Sunday, June 05, 2011

பிஷிங்

வளர்ந்த குழந்தை போலத் தான் இருந்தான் பிரசாத். நல்ல ஓங்கு தாங்கான உடல் வாகு. நெற்றியில் குங்குமத் தீற்றல். வெள்ளைச் சிரிப்பு. முழுக்கை சட்டை. அதன் நிறத்துக்கு ஒவ்வாத ஒரு பேண்ட். எல்லாரையும் ஜி..ஜி என்று விளித்துக் கொண்டு, Campion பள்ளியில் தன்னுடன் படிதத பையன்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு காரைக்குடி கல்லூரி ஹாஸ்டலில் சுற்றிக் கொண்டிருந்தான்.

பால்குடி மறக்காத சுடுகுஞ்சுகளே கல்லூரி ஹாஸ்டலில் நுழைந்ததும் வால் முளைத்த குரங்கு குட்டிகளாகி விடுகிற அதிசயத்தில் இது எங்களுக்கு தீராத ஆச்சரியம்தான். ஆனால் கொஞ்ச காலத்தில் அந்த அதிசயம் பழக்கமாகி விடவே “ ப்ரசாத்துன்னா இப்படித்தான் மச்சி” என்று சொல்லிவிட்டு எங்கள் துரத்தல்களில் பிசியானோம்.

எல்லா வளர்சிதை மாற்றங்களையும் தோற்கடித்துவிட்டு, லேப்களில், டூர்களில், கேண்டீன்களில், கல்லூரி கலைவிழாக்களில், இரவு நேர சென்னைப் பயணங்களில், குறும்பு மிக்க வகுப்புத் தோழிகளின் அலப்பரையில் பிரசாத் நடத்தும் பால்யத் திருவிளையாடலகள் எங்கள் காதுகளுக்கு வந்தபடியே இருந்தன. ஆனால் எல்லோருக்கும் இனியனாக, படிப்புகளில் துடியாக, வம்புகளில் சிக்காதவனாக, நடிகை சரோஜாதேவி ஸ்டைலில் தமிழ் பேசும் பிரசாத் தன் வழியில் போய்க் கொண்டிருந்தான். இதையெல்லாம் CECRI யின் ஆஞ்சநேயர், பிரசாத் தன்னைப் பார்க்க வரும்போதெல்லாம் வெண்ணை பூசிக்கோண்டும், வடை மாலைசார்த்திக்கொண்டும் மையமாகப் பார்ட்துக் கொண்டிருந்தார். இறுதியாண்டில் அவனையும் சலனப்படுத்திய ஒரு பெண்ணிடம் ”ரோஜாத்தோட்டம் வைக்கலாம்,சோஷியல் சர்வீஸ் பண்ணலாம் என்று அவன் தன் மனதைப் பகிர்ந்த தகவல் வந்தபோது, எங்களால் அவன் “குணா” ஆனான்.

கல்லூரி முடிந்து, கனவுகள் கலைந்து, நிஜம் தாக்கி, நெஞ்சம் அலுத்து, சலித்து, களைத்து, மலர்ந்து வாழ்க்கை நிலைத்த வருடங்களில் அவன் அமெரிக்காவில் கிழக்கு கடற்கரையில் மணமாகி, குழ்ந்தைகளுடன் இனிதே வாழ்வதாகவும், கிழக்குகரை நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் மெயில், யாஹூ குழுமம், இணைய நிழற்படம் முதலியன மூலம் தெரிந்தபோது சந்தோஷப்பட்டேன்.

நான்கு வருடங்களுக்கு முன், மகனை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துக் கொண்டு ஏரியில் குளிக்கப்போக, பாம்பு கடித்தோ, வலிப்பு வந்தோ, அந்த சபிக்கப்பட்ட தினத்தில் மரணித்து அமெரிக்க தினசரிகளில் கதறும் அவன் மகனின் படத்துடன் அமரனாகி, செய்தியாகப் போனபோது நாங்கள் இடிந்தே போனோம். நல்ல மனம் கொண்ட நண்பர்கள் சிலர் குடும்ப நிதியாக பணம் வசூலித்து அவன் குடும்பத்தை இந்தியா வழியனுப்பி வைத்தது எல்லாம் அந்த துன்பியல் சம்பவத்தின் நீட்சிகள்.

நேற்று அவனிடமிருந்து என் யாஹூ மெயில் முகவரிக்கு எதையோ விளம்பரித்து, எங்கேயோ அங்கத்தினனாகச் சொல்லி மெயில் வந்திருக்கிறது.

அடப் பாவிகளா...!!!!!

Thursday, May 12, 2011

கருவின் கவிதை



ஆச்சரியமாக இருக்கிறது...
எப்படி ஆரம்பித்தது வாழ்க்கை.?
குவளையில் பிறந்து
ஆருரில்
கையெழுத்து பத்திரிக்கை நடத்தி
தமிழ்க்காதல் தொடங்கியது
திராவிடம் நோக்கி திரும்ப
வெண்தாடி வேந்தரையும்
வெள்ளைமனத் துரையையும்
தலைவர்களாய் வரித்து
தமிழும், சமுதாயமும்
அரசியல் நோக்கி நகர்த்த
தொடங்கிய பயணம்..
எத்தனை போராட்டங்கள்
எத்தனை ஊர்வலங்கள்
எத்தனை பாராட்டுரை எத்தனை ஏற்புரை
எத்தனை பட்டங்கள் பதவிகள் மாலைகள் பொன்னாடைகள் மகிழ் விழாக்கள்
எததனை தேர்தல்கள்
எததனை துரோகங்கள்
எத்தனை எத்தர்கள்
அவர்களிடம் கற்றறிந்த பாடங்கள்
எததனை தொண்டர்கள்
குழி பறிக்கும் சீடர்கள்
எத்தனை நடிகர்கள்
கடந்து சென்ற தென்றல்கள்
வேர்விட்ட உறவுகள்...விழுதுகள்..
எல்லாம் தாண்டி .......

