Monday, July 17, 2006

ப்ரைவேட் ப்ராப்பர்டி

சிதம்பரம் அக் 25, 20xx -

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற ஏழுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் கைதி செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கொவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் - கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்த்னைகளை
முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற
விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும்.

சின்னப் புள்ளத்தனமாக எங்களிடம் வந்து கேட்ட மாதிரி மசூதியிலோ, சர்ச்சிலோ, சரவணா ஸ்டோர்ஸிலோ, குமரன் சில்க்ஸிலோ போய் கேட்க வேண்டியதுதானே?? பெரிய இது மாதிரி எங்களிடம் கேட்க வருகிறீர்கள். இது பக்தி இல்லை. வெறும் வீம்பு. உண்மையான பக்தி இருந்தால் இதெல்லாம் செய்யச் சொல்லாது. வேஷ்டியை துடைக்கு மேல் ஏத்திக் கொண்டு, வருகிற சுற்றுலா பயணிகளிடம் டாலர் கணக்கில் வசூலிக்கச் சொல்லும். பராந்தக சோழன் பொன்னம்பலம் வேய்ந்த கோவிலை வைத்து தலைமுறை தலைமுறையாக பிழைக்கச் சொல்லும். ஏன்னா நாங்க சொன்னதுதான் சாமி. நாங்க பண்ற இத்தனை வேலைகளுக்கும் இவ்ளோ நாள் சாமி எங்களை ஏதும் செய்யாததைப் பாத்தா, எனக்கே பெரியாரை நம்பணும் போல இருக்குது.
என்றார் அசினாச்சு.

Thursday, July 06, 2006

பருப்புப் பஞ்சம்



இரண்டு நாட்களாக நெருப்பு மாதிரி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது - பருப்புகளைப் பற்றி.

இந்தியாவில் பருப்பு விளைச்சல் குறைந்ததால், பருப்பு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் இன்னமும் ஆறு மாதங்களுக்கு இத்தடை அமலில் இருக்கும் என்றும் பரவிய செய்தியால், மளிகைக் கடைகளில் அமோக கூட்டம். சந்தடி சாக்கில் சரக்குகள் பதுக்கப்பட்டன. விற்கின்ற பருப்புகள் இரண்டு மடங்கு விலையில் விற்கப்பட்டன. என்னைப் போல மாமிச பட்சணிகளே ஐந்து கிலோ துவரம் பருப்பு வாங்கி வைத்தேன் எனில், மாமிசம் சாப்பிடாதவர்களின் கதி..??

இனிமேல் " நீ என்ன பெரிய பருப்பா" என்று கேட்பதற்கு சமகால காரணம் யாரும் தேடவேண்டியதில்லை...:-)

இந்திய ஞாபக மிச்சங்கள்

இந்தியப் பயணம் முடிந்த வந்து இப்போதுதான் சற்று ஓய்வாக உட்கார்ந்து யோசிக்கத் தோன்றுகிறது. ஏற்கனவே செய்ய உத்தேசித்து இருந்தபடி பல வேலைகள் செய்ய முடியாமற் போனாலும், உபயோகமாக சில விஷயங்கள் செய்ய முடிந்ததில் திருப்தி. அதில் ஒன்று லேசிக் சர்ஜரி. கடந்த ஐந்து வருடங்களாக என் அத்தான் இதனை செய்துகொள்ளுமாறு என்னை கேட்டுக் கொண்டே இருந்தாலும், பயந்து கொண்டே இருந்தேன். இருக்கிற கண்ணும் போய் விட்டால் என்ன செய்வது என்ற முக்கியமான பயமே இதற்குக் காரணம்.

அந்த பயம் போவதற்கு முக்கியமான காரணம் செல்வாவும், இங்கே சாக்ரமண்டோவில் இருக்கும் இன்னொரு நண்பர் ரவியும். இருவருமே இந்த சிகிச்சையை மேற்கொண்டு பரிபூரண குணம் கண்டவர்கள். இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்த சில நண்பர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த நண்பர்களைப் பற்றி நான் நினைக்க விரும்பவில்லை. மேலும் நான் போட்டிருந்த கண்ணாடியின் தடிமனைப் பற்றி நினைக்கும்போது, உட்படப்போகும் சிகிச்சை அதற்கு மேலும் என் கண்ணை கெடுத்து விட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு. இணையத்திலே காணக்கிடைக்கும் என் புகைப்படங்களிலே
அந்த சோடாபுட்டியின் தீவிரம் தெரியாது. குளிர்க்கண்ணாடியோ, அல்லது கண்ணாடி இல்லாமலோ நான் இருந்த புகைப்படங்களை இணையத்தில் காணும் என்னை முன்னமே அறிந்த சிலர், " எங்கேடா உன் சோடாபுட்டி ?? " எனக் கேட்பர். :-)

இந்திய விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய பின்னர், என் அலுவலக நண்பர்கள் பலர் என்னை அடையாளம் தெரியவில்லை என்று சொல்கிறார்கள். மெல்லப் பழகும் என்று சொல்லிவிட்டு, அவர்களை எனக்கு அடையாளம் தெரியவைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு மெல்ல நகர்ந்து விடுகிறேன். இரவுகளில் மட்டும் Glare கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை. வீட்டம்மா வாங்கிக் கொடுத்த RayBan குளிர்க்கண்ணாடியை போட்டுக் கொண்டு ரவுசு பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச காலத்துக்கு gym போகக் கூடாது என்று சொல்லி விட்டதால் மாலையில் மிஞ்சும் அந்த நேரங்களை சென்னையிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆனந்தமாக இருக்கிறது :-)

விடுமுறையைப் பொறுத்தவரை முதல் பதினைந்து நாட்கள் சகோதரி மகள் கல்யாணத்திலும், அடுத்த பதினைந்து நாட்கள் லேசிக் சிகைச்சைக்காகவும் கழிந்தது. அதற்கு நடுவே மிகச் சில நண்பர்களுடனான சந்திப்பு/ தீர்த்தவாரி மற்றும் ஷாப்பிங் ஆகியவையும் நடந்தது. பிரசன்னாவை சந்திக்கலாம் என நினைத்தேன். இயலவில்லை. சந்தித்தது பிரகாஷை மட்டுமே. வருகிறேன் என்று சொன்ன என் கல்லூரி நண்பர் ராஜ்குமாரும் சொந்த வேலை என்று சொல்லிவிட்டு வரமுடியவில்லை என்றார் ரஜினி ராம்கி நடுவே சற்று நேரம் வந்து போனார்.அவர்கள் இருவரும் மசமசப்பாய் தெரிந்தது என் ஆபரேஷன் கண்களாலா, திரவ மகிமையா அல்லது Bar ல் இருந்த குறைந்த பட்ச வெளிச்சத்தாலா என்பது பட்டிமன்ற டாபிக். ஆனால் நல்லதொரு மாலை நேரம். பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை. ரஜினி ராம்கி வால் பையன். :-). பிரகாஷ் கில்லி அனுபவங்களை கொஞ்சம் விவரித்தார். விளையாட்டாய் செய்யும் எழுத்தை எத்தனை பேர் எத்த்னை தீவிரமாக நினைக்கிறார்கள் என்ரு கொஞ்சம் புரிந்தது. ஒருநாள் விகடன் நண்பருடன் செலவிட்டேன். அங்கும் கோப்பைகளின் சத்தத்தில் கனவுகள் விரிந்தன. எல்லோருடைய கனவுகளும் நிறைவேற இறைவன் அருளட்டும்.

மீனாக்ஸ் கல்யாணம் போக முடியாமல் போனது. ஜூன் ஏழாம் தேதி சிகிச்சை மற்றும் அதன் பின்னான ஓய்வு என்று சுணங்கிப் போனது. டோண்டு மற்றும் முன்னாள் திராவிட ராஸ்கோலை சந்திக்க முடியவில்லை. காசியுடனும், ஜெயஸ்ரீயுடனும் தொ(ல்)லை பேசினேன். ஜெயஸ்ரீ லேசிக் சிகிச்சைக்கு தைரியம் கொடுத்தார்.

வீட்டம்மாவை ஊருக்கு அழைத்துப் போகாததால் கொஞ்சம் போர் அடித்தது. சூர்யா அம்மா ஞாபகமே இல்லாமல், என்னை சோதனை செய்யாமல்
நல்ல பையனாக இருந்தான். புதுப்பேட்டை என்ற காவியத்தை மட்டும் எங்கள் ஊர் விஜயா தியேட்டரில் செல்வராகவனையும், தியேட்டர் ஓனரையும் கொஞ்சம் சபித்துக் கொண்டே பார்த்தேன். ஊருக்கு திரும்பி வருகையில், கிண்டி லீ மெரிடியனில் குடும்பத்தினருடன் ஒரு சின்னக் கூட்டம்

மற்றபடிக்கு வேறு ஏதும் சுவாரசியமான சம்பவங்கள் அற்ற, குழப்பங்கள் இல்லாத இனிய பயணம். அடுதத முறை போவதற்குள் பயணநேரம் பாதியாகக் குறையும்படி எந்த விஞ்ஞானியாவது எதையாவது கண்டுபிடித்தால் மிக்க சந்தோஷம்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...