மனிதரின் உடல்நிலை குறித்து இப்படிப்பட்ட புனைவுகள் கிளம்ப வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

முதலாவது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர் இறந்தே போனால் கூட அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தன் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடலாம். அராஃபத் இறந்து விட்டதனாலேயோ, நோய்வாய்ப்பட்டு விட்டதாலேயோ,அந்த இயக்கம் விழுந்து விடும் என்று நினைப்பது,தனிமனித கவர்ச்சிகளால் கட்சி ஆரம்பித்து வளர்க்கும் நம் தமிழக ரோஸ்பவுடர் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் கட்சி சிதறி விடும் என்று நினைப்பதற்கு ஒப்பாகும். அவர்கள்தான் இப்படி என்றால், இஸ்ரேல் அதற்கும் ஒரு படி மேல். Arafat is clinically dead என்று அவர்கள் தொலைக்காட்சியிலேயே அறிவித்து விட்டார்களாம். இந்த செய்தியில் அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு.

காலை NPR சானலில், வெற்றி பெற்ற அமெரிக்க முதலாளி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். எலெக்ஷன் வெற்றி மயக்கம் தீரவில்லை. "அராஃபத் மரணத்தை பற்றி உங்கள் ரியாக்ஷன் என்ன ..? எனற கேள்விக்கு
I appreciate it. My first reaction is God rest his soul. my second reaction is We will try to get a separate state for palaestine என்று மிழற்றிக் கொண்டிருந்தார். மிக நிம்மதியாக இருக்கிறார் என நினைக்கிறேன். நன்றாக தூங்கியதாக சொன்னார். இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி பெற்ற எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளைப் போல சொதப்பாமல், உள்ளூரில் வேலைபார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, வாலை சுருட்டிக்கொண்டிருப்பார் என்பது நம்பிக்கை மட்டுமல்ல... வேண்டுதலும் கூட...

எழுத ஒன்றுமே தோன்றுவதில்லை. வெறுமே படித்துக்கொண்டிருந்தால் போதும் என்று தோன்றுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் சுரேஷின் மரத்தடி மடல் வேறு, என் சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தி விட்டது. கடலோடி பரணிதரனின் பனாமா கால்வாய் பற்றி படித்தவுடன், சூயஸ் கால்வாயைப் பற்றியும் படித்தேன். முகுந்த்தின் லினக்ஸ் பதிவு நன்றாக இருந்தது. மரத்தடி நம்பியின் "உங்களை ஏன் சுருக்கிக் கொள்கிறீர்கள்" என்று வலைப்பதிவாளர்களை நோக்கி வீசப்பட்ட கேள்விக்கும், அருள்செல்வனின் கார்ட்டூனுக்கும், வாசன் பிள்ளையின் புஷ் வாழ்த்துப் பாவுக்கும், இணையத்தில் இலக்கியமே இல்லை என்று எழுத்தாளர் பாராவின் புதிய கண்டுபிடிப்புக்கும் ( அவர் குறிப்பிட்ட இணைய எழுத்தாளர்களிலேயே அருமையான கட்டுரை இலக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் :-) ) பதில் சொல்ல வேண்டுமென்று கூட தோன்றியது.

ம்...போங்கப்பா...எலெக்ஷன் சோகம் இன்னமும் போகவில்லை....

Wednesday, November 03, 2004

கேடுகாலம்

விளக்கெண்ணையை தேய்த்துக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பார்கள். அதுதான் கெர்ரிக்கும் நடந்திருக்கிறது. மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கித் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் சமயத்திலே, இந்த லட்சணத்தில் ஓட்டளித்த மக்களைப் பற்றியே சந்தேகமும் வெறுப்பும் வருகிறது.நேற்றுகூட அலுவலகத்தில் என் குழுவில் உள்ள அமெரிக்க தாத்தா ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். புஷ்ஷினுடைய யோக்கியதை என்ன..?? எந்தக் காரணத்திற்காக அவர் மீது அமெரிக்கா நம்பிக்கை இழந்திருக்கிறது என்று ஒரு அரை மணி நேரம் விளக்கமாக பேசினார். பொதுவாக வயதானவர்கள் குடியரசுக்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்று அமெரிக்காவில் சொல்வார்கள். அந்த வயதான சமூகமே புஷ்ஷை விமரிசிக்கிறது என்று சந்தோஷப்பட்ட வேளையில்தான் பிகேஎஸ்ஸின் drudgereport.com எக்ஸிட் போல் கெர்ரிக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. சந்தோஷம் அதிகமாக, வீட்டுக்கு போய் டீவி பார்க்க ஆரம்பித்தேன்.

ப்ளோரிடா முதல் அடி. அது விழுந்தவுடன் விஸ்கான்சின், நியூஹாம்ஷையர் போன்ற மாநில நிலவரங்களும் திருப்தியாக இல்லாத நிலையில் ஓஹையோவை எதிர்பார்க்க ஆரம்பித்த நான் கொஞ்சம் ( சோகத்தில்) சரக்கு விட்டுக்கொண்டு தூங்கியபோது மணி 11:30. காலை எதிர்பார்த்தது போலவே ஓஹையோ, நியூ மெக்ஸிகோ, "ஐயோ" வா மாகாண முடிவுகளை வெளியிடாமல் தொங்கலில் விட்டு, கெர்ரி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்றுமுன்னர் அவரும், புஷ்ஷ¤க்கு தொலைபேசி இருக்கிறார். பாவம்....!!

இன்னம் நாலு வருஷங்களுக்கு எத்தனை அபத்தங்களையும், இன்னம் எத்தனை உலகநாடுகளுக்கு "காரியமும்" பண்ணி வைக்க்ப் போகிறார் இவர் என்று தெரியவில்லை. இராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் செத்துப்போன அப்பாவிகளின் ஆவிகள் சாராயம் குடிக்கப் போனதால், ஜனநாயகத்திற்கு இங்கே சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என்று ஏதோ ஒரு படத்தில் வீரப்பா சொல்வது நியாபகம் வந்து தொலைக்கிறது.


 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...