Wednesday, June 29, 2005

என்னதான் சொல்கிறார்..??

உம்மணாமூஞ்சிக்காரர்களுக்கு சொல்கிறாரென்றால் சரி எனலாம். ஏனென்றால் அவர்களுக்கு அது சிகிச்சை மாதிரி.

பேசுங்கள் என்று ஒரு பகுதி எழுதி இருக்கிறார் மதன் இந்த வார குமுதத்தில்.
மதன் மீது எனக்கு அபிமானம் உண்டென்றாலும், சமீப காலங்களில் அவருடைய
அட்வைஸ் எல்லாம் ஒரு "ரேஞ்சு"க்குத்தன் இருக்கிறது.

இந்தப் பிள்ளை எப்போ பேசும்னு நினைக்கனும்..?? ஏண்டா பேசுதுன்னு யாரும் நினைக்கக்கூடாது என்பார் என் தாயார். ஓட்டைப் பானையில் நண்டை விட்டா மாதிரி நான் சிறுவயதில் அவ்வளவு பேசுவேன். கிட்டத்தட்ட 1998 வரை அப்படித்தான் - இல்லை, அவசரப்படாதீர்கள். கல்யாணம் 1999ல் தான் ஆனது.

நிறைய கேக்கணும். காது, மூடாத அவயம். ஞானவாசல் என்று பாலகுமாரன் எங்கோ எழுதினார். அதையும் தவிர, வாயை திறந்து வாங்கிக் கட்டிக்கொண்ட பல சம்பவங்கள் நடந்தன. ரகசியமே தங்காதனால், எல்லோரும் ரிப்போர்ட்டர் என்று ( விகடன் ரிப்போர்ட்டர் பயிற்சியை இணைத்து) ரவுசு விட்டார்கள். அதில் ரிப்போர்ட்டராக முடியாமல் தோற்றுப் போன தலைகளும் அடக்கம் என்பது தனிக் கதை.

எப்போது பேச்சைக் குறைத்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் மெல்ல மெல்ல குறைந்து விட்டது. சின்ன வயதில் திட்டிய அதே அம்மா இப்போதும் திட்டுகிறார் - நான் மிக அழுத்தக்காரனாகி விட்டேனென்று. என் வாழ்க்கையில் நான் உருப்பட ஆரம்பித்ததே, பேச்சைக் குறைத்த பின்தான் சுற்றுப்புறத்தில் உள்ள, நம்மை விட நல்ல ஆத்மாக்கள், அறிவுஜீவிகள் எல்லாம் அமைதியாக இருப்பதை பார்க்க ஆரம்பித்த பிறகு பேசுவது குறைந்தது என நினைக்கிறேன். கிட்டத்தட்ட எழுதுவதற்கும் இது நடக்க ஆரம்பித்து இருக்கிறது இப்போது.

அதைவிடவும், பேசிக்கொண்டே இருப்பதில், நம் இரைச்சல் நமக்கே தாங்காதது போல, மனசு ஆழ்ந்து யோசிப்பதே இல்லை. பேச்சு குறைய குறைய யோசனை அதிகமாகிறது. மற்றவர்கள பேசுவதை கேட்க முடிகிறது. அதிகமாக தேவை இல்லாமல் பேசுபவன் முன்னே உட்கார்ந்து பாருங்கள். கொஞ்ச நேரத்தில் ( நாம் பேசாது இருப்பதால்) தான் உளறுவது தெளிவாகத் தெரிந்து அவன் நிறுத்தி விடுவான். மேலுன் பேசாமல் இருப்பதால் EQ பெரிய அளவில் முன்னெறுகிறது என்று தகவல்களும் உண்டு.

தமிழ்நாட்டில் பாதி வேலை பாழாவதே பேச்சில்தான். திண்ணயிலும் , புழக்கடையிலும் கும்மகோணம் வெற்றிலையும், சீவலும், சுண்ணாம்பும், ஜாதிக்காயும் வைத்து வாயில் அதக்கிக் கொண்டு பேசிப் பேசியே எத்தனை தஞ்சாவூர் குடும்பங்கள் வீணாகப் போயிற்று தெரியுமா..??

பேசச் சொல்கிறாராம்..ம்..ஹும்..

மதன் சன் டீவிக்கு வரப் போகிறார் என்று சந்தோஷத்தில் இருந்தேன். இன்னொரு அரட்டை அரங்கம் தான் இவருக்கும் ஐடியா போலருக்கு.

என்னவோ போங்க...

Tuesday, June 28, 2005

பிறப்பும் பிழைப்பும்

அழுக்கையே சுவாசித்து
இருட்டையே மோகித்து
இண்டு இடுக்களிலும்
சந்து பொந்துகளிலுமே
குடித்தனம் செய்கிறாய்

கழிவறையில் காண்கிறேன்.
சாளவத்தில் காண்கிறேன்
சமையலறையில் காண்கிறேன்
அட..புத்தக அலமாரி கூடவா..??

எத்தனை மருந்தடித்தாலும்
வெவ்வேறு ரூபங்களில்
அவதரித்துக் கொண்டே இருக்கிறாய்
உன்னைப் பார்த்தால்
இல்லை..இல்லை
உன் வாசம் தெரிந்தால் கூட
அருவறுப்பும் பயமும் யாவர்க்கும்.
உனக்கோ யாரை பார்த்தாலும்
பயமும் அவநம்பிக்கையும்
வெறுப்பில் தின்று, வெறுப்பை விழுங்கி
என்ன சாதிக்கிறோம்
என்றெண்ணியோ
கொஞ்ச நாள் கலந்து வாழ விழைந்தாய்
கலக்கவே முடியாதபடி
உன் அழுக்கும், உன் மீதுள்ள அருவறுப்பும்
உன்னை மறுபடியும் தனியனாக்கின.
மீசை இருந்தும் முறுக்க முடியாத்
அல்பன் நீ..
காட்டு விலங்குகள் கூட நிச்சலனமாய்
வாழும் காலத்தே
வீட்டுள் இருந்தும் அமைதி கிட்டா
ஜீவன் நீ..
அணு ஆயுதப் போர் முடிந்தாலும்
நீ இருப்பாயாம்..
என்ன லாபமுனக்கு..?
பிணங்க யாரும் இல்லாமலேயே
தானாக சாவாய் நீ அதன்பின்..

மல்லாக்கத் தூக்கிப் போட்டு
மிதிக்கலாமே என்கிறான் நண்பன்.
கருமம்....
உனது ரத்தம் கூட அழுக்கு
கண்டாலெனக்கு வாந்தி வரும்
பிழைத்துப் போ.

