Wednesday, December 28, 2005

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்



சீனர்களின் சமூக, கலாச்சார கூறுகளும் சம்பிரதாயங்களும்

நான் இதற்கு முன் எழுதிய ' கிழட்டு அநுபவங்கள்' தொடரில் சீனர்களைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதியிருந்நேன். அதை படித்த சில வாசகர்கள் சீனர்களை பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக பின்னூட்டம் விட்டிருந்தனர். அதன்படி நானும் டிசம்பர் மாதம் ஒரு பதிவை எழுதுகிறேன் என்று கூறி சென்றிருந்தேன். அதை இப்போது நிறைவு செய்ய வந்துள்ளேன். துளசி கோபால, பெத்த ராயுடு, சிகிரி நீங்கள் கேட்டு கொண்டதற்காக இதோ சீனர்களின் இயல்பை குறிக்கும் மற்றோரு பதிவின் இரண்டு பகுதிகளில் முதற் பகுதி .....

1. இனம், மொழி , மதம் ஆகியவற்றின் தாக்கம்

சீனர்களிடம் ஒருமைபாட்டு தன்மை மிகவும் அதிகம். எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தர்ம காரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணங்களானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுவர். மற்ற நாடுகளுக்கும் இனங்களுக்கும் கூட இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும், சீனர்களிடம் இந்த இயல்பின் தாக்கம் சற்று அதிகம் என்றே நான் நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான். இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் /'ஹான்'/ என்று அழைக்க படும் ஒர இன வம்சாளியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். சீன மக்கள் அனைவரும் பேசுவது , எழுதுவது, படிப்பது எல்லாம் /'மாண்டரின்'/ என்கிற ஒரே மொழியில்தான். மதம் என்பதின் தாக்கமும் சீனாவில் அதிகம் கிடையாது. ஜனத்தொகையில் 7 விழுக்காட்டினர் புத்த மதத்தை சார்ந்தவர்களாகவும், 4 விழுக்காட்டினர் கிருஸ்த்துவர்களாகவும், 4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகவும் இருப்பர். மீதி 85 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் தழுவாதவர்கள். அதனால் வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீன மக்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் நடைமுறையில் நீங்கள் பார்க்க முடியாது.

சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்தில உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் மொழிப் பிரச்சன, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் பொதுவாக வராது இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே இருக்கும். சீனப் பிள்ளைகள் 16, 17 வயது முதலே ஊரே அறிய காதல் வயபட்டு விடுவர். காதல் என்பது சீன கலாச்சாரத்தில இயல்பான, இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கைப் பரினாமங்களில் ஒன்று.

மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜையில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக பார்க்கலாம். மலேசியாவில் சில சமயங்களில் சீன வியாபார ஸ்தலங்களில் சீனர் அல்லாத பிற இனத்தவர்கள், பெரும்பாலும் இந்தியர்கள், வேலை ஆட்களாக இருப்பார்கள். சாப்பாட்டு நேரத்தில் பார்த்தால் அந்த இந்திய தொழிலாளிகளும் முதலாளியோடு சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து, சீனர்களை போல மூங்கில் குச்சிகளைக் கொண்டு சாதம் பரிமாறப் படும் வட்ட கிண்ணத்தை வாயருகில் வைத்து குச்சியை கொண்டு சாதத்தை வாயினுல் தள்ளி, பாரம்பரிய சீனர் பாணியில், முதலாளியும் தொழிலாளியும் ஒரே பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து உண்பதை மலேசியாவின் அத்தனை சிற்றூர்களிலும் அவ்வப்போது பார்க்கலாம்.

2. தன்மான உணர்வு

அண்டை வீட்டானாகவும், நண்பனாகவும் , சக ஊழியனாகவும, சமீபமாக உறவினனாகவும் சீனர்களோடு ஐம்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தவன் என்கிற வகையில் ( நான்கு வருடங்களுக்கு முன்பு என் பெரிய தகப்பனார் ஒருவரின் பேரன் தன்னோடு வேலை செய்த ஒரு சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சுவாரஸ்யமான அநுபவம். ஆரம்பத்தில் "இனம் மாறி திருமணமா?" என்று நாங்கள் குழம்பினாலும், பின்னர் எல்லோருமே ஒருமித்து அமோதித்து, அந்த திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால் அதே நேரத்தில அந்த பையன் ஜாதியத்தில் குறைந்த ஒரு தமிழ்பெண்ணை தான் காதலிப்பதாக வீட்டுக்கு கூட்டி வந்திருந்தால், எங்கள் குடும்ப சூழலில் அவரின் விருப்பம் பரவலாக ஆமோதிக்க பட்டு ஏற்று கொள்ள பட்டிருக்குமா என்று என்னை நானே அடிக்கடி கேட்டு கொள்வது உண்டு .

:-) ...... "என்ன புன்முறுவல் ?" என்று கேட்கிறீர்களா ? .... நம் இனத்தோடு ஒட்டி பிறந்த சாதியம் என்ற சாபத்தை நினைத்து பார்க்கிறேன், ஒரு சிறு வரண்ட விரக்திப் புன்முறுவல் என்னையும் அறியாமல் பூக்கின்றது. சமயம் கிடைக்கும் போது சாதியத்தை பற்றி எனக்கு ஏற்பட்ட அநுபவங்களையும், எண்ணங்களையும் ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்....இது மேலோட்டமாக எழுதப்பட முடியாத, ஆழமாக யோசித்த பின்னரே எழுதக் கூடிய ஒரு விஷயம் என்பதனால், இந்த கட்டுரையை தாமதித்தே பதிப்பிக்க முடியும் ), சீனர்களை பற்றி எனக்கென்று சில ஆழமான தனிமனித அபிப்பிராயங்கள் உண்டு. இந்த வகையில் சீனர்களிடம் தன்மான குணம் அதிகமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது ஐம்பது வருட அன்றாட வாழ்க்கை அநுபவத்தை மையமாக கொண்ட ஒரு தனிமனித கருத்து என்றாலும், இந்த கூற்றுக்கு ஆதரவாக ஒரு சில நடைமுறை உதாரணங்களையும் என்னால் காண்பிக்க முடியும்

3. 'டிப்ஸ்' வாங்குதல்

சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய், குவாங்ஸ்ஷாவ், ஹாங்காங், சென்ஷன் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் /\' டிப்ஸ்\'/ வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள். இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது \'சன்மானம்\' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது. ஆதலால் \'டிப்ஸ்\' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் \'டிப்ஸ்\' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.

இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள ' ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் சத்தியமூர்த்தி என்கிற என் தமிழ் நண்பரும் அவரின் சீன மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர்.

தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( US$3.50) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார். அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும், சத்தியமூர்த்தியும், அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம். இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.

அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன். டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார். வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நான் 40 நாடுகளுக்கு போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய "தன்மான உணர்வை வெளிக்காட்டும்" ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது.

4. கல்விக் கடனுதவி

மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகளின் படிபபு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று \'ராம சுப்பையா எஜுக்கேஷன் பண்டு\' , \'எஸ்டேட் வர்கர்கஸ் ரீஹெபிலிடேஸன் பண்டு\', \'மலேசியன் இந்தியன் டெவலப்மெண்ட் பண்டு\' என்று பல ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பல்கலைகழகஙகளில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது. அதே போல தான் இந்த நாட்டில் \'பூமிபுத்திராக்கள்\' என்று அழைக்கபடும் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது.

ஆனால் சீனர்களின் நிலைமை வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பற்பல மடங்குகள் பெரிதாக இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு. நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.

இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன. ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.

இது ஒரு சிறு உதாரணம்தான். ஆனால் இதன் மூலம் நமக்கு தெரிய வரும் உண்மை என்னவென்றால் மலேசிய இந்தியர்களையும், மலாய்காரர்களையும் விட, மலேசிய சீன சமூகத்திடம் தன்மான உணர்வு அதிகம் என்பது தான்.

தொடரும்

மலேசியா ராஜசேகரன்

தொடர்பான சுட்டிகள்:

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து

Tuesday, December 27, 2005

என்ன விலை அழகே..??


எப்போ ஹோட்டல் போனாலும் பக்கத்தில் சாப்பிடறவன் என்னமோ சூப்பரா சாப்பிடறான்னு தோணுமா உங்களுக்கு..??

வாழ்க்கையை உயிர்ப்போட வச்சிருக்கறதே இந்த மாதிரியான விஷயங்கள்தான்னு தோணினாலும், பக்கத்தில் இருக்கறவன் சாப்பாட்டை பாத்துட்டு தான் பட்டினியாவே இருந்துட்டா கஷ்டம்தான். அப்பதான் பிரச்சினையே ஆரம்பம்.

விஷயத்துக்கு வர்றேன். ஊடகங்கள் கட்டி எழுப்பும் உருவம் பற்றிய பிரக்ஞை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. புகைப்படம் எல்லாம் பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பதும், அதைப் போல உருவத்தை மாற்றுவதற்காக இளசுகள் வீட்டிலுள்ளவர்களின் பாக்கெட்டுகளை காலி செய்வதும், அந்தப் பணத்தினால் பூதாகரமாக வீங்கிக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களின் மார்க்கெட்டும், அடேயப்பா....நியூக்ளியர் செயின் ரீயாக்ஷனை விட தொடர் கொடுமை.

இந்தப் படத்துல, அழகா இருக்கக்கூடிய பொண்ணை "மீடியா" அழகாக மாற்ற செய்திருக்கும் டெக்னோ ஜிகிடிகளை படம் படமாக , பாகம் பாகமாக காட்டி இருக்கிறார்கள். படா தமாசா கீது.. ஒரு முறை நீங்களும்தான் அந்தக் கண்றாவிய கண்ணால பாருங்க.

இதுக்கே இப்படின்னா, நம்ம நடிகைகள் மேக்கப் போடறதை படிப் படியா ஃளாஷ் ப்ளேயர்ல காமிச்சா என்னா ஆகுமோன்னு பயம்மா இருக்கு.
சேத்து வச்சிருக்கிற கலர் படம் எல்லாத்தயும் டெலிட் பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்.

நன்றி : ஜில்லி அண்ணா

ஈதென்ன பேருறக்கம்..??