தகப்பன் என்ற பெயர் மட்டும் மிச்சமின்று

இந்த தேர்தல் முடிவு
எனக்கு மாலையா...? மலர்வளையமா???

Friday, April 01, 2011

ஆனந்த விகடனின் சேவை


ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஆச்சு.. ஆனந்த விகடனுக்கு? ஒரேயடியாக விஜயகாந்தை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு இருக்கிறது? மறைமுகமாக அம்மாவுக்கு ஆனந்தக் கும்மி வேறு?


தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரை அடித்ததாக பிரச்சினை கிளம்பி, அதை விஜயகாந்தே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை இவர்கள் இந்த வார கட்டுரையில் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்து வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சி இந்த க்ளிப்பிங்ஸில் எக்ஸ்ட்ரா சத்தம் சேர்த்து, லூப்பில் போட்டு ஆகாத்தியம் செய்கிறார்கள் என்றால், ஆ.வி இதை இல்லவே இல்லை என்று தாண்டவமாடி இருக்கிறது . இவர்களுக்கும் மக்கள் டீவிக்கும் என்ன வித்தியாசம்?


ராமதாஸை, கேப்டன் கேள்விகளாக கேட்டால் விகடனுக்கு குதூகலம் கொப்பளிக்கிறது. இதே ராமதாஸ் கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் மு.க வை கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தபோது அவரை நாயகனாக்கி விளையாடிப் பார்த்தார்கள். தமிழ்நாட்டு சாணக்கியனோ விஜயகாந்தின் அடிதடி மேட்டரை இதை “ஒரு மேட்டரே இல்லை” என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.


மு.கவின் குடும்பம் கொள்ளை அடிக்கிறது என்று சொல்பவர்கள் கண்களுக்கு சசிகலாவும், சுதீஷும், பிரேமலதாவும், அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களாக தெரிகிறார்கள் போலும்.


மு.க இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தினால், புலி ஆதரவு, சட்டம் ஒழுங்கு மோசம் என்று நடனம் ஆடுவார்கள். பத்மநாபா கொலைக்கும், ராஜீவ் காந்தி கொலைக்கும் இந்த ஆள்தான் காரணம் என்று கமிஷன் கமிஷனாக இழுப்பார்கள். சர்வதேச அமுத்தல்களுக்கு பயந்து இந்திய அரசே இலங்கை விவகாரத்தில் விழி பிதுங்கி நின்று விலை போனபோது, தமிழக அரசு என்னவோ அமெரிக்க அரசாங்கத்தின் அங்கம்போல அதன் செயலற்ற தன்மைக்கு குறை கூறியதோடு நில்லாமல் தமிழினத்தையே ஏமாற்றி விட்டதாக கூக்குரல் இட்டார்கள்.


எம்.ஜி.ஆர் இலவசங்களை அறிவித்தால் அவரை பொன்மனச் செம்மல் என்பார்கள். கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப மு.க அதை மாற்றினால் மு.க மக்களை பிச்சைக்காரர் ஆக்குகிறார் என்று நாக்கில் நரம்பில்லாமல் புளுகுவார்கள். சொல்லிவிட்டு அம்மையார் அதையே காப்பி அடித்து தன் தேர்தல் அறிக்கையில் போடுவதையும் ராஜ தந்திரம் என்று மெச்சி உச்சிமோர்ந்து ஆனந்த பாஷ்பம் பெருக்குவார்கள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால், எல்லாக் கால கட்டங்களிலும் மு.கவின் எதிரணியில் இருப்பவர்களை பத்திரிக்கைகள் என்ன காரணத்துக்காகவோ போஷாக்குடன் வளர்த்து வந்திருக்கின்றன. காரணம் அவரவர்களுக்கு தெரியும்.


தமிழக அரசியலில் ஊழல் கறை படியாத அரசியல்வாதிகள் வெகு சொற்பம். சமூகத்தில் குறிப்பிட்ட அளவு மாறுதல்களை கடந்த ஐம்பதாண்டு கால அரசியல் பணிகள் மூலம் கொண்டு வந்ததற்காக கருணாநிதியின் ஊழல்களை அவர் தனக்காக வசூலித்துக் கொண்ட சர்வீஸ் சார்ஜ் ஆகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் இருந்ததன் அடையாளம் அவர் இல்லாமல் போகும்போதுதான் தெரியப் போகிறது. அவர் மறைவுக்குப் பின தமிழர்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளட்டும். அவருடைய கடைசி தேர்தலை கேவலபடுத்தி விட்டால் பழையனூர் நீலியின் புத்தம்புதிய காட்சிகள் மறுபடியும் தமிழக அரசியலில் அரங்கேறும்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...