Monday, January 10, 2005

நரி புலி ஆட்டம்

உடனடியாக சங்கரமடம் சம்பந்தப்பட்ட வழக்குகளை தமிழக அரசு சாராத அமைப்பு, அது சி.பி.ஐ ஆகக்கூட இருக்கலாம் - விசாரிக்க வேண்டும்.

இப்படி சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஜெயேந்திரர் கைது நடவடிக்கை ஆரம்பித்தபோது எனக்கு தமிழக அரசு மீது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. ஏனெனில், சங்கரமடத்தின்பால் பாசமும், நேசமும் வைத்திருந்த ஜெ இம்மாதிரி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இல்லாமற் போகாது என்கிற எளிய நம்பிக்கை அது. அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் போலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையும், வெளி வந்த தகவல்களும் நம்பிக்கை கொடுத்தன.

அப்புவின் கைது நடவடிக்கையை தொடர்ந்து வெளிவந்த, செய்திகள் அவரை அண்ணாநகர் ரமேஷ் கொலைக்கும் சாட்சியாக சேர்த்து ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள் என்ற ரீதியில் அமைந்தன. அது மட்டுமல்லாமல், அந்த கொலையில் சாட்சியம் தந்தால், சங்கர்ராமன் கொலைப்பழி அவர் மீது ஏறாது என்றும் உறுதி தரப்பட்டதாகவும் வதந்திகள். அதைத் தொடர்ந்து அவர் மீது அரசு காட்டிய பரிவு, அவருக்கு ஏஸி ரூமில் அளிக்கப்பட்ட அவசர மற்றும் விசேஷ சிகிச்சை ( ஜெயேந்திரருக்கு கூட மறுக்கப்பட்ட கவனிப்பு இது..) என் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது.

ஆரம்பத்தில் நீதியின் காவலன் போல ரீடிஃப்புக்கு பேட்டி கொடுத்த அரசுதரப்பு வழக்குரைஞர் துல்சி, ஜாமீன் மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் போன வாரம் வழி வழியென்று வழிந்தார். அவர் கொடுத்த ஆதாரங்களில் சாரமில்லை என்று போன வாரம் வெள்ளியன்று நீதிபதிகள் சொன்னபோதே, ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதுவே இன்று நடந்திருக்கிறது. அது ஒரு வகையில் அரசுக்கு மிகப்பெரிய அடி. குற்றவாளி என்று கருதப்படுபவரை ஜாமீனில் வைத்திருக்கவே முகாந்திரம் இல்லை என்று கோர்ட் கருதினால், இவர் மீது எந்த லட்சணத்தில் இவர்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள் என்பது கேள்விக்குறி.

இதையெல்லாம் விட ஆச்சரியம், சின்ன சுவாமிஜியின் கைது. பத்திரிக்கைகளில் அவர் மேற்கொண்ட வெள்ளைக் கொடி முயற்சிகளை எல்லாம் படித்தும், இவர் மறுபடியும், பெரிய சுவாமிஜி ஜாமின் தீர்ப்பு வந்த நாளில் கைது செய்யப்பட்டிருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் ட்ரேட்மார்க் பிடிவாதத்தையும், அவர்களது ஈகோ உரசப்பட்டதன் எதிர்விளைவாய் பார்க்க நேரிடுகிறது. சிலர், இந்த கைது நடவடிக்கை அரசுடன் மடத்துக்கு ஏற்பட்ட டீல் என்கிறார்கள். இரண்டு சாமியாரையும் ஒரே சமயத்தில் உள்ளே போட்டால், மடம் ஸ்தம்பிக்கும் என்பதற்காக பெரிய மீனைப் போட்டு, சின்ன மீனை பிடிக்கும் முறையாக , ஜாமீன் கிடைக்கும் விதமாக விட்டுக் கொடுக்கப்பட்டது என்கிறார்கள். இன்னமும் சிலர் பேரம் படிந்து விட்டது. கிளி பறந்து விட்டது என்கிறார்கள்.

இத்தனை ஹேஷ்யங்களுக்கும் , அவநம்பிக்கைகளுக்கும், சொக்கட்டான் ஆட்டங்களுக்கும் இடையில் இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்து நடத்துவதென்பது, சரியான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாது. அப்படி தானே நடத்த விருப்பமும், வெறியும் இருந்தால், விசாரணையை துரிதப்படுத்தி, முடிப்பது நலம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...