வருடா வருடம் ஏற்படக்கூடியதுதான். ஆனால் இந்த வருடம் சொல்லி வைத்தது மாதிரி பெருவாரியான வலைப்பதிவர்கள் மெளனமாக இருக்கிறார்கள்.
இந்த அலுப்பிலும் தொடர்ந்து எழுதுபவர்களைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது - எழுத்துக்கு பின்னிருக்கும் நோக்கம் அத்தனை சிலாக்கியமாக இல்லை என்றாலும். எப்படியாவது ஏதாவது எழுதிக்கொண்டிருந்தால் சரிதான்.
இந்த நவசாமியார்களுக்கும், அவர்கள்து அக்மார்க் ஆன்மிகத்துக்கும் யாராவது சிஷ்யகோடிகள் இருக்கத்தானே வேண்டி இருக்கிறது.

பணியிடத்தில், நான் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் குழு பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. காரணம், நாங்கள் சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனின் ஆயுட்காலம் முடிவடைய இன்னமும் ஓராண்டே. அதை ஜாவாவுக்கு கடத்தும் வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதால், நானும் ஜாவா அப்ளிகேஷன் சர்வர் குழுவுக்கு என்னைக் கடத்தி விட்டேன். பயனாக - நிறைய வேலைகள் - படிக்க வேண்டிய, செய்ய வேண்டிய, பயில வேண்டிய எல்லாமுமாக.

அவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும், உடம்பு வணங்கி எழுதுவது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. நான் அகஸ்மாத்தாக பின்னூட்டம் கொடுத்த ஒன்றிரண்டு கூட சில நண்பர்களின் காதுகளில் தேனாக விழுந்து, மாங்கு மாங்கென்று பதிலியிருந்தார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவரவர்க்கு அதது. ஆனால் தனக்கு ஒப்புமை இருக்கின்ற கருத்தையோ வாதத்தையோ யாராவது வைத்தால், தொடர்ந்து பாராட்டுதலை சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.

மந்தமான பருவநிலை, மழை நச நசக்கும் சாலைகள், டவுன்லோடு செய்து பார்க்கும் திராபை தமிழ் சினிமா க்ளிப்பிங்குள், (உள்ளே/வெளியே போடும்) ஹீட்டரால் எழும் கண்ணெரிச்சல், தலைலவலி இத்யாதி இத்யாதி, என்று ஒரே சோகராகம்தான். இதற்கு நடுவே மலேசிய பெரிசு ராஜசேகரன் சீனர்களைப் பற்றி எழுதி ஒரு கட்டுரை அனுப்பி இருக்கிறார். அதை அறிவிக்கவாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து, ஒரு வழியாக....

ஹி..ஹி..

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, December 13, 2005

காப்பி க்ளப்

நாராயணன் பதிவின் பாதிப்பில் புதுப்பேட்டை பாடல்களைக் கேட்டேன். ஒன்றும் ஒட்டுகிற மாதிரி தெரியவில்லை. ஒருவேளை காட்சிகளுடன் கலந்து பார்த்தால் பிடிபடுமோ என்னவோ..முக்கியமாக செல்வாவின் படங்களில் பாட்டு எப்போது வருகிறது என்பதே தெரியாத அளவுக்கு காட்சிகளும் பாட்டும் அம்சமாக கலந்து வரும். ஆகவே படத்துக்கும், கிருஷ்ணவேணிக்கும் ஆவலோடு வெயிட்டிங். (அமெரிக்காவில் இணையத்திலிருந்து இறக்கிப் பார்க்கிறவராக இருந்தால், wisetamil.net அல்லது tamiltricks.com முயற்சித்துப் பார்க்கவும்.)

சுத்திச் சுத்தி ஏழு ஸ்வரம்தான். என்ன பல்டி அடிச்சாலும் அதுக்குள்ளதான் என்று மதிப்புக்குரிய மொட்டை சொல்லும்போது, பின்ன இவர் ஏன் இன்னமும் புதுசா பாட்டு போடறேன்னு சொல்றாருன்னு நினைக்கத் தோணும். ஆனா, கலர் கலரா புது இசைஞர்கள் உள்ளே புகுந்திருக்கும் இந்த நேரத்தில்
அது பல பாடல்களில் தெளிவாக தெரிகிறது. லலிதா ராம் மாதிரி கர்நாடக சங்கீத ஸ்பெஷலிஸ்டுகள் இன்னமும் நிறைய கண்டுபிடிக்கலாம். என் சமீபகால ஃபேவரைட் பாடல்களில் பழைய சாயல் அடிக்கும் பாடல்கள் இவை.


ஒரு பொற்காலம் தொடங்கும்(கஸ்தூரிமான்) - என்னைத் தாலாட்ட வருவாளா (காதலுக்கு மரியாதை)

தொட்டுத் தொட்டு என்னை ( காதல்) - என்னவளே அடி என்னவளே ( காதலன்)

பம்பரக் கண்ணாலே பச்சக் குத்த வந்தாளே (பம்பரக் கண்ணாலே) - அடி என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி (பட்டிக்காடா பட்டணமா..)

ரா..ரா ( சந்திரமுகி) - வான் போலே வண்ணம் கொண்டு ( சலங்கை ஒலி)

பனித்துளி பனித்துளி ( கண்டநாள் முதல்) - ராப்போது ஆனது. ராத்தூக்கம் போனது ( படம்- ???? )

Tuesday, November 29, 2005

வேட்டை


பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் அவ்வப்போது குறுக்கும் நெடுக்கும் தட்டுப்பட்டு கலவரத்தை கிளப்பியது. லெதர் சோஃபாவும், எலக்ட்ரானிக் உபகரணங்களின் ஒயர்களும் நினைவுக்கு வந்து கலவரமாக்கின. போதாதற்கு சிநேகிதி வீட்டில் வாஷருக்கு வரும் தண்ணீர் பைப் கடிக்கப்பட்டு வீடெல்லாம்
"தமிழ்நாடு" ஆன செய்தி பீதியைக் கிளப்பியது.

ஊரிலென்றால் தேங்காய் துண்டத்தையோ, மற்ற கவிச்சிகளையோ பொறியில் வைத்தால் லபக்கென்று ஓரிரவில் பிடிபடும். இங்கே பரிட்சை அட்டைக்கு போடும் க்ளிப் போல கிடைத்த ஒரு பொறியில், சீஸ் வைத்து காலையில் பார்த்தால், சீஸ் மட்டும் தின்னப்பட்டு காலியாய் கிடந்த பொறியை பார்த்தபோது வெறியாய் வந்தது. போனாப்போகுது என்று ஒரு பூனை வளர்க்கலாமா என்று கூட ஒரு யோசனை. கரப்பு இருந்தாலாவது, அழுக்கு இருப்பதை நாசுக்காக, அதர்ஷ்டக்கரப்பு/லக்ஷ்மிவண்டு என்று சொல்லிக் கொள்ளலாம். எலி இருப்பதை எப்படி சொல்ல..??. எலி விஷம் வைத்து பிடிக்கலாம் என்றால், அது பாட்டுக்கு எங்கேயாவது மறைவிடத்தில் போய் மரித்து விட்டால், பிறகு நாற்றம் தாங்காதே என்றும் ஒரு தலைவேதனை வேறு.

இறுதியாக டார்கெட் ஸ்டோரில் ஒரு ஸ்டிக்கர் அட்டை ( Glue pad) கிடைத்தது. வாங்கி வந்த வீட்டம்மாவை நக்கலாக பார்த்து, "எலி இதில் மாட்டுமா..? அது ஏற்கனவே சீரியல், சீஸ், தேங்காய் என்று சாப்பிட்டுவிட்டு கொழுத்துப் போய் படம் காட்டுகிறது" என்றேன். வழக்கம்போல அலட்சியப்படுத்திவிட்டு வைத்தாள்.

காலையில் பார்த்தால், பயாலஜி லேபில் பாடம் செய்யப்பட்டது போல. சிலுவையில் குப்புற அறையப்பட்டது போல மாட்டி இருந்தார். "பிடிப்பதுதான் என் வேலை. அப்புறப்படுத்துவது உங்கள் பாடு" என்றுவிட்டு அம்மையார் ஜூட்.. நம்மூரில் என்றால் பக்கத்து வீட்டு கொல்லையில் சத்தம் போடாமல் தூக்கி எறிந்துவிட்டு நல்லபிள்ளையாய் ஆபீஸ் போகலாம். இங்கே அதைச் செய்தால் பின்னால் "மாமா" வருவான்.

அலைந்தேன்.... அலைந்தேன்.... என் வீட்டுக்கு பக்கத்தில் அமெரிக்கன் ஆற்றில் கிளை நதி/ வெள்ள வடிஆறு இருக்கிறது. அதில் வீசலாம் என்றால் கம்யூனிட்டியே கொதிக்கும். என் வீட்டு குப்பை டப்பாவில் போடலாம் என்றால் வெள்ளிக்கிழமை, யானை தன் தலையில் மண்ணை கொட்டிக் கொள்வது போல குப்பைகளை கொட்டிக் கொள்ளும், லாரி வருவதற்குள் ஏரியாவே மணம் வீசும். எடுத்து ஒரு பாலித்தீன் உறைக்குள் போட்டு இறுகக்கக் கட்டி, காரின் முன்னே உள்ள விண்ட்ஷீல்ட் வைப்பரில் கட்டி, கிட்டத்தட்ட சவ ஊர்வலம் போல ஓட்டி வந்து, அருகாமையில் அடிக்கடி சுத்தம் செய்யப்படும் ஒரு குப்பைத்தொட்டியில் கடாசி விட்டு இப்போதான் வந்தேன்.

இறந்தது எலியானாலும் அதுவும் பிணந்தானே. அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் ரிலீஃபாக இருந்தது. என் தந்தையாருக்கு இதே பிரச்சினைதான். தெரிந்தவர்கள் வீடுகளில் துக்கத்துக்கு போனால், பிணம் எடுக்கும் வரை பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார். பசி பொறுக்காமல், சொந்தக்காரர்கள் எல்லாரும் வருகிறார்களோ இல்லையோ, அவசரம் அவசரமாக டேக் ஆஃப் ஆக்கி விடுவார். இதற்குப் பயந்து கொண்டே, இப்போதெல்லாம் அவரை அந்த சமயங்களில் எப்பாடு பட்டாவது ஏதாவது சாப்பிட வைத்து விடுகிறார்கள்.

