Sunday, January 30, 2005

நன்றியும் வணக்கங்களும்



"டாட்டா" சொல்லும் நேரம் வந்து விட்டது.

கடந்த ஒரு வார நட்சத்திர அந்தஸ்து பல புதிய அனுபவங்களை தந்திருக்கிறது. சாதாரணமாக படிக்காத பல வலைப்பூக்களை படிக்க முடிந்தது. பல உண்மைகள் விளங்கின. திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் யாரும் முனைந்து, அந்தளவு எழுதுவது இல்லை. எனவே புதிதாக வந்திருக்கும் வலைப்பதிவர்கள் மேற்சொன்ன நாட்களீல் நிறைய எழுதினால், நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். அதைப் போலவே சனி, ஞாயிறு எழுதுவோரும் குறைவே.

இங்கே எல்லா விதமான வலைப்பதிவரும் இருக்கிறார்கள். ஜாலிக்கு, கேலிக்கு, லாலிக்கு மற்றும் ஜோலிக்கு என வகைவகையாக இருந்தாலும், ஜோலிக்கு எழுதுபவர் குறைவு. அவற்றிலும் வாசகர் எதிர்வினை கிடைப்பது மிகச் சிலருக்கே. அதனால் சொர்ந்து போகாது அவர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். உடனடியாக கிடைக்கும் பின்னூட்ட "பலே" க்களை விட, நீண்டகால பயன் முக்கியம் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. அவர்கள் அவ்வப்போது சில ஜாலி பதிவுகளையும், லாலி பதிவுகளையும் போட்டால், பொழுதுபோக்குவதற்காக வலைமேயும் என் போன்ற சராசரி வாசகர்களையும் தன் பக்கம் இழுக்க முடியும். அதைப் போல கருத்துக் களம் சார்ந்து ஒரு தலைப்பில் எழுதி வரும் வலைப்பதிவர்கள் கூட அவ்வப்போது தன் களத்தை விட்டு வெளியே வந்து கொஞ்சம் "இளைப்பாறல்" வலைப்பதிவு செய்து விட்டுப் போகலாம். மேற்சொன்னவைகள் எல்லாம் என் புரிதல் அடிப்படையிலான யோசனைகளே. நீங்கள் என்ன எழுத வேண்டும் , எப்படி எழுத வேண்டும் என்று சொல்ல நான் வரவில்லை.

என்னைப் பொறுத்தவரை கடந்த வாரம் ஓரளவு திருப்தியாகவே இருந்தது எனச் சொல்வேன். ஒரே வருத்தம் நான் நினைத்தபடி அத்தனை வலைப்பூ விமரிசனங்கள் செய்ய முடியவில்லை. கடைசியில் சோம்பல் வந்து விட்டது. தமிழ்மணம் முகப்பு பட்டியலில் உள்ளதில், அ முதல் ச வரை வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.( ச கூட முழுதாக முடிக்கவில்லை)
பின்னால் வரும் நட்சத்திரம் விருப்பப்பட்டால் தொடரலாம்.

இந்த வார நட்சத்திரம் நல்ல முயற்சி. நட்சத்திர வலைப்பதிவருக்கு நல்ல கவனம் கிடைப்பதால், புதிய வாசகர்கள் கிடைக்கிறார்கள். புதிய வலைப்பதிவர்கள் நன்றாக உபயோகப்படுத்திக் கொண்டால், அவர்கள் பெற் விரும்பும் எதிர்வினைகளும், பின்னூட்டங்களும் கிடைக்கும். நம் வலைப்பதிவை படிப்பவர் பெரும்பாலும் சக வலைப்பதிவர்கள் என்பதால், நாம் எந்த வலைப்பூவைப் படித்தாலும், நமக்கு பிடித்திருந்தால், எழுத வேண்டுமென்று தோன்றினால், சோம்பலைப் பார்க்காமல் இரண்டு வரியாவது எழுதிப் போடுதல நலம். வாசகர்களை ஈர்க்க வேண்டுமென்றால், நல்ல வாசகனாக நாமே ஆவது ஒரு வழி. வலைப்பூ உலகத்தை பொறுத்தமட்டில். நீங்கள் எதுவும் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் - வாழ்த்தாயிருந்தாலும் சரி, வசவாயிருந்தாலும் சரி. அதே கதிதான்.

சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதே பலரும் எனக்குச் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது. சர்ச்சைகள் குறைந்தது என்பதாலும், பொம்மை போட முடிகிறது என்பதாலும், சினிமாவில் கொஞ்சம் ஆர்வமிருக்கிறது என்பதாலும் தான் நான் பெரும்பாலும் சினிமா பதிவுகளை நாடுகிறேன். என்னுடைய விளையாட்டுப் புத்தி கொஞ்சம் குறைந்தால், சீரியஸ் வாசகர்கள் எதிர்பார்க்கும் "கனமான" பதிவுகள் என்னிடமிருந்தும் வரலாம். பார்ப்போம்.

பின்னூட்ட ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி. வாய்ப்பு தந்தவர்களுக்கும்....

வணக்கம்.

என்றென்றும் அன்புடன்

"மூக்கு" சுந்தர்

Saturday, January 29, 2005

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது



வாழ்த்துகள் சபாநாயகம் ஐயா.

Friday, January 28, 2005

புதிய வலைப்பதிவர்களுக்கு

பல அடிப்படை விஷயங்கள் Blogger.com லேயே இருக்கிறது. புதிதாக வருபவற்றை தெரிந்துகொள்ள, சந்தேகங்களை தீர்க்க முதலில் ஒரு யாஹூ குழுமம் இருந்தது. இப்போது வலைப்பதிவர் மேடை. ஆனால் யாஹூ குழுமத்தில் உள்ள பழைய இடுகைகளை கூட ஒரு முறை பார்த்து விடுவது நல்லது. சேர்த்த தகவல்களை, புதிதாக வரும் பதிவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்பினால் விக்கி க்குஅளிக்கலாம் - அங்கே எழுதலாம்.

எழுத்துரு, யுனிகோடு செயலி முதலான இடங்களுக்கு புது மாப்பிள்ளை முகுந்தராஜின் தமிழா.காம்.

எழுத்துரு மாற்றி மற்றும் பொங்குதமிழ் செயலியை பின்னுட்டப் பெட்டியில் செரும் முயற்சிகளுக்கு சுரதா.காம். உங்கள் வலைப்பூவை படித்துக் கொண்டிருக்கும் வாசகருக்கு, அந்த க்ஷணத்தில் தமிழ்மணத்தில் என்ன இடுகை வந்திருக்கிறது என்ற விவரமும் தர விரும்பினால், தர முடிவதாக ஒரு எளிய code block கொடுத்திருந்தார். இப்போது அந்த இடுகையை கானவில்லை. க்ளிக்குகளை மிச்சமாக்கும், ஜன்னல் அசைவுகளை குறைக்கும் உபயோகமான விஷயம் இது. அவர் விருப்பப்பட்டால் மறுபடியும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் சமீபமாக ஒரு தமிழ் HTML editor ஐ உருவாக்கி, ராவணன் என்கிற பெயரிட்டு வெளியிட்டிருக்கிறார். Microsoft Frontpage போல மிக உபயோகமான செயலி அது. செயலியின் பேர் பலபேரை துன்புறுத்தி விட்டதோ என்னவோ, அற்புதமான அந்த செயலியும் சரியாக உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது.

ப்ளாக்கர் கமெண்ட் பாவிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்களின் வேலையை எளிதாக்க வெண்டுமானால், பாவிக்க வேண்டியது இது. இந்த முறையில் ப்ளாக்கர் கமெண்ட்டே தனி பெட்டிக்குள்/ pop-up க்குள் வரும். எனக்குத் தெரிந்து இந்த உபயோகமான வசதியை, உணர்ந்து அனுபவிப்போர் கொஞ்சமே. கோபியை பிடியுங்கள் இதற்கு. பின்னூட்ட வசதிக்கு ஹாலோஸ்கான் கூட உபயோகப்படுத்தலாம். ஆனால் குறைந்த வரிகளே எழுத முடியும். அவ்வபோது மக்கர் பண்ணும்

போட்டோ போட்டால் பதிவு கொஞ்சம் ஜகஜகவென்று இருக்கும். எழுத்திலேயே அதைக் கொண்டு வர முடியுமானால் கேள்வி இல்லை. இதற்குத் தேவையும் இல்லை. நான் வெப்லாகிமேஜஸ்.காம் பாவிக்கிறேன். Basic Account ல் அத்தனை வசதி இல்லை. மாசம் இரண்டு டாலர் கொடுத்தால் Basic Plus Account. கொஞ்சம் வதியாக இருக்கிறது. ஹலோ.காம் உபயோகிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்னை இங்கே தள்ளியது. ஹலோ.காம்மை வெற்றிகரமாக உபயோக்கிப்போர் பாலாஜியும், ரமணிதரனும். விவரம் வேண்டுவோர் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். மாயவரத்து மருமகள் தாரா இமேஜ்ஷாக்.யுஎஸ் என்ற தளத்தை உபயோகிக்கிறார். விவரம் வேண்டுவோர் அவரை தொடர்பு கொள்ளுங்கள். அதைப் போலவே picserver.org க்கு பரிசல் வினோபா கார்த்திக்.

உங்கள் குரலில் பேசியோ, பாடியோ, மிமிக்ரி செய்தோ ஒரு பதிவு போடவேண்டுமென்றால் ஆடியோப்ளாக்கர்.காம். நான் அதைத் தான் உபயோகித்தேன்.

Site statistics, hit counter எல்லாம் உபயோகமில்லாத வேலை என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அதில் ஒரு கிக் இருப்பது உண்மை. மேலும் துன்புறுத்தும் முகமூடி வாசகர்களை அடையாளம் கண்டுகொள்ள உபயோகப்படும். எக்ஸ்ட்ரீம் ட்ராக்கிங் தான் பாவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது Statcounter ம் பாவிக்கிறேன். இரண்டுமே உபயோகமாக இருக்கிறது. ( கிக்குக்கு எனக்கு வேறு சமாசாரம் இருக்கிறது :-) )

ப்ளாக்கில் வரும் விளம்பர வருவாயை வைத்து வீடு வாங்க விரும்புவோர் Adsense உபயோகிக்கலாம். நான் ஏற்கனவே இரண்டு வீடு வாங்கி விட்டேன். ஆனாலும் பணம் கொட்டுவது நிற்கவில்லை. :-) :-)

இத்தனை வசதிகள் இருந்தும் எழுத சேதி இல்லாவிட்டால் கதை கந்தல். வீட்டில் சன் டீவி / ஜெயா டீவி/ ராஜ் டீவி இணைப்பு கூட இல்லாமல் எழுத விஷயம் தேடி நான் அலைவதை தனியே ஒரு சோக நாவலாக எழுதலாம்.

வழக்கமாக இந்த இடங்களில் பொறுக்குவது வழக்கம்.

1. ராயர் காப்பி க்ளப், மரத்தடி, தினம் ஒரு கவிதை போன்ற மடலாடற்குழுக்களில்
2. npr.org , cnn.com, rediff.com, timesofindia.com ( samachar.com)

3. thatstamil.com, dinakaran.com, dinamani.com, tamil.sify.com, vikatan.com, thinnai.com

4. maraththadi.com - பழைய படைப்புகளுக்கு

5. சக வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகள்.

6. Hollywood/BlockBuster/ Kaveri Grocery ( Tamil-Hindi DVD ) - சினிமா விமரிசனங்களுக்காக.


இத்தனைக்கும் மேல் லொட்டு லொட்டென்று கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து தட்டுவதை தொந்தரவு பண்ணாத மனைவி மற்றும் மேனேஜர்.

இன்னமும் ஏதாவது புது விஷயங்கள் தெரிந்தால் என் பின்னூட்டப் பெட்டியில் பகிர்ந்து கொள்வதை விட மன்றத்தில் முழங்குங்கள் .

ஊருக்கு உபயோகமாக இருக்கும்.

காலம் தாண்டிய ஓட்டம்

எங்களை எல்லாம் எங்கள் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது இப்போது நினைக்கும்போது.

முக்கியமாக ஊரிலிருந்து வெளியே வந்து தனியே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு இது புரியுமென்று நினைக்கிறேன். முன் தலைமுறை பெற்றோர்கள் போல இந்த தலைமுறை பெற்றோர் இல்லை. குழந்தைகளிடம் அத்தனை கண்டிப்பு காட்டுவதில்லை. பெற்றுக் கொள்வெதே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு என்றாகி விடுவதால், செல்லம். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் போக்கு, சாப்பாடு சாப்பிடுவதில் கூட "இது வேண்டுமா..அது வேண்டாமா..சரி பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு" என்று குழந்தை வளர்ப்பின் முகமும் முறையும் மாறி வருகிறது.

என் இளமைக்காலம் செல்லமாய்த் தான் கழிந்தது. கடைக்குட்டி, ஒரே பிள்ளை என்பதால் அத்தனை செல்லமென்றாலும், கட்டறுத்து விட்டு வளர்ந்ததாய் எப்போதும் நினைவில் இல்லை. எங்களுடன் சேர்ந்து பாட்டுப் பாடும், டான்ஸ் ஆடும் , சகலவிதமான புத்தகங்களையும் படிப்பதற்கு அனுமதி தந்திருந்த, என் வகுப்புத் தொழிகள் வீட்டுகு வந்தால் கிண்டலடிக்கும், சினிமா பார்த்து விட்டு கூட உட்கார்ந்து விவாதிக்கும், பனிரண்டாவது படிக்கும்போது பெங்களூரில் "பீர் சாப்பிடறியா" கேட்ட, அப்பா, அப்பா தந்திருந்த சகல சுதந்திரங்களும் முறை தவறாமல் உபயோகப்படுத்தப்படுகிறதா என்று கண்காணித்துக்கொண்டிருந்த அம்மா, மிரட்டிக் கொண்டே இருக்காமல் பழகிய தமக்கைகள் என்று ஜாலிதான். ஆனால், ஏதாவது தப்பு செய்தால் என்ன நடக்கும் என்று ஸாம்பிள் காட்டுவது மாதிரி என்று அவர்கள் நடந்து கொண்ட ருத்ரட்தாண்டவ சம்பவங்களும் ஞாபகம் இருந்தது என்பதால் வண்டி தடுமாறாமல் ஓரளவு நேர்க்கோட்டில் ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டில் உள்ளவர்கள் கடுமையாக பேசி, கொபித்துக் கொண்டு அடித்தாலும், அவர்கள் அடிக்கிறார்களே என்று வந்த கோபத்தை விட, இப்படி பண்ணிவிட்டோமே என்கிற தன்னுணர்வும், சுயபச்சாதாபமுமே அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் சாதாரண சமயங்களில் நான் அனுபவித்த சுதந்திரமே என்று நினைக்கிறேன். அப்பா என்றால் அளவுக்கு மீறிய பக்தியோடும், மரியாதையோடும் இருக்கும் சில குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அது தவறு என்று சொல்ல விழையவில்லை. ஆனால் மரியாதையும், பக்தியையும் விட, அன்பும் ஸ்நேஹமும் தான் முக்கியம் என்று எனக்குத் தோன்றுகிறது. அது முக்கியம் என்று உணர்த்தப்பட்டதால்தான், பதின்ம வயது சிக்கல் காலங்களில் கூட எனக்கும் என் பெற்றொருக்கும் இடையே இருந்த உறவுச் சங்கிலி பலமாகவே இருந்தது. அப்படி இருக்கும் பெற்றோர், என் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் என் கூட விவாதிப்பதையே முழுதாக தவிர்த்து விட்டனர் என்பது இன்றளவும் வருத்தம்தான் - " கூட உட்கார்ந்து பேசினா கன்வின்ஸ் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கும்மா " என்று என் தமக்கையிடம் அவர் சொன்னதை பின்னாளில் கேட்டபோதும் கூட.



சூர்யாவை கேஷுவல் ஆகத் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவனுக்கு ச்சும்மா ச்சும்மா பயமெல்லாம் கிடையாது. ஆனால், கொஞ்சம் எல்லை தாண்டினால் நானும் சரி, அவன் அம்மாவும் சரி, என்ன ரேஞ்சுக்கு போவோம் என்று அவனுக்குத் தெரியும். இந்த தலைமுறை பெற்றோர்களை ஒப்பிடும்போது நாங்கள் இருவருமே கண்டிப்புக்காரர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. சூர்யாவுக்கு விவரம் தெரிந்து அவன் ஆட்சேபிக்கும் வரை நாங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறோம். அந்த வயதிற்குள் எங்களது அன்பையும், கோபத்தின் நோக்கத்தையும் தன்மையையும், காரணங்களையும் அவனுக்கு புரிய வைத்துவிட்டால், அதற்கப்புறம் இத்தனை ஸ்ட்ரிக்ட் ஆக இருக்க வேணும் என்கிற அவசியம் கூட இல்லை. பிறகு அவன் பதின்ம வயது மோடுக்கு நானும் மாறிவிட்டால், சொச்ச காலம் ஜாலியாக போய் விடும்.

"கல்யாணம், வாழ்க்கை விஷயங்களில் கூட நான் தலையிடப்போவதில்லை. நன்றாகப் படித்துக் கொண்டு, படிப்பு/வேலை என்று அவன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டால், வீட்டை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அக்கடாவென்று மாயவரம் கிராமப்பக்கம் எங்காவது ஒதுங்கி விடுவேன்" என்று சொன்னால், சூர்யாவின் அம்மா நக்கலாக சிரிக்கிறாள்.

