Sunday, June 19, 2016

சிந்தையில் எந்தை

அன்புள்ள அப்பா,
 
  நினைவில் இருத்தி நாட்காட்டியில் குறித்து வைத்தெல்லாம் நான் உங்களுக்கு தந்தையர் தின வாழ்த்துகள் சொன்னதில்லை. அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து புளகித்துப் போகும் பழக்கமும் உங்களுக்கு இருந்ததில்லை. இந்த சடங்குகளையெல்லாம் வெறும் புன்சிரிப்பால் கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தீர்கள். அன்பு உள்ளுறை வெப்பம் போல தொகைந்தே இருந்தது. உங்களை நானும் என்னை நீங்களும் முகத்தின் முன் வாயார வாழ்த்திக் கொள்ளும் வழக்கமெலாம் இருந்ததில்லை எந்நாளும் உங்கள் முதுமை ஏற ஏற நானே யோசித்துதான் சில விஷயங்களை புத்திபூர்வமாக மட்டும் அல்லாமல் உணர்வுபூர்வமாகவும் செய்ய விழைந்தேன்.
 
இன்று நீங்கள் இல்லை. ஸ்தூலம் கடந்த ஸ்நேகிதம் என்றாலும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. உங்கள் மரணம் நீங்கள் வேண்டியபடியே உங்களை வந்தடைந்தது. யாருக்கும் பாரமாக இல்லாமல் படுக்கையில் கிடந்து துன்புறாமல், உங்கள் கம்பீரம் குறையாமல் இறையடி சேர்ந்தீர்கள். சேர்ந்தபோது என் கை உங்களை பற்றி இருந்தது. நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம் என்று நிம்மதியுடன் அறிந்த பிறகே உங்கள் மரணம் நிகழ்ந்தது. ”எந்நோற்றான் கொல் எனும் சொல். என்ற அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் நீங்கள் பெருமைப்படும் விதத்தில்தான் நடந்து கொண்டென் என்று நினைக்கிறேன். முதுமையில் உடன் இருந்திருந்தால் இன்னமும் உவகையுற்றிருப்பிர்கள். எனினும் என்னை வற்புறுத்தி இந்தியா அழைத்துகொள்ள உங்களுக்கு சம்மதமில்லை. மகனென்னும் கடமை இருப்பதைப் போல எனக்கு, தந்தை என்ற கடமையும் இருப்புவதை முழுதுணர்ந்து என் மகவை வளர்த்தெடுப்பதில் முனையச் சொன்னீர்கள். பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வளர்வதும், பிள்ளைகளை நல்ல பெற்றோராக வளர்ப்பதுமே வாழ்வின் ஆகச்சிறந்த கடமையாக சொன்னீர்கள்.
 
அப்பா... உங்கள் மீது முதலில் பயம் இருந்தது. பின் பாசம், பெருமை, மரியாதை, கரிசனை என்று வளர்ந்து இறுதியில் இரக்கமே எஞ்சியது. என்னை வளர்த்தை போல என் கண்மணியையும் நான் வளர்ப்பேனாயின் நீங்கள் என்னை பெற்றதன், நான் பிறந்ததன் அர்த்தம் விளங்கி வாழ்வு முழுமையடைந்து விடும். உங்கள் ஆசிகள் என்றும் எங்களுக்கு உண்டு என்று தெரியும் தொடர் ஓட்டத்தின் (Baton in relay race)”பேட்டன்” தடியை அவனிடம் கையளித்து விட்டு நானும் உங்களிடம் வருவேன்.
 
என் உடலும், திடமும், அறிவும், மொழியும், பணிவும், பண்பும், மாண்பும் நீங்கள் ஈந்தது
நன்றி--யாவற்றுக்கும்.
 
முன்னர் எழுதியவை :
 
 
 

Saturday, June 04, 2016

இகமெங்கும் இறைவிகள்

கமலஹாசனைப் போல கார்த்திக்குக்கும் துணிச்சல் அதிகம். இல்லாவிட்டல் ரசிகர்கள் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து இப்படி ஒரு படத்தை முயன்றிருப்பாரா?  அந்த நம்பிக்கைக்கு வாழ்த்துகள். ஆனால் படம் சூப்பர் ஹிட் லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. ஹிட் அடித்தால் இளைய தலைமுறையும், தாய்மார்களும் கை தூக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படம் கொஞ்சம் கனமான படம்தான். He sprinkles brilliance casually all over, but the audience should be sharp enough to catch them.