Thursday, November 17, 2005

விடைபெறும் முன் - மலேசியா ராஜசேகரன்

கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் நான் இந்தியாவின் மீதுள்ள என் மனத்தாங்கலைக் கூறி " என் அபிப்பிராயத்தில், தலைகீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது" என்று எழுதிய வரிக்கு, ஒரு நண்பர் 'இவர்கள் இந்தியர்கள்' என்ற தலைப்பில் ஒரு வசைக் கட்டுரையே பதித்திருந்தார் . அந்த வரியை எழுதும்போதே இதனால் தமிழிணைய நண்பர்கள் கோபப் படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்களின் கோபம் ஒரு நாகரீக வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் என்கிற பெரும்போக்கான நினைப்பில் தான் நான் அந்த பதிப்பை எழுதியிருந்தேன். ஆனால், வயது வித்தியாசம் பாராமல், சிலருடைய வசை சொற்கள் சிறிது எல்லை மீறியனவாக அமைந்திருந்தன.

தொடர் முடிந்தவுடன், நான் எழுதியதை குறித்த தர்க்கத்தை வைத்துக் கொள்வோம் என்று பொதுவாக நானும் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். இது நடந்து ஒரு மாததிற்குமேல் ஆகிறது. "சரி நடந்து முடிந்த கதை, இதை எதற்கு பெரிது பண்ண?" என்று என் வழியிலே போகலாம் என்று பார்த்தால், அதற்கு தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது. ஆதலால் வேறு வழி தெரியாத நிலையில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாசகர்கள், என் தனி மனித பிரச்சனைக்காக உங்கள் நேரத்தை வீணடிப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

சிவா என்ற நண்பர் எழுதியது

- ஆனால் , அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு , பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். கேணத்தனமாக பேசாதீர்கள்.

- ஒரு நாட்டை பற்றி குறை சொல்வதற்க்கு கொஞ்சம் தகுதிகள் வேண்டும். அது இந்தியாவில் உள்ள ஒரு பிச்சைக்காரனுக்கு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு , நான் மேதாவி என்று ஒரு அயல்நாட்டை (இந்தியா மட்டும் அல்ல) குறைத்து பேசி, உங்கள் புராணம் பாட வேண்டாம்
.


ரவி என்ற நண்பர் எழுதியது :- -

சொந்த நாட்டில் வசிக்க வக்கில்லாமல் வெளிநாட்டில் நக்கிக்கொண்டிருக்கும் தங்களை போன்றவர்கள், அயல்நாட்டு பெருமை சொல்லி ஏன் சொந்த நாட்டை நக்கலடிக்கிறீர்கள். உங்களுக்கு புடிக்கலைன்னா பொத்திக்கிட்டு நக்கிக்கிட்டு இருக்கும் நாட்டை பற்றி பெருமையாக எழுதுங்கள். தாய் நாட்டை கேவலப்படுத்தாதீர்கள்.

பெயரில்லா நண்பர் எழுதியது :-

............ என்றெல்லாம் எழுத வேண்டாம். உம்மைப் போன்ற தாய்த் துரோகியை ( தாய் மொழி, தாய் நாட்டுத் துரோகியை) களை எடுக்க யாராவது வந்து விடுவர்.

இதையெல்லாம் படிக்கும்போது சில அடிப்படை விஷயங்கள் எனக்கு புரியாமல் இருக்கின்றன. நான் இந்தியாவைப் பற்றி மேலே குறிப்பிட்ட வரிகள் கிழட்டு அநுபவங்கள் ஆறாவது பதிவில் சொல்லப் பட்டிருக்கின்றன. அதற்கு முன்பு ஐந்து பாகங்கள் எழுதி இருந்தேன். அவற்றில் நான் எழுதிய யாவும் மலேசியாவில் வாழும் இந்தியர்களின், தமிழர்களின் அவல நிலையை பற்றிய விவரங்கள். மலேசியாவில் நம் இனம் எப்படி நொந்து நூலாகிக் கொண்டுள்ளது என்பதை பற்றியும், எங்களின் மொத்த அநுபவங்களில் இருந்தும் என் தனிப்பட்ட வாழ்க்கை அநுபவங்களில் இருந்தும் பிற NRI கள் என்ன பாடம் கற்றுக் கொள்ளமுடியும் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் எழுதப் பட்ட எழுத்துக்கள்தான் யாவும். இதை ஒவ்வொரு பதிவிலும் நான் திரும்ப திரும்ப சொல்லி வந்துள்ளேன்.

அத்தோடு கிழட்டு அநுபவங்கள் என்ற தலைப்பில் ஒருவர் , இவ்வளவு சீரியசான விஷயத்தை பற்றி எழுதுகிறார் என்றால், அவர் ஒர் அளவுக்கு வயது முதிந்தவாராகத் தான் இருக்க வேண்டும் என்பது யார் மனதிலும் தோன்றும் ஒரு உண்மை. அப்படி சமுதாய உணர்வு கொண்ட ஒரு பெரியவர்தான் இந்தியாவைப் பற்றி குறைபட்டு கொள்கிறார் என்று தெரிந்தும்கூடவா, இப்படி வசை வசனம் எழுத உங்களுக்கு மனது வந்தது ?? ஏனப்பா தம்பிகளா !! ??

சரி ' தமிழ்மனம் ' என்கிற , உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தத்தம் எழுத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு இடத்தில், தமிழ் மொழியிலேயே இந்தியாவுக்கு எதிராக ஒருவர் கருத்துரைக்கிறாரே , இவர் என்ன அடி முட்டளா? அல்லது " இந்தியா உலக அரங்கில் தன் தகுதிக்கு நிகரான எழுச்சியை பெறவில்லையே என்ற ஆதங்கத்தை மனதில் கொண்டிருக்கும் இந்தியாவை நேசிக்கும் பல கோடி இந்திய வம்சாவளியினரில் இவரும் ஒருவரா ?" என்று எதுவுமேயா அலசிப் பார்க்க உங்களுக்கு தோன்றவில்லை ??

அதிகமாகவே பேசிவிட்டீர்கள், பாதகமில்லை.

ஆனால் , நான் எதிர்பார்த்த "எந்த ஆதாரத்தை வைத்து உன் கூற்றைக் கூறுகிறாய் ?" என்கிற அறிவுபூர்வ கேள்வியை உங்களில் யாராவது ஒருவராவது கேட்டிருந்தீர்களேயானால் நமக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த விவாதத்தை கொண்டு சென்று , பல விஷயங்களை தெளிவு படுத்தி , பல கருத்துக்களை பரிமாறிக் கொணடு எல்லோருமே பயன் அடைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் விவாதத்தை வேறு திசையில் கொண்டு சென்று இருந்தீர்கள். " இந்தியாவை குறை சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கின்றது" என்பது ஒன்றுதான் உங்கள் வாததின் மையக் கருவாக இருந்தது.. சரி, என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள் :-

1952 ல் காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூர் எனும் நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டவராயன்பட்டிக்கும் , அதை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலங்குடிக்கும் இடையில் உள்ள சுண்டக்காடு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவன் நான். வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட. "

என்ன ராஜசேகரன் மலேசியாவில் 100 வருடங்களுக்கு முன்னரே குடி புகுந்ததாக கூறிவிட்டு, திருப்பத்தூர் என்கிறார் , கண்டவராயன்பட்டி என்கிறார் , சுண்டக்காடு என்கிறார் ? " என்று வாசகர்களுக்கு குழப்பமாக இருக்கிறதா ?? நான் பிறந்தது இந்தியாவில். இரண்டு நாடுகளிலுமே வாழ்ந்து, போக வர இருந்த என் பெற்றோர்கள் , எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என்னை மலாயாவிற்கு கூட்டிச் சென்றனர். அன்றிலிருந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வருகிறேன். அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னரே என் தலைமுறைக்கு முந்திய தலைமுறையினர் மலேசியாவில் குடிபுகுந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , இந்தியாவில் எல்லா குடும்ப, பாரம்பரிய தொடர்புகளையும் இன்றுவறை பிரயாசையுடன் பேணிக் காத்துவரும் சில பழைய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. எங்களுக்கு திருப்பத்தூரை ஒட்டிய கிராமங்களிலும், திருச்சி , மதுரை போன்ற நகரங்களிலும் இன்றும் ஆயிரக்கணக்கான சுற்றத்தார்கள் உள்ளனர்.

மலேசியாவில் தொழில் புரிந்து சம்பாதித்த பணத்தில் 80 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன. இவற்றுக்கெல்லாம் வரி கட்டுவதில் இருந்து, வரப்பில் யாராவது கேட்காமல் மரத்தை வெட்டினால், அவர் சிண்டைப் பிடிப்பது வரை நானும் , என் தம்பியும், மலேசியாவில் வாழும் என் பெரிய தகப்பனார் பேரன்களும்தான் இன்று வரை செய்து வருகிறோம்.

இதெல்லாம் போக குடும்பத்தில் யார் எங்கு இறந்தாலும் அவர்களை தகனம் செய்ய வேண்டி இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது. மலேசியாவில் வாழ்ந்த எங்கள் மூதாதையர் அத்தனை பேரினுடைய சமாதிகளும் அந்த இடுகாட்டில்தான் உள்ளன. எப்படி என்று கேட்கிறீர்களா? காரணம் சாவு நெருங்கும்போது ஒருவர் விடாமல் அத்தனை பேரும் பிறந்த மண்ணுக்கு திரும்பி விட்டவர்கள்.