பிகு:

பெற்றோர் ஊரிலிருந்து வருவதால் வீடு சுத்தம் செய்யும் வேலை நடக்கிறது. கரப்பு ... கரப்பு... என்றொரு ஜீவனை அடிக்கடி காண்கிறேன் மூன்று நாளாய்.
அதன் தரிசனம் தந்த அருவறுப்பில் விளைந்த கவிதை ( ?!!)

Monday, June 27, 2005

மப்பும் மாப்பும்

நேற்று ராத்திரி ஒரு கல்லூரி கால நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். என்னுடைய ஹாஸ்டல் தினங்களில் அறைத்தோழன். ஆர்வமாக பார்த்தால் ஏதோ ரிங்கோ இன்விடேஷன் என்றது. இது மாதிரி கொஞ்ச நாளாகவே என் நண்பர்களிடமிருந்து, வெவ்வேறு வெப்சைட்டுகள்- எஸ் எம் எஸ் செய்திகளை பரிமாற வழிவகுப்பவை என்றெல்லாம் போட்டு இன்விடேஷன் வரும். ஆனால் அது ஒரு வகையான விளம்பர உத்தி, அவர்களுக்குத் தெரியாமலேயே வருகிறது என்று ரொம்ப சிந்தித்து, டெலீட் பொத்தானை அழுத்தி விடுவது வழக்கம்.

நேற்று, என் நேரம். லேசாக மப்பில் இருந்தேன். மப்பில் இருந்தால் எனக்கு எல்லாமே கொஞ்சம் சீரியசாக தெரியும். இந்த இன்விடேஷனையும் சீரியசாக
எடுத்துக் கொண்டு அவன் கேட்டிருப்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவன், ஒரு பொத்தானை அழுத்திய உடன்தான் தெரிந்தது...அது என்னுடைய யாஹூ முகவரி புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்த எல்லா பெயர்களுக்கும் ஒரு ரிங்கோ இன்விடேஷனை அனுப்பி விட்டது என்று.

ஐயகோ...தவறிழைத்து விட்டோமே என, காலையில் பார்த்தால் failed delivery என்று கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான மெயில்கள். சரி..என்று உட்கார்ந்து எல்லாருக்கும் ஒரு மாப்பு கடிதம் போட்டு விட்டேன்.

போட்ட ரெண்டாவது நிமிடம் எல்லே வில்லோன் " நான் அப்பவே நினைச்சென்" என்று பதில் மடலில் கண்ணடித்தார். யாஹூ மெஸஞ்சர்ல யாரை வறுத்துகிட்டு இருக்காரோ..?? :-)

ஆகவே சோதரர்களே...சரி..சரி..உங்களுக்குத் தெரியும்.

Monday, June 20, 2005

பாவக்கறை


கல்யாணமான மூணாம் நாளே
அடி விழ தொடங்கிச்சாம்

கொஞ்சம் விவரமறிந்த பெரியவள்
இதே போலொரு சண்டையில்
கைவிரலை நெட்டி முறித்தபடியே
சொன்னது
நினைவிலாடுகிறது.

வெள்ளிக்கிழமை படம் துலக்கி
பொட்டு வைக்காததற்கும்
அடுக்களையில் அகஸ்மாத்தாய்
ஓடிய அதிர்ஷ்டக்கரப்பிற்கும்
சற்றே அதிகமாய் கொதித்துவிட்ட
ரசத்திற்கும்
ஈரம் சொட்டக் குளியறையில் கிடந்த
உள்பாவாடைக்கும்
அந்திசாய விளக்கு
ஏற்றாததற்கும்
அத்தைக்கு காப்பியில்
சர்க்கரை குறைந்ததற்கும்
விசேஷநாளில் வீட்டுக்கு
விலக்கானதற்கும்
அதிகமாய் சிரித்ததற்கும்
உடல் உபாதையில் அசந்து
கண் அயர்ந்ததற்கும்
பிள்ளைகள் மார்க்கு
குறைந்த்தற்கும்

இத்த்னை கால்மாய் நீ
வாங்கிய அடிகளும்
அதன் வடுக்களும் உனக்கு
மற்ந்ததோ இல்லையோ
எனக்கு மற்க்கவில்லை
என் அம்மா...

பொண்டாட்டி தாசனென்று
யார் சொன்னாலும்
பாதகமில்லை என்றுதான்
எனைப் பெற்றவனின் பாவங்களை
இப்போதிருந்து கரைக்க
விழைகிறேன் என்னிலிருந்து
பார்க்கும் பெண்களின்
பாதெமெலாம் நான்
கழுவினால் கூட
தீராது அவன் பாவம்

நீ போனால்தான் உன் அருமை
விளங்கும்
என்கிறேன்.
சாபம் தராதே
என் அருமை அப்படியா
தெரியவெண்டும்
என்கிறாய்.

அம்மா நீ
எனக்கு மட்டுமா..??

Thursday, June 16, 2005

நந்தா எனும் நண்பர்

கூடப் பழகியவர்களை கொலை வழக்கில் சிக்கியதாக பத்திரிக்கைகளில் படிக்கும்போது எப்படி இருக்கும் உங்களுக்கு...??

எனக்கு திக் என்று இருந்தது.

திருவாரூர் முரா.சன்ஸ் ஜவுளிக்கடை எங்கள் நெக்ஸஸ் கம்யூட்டர்ஸ் வாடிக்கையாளர்கள். 1997/98 லேயே ஏறத்தாழ இருபத்தி இரண்டு டெர்மினல்கள்/பிரிண்டர்கள் மற்றும் ஒரு நாவெல் சர்வர் இருந்தது அவர் கடையில். வியாபாரம் சொல்லி மாளாது. கும்பகோணத்தில் இருந்து பஸ் பிடித்து எப்போது திருவாரூர் போய் இறங்கினாலும் கடை ஜே ஜே என்றுதான் இருக்கும். அத்தனை வேலை நெருக்கடியிலும் உபசாரம் பலமாக இருக்கும். பக்கத்து ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காஃபி டிபனுக்கு பிறகுதன் வேலையே. வருஷத்துக்கொருதரம் சுளையாக மெயிண்டனன்ஸ் காண்ட்ராக்ட் பணமும் வந்து விடும்.