எனக்குப் புரியவில்லை...உங்களுக்கு..??

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது.



வாழ்த்துகள் செல்வராஜ்.


கிரீடப்பதிவு என்கிற ஐடியாவே எங்கோ காசி அளித்த பின்னுட்டம் மூலம் கிடைத்த ஐடியாதான். இப்போது ஜெயஸ்ரீ கிரீடப்பின்னூட்டம் என்று ஒரு பகுதியை அறிமுகம் செய்யச் சொல்கிறார். என் கதை முடியப்போகிறது. எனவே வரும் வார நட்சத்திரங்களுக்கு விருப்பம் இருந்தால், அதை தொடரலாம். கிரீடப்பதிவு தேர்ந்தெடுப்பதற்கே நிறைய படித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. கிரீடப்பின்னூட்டத்திற்கு....இன்னமும் நிறைய படிக்க வேண்டும். ஆனால் பின்னூட்டம் இடும் செயலை உற்சாகப்படுத்தும் முயற்சி இது. முடிந்தவர்கள் செய்யுங்கள்.

Thursday, January 27, 2005

this is an audio post - click to play
this is an audio post - click to play

நாகரீகத்தின் தொட்டில்

மெஸபடோமியா என்று அந்த இடத்தைக் குறிக்கிறார்கள். ஈராக் என்று நான் அறிந்த அதை, பச்சாதாபம் பாக்கி வைத்திருக்கும் அமெரிக்கர்கள் ஐராக் என்று லேசான குற்றவுணர்வோடு குறிப்பிடுகிறார்கள். சதாம் தாத்தாவின் கொடுங்கோலாட்சியிலிருந்து மக்களை மீட்டெடுத்து சுதந்திரம் வழங்கிய குட்டி புஷ், இப்போது அங்கே தேர்தல் நடத்தி , அவர்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்யப் போகிறாராம்.

ஜனவரி 30 என்று நாள் குறித்திருக்கிறார்கள். வேட்பாளர்கள் பெயர் வெளியே யாருக்கும் தெரியாது. தெரிந்தால் உயிர் போய்விடும். ஆனால் திசம்பர் 15 முதல் பிரசாரம் ஆரம்பித்து விட்டதாம். ஆச்சரியமாக இருக்கிறது கேட்பதற்கு. ஆனால் இதை எப்படியாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. இராக்கிலிருந்து திரும்பி வரும் ராணுவக்கைதிகளை( வீரர்களை) பேட்டி காண்கிறார்கள் டெலிவிஷனில். "இந்த தேர்தல் நம்மால் அவர்கள் மீது திணிக்கப்படுகிரது" என்கிறார்கள் போர் வீரர்கள். அமெரிக்காவில் வாழும் ஈராக்கியர்கள் " அந்த தேர்தலுக்கு நாங்கள் இங்கிருந்து ஓட்டுப் போட மாட்டோம். எங்களுக்கு அவர்கள் அரசை தீர்மானிக்க உரிமை கிடையாது" என்கிறார்கள் தெளிவாக.

இராக் போர் சம்பந்தப்பட்ட பேரழிவுக் காட்சிகள் இனையமெங்கும் இரைந்து கிடக்கின்றன. மண்ணை வாரித் தூற்றும் மூதாட்டியர்கள் டீவி ஃபுட்டேஜ்களில் ஏராளமாக தெரிகிறார்கள். தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையும் பெருகி இருக்கிறது. அமெரிக்கா இதுவரை இழந்த 1420 வீரர்களுக்காக பரிதாபப்படும் ஊடகங்கள் கூட அதை விட பல மடங்கு இழப்பை உடைய ஈராக்குக்காக அந்தளவு வருந்துவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக புஷ் மறுபடியும் வெற்றி பெற்று போர் அடிப்படையிலான தன் வெளியுறவுக் கொள்கைகளை இன்னமும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருக்கிறார்.

என்ன நடக்கும் இராக்கில்..?? எதிர்ப்பாளர்களை பொறுத்தவரை தெர்தல் ஒழுங்காக நடந்து சகஜநிலை திரும்ப விட மாட்டார்கள். அப்படி விட்டு விட்டால், அமெரிக்காவின் உள்நுழைவை அங்கீகரித்து, அவர்கள் தந்திருக்கும் ஜனநாயகத்தை தங்கள் ரத்தம் வழியும் கைகளால், நிணநாற்றமெடுக்கும் தெருக்களில் நடுவே நின்று கொண்டு வாங்கிக் கொள்வது போலாகும். தேர்தல் நடக்காது தடுக்கப்பட்டாலோ, அமெரிக்கா தன் ராணுவத்தை அங்கிருந்து விலக்காது. கிட்டத்தட்ட இதே மாதிரி தருணத்தில் தான், வியட்நாமில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. கிடைத்த ஹெலிகாப்டர்களை பிடித்து வெளியில் தொங்கிக் கொண்டே ஊர்வந்த அமெரிக்கர்கள் இன்றளவும் அதை மறக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இராக்கில் இப்போதைக்கு வாபஸ் வாய்ப்பில்லை. அதனால், நன்றாக இருந்த ஒரு நாட்டை நாசமாக்கி, வழி வழியாக இர்ந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு ஈடாக இன்னொரு பிரச்சினையை உண்டாக்கியதை தவிர வேறொன்றும் இவ் விஷயத்தில் சாதிக்கவில்லை குட்டி புஷ்.

இராக்கியர்களுக்கு தேவை தேர்தல் அல்ல. தேறுதல். அரவணைப்பு. யாங்க்கிகளின் வெளியேற்றம்.

பி.கு:

இது விஷயமாக மேற்கொண்டு நான் எழுதுவது எல்லாமே, இணையத்தளங்களிருந்து தமிழ்ப்படுத்தி எழுதுவதுதாகத் தான் இருக்கும். எதையுமே ஆராய்ச்சி செய்யாமல், இராக் எலெக்ஷன் என்றவுடன் பட்டென்று மனதில் தோன்றிய பாமர எண்ணங்களை பதிவு செய்திருக்கிறேன். ஆழமாக எழுதக்கூடிய, மேலும் ஆர்வமிருக்கிற வலைப்பதிவர் யாரேனும் இன்னமும் நிறைய எழுதலாம். படிக்கக் காத்திருக்கிறேன். இராக் தேர்தலைப் பற்றி இந்த வாரம் எழுதாமல் போவதை விட, இந்த ஜல்லி கொஞ்சம் பெட்டர் என்று ஒரு தோணல்.

கிரீடப்பதிவு

இன்றைய கிரீடப்பதிவு இது



வாழ்த்துகள் ஸ்டாக் மார்க்கெட் சசி

Wednesday, January 26, 2005

கைவீசம்மா கைவீசு..உலாப்போகலாம் கைவீசு



தேர்தல் நேரத்தில் வந்தோ அல்லது மற்ற முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகளின்போதோ எழுத்தாளர் மாலன் வலைப்பதிவது வழக்கம். ஆனால் இப்போது வாசகன் என்கிற தன் புதிய வலைப்பதிவில் எழுதத்துவங்கி இருக்கிறார். எழுதிய மூன்றுமே அவருக்குள் இருக்கும் வாசகனை பேச விட்டிருக்கும் முயற்சிகள். வாக்கப்பட்ட பூமி புத்தகத்தில் உள்ள ஒரு கிராம தேவதையின் வாஞ்சை குறித்தும், பொன்னியின் செல்வனின் மேல் பித்து கொண்ட ஏராளமான வாசகர்களுக்கான கேள்வியாகவும், கட்டபொம்மன் மரணதண்டணையை நிறைவேற்றிய பானர்மேன் சாட்சியம் பற்றியும் எழுதப்பட்ட பதிவுகள் அவை. சன் டீவி வேலைகளுக்கு இடையேயும், திசைகள் ஒன் மேன் ஆர்மியாக இருப்பதற்கும், மற்ற சமூக/அரசியல்/எழுத்து/இலக்கிய வேலைகளுக்கு நடுவே, தான் வாசகனாக உணர, வலைப்பதிவுக்கு அவரைப் போன்றவர்கள் வருவதில் இருந்து, வலைப்பதிவுகளின் தனித்தன்மையும் முக்கியமும் ஒருவாறு விளங்குமென நினைக்கிறேன். இதைப் போலவே பத்ரியின் கிராம முன்னேற்றம் சம்பந்தமான வலைப்பதிவில் பத்திரிக்கையாளர் சுதாங்கன் பின்னூட்டம் பார்த்தேன். நடு முதுகில் சில்லென்றிருந்தது. இன்னமும் எத்த்னை பிரபலங்கள் நம் எழுத்துகளை எல்லாம் வாசிக்கிறார்களோ...வலைப்பதிவர்களே...எழுதும்போது இவர்கள் எல்லாம் நம்மைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு எழுதுங்கள். கொஞ்சம் "கிக்" ஆக இருக்கும்.

வாக்கப்பட்ட பூமி பற்றி எழுதும்போது மாலன் கண் கட்டிக்கு அமிர்தம் தந்த கிராமத்து தாய் பற்றி எழுதி இருந்தார். பாக்யராஜ் படத்தில் இதை உபயோகப்படுத்தி இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பார் பாக்யா. சினிமாவில் எப்படி ஊட்டப்படுகிறதோ, எப்படி உருவகிக்கப் படுகிறதோ அப்படியே பார்வை திருகிப் போகிறது நம்மில் பெரும்பாலோனோர்க்கு- நான் உள்பட. ஜெர்மனியில் இருந்து வலைப்பதியும் தோழி சந்திரவதனா ஏராளமான வலைப்பதிவுகள் வைத்திருந்தாலும் அவருடைய முக்கிய வலைப்பதிவு ஒன்று பெண்கள் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளை, பிரசவத்தை, இன்ன பிற பேசத் தயங்கும் விஷயங்களை ( தமிழ் சினிமாவின் சந்தைப்பொருளை) பேசுகிறது. பத்திரிக்கைகளிருந்து எடுத்து இடப்படுபவை என்றாலும், ஒரே இடத்தில் கிடைக்கும் அருமையான விவரமான செய்திப் பெட்டகம் அது. அமெரிக்க பெண்களில் எட்டில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறதாம். கடந்த வாரம் அறுவைச்சிகிச்சையில் மார்பகங்கள் அகற்றப்பட்ட என் அமெரிக்க தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார். இம் மாதிரியான சூழ்நிலைகளில், பெண்களுக்கு அவர்கள் உடல் பற்றிய, அதன் உபாதைகளைப் பற்றிய அறிவும், விவாதிக்கக் களமும் தேவைப்படுகிறது. மகளிர் வலைப்பதிவை நான் அப்படிப்பட்டதொரு இடமாகக் காண்கிறேன்.

இன்று என்று ஒரு வலைப்பதிவு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. புவனபத்ரஜிக்கியாக மடற்குழுவில் அவதாரம் எடுத்த "தகடு-தகடு" குமார் துகள்கள் என்கிற பதிவில் தன் புனைவுப் படைப்புகளை இட்டுக் கொண்டிருந்தார். அப்போதே நினைத்ததுண்டு - இவர் ஏன் புனைவுக்கு கொடுக்கும் அளவுக்கு ரிப்போர்ட்டிங்குக்கு கொடுக்க மாட்டேன் என்கிறார். என்று. அவருடைய துகள்களிலேயே சொல்லலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர் அவர். அவருக்கு நாம் என்னத்தை சொல்லி ந்ம் அதிகப்பிரசங்கத்தைக் காட்ட என்று ஒரு யோசனை. வாளாவிருந்து விட்டேன். கடைசியில் அவரும் தானாகவே இன்று வில் இறங்கி விட்டார். வாழ்த்துகள்.

செஸ் விளையாட்டுக்காக ஒருவர் வலைப்பதிவை வைத்துக் கொண்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆரம்பிக்கும்போதே இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தாலும், வலைப்பதிவு ஆரம்பித்து நெடுநாள் ஆனவர்களே புலம்பும் பின்னூட்டம் சார்ந்த புலம்பல்கள் இல்லாமல் ஒரு கர்மயோகியை போல அவர்பாட்டுக்கு கீதாசாரத்தின் முழு வடிவமாக எழுதிக் கொண்டிருக்கிறார். கீப் இட் அப் கண்ணண். சோர்ந்து போகாதீர்கள். நடுவே ஒரு க் இருந்திருந்தால், உங்கள் பின்னூட்டப் பெட்டி இந்நேரம் நிரம்பி வழிந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஹி..ஹி...நீங்கள் செஸ் எழுதுங்கள்.

பெட்டிக்கடை வைத்து, கடை விரித்தேன் கொள்வோர் பலருண்டு என்று ரொம்ப ஆப்டிமிஸ்டிக்காக இறங்கி இருக்கும் கிச்சுவின் வலைப்பதிவு ஒழுங்காக வடிவமைக்கப்படிருக்கிறது. பதிவுகளை அழகாக பிரித்து வைத்திருக்கிறார். எழுதுவதில் கொஞ்சம் நக்கல் நையாண்டி கூட இருக்கிறது. ஆனால் இடைவெளிதான் கொஞ்சம் அதிகமோ என்று ஒரு யோசனை. ஒரு வேளை அதிகமாக கடை விரித்தால் பெட்டிக்கடை கூட்டம் தாங்காது என நினைத்தாரோ என்னவோ..?? என்னைப் போலவே நிறைய பொம்மை போட்டு அசத்துகிறார். ஆனால் அத்தனையும் பதிவிற்கு சம்பந்தப்பட்ட பொம்மைகள். அதுதான் ஒரே வித்தியாசம். பேருக்கு ஏத்த மாதிரி கிச்சு கிச்சு மூட்டாமல் உருப்படியாக எழுத முயன்றிருக்கிறார்.

வெண்பாவுக்கு பதிவு போட்டு இன்னொருவரின் ராக்கெட் வேகத்தால் பின் வாங்கினேன் என்று சொக்கனால பாடல் பெற்ற பதிவு இது. பேர் புஸுபுஸுவென்று இருந்தாலும் போட்டிருக்கும் ஐட்டங்கள் எல்லாம் ரூர்கேலா எஃகு ரகம். மடலாடற்குழுவில் வெண்பா ரசிகர்கள் எல்லாம் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. "நேர் நேர் ஹேமா" "நிரை நேர் கமலா" வோ என்னவோ சொல்லிக் கொண்டு வெண்பா பயிலுபவர்கள் எல்லாம் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். மாதிரிக்கு கொஞ்சம்

ஜெயிலில் ஜெயேந்திரர் ஜெபமும் தபமுமாக
ஒயிலாய்ப் பொழுதைக் கழிக்கின்றார் - பெயிலில்
வருவது கஷ்டமாம் வந்தாலும் விடமாட்டார்
அறுவது வயதில் அவஸ்தை.

தயிர்சாதம் சாப்பிட்டு தாச்சுண்டு எழுந்துண்டு
உயிர்வளர்க்கும் ஜெயேந்திரரைப் பாரங்கே - மயிரே
போச்சென்றுதானே பொல்லாப்பு தனைச்சேர்த்தார்
ஆச்சார்யார் அம்பேல் இனி.

தூக்கம் வருதுப்பா...இன்னைக்கி அவ்வளவுதான்.

( படம் : அஸின் - அஜித் ( நற..நற..) )

மண்ணு தின்னப் போவதை....

"காயமே இது பொய்யடா" என்றெல்லாம் நவகாலத்தில் சொல்லிக்கொண்டு ஆன்மபலம், அறிவுபலம் என்று ஜல்லியடித்தால், மனைவிமார்கள் தொப்பையில் குத்தி, குளிர் இரவில் வெளியே தள்ளி விடுவார்கள். மாறாக, படிப்புக்கு, மனத்திண்மைக்கு தயார் செய்யும் பருவத்திலேயே உடம்புக்கும் ஏதாவது செய்து திடப்படுத்திக் கொண்டால், என்னைப் போல வயசான காலத்தில் குளிரிரவில் சைக்கிளோட்டிக் கொண்டு ஜிம்முக்கு போய் தங்கு தங்கென்று ஓடத் தேவை இராது.

சின்ன வயசில் சிவாஜியையும், மற்ற தாட்டியான ஹீரோக்களையும் பார்க்கும்போது அவர்கள் நடிப்பு பாதித்த அளவுக்கு, அவர்கள் தொப்பையும், குட்டி ஐஸ் வண்டி போல சிரமப்பட்டு நகரும் அவர்கள் உருவமும் ஏன் தொந்தரவு தரவில்லை என்று தெரியவில்லை. பிறந்தது மூன்று சகோதரிகளுடன் என்பதால் வெறும் பல்லாங்குழி, ஏழாங்கல், ஏரோப்ளேன் தாயம், கேரம்போர்டு , செஸ், சில்லிகோடு, ஐஸ்பாய் ( I Spy யாம் இது!!!) என அதிக தொந்தரவில்லா விளயாட்டுகளாகதான் இளமையில் பழகினேன். ஆரம்பப்பள்ளிகளில் வைக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம், எல்லாரும் என் துரத்தலுக்கு பயந்து முன்னே அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். தப்பித் தவறி ஒருமுறை கிரிக்கெட் மட்டையை பிடித்தபோது, சூறாவளியாக ஓடிவந்த தோழன் "கடாவெட்டு" சிவகுமார் ஒரு ஃபுல்டாஸ் பொட்டு, கார்க்பாலின் பிரதியை என் கண்ணுக்கு சற்று கீழே வைத்தான். நல்ல வேளை கண்ணாடியை கயட்டிக் கொடுத்திருந்தேன். அத்தோடு ஸ்கூல் கிரிக்கெட் ஓவர். மைதானம் பக்கமே போகவில்லை.

