Tuesday, May 09, 2006

ஹை...யா..இந்தியப் பயணம்

கடந்த ஒரு மாதமாக சரியான வேலை. மே மாதம் ஆறாம் தேதி சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை ஒட்டிய கொண்டாட்டம். தொண்டரடிப்பொடிகளில் ஒருவனாக இருப்பதால், நிகழ்ச்சியை நடத்துவதில், ஒருங்கிணைப்பதில் மெனக்கெட வேண்டி இருந்தது. தவிர சூர்யா இரு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றான். மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்ட நடன/நாடகமாக இருந்ததால் அவனுக்கு பயிற்சிக்காகவும் ஏகப்பட்ட முறை போக வேண்டி வந்தது.

வார இறுதிகள் எல்லாம் இதிலேயே கழிய, ஏகப்பட்ட வேலை சுணங்கிப் போனது. இறையருளால் விழா இனிது நடந்து முடிந்தது. அடுத்தடுத்து வரக்கூடிய பங்கேற்பாளர்களுடன் ஓடி, அவர்களை தயார் செய்து கொண்டிருந்ததில் பாதி நிகழ்ச்சிகள் சரிவர பார்க்கவே முடியவில்லை. இரு மகளிர் நடனங்களை மட்டும் எனக்குரிய "கலை" ஆர்வத்தால் ஓடி வந்து மேடைக்கு முன்புறம் நின்று பார்த்தேன்.

இது முடிய அடுத்து, இந்தியப் பயணத்துக்கான முஸ்தீபுகள். என் தமக்கையின் மகள் திருமணத்திற்காக மே 21 முதல் ஜூன் 18 வரை இந்தியாவில் இருப்பேன்.
இதை தவிர அதே விடுமுறையில் மீனாக்ஷி சங்கர் திருமணத்தையும் கண்டு களிக்கலாம் என்றொரு திட்டம் உண்டு. அதைத் தவிர பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. ஐகாரஸ் பிரகாஷ்/நண்பர்கள் ஃப்ரியாக இருந்தால், ஒரு தாகசாந்திக்குப் போய் கலாய்க்கலாம் என்ற எண்ணம் உண்டு.

ஸார் ஃப்ரீயா என்று தெரியவில்லை

மற்றபடி வேறென்ன....உங்கள் எல்லோரையும் போலவே நானும் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் எண்ணத்திற்கு மாறாக கலைஞர் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்று ஆருடங்கள் கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அம்மா நடத்திய அரசியல் ஆள்பிடி வம்புகளும், வைகோவின் அசிங்க அரசியலும் கலைஞர் மீது பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. கிட்டத்தட்ட ஏகப்பட்ட பேருக்கு இத்தகைய மனமாற்றம் நிகழ்ந்து இதனால் திமுகவின் பக்கம் வெற்றி வந்திருக்கிறது. கலைஞர் மீது, அவருடைய குடும்ப ஆட்சி மீது, பேரனுக்கு அவர் தந்திருக்கும் முக்கியத்துவம் மீது எனக்கு ஏகப்பட்ட விமரிசனங்கள் இருந்தாலும், தேர்தல் களத்தில் அந்தக் கிழவர் சுழன்றாடிய வேகத்தைக் கண்டு நிஜமாகவே பிரமித்துப் போனேன். இந்த வயசுக் கிழவர்கள் எல்லாம் மாயவரத்தில் கோவணம் அவிழ்வது கூடத் தெரியாமல் நடந்து கொண்டிருக்க, மைக்கைப் பிடித்துக் கொண்டு ஏரியாவுக்கு ஏற்றபடி, கூட்டத்துக்கு தக்கபடி, ஒரு பக்கா தேர்தல் அறிக்கையைப் போட்டு, அதை எதிர்க்கட்சியையும் ஒத்துக் கொள்ள வைத்து , எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இந்தத் தேர்தலின் நாயகராகிப் போனார். து அவரை இயக்குகிறது???. எது அவரை இந்த அளவுக்கு உசுப்புகிறது என்று தெரிந்து கொள்வது நமது அரசியல் கட்சிகளின் இளந்தலைமைகளுக்கு முக்கியம்.