கார்த்திக் இதுவரை சொல்லாத அளவுக்கு இந்தப் பிரச்சினையை(பெண்களின் வாழ்க்கை)  உரத்துப் பேசாமல் அணுகி இருக்கிறார்.  உரத்து சொல்லாததால் பார்வையில் இருந்து விடுபட்டுப் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்தத் தலைமுறை ரசித்துப் பார்ப்பதற்கு காட்சிகளும் வசனங்களும் அத்தனை அத்தனை உண்டு. படத்தில் வில்லன் என்று ஆள் இல்லாமல் சந்தர்ப்பங்களில் எல்லாரும் வில்லன் ஆவது அழகு. வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. He should choose a vocal/ contradicting editor next time. Editor provides a different perspective and he should not necessarily think like the Director and just follow his orders. படம் நீளம். எனவே பார்ப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். ரவுடி கூட்டத்தில் திடீரென ஒரு ரவுடி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை பார்த்தவுடன் பம்மி,  தன் நடிப்பை பற்றி சொல்வதும்,  நல்லா பாடுவேண் என்று சான்ஸ் கேட்பதும் ”ஜிகிர்தண்டாவை” நினைவு படுத்துகிறது. அதே போல Rehabilitation center ஆளும் ஜிகிர்தண்டா வாத்யார் சோமசுந்தரத்தை நினைவுபடுத்துகிறார். கார்த்திக் அடுத்த முறை புதிய நட்சத்திரங்களுடன் முயற்சிக்க வேண்டும். .

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை . உண்மைதான். வழக்கமான கோணங்கித்தனங்கள் இல்லாமல் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் “நான் நடிக்கத்தான் வந்தேன். மற்றதேல்லாம் இந்த இடத்திற்கு வருவதற்கான முயற்சிகளே” என்று அவர் சொல்வதெலாம் டூ மச். எந்த டைரக்டர்  படத்தில் நடித்தாலும் அவர் தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கொண்டு வெளுத்துக் கட்டட்டும். அப்புறம் பார்க்கலாம். மனைவியாக வரும் கமலினி முகர்ஜி சரியான தேர்வு இல்லை. முகபாவங்கள் ஒத்துழைக்கவில்லை. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒத்துக் கொள்ளும் அழகான ஹீரோயின்களா இல்லை? என்னிடம் கேட்டிருக்கலாம். ;-)

விஜய் சேதுபதி வழக்கம் போல அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.   அந்த அமைதியான ஆளுக்குள் இருக்கும் மூர்க்கம் வெளிப்படும்போதெல்லாம் கதை திசை திரும்புகிறது. அவர் சிறை வாழ்க்கையும், வீடு திரும்பலும் சுஜாதாவின் ”ஜன்னல் மலரை” நினைவு படுத்துகிறது. இத்தனை மூர்க்கமான ஆள் காதலியிடமும், கடைசியில் மனைவியிடமும்  க்ளீன் போல்ட் ஆகும்போது பரிதாபம் வருகிறது. உண்மையில்  சேதுவின் பாத்திரம் முந்தின காட்சிகளில் எல்லாம் அவஸ்தைப்பட்டு மனதளவில் மக்கி, க்ளைமேக்ஸில் வெறுமே முடிவுக்கு காத்திருக்கிறது. அந்த முடிவு அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு விடுதலை !!!