பின்னே தெருப்பையன்களோடு தென்னை மட்டை பேட் கிரிக்கெட். சவுக்க விறகு ஸ்டெம்ப். சைக்கிள் ட்யூப் கட் பண்ணி தயாரித்த பந்து. அந்த கிரிக்கெட்டிலும் நான் ரொம்ப பிரபலம். தைரியமாய் என் பக்கம் பந்தடிப்பார்கள். தரையில் வந்தால் நண்டு பிடிப்பேன். காட்ச் வந்தால் எங்கேயாவது கை நீட்டி, உத்தரவாதமாக விடுவேன். பம்பரம் விளையாடினால், உக்கு வைத்து வைத்து பம்பரம் காந்திமதி மூஞ்சியாகும். கோலி விளையாடினால், ஏகப்பட்ட கப்பம் கட்டுவேன். கிட்டிப்புள் விளையாடினால் அளந்து அளந்து முட்டி தேயும்.

எட்டாவது, ஒன்பதாவது படிக்குபோது மாநகர பூங்கா அருகே வலை கட்டி விளையாடும் சேட்டு பசங்களின் விளையாட்டு பிடித்துப் போனது. " எடம் சார் எடம் " என்று சொல்லிக் கொண்டே ப்ளேஸ் வைக்கும் அந்த ஆட்டத்தின் பேர் பேட்மிண்டன் என்று பின்னாளில் தெரிந்தது. அதோட சகோதர விளயாட்டு ஷட்டில்காக்தான் நான் முதன் முதலில் பிடித்துப் போய் விளையாடிய அவுட்டோர் விளையாட்டு. பின்பு பத்தாவது, பனிரண்டாவது பரிட்சை மார்க்குகளுக்காக, புத்தகங்களை தின்று வாந்தி எடுக்க முனைந்ததில் அந்த விளையாட்டும் விலகி ஓடியது. காலேஜிலும் இதே நிலைதான். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே கிரவுண்டு பக்கம் போகிறவர்கள் எல்லாம், பெரிய பெரிய பையன்களாக, வயசுக்கு மிறிய வளரல்களாக, சிகரெட் பாபிகளாக, பெண்களை கிண்டல் செய்பவர்களாக, A படம் பார்ப்பவர்களாக, தியேட்டரில் கசமுசா சீன்களில் ஊய் என்று விசில் அடிப்பவர்களாக, குறைந்த மார்க் எடுப்பவர்களாக பெரும்பாலும் இருந்தமையால், எதுவும் இழந்ததாக தெரியவில்லை.



வயது ஆக ஆக, உணவுப் பழக்க வழக்கங்களும், திரவ லாகிரிகளும் சேர்ந்ததில் உடம்பு ஒரு மாதிரி சைஸுக்கு போய் விட்டது. கல்யாணத்துக்கு முன்பே என்னிடம் "எத்தனை குழந்தைகள்" என்று கேட்ட வஞ்சியர்களை எல்லாம் "நான் மாமா இல்லை" என்று தலையில் சத்தியம் பண்ணி நம்ப வைக்க வேண்டி வந்தது. வயசு கூட இருக்கிறது மாதிரி தெரிகிறதே என்று நானே யோசிக்க ஆரம்பித்த பிறகுதான் உடம்பின் சைஸே அதற்குக் காரணம் என்ற ஞானோதயம் வந்தது.

என் வீட்டுக்காரம்மா விளையாட்டு வீராங்கனை. தமிழ்நாடு ஸ்டேட் லெவல் ஹாக்கி டீமில் விளையாடி இருக்கிறார் என்ற சேதி கேட்டபோது ஒரு மாறுதலுக்கு என் தொப்பை என்னைப் பார்த்து சிரித்தது. ஆனால் கல்யாணமான ஓராண்டுக்குள் சிங்கப்பூரில் இருந்த வரை கூட, நான் உடம்பைக் குறைக்க ஏதும் செய்தேனில்லை. "சின்ன வீடு" ஜெய்கணேஷ் மாதிரி ஆகிப்போனேன்.

அமெரிக்கா வந்ததும் தான் உணவுப் பழக்க வழக்கங்களும், உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதும், ஸ்போர்ட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல, சகல அமெரிக்கர்களும் பாவிக்கும் விஷயம் என்று தெரிந்து போனது. எத்தனை வயசான மாமாக்கள் என்றாலும், சிக்கென்று உயரமும் அகலமுமாக, சட்டம் போல முதுகோடு இருக்கும் அந்த உருவத்துக்கு மனசு ஏங்க ஆரம்பித்து ஜிம் போக ஆரம்பித்தேன். 200/250 கலோரிகள் ட்ரெட் மில்லில் அழித்த பிறகு, கொஞ்ச நேரம் சைக்கிளிங். பின் Weights என்று பழகியதில், உடம்பு குறைந்ததோ இல்லையோ, இருக்கிற ஊளைச்சதை கொஞ்சம் இறுகி இருப்பது நிஜம்.

எப்போது ஜிம்மினாலும், அங்கே செல்ல ஏதாவது ஒரு வகையில் மோட்டிவேட் பண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காக, கொஞ்சம் கல(ர்)கல(ர்) வென இருக்கும் சமயங்களில் போவதை வழக்கமாக்கிக் கொள்வேன். பக்கத்தில் யாராவது ஒரு பெண்பால் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தால் நடக்கும் களைப்பு தெரியாதென்பது ஒரு கணக்கு. காமி( Camy) என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணிடம் ( வசதியான பேர் என்று சுஜாதா சொல்வார்) நேற்று பேசிக் கொண்டிருந்தபோது அவள் கேட்ட ஒரு கேள்வி எனக்கு எவ்வளவு சந்தோஷம் கொடுத்திருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

கேள்வி என்ன என்று கண்டுபிடித்து சொல்வோருக்கு பரிசு உண்டு.



படம் : நானில்லை...!!! :-)

கீரீடப்பதிவு



இன்றைய கிரீடப்பதிவு இது

வாழ்த்துகள் சித்ரன்.

Tuesday, January 25, 2005

இணையவெளி வீதியிலே...



நண்பர் ஈழநாதனை சிங்கையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் காலச்சுவடு கண்ணணோடு பார்த்தபோது நம்பமுடியவில்லை. இவரா இத்தனை வலைப்பதிவுகள் வைத்துக்கொண்டு, வயதுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத சீரியஸ் தன்மையுடன் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று. ஆர்ச்சர்ட் ரோட் பார்க்குகளிலும், மலேசியா ஜோஹர் பாஹ்ரூவிலும், செந்தோசா, பத்தாமிலும் நேரம் செலவழிப்பதை விடுத்து, இப்படி உட்கார்ந்து மாங்கு மாங்கென்று எழுதும் தமிழார்வத்திற்கு வந்தனம். சில விடயங்களில் அவரது தீவிரத்திற்கு என்னிடம் மாற்றுக் கருத்து உண்டென்றாலும், தமிழால் கவர்ந்த இளைஞர். சலனச்சுருள் பதிவில் குறும்படங்களைப் பற்றியும், படிப்பகம் பதிவில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்திலக்கியம் பற்றியும், கவிதை என்கிற தன் முக்கிய வலைப்பதிவில் தற்போது, இயல் விருது பெற்ற லண்டன் பத்மநாப ஐயரைப் பற்றியும், அவர் எழுதி வருவது மிக சந்தோஷமான விஷயம். இலங்கை பிரதேசத்தின் இலக்கியச் சுவை நுகர விரும்புவோர் தவறாது நினைவில் கொள்ள வேண்டிய ஈழநாதன் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

கடந்த அக்டோபரில் இருந்து வலைப்பதியும் உதயகுமார் சென்னைவாசி. எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்புகள் எல்லாம் சீரியஸான தலைப்புகள் என்றாலும், எழுதின ஆழத்தில் ஏதோ குறைபாடு. என்னை மாதிரி சினிமா கிசு கிசு ஸ்டைலில் எழுதுபவர்கள், அந்த மாதிரி லைட்டான விஷயங்களில் பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் எழுதக்கூடாது. எழுதினால் எலி விக்கிக் க்ளிக்கி ஐஈ ஜன்னல் மூடி விடும். உதயகுமார் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகளுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இன்னமும் நிறைய எழுத வேண்டும். இம் மாதிரி தலைப்புகளை எழுதும் மற்ற வலைப்பதிவர்கள் உதா: பத்ரி சேஷாத்ரி எவ்வளவு ஆழமாக இறங்கி எழுதுகிறார்கள் என்று உதயகுமார் ஒரு முறை படிக்க வேண்டும்.

நவம்பரிலிருந்து வலைப்பதியும் எம்.ஈ.ஏ, ஆரம்பத்தில் எல்லோரையும் போல ஆரம்பித்து, பின் தடாலடியாக மாத்ருபூதமாகி ( முதலிரவு டிப்ஸ்- இன்ன பிற) , பிறகு தற்போது விடுதலைப் பிரசுர புத்தகத்தை அத்தியாயம் அத்தியாயமாக எடுத்து இட்டுக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே எழுதிய படைப்புகளை வைத்து அவர் சொந்தமாக எழுதக் கூடியவர்தான் என்பது தெரிந்தாலும், இப்படி ஒரேயடியாக புத்தகத்தை "தட்டிப்" போடும் லெவலுக்கு எப்படி இறங்கினார் என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து பல் விளக்குவதைக் கூட புத்தகம் பார்த்து செய்யும் ஜீவிகள் இருக்கிறார்கள். பொதுப்புத்தியின் வழிகாட்டலைக் கூட கண்டுகொள்ளாமல், கண்டதுக்கெல்லாம் புத்தகம் படிக்கும் அல்லது மேற்கொள் காட்டும் புத்திஜீவிகள் மாதிரி நீங்களும் முடிந்து விடக் கூடாது. புத்தகத்தின் சாரம் உங்களுக்கு எட்டியதா..? அதில் எந்தப் பகுதி உங்களுக்குள் வெளிச்சம் போட்டது..ஏன்..? ஜனசங்கத்தின் தற்கால முகம் இன்னமும் அந்த குறிக்கோள்களை தன்னகத்தே வைத்திருக்கிறதா என்று அத்தியாயங்களின் நடுவே நிங்களும் விளக்கலாம். தப்பில்லை.

சமீபமாக எழுத துவங்கி இருக்கும் எல்லாளன் முதலில் எழுத்துருவை பெரிதாக்க முடிந்தால்தான் என் போன்ற சோடாபுட்டிகள் படிக்க முடியும். படித்தால்தானே கருத்து சொல்ல..??

பி.கு: தினம் எழுதுற விமரிசனப் பதிவில் கட்டாயம் படம் உண்டு - காரணமே இல்லை என்றாலும். பின்ன கலெக்ஷன்ஸ் எல்லாம் எப்ப உபயோகப்படுத்தறதாம்..? :-)

மஞ்சூரியன் கேண்டிடேட்

டென்ஸல் வாஷிங்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த ஆகிருதிக்கும், அசத்தல் பர்சனாலிட்டிக்கும் அவர் நடிப்பு ரொமவே சா·ப்ட். - அங்குசத்துக்கு கட்டுப்படுகிற யானை மாதிரி. ராதிகாவுக்கு கட்டுப்படுகிற நல்லவனுக்கு நல்லவன் ரஜினி மாதிரி. மஞ்சூரியன் கேண்டிடேட் அவருக்காக பார்த்த படம் தான். ஆனால் நிஜமாகவே "படம்" காட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரிஜினல் 1962 ல் ஃப்ராங்க் சினாட்ரா நடிக்க வந்திருக்கிறது. போரின் கோர விளைவுகள் இன்னமும் தொடரும் இந்தக் காலகட்டத்தில், அதையே நவகால நடிகர்களை வைத்து மறுபடியும் செய்திருக்கிறார்கள். அப்போது கொரியன் என்றால், இப்போது இராக். நாளை இரான், ...சிரியா.....?? !! சாகாவரம் பெற்ற கதை என்றால் இதுதானோ..??

இந்தியாவில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ, அதைப் போல அமெரிக்காவில் போருக்கும் அரசியலுக்கும். இங்கு ஒருவர் War Hero என்பது அருமையான பொலிடிசல் அட்வாண்டேஜ். போன தேர்தலுக்கு கூட கெர்ரிக்கும், புஷ்ஷ¤க்கும் இந்த விஷயத்தில் சண்டை வந்தது நினைவிருக்கலாம். புஷ்ஷர் டெக்ஸார் ஏர் நேஷனல் கார்டோடு அல்வா கொடுத்துவிட, கெர்ரி வியட்நாம் போரில் பங்கெடுத்துவிட்டு, பின் திரும்பி வந்து போர் எதிப்பு குழுவுக்கு தலைமை தாங்கி, மெடலை ஒயிட் ஹவுஸ் முன்னே தூக்கி எறிந்து பரபரப்பு கிளப்பினார். இங்கு அரசாங்கங்களை தீர்மானிப்பதும், அரசுக் கொள்கையை வடிவமைப்பதும் ஆயுத வியாபாரிகள்தான் என்று ஒரு பேச்சு உண்டு. ஏற்கனவே வந்த படங்களான Nixon, JFK போன்ற படங்களில் இந்த உறவு இலைமறை காயாக சொல்லப்பட்டது. ஜான் எ·ப் கென்னடி சுடப்பட்டதன் பின்னணியில் அவருடைய வியட்நாம் போர் வாபஸ் முடிவு மற்றும் க்யூபம் மிஸ்ஸைல் விவகாரம் முக்கிய காரனமாக இருந்தது என்று ஆலிவர் ஸ்டோன் தன் படத்தில் சொல்லி இருந்தார். இவ்வளவென்ன..சமீபத்திய மைக்கேல் மூர் 9/11 படத்திலேயே 9/11 பேரழிவால் கார்லைல் க்ரூப் அடைந்த பலன்களை, அவர்களுக்கு அரசாங்கத்துடன் இருக்கிற உறவை எடுத்து விளாசி இருந்தார்.



மஞ்சூரியன் கேண்டிடேட் இந்த விஷயங்களை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயுதவியாபாரிகளின் தந்திரத்துக்கு பலியாவது பதவி வேறி கொண்ட ஒரு செனட்டர். தான் அனுபவிக்காத, அதிபர் பதவியை தன் மகனாவது அடைய வேண்டும் என்பதற்காக, விஞ்ஞானத்தின் துணையோடு நடத்தை மாற்று விபரீத சிகிச்சை செய்து, முதல் இராக்கிய போரில் அவன் பங்கை உயர்த்துவதற்காக, அவன் குழுவையும் இந்த சிகிச்சைக்குட்படுத்தி, கடைசியில் இந்த விபரீத ஆட்டம் அவரையே பலி கொள்ள பொது மேடையில் இறந்து போகிறார். அமெரிக்க அரசியலும் இவ்வளவு ரத்த வெறி கொண்டலைகிறதா என்று பார்க்க திகிலாக இருக்கிறது.அது சரி எந்த ஊர் அரசியல் ஆக இருந்தாலென்ன...??!!

மெரில் ஸ்ட்ரீப் அசத்தி இருக்கிறார். அவர் படபடப்பையும் ஆளுமையையும் பார்க்கும்போது தமிழ்நாட்டு எலிசபெத் டெய்லர் லக்ஸ்மி சிவச்சந்திரன்(தானே..?! ) ஞாபகம் வருகிறார். படத்துக்கு உயிர்நாடியே அவர்தான். ஜான் ஷாவாக வரும் அவர் புதல்வனின் கோர இளிப்பு சில்லிட வைக்கிறது. டென்ஸல் ராணுவ மேஜர். போருக்குப் பின்னான மனநிலையை, வியாதியை, குழப்பங்களை , தடுமாற்றங்களை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் பாத்திரத்தை மீறாத நடிப்பு. அவருடைய துர்சொப்பனங்களையும், அவர் கண்ணெதிரே காணுவதாக படம்பிடிக்கும் கோரக்காட்சிகளை பார்க்கும் போதும், அமெரிக்க அரசியலமைப்பு தவறாக உபயோகப்படுத்திக் கொள்ளும் ராணூவம் மீது, அதன் வீரர்கள் மீது பச்சாதாபம் வருகிறது.இரண்டாம் உலகப்போர் முடிந்து வந்த தன் தாய்மாமன் மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகிப் போனதை சொன்ன என் அமெரிக்க நண்பர் ஞாபகம் வருகிறார்.

ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக, டெக்னாலஜி துணையுடன் ஆளுவோரின் மண்டைக்குள் சிப் இப்ளாண்ட் செய்வதெல்லாம் அமெரிக்க டெக்ணோ ஜல்லி ஜிகிடி. இதையே நம்ம ஊரில் கோடிகளை வைத்தும் , கேடிகளை வைத்தும், லேடிகளை வைத்தும் சாதித்து இருப்பார்கள்.