என்னோடு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அதில் ஒரு சகோதரர் மட்டும் குடும்பத்தோடு மலேசியாவில் உள்ளார். ஒரு மலேசிய வங்கியில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக இருக்கிறார். அவருடைய மனைவி இந்தியாவில் பிறந்து , வளந்த உறவினரின் மகள். மற்றொரு சகோதரர் இந்தியாவிலேயே செட்டில் ஆகி, திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய மனைவியும் இந்தியாவில் பிறந்த வளர்ந்தவர்தான். இவர்கள் போக எனக்கு இன்னும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இருவரும் இந்தியாவில் உறவினர்களை மணந்து பிள்ளை , குட்டி , பேரன் , பேத்தி என்று வாழ்பவர்கள். இப்படி இந்தியாவில் பின்னிப் பினைந்து கிடக்கும் உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

இதெல்லாம் போக என் பெரிய தகப்பனார் வழியில் , மலேசியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட வம்சாவளியினரில் பெருவாரியானோர் இந்தியாவிலிருந்து பெண் எடுத்தவர்கள். இவர்களில் மலேசிய நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினாராக (MP) இருக்கும் என் பெரிய தகப்பனார் பேரனும் ஒருவர். அவரின் மனைவியும் கோயம்புத்தூரில் பிறந்து, படித்து, வளந்தவர்தான்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன்.தமிழ்மணத்தோடு எனக்கு உள்ள ஈடுபாடு வெறும் இரண்டு மாதங்கள் தான். ஆனால் இந்த இரண்டு மாதங்களில், இங்கும் கூட ஏதோ ஆழமான அரசியல் ஊற்று ஓடிக் கொண்டு இருப்பது எனக்கு நன்கு புரிகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம. நாம் நம்மில் ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைத்து இங்கு வாய்ப் போரும் வசைப் போரும் நடத்திக் கொண்டு இருக்கும் வேலையில், வேறு கலாச்சாரக் கூறுகளை உடைய பிற நாட்டவர் தங்கள் புத்திகளை எப்படி எல்லாம் உபயோகித்து தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?? ..... நினைத்தால் பெருமூச்சுத்தான் வருகிறது

மற்றவர் எப்படியெல்லாம் சிந்தித்து செயல் படுகிறார்கள் என்பதற்கு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' ஐ பற்றிய ஒரு குட்டி கதையை கீழே வழங்கி விடைபெறுறேன்.

வணக்கம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

" நான் பல வருடங்களுக்கு முன்பு தூபாயில் வேலை செய்வதாக கூறி இருந்தேன் அல்லவா? அப்போது என் சொந்த வேலையாக ஒரு முறை கோலாலம்பூர் திரும்ப வேண்டி இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸில், இக்கோனொமி கிளாஸ் டிக்கட். இரவு ப்ளைட். check-in முடிய பத்து நிமிடங்களுக்கு முன் கவுண்டருக்கு போய் சேர்ந்தேன். 'இக்கோனோமில் இடம் இல்லாததால் உங்களை ராஃபில்ஸ் கிளாசுக்கு (பிசினஸ் கிளாஸ்) மாற்றிய்ள்ளோம்" என்று கவுண்டரில் இருந்த பெண் சொன்னதும் எனக்கு படு குஷி.

விமானத்திற்குள் போய் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த சீட்டை தேடி உட்கார்ந்தால், அடுத்த சீட்டில் எங்கள் நிறுவனத்தின் சரக்கு கப்பல் பிரிவின் ஜெனரல் மானேஜர் - கோவாவைச் சேர்ந்த ஒரு இந்தியர். வேலை நிமித்தமாக சிங்கப்பூருக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விமானத்தில் சாப்பாடு பரிமாறும் நேரம் வந்தது. மெனு கார்டோடு, wine list ம் கூடவே வழங்கப் பட்டது. லிஸ்ட்டை பார்த்துவிட்டு என் பானம் என்னவென்பதை பக்கத்தில் நின்று ஆர்டர் எடுத்து கொண்டு இருந்த விமானப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். அவர் என் நண்பரிடம் திரும்பி "உங்கள் பானம் என்ன சார்?" என்று கேட்டார். என் நண்பர் அவர் கையில் வைத்திருந்த wine list ல் ஒரு பானத்தை காண்பித்து, "இது" என்று சொல்ல முற்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றோரு பணிப் பெண் அங்கு வந்து "இல்லை, மிஸ்டர் பிலிப்ஸ் உங்களின் பானம் பின்னால் வந்து கொண்டு இருக்கிறது" என்றார். நாங்கள் திரும்பிப் பார்த்தால், ஒரு பக்கெட்டில் ஒரு பாட்டல் வைனை ஐஸ் வைத்து குளிர வைத்த நிலையில் மற்றோரு பணிப் பெண் சுமந்து வந்து கொண்டிருந்தார்.

"நாம் இப்போதுதானே ஆர்டரே கொடுக்க போகிறோம்.....அதற்குள் எப்படி....வைன் ?!!" என்று எங்களுக்கு ஒரே குழப்பம். வந்த வைன் பாட்டலை என் நண்பர் கையில் எடுத்து பார்த்தார். அவரின் ஆச்சரியம் மேலும் பல மடங்கு கூடியது. "இது..இது...எனனக்கு மிகவும் பிடித்த வைன் ஆயிற்றே. இது எப்படி உங்களுக்கு தெரியும்?!!" என்று வாயை பிளந்தார். அதற்கு அந்த பணிப் பெண் "உங்களுக்கு இந்த வைனைப் பறிமாற வேண்டும் என்று எங்களின் டியூட்டி ரோஸ்டரில் சொல்லப் பட்டிருந்தது. அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. மன்னிக்கவும்." என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அரை மணி நேரத்திற்கு என் நண்பர் தலையை பிய்த்து கொண்டபடி இருந்தார். பிறகு திடீர் என்று என் பக்கம் திரும்பி, "எனக்கு தெரிந்து விட்டது" என்றார். "ஆறு மாதங்களுக்கு முன்பு இதே மாதிரி நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒரு இரவு ப்ளைட்டில் லண்டனுக்கு வேலையாக போகும்போது இதே மாதிரி ஒரு wine list என்னிடம் கொடுக்கப் பட்டது. அன்று அங்கிருந்த விமானப் பணி பெண்ணிடம் இந்த குறிப்பிட்ட வைன் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த வைன் எவ்வளவு பிரமாதமான ஒன்று என்று அவரிடம் விலாவரியாக சொல்லி கொண்டிருந்தேன். அதை அவர் குறிப்பெடுத்து, அது கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஏற்ற பட்டு, ஆறு மாதம் கழித்து நான் வேறு ரூட்டிற்கு டிக்க்ட் புக் செய்யும் போது, என் பெயரை வைத்து என்னை அடையாளம் கண்டு, எனக்கு இந்த வைன் தான் பரிமாறப் படவேண்டும் என்கிற ஆர்டர் தரையில் வேலை செய்யும் சிப்பந்திகளிடம் கொடுக்க பட்டு, அதன்படி இந்த குறிப்பிட்ட வைன் விமானத்திற்கு அனுப்ப பட்டு, குறித்த நேரத்திற்கு முன்பே அது குளிர் படுத்தபட்டு, இங்கு எனக்கு வளங்க பட்டிருக்கிறது" என்று ஆச்சரியத்தோடு சொல்லி முடித்தார்.

உலகிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும், நம்பர் ஒன் விமான நிறுவனமாக ஏன் சீனர்கள் நடத்தும் 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' இருக்கிறது என்பது இப்போது புரிகிறதா?



xxxxxxxxxxxxxxxxx

மலேசியாராஜசேகரன்

Monday, November 14, 2005

கிழட்டு அனுபவங்கள் - இறுதிப்பகுதி


அறிவிப்பு

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து


மலேசியாவின் நடைமுறை நிலைமை, பூமிபுத்ரர்களுக்கான முதல் சலுகை, பல்கலைக்கழக படிப்புமுறை, இங்குள்ளவர்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான காரணங்கள், மலேசியத் தமிழர்களின் அவலநிலை, இங்கு இந்தியர்கள் எப்படி வந்து சேர்ந்தனர் என்பதை உணர்த்தும் பூர்வாங்க சரித்திர விளக்கம், சுதந்திரத்தை ஒட்டிய காலக் கட்டம் வரையிலான தமிழர்களின் வாழ்க்கை முறை, 1969ல் நடந்த இனக் கலவரம், அதையடுத்து அமல்படுத்தபட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை (நியூ இக்கோனோமிக் போலிசி) அதன்பிறகு இன உறவுகளில் ஏற்பட்ட மாறுதல்கள், சீன வம்சாவளியினர் மலாயா வந்து சேர்ந்ததை உணர்த்தும் விளக்கம், வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார வளப்பம், அவர்களின் கலாச்சார நடைமுறை இயல்புகள், ஒரு தெளிந்த செட்டியாரின் அறிவுரை, "வேறு எந்த நாட்டிலாவது புலம் பெயரலாமா?" என்று எங்கள் மனங்களில் ஓடிய எண்ண ஓட்டம், குடும்பத்தில் நடந்த விபத்து, அதையடுத்து புலம் பெயரல் பற்றி நாங்கள் எடுத்த முடிவு, தொழில்புரிவது என்று கிளம்பி நான் அடைந்த தோல்வி, வளைகுடாவில் வேலைக்கு சென்றது, அங்கு பிற NRI களோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, நாங்கள் மலேசியா திரும்பியது, ஏற்றுமதி தொழில் ஆரம்பித்தது என்று விற்பதற்கென்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் கிழட்டு அநுபவங்களின் கடந்த பத்து பகுதிகளில் உங்களிடம் விற்றாகி விட்டது.



இதற்குமேல் விற்பதற்கென்று ஏதும் உளதா என்று வியாபாரப் பையின் அடியை தடவினால் "வாழ்க்கையைப் பற்றிய என் தனிமனித எண்ணங்கள்" என்கிற ஒரு சிறு பொட்டலம் மட்டும் தட்டுப் படுகிறது . இதை விற்றால் "ராஜசேகரன் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார் !!" என்று வாசகர்கள் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்கிற தயக்கத்திற்கு நடுவில் அதில் இருந்து ஒரே ஒரு அம்சத்தை மட்டும் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். பிரயோஜனப் படுகிறதா என்று பாருங்கள்.

பொதுவாக நாம் சிறுவர்களாக இருக்கும்போது, நம் வயதைப் பொறுத்து நமது எண்ண ஓட்டங்கள் சில மணி நேரங்களில் இருந்து சில மாதங்கள் வரையானதாகவே இருக்கும். அதை தாண்டி வருடக்கணக்கில் எல்லாம் நாம் சிந்திப்பதில்லை. பிறகு ஒரு இருபது, இருபத்தைந்து வயதை எட்டும் போது அடுத்துவரும் சில வருடங்கள் வரை சிந்திப்போம். ஒரு முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டி குடும்பம், பிள்ளை, குட்டி என்று ஆனபிறகு நமது சிந்தனைகள் ஒரு ஐந்திலிருந்து பத்து வருடங்களை எடைபோடுபவையாக அமையும். அதன் பிறகு ஒரு நாற்பது, நாற்பத்தைந்து வயதை தாண்டிய பிறகுதான் தலைமுறை கணக்குக்களை எல்லாம் உள்ளடக்கிய ஒரு தூர நோக்கும் இயல்புக்கே நாம் வந்து சேருவோம்.