அப்போதுதான் எனக்கு நந்தகோபாலைத் தெரியும். அவர்தான் இப்போது கொலைவழக்கு/ விசாரனை என்று அலைக்கழிந்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்துவதாக ஜூ.வி சொல்கிறது. பேர் நந்தகோபால் என்றாலும், நான் நந்தா என்றுதான் விளிப்பேன். மற்ற எல்லாருக்கும் சின்னதம்பி. உயரமான உருவம். ஆளை மயக்கும் பேச்சு. நெற்றியில் நீளக்கீற்றாக குங்குமம். பிஸினஸில் கெட்டி. அந்தக் குடும்பமே வேதாத்ரி மகரிஷியின் பக்தர்கள். என்னைக்கூட ஒருமுறை ஆசிரமத்துக்கு வரும்படி அழைத்தார்கள்

சுற்றுப்பட்ட ஊர்களில் இருந்து திருவிழாவுக்கு வருவது போல கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பணத்துக்கும், வியாபாரத்துக்கும், ஊர் செல்வாக்குக்கும், புகழுக்கும் குறைவே இல்லை. வேண்டும் என்று சொன்னால், தானாகவே வருவதற்கு ஆட்கள் அவருக்கு உண்டு. பெண்ணை ஏமாற்றி, கடைசியில் கொலை செய்து விட்டதாக வழக்கு இப்போது. இதில் உள்ளூர் திமுக தலைகளும் ஏகபட்டது தெரிகின்றன.

என்ன ஆகிறது மனிதனுக்கு..?? எல்லாம் கிடைத்தவுடன் எதையாவது வலிந்து பிடித்து இழுக்கச் சொல்கிறதா..?? தானாக கிடைப்பதை விட, வலிய மேலே போய் விழுவதுதான் ஒசத்தி என்று தொன்றிப் போய் விடுகிறதா..?? ஆன்மிகம், அருமையான குடும்பம் எல்லாம் போதவில்லையா..?? இல்லை எதிலும் ஆழ்ந்து ஈடுபடாமல் உலகத்துக்காக நடித்துக் கொண்டிருக்கிறோமா..??
அண்ணாச்சி, பெரியவால்(ள்) தொடங்கி ஜவுளிக்கடை அதிபர் எல்லோருமே மகளிர் விஷயத்தில் தாறுமாறாக இருப்பதாக செய்திகள் வருவது, என்னை ஒத்த சபல புத்திகாரர்களுக்கு எல்லாம் தலையில் நங் என்று தட்டி வைக்கத்தானா..?? இல்லை மேற்சொன்னவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு கட்டுப்படாமல் சந்தனக்காப்பு/வைரவேல் அணிந்த பொம்மைகளை ஆராதிக்கிறவர்களா..??

கடிக்கக் கற்றுக் கொள்ளுமுன் பல் விழுந்துவிடும் போலிருக்கிறது.

Wednesday, June 15, 2005

என்னுயிர்த் தோழன்

அவருடைய கண்கள் கலங்கி தத்தளிக்கின்றன. குரல் கம்முகிறது.நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல், தூங்காமல் ஏற்பட்ட வயிற்று உபாதையின் விளைவாக பக்கத்து க்யூபிக்கிளில் அடிக்கடி "சத்தம்" செய்கிறார். சாதாரண நாட்களில் இதெல்லாம் நடக்கவே நடக்காது. அவருடைய வயசுக்கு, நிமிர்ந்து விடு விடென்று நடப்பவர், எங்கும் எழுந்தே செல்வதில்லை. தன் தோழனுக்காக கடந்த பதினைந்து நாட்களாக ஓடியும், அவனை இழந்த வருத்தத்தை அடி அடியாக சொல்கிறவரைப் பற்றி யாராவது ரெண்டு வருஷம் முந்தி சொல்லியிருந்தால், தொப்பை குலுங்க சிரித்திருப்பேன்.

இப்போது முடியவில்லை. காரணம், வற்றத் தொடங்கி இருக்கும் தொப்பை மட்டுமல்ல, மாறியிருக்கும் மதிப்பீடுகளும்.



தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து என் நண்பர்கள் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மிகக்குறைவு. நாய் வளர்ப்பது தான் அதிகம் என்றாலும், என் இயற்பியல் ஆசிரியை வீட்டில் மட்டுமே நான் பூனையை செல்லப் பிராணியாக கண்டிருக்கிறேன். உறிஞ்சி உறிஞ்சி தயிர்சாதம் சாப்பிடும் பூனை அது. என் தாயாரின் அதீத சுத்தம் ( பற்றிய உணர்வு) காரணமாக, நாய் பூனை போன்ற பிராணிகளுக்கு எங்கள் வீட்டில் அனுமதி இல்லை. நாய் என்றால் கடித்துவிடும். கண்ட இடத்தில் பிஸ் அடிக்கும். பூனை மயிர் உதிர்ந்தால் ஆகாது. ஆஸ்துமா வரும். தவிரவும் பூனை அழுக்கு பிராணி போன்ற உபரி ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும்.

பெற்றவர்களை வயது வந்த பிள்ளைகள் விட்டுவிட்டு விலகிப்போகும், வயதான காலத்தில் பெரியவர்களை பெரும்பாலும் ஹோமுக்கு அனுப்பும், இருபத்து மூன்று வருஷ மணவாழ்க்கையை தடாலென்று அறுத்துவிட்டு புத்தம் புதுசாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வெட்கப்படும் அமெரிக்க சமூகத்தில், பிராணிகளை போற்றும் குணம் ஆச்சரியமளித்தது முதலில். ஆனால் இப்போதுதான், மற்ற இடங்களின் தாங்கள் எதிர்கொள்ளும் வெறுமையை ஈடுகட்ட இவர்கள் பிராணிகளை நாடுகிறார்களோ என்ற சம்சயம் வருகிறது

முதல் பாராவின் நாயகன் ஜீன் க்லாட்ஸ் ஒரு பூனையை பதினாறு வருடங்களாக வளர்ந்து வந்தார். அவருகே வயசு அறுபத்தி நாலு. அந்தத் தாத்தா, உடல் உபாதை ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால் பூனைக்கு ஏகப்பட்ட தொந்தரவு - அதுக்கும் வயசாயிப் போச்சே. அதற்கு டயாபட்டீஸ் என்பதால், தினம் இருவேளை இன்சுலின் ஊசி போட்டு விட்டு, காலை மாலை வேளைகளில் வாக்கிங் கூட்டிப் போய் விட்டு, அதற்கு சரியான சிசுருஷை செய்து வந்தார். நடுவில் வேறு பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள, நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டு, முன்று நாள் பெட் ரெஸ்டில் இருந்து வந்தது. அதற்கு ஜன்னி வந்தபோது இவர் ஆடிப்போனார். எல்லா கவனிப்புகளையும் தாண்டி போன வாரம் ஞாயிறு அன்று அது இறந்து போனவுடன்தான், தாத்தா நொந்து போய்விட்டார். கிட்டத்தட்ட $ 10,000 செலவு செய்ய தயாராய் இருந்தவர், ஏற்கனவே அதன் சிகிச்சைக்காகவே $3000 செலவு பண்ணி இருப்பார்.