இன்றைய கிரீடப்பதிவு

இந்த ஏழு நாளும், தினம் தினம் எழுதப்படும் பதிவுகளில் வாசகர்களின் பாராட்டைப் பெற்ற, உள்ளடக்கம்/ எழுதும் முறை/ காலப்பதிவு / தொனி ஆகிய ஏதோ ஒன்றில் ( ஒன்றிலாவது) சிறந்து விளங்கும் பதிவினை எடுத்து இங்கே அந்த வலைப்பதிவருக்கு கிரீடம் சூட்டி மகிழப் போகிறேன். இதில் புனைவுகள் மற்றும் மற்ற படைப்பாளின் படைப்புகளை தாங்கும் பதிவுகள் வரா.



இன்றைய கிரீடப்பதிவு இது.

மனமார்ந்த வாழ்த்துக்கள் பத்ரி.

Monday, January 24, 2005

உலாப்போகும் நேரங்கள் - 1

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில விமரிசனங்களை தருவதாக உத்தேசம். படம் ச்ச்ச்சும்மா...ஜாலிக்கு. கண்டுக்காதீங்க. கொஞ்சம் வாசனையா இருக்கட்டுமேன்னுதான் ஜாஸ்மினைப் போட்டேன்.



அஜீவன் என்கிற நண்பரைப் பற்றி, அவர் குறும்படங்களைப் பற்றி ஈழநாதன் மூலமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய Alien Veil என்ற படத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. விஷயம் என்னவென்றால் நண்பருக்கு சினிமா மேல் பயங்கர வெறி. சினிமாவைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் தான் ஏறக்குறைய அவருடைய வலைப்பூ முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் என்ன காரணத்தாலோ, படிக்க சுவாரசியம் ஏற்படாதவாறு ஒரு அயர்ச்சி. வலைப்பூவின் வடிவைமைப்பிலா, இல்லை பத்தி பிரிப்பதிலா, இல்லை வண்ணங்கள் தேர்ந்தெடுத்ததிலா..ஏதோ ஒன்று. அஜீவன்.காம் என்ற தன் வலைத்தளத்தினை கூட, தனியாக வலைப்பூ படிப்பவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் செய்யாது, டிஸ்க்ரிப்ஷன் கூட சேர்த்து இட்டிருக்கிறார். தன் படங்களை பற்றி, சினிமா ஆர்வத்தினை பற்றி, தன் வலைத்தளத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அஜீவன் ஒரு முறை பார்த்து தன் தளத்தினை மீளத் திருத்தினால், இன்னமும் பல பேரை சென்றடைவார் என்று எண்ணுகிறேன்.

அலெக்ஸ் பாண்டியன் காவேரிக்கரை ஓரமாக வரச்சொல்லி தமிழ்மணம் மூலமாக கொஞ்ச நாள் இழுத்தார். ஆனால் பார்த்த இரண்டு / மூன்று முறையும் எல்லே சுவாமிநாதன் படைப்புகளாக போட்டுக் கொண்டிருந்தார். நானே இப்படி எனக்குப் பிடித்த படைப்புகளை அங்கங்கே பீராய்ந்து போடுவது வழக்கமென்றாலும், இத்தனை ரெகுலராக செய்வதில்லை. ஏனெனில் படிப்பவர்கள் " அட இந்தாள் என்னப்பா..., மத்தவங்க எழுதறதையே போட்டுத் தாக்கறான்" என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியே மற்றவர் எழுத்தை எடுத்துப் போட்டாலும், அதை பற்றி தன் கருத்து என்ன..?? எதனால் எடுத்துப் போட்டேன் என்று சின்ன விளக்கம் தருவது நல்லது. விளக்கம் - யாருக்குமல்ல. நமக்கே நமக்கு. நண்பர் அலெக்ஸுக்கு நல்ல செளஜன்யமான ஸ்டைல் இருக்கிறது. தமிழ்நாட்டு குடும்பநலத்திட்ட அட்வைஸ் கேட்ட மாதிரி இரண்டு பதிவுகளுக்கிடையே "இவ்வளவு" பெரிய இடைவெளி எல்லாம் அவர் விடக்கூடாது. இன்னதுதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொள்ளாது, கொஞ்ச நாள் மானாவாரியாக எழுதினால், பிறகு கொஞ்சம் பிடிபடும் என்று நினைக்கிறேன். . ஸ்டைல் பிடிபட்டவுடன் உள்ளடக்கம் மற்ற லொட்டு லொசுக்குகளை செட் செய்து கொள்ளலாம். பிறகென்ன..நிஜமாகவே எந்தப் பக்கம் உரசினாலும் பொறி பறக்கும் அவர் வலைப்பூவில்.

அல்வாசிட்டியின் போட்டுத்தாக்கு என்ற தலைப்பே அவர் வலைப்பூ என்ன மாதிரி இருக்கும் என்று ஒரு விதத்தில் சொன்னாலும், ஆசாமி இப்போதுதான் செட்டாகி, கொஞ்சம் முனைந்து எழுத ஆரம்பித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். எப்படி எழுதலாம் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டதால், எதை எழுதலாம் என்பதையும், எவ்வளவு ஆழமாக எழுதலாம் என்பதையும் அவர்தான் இனி தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அவருடைய மிகப் பழைய படைப்புகளையும் படிக்கும் வகையில், அவருடைய டெம்ப்ளேட் அமைப்பை மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில் ஒரு பதிவால் கவரப்பட்டவர்கள், உடனடியாக பழைய படைப்புகளை படிக்க விரும்புவார்கள். அந்த ஆசை நிறைவேறுவதை ஒட்டிதான், அவர்கள் உங்கள் வலைப்பூவுக்கு மறுபடியும் வருவார்கள். அதனால், அல்வாசிட்டி!!! டெம்ப்ளேட்டை போட்டுத் தாக்கு.

ஆசாத் பாய் பற்றி ஏற்கனவே இங்கே எழுதி இருக்கிறேன். அவரின் எண்ணம் வலைப்பூ இன்னமும் அவருடைய சகலவிதமான எண்ணங்களையும் வெளியே கொணரவில்லை என்று என் எண்ணம் ( அப்பாடா..எத்தனை எண்ணம்..??) . அவர் வலைப்பதிவுகள் எல்லாமே மடலாடற்குழு விவாதங்களின் நடுவில் இடப்பட்ட அவர் மடல்கள். எனவே முன்னும் பின்னும் இல்லாமல் பதிவுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை. மடலாடற்குழுவில் இடப்பட்ட மடல்களை இங்கே ஒட்டும்போது, முழு பதிவாக தெரிவது மாதிரி சிற்சில மாற்றங்கள் செய்யலாம். பதிவின் தலைப்புகளை கொஞ்சம் மாற்றி வைக்க முனைந்தால், "சிலம்பம்" பதிவுக்கு அடுத்து "பர்வீன்பாபி" பதிவுக்கு டகாலென்று தாவுவதை, அதன் விளைவான அதிர்ச்சியை மட்டுப்படுத்தலாம். அவ்வப்போது வெப்லாகிமேஜஸ்.காம் உதவியுன் பொம்மை போட்டால், படிக்கிற என்னைப் போன்ற அரை டிக்கட்டுகள் சுவாரசியமாக படிப்பார்கள். பாயின் வலைப்பூ லே அவுட், பழைய கால டயரியை படிக்கிற மாதிரி இருக்கிறது. இளமை துள்ளும் பாய் மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு லே அவுட் போட்டா, அலேக்...

சுறுசுறுப்பா எழுத ஆரமிச்சு கலக்கிக் கட்டின ஆசிப்பு, ஏன் இப்படி சுரத்தே இல்லாம போயிட்டாஹன்னு வெளங்கலை. படிக்க ஜாலியா இருக்குமுல்லா...எழுதுவே..( அதென்ன.. வாப்பான்னு வாய் நிறைய கூப்பிடாம, ஊடகச்செல்வர்னு லேடியோ பொட்டி ஆசாமி மாதிரி விளிக்கிறீரு..?? )

ரெய்ன்கோட்

படத்தை பற்றி ஏற்கனவே இணைய நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்ததால், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. படம் என்ன வகை என்று தெரியாதது ஒரு விதத்தில் நல்லதாய் போனாலும், ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதித்தது.



நீருவின் வீட்டு வாசலில் மன்னு அழைப்பு மணியை அடிக்கும் நிமிடத்தில் இருந்து படம் ஒரு கச்சிதமான சிறுகதை. ஐஸ்வர்யா(நீரு) அழகாக கலைந்த ஓவியம் போல் இருக்கிறார் - மனசுக்குள் கடலூர் ஹீரோவைத் திட்டிக் கொண்டேன். மன்னுவுடன் பேசிக் கொண்டே நீரு, தன் வாழ்க்கையை, தன் சந்தோஷத்தை விளக்கும் போது, அவர்களுடைய கடந்த காலத்தினை கோஷ் நடு நடுவே துளித் துளியாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். சம்பாஷணைகள் நடுவே ஐஸ்வர்யாவின் விநோதமான சில செய்கைகளை, அவள் பதட்டத்தை காட்டுவதன் மூலம், "என்னவோ இடிக்கிறதே" என்ற எண்ணம் எழுமாறு செய்திருக்கிறார். ஜன்னல் மூலம் கூப்பிட்டு உள்ளே வந்த ஆசாமி ஒருவர் பேசும் காட்சிகளில் எல்லாம் சஸ்பென்ஸை இன்னமும் வளர்க்கிறது

மெல்ல முடிச்சு அவிழ்ந்து, இருவருடைய பாவனைகளும் இருவருக்கும் தெரிந்து போய், அதை சொல்லிக் கொள்ளாமல் இருவரும் தொடர்ந்து பொய்ப்பந்தலை இறுக்கிக் கட்ட முனையும்போது, பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஐயோ பாவமே என்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் நீரு உடைந்து போய் அழ ஆரம்பிக்க,
தேற்றுவது தெரியாமல், மன்னு முகத்தில் இயலாமையோடு அவளிடம் ஏதேதோ சொல்லிவிட்டு, நண்பனின் வீட்டுக்குள் வந்து இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறார். அவர் போட்டு சென்ற ரெய்ன்கோட்டை சோதிக்கும் நண்பனின் மனைவி படத்தை முடித்து வைக்கிறார்.

அஜய் தேவ்கன் 'கலக்கி' இருக்கிறார். அமைதியான, மிகையற்ற நடிப்பு. ஆதிகாலத்தில் இவரை ' பொணத்துக்கு ஷேவ் பண்ணா மாதிரி இருக்கான்" என்று கிண்டல் அடித்ததுண்டு. தொடர்ச்சியாக அஜய் அசத்தி வரும் படங்களை பார்த்து வருவதில், அந்த விதமான நடிப்பின்மேல் விருப்பம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. ஐஷ்வர்யாவை பற்றி ஏற்கனவே ஜொள்ளி இருக்கிறேன். சொல்ல வேண்டிய இன்னொரு நபர், நண்பனின் மனைவியாக வரும் அம்மணி. துக்கத்தை விழுங்க தான் செய்யும் முயற்சிகளை எல்லாம் அஜய்க்கு அவர் நாசுக்காக அவ்வப்போது சொல்லிக்கொண்டு வர, அஜய் உடனே அவரிடம் அந்தக் கேள்வியை கேட்டு விட, அதை நாசுக்காக வளைத்து ஓட்டும் அவர் நடிப்பு ...ஒண்ணாங்ளாஸ்.

படத்துக்கு இடையே ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு பாடல் மனதைப் பிசைகின்ற ராகத்திலும் சரி, அர்த்தத்திலும் சரி. அருமை. பொறுமையாக உட்கார்ந்து பார்த்தால், அனுபவித்துப் பார்க்க முடிகிற அருமையான முயற்சி.

Saturday, January 22, 2005

விகடனுக்கு அடுத்து....

வேறென்ன ...ஜூனியர் விகடன் தான்.

வயசில் நான் சீனியரென்றாலும் ( இன்றோடு 33 முடிகிறது ) , போன வாரத்தில் சில சுவாரசியமான விஷயங்களை எழுதி, நல்ல விவாதம் ஒன்றுக்கு - கவனிக்க: சண்டை அல்ல, வழிகோலிய சீனியருக்கு, விகடனுக்கு நன்றி.


ஆளாக்கிய விகடனுக்கும்...


வயசுக்கு வநத பெண்ணுடைய அப்பனின் அடிவயிறு மாதிரி மனசுக்குள் ஞண ஞண என்று இருக்கிறது. என் வலைப்பூவில் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஏற்கனவே இரண்டு முறை வலைப்பூ ஆசிரியராக அழைப்பு வந்தும் ஏற்கமுடியாதபடியான சூழ்நிலைகள். இப்போதுதான் செய்ய முடிகிறது.

தமிழும், எழுத்தும் , விமரிசனங்களும் அது விளைவிக்கும் சச்சரவுகளும் எனக்குப் புதிதல்ல என்பதை என்னை தொடர்ந்து அவதானிக்கும் சிலர் அறிவார்கள். அதைப் போலவே என் தடுமாற்றங்களும், ஜல்லிகளும், குழப்பங்களும். என்னைப் பொறுத்தவரை நான் எதையும் தீர்மானித்துவிட்டு செய்வது கிடையாது - ஆஃபிசுக்கு செல்லும் பாதை உட்பட. எந்த தீர்மானங்களும் வைத்துக் கொண்டு எழுதாததால், எல்லா தரப்பையும் எழுத முடிகிறது. எல்லா தரப்பையும் எழுதுவதால், எதற்கும் இணக்கமாவதில்லை. எதனின்றும் விலகிப்போவதில்லை. இது ஊசலாட்டம் மாதிரி தோன்றினாலும், உண்மையில் என் நிலை இதுதான் என்பதை தைரியமாய் ஒப்புக் கொள்கிறேன்.

சரி விடுங்கள்... !! என்ன செய்யப் போகிறேன் இந்த வாரம்..???

என் வாழ்க்கை பற்றி, வேலை பற்றி, குடும்பம் பற்றி, இணைய நண்பர்கள் பற்றி, எழுத்து முயற்சிகள் பற்றி, குடி பற்றி, என் ஜொள்ளு பற்றி, நடப்பு அரசியல் பற்றி, சினிமா பற்றி என்று எல்லாமே ஓரளவு எழுதி இருக்கிறேன் கடந்த ஒரு வருடத்தில். எழுதியதை திரும்ப படித்தால் மலைப்பாகவும், கொஞ்சம் திருப்தியாகவும் இருப்பது நிஜம். கிட்டத்தட்ட சரக்கு தீர்ந்து போய், வெறும் வம்பு எழுதி கொண்டிருக்கும் காலமிது.

என்ன எழுத..??

சரி. வம்பே எழுதுகிறேன்.

நான் இதுவரை ஆழ்ந்து படிக்காத வலைப்பூக்களை, என் போன்ற பாமர ரசிகர்களின்/வெகுஜனங்களின் பார்வையில் படாத வலைப்பூக்களைப் பற்றி, என்னால் முடிந்த வரைக்கும் சுவாரசியமாக விமர்சனம் எழுதப் போகிறேன். விமரிசனம் என்றாலே நல்லது - கெட்டது எல்லாம் உண்டு என்று உங்களுக்குத் தெரியும். ஆக்கபூர்வமாக நல்ல விதத்தில் எடுத்துக் கொள்வீர்கள் என்பது ஒரு நம்பிக்கைதான்.

வாய்ப்பு கொடுத்த சந்திரமதி மற்றும் காசிலிங்கத்திற்கு என் நன்றி.

Thursday, January 20, 2005

காரணம் என்ன..???

மறுபடியும் ஜெயேந்திரர் விவகாரம்.

கூடிய சீக்கிரமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக செய்திகள். ரவி அப்ரூவர் என்று பேச்சு. வழக்கும், அதன் முடிவும் என்ன வேண்டுமென்றாலும் ஆகிவிட்டுப் போகட்டும். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மக்கள் மெளனமாக இருந்து அரசு நடவடிக்கையை ஆதரித்தது பற்றி நண்பர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். " யார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சரி, ஏதாவது ஒருவராவது பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பேசுவார்கள்.இவ்வளவு ஏன், வீரப்பன் இறந்ததற்கே கூட, மனித உரிமைகள் மீறப்பட்டதாய் பயங்கர உறுமல் கிளம்பிற்று. ஏன் ஜெயேந்திரரிடம் எல்லோருக்கும் இத்தனை வெறுப்பு..?? " என்றார். எனக்குத் தெரிந்த வகையில், உடனே நினைவுக்கு வந்ததை வைத்து ஜல்லி அடித்தேனே ஒழிய விளக்கமாக சொல்லவில்லை. கீழே உள்ளது விகடன்.காம்மில் இருந்து ஆழமாக கிளறி, தரப்பட்ட அலசல். விகடனுக்கு துவேஷம் ஏதும் இல்லை என்று நான் நம்புகிறேன். இனி ....

---0----0----0---0----

சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஜெயேந்திரருக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல! என்ன தான் சுவையானதாக இருந்தாலும் சதா அதைச் சாப்பிட்டால் நன்றாகவா இருக்கும்? ஆனால் ஜெயேந்திரருக்கு திகட்டவே இல்லை. மனிதர் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த காலம் தான் குறைய!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் செப்டம்பர் மாதம் 3ம் தேதி கோயில் வளாகத்துக்குள் வைத்தே கொலை செய்யப்பட்டார். இது காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உத்திரவுப்படி தான் நடந்தது என்று போலீஸ் சொல்கிறது. இதனடிப்படையில் நவம்பர் 11ம் தேதி தீபாவளி நாளில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறைக்கும் கொண்டு போகப்பட்டார். கைதிகளுக்கு நன்நெறி புகட்டக்கூட ஜெயேந்திரர் இதுவரையில் சிறைச்சாலைப் பக்கம் போயிருக்கமாட்டார். முதல்வர் ஜெயலலிதா இந்த அனுபவத்தையும் ஜெயேந்திரருக்கு கொடுத்துவிட்டார்.இந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டதுமே ‘இப்படி இருக்குமா?’ என்று கேட்ட சிலர் ‘இப்படிச் செய்யலாமா?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் யோசிக்கப் போவது ஜெயேந்திரர் பற்றித்தான். சங்கர்ராமன் விவகாரம் அல்ல.

ஜெயேந்திர சரஸ்வதிக்கு அவர் வீட்டில் வைத்த பெயர் சுப்பிரமணியன். வேதங்களில் மகனுக்கு ஈடுபாடு இருப்பதாகச் சொல்லி மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதியிடம் சுப்பிரமணியம் ஒப்படைக்கப்பட்டான். யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பாத மகாபெரியவர், ‘வேதப்பாட சாலையில் படிக்க வையுங்கள்’ என்று சொன்னார். ஆறு ஆண்டுகள் அங்கு படித்த பிறகு 1954 மார்ச் 22 ம்தேதி ஜெயேந்திர சரஸ்வதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக அமர்த்தப்பட்டார்.

1.

மூத்தவர் அளவுக்குப் படிக்கவில்லை என்றாலும் மூத்தவர் போலப் படித்தவர் ஜெயேந்திரர். எல்லாவற்றையும் அச்சு அசலாக அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமல் காலத்தின் தேவைக்கேற்ப சில மாறுதல்கள் செய்து கொண்டால் மட்டுமே மதத்தைக் காப்பாற்றமுடியும் என்று நினைத்துச் செயல்பட்டதால் மகாபெரியவருக்கும், இவருக்கும் வேறுபாடு எழுந்தது.

2.

ராம ஜென்ம பூமி விவகாரத்தைக் கிளப்பி.. இந்தியாவில் புதுப் பிரச்னைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது அதற்கு ஆதரவாகக் கருத்துக் கூறினார் ஜெயேந்திரர். வேதம் தவிர வேறு எது பற்றியும் யோசிக்காத பெரியவர் ‘அவரது அரசியல் கருத்துகளுக்கு அவரே பொறுப்பு. அவற்றை மேற்கொள்வது அவரது விருப்பம்’ என்று பதில் தருமளவுக்கு தீவிர கருத்துகளை வெளியிட ஆரம்பித்தார்.

3.

இந்த நிலையில் தான் திடீரென்று காணாமல் போனார் ஜெயேந்திரர். 23.08.1987ம் நாள் நள்ளிரவில் இது நடந்தது. ‘மூன்றாண்டுகளுக்கு முன்னரே நாட்டு நலப்பணிக்கு போகப்போவதாகச் சொன்னார். அதற்காகவே சங்கர விஜயேந்திரனை இளைய மடாதிபதியாக என்னைக் கேட்காமலேயே நியமித்து விட்டார்’’ என்று மகா பெரியவர் விளக்கமளித்தார். இது சட்டச்சிக்கலான போது.. ‘ஜெயேந்திரர் தனக்கு வாரிசாக விஜயேந்திரருக்கு பரிவட்டம் என்ற பட்டுத்துணியை 1984ல் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் வைத்து பரிசளித்துவிட்டார். இது தவிர வேறு சடங்கு எதுவும் தேவையில்லை’ என்று கூறப்பட்டது. ஆனால் செப்டம்பர் 8ம் தேதி மீண்டும் காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார். சங்கராச்சாரியார்கள் மடத்தைவிட்டு வெளியில் செல்லும் போது தண்டி எனப்படும் பிரம்பினை விட்டுச்செல்ல மாட்டார்கள். ஆனால் அதை விட்டுசென்றார் ஜெயேந்திரர்.

4.
அதன் பிறகு ஜெயேந்திரர் திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘தமிழ் தாய் மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி’ என்று ஜெயேந்திரர் சொல்ல.. இதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியும், தி.க.தலைவர் வீரமணியும் பதில் சொல்ல விவாதம் சூடு பிடித்தது.

5.

‘காமாட்சியை வேண்டினேன். கருணாநிதிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது’ என்று ஜெயேந்திரர் சொன்னதாக பரவிய செய்தி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

6.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் கலந்துகொண்டு தீவிர இந்துத்துவா கருத்துக்களைப் பரப்பினார்.

7.

‘கணவன் இறந்த பிறகு மனைவி உடன்கட்டை ஏறுவது அந்தப் பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்தது’ என்று சொல்லி திடுக்கிடவைத்தார்.

8.

தமிழ்மொழியில் கோயில்களில் அர்ச்சனை செய்வதற்கு எதிராகக் கருத்துக்கூறிய ஜெயேந்திரருக்கு எதிராக பெரிய இயக்கமே எழுந்தது. இவரின் ஆலோசனைப்படியே மதமாற்றத்தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டது.

9.

இந்துக் கோயில்களில் கூட சைவ, வைணவ வேறுபாட்டுடன் கருத்துச் சொன்னதாக இவர் மீது சந்தேகம் கிளம்பியது.

10.

கடந்த ஆண்டு மீண்டும் பாபர் மசூதி பிரச்சனையைக் கையிலெடுத்தார் ஜெயேந்திரர். இந்து&முஸ்லீம் ஒற்றுமைக்காக இந்த விஷயத்தில் தலையிட்டதாக சொன்னார். ‘‘அயோத்தியில் ராமர்கோயிலும் மசூதியும் அருகருகில் கட்டப்படும். மதுரா, காசி நகரங்களில் உள்ள மசூதிகள் உள்ள நிலப்பரப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்ற சமாதானத்தை முஸ்லீம் அமைப்புகள் ஏற்கவில்லை. இந்து அமைப்புகளும் ஏற்கவில்லை. நொந்து போன ஜெயேந்திரர் ‘இனி ராமர் கோயில் பிரச்சனை பற்றிப் பேசவேமாட்டேன்’ என்று சொல்லி அமைதியாகிவிட்டார்.

11.

அதற்குப் பிறகு தான் சங்கர்ராமன் விவகாரம்.இது ராமர் கோயில் விவகாரத்தை விடச் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஜெயேந்திரருக்கு இந்த விவகாரம் அவ்வளவு சீக்கிரம் விடுதலை வாங்கித் தருமா? தெரியவில்லை!

இரண்டாம் ஆட்டம்

பதவியேற்பு விழாவைப் பார்த்துவிட்டு, இப்போதுதான் பணியிடம் வந்தேன்.

ஜார்ஜ் புஷ்ஷின் செகண்ட் இன்னிங்ஸ்...




இந்த விஷயம் காலையில்தான் சி.என்.என்னை மேயும்போது தெரிந்தது. கீழே வந்து உடனடியாக டீவியை போட்டு, பார்க்க ஆரம்பித்தேன். லாரா புஷ் உள்ளே வந்து கொண்டிருந்தார் அப்போது. பின்பு டிக் செனி. பிறகு தனது அமைச்சரவை சகாக்கள் சூழ புஷ். அவரது பதினேழு நிமிட உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. Freedom என்கிற வார்த்தையை இருபத்துமூணு முறையும், Liberty என்கிற வார்த்தையை பதினைந்து முறையும் உபயோகப்படுத்திய yet another "pretty" speech ( as quoted by NPR.org) .

கூடியிருந்த கூட்டத்தின் சோகையான கை தட்டலுக்கும், இறுகிப்போன முகங்களுக்கும் வாஷிங்டன் குளிர்மட்டும்தான் காரணம் என்று நம்ப விரும்புகிறேன்.

ஆனால் இரண்டாம் ஆட்டம் ஆடும் அதிபர்கள் அவ்வளவு "ஆட்டம்" போட முடியாது என்கிறார்கள். ஏனெனில் இரண்டு முறைக்கு மேல் ஒருவர் இங்கே அதிபராக முடியாது என்பதால், எல்லா முடிவுகளையும் செனட் உறுப்பினர்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் கூடிய சீக்கிரமே அடுத்த அதிபரை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று பேச்சு நிலவுகிறது.

பார்ப்போம்.

Monday, January 17, 2005

அறிவிப்பு

எனது முந்தைய பதிவின் பின்னூட்டப்பெட்டியில் ஒரு விஷமிக்கும் , எனக்கும் நடந்த வார்த்தைப் பரிவர்த்தனை எனக்கு, என் தரத்துக்கு உகந்ததாக இல்லை. என்னை தூண்டியது மற்றொருவர் என்றாலும், அவருடைய கேள்விக்கு பதில் சொல்கிற முயற்சியில் நானும் கொஞ்சம் கோபத்தில் கலைந்து போனேன்.

எனவே அப்பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

Friday, January 14, 2005

மாயவரம் பொங்கல்

விவசாயக் குடும்பங்களில் தீபாவளிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட பொங்கலுக்குத்தான் அதிகம் இருக்கும். இருபது வேலி, முப்பது வேலி நிலமெல்லாம் பாதி குத்தகைக்காரனிடமும், மீதி தானே முன்வந்து விற்றதிலுமாய் கழிந்து விட, அரிசி மூட்டையாய் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட்டாலும், பொங்கல் கொண்டாடும்போது மட்டும், முன்னாளைய "சுகஜீவனம்" நினைவுக்கு வந்து விடும்.

எங்கள் இல்லத்திலும் அப்படித்தான். காலையில் இருந்தே அப்பா டென்ஷனாக சுற்றிக் கொண்டிருப்பார். விடிகாலை எழுந்து, ஈரத்துணியோடு, கொல்லையில் சூரியன் தெரியும் இடமாக பார்த்து, பூமியில் செவ்வகமாக குழி தோண்டி, அந்த மண்னை வைத்தே உருண்டைகள் செய்து, குழிக்கு இரண்டு புறமும் கொஞ்சம் இடைவெளி விட்டு வைப்பார். பிறகு மண்பானைகள் வைத்து, இஞ்சிக் கொத்து மஞ்சள் கொத்துடன் அடுப்பில் வைத்து, பொங்கல் பொங்கி இறக்கி சாமிக்கு படைப்பதற்குள் முதுகு விரிந்து விடும். பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அருகம்புல் சொருகி, சூரியகாந்திப் பூவை மேலே வைத்து, பொங்கல் வைத்து படைத்து முடித்ததும்தான் காலையில் இருந்து மறந்திருந்த பசி விறு விறு என்று மண்டைக்கு ஏறும்.

மறுநாள் இன்னமும் பிசி. எங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு மாட்டுப்பொங்கல் அன்று கிட்டத்தட்ட நூறு வருடங்களாக கரகம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக, என் அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள் ஏழு பேரும் அவர்களுடைய குடும்பத்தினர் சகிதம் பொங்கல் இரவு ஊரிலிருந்து வந்து இறங்கி விடுவார்கள். காலையில் எழுந்து லாகடத்துக்கு (துலாக்கட்டம்)( காவேரிக்கரைக்கு) போய், பூங்கரகம் செய்து, பெரிய கடைத்தெரு, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு வழியாக வந்து, கோவிலில் வந்து இறக்கி முடித்தவுடன் தான் மறுபடியும் வீட்டுக்குப்போய், பொங்கலிட்டு சாமிக்கு படைக்க வேண்டும். இரட்டிப்பு வேலை. ஆனால் ஊரிலிருந்து வந்திருக்கும் சித்தப்பா, பெரியப்பாக்கள் அத்தைகளோடு, அவர்கள் பையன்கள் பெண்களோடு அளவளாவுவதில் அன்றும் களைப்பு ஒன்றும் தெரியாது. ஒருவர் குடை பிடிப்போம். இன்னொருவர் கத்தி. இன்னோருவர் தீவட்டி பிடிப்போம். இன்னொருவர் சாம்பிராணி சட்டி. கொஞ்சம் வளர்ந்த பையன்மார் நடைபாவாடை போடுவார்கள். இன்னும் கொஞ்சம் பேர் வழி நெடுக உண்டி குலுக்குவார்கள். பூசாரிக்கு சிலம்பு மாட்ட, அவருக்கு சாமி வரும்போது, எலுமிச்சம்பழம் அறுத்து "கழிப்பு" கழித்துவிட, பூசாரி ஆவேசத்தில் தடுமாறும்போது, கரகத்தை அணைவாக பிடித்துக் கொள்ள என்று பெரியவர்களும் கூட வருவார்கள். "சாமி" வரும்போது பூசாரியிடம்
வீபூதி பூசிக்கொள்ள " நான் மின்னே. நீ முன்னே" என்று போட்டி போடுவார்கள். ஆனால் நானும் சரி, என் அப்பாவும் சரி, ஓரமாக நின்று கொண்டு அவர் தலையில் இருக்கும் கரகத்தினை கும்பிட்டு விட்டு வருவதோடு விலகிவிடுவோம்.

குடும்பத்தில் யாராவது இறந்து போனால், மற்றது எதுவும் ஒரு வருஷத்துக்கு கொண்டாடாமல் தீட்டு காப்போம். ஆனால், கரகம் மட்டும் விதிவிலக்கு. போனவருஷம் என் சின்னா சித்தப்பா தவறிப் போயிருந்தாலும், இன்றும் கரகம் உண்டு. கோவிலில் பூஜை உண்டு. நேற்று இரவு அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஊரிலிருந்து எல்லாரும் வந்து இறங்கி இருப்பதாக சொன்னார். பெரியப்பாவுக்கு நடக்கவே முடியவில்லையாம். தடி ஊன்றிதான் நடக்கிறாராம். ஆனாலும் வைராக்கியம் அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

[ காலையில் சில பொங்கல் வாழ்த்துக்கவிதைகள் படித்தேன். நல்ல தமிழ்சொற்கள் கோக்கப்பட்டு எழுதிவரும்போதே பேச்சு வழக்கு சொற்களை கவிஞர்கள் உள்ளே நுழைத்து விடுகிறார்கள். படிக்கும்போது பல்லில் தட்டுப்பட்டு, நற நற வென்று கூசுகின்றது. இது எனக்கு மட்டுமோ என்னவோ..இல்லை எல்லாருக்குமேவா..?? தெரியவில்லை... ]


Wednesday, January 12, 2005

சாமியார்கள் சளைப்பதில்லை

எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மெஷர்மெண்ட்ஸ் லேப் க்ளாஸ். காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு, ஐந்து ஐந்து பேராக பிரித்து விடபட்ட க்ரூப்பில் மக்கள் எல்லாரும் கடலை போட்டுக் கொண்டு இருந்தோம். பத்மாவதி மேடம், லேபில் துணைக்கு இருக்கும் இன்னொரு இளவயசு மேடத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே ந.ப. சுந்தர்ராஜன்ங்கிறது யாரு..?? என்கிற கனத்த குரல் எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. கேட்டவரை நான் அதற்குமுன் எங்கும் பார்க்கவில்லையாதலால், குழப்பம் விலகாமல் வெளியே வந்தேன். வெளியே வந்தபின்தான் தெரிந்தது, வந்தவர் தனியாக வரவில்லை. கூட ஐந்தாறு பேர் வந்திருந்தார்கள். அவர்களில் அண்ணனாகப் பட்டவர் ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு, ஒற்றைக் காலை பின்னே முட்டுக் கொடுத்து, கைகளை மேலே தூக்கிக் கோர்த்துக் கொண்டு, எழுத்தெழுத்தாக சொன்னார். " தம்பி, படிக்கிற வேலையைப் பாக்காம, பத்திரிக்கைக்கு எழுதறது; ஃபோட்டோ பிடிக்கறதுங்கிற வேலையெல்லாம் வெச்சிகிட்டீங்கன்னா நல்லா இருக்காது; சொல்லிட்டு வரச்சொன்னாஹ" என்றார்.

அதன் பின்தான் முதல் வாரம், ஜூனியர் விகடனுக்காக சிவகங்கை சென்று முத்துக்காமாட்சி சுவாமிகளை பற்றி தகவல் சேகரித்து வந்தது நினைவுக்கு வந்தது. குளறி, உளறி கொட்டி அவர்களை அனுப்பி விட்டாலும், அவர்கள் பற்றி சேகரித்த செய்திகளை அனுப்பி விட்டு, மேற்சொன்ன சம்பவத்தையும் சொல்லி, என் பேரில் வெளியிட வேண்டாம் என ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அது அப்போது வெளியே வரவே இல்லை. அதனால்தான் இப்போது இதை எழுத முடிகிறதோ என்னவோ..??