இது நம் யாவருக்கும் பொதுவான ஒரு அநுபவக் கூறு என்றாலும், பிறந்த நாட்டிலேயே சுற்றங்களோடும், நட்ப்புக்களோடும் குழுமி வாழ்வோருக்கு இந்த கூற்றின் தாக்கம் மிகவும் யதார்த்தமான ஒன்று. ஆனால் பிற நாடுகளுக்கு ஒரு 25 வயதிலிருந்து, 35 வயதுக்குள் புலம் பெயரும் நணபர்களுக்கு இதன் தாக்கம் மிக ஆழமான பின் விளைவுகளை கொண்டு வரும் என்பது ஒரு அசைக்க முடியாத, ஆட்சேபிக்க முடியாத உண்மை. காரணம் ஐந்து பத்து வருடங்களை தாண்டி யோசியாத வயதில் வேறு ஒரு நாட்டிற்கு குஜாலாக புலம் பெயர்ந்து விட்டு, ஒரு பத்து வருடங்கள் அங்கு வேலை செய்த பிறகு, நாம் பிறந்து வளர்ந்த நாட்டை திரும்பிப் பார்த்தால், அங்கு நாம் விட்டு வந்த சூழ்நிலைகள் அத்தனையும் மாறிப் போயிருக்கும். அதே சமயம் நாம் அப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பிற நாட்டு வாழ்க்கை சூழலிலிருந்தும் இலகுவில் விடுபட முடியாத மாறுதல்கள் நம்மைச் சுற்றி நடந்தேறியிருக்கும். நாம் செய்து வரும் வேலை நிலை பெற்றிருக்கும். சம்பாத்தியம் கூடியிருக்கும். பிள்ளை குட்டி என்று நம் குடும்ப அமைப்பு மாறியிருக்கும். ஏன் நம் தனி மனித சிந்தனையே 'அடுத்த சில வருடங்கள்' எனும் இளமையின் யதார்த்த நிலையிலிருந்து, 'தலைமுறை கணக்கு' என்கிற முதுமை நிலயை ஒத்து ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த கால கட்டத்தில் நீங்கள் துணிந்து எந்த வாழ்க்கை மாறுதல்களையும் எடுக்க உங்கள் மனதும் விடாது, சூழலும் விடாது, சுற்றமும் விடாது. அப்படியானால் "புலம் பெயரல், வெளி நாட்டு வேலை என்று வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டிகள்தான் என்ன? தடம் புரண்டு விடாமல் வாழ்க்கையை துணிகரமாக நடத்திச் சென்று அதை கடைசிவரை அர்த்தமுள்ளதாக ஆக்கிகொள்வதுதான் எப்படி ?" என்கிற கேள்விக்கு பலரும் பலவித பதில்கள் வைத்திருப்பர்.



இதில் என் சிந்தனை இதுதான். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு எவை எவை முக்கியமானவை, எவையினால் உங்களுக்கு மன சந்தோஷம் ஏற்படும், எது எது நடந்தால் (அல்லது நடக்கா விட்டால்) உங்கள் மனம் நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் பெரும், என்பதை முதலில் ஆர அமர ஆழமாக யோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இது வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு முடிவுகளைக் கொண்டுவரும் ஒரு தனிமனித ஆய்வு. எனக்கு முக்கியம் என்று படுவது, உங்களுக்கும் முக்கியமாக பட வேண்டும் என்று அவசியமல்ல. ஒவ்வொருவர் இயல்பை பொறுத்து, அவரவர் கடந்து வந்த பாதைகளைப் பொறுத்து 'எது முக்கியம்' என்பது வெவ்வேறாக நிர்ணயமாகும். அதன் பிறகு நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போதும் 'இது இது எனக்கு முக்கியம்' என்று நீங்கள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்துள்ள பட்டியலோடு, எடுக்கப் போகும் முடிவை ஒத்து பார்த்து அதற்கு உகந்த வழியில் உங்கள் முடிவுகளை எடுத்து விடுங்கள். தவறு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு உங்களை பிறகு வாட்டாமல், வாழ்க்கையை கொண்டு செல்ல இதுவே சிறந்த வழி.

இதற்கான நடைமுறை உதாரணத்தை என்னை மையமாக வைத்து ஒரு சுய ஆய்வு செய்து பார்க்கிறேன். 32 வயதில் நான் வேலையை இழந்து கோலாலம்பூரில் தவித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, 38 வயதில் தூபாயில் வேலை செய்து கொண்டிருந்த போதும் சரி, 47 வயதில் பிள்ளைகள் படிப்பிற்கென்று எனக்கு அதிகமான பணம் தேவைப் பட்ட போதும் சரி, இப்போது 53 வயதில் நான் முதுமையின் வாசலில் நின்று கொண்டு இருக்கும் போதும் சரி "என் வாழ்வில் எது எது இருந்தால் எனக்கு நிலையான அமைதி, குதூகலம், இன்பம் எல்லாம் இருக்கும் ?" என்று நான் ஒரு பட்டியலை அமைத்திருந்தால், அது இப்படித்தான் இருந்திருக்கும் :-

1). என் மூதாதையர் பார்த்தால் என்னை மெச்சும் வகையில், சுற்றத்தையும், நட்பையும் ஆதரித்த, அனைத்த ஒரு பெரும்போக்கான வாழ்க்கையை வாழ்தல்.

2). பிள்ளைகளை சிறந்த படிப்புக்களை படிக்க வைத்து, அவர்களை ஆழந்த குடும்ப, சமுதாய உணர்வு கொண்ட, சிந்தித்து செயல்படும் புத்திசாலிகளாகவும், குதூகல இயல்பு கொண்ட நல்ல மனிதர்களாக உருவாக்குதல்.

3). பிரச்சனை அற்ற நடுத்தர வாழ்க்கை நிலையோடு கடைசி வரை யாரையும் எதிர்பாராத வகையில் குடும்பத்தை கொண்டு செல்ல தேவையான பணத்தை சம்பாதித்து விடுதல்.

4). சுற்றம், நட்பு, குடும்பம், பிள்ளை, குட்டி என்று சந்தோஷமான குதூகலமான சூழலுக்கு நடுவில் எங்களது குடும்ப வாழ்க்கையை அமைத்து கொள்ளுதல்.

5). குடும்பத்தில் உள்ள யாவரும் கடைசிவரை நோயற்ற உடல் கூறோடு வாழ்தல்.

இதுதான் எனக்கென்று நான் போடும், போட்டு கொண்ட லிஸ்ட்டு. இந்த மாதிரி நீங்களும் ஒரு லிஸ்ட்டை போட்டு பாருங்கள், எளிதில் விடை காண முடியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும். ஆனால், லிஸ்ட்டை போடுவதற்கு முன்பு ஆழமாக யோசியுங்கள். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு

" BE CAREFUL OF WHAT YOU WISH FOR ! YOU MIGHT GET IT !!" .

இதுகுறித்து உங்களுக்கு தெரிய வாய்பில்லாத ஒரு குட்டி விஷயத்தை இங்கு பகிர்ந்துவிட்டு செல்கிறேன்....... மலேசியாவில் உள்ள 'ட்வின் டவர்ஸ்' ஐ கட்டிய ஆனந்த கிருஷ்ணனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா ? அவரின் வயது 65. மொத்த சொத்து மதிப்பு US$ 2,000 MILLION ஐ தாண்டி சில வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் ப்போர்ப்ஸ் வர்த்தக இதல் அவரை மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இந்த வருடம் மதிப்பிட்டிருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். ஒரு ஆண், இரண்டு பெண்கள். அதில் அந்த மூத்த ஆண் பிள்ளை என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா ? அவர் முற்றும் துறந்த, 'புத்தம் சரணம், கட்ச்சாமி' என தியானத்தை விரும்பும் ஒரு புத்த பிக்கு !!!!!! ஏன்? எப்படி? எதனால்? காரணங்கள் எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், தன் மகன் இப்படி ஆவார் என்று ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், அவர் தன் வாழ்க்கையை நிச்சயமாக வேறு விதமாக அமைத்து கொண்டு இருந்திருப்பார் என்பது.




== முற்றும் ==

சரி, தமிழ் வலையுலக நண்பர்களே கிழட்டு அநுபவங்கள் தொடர் முடிவுக்கு வந்து விட்டது. இத்துடன் என் ஊட ஈடுபாட்டை நிறுத்திக் கொண்டு விடை பெற நினைக்கிறேன். இதன் பின்னர் பகிர்ந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் என்று என் மனதில் ஏதாவது தோன்றினால், அப்போது வந்து எண்ணங்களை பகிர்ந்து செல்கிறேன். இப்போதைக்கு தொடர்ந்து எழுத என்னிடம் சரக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்த தொடரின் ஆறாவது பகுதியில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று முடிச்சு அவிழ்ந்த நிலையில் இருப்பதால், அதை சரி செய்ய வேண்டி அடுத்த சில தினங்களில் 'முக்காலே மூணு வீசம் இந்தியன்' என்கிற தலைப்பில் ஒரு ஒற்றைக் கட்டுரையை இங்கு பதிவு செய்ய வருவேன். நேரமிருந்தால் வந்து பார்த்து விட்டுச் செல்லுங்கள். இதற்கு முன்பு நான் எழுதிய பத்து பகுதிகளுக்கும் பின்னூட்டங்கள் எழுதிய அன்பு, துளசி கோபால், வாய்ஸ் ஆப் விங்ஸ், தேன் துளி, மதி கந்தசாமி, தங்கமணி, கரிகாலன், கரைவேட்டி, பக்கோடா பக, பத்ரி, டுபுக்கு, ஆள்தோட்டபூ, ஓம்தட்சட், பிரகாஜ் பழனி, ஸ்ரீரங்கன், ராஜீ, பெத்த ராயுடூ, சிகிரி, தருமி, ஜோ, டி ராஜ், ரவிசங்கர், ப்பீடிபோய், பாரதி, சுதர்ஸன், மூர்த்தி, காசி, கோ. கணேஷ் யாவரும் என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களின் பின்னூட்ட பதிவுகளுக்கு பதிலுரைத்து அளாவி இருக்க வேண்டும். செய்யவில்லை. சாரி. இந்த பகுதிக்கு சுந்தரராஜனோடு சேர்ந்து நானும் பின்னூட்டங்களுக்கு பதிலுரைக்கிறேன்.