அஞ்சலி அட்டகாசம். உடம்பு அரைத்து வைத்த இட்லிமாவு பொங்குவது போல போயிருந்தாலும் முகமும், குரலும், நடிப்பும் கை கொடுக்கிறது. அவர் புது மணச்சிரிப்பு, நாள்பட நாள்பட வரும் முதிர்ச்சி, கணவனிடம் காட்டும் சம்பிரதாய ( சம்சார)க் கனிவு, அவன் இறுக்கம் தளர்ந்து நெருங்கி வருகையில் வரும் ஆச்சரிய மலர்ச்சி, அவன் செயல்களின் விளைவான  திணிக்கப்பட்ட தனிமையால் வரும் ஏமாற்றம், அயலானின் அன்புக்கு செவிசாய்த்தும் அவனை நாசுக்காக விலக்கி வைக்கும் சம்பிரதாய ( பரம்பரை) பயிர்ப்பு என்று ......அதகளம். அதுவும் அந்த அயலானை நெடுநாள் கழித்துப் பார்க்கும்போது வரும் இனம்புரியா சங்கடத்தை காட்சியில் காட்டி இருக்கும் நளினம்--- wow - Classic.

 பாபி சிம்ஹா அசலான பாத்திரம். மேலுக்கு சிரித்துக் கொண்டு, ஊரில் உள்ளவர்கலை எல்லாம் வைது கொண்டு,  தன் செயல்களுக்கு உறுத்தலே இல்லாமல்  இல்லாமல் சாமர்த்தியமாக ஞாயம் கற்பிக்கும், வரம்பு மிறிய பிரதி. அவன் மையல் இன்னும் கொஞ்சம் சொல்லப்பட்டிருக்கலாம். சொல்லி இருந்தால் அந்த ராவண ஞாயமும் இன்னும் வெளிப்பட்டிருக்கும். இவர் கார்த்திக் படங்களில் சோபிக்கும் அளவுக்கு மற்ற படங்களில் நடிப்பதில்லை. கார்த்திக்கின் வெற்றியாக இருந்தாலும் இது ஒரு நடிகனின் தோல்வி. பாபி ஜாக்கிரதை.

பூஜா அருமையான படைப்பு. உள்ளதை உள்ளதென்று சொல்லி நிஜம் பேச நம்மில் பலருக்கு இல்லாத தைரியம் அவளுக்கு இருக்கிறது. அதுவே அவள் காதலனையும் கூட மிரளச்செய்கிறது. அவன் லெளகீக வாழ்வுக்கு இழுத்தாலும் அவள் வருவதில்லை. ஏனேனில் அதனால் விளையும் உறவுக்குழப்பங்கள்  தங்களுக்கு தேவை இல்லை என நினைக்கிறாள். பெரும்பாலானோர் புரிந்து கொள்ள முடியாத பாத்திரம். ஆனால் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கார்த்திக் கோடி காண்பித்து இருக்கிறார். இன்னொரு வரம்பு மிறிய ப்ரதி. இந்தப் ப்ரதிகள்  அதிர்ஷ்டவசமாக சேது போன்ற ஆண்களுடன் உறவில் /நட்பில் இருக்கீறார்கள் . அதனால் abuse செய்யப்படுவதில்லை. sigh...

ராதாரவி அடக்கி வாசித்திருப்பது நன்று. சிலை திருட அனுபதி கொடுப்பதும், ஆஸ்பத்திரியில்  நர்ஸம்மாவை அதட்டுவதும் தவிர படம் நெடுக வெறும் பார்வை மட்டுமே. சீனு மோகன் கொஞ்சம் ஓவர். குழப்பமான பாத்திரம். சில காட்சிகளில் நிகழ்வதற்கு  முன்னரே அவர் முகம் ரெடியாகி விடுகிறது - so dramatic. டெல்லி கணேஷ் பொருந்தி இருக்குமோ?

சந்தோஷ் நாராயணன் பெரிய hype. டொய்ங் டொய்ங் என்று மேற்கத்திய சுட்ட இசையை BGM என்று படம் முழுக்க மீட்டி  இருக்கிறார். ஜீவன் இல்லாத  வேறும் ”ஓசை”. இரண்டு பாடல்கள் தேறும். இசைஞானி இந்தப் படத்தை வேறு உயரங்களுக்கு தூக்கி இருப்பார். கார்த்திக் சும்மா சும்மா வசனங்களில் மட்டும் ராஜாவை சிலாகிப்பதை விடுத்து அடுத்த படத்துக்கு அவரிடம் போய் கேட்க வேண்டும்.


பாஸ்கி லிங்க்

ஹிந்து ரங்கன்



 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...