****

சிவகங்கை சித்தர் முத்துக்காமாட்சி மதுரையை சேர்ந்தவர். யாரிடமோ சித்து வேலைகள் கற்றுக் கொண்டு, அந்த சித்து வேலைகள் மூலமாக சிவகங்கையை 1990 களிலேயே கலக்கிக் கொண்டிருந்தார். நடிகர் கார்த்திக் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர். நினைத்த சமயத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் மாந்திரிகவாதி என்றெல்லாம் பேச்சு. கார்த்திக் கல்யாணத்துக்கு கூட, முத்துராமனாக வடிவம் எடுத்துதான் அவருக்கு ஆசிர்வாதம் செய்தாராம் (?!!!).
அப்போது அவரை பற்றி கிடைத்த தகவல்கள், பெண்கள் சம்பந்தமான வதந்திகள் ஆகியவற்றைப் பற்றி விசாரிக்கவே சிவகங்கை சென்றேன். உள்ளூர் புகைப்படக்காரர் ஒருவர் கூடவே உதவியாக வந்தார். கிடைக்கிற தகவல்களைப் பார்த்து விட்டு அவர் இறுதியில், " சார்..சாமியார்கிட்ட நான் உங்களைப் பத்தி பேசி ஏதாவது பணம் வாங்கித்தர்றேன். இதெல்லாம் கண்டுக்கிடாதீங்க" என்று சொல்லும் வரை அவரும் ஒரு spyware என்று எனக்குத் தெரியாது போனதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. கேட்டவரை ஒரு புழுபோல பார்த்துவிட்டு, என் பின்னாடி யாராவது தொடர்கிறார்களோ என்று பயந்து கொண்டே பார்த்துப் பார்த்து காரைக்குடி வந்து சேர்ந்தேன்.

அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்சொன்ன மிரட்டல் சம்பவம்.

இந்த வாரம் முத்துக்காமாட்சியைப் பற்றி ஜு.வியில் இந்த நியூஸ் படித்ததும் "சரிதான் சாமியாரும் சளைக்கவில்லை. ஜூவியும் சளைக்கவில்லை" என்று நினைத்து சிரித்துக் கொண்டேன். ஜூவி கட்டுரையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, அது தாண்டி நூறு மடங்கு போகக்கூடியவர் சாமியார். அவரை பற்றி அப்போது கேள்விப்பட்ட செய்திகளை மறுபடி எழுதலாம்தான்.

ஆனால் இப்போ வரும் சாமியார் செய்திகளை பார்த்தால் அதெல்லாம் ஜுஜூபி.

*****
சென்னை ஹெக்ஸாவெரில் பணிபுரிந்தபோது, மகாபலிபுரம் ஃபிஷர்மேன்ஸ் கோவில் நடந்த ஒரு மேனேஜ்மெண்ட் மீட்டிங்குக்கு உதவி செய்யபோய்விட்டு வரும்வழியில் நீலாங்கரை ஆசிரமம் சென்றேன். கூட்டிச்சென்ற லக்ஷ்மணன் அந்த ஆசிரம சாமியாரின் பக்தர். சாமியார் உயரமும் அகலமாக, ஜில்பா போட்டுக் கொண்டு, "வா..ராஜா..உட்காரு " என்றார். பெரிய ஹாலில் பக்தர்களோடு உட்கார்ந்ததும் ஒரு சின்ன தட்டில் பிஸிபேளா பாத் கொடுத்தார்கள். பிறகு துண்டடி புகழ் சிவசங்கர பாபா டான்ஸ் ஆடினார். சென்னைத் தமிழில் அருளுரை வழங்கினார். எல்லோரும் அவருக்கு ஆரத்தி காட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

பிஸிபேளாபாத் நன்றாக இருந்தது.

******

செய்திகளில் தற்போது அடிபடும் காஞ்சி கார்ப்பரேட் சாமியார்களை நான் சந்திக்க வாய்க்கவில்லை. மகாப்பெரியர் இருந்த காலத்தில், என் தந்தையார் போய் வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

ஜாமீன் நியூஸ் கிடைத்ததும் ஜெயேந்திரர் தன் ஜெயில் சகாக்களுடன் பேசியதை ஜூவி பத்தி பத்தியாக போட்டிருக்கிறது. ஜெயில் வாசல் வரைக்கும் போலிஸாருடன் பேசிக்கொண்டே வெளியே வந்தாராம் ஜெயேந்திரர். ஆனால், நிருபர்களைப் பார்த்தவுடன் பேச வில்லையாம். " ஸ்வாமிகள் இரண்டு நாட்களா சுனாமிக்காக மெளனவிரதம் இருக்கா...இன்னைக்கு மூணாவது நாள். அதனால பேச மாட்டா " என்றார்களாம் பக்தர்கள்.

நிருபர்களிடம் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்ள விருப்பமில்லையென்றால், அதை நேரடியாக சொல்லலாமே. எதற்கு இந்த நாடகம், சுனாமிக்காக மெளனவிரதம் என்பதெல்லாம்..?? இத்தனை பட்டும் ஈஸ்வரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே இல்லாமல் ஸ்மார்த்தகுரு இப்படி பொய்யும் வேஷமுமாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் அலையலாமா..??

தண்டத்தை மட்டும் அவர் மாற்றுவதெல்லாம் வெறும் தண்டம். மனசு மாற வேண்டும் அவருக்கு.

Tuesday, January 11, 2005

கோ.கா --- க.கா கண்ணாலம்

நண்பர் கொஸப்பேட்டை குப்ஸாமிக்கு கண்ணாலமாம். மரத்தடி ராஜா மெயில் போட்டிருக்கிறார். ( ஹி..ஹி..இருவரும் ஒருவரே...)

நண்பர் ராஜாவும் இணையம் மூலமாகத்தான் பழக்கம். எங்க ஊர்க்காரர் என்பதால் தனி பாசம். இந்த வலைப்பூவை ஆரம்பித்து, இயங்கு எழுத்துரு/ தனிக் குறியீடு என்றெல்லாம் தண்ணியில்லாமலே தள்ளாடிக்கொண்டிருந்தபோது, ஆபத்பாந்தவன், அனாத ரட்சகனாக சவூதியில் இருந்து உதவிக்கரம் நீட்டினார். அவர் சொன்ன சில ஜிகிடிகள் புரியாததால், என்னுடைய பயனர்/ கடவுச்சொல்லையே அவரிடம் கொடுத்து விட, கன்னிப்பெண்ணை கைவைக்காமல் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்ட வயசுப்பிள்ளை போல், பொறுப்பாக நடந்து கொண்டார். அவருக்கு கண்ணாலம். கன்னி ராசிக்காரருக்கே கண்ணாலமென்றால் பெர்ரிய விஷயம்தான். ஆளை கொஞ்ச நாள் காணவில்லையே எனக் கேட்டபோது, "அவருக்கு தலைப்பூவை பற்றி யோசிக்கவே நேரமில்லை. வலைப்பூவுக்கென்ன அவசரம்" என்றார் பாய்.

காதல் திருமணமென்று நினைக்கிறேன். பத்திரிக்கை சின்னதாக, கச்சிதமாக, இந்தக் காலத்து செல்ஃபோன் போல இருக்கிறது. கலர் கொஞ்சம் "அடிக்கிற" கலர். பத்திரிக்கையை தளபதியே வடிவமைத்திருக்கிறார் போல. - கண்ணாலப் பத்திரிக்கையில் வெண்பா எழுதி விளிக்கிற தமிழ்மனசு வேறு யாருக்கிருக்கிறது..?

தங்கர்பச்சான் பட ஹீரோ மாதிரி, சிதம்பரத்தில் கல்யாணம். சென்னையில் வரவேற்பு. இணைய நண்பர்கள் பெருமளவில் திரண்டு போய் அசத்துவார்கள் என நினைக்கிறேன். நான் வழக்கம்போலவே கரைக்கு இக்கரையிலிருந்து வாழ்த்திவிட்டு, தாலி கட்டப்போகும் ஜனவரி 27 ஆம் தேதி முகூர்த்த நேரத்தில், தம்பிக்கு மானசீகமாக வாயில் சர்க்கரை போட்டு விட வேண்டியதுதான்.

கோமதியின் காதலனும், கள்வனின் காதலியும் எல்லாவித சீரும் சிறப்புகளும் பெற வாழ்த்துவோம்.

பி.கு:

ஜனவரி தாண்டி இன்னும் ரெண்டு மூன்று இணைய இளசுகள் சம்சாரக்கடலில் குதிக்கப்போகிறார்கள். எப்போது ரகசியம் உடையப்போவுதோ..???!!!

அமெரிக்காவின் அழுகுரல்

கையைக் காலை உதைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து கதறும் பிடிவாதக் குழந்தையை பார்த்த மாதிரி இருக்கிறது இதைப் பார்த்து. நம் வீட்டுக் குழந்தையாக இருந்தால் கன்னத்தில் ஒரு திருகு திருகி, முதுகில் ஒரு வெடி போடலாம். ஆனால் ஊரான் வீட்டுக் குழந்தை ஆயிற்றே, கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க ரேடியோ ஸ்டேஷன் ஜாக்கி ஒருவர், கால் சென்டர் வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பும் ஒரு கம்பெனி எண்ணைத் தொடர்பு கொண்டு, கன்னா பின்னா என்று ஃபோனில் பேசி இருக்கிறார். அமெரிக்க பொருட்களை, கலாசாரத்தை பற்றித் தெரியாத இந்திய அம்மணி, எப்படி தனக்கு சர்வீஸ் செய்வது என்கிற வெறி அவருக்கு. பதிலுக்கு "ஸ்டீனா" என்கிற அந்த இந்திய அம்மணி, பொறுமையாக பதில் சொன்னதையும் கேட்காமல், Bitch என்றும், Rat eater என்றும், I will choke the f**k out of you என்றும் அநாகரிகமாக பேசி ஃபோனை அறைந்து சாத்தி இருக்கிறார். இப்போது அந்த ஸ்டேஷனின் மானேஜர் ரிச்சர்ட் வருதம் தெரிவித்து இருக்கிறார் என்றாலும், சம்பந்தபட்ட ஜாக்கிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சிரிப்புத்தான் வருகிறது.

உங்களுக்கு இந்தியர்களுடன் பேச சங்கடமாக இருந்தால், அவுட்சோர்ஸ் செய்யும் அந்தக் கம்பெனியிடம் புகார் செய்யுங்கள். அதிக லாபத்துக்காக அவுட் சோர்ஸ் செய்யும், கம்பெனி பொருட்களை முடிந்தால் புறக்கணியுங்கள். இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் செனட்டர்களிடம் பேசுங்கள். அதை விடுத்துவிட்டு அந்த அமைப்பின் கடைநிலை செயலரிடம் சென்று அநாகரீகமாக பேசுவது முழுக்க முழுக்க உங்கள் இயலாமையின் வெளிப்பாடு.

மாறி வரும் பொருளாதார சூழ்நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உலகம் என்பது சிறிய கிராமம். போட்டிகள் எல்லா நாடுகளில் இருந்தும் வரும். உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்யாவிடில், வேலை வெளியாருக்குப் போகும். வேளியாருக்குப் போகும் வேலைகள்தான் எனக்கு வேண்டும். நான் படிக்க மாட்டேன். எனக்கு இம் மாதிரி நாக்கு தேயாமல், பாட்டுக் கேட்டுக் கொண்டே ஃபோனில் கஸ்டமர் சர்வீஸ் பண்ணிவிட்டு, இந்திய ஆசாமிகள் பெறும் சம்பளத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் வேண்டும் என்றால்....

ஸாரி...அந்தக் காலம் முடிந்து விட்டது.

இந்தியாவுக்கே சீனாவிலிருந்து ஆட்கள் வந்து வேலை செய்கிறார்கள். அமெரிக்கர்களே பலபேர் அங்கே பணி புரிகிறார்கள். மாறி வரும் நடப்பை புரிந்து கொள்ளாமல், வெறுமே மூர்க்கமாக கத்துவதில் பயனில்லை. வெறுமே கத்திக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

ஊரான் வீடுக் குழந்தையையும் ஒரு கட்டத்தில் கண்டிக்க வேண்டி இருக்கும்.

( ரீடிஃப் இணைப்பில் உள்ள சம்பாஷணை கேட்காவிட்டால், எனக்கு எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன்)

Monday, January 10, 2005

ம.குமரன் தா/பெ மகாலக்ஷ்மி

படத்தின் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் சலிப்பாக இருந்தது. ஆனால் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை நம்பி, ரிஸ்க் எடுத்தேன். நம்பிக்கை வீண்போகவில்லை.

செல்வராகவன்/தனுஷ்/கஸ்தூரிராஜா ஃபேமிலி போல இதுவும் ஒரு ஃபேமிலி படம்தான். ஆனா கொஞ்சம் ரீஜண்டான ஃபேமிலி போல. எடிட்டர் மோகன்/ராஜா/ரவி படம். இப்படி ரெண்டு புள்ளைகளை பெத்தா கோடம்பாக்கத்துல நல்லா பொழைச்சிக்கலாம்போல. இவர்கள் முதல் படம் "ஜெயம்" கொஞ்சம் தான் பார்த்தேன். ஆனா போரடிச்சுதுன்னு எழுந்து போய் ப்ரவுஸ ஆரம்பிச்சுட்டேன். இந்தப் படம் பரவால்லை. கதைன்னு ஒண்ணும் பெரிசா இல்லாட்டியும், எல்லா சரக்கையும் சரிவிகிதமா கலந்து, குடும்பத்தோடு பாக்கிற மாதிரி தர முயற்சி பண்ணி இருக்காங்க.

ஹீரோ ரவி செமையா உடம்பு ஏத்திட்டார். ஆள் நல்லா, ஓங்கு தாங்கா, ஜம்முனு இருந்தாலும், மூஞ்சு ரொம்ப சாஃப்ட். அதை ஈடுகட்டற மாதிரி காட்சிகளிலும், வசனங்களிலேயும், முரட்டுத்தனத்தை ஏத்தி, கதாநாயகனை ரஃப் அண்டு டஃப்பாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். முயற்சி வெற்றி என்றாலும், சில இடத்தில் யதார்த்தத்தை மீறிய முரட்டுத்தனம் தெரிகிறது. இவர் போதாதென்று அப்பா பிரகாசராஜர் வேறு. களம் கிக்பாக்ஸிங் என்பதால் இருவரும் எப்போதுக் "கிக்கி" கிட்டே இருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கடைசி கட்ட காட்சிகள் மற்றும் தங்கை கல்யாணம் எல்லாம் தாய்மார்களின் புடவைத்தலைப்பை ஈரமாகுவதற்காக எடுக்கப்பட்டவை என்பது வெள்ளிடை மலையாக விளங்குகிறது.



ஹீரோயின் அஸின், பிசின் மாதிரி மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார். கேரளத்துப் பெண்குட்டி. கொஞ்சம் இஷா கோபிகர் சாயல், நிறைய இளமை + துள்ளல், அப்..பார வளைவுகள் என்று அள்ளிக்கொண்டு போகிறார். கட்டாயமாக ஒரு ரவுண்டு வருவார். வடக்கத்திய இறக்குமதிகள் போல, " வெக்கமா..?? கிலோ என்ன விலை ..? என்று கேட்காமல், நாணிக்கோணுவது போல நடிக்க முயற்சி பண்ணியது அட்டகாசமாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

நதியா ஆன்டி அசத்தலோ அசத்தல். ரொம்பவே இளமையான அம்மா. ரொம்பவே தன்னம்பிக்கையும், மகனுக்கு கொஞ்சமும் சளைக்காத கோபக்காரியாகவும், சீனியர் கிக்கருக்காக வாழ்க்கையை விட்டுக் கொடுப்பதிலும் சரி போடு போட்டிருக்கிறார். இத்தனை இளமையான அம்மா, பொசுக்கென்று ஹார்ட் பிராப்ளத்தில் செத்துப்போவது இது தமிழ்ப்படம்; இது தமிழ்ப்படம் என்று நியாகப்படுத்துகிறது.

விவேக் சீசன் இன்னமும் முடியவில்லை போல. காமெடிக்கு குறைச்சல் இல்லை. ஆபாசமும் கொஞ்சம் தூக்கல்தான். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சேர்ந்து கொண்டு சிலையை "மாற்றி" வைக்கும் காட்சியும் அதை மலேசிய வி.ஐ.பி சிலாகிக்கும் காட்சியும். அதைப் பார்க்கும்போது Sodomy க்காக, சர்ச்சையில் சிக்கிய மலேசிய பிரமுகர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இத்தனை நல்ல படத்துக்கு ஒரு நல்ல இசையமைப்பாளர் கிடைக்காது போனது துரதிர்ஷ்டமே. தகப்பனின் வழியில் ஸ்ரீகாந்த் டன்டனக்கடி டன்டனக்கடி என்று தட்டித் தள்ளி இருக்கிறார். படத்தின் மியூசிக் சிடியில் எறும்பு மொய்க்கிறதாம். :-) டைரக்டர் ராஜா ஃப்ரெஷ்ஷாக கொடுத்திருக்கிறார். எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள் படத்தில்.

முக்கியமாய் பிசின்...ஹி..ஹி..


நரி புலி ஆட்டம்

உடனடியாக சங்கரமடம் சம்பந்தப்பட்ட வழக்குகளை தமிழக அரசு சாராத அமைப்பு, அது சி.பி.ஐ ஆகக்கூட இருக்கலாம் - விசாரிக்க வேண்டும்.