இத்தோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது - எனக்கு இணையத்தில் தமிழ் ஊடங்கள் என்ற ஒரு கூறு இருப்பதைக் காண்பித்து, ஈ-கலப்பை எனும் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது எனும் செய்முறையை சொல்லிக் கொடுத்து, நான் எழுதிய ஒவ்வொறு பதிப்புகளிலும் இருந்த பெருவாரியான ஸ்பெல்லிங் மற்றும் வல்லின மெல்லின பிழைகளை திருத்தி, நான் அனுப்பிய பதிவுகளில் உபயோகப் படுத்திய ஆங்கிலச் சொற்களை எல்லாம் கூடியவரை தமிழாக்கம் செய்து, என் எழுத்துக்களை எடிட் பண்ணி, கொம்போஸ் செய்து, என் சிந்தனைகள் எழுத்து வடிவம் பெற ஊக்குவித்து, அவரின் இணைய நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து, உற்ச்சாகப் படுத்தி, 25 வருடங்களில் தமிழிலில் ஒரு கடிதம்கூட எழுதாத என்னாலும் தமிழில் நான்கு வரிகள் எழுத முடியும் என்று எனக்குள் இருந்த என் தமிழ்த்தகுதியை அடையாளம் காட்டிய என் இள நண்பர் சுந்தரராஜனுக்கு, ஒரு ஆசானுக்கு மாணக்கன் படும் ஆழ்ந்த நன்றி கடனை நான் பட்டிருக்கிறேன் என்பதை பாசத்தோடு யாவரும் அறிய கூறி மகிழ்கிறேன் (சுந்தர், எனக்காக தயவு செய்து, இந்த வாக்கியத்தையும் சேர்த்து இந்த பாராவில் எதையுமே எடிட் பண்ணாமல் இப்படியே பதிப்பித்து விடுங்கள். நன்றி).

வணக்கம்.

உங்கள் நண்பன்,

மலேசியா ராஜசேகரன்

Wednesday, November 09, 2005

ஐடியா ..??

அடுத்த ஷங்கர் + சுஜாதா காம்பினேஷனுக்கு கரு (?!!) ரெடி என்று சொன்னால் அடிக்க வருவீர்கள்.

இந்த தலைமுறையிலோ அல்லது போன தலைமுறையிலோ இருக்கின்ற/இருந்த அறிவுஜீவிகளை "அப்படியே" வேண்டுமென்றால் க்ளோனிங்.. க்ளினிங் என்றெல்லாம் போக வேண்டும்.

சரி..அவர்கள் விந்துவையாவது சேமித்து வைத்து குட்டி அறிவுஜீவிகள் வேண்டுகின்ற அம்மாக்களுக்கு அளிக்கலாம் என்று ஆரம்பித்த யோசனையாம்..:-)

நிஜமாகவே சுவாரஸ்யமான கருதான் :-)

நன்றி : ஜில்லி அண்ணா என்றழைக்கப்படும் டீ.ஏ.அபிநந்தனன்

Monday, November 07, 2005

கிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது

கருவிலேயே மாண்ட ஏற்றுமதி பிசினஸ்

எனக்கு 24 வயதிலேயே திருமணம் ஆகி இருந்தது. அடுத்த எட்டு வருடங்களில் குமாஸ்தா நிலையில் இருந்து எக்ஸ்போர்ட் எக்ஸிக்யூட்டிவாக உயர்ந்திருந்தேன். சம்பளமும் உயர்ந்திருந்தது. ஆனால் இரண்டு குழந்தைகள் ஆகியிருந்ததால் சம்பள உயர்வுக்கு மேல் குடும்பச் செலவுகள் அதிகரித்திருந்தன. வேலை செய்வது போக பகுதி நேரத் தொழிலாக, இந்தியாவில் இருந்து ' கோஸ்டியும் ஜுவல்லரி ' தருவித்து ஏஜண்டுகள் வைத்து வீட்டிலிருந்து நானும் என் மனைவியும் நடத்திக் கொண்டிருந்தோம். தொழில் ஒர் அளவுக்கு நன்றாகவே நடந்து வந்தது. இருந்தாலும் மிகவும் சிறிய தொழில் என்பதனால், அதிலிருந்து சொற்ப வருமானமே பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் centralisation of operation என்று கூறி என் நிறுவனத்தினர் நான் வேளை செய்த எக்ஸ்போர்ட் துறையை கோலாலம்பூரில் இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றினர். என்னால் கோலாலம்பூரில் இருந்து வேறு எங்கும் பெயர முடியாத நிலை. ஆனால் மற்றோரு பக்கம் நான் வாங்கிய சம்பளத்திற்கு ஒத்த சம்பளம் கோலாலம்பூரில் எனக்கு வேறு எங்கும் கிடைக்காது என்கிற நடைமுறை உண்மை வேறு. என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கும்போது, என் பால்ய நண்பர் ஒருவர் "நீங்கள் ஏன் ஒரு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்து, தூபாய், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு பாம் ஆயில் சம்மந்தபட்ட உணவு பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது? உங்களுக்குதான் அதில் நிறைய அநுபவம் உள்ளதே ?" என்றார். அவர் சொன்னதை மனதில் அசை போட, அசை போட அது ஒரு சிறந்த யோசனையாகவே எனக்கும் என் மனைவிக்கும் பட்டது. அடுத்த சில தினங்களில் யோசனையை அமல்படுத்த முடியுமா என்று ஆராய, எங்கள் ஊர் கிளையில் வங்கி மானேஜராக இருந்த நண்பர் ஒருவரைப் போய் பார்த்தோம். "இரண்டு ஏற்றுமதி ஆர்டர்களை கையில் வைத்திருந்தீர்கள் என்றால், என் வங்கியின் மூலமே என்னால் உங்களுக்கு தேவையான கடன் உதவியை பெற்றுத்தர முடியும்" என்று கூறினார்.

பல முறை எங்கள் நிறுவனத்தின் பொருட்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பிடிக்க வேண்டி, வளளகுடா நாடுகளுக்கு சென்றுவந்த ஆநுபவம் உண்டு என்பதனால், என் நண்பர் சொன்னதுபோல் இரண்டு ஏற்றுமதி ஆர்டர்கள் பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிற தைரியத்தில், என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு ஏற்றுமதி கம்பெனியை ரிஜிஸ்டர் செய்தோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி கம்பெனி நிலைக்கவில்லை. வங்கி தலைமையகத்திலிருந்து கடன் சாங்ஷன் ஆகி வருவதற்கு இடைப்பட்ட இரண்டு மாதங்களில், என்னென்னவோ நடந்து முடிந்தன. நான் வேலையை ராஜினாமா செய்த சில வாரங்களில் "மலேசியா இரண்டு மூன்று ஆண்டுகளாவது நீடிக்க கூடிய பொருளாதார மந்த நிலையை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்" என்று சில வெளிநாட்டு செய்தி மையங்கள் கருத்து வெளியிட்டன. அதை தொடர்ந்து ஒரு மாதத்தில் "நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள போவது உண்மையே" என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டு, நாட்டுப் பிரதமரே நிலமையை ஊர்ஜிதப் படுத்தினார். வங்கிகள் யாவும் தத்தம் கடன் கொள்கைகளில் மாறுதல்களை கொண்டுவந்தன. எங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்க பட்டது. எங்கள் ஏற்றுமதி திட்டமும் கருவிலேயே மாண்டது.

துபாயில் வேலை

அந்த கால கட்டத்தில் இருந்த வேலையையும் விட்டு விட்டு, அன்றாடச் செலவுக்கு கூட பணம் இல்லாது, என்ன செய்வதென்று புரியாது குழம்பி தவித்து கொண்டிருந்தபோது, தூபாயில் எனக்கு நன்கு பரிச்சயமான, என் பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான ஒரு பெரிய அரபு நிறுவனத்தார், நான் விரும்பினால் தூபாயில் அவர்களின் உணவு பொருட்கள் இறக்குமதி, வினியோகப் பிரிவில் எனக்கு "சேல்ஸ் & மார்கெட்டிங் மானேஜர்" பதவியில் வேலை தருவதாகக் கூறி என்னை வற்புறுத்தி அழைத்தனர்.

குடும்பத்தை கோலாலம்பூரில் தனியே விட்டுவிட்டுப் போக எனக்கு மனமில்லை என்றாலும், வேறு வழி இல்லாது "மூன்று வருடங்களுக்கு மட்டும்" என்கிற நிபந்தனையின் பேரில் தூபாய்க்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டேன். அந்த நிறுவனத்தின் 22 பிரிவுகளில், என்னோடு இந்தியாவின் பல பிரதேசங்களிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். அரபு நாடுகளில் வசிப்பது என்பது ஒரு நாளுக்கு ஒரு நாள் எந்த வித்தியாசமும் இல்லாது, ஏதோ அரைத் தூக்கத்தில் நிகழ்வுகள் நடப்பதுபோன்ற ஒரு மாதிரி, மாயையான வாழ்க்கை அநுபவம்.

வேலைக்கென்று நீங்கள் அங்கு சென்ற முதல் நாளே உங்கள் பாஸ்போர்ட்டை நிறுவனத்தார் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு வேலை, வேலை, வேலை என்று வேலையைத் தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவுமே நிகழாது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றாலும் முதல் ஆறு நாட்கள் செய்த வேலையின் கலைப்பு தீர உறங்கத்தான் சொல்லும். இரவு நேரங்களில் வீடியோவில் தமிழ், மலயாள, இந்தி திரைப்படங்கள். வியாழ வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்களோடு பெர்மிட்டில் வாங்கிய விஸ்கி, ரம். அவ்வப்போது சிறிது ஷாப்பிங். வட இந்தியர்களின் பாடு, தென் இந்தியர்களை விட சிறிது பெட்டர் - நவராத்திரியின் போது டாண்டியா ஆட்டம் இருக்கும், மாதம் ஒருமுறை ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் பார்ட்டி கொடுத்து கொள்வார்கள். அதற்கு மேல் எதுவுமே கிடையாது. பணம் மட்டும் வங்கி அக்கவுண்டில் மாதாமாதம் சிறிது, சிறிதாக சேர்ந்து கொண்டே வரும்.

இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமேயானால் அதற்கு இலகுவில் விடை கிடைக்காது. சில சமயம் அந்த வாழ்க்கையும் ஒரு அழகான வாழ்க்கை போலத் தோன்றும், சில சமயம் எதுவுமே வாழாதது போலவும் தோன்றும். பிரச்சனையற்ற சுதந்திரம் இருப்பது போல ஒரு நாள் மனதிற்கு படும். மறுநாள் இனம் புரியாத சோகம் நம்மை ஆட்கொண்டு மனதை ரனப் படுத்தும். அங்கு நான் பார்த்த ஒவ்வொரு இந்தியருக்கும் இந்தியாவை மையமாக வைத்து ஏதோ ஒரு கனவு இருந்தது. ஒருவர் மூன்று காண்டிராக்ட் (ஒரு காண்டிராக்ட் என்பது இரண்டு வருடம்) தூபாயில் வேலை செய்துவிட்டு, சேமிக்கும் பணத்தில் பரோடாவில் தன் சகோதரரோடு சேர்ந்து வீடு கட்டி கொடுக்கும் தொழில் ஈடுபடப் போவதாகச் சொன்னார், மற்றொருவர் இன்னும் சிறிது பணம் சேர்ந்தவுடன் பூனாவில் டிராவல் ஏஜன்சி துவக்க இருப்பதாகச் சொல்வார், ஒருவர் பம்பாயில் தான் வாங்கிப் போட்டிருந்த இரண்டு ப்ளாட்டுகளின் விலை அரைக் கோடி ரூபாயைத் தாண்டின மறு கனமே தாயகம் திரும்பி விடப்போவதாக சொல்லி இருந்தார். மற்றோருவர் கேரளாவில் ஒன்பது அறைகளுடன் அவர் கட்டிய வீட்டின் புகைப்படங்களை காண்பித்து இன்னும் ஒரு காண்டிராக்டை முடித்துக் கொண்டு அவ்வீட்டில் குடிபுகப் போவதாக கூறுவார்.

ஆனால் இப்படிச் சொன்ன என் நண்பர்கள் ஒருவர்கூட அவர்களாக தாயகம் திரும்பவில்லை. நான் தூபாயை விட்டு வந்து 15 வருடங்கள ஆகின்றது, பம்பாயில் என் நண்பரின் ப்ளாட்டுகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயை தாண்டி விட்டது, ஆனால் அவர் இன்னமும் தூபாயில்தான் இருந்து வருகிறார். கேரளாவில் வீடு வைத்திருந்த நண்பருக்கு சென்ற வருடம் மாரடைப்பு ஏற்பட்டு இனி வேலை செய்ய முடியாது என்கிற நிலையில் இப்போதுதான் இந்தியா திரும்பியுள்ளார்.

திரும்பாததற்கான காரணங்கள்

வேலை நிமித்தமாக தூபாயை மையமாக வைத்து ஐக்கிய அரசு கூட்டரசின் எல்லா நகரங்களோடு, குவைத், சவுதி அரேபியா, பகரேன், கட்டார், ஓமான் ஆகிய பிற வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்களுக்கும் பற்பல முறை பயணம் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் எனக்கு கிட்டின. இப்படி மேற்கொள்ள பட்ட பயணங்களின் போது, தனியார் நிறுவனங்களில் நடுநிலை மற்றும் மேல்மட்ட நிலைகளில் நிர்வாகஸ்தர்களாக இருந்த நூற்றுக்கனக்கான இந்தியர்களை சந்தித்து அணுக்கமாக பழகக்கூடிய வாய்ப்புக்களும் எனக்கு நிறைய கிட்டின. இப்படி சந்தித்து, அறிமுகமாகி, அளவளாவிய நண்பர்களோடு அடிக்கடி பகிரப்பட்ட விஷயங்களில் ' போதுமான பணம் சம்பாதித்த பிறகும்கூட அவர்கள் ஏன் தாய் நாட்டிற்கு திரும்பாமல் அரபு நாடுகளில் வாழ்கிறார்கள்' என்பதும் ஒன்று. அதற்கு அவர்கள் பலரும் பகிர்ந்து கொண்ட காரணங்களில் கீழ்வரும் நான்கு காரணங்கள் பரவலாக மீண்டும், மீண்டும் கோடி காண்பிக்க பட்டன:-

1). குடும்ப பெருமிதம். "என் மகன் (அல்லது மாப்பிள்ளை) வெளிநாட்டில் வேலை செய்கிறார்" என்று தாயகத்தில் இருக்கும் குடும்பத்தாரின் பெருமிதம். அதனால் வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இயல்பாக ஏற்படும் 'எதிர்பார்ப்பு தாக்கம்'. இதனால் எப்படி குடும்பத்தார்களுக்கு தங்கள் எண்ணத்தை புரிய வைத்து நாடு திரும்புவது என்கிற குழப்பம்.

2). தாயகம் திரும்பின பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி. அப்படியே இதுதான் செய்யப் போகிறோம் என்ற திட்டம் மனதில் இருந்தாலும், அதை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்கிற நடைமுறை அமல்திட்டம் இருப்பதில்லை. அப்படியே அமல்திட்டம் இருந்தாலும் "போடும் திட்டம் தோல்வியுற்றால் என்ன செய்வது ?" என்கிற பயம்.

3). மாறுதல்களை அனுசரிக்க முடியாத வயதை எட்டி விடுதல். 30 வயதில் புலம்பெயரலால் ஏற்படும் மாறுதல்களை ஒருவர் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதே புலம்பெயரலை 45 வயதில் மேற்கொண்டால்? புதுச் சூழ்நிலையை அனுசரித்துப் போகுதல் கடினமானதாக அமைந்து விடுதல்.

4). வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள பிரச்சனையற்ற வாழ்க்கை சூழல் (COMFORT ZONE). "இந்த சூழலை விட்டு ஏன் வெளியேற ?" எனும் ஒர் எதார்த்தம்.

இன்னுமொரு காண்டிராக்ட்

இதனால் 'இன்னுமொரு காண்டிராக்ட். இன்னுமொரு காண்டிராக்ட்' என்று நாட்கள் கடந்து விடுகின்றன. இந்த 'இன்னுமொரு காண்டிராக்ட்' எனும் தாக்கம் தூபாயின் ஒரு திர்காம் நாணயத்திற்கு ஒரு மலேசிய ரிங்கிட் மட்டும் எனும் நாணய பரிமாற்றத்திற்கு உட்பட்ட என்னையே விடவில்லை. மூன்று வருடங்கள் மட்டும் தூபாயில் வேலை செய்யப் போவதாக சொல்லி வந்த நான், ஆறு வருடங்கள் கழித்துதான் மலேசியா திரும்பினேன். அப்படி இருக்க ஒரு திர்காமிற்கு 10 - 12 இந்திய ரூபாய் எனும் கணக்கு உடைய இந்தியர்களிடம் என்னத்தை சொல்வது ?

தூபாயில் எனது முதல் மூன்றாண்டுகள் முடியும் தருவாயில் நான் வேலை செய்த அரபு நிறுவனத்தினர் என் சேவையை தொடர வைக்க வேண்டி, அவர்களோடு நான் வேலையை தொடர்ந்தால் எனக்கு சம்பள உயர்வும், என் 'பாச்சிலர் குவார்ட்டர்ஸ்க்கு' பதிலாக 3 அறைகளையுடைய 'பர்னிஷ்டு அப்பார்ட்மண்டும்' கம்பெனிச் செலவில் கொடுப்பதாக கூறினர். இதை நான் கோலாலம்பூருக்கு வேலை நிமித்தமாக வந்திருந்தபோது என் குடும்பத்தார் முன்னினையில் என் மனைவியிடம் சொல்ல, அவர் உடனே "நீங்கள் எதற்கு மலேசியா திரும்புகிறீர்கள்? நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு உங்களோடு தூபாய் வந்துவிடுகிறேன்" என்றார். உடனே குடும்பத்தார் யாவரும் "நல்ல யோசனை!" என்று ஒருமித்து குரல் எழுப்பினர். அந்த கனப் பொழுதில் என்ன சொல்கிறோம் என்பதை முழுமையாக சிந்தியாத, ஒரு அரைத் தீட்சண்ய நிலையில், நான் 'சரி' என்கிற வகையில் மண்டையை மண்டையை ஆட்ட, மடை திறந்த வெள்ளம்போல் நிகழ்வுகள் சடசடவென அதையடுத்து நிகழ்ந்தன. அடுத்த நான்கு மாதங்களில் என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் என்னோடு தூபாய் வந்து சேர்ந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் வாழ்க்கை தூபாயிலேயே கழிந்தது.

ஆனால் எனது மூன்றாவது காண்டிராக்டின் போது என் உள்மனது என்னை அரித்தெடுக்க ஆரம்பித்தது. "நமக்கு 38 வயது ஆகிவிட்டது. இதற்கு அப்புறமும் நாம் மலேசியா திரும்பி நாம் கண்ட கனவுப்படி ஒரு தொழிலை ஆரம்பிக்கா விட்டால், தொழில் முனைவராகும் நமது கனவு கடைசிவரை வெறும் கனவாகவே இருந்துவிடும்" என்கிற ஞானோதயம் என் மனதில் ஆழமாக எழும்ப, "எது நடந்தாலும் நடக்கட்டும்" என்கிற குருட்டு தைரியத்தில், என் காண்டிராக்ட் முடித்த கையோடு மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக் கொண்டு, குடும்பத்தோடு மலேசியா வந்து சேர்ந்தேன். ஒரு சிறு ஏற்றுமதி தொழிலை ஆரம்பித்தேன். ஆனால் என் குடும்பம் துபாய்க்கு வந்து என் பிள்ளைகள் அங்குள்ள ஆங்கில பள்ளிக்கூடங்களில் படிக்கப் போய், மலேசியா திரும்பிய பிறகு அவர்களை திரும்ப அரசாங்க மலாய் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பித்தால் படிப்பு எங்கு கெட்டுவிடுமோ என்கிற பயத்தில், ஆங்கில மீடியத்தில் பாடம் நடத்த பட்ட தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட நேர்ந்தது. இதனால் மலேசியா திரும்பிய அடுத்த ஒன்பது வருடங்களுக்கு எனக்கு மாதாமாதம் சராசரி US$ 450 கூடுதலாக செலவாகியது. இதை நான் பல வருடங்களுக்கு முன் யோசியாது ஒரு முறை மண்டையை ஆட்டினதற்கான அபராதம் என்று நினைத்து கொள்வது உண்டு.