அவருடைய உழைப்புக்கும், வைகோ என்கிற கேவலன் செய்த துரோகத்துக்கும் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பது என் அவா. அந்த வெற்றி பாமக போன்ற கட்சிகள் பங்கு கொள்கிற கூட்டணி ஆட்சிக்கு வித்திடும் வேளையில்தான் எனக்கு கலக்கம் வரும். அந்தக் காரணத்துக்காகவே ஆரம்பத்தில் திமுக கூட்டணி ஆட்சி வரக்கூடாது என்று வேண்டி வந்தேன்.
ஏனெனில் ஜெயின் கூட்டனி ஆட்சி என்றால் கை கட்டி வாய் புதைதத்து நிற்கும் அரசியல் கட்சிகள், கலைஞ்ர் ஆட்சி என்றால் மல்லுக்கு நிற்கும் என்ற காரணமே.

வெகு மக்கள் விரோத அரசியல் செய்யாத ஜெயலலிதாவும், குடும்ப அரசியலுக்கு தலையாய முக்கியத்தும் தராத கருணாநிதியும், சாதி தாண்டி எல்லா மக்களுக்காகவும் சிந்திக்கும் ராமதாஸும், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற ஒரு பேச்சாற்றல் மிக்க வலுவான காங்கிரஸ்
தலைமையும், தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தலையாய பிரச்சினை என்ன என்கிற தெளிவு கொண்ட திருமாவளவனும் என் கனவு.

துரதிர்ஷ்டவசமாக அது வெறும் கனவாக போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

Friday, May 05, 2006

இளஞ்சேரன் பாண்டியன்

சேரன் மீது எனக்கு டைரக்டர் என்ற முறையில் பெரிய அபிப்ராயமெல்லாம் கிடையாது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, மனிதனின் மிக மென்மையான பகுதியை வருடிவிட்டு, சோக உணர்ச்சியை தூண்டிவிட்டு படம் எடுக்கிற ஆசாமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும், எதற்கெடுத்தாலும் குய்யோ முறையோ என்று அவர் படங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு அழும்போது, எரிச்சலாக இருக்கும். அழுகிற ஆண்களின் மீது எனக்கு நம்பிக்கை வருவதில்லை.

விகடனில் இந்த வாரம் முடிந்து இருக்கும் டூரிங் டாக்கீஸ் அந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. அதிலும் நிறைவுப் பகுதி பலே ஜோர். டைரக்டரின் அப்பாவாயிட்டோமே என்ற கெத்தெல்லாம் பார்க்காமல் பழையூர்ப்பட்டி ஆபரேட்டர் பாண்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அபிராமி ராமநாதனிடம் "மொதலாளி" என்றழைத்துப் பேசிய சேரனின் அப்பாதான் சேரனின் இன்றைய வெற்றிக்கும் ஆபரேட்டர்



சேரனின் வாழ்க்கையின் எளிமைதான் அவரது படங்களில் பெருமளவு எதிரொலிக்கிறது என்றாலும் அந்த ரேஞ்சுக்கு கிராமத்து எளிமை எனக்குப் பரிச்சயம் இல்லை. ஆனால் சீக்கிரமே சேரன் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து வேறு திசைகளில் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது அலுத்துப் போய் விடும். எல்லாக் கதைகளையும் சொந்த அனுபவத்தின் பேரிலேயே எழுதிக் கொண்டிருப்பவன் மட்டும் நல்ல படைப்பாளியாகி விட மிடியாது. அவன் வீச்சு அதிகரித்தால்தான் ரீச்சும்( reach) அதிகமாகும்.

டூரிங் டாக்கிஸ் , பாலகுமாரனின் முன் கதைச் சுருக்கத்திற்கு பிறகு நான் படித்த நல்ல தன்வரலாற்று தொடர். விகடன் பிரசுரமாக அது வெளிவரும்போது அது ஆடும் கூத்து, காலம் என்கிற மாயக்கண்ணாடியில் பலவண்ணங்களில் தெரியும்.

டூரிங் டாக்கீஸ் ஆபரேட்டரின் மகன் சினிமாவில் அரசன் ஆன கதை- இறுதிப்பகுதி

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...