இப்படி சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஜெயேந்திரர் கைது நடவடிக்கை ஆரம்பித்தபோது எனக்கு தமிழக அரசு மீது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. ஏனெனில், சங்கரமடத்தின்பால் பாசமும், நேசமும் வைத்திருந்த ஜெ இம்மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இல்லாமற் போகாது என்கிற எளிய நம்பிக்கை அது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் போலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையும், வெளி வந்த தகவல்களும் நம்பிக்கை கொடுத்தன.

அப்புவின் கைது நடவடிக்கையை தொடர்ந்து வெளிவந்த, செய்திகள் அவரை அண்ணாநகர் ரமேஷ் கொலைக்கும் சாட்சியாக சேர்த்து ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள் என்ற ரீதியில் அமைந்தன. அது மட்டுமல்லாமல், அந்த கொலையில் சாட்சியம் தந்தால், சங்கர்ராமன் கொலைப்பழி அவர் மீது ஏறாது என்றும் உறுதி தரப்பட்டதாகவும் வதந்திகள். அதைத் தொடர்ந்து அவர் மீது அரசு காட்டிய பரிவு, அவருக்கு ஏஸி ரூமில் அளிக்கப்பட்ட அவசர மற்றும் விசேஷ சிகிச்சை ( ஜெயேந்திரருக்கு கூட மறுக்கப்பட்ட கவனிப்பு இது..) என் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது.

ஆரம்பத்தில் நீதியின் காவலன் போல ரீடிஃப்புக்கு பேட்டி கொடுத்த அரசுதரப்பு வழக்குரைஞர் துல்சி, ஜாமீன் மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் போன வாரம் வழி வழியென்று வழிந்தார். அவர் கொடுத்த ஆதாரங்களில் சாரமில்லை என்று போன வாரம் வெள்ளியன்று நீதிபதிகள் சொன்னபோதே, ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதுவே இன்று நடந்திருக்கிறது. அது ஒரு வகையில் அரசுக்கு மிகப்பெரிய அடி. குற்றவாளி என்று கருதப்படுபவரை ஜாமீனில் வைத்திருக்கவே முகாந்திரம் இல்லை என்று கோர்ட் கருதினால், இவர் மீது எந்த லட்சணத்தில் இவர்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்பது கேள்விக்குறி.

இதையெல்லாம் விட ஆச்சரியம், சின்ன சுவாமிஜியின் கைது. பத்திரிக்கைகளில் அவர் மேற்கொண்ட வெள்ளைக் கொடி முயற்சிகளை எல்லாம் படித்தும், இவர் மறுபடியும், பெரிய சுவாமிஜி ஜாமின் தீர்ப்பு வந்த நாளில் கைது செய்யப்பட்டிருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் ட்ரேட்மார்க் பிடிவாதத்தையும், அவர்களது ஈகோ உரசப்பட்டதன் எதிர்விளைவாய் பார்க்க நேரிடுகிறது. சிலர், இந்த கைது நடவடிக்கை அரசுடன் மடத்துக்கு ஏற்பட்ட டீல் என்கிறார்கள். இரண்டு சாமியாரையும் ஒரே சமயத்தில் உள்ளே போட்டால், மடம் ஸ்தம்பிக்கும் என்பதற்காக பெரிய மீனைப் போட்டு, சின்ன மீனை பிடிக்கும் முறையாக , ஜாமீன் கிடைக்கும் விதமாக விட்டுக் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இன்னமும் சிலர் பேரம் படிந்து விட்டது. கிளி பறந்து விட்டது என்கிறார்கள்.

இத்தனை ஹேஷ்யங்களுக்கும் , அவநம்பிக்கைகளுக்கும், சொக்கட்டான் ஆட்டங்களுக்கும் இடையில் இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்து நடத்துவதென்பது, சரியான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாது. அப்படி தானே நடத்த விருப்பமும், வெறியும் இருந்தால், விசாரணையை துரிதப்படுத்தி, முடிப்பது நலம்.

Spyware

நான்கு நாட்களாக கதறிக் கொண்டிருக்கிறேன்.

எ ன்னுடைய அலுவலக கணிணியில், Alumni.net க்கு போனபோது, வந்த ஏதோ ஒரு பாப்-அப்புக்கு யெஸ் சொல்லித் தொலைக்க, தொடர்ந்து தொல்லைகள். தானாக WebSearch Toolbar என்ற மென்கலனை நிறுவிக்கொண்டது. பிறகு ஏகத்துக்கு பாப்கார்ன் பொரிவது போல பாப்-அப்புகள் வரத்துவங்கவும், லேட்டாக விழித்துக் கொண்டு அந்த மென்கலனை நீக்கினேன். பிறகும் தொல்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த உலாவியும் திறக்காதபோதே ஏகத்துக்கு ஜன்னல் ஜன்னலாக திரை முழுக்க திறந்து கொண்டிருக்கிறது. என்னுடைய வைரஸ் மென்கலன் அவ்வபோது, இங்கே வைரஸ், அங்கே வைரஸ் என்று அதன் பங்குங்கு ஜன்னல் திறக்கிறது.

என்னுடைய பணியிடத்து சப்போர்ட் இஞ்சினியர் வந்து பார்த்துவிட்டு உதடு பிதுக்கிவிட்டு சென்றுவிட்டார். காரணம், AD-Aware, spybot போன்ற எந்த மென்கலன்களாளும் நீக்க முடியாமல், VX2- Malware என்ற திருடன் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன் உயிர்நாடி xxxxx.dll என்ற ஃபைலில் இருக்கிறது. ஏன் xxxxx என்று சொல்கிறேனென்றால், ஒவ்வொருமுறை ஸ்பைவேர் க்ளீனர் பாவிக்கும்போதும், அது தன் பெயரை மாற்றிக் கொள்கிறது. Winlogon என்கிற System critical process உடன் அது தன்னை இணைத்துக் கொண்டு விட்டதால், கணிணி இயங்கிக் கொண்டிருக்கும்போது அந்த dll ஐ நீக்க முடியவில்லை. சரி, லோக்கல் மெஷினில் லாகின் ஆனால்தானே இனைக்க முடியவில்லை என்று ரிமோட் மெஷினிலிருந்து VNCViewer மூலம் லாகின் செய்து, DLL ஐ நீக்க முயன்றேன்.

ம்..ஹூம்..

படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.யாருக்காவது நல்ல ஸ்பைவேர் க்ளீனரோ, VX2 க்ளீனரோ தெரிந்தால், எனக்கு உதவுங்கள். நன்றி.



Saturday, January 08, 2005

பேர் கொல்லும் பிள்ளை



எல்லோராலும் பாராட்டப்பற்ற , புகழ்பெற்ற , பாடல்பெற்ற " மன்மதன் " படம் பார்த்தேன். தீபாவளிக்கு வந்த படங்களிலேயே நன்றாக ஓடிய படம் இதுவென்று சொன்னார்கள். மற்ற படங்கள் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று யோசிக்கவே கதிகலங்குகிறது. தமிழ்நாட்டில் இன்ன படம் ஓடும்; இன்னது ஓடாது என்று தெளிவாகவே சொல்ல முடியாத குழப்ப நிலை.

* படம் முழுக்க சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அனுபவத்தின் சாயலோ, அறிவின் அடையாளமோ துளிக்கூட இல்லை. குமுதத்தில் ஒரு பக்க கதையை படித்துவிட்டு, எழுத்த்தாளர் ஆகப் போகிறேன் என்று எழுதக் கிளம்பிய மாதிரி இருக்கிறது.

* படத்தில் கெட்ட பெண்கள் எல்லாம் கரெக்ட்டாக இங்க்லீஷ் பேசுகிறார்கள். ஆனால் ஹீரோ மட்டும் தப்பு தப்பாக பேசுகிறார். (உதா: நீங்களும் யூத்தா இருக்கிங்க. நானும் யூத்தா இருக்கேன் / ஆன் தி வே ல வரும்போது வாங்கிட்டு வந்துர்றேன். ஒருவேளை அவர் கொலை செய்வதற்கு அதுகூட காரணமா இருக்கலாம். சிம்பு சார், ஒண்ணு நல்ல இங்க்லீஷ் பேசுங்க. இல்லாட்டி தமிழ்லயே பேசுங்க. எதுக்கு பொண்ணுகளோட சேத்து, இங்க்லீஷையும் படம் முழுக்க கொல்றீங்க..??

* ஜோவுக்கும், சிம்புவுக்கும் காதல் டெவலப் ஆகும் விதம் புதுமையோ புதுமை. எந்தப் பெண்ணுக்கு, ரேப் பண்ற மாதிரி கனவு வருது. அப்படியே வந்தாலும் "அந்த" மாதிரி கனவில் மூஞ்சி இவ்ளோ தெளிவாவா தெரியும். கடசியில் அவரையே லவ்ஸ் பண்ணுகிறாராம். கர்மம்டா சாமி

* வாலி படத்தின் பாதிப்பு நிறைய்ய. கூடப் பழகுற பெண்ணை பைத்தியம், கிராக்குன்னு எப்ப பாத்தாலும் சொல்றது அல்லது அவமானப்படுத்துவது below average விடலைகளின் நிறைவேறாக் கனவு. சிம்பு மூலம் அந்த வக்ரத்துக்கு வடிகால் கிடைத்ததில் தியேட்டரில் ஏகப்பட்ட விசில் சத்தம் கேட்டிருக்கும்.

* தேவை இல்லாத அஜித்குமார் ஜால்ரா. ஒருவேளை தன்னுடைய ஆக்ஷன் கனவுக்கு விஜய் எதிரி என்று அஜித்துக்கு ஜால்ரா அடிக்கிறாரோ..??

* தேவை இல்லாத பப்பி ஷேம் வசனங்கள் / காட்சிகள். படம் ஓடியதற்கு இவை கூட மிகப் பெரிய காரணங்களாக இருக்கலாம் ( நான் டிவிடி எடுத்ததற்கு கூட. ஆனால்..ம்ஹூம்...அதிலும் ஏமாற்றம்தான்)

* கவுண்டமணி குமுதம் பேட்டியில் . சிம்பு தன் காட்சிகள் பலதை வெட்டி விட்டதாக கூப்பாடு போட்டிருந்தார். இப்போதே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படி வளவளவென்று இருக்கின்றன. வெட்டாது விட்டிருந்தால் அய்யகோ...

* அதுல் குல்கர்னியை இப்படி அவமானப்படுத்தி இருக்க வேண்டாம். அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த போலீஸ் துறையையும்.

* சிம்புவின் நடிப்பு முன்னேறி இருக்கிறது- அவ்வப்போது ஓவர் ஆக்டிங் கூட. பேசாமல் இப்படி டைரக்ஷன் செய்யும் வேலையை விட்டுவிட்டு, விரல்வித்தையை மறந்து விட்டு நல்ல டைரக்டர் யாரிடமாவது தன்னை முழுதாக ஒப்படைத்தால் தேறலாம். இந்தப் படம் நன்றாக ஓடி விட்டதால், நான் மேலே சொன்னது நடக்கப்போவதில்லை. தமிழக ரசிகர்களுக்கு கேடுகாலம்.

* இந்தப் படத்துக்காக சிம்புவுக்கு மண்டைகனம் ஏறி இருந்தா, அவர் ரொம்ப பாவம். சீக்கிரமே செம அடி விழும்.

* இந்தப் படம் ப்ரிவியூ ஷோ பார்த்தபோது, டி.ராஜேந்தர் கண்ணில் கரகரவென்று கண்ணீர் வர அழுதாராம். " நான் நல்லபடியா படம் எடுத்தாலும், நடிச்சு, அச்சி-மச்சி வசனம் பேசி எல்லாரையும் கொன்னேன். நீ நல்லா நடிச்சாலும், இப்படி எல்லாத்திலயும் மூக்கை நுழைச்சிகிட்டு வேற விதமா கொல்றியேடா "ன்னு நினைச்சோ..??

இருக்கலாம்...

Friday, January 07, 2005

பொழைச்சிகிட்ட பாய்(ஸ்)...

பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல் நாயகன் பரத்-சுசீலா ( ஆம்..பனியன் சுசீலாதன்...) என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு பிரபலங்களில் பரத் என்கிற பெயர் எங்குமே வராத பழைய பெயராகி விட்டது. நேத்து பாத்த "செல்லமே" பரத் தான் இப்போ தமிழ்நாட்டுல "வெல்ல(லா)மே" பரத். இந்தப் படத்தை முன்னமே ஒரு முறை நண்பர் வீட்டில திரவத்தை ஊத்திகிட்டே பாத்தது. அதனால நேத்து பாத்த அளவுக்கு உன்னீப்பா பாக்கலை.



சும்மா சொல்லக்கூடாது. பயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஷங்கர் கண்டுபிடிப்பு, பாய்ஸிலேயே கதாநாயகனாயிருக்க வேண்டியது- ரங்கராஜன் ஸார் கைங்கர்யத்தில் ஸைட் ரோலுக்கு போனார். பின்ன, மல்லு மக்கள் தூக்கி விட, அண்ணன் காட்டில் இப்போ ஜோர் மழை. அரங்கேற்றம்/ அவள் ஒரு தொடர்கதை கமல் மூஞ்சி போல, பால் வடியும் முகம். நல்லா டான்ஸ் ஆடற பையன்னு நினைக்கிறேன் . முகத்துல சட் சட்டுன்னு மார்ற உணர்ச்சிகள், நயவஞ்சக சிரிப்பு, எகத்தாளப் பேச்சு என்று ஊடு கட்டி அடிச்சிருக்கார். ஓங்குதாங்கா இன்னோரு ஆள் படத்தில் ஹீரோவா நடிச்சிருந்தாலும், இவர்தான் ஸ்கோர் பண்றார். அதென்னங்க பக்கா தமிழ்முகம் உள்ள ஹீரோவுக்கு விஷால்ன்னு வடமொளியில பேரு..?? இப்போ அதுதான் விற்கும்னு தெரிஞ்சாலும், இப்படியா "கவர்" மாத்திக்கிறது..?? பொருந்தவே இல்லை. அருண்பாண்டியனின் தம்பி போல இருக்கும் விஷால், சரியா நடிக்கத் தெரியலைன்னா, அண்ணனையே ஃபாலோ பண்ணிடுவார். ஹீரோயினுக்கு ரொம்பத் திறந்த மனசு. அவ்வள்வுதான் சொல்ல முடியும்..ஹி..ஹி.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் தேவலை என்றாலும்
நிறைய பழைய சாயல் அடிக்குது. ஆரிய உதடுகள் என்னது பாட்டு கிட்டத்தட்ட கர்ணா படத்தில் வர்ற " ஏ ஷப்பா..ஏ ஷபபா..நெனச்ச கனவு பலிக்காதா " மாதிரியே இருக்கு. அதுவும் விஷாலுக்கு வெள்ளக்கார தொரை மாதிரி செம்பட்டை கலர் விக் வச்சி, விநோத காஸ்ட்யூம்லாம் போட்டு ஆட விடறாங்க. கோராமையா இருக்கு.

சின்னப் பையன் பரத் இதைவிட "காதல்" படத்தில் தூள் கெளப்பி இருக்கார்னு செய்திகள் வருது. அஜித், விஜய், தனுஷ்-சிம்புன்னு எல்லாரும் ஒரே இடத்தில் போய் ரேட்டை தூக்கி விடறதை விட்டுட்டு மக்கள் பரத், மணிகண்டன்னு ரசிச்சாங்கன்னா, அவங்களுக்கும் நல்லது. தயாரிப்பாளர் பாக்கெட்டுக்கும் நல்லது.

படம்: அஞ்சு பேர்ல வட்டமிடப்பட்ட மூணு பேர் தேறிட்டாங்க. பாக்கி இருக்கற தேவயானி தம்பியும், குண்டனும் என்ன ஆவப்போறாங்களோ..??

Thursday, January 06, 2005

இந்தியாவில் ஸ்பைடர்மேன்

"சிக்கல் நிறைந்த எழுத்தே படிக்கும்போது வாசகனை உள்ளிழுக்கிறது - அவனை மண்டை காய வைப்பதன் மூலம். மற்ற எழுத்தெல்லாம் தட்டையாக இருக்கின்றன" என்பது போன்ற வார்த்தைகளே கேட்காத வயதில் படித்ததெல்லாம் இன்றைக்கும் நினைவில் இருப்பவை. குட்டிக்குரங்கு கபிஷ், முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி ( அ.கொ.தீ கழகம்) , மந்திரவாதி மாண்ட்ரேக், சூப்பர்மேன்- வேதாளர், மேலும் குமுதத்தில் வந்த மியாவ் மீனா போன்ற கதைகள் காணாமற்போன குழந்தைப்பருவத்தினை நினைவுபடுத்தும் விஷயங்கள். ஜட்டி போட்டு பேண்ட் போட்டா நார்மல் மேன். பேண்ட் போட்டு ஜட்டி போட்டா சூப்பர்மேன் என்று சன் டீவி சேகர் கூட கமெண்ட் அடித்திருப்பது நியாபகம் வருகிறது.



என் பையன் ஸ்பைடர்மேனைத்தான் விழுந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட டிவிடி தேஞ்சே போச்சு. நடக்கும்போது, தாவும்போது, கைகளை பாபா முத்திரை காட்டிக்கொண்டு வலைநூலை வெளியிடுவது என்று ஒரே ஆட்டம்தான். ஸ்பைடர் மேன் தட்டு, ஸ்பைடர்மேன் காஸ்ட்யூம், ஸ்பைடர்மேன் கார், ஸ்பைடர் மேன் பஞ்சு பொம்மை என்று அவன் அறை முழுக்க இறைந்து கிடக்கிறது.

ஸ்பைடர்மேனின் இந்தியவடிவம் தயார் இப்போது. இங்கே பீட்டர் பார்க்கர். அங்கே பவித்ர பிரபாகர். இங்கே சிலந்தி கடித்து சக்தி கிடைக்கிறது. அங்கே ஏதோ சாமியார் ( போச்சுடா...) சக்தி கொடுக்கிறார். இங்கே வில்லன் க்ரீன் காப்ளின் தவறாக வேலை செய்யும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பின் விளைவு என்றால், அங்கே வில்லன் புராண கால ராட்சதனின் மறு அவதாரம். இங்கே அறிவியல். அங்கே புராணம். அதுதான் கொஞ்சம் உதைக்கிறது.

இங்கு கதாநாயகன் பீட்டர் பார்க்கர் நன்றாக படிக்கக்கூடிய, புத்தகப்புழு பையன் என்பதால் கூடப் படிக்கும் நண்பர்கள் ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் அமெரிக்காவில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் நிலை அப்படி. ஆனால் இந்தியாவில் - கஷ்டப்பட்டு படிப்பது தேசத்தின் கலாசாரம் என்பதால், நன்றாகப்படிப்பவர்களுக்கு மதிப்பு. எனவே, கதாநாயகன் கிராமப்புறத்திலிருந்து வருபவன் என்பதால் அவனை எல்லோரும் ஒதுக்குவதாக காட்டப்போகிறாராம். அப்படிப்பட்டவனுக்கு சாமியார் சக்தி கொடுத்ததும் ஸ்பைடர் மேன் ஆகிறாராம்.

காலையில் ஆபீசுக்கு வரும்போது இங்கே கேட்டுக் கொண்டிருந்தேன். பார்க்கிங் லாட்டில் வண்டியை நிறுத்திய பிறகும், பேட்டி முடியவில்லை. எனவே முழுதும் கேட்க முடியவில்லை. அதற்குள் "காரை நிறுத்திவிட்டு உள்ளே இவன் உட்கார்ந்து என்ன செய்கிறான்..? " என்று சக இந்தியர் ஒருவர் பார்த்துவிட்டுப் போனார்.

குலுங்கும் காரை அவர் எங்கேயாவது இதற்குமுன் பார்த்திருக்கக்கூடும். பகலிலா..?? காலை ஒன்பதரை மணிக்கா..??

நான் பாத்ததில்லைப்பா..!!!

Wednesday, January 05, 2005

ஆ(த்)தீ....

" நம்ம ப்ளஸ் மைனஸொடு, நாம யாருன்னு காட்டிகிறதுக்கு என்னைக்கும் வெக்கமே படக்கூடாதுடா" என்று கல்லூரி நாட்களில் என் நண்பன் "தடியன்" தியாகு சொல்லி இருக்கிறான். தமிழையே தடவித் தடவிப் பேசும், பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவுமே வாசித்தறியாத அவனிடம் இருந்து அந்த வாக்கியத்தைக் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வாக்கியம்தான் என் எண்ணங்கள் பலவற்றை மாற்றியது. அதுநாள் வரை என் நிறத்தைப் பார்த்தும், பாட்டு, படிப்பு, பேச்சு என்று சுற்றுவதைப் பார்த்தும் யாராவது என்னை பிராமணப்பையன் என்று நினைத்துக் கொண்டு பேசினால், அதை மறுக்க மனம் வராமல், சந்தோஷப்பட்டுக் கொண்டு, வாங்கோ, போங்கோ என்று பேசிக் கொண்டிருந்த நான், பின் திடமாக "இல்லை...நான் பிராமணன் இல்லை. இப்படி எல்லாம் இருந்தா பிராமணணாதான் இருக்கணுமா" என்று எதிர்க்கேள்வி கேட்க ஆரம்பித்தேன். இன்றுகூட இனையத்தில் தலித்துகளைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும், பிற்பட்டோர் நலன் பற்றியும் அந்த வகுப்பினரே பேசாக் காரணம் தன் அடையாளங்கள் தெரிந்துவிடுமோ என்று யோசிப்பதுதான். அவர்கள் மட்டும் இல்லை, பிராமணர்கள் கூட தான் இன்னார் என்று சொல்லிக் கொள்வதில் கூச்சப்படுகிறார்கள் . என் நண்பர் ஒருவர் கமலைப் பற்றி அடித்த ஜோக் ஒன்று - நீங்க கமல் கிட்ட உன் பேர் என்னன்னு கேட்டாக்கூட, என் தந்தை எனக்கு வைத்த பார்ப்பனப்பெயர் கமலஹாசன் என்று
தேவை இல்லாமல், ஸ்டண்ட் அடிப்பது மாதிரி தன்னை இழிவாகச் சொல்லிக் கொள்வார் என்றார். தான் இன்னார் என்று காட்டிக் கொள்வதில் மக்களுக்கு இருக்கும் தாழ்வுணர்ச்சியை இந்தக் கவிதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.

ஜாதிய அமைப்புகளில் உள்ள வெறுப்பின் பாற்பட்டு தன் ஜாதியைப் பற்றி பேசத் தவிர்ப்பவர்கள் வேறு விதம். அவர்களைப் பற்றி ஏதும் கேள்விகள் இல்லை.

ஆதவன் தீட்சண்யா கவிதைகளை பற்றி இங்கே ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்.

தமிழ்தாகத்தில் விக்கினால் விக்கி படிய்யா...

வெங்கட் நட்சத்திர வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிட்டதை ஏற்கனவே படித்திருப்பீர்கள். இதில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இதுவரை ஒரு தூசியைக் கூட இந்த விஷயத்தில் தூக்கவில்லை. காரணம் உங்களுக்குத் தெரியும்.

இந்த விஷயத்தில் நான் பங்கெடுக்க ஆர்வம் காட்டியதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. என் வலைப்பதிவின் மூலம் என்னைக் கண்டுகொண்ட பழைய ஸ்நேகிதி ஒருவர், தனக்கும் வலைப்பதிய ஆர்வம் இருப்பதாக சொல்ல, அவருக்கு உதவ வேண்டி, ப்ளாக்கர் மூலமாக ஒரு பதிவைத் துவக்கினேன். ஏற்கனவே நான் இதையெல்லாம் என் மூக்குக்காக செய்திருந்தாலும், நிறைய விஷயங்களை மறுபடியும் யோசித்து யோசித்து செய்ய வேண்டி இருந்தது. (உதா: இயங்கு எழுத்துரு, டெம்ப்ளேட் மாற்றம், தமிழ் பின்னூட்டம் மற்றும் அவருக்கான அடிப்படை விளக்கங்கள்) . ஏற்கனவே நண்பர்கள் பலருக்கு இதை செய்திருந்தாலும், இந்த முறை செய்யும்போதுதான், இதற்கான எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் இல்லை என்கிற உண்மை உறைத்தது. ஒரு இடத்தில் இருந்தால், புதிதாக வலைப்பதிய விரும்பும் மக்களுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை என்பது விளங்க, காசியை தொடர்பு கொண்டேன்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், விரும்பினால் நான் ஏதாவது ஒன்றில் இணையலாம் என்றும் கூறினார். HTML, PHP, MYSQL அறிவு நான் செய்யப்போகும் வேலைக்கு தேவைப்படாது என்ற உபரித் தகவலையும் அளித்தார். இதுதான் பூர்வ கதை.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த விநாடி தமிழ்மணத்தில் முன்னூற்றிபதிநாலு வலைப்பதிவுகள் பதிவாகியுள்ளன. இதே வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால் இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பதிவுகளாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருபவர்களின் வேலையை சுலபமாக்க வேண்டாமா..?? இன்னும் ஏகப்பட்ட அக்கினிக்குஞ்சுகள், சனியன்கள், தூறல்கள், வீச்சறுவாள்கள் வரவேண்டாமா..??

வாருங்கள் வலைப்பதிவு விக்கிக்கு. இது ஒரு ஆன்லன் மேன்யுவல். ஊர்கூடி இழுக்கும் தேர். எல்லா ஆறுகளும் தேடிவந்து கலக்கும் கடல். சுவைக்குமுன்னமே வாயில் நீரூறச்செய்யும் அவியல். உங்களுக்கு வலைப்பதிவு ஆரம்பித்து, அதை நடத்துவதற்கு தேவைப்பட்ட, தேவைப்படும் நுட்பங்கள், டிப்புகள், ட்ரிக்குகள் அத்தனையையும் இங்கேவந்து எழுதுங்கள். ஏற்கனவே எழுதி இருந்தால் உங்கள் இடத்திலிருந்து இங்கே வெட்டி ஒட்டுங்கள்.

அடுத்தமுறை யாராவது வலைப்பதிவு ஆரம்பித்தால், "விக்கிக்கு ஜே" என்று சொல்லி அவர் தன் முதல் பதிவை போடுவதில், அதில் கிடைக்கும் திருப்தியில் இருக்கிறது இதற்காக நாம் செலவிடும் நேரமும், உழைப்பும்.

வாருங்கள் வலையர்களே...!!

Monday, January 03, 2005

மெளனம் பேசியதே....

என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவீங்கன்னு பார்க்கிறேன். ஒண்ணுத்தியும் காணும்.

அடப் போங்க ஸார்..என்னத்தை எழுதறது. வர்ற நியூஸ்லாம் படிச்சிகிட்டுத்தான் இருக்கேன். ஒரே கில்ட்டியா இருக்குது.

அட என்னய்யா..நீர்..!! சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்கீர்..அவனவன் பண்ண வேண்டியதை பண்ணிபுட்டு, ஜே..ஜே ன்னு பொது வாழ்க்கைக்கு திரும்பிட்டான்.
நீர் என்னடான்னா...??

ஆமாய்யா..ஆமாம். அது அதிர்ச்சியிலிருந்து மீளுவது அவங்க அவங்க மனசு மெச்சூரிட்டியை பொறுத்ததுன்னு ஒருத்தர் சொல்லிட்டார். எனக்கு மெச்சூரிட்டி இல்லையின்னு வெச்சுக்கோயேன்.

மெச்சூரிட்டி குறைச்சல்னாலும், உமக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்றாங்கய்யா..?? இன்னம் சொல்லப்போனா, இந்திரா காந்தி செத்துப்போன சமயத்தில் ரகளை பண்ணி அராஜகம் பண்ண அட்டுழீயக் கூட்டத்தில் ஒரு ஆளா ஆக்கிட்டாய்ங்க..

சொன்னா சொல்லிட்டுப் போறாங்க. இதுக்காக, சுனாமிய சாக்கா வச்சி, எந்த விதமான அடிப்படை நாகரீகம் கூட இல்லாம, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மாதிரி சுனாமி மொழிகள்னு ஒரு தனி கேட்டகிரியில் கவிதை எழுதறதை எப்படி தாங்கறதாம்..??

உனக்கென்னய்யா போச்சு...நீர் என்ன கவிதை எழுதலையா..நீர் எழுதினதெல்லாம் பெரிய சங்கக்கவிதை வகையறாவா....நீரும் ஒரு புதுக்கவிதை புழுதான் அப்பு...

அது சரி..ஆனா, எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கில்லே. ஏதோ எகலப்பை கிடைச்சதுங்கிறதுக்காக, சுனாமியை வச்சி எழுதணும்கிறதுங்காக, டெய்லி ஏதாவது எழுதியே ஆகணுமா..??

அப்ப என்ன பண்ண சொல்ற...!! பண உதவி பண்ணியாச்சு. நேர்ல களத்தில் இறங்கி வேலை செஞ்சாச்சு. இன்னுமும் அயுதுகிட்டெ இருக்கணுமா..ஏனெய்யா இப்படி நடிக்கணும்னு எதிர்பாக்கறீங்க.

அடப் பாவி..இதை இப்படி வேற சொல்லலாமா..?? நீங்க ஒண்ணும் பண்ண வேணாய்யா...கொஞ்சம் பேசாம இருங்க. ஒரு வாரத்துக்கு எல்க்கியம் வளக்காட்டி குடி முழுகிப் போயிடாது. எல்லாத்தையும் பண்ணியாச்சு ..பண்ணியாச்சுங்கிறீங்களே. ஒரு நார்மல், சிம்பதட்டிக் ஹ்யூமன் பீயிங், மைனாக்களை கவர் பண்றது எப்படி..?? காதல்..காதல், காதல், வசந்துக்கு கல்யாணம் போன்ற விஷயங்களை அலையின் ஈரம் கூட காயாத, இன்னமும் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எழுதினா, பண்ண உதவி எல்லாம் வெறும் தெவச மந்திரம் மாதிரி ஆயித் தொலையாதா..?? ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி செத்துப்போனாலே, கட்சி விழாக்களை ஒரு வாரத்துக்கு கேன்சல் பண்றாங்களே....தமிழ்நாட்டுல மட்டும் 2000 குழந்தைகள் செத்துப் போயிருக்குதே...எழுத உக்காரும்போது மனசு கொஞ்சம் வலிக்காது..??

அதான் சொல்ட்டாரே..துயரத்திலிருந்து மீள்றது தனிப்பட்ட மனுசாளைப் பொறுத்ததுன்னு...!! பொழப்பப் பாருய்யா..

அது சரிதான்...எனக்கும் அந்த மெச்சூரிட்டி கெடைச்சா நல்லாத்தான் இருக்கும்.

அது மட்டுமில்ல, நல்ல டாக்டரைப் போய்ப் பாரு. இல்லாட்டா காட்டமா ரெண்டு பெக் சரக்கு உட்டுகினு ஏதாவது ஜோதிகா படம் பார்...அப்புறம் சொல்லு..கவிதை எப்படி வருதுண்ணு....வர்ட்டா...

Saturday, January 01, 2005

வாழ்த்தவோ..???

புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல என்று ஸ்பெஷலாக ஒன்றும் தோன்றாவிடினும், இந்த செய்தி கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இயற்கையின் சீற்றத்துக்கு எல்லை வகுக்க முடியாவிட்டாலும், மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிவாரணப்பணிகள் ஆறுதல் அளிக்கின்றன. ராம்கியின் மடல்கள் உற்சாகமூட்டுகின்றன. குப்பைகளுக்கு போகும் உணவுப்பொட்டலங்களையும், பழைய துணிமணிகளையும் படங்களில் பார்த்தால், ஒரு பக்கம் வருத்தம் வந்தாலும், இன்னொரு பக்கம் மக்களுக்கு இவை எல்லாம் ஏற்கனவே இவை கிடைத்து இருக்கின்றன என்பதை நினைத்து கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

"கடலோரத்தில் இருந்தால்தான் அவன் மீனவனா" என்ற தலைப்பில் ஜூவியில் வந்த கட்டுரை எதிர்காலத்தில் தமிழகத்தில், மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பிலாமல் மீன்பிடி தொழிலை எப்படி நடத்தலாம் என்று பேசுகிறது. அவர்கள் உயிருக்கும், படகுக்கும் இன்ஷ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் உருவாகின்றன.



சுனாமியின் வெறியாட்டத்தில், ஏகப்பட்ட குடும்பங்கள் பிய்த்தெறியப்பட்டிருக்கின்றன. மேலே காணும் ஃபோட்டொ, எதோ ஒரு முகாமில் எடுக்கப்பட்டது என நம்புகிறேன். வீட்டில் ஏகப்பட்ட வெஞ்சனங்களோடு ஒரு கையில் தண்ணிரும், இன்னொரு கையில் தட்டுமாக சோறுட்டப்படும் குழந்தைகள் எல்லாம், முகாமில் இப்படி தன்னந்தனியே உட்கார்ந்து சாப்பிடுக் கொண்டிருக்கிறார்கள். வலது பக்கத்தில் உள்ள சிறிசுக்கு ஃபோட்டொ எடுக்கப்படுவது கூட தெரியவில்லை. அதுபாட்டுக்கு குழந்தையின் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. நடுவில் உள்ள குழந்தைக்கு தன்னைச் சுற்றிலும் ஏதோ நடப்பது புரிகிறது. நிமிர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.ஆனால் விளங்கவில்லை. மூன்றாமவளுக்கு எல்லாம் புரிந்து விட்டது. தலை குனிந்து அமைதியாக தன் சாப்பாட்டை சாப்பிடுகிறாள் - இன்னமும் எத்த்னை நாளைக்கு இப்படி சாப்பாடு கிடைக்குமென்று.

சாதாரண மனநிலையென்றால் இந்த புகைப்படம் என்னை கவிதை எழுத் தூண்டி இருக்கும். நேற்றிலிருந்து படித்த சில சீஸன் கவிதைகளும், அது தொடர்பான விவாதங்களும் என்னை யோசிக்க வைக்கின்றது..

பிறிதொரு நாளில் உங்களுக்கு கவிஞர் "வேலு கஃபே" வை அறிமுகம் செய்து வைக்கிறேன். தேவைப்படும்போது அவர் கவிதைகள் இங்கே அரங்கேறும்.

புத்தாண்டாவது நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல.

பிரார்த்தனையும் கூட ...

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...