இந்தப் பணத்தில் எத்தனை குழந்தைகளுக்கு பால் தரலாம் என்று யோசிக்க நேர்ந்தாலும், அந்தப் பூனை இல்லாமல் ஜீன் தாத்தாவும் ஒரு விதத்தில் ஏழை என்று தோன்றுவதால் அப்படியெல்லாம் மட்டையடியாக இப்போது யோசிக்கமுடியவில்லை.

"இந்தப் பூனைக்கு இவ்வளவு செய்கிறீர்களே. இந்தியாவில் மனிதர்கள் கூட தன்னை இப்படி பார்த்துக் கொள்வதில்லையே" என்றேன் ஒருமுறை.

" நான் பின்னே வேறு என்னதான் செய்வது வீட்டில் " என்றார் அவர்.

வயசான காலத்தில் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஏதும் இல்லாமல்
மனைவியுடனும் மனஸ்தாபத்துடன் தனித்தீவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், நிஜமாகவே இனி என்ன செய்வார் வீட்டில்..??

"இன்னொரு பூனை ..? என்றேன்.

"சான்ஸே இல்லை. எனக்கு என் கிட்டி கேட்டை மறக்கவே முடியாது" என்றார்

புதுப்பூனையோ இல்லை புதுப்பெண்ணோ, தாத்தா சந்தோஷமாயிருந்தால் சரிதான்.

( போட்டோவில் தாத்தாவின் தோழன் கிடி காட் ( kitty cat) . இரண்டரை வ்ருடங்களுக்கு முன்பு எடுத்ததாம். அப்பவே கிழடு தெரிகிறது பாருங்கள். )

கிசுகிசு பொழிப்புரை



முரண் நகை மாதிரி இருக்கும் இந்த தலைப்பில் அர்த்தமிருக்கிறது. எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் ஆரம்பித்த இந்த மேட்டர் கழுகார் ரேஞ்சுக்கு பறந்து போயிருக்கிறது இப்போது.

கொஞ்ச நாள் முன்பு ஒரு பேட்டியில், "உங்களுக்கும் கெளதமிக்கும் இருப்பது நட்பா..?? என்ற கேள்விக்கு நம்ம உலகநாயகன் " ம்..ஹும். அதையும் தாண்டிப் புனிதமானது" என்று பதிலிறுத்தபோதே பட்சி சொன்னது - என்னவோ மேட்டர் இருக்கு என்று. சாதாரணமாக, கமலிடம் பத்திரிக்கையாளர்கள் பர்சனல் மேட்டர் பேசினாலே முகத்தில் அடித்த மாதிரி சொல்லக்கூடியவர், என்னடா இப்படி பேசுகிறார் என்று நினைத்தேன். கெளதமிக்கு பயங்கரமாக உடம்பு சரியில்லை என்பதையும், அவரை கமல்தான் கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் என்றும் இந்த வாரம் படித்தபோது, வருத்தமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது- இதே வரிசையில்.

கமல் நல்ல நடிகன் என்றபோதும், பர்சனலாக அவரை திரைப்படவுலகில் யாரும் நல்ல மனிதர் என்று சொல்ல மாட்டார்கள். அவருடைய நெருங்கிய சிநேகிதர்கள் வருத்தத்தை கதையாய் எழுதுவார்கள். மனைவிகள் தொடர் எழுதுவார்கள். டைரக்டர்கள் அறை வாங்கிய கதையை எழுதுவார்கள். மலர் விட்டு மலர் தாவும் வண்டர், ஸ்த்ரீ லோலர் என்று ஆளுக்காள் காரணப் பெயர்கள் வேறு. சிவாஜிக்கு நான் பையன் மாதிரி என்று சொல்லிக் கொண்டவர், சிவாஜியின் சிலையை செய்த ஸ்தபதி ஒருவரை கவுரவக் குறைச்சலாய் நடத்தியது சமீப செய்தி. அதனால்தான் அவரிடமிருந்து உணர்ச்சி பூர்வமான பேட்டியோ, இல்லை இன்னாருக்கு நான் நெருக்கம் என்று சொல்லிக் கொண்டோ பேட்டி வரும்போது நம்புவதற்கு கடினமாயிருக்கும். அதையும் தாண்டி கமல் என்னும் திறமையான கலைஞனுக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் கெளரவம் ஜகப்பிரசித்தம் - எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதுபோல் அடையாள மறைப்பு விஷயம் அல்ல இது.

ஒரு நடிகைக்கு உடம்பு சரியில்லை என்றாலே " ஓ..எய்ட்ஸா இருக்கும்" என்று அனுமானிக்கிற " சிறப்பு" பெற்றிருக்கும் சமூக அமைப்பில், தனிவாழ்க்கையில் தான் தந்த/ பெற்ற இத்தனை காயங்களோடு , வயசான காலத்தில் கவுதமி மாதிரி நோயுற்ற ஸ்நேகிதியை கவனித்துக் கொள்ள ஒரு ப்ளேபாய் நடிகனால் முடியுமென்றால்,

அது மனசுய்யா....

Tuesday, June 14, 2005

புருஷன்

என்ன பிடிக்கவில்லை
என்று கேட்கிறாய்
என்ன சொல்வதென்றும்
எத்தனை சொல்வதென்றும்
யோசித்து மாய்கிறேன்

சத்தம் வர மெல்வதையும்
பல்கறையுடன் சிரிப்பதையும்
சங்கீதம் அணைத்துவிட்டு
அசட்டு நாடகத்தை
ரசிப்பதையும்
நீர் தளும்பகீழ் சிந்திய
நம் செல்வத்தின்
கண்நீர் சிந்த வெளுப்பதையும்
சேற்றிலே கை வைத்து
சாந்துக்கு குழைப்பதுப்போல்
சோற்றிலே உழப்புவதையும்
நின்றுகொண்டே நீரொழித்து
கழிப்பறை கோலமிடுதலையும்
அக்குளைச் சொறிந்துகொண்டே
அடுக்களைக்குள் வருவதையும்
அயலார் முன்னிலையில்
அநாகரீகமாய் நடப்பதையும்
ஏகத்துக்கு மதுவருந்தி
இரவெலாம் உளறுவதையும்
ஊர்மேய்ந்து நீ வர
அதுவே உள்ளிருக்கும்
எனக்கும் விருப்போவெனும்
குற்றக் குமைச்சலில்
எனை சீண்டுவதையும்
கேட்கவே பிறந்தோன் போல
கூசும் கேள்வியாய் கேட்டு
வாய் வீசுவதையும்
மெல்லிய உணர்வெதுவும்
இல்லவே இல்லாமல்
ஆண்மை என்பதை
முரடு என்று மொழி பெயர்க்கும்
என் அசட்டு ஆம்பிளையே...

கேள்வியாய் கேட்டுவிட்ட
ஓவென்று உன் கதறலில்
இருக்கச் சம்மதித்தவளை
முன்னிலும் வேகமாய்
வெறியோடு பின்னிரவில்
புணருமுன்னை கண்டெனக்கு
ஆயாசமாய் இருக்கிறது.

நானென்ன வெறும் துவாரமா..?
எனில் நீ எதற்கு ஆறடியில்

Monday, June 13, 2005

Closer

மாண்டீயின் பதிவிலோ பின்னூட்டத்திலோ இந்தப் படத்தைப் பற்றிய சிபாரிசைப் பார்த்தேன். எடுத்தேன்.



டைட்டான படம் என்று சொல்வார்களே. அப்பேர்ப்பட்ட படம். வசனங்கள் முஞ்சைக் கிழித்து உள்ளிருக்கும் உண்மையை ரத்தமும், நிணமுமாக அறிமுகப்படுத்துகிறது. நல்லவனாக இருக்கும் ஒருவன், அநியாயமாக சீண்டப்பட்டு குதறப்பட்டால், எந்த அளவுக்குப் போகிறான் என்பதை பார்க்கையில் அய்யோ என்று வருகிறது. சில படங்களின் காட்சி அமைப்புகளில் தெரியும் அதீதமான விஷயங்கள், அது செக்ஸோ/ வன்முறையோ கொஞ்சம் ஜீரண பிரச்சினையை உண்டு பண்ணும். ஆனால் சில படங்களில் காட்சிகளின் துணையற்று வெறும் வசனங்களும், முகபாவங்களுமே திகைப்பை உண்டுபண்ணி அடி வயிற்றில் கல்லைக் கட்டிப் போட்டது போல இருக்கும். க்ளோஸர் இரண்டாம் வகை.

செய்தித்தாளின் ஆபீச்சுவரி எடிட்டர் லாரி என்ற ஒருவன் லண்டன் தெருக்களில் ஆலிஸ் என்றொரு இளம்பெண்ணை சந்திக்கிறான். பழக்கத்தில் காதலாகி மணந்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அன்னா என்ற இன்னொருத்தியை சந்திக்கிறான். போட்டோகிராஃபரான அவள் மேலும் இவனுக்கு ஒரு "இது". அவள் ஏற்கனவே விவாகரத்தானவள். எடிட்டர் கல்யாணமானவன் என்று தெரிந்த அவள் மறுக்கிறாள்.

இதற்கிடையில், எடிட்டர் இனையத்தில் பெண் பெயரில், சாட் பண்ணிக் கொண்டிருக்கும்போது, எவனோ ஒருத்தனை ( டான்), சீண்டி விட்டு, போட்டோகிராபரின் பெயரை தன் பெயராகச் சொல்லி, நேரில் சந்திக்க அழைக்கிறான். துரதிருஷ்டவசமாக சந்திக்க வரச் சொன்ன அந்த இடத்தில் போட்டோகிராபர் இருக்க, தேடி வரும் இணைய ஆசாமி டான் போட்டோகிராபரை மணந்து கொள்கிறான்.

கொஞ்ச நாள் கழித்டு ஒரு புகைப்பட கண்காட்சியில் இரு ஜோடிகளும் ( பரஸ்பரம் அறிமுகப்படுத்தப்படாமல்) தனித்தனியே சந்திக்கிறார்கள். எடிட்டருக்கும், போட்டோ அம்மணிக்கும் தீப் பிடிக்கிறது. விஷயம் இரண்டு பக்கமும் தெரிந்து விட, இரண்டு ஜோடிகளும் நாலு ஆசாமிகளாகி, பிறகு மூன்றாகிறார்கள் - எடிட்டரும் போட்டொ அம்மணியும் ஈருடல் ஓருயிர் ஆவதால். சோகத்தில் டான் தண்ணி அடித்துக் கொண்டு ஸ்ட்ரிப் க்ளப், பார் என்று அலைய, ஆலிஸ் தன்னுடைய பழைய தொழிலான ஸ்ட்ரிப்பர் வேலைக்குப் போய் விடுகிறாள். யதேச்சையாக ஒரு க்ளப்பில் அவளை சந்திக்கும் டான், அவளுடைய சோகம் தன் சோகத்தை ஒத்ததென்று சொல்லி அவளை மணக்க விருப்பம் தெரிவிக்கிறான். " I dont want to be your revenge fuck" என்றவள் மறுக்க, இவன் அல்லாடுகிறான். டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க வரும் மாஜி மனைவியான போட்டொ அம்மணியை மறுபடியும் சேர்ந்து வாழ வற்புறுத்த, அவள் கையெழுத்து வாங்குவதிலேயே குறியாக இருக்கிறாள். "சரி .. For old times sake, கட்டக் கடேசியா ஒரு முறை படுத்துக்கலாம். அப்பதான் சைன் போடுவேன்" என்றவன் பிடிவாதம் பிடிக்க, பரிதாபப்பட்ட அவள் சம்மதிக்கிறாள். பேச்சுவாக்கில், சந்தேகப்பட்ட எடிட்டரிடம், படுத்துக் கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ள, அவன் அவளை சந்தேகப்படுகிறான். " அட போடா ஜாட்டான் ( நன்றி: டோண்டு ஸார்) என்று வீசிவிட்டு மறுபடியும் டாக்டருடன் போய் செட்டிலாகி விடுகிறாள் இவள்.

கண்ணீரும் கம்பலையுமாக வரும் எடிட்டரிடம், "உனக்கு ஃபோட்டோ அம்மணி கிடையாது. நீ அலிஸிடம் போ. நான் அவளை ஸ்ட்ரிப் க்ளப்பில் பார்த்தேன். அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள் என்றவன், எடிட்டர் கிளம்பும் தருணம் அவனுடைய மிச்ச சொச்ச வாழ்க்கையயும் காலில் போட்டு நசுக்க
" ஆலிஸை நான் அனுபவித்தேன்" என்று சொல்லி ஒரு பொய் குண்டைப் போட்டு அனுப்புகிறான். இந்த விஷம் எடிட்டர் மனசில் அடி வண்டலாய் இருந்தாலும், ஆலிசை அவன் மறுபடி ஏற்றுக் கொள்கிறான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து சந்தித்த விஷயத்தைப் பேசுகையில், டான் உடனான ஸ்ட்ரிப் க்ளப் சந்திப்பில் ஒன்றுமே நடக்கவில்லை என்றவள் சொல்ல, மறுபடியும் அவளை சந்தேகப்பட்டு ஆபிச்சுவரி எடிட்டர் ரோட்டுக்கு வருகிறான்.ஆலிஸ் எல்லாவற்றையும் புறங்கையால் துடைத்து விட்டு, அமெரிக்கத் தெருக்களில் அக்கம்பக்கத்து ஆண்களை எல்லாம் ஜொள் வெள்ளத்தில் நனைய விட்டு நடந்து கொண்டு புது வாழ்க்கையை தொடங்குகிறாள்.

நடாலி போர்ட்மேன், பர்ஸூ( ஜூலியா ராபர்ட்ஸ்),ஜூட் லா, க்ளைவ் ஓவன் நடித்த இந்தப் படம் சமீப காலங்களில் பார்த்ததில் மிகச் சிறந்த படம். ஃபேமிலி சப்ஜெக்டிலேயே ஹாரர் எஃபக்ட் கொட்ண்டு வந்து, படம் முழுதும் வயிற்றில் ஆட்டோ ஓடும் உணர்வு வந்த படம். மொத்த பாத்திரங்களிலும் அசத்தோ அசத்தென்று அசத்தியவர் ஆலிஸாக நடித்த நடாலி. நேரில் இந்த மாதிரி பெண்களைப் பார்த்தால் நான் டவுசரிலேயே சூச்சு போய் விடுவேன் என்றாலும் எனக்கு அவளை ரொம்பப் பிடித்தது. அவளின் உறுதியும், ஒற்றைச் சொல்லில் அநாயாசமாக நிராகரிக்கும் coldness ம், ம்...கலக்குகிறார் அம்மணி.

எனக்கு ஒன்று புரியவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் கேள்விப்பட்ட சம்பவங்களிலும், சினிமாவிலும் அம்மணிகள் யாருடனாவது ஓடிப்போனால், ஆண்பிள்ளைகள் பின்னாலேயே போய், அழுது கதறி, மறுபடியும் தன்னுடன் வாழ வருமாறு அழைக்கிறார்கள். கொஞ்சம் கூட தன்மானமும், சுய கெளரவமும் இல்லாமல், இப்படிப் போய் அழைப்பதற்கு காரனம் லவ் என்கிறார்கள்.இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன்னை மதிக்காத இன்னொரு உயிரை, இப்படி வெட்கங்கெட்டத்தனமாக பின்னே போய் கெஞ்சுவதற்கு பெயர் லவ்வா..?? அது பரஸ்பர மரியாதையிலும் நெருக்கத்திலும் ஏற்படுவதில்லையா..?
தன்னை உதாசீனப்படுத்தி, இன்னொருவனை தெரிவு செய்யும் - பெண்கள் அத்தனை சீக்கீரம் இம் மாதிரி முடிவுகள் எடுப்பதில்லை - அவளை லவ் பண்ணுவது அத்தனை தேவையா..?? பெண்கள் வீக்கர் செக்ஸ் அல்ல. ஆண்களதான் என்று சொல்வதை ஆணித்தரமாக நிரூபணம் செய்யும் உதாரணம் இது.

குழந்தைகளுடன் பத்திரமாக தூங்க வைத்து விட்டு பார்க்க வேண்டிய படம் இது.

Friday, June 10, 2005

புல்லரிக்குதுபா....



ஹோம்லியா உள்ளே நுழைஞ்சீங்க... திடீர்னு தடாலடியா கிளாமரில் கலக்கறீங்களே?

‘‘சினிமா என் தொழில்! செய்ற வேலைதான் எனக்குத் தெய்வம். இப்பவும் ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் போய் நின்னதும் மண்ணைத் தொட்டுக் கும்பிடுவேன். பூஜை போடும்போது, டைரக்டர் காலில் விழுந்து வணங்குவேன். தமிழ் சினிமா எனக்குச் சோறு போடுது. எங்கேயோ இருந்தவளைத் தூக்கி வந்து, தொட்டிலில் போட்டுத் தாலாட்டுது. அந்த நன்றி என் மனசில் இருக்கு!

சினிமாவில் எனக்கு என்ன மாதிரி வாய்ப்புகள் வருதோ, அதில் எனக்கு ஏத்த கேரக்டர்களில் நடிக்கிறேன். பாவாடை& தாவணி போட்ட ஸ்கூல் பொண்ணா நடிச்சேன். திருத்தமா சேலை கட்டின பொண்ணாவும் செய்தேன். இப்போ ஜீன்ஸ், டாப்ஸ்னு சிட்டி பெண்ணா சிம்புவின் படத்தில் கலக்குகிறேன். சிம்ரன், சிம்ரன்னு தமிழ்நாட்டு ஜனங்க கொண்டாடினாங்களே, அவங்க என்ன கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டா? கதையும் கேரக்டரும்தான் முக்கியம். சும்மா சேலை மட்டும்தான் உடுத்துவேன்னு சொன்னால், என்னைத் தூக்கி ஓரமா உட்கார வெச்சிடுவாங்க. எனக்கு ரொம்ப காலம் சினிமாவில் இருக்கணும்னு ஆசை! என்கிறார் நயன்தாரா.

பொண்ணு பொழைச்சிக்கும்டோய்...

Wednesday, June 08, 2005

ஹையா..நானும் எழுதிட்டேன்...

"புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க" என்று கேட்ட கல்லூரி கால ஸ்நேகிதிதான் என்னை புரட்டிப் போட்ட முதல் புத்தகம். கிட்டத்தட்ட அதே சாயலான கேள்வியை இன்று காலையில் தன் வலைப்பதிவில் எழுதிய முகமறியா நண்பன் வைரமணி என்னை வாய் பிளக்க வைத்த சமீப காலப் புத்தகம். சக மனிதர்கள் மீதான கனிவை மனிதர்கள் அல்லாமல் புத்தகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏலுமா என்ன..??

ஆனால் இப்படியெல்லாம் யோசிக்க பிறக்கும் போதே வாய்ப்பதில்லை. எங்காவது தொடங்கத்தான் வேண்டி இருக்கிறது. காதலர்களுக்கிடையேயான அர்த்த்ம் பொதிந்த மெளனத்துக்கு வர, முதலில் அவர்கள் பேசி பழக வேண்டுமல்லவா..??

அப்படித்தான் நான் படிக்க ஆரம்பித்த கதையும்.

இன்னெதென்றில்லை..எது கிடைத்தாலும் படித்த காலம் ஒன்று உண்டு. எங்கள் பகுதியில் எனக்கு அடையாளமே " அட..இவ்ளோ பெரிய கண்ணாடிய போட்டுகிட்டு ரோட்டுல படிச்சிகிட்டே போவானே..அவனா.." என்பதுதான். ஆனால் நண்பர்கள் சொல்லிக் கொள்வது போல அத்த்னை உயர்வான புத்த்கங்கள் இல்லை. ரத்னபாலா, பாலமித்ரா, அம்புலிமாமா, பூந்தளிர், இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரேக், வேதாளர் தொடங்கி குமுதம், விகடன், கல்கண்டு, ராணி, சாவி, குங்குமம், இதயம், தாய் என்றாகி
ராணிமுத்து, மோனா, மாலைமதி, பாக்கெட் நாவல் பக்கங்களில் விழுந்து பிறகு கிடைதத சந்து பொந்துகளில் எல்லாம் தேர்வு என்ற ஒன்று இல்லாமலேயே படித்த காலமது. முக்கிய காரணம், காசு கொடுத்து வாங்கிப் படிக்க அப்போது வசதி இல்லை. அக்கம்பக்க வீடுகளில் இரவல் வாங்கி, நண்பர்களிடம் கெஞ்சி படித்த காலம். தாத்தா வீட்டு ஓட்டைப் பெட்டியில் கிடந்த பொன்னியின் செல்வன் மட்டும் நாலாவது/ஐந்தாவது படிக்கும் போதே படித்த முதல் நல்ல எழுத்து.

கல்லூரி காலத்தில் நல்ல தமிழ் நட்பு வட்டம் இருந்தாலும் அப்போதும் ரொம்ப நல்ல புத்த்கங்கள் ஏதும் படித்தேனில்லை. சின்ன வயதில் இருந்து சுஜாதாவை தொடர்ந்து வந்திருந்தாலும், எல்லோரையும் போல வயசுக் காலத்தில் பாலகுமாரன் அதிகம் படிக்க ஆரம்பித்தேன். இப்போதைய பாலகுமாரன் எப்படி இருந்தாலும், அந்த நாளைய பாலகுமாரன் மனசுக்கு ரொம்ப அணுக்கமானவராக இருந்தார். பிறகு பிழைப்பு, உத்தியோகம், வாழ்க்கை என்றெல்லாம் அலைந்த தருணங்களில் படித்தது கூட இப்போதெல்லாம் நினைவில் இல்லை. அதெல்லாம் ஆங்கில அறிவுக்காக படித்ததும் மற்றும், சுய முன்னேற்ற நூல்கள் மட்டுமே.

சமீபமாக இணைய நண்பர்களின் வாயிலாக பல நல்ல புத்தகங்களின் அறிமுகமும், விமர்சனமும் கிடைத்து, இணையம் மூலம் மாயவரத்தில் வாங்கி வைத்திருக்கிறேன். ஜூலையில் இங்கு வரும் பெற்றோர் கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கிறேன். வெகு நாளைக்குப் பிறகு மொத்த்மாக படிக்கப் போகும் பெரிய மூட்டை அது.

என்னிடம் இருக்கும் மொத்த புத்தகங்கள் - 150 முதல் 200 வரை ( ஆங்கிலமும் சேர்த்து)

என்னளவில் மறக்க முடியா புத்தகங்கள் :

முன்கதை சுருக்கம் - பாலகுமாரன்

பொன்னியின் செல்வன் - கல்கி

மோகமுள் - தி. ஜானகிராமன்

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.முருகன்

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி

அக்னிச்சிறகுகள் - கலாம்

மனம் இறக்கும் கலை - ஓஷோ

ஆங்கிலத்தில் படித்தவை எல்லாம் பெரும்பாலும் பொழுதுபோக்கு இனிப்பு தடவி ஆங்கில அறிவை விருத்தி செய்ய படித்தது. உள்ளடக்கம் சார்ந்து புத்தகங்கள் தேர்வு செய்து இனிதான் படிக்க வேண்டும்.

அதுதான் இத்தனை புத்தகங்கள் கொடுத்திருக்கிறீர்களே.

கடற்கரையில் நின்று கொண்டு வாயைப் பிளந்து பார்க்கும் பூனை ஞாபகம் வருகிறது எனக்கு.

கூப்பிட யாரும் மிஞ்சி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கூப்பிட விரும்பியவர்கள் எல்லாம் ஏற்கனவே கூப்பிடப்பட்டு/எழுதி விட்டார்கள். மண்டையை சொறிந்து கொண்டு ஞே என்று முழிக்க வைத்து, படிக்க வேண்டியவைகளின் பட்டியலை நினைவு படுத்திய என் ரூம்மேட்டுக்கு

... தேங்கஸ்.

Monday, June 06, 2005

அட கெரகமே...

அலுவலக சம்பந்தமான பயிற்சி வகுப்பு இந்த வாரம் முழுவதும் எனக்கு காலையில் வகுப்பில் உட்கார்ந்திருந்தபோது, மரியாதைக்குரிய ஒரு நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

"என்னய்யா...உம் பேரை இப்படி புடிச்சி இழுத்து விட்டுட்டு இருக்காங்க. நீங்க வகுப்புல உட்கார்ந்திருக்கீங்க" என்றார் நக்கலாக.

" ஆமாம் சார். காலையிலேயே படிச்சேன். இதுக்கெல்லாம் என்னத்த பதில் சொல்றதுன்னு விட்டுட்டேன். நானெல்லாம் தமிழ்த்தாய்க்கு சாப்பாடு போடணும்னோ, வியாபாரம் பண்ணனும்னோ இணணயத்துக்கு வரலை சார். விகடன் குமுதம் படிச்சு போரடிச்சு போயி, சரி நாமளும் எழுதலாம். நம்மளை மாதிரி எழுதறவங்களையும் படிக்கலாம்னு நினைச்சுத்தான் வந்தேன். இப்ப பாத்தா, நெலமை ரொம்ப கட்டுக்கடங்காம போயிட்டா மாதிரி இருக்கு. எழுதறதை தவிர, அதையும் தாண்டி ரொம்ப பேரு வாழ்க்கையில முக்கால்வாசி நேரத்தை இதுலயே செலவிடறாங்க போலிருக்கு. போன் பண்ணி, சாட் பண்ணி, முகமூடிப் பேருலயே நாலஞ்சு வலைப்பூ ஆரமிச்சு வச்சுகிட்டு, அவன் இவனோட சொந்தக்காரன். இவன் அவனோட மச்சான், மாமன்னு வேண்டாத வேலையை பேசிக்கிட்டு அலையறானுங்க. கடைசில அவனுகளுக்குளேயே அடிச்சிகிட்டப்புறம் இந்த மாதிரி கருமம் புடிச்ச சமாசாரமெல்லாம் வெளியே வருது. நம்மளை பொறுத்தவரைக்கும் எது செஞ்சாலும் சொந்தப் பேருலதான் செய்யறதால ( நண்பர் சுரேஷ் கண்ண் கூட ஒருகாலத்தில என்னைத் திட்டிக் கொட்டினார். ஆச்சரியப்பட்டார். இப்ப இதெல்லாம் பாத்த பின்னாடி சொந்த பேருல பேசற அது என்ன "மை".. அந்த மையோட மகிமை அவருக்கு புரிஞ்சிருக்கும்.) இந்த கருமத்துலயெல்லாம் இறங்கிகிட்டு ஸ்டேட்மெண்டு விடணுங்கறே அவசியமில்லே.நீங்களும் இதெல்லாம் கண்டுக்காதீங்க. ஜாலியா ஏதாவது எழுதுங்க சார். நடிகை படம் வேணுன்னா சொல்லுங்க, நான் தர்றேன்னேன்.

ஆனாலும் பாருங்க. சாயங்காலம் வந்ததுக்கு அப்புறம் மிச்ச சொச்ச சிங்காரத்தையும் படிச்சு முடிச்சேன். "நரகலை" ( :-) ) மிதிச்ச மாதிரி இருந்துச்சு. மத்ததை விடுங்க, நாங்க போன்ல பேசிக்கிட்டதையாவது ஏதோ சொல்லணும்னு தோணிச்சு. ஏன்னா, நாள் கழிச்சு சொன்னா "முதிர்ச்சி" ங்கிற பக்குவத்தையும், நம்மைப் பத்தி யாராவது கண்டமாதிரி பேசினா நமக்கு விளம்பரம் குடுக்கறாங்கன்னும் நினச்சுக்கிற "பக்குவம்" இன்னமும் வரலை பாருங்க.

அதான் சொல்லி வச்சேன். வர்ட்டா...:-)

Friday, June 03, 2005

இப்போதும் எழுத வைப்பது...

வேறென்ன ...விகடன் தான்.

இந்த வார விகடனில் பல நல்ல பேட்டிகள். முக்கியமாய் என்னைக் கவர்ந்தது மணிரத்தினம் மற்றும் பாலு மகேந்திராவின் பேட்டிகள்.

டைம் பத்திரிக்கையால் நாயகன் படமும் இந்தியப் படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை படித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதில் முழுதாக ஒப்புதல் இல்லை. நாயகன் முதல் முறை பதின்ம வயதுகளில் பார்த்தபோது ஒரு பிரமிப்பு தோன்றியது நிசம். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான அப்ரோச் - தயாரிப்பாளருக்கே தெரியாமல் ஆழ்வார்பேட்டை பையன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்து விட்ட நல்ல படம் என்று கமல் ஒரு முறை சொன்னார். அதற்குப் பிறகு நாயகன் பலமுறை பார்த்து விட்டேன். அதன்பிறகு அதை விட நல்ல படங்கள் பலதை பார்த்து விட்டதாலோ அல்லது வெளிதேச படங்கள் பார்த்த பாதிப்போ - என்னவோ தெரியவில்லை - நாயகன் படத்தின் சில காட்சிகளில் இருந்த மிகையான ட்ராமடைசேஷன் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. கமர்ஷியல் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டிருந்த சில காட்சிகள் தனியாக தெரிந்தது. மணியே ஒத்துக் கொள்வது போல அவர் கமர்ஷியல் டைரக்டர்தான் என்றாலும், டைம் பத்திரிக்கை - காட்ஃபாதரை தழுவி எடுக்கபட்ட ஒரு இந்தியப்படத்திற்கு ( இதுவும் கமல் பேட்டியில் சொன்னதுதான்) கொடுத்திருக்கும் இடம் கொஞ்சம் அதிகம்தான் எனத் தோன்றியது. ஆனால் ஒன்று சொல்லவேண்டும், மணியின் அடக்கமான பேட்டி இருக்கிறதே அதுதான் என்னை மிக மிக ஆச்சரியப்படுத்திய விஷயம். ஒரு படம் எடுத்துவிட்டு அது ஜெயித்தவுடன் துள்ளுகின்ற ( தினகரன் பரிசு விழாவில் சிம்புவின் பேச்சு) ஆட்கள் நிறைந்த இந்த உலகத்தில், இத்தனை காலம் சொல்லிக்கொளும் வகையில் தரமான படங்களைக் கொடுத்தவர் பேசும் இத்தனை அடக்கமான பேச்சு - உண்மையில் நாயகன் மணிதான்

பாலுசாரின் பேட்டியும் இதம் - சிஷ்யன் பாலாவைப் பற்றி சொல்லும் சில வரிகள் கொஞ்சம் மிகையாக இருந்தால் கூட - உணர்வு ரீதியான ஆசாமி என்பதால் அதையும் மன்னித்து விடலாம். "அது ஒரு கனாக்காலம்" எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கிற ( மார்க்கெட்டிங்கோ..??) சித்தரிப்பு கலந்த ஒரு பேட்டி. மற்றபடி கருப்பு கதாநாயகர்கள் ஜெயிப்பதைப் பற்றி அவர் சொல்வது கொஞ்சம் ஓவர்தான். மில்ஸ் அண்ட் பூன் கதைகளிலேயே கதாநாயக வருணனை Tall , dark and handsome என்றுதான் வருகிறது. தமிழ்நாட்டுப் பெண்களில் உளவியலும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுக்குத்தான் என்பதற்கான அந்தரங்கக்காரணங்கள் பாலுவுக்கு தெரியாததில்லை. ஆனால் சமையலையும் க்ரியேட்டிவிட்டியையும் இணைத்து அவர் சொன்ன வாக்கியம்தான் சிக்ஸர். எனக்கு அதில் பரிபூரணமான ஒப்புதல் உண்டு - நானே உணர்ந்திருக்கிறேன் என்ற வகையில். பாலுமகேந்திராவின் ஈழப்பின்புலம் எனக்கு சமீப நாள்வரை தெரியாது. அவருடைய கடைசி ஆசையும் படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது.

பொதுவாகவே விகடனின் விருந்து இப்போது கொஞ்சம் சுவைதான் என்றாலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமில் கணையாழி பற்றி, இஸ்லாம் பற்றி, நியூமராலஜி பற்றி, ராமாநுஜன் பற்றி எழுதி இருக்கும் எல்லாவற்றையும் விட்டு விட்டு கவிஞர் எஸ். வைத்தீஸ்வரனின் மிகச்சாதாரண ஒரு கவிதைக்கு போடும் இந்தப் படத்தில் இருக்கிறதுதான்

....நெம்பர் 1 க்கான ரகசியமோ..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...