எதனில் ரிஸ்க்கு இல்லை ?

இந்த பகுதியை முடிக்குமுன்னர் புலம்பெயருதல் பற்றி நான் ஒரு கண்ட ஒரு சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மலேசியாவில் வாழப் பிடிக்காமல் லட்சக்கணக்கான மலேசியக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினர் வெளிநாடுகளில் புலம்பெயந்துள்ளனர். அவர்களில் சிலர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வப்போது புலம்பெயந்த நாட்டில் வாழப் பிடிக்காமல், மலேசியா திரும்பிவிடுவதும் உண்டு. அப்படி குடும்ப காரணங்களுக்காக 12 வருடங்கள் கழித்து பிள்ளை குட்டியோடு மலேசியா திரும்பிய ஒரு சீனரை ஒரு சக நண்பருடைய விருந்தில் பார்க்கும்படி நேர்ந்தது. பேச்சுவார்த்தையில் எனது இந்திய நண்பர் வந்திருந்தவரிடம் கேட்டார் "இந்த வயதில், அதுவும் 12 வருடங்கள் வெளி நாட்டில் வசித்துவிட்டு, குடும்பத்தோடு திரும்புகிறீர்களே, இங்கு என்ன செய்வீர்கள்? இது ஒரு பெரிய ரிஸ்க்காக உங்களுக்கு படவில்லையா ?" என்று. அதற்கு அந்த 49 வயது சீனர் அளித்த பதில் சீனர்களின் இயல்பை அப்பட்டமாக காட்டுவதாக அமைந்தது.

"WHAT IS NOT A RISK FRIEND ?? TO EXIST IS A RISK !!".


தொடரும்

Thursday, November 03, 2005

அவள் விகடன் கட்டுரை

இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித்து வருகிறார். என்னுடைய பழைய பதிவு ஒன்றில் அகஸ்மாத்தாக நான் அமெரிக்க "ஆல் பவர்ஃபுல்" அம்மையார் காண்டலீசா
ரைஸைப் பற்றி சொல்லி இருந்தேன். அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை தர முடியுமா என்று கேட்டிருந்தார்.

என்னுடைய சோம்பேறித்தனம் தான் ஜகப் பிரசித்தம் ஆயிற்றே. தவிரவும் இந்த மாதிரி ஆ.....ஆழமாக எழுதி எனக்குப் பழக்க்மும் இல்லை. இதோ..அதோ என்று இழுத்துக் கொண்டே போய், கடைசியில் அனுப்பி வைத்தேன். அது இந்த வாரம் அழகாக எடிட் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அவர் ஸ்டான்ஃபோர்டில் வேலை செய்ததையும், அவரைப் பற்றி இப்போது வந்திருக்கும் hillary vs Clinton புத்தகத்தைப் பற்றியும், அவருக்காக (அதிபர் தேர்தலுக்கு) ஆதரவு திரட்ட ஆரம்பித்திருக்கும் வலைத்தளங்கள் பற்றியும், அவரை "விவரமில்லாத புஷ்" எத்தனை நம்பி இருக்கிறார் என்பதையும் பற்றி எழுதி இருந்தது மட்டும் கத்தரிக்கப்பட்டு இருக்கிறது.

நம்ம மக்கள் பார்த்துவிட்டு ரெண்டு மொத்து மொத்தினால் சந்தோஷம்.

இந்தக் கட்டுரை எழுத முடிந்ததற்கு காண்டலீசாவுடனான என்னுடைய தனிப்பட்ட நட்பும், அமெரிக்க அரசியலில் என் அறிவும், குடியரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் என் கூர்ந்த பார்வையும்....வெயிட்..வெயிட்..வெயிட்டீஸ்..

கட்டுரைத் தகவல்களுக்காக இணையத்துக்கு நன்றி. விகடனுக்கும்

Monday, October 31, 2005

கிழட்டு அனுபவங்கள்(9) - மலேசியா ராஜசேகரன்

தலையாய குழப்பம்

மலேசிய நாட்டில் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பரவலான சமூக, சமய, அரசியல், இன உறவுகளின் மாறுதல்களை கண்கூடாக பார்த்து வருகிறோம். அவற்றின் தாக்கங்களை முழுமையாக உணர்ந்து, இனி இந்த நாட்டில் நம்மைப் போன்ற சிறுபான்மை இனத்தின் வாழ்வு பிரச்சனையான, கேள்விக்குறியான ஒன்றுதான் என்பதை பல இந்திய சீனக்குடும்பங்கள் தீர்க்கமாக அறிந்து கொண்டுள்ளன. "இந்த நாட்டிலிருந்து வேறு எஙகாவது குடிபெயர்ந்து போய்விடலாமா?", என்று அவர்களைப்போலவே நாங்களும் அடிக்கடி எங்களை நாங்களே கேட்டுக் கொண்டது உண்டு.

ஆனால் எங்கு குடிபுகுவது?

இந்தியாவிற்கு திரும்பலாம் என்றால், நூறு வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டு இனி அங்கு போய் அங்குள்ள மக்களோடு முண்டி அடித்துக் போட்டி இடுவதற்கான அணுகுமுறையோ, சிந்தனையோ எங்கள் பிள்ளைகளுக்கு கிடையாது. நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபுகலாம் என்றால் (எங்களின் மூன்று பிள்ளைகளுமே இதற்கு தகுதி உடையவர்கள்தான்), அங்கும் பரவலான இனப் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் இந்திய வம்சாவளியினர் என்றால் அங்குள்ளவருக்கும் ஒரு இளக்காரம்தான். அதெல்லாம் போக மலேசியாவில் எங்களுக்கு உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட உறவினர்களின் துணையையும், மொழியாலும் மதத்தாலும் இனத்தாலும் ஒருமித்த உணர்வுகொண்ட இங்குள்ள பதினெட்டு லட்சம் இந்தியர்களின் தோழமையையும் விட்டுவிட்டு, நமக்கு ஆள் இல்லாத ஊரில் தனி மரமாக போய் வாழ்கை நடத்துவதற்கு நமக்கு என்ன விதியா? என்கிற நினைப்பு ஒரு புறம். இப்பொழுதே மலாய்காரர் அல்லாதாருக்கு மலேசிய நாட்டில் இத்தனை கெடுபிடியென்றால், வருங்காலத்தில் இந்த நாட்டு மலாய்காரர் ஜனத்தொகை பெருகப் பெருக, நமது அடுத்தடுத்த வாரிசுகள் எவ்வளவு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப் படுவர் என்கிற கவலை மற்றொரு புறம். இதற்கு நடுவில் எங்கு வாழ்வது என்பதை என்னவென்று முடிவு செய்வது ?? என்னைப் போன்ற பல்லாயிரக்கனக்கான நடுத்தர, மேல்மட்ட மலேசிய குடும்ப தலைவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல குழப்பங்களில் பெரிதும் மூத்த குழப்பமே இதுதான்.

ஆனால் இந்த கேள்விக்கு, ஆறு மாததிற்கு முன்பு என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலமாக எங்களுக்கு விடை கிடைத்தது. இனிமேல் 'மலேசியாவா?, ஆஸ்திரேலியாவா?, நியூசிலாந்தா?' என்கிற கேள்வி எல்லாம் எங்களுக்கு கிடையாது. மலேசியாதான் என்கிற தீர்க்கமான முடிவுக்கு எங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினருமே வந்து விட்டோம். இந்த தெளிவுக்கு காரணம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி அன்று எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு விபத்தும், அதை அடுத்து நடந்த நிகழ்வுகளும்தான். அந்த கதையை கூறுவதற்கு முன்பு, இந்த நாட்டில் மலாய்காரர் அல்லாதார் எதிர்கொள்ளும் கெடுபிடியால் எற்படும் தாக்கத்தின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்தி ஆக வேண்டும். இல்லையென்றால் நான் கூறுவதில் பாதிக்குமேல் வெறும் பிதற்றலாகப் படும்.

பிள்ளைகளைப் படிக்க வைக்க நாங்கள் படும் பாடு

இங்குள்ள பல்கலைக்கழகங்களில் மலாய்காரர்களுக்குப் பிறகு தான் மற்ற இன பிள்ளைகளுக்கு இடங்கள் வழங்கப் படுகின்றன என்றும், அதன் காரணமாக சீனர்களில் பெரும்பலானோரும், இந்திய குடும்பங்களில் சிலவும் அவரவரின் பிள்ளைகளின் படிப்பிற்காக வீடு, வாசல் முதற்கொண்டு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள் என்றும் ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா. அதை சிறிது விளக்கமாக சொல்கிறேன்

இதுவரை என் மூன்று பிள்ளைகளில் படிப்பிற்காக நான் கையைவிட்டு செய்துள்ளது செலவு US$ 260,000. இது என் பரம்பரைச் சொத்திலிருந்தோ, என் தகப்பனார் விட்டுச் சென்ற செல்வத்திலிருந்தோ எடுத்து செய்யப் பட்ட செலவு அல்ல. குமாஸ்த்தாக்களாக இருந்த நானும் என் மனைவியும் 20 வருடங்களுக்கு முன்பே "நம் குடும்பம் இந்த நாட்டில் வளர்ச்சியுற வேண்டுமானால், நாம் சம்பளத்திற்காகச் வேளை செய்வதை விடுத்து, எதாவது தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்" எனறு எடுத்த முடிவின் பிரதிபலிப்புத்தான் இது. தொகையைப் பார்த்துவிட்டு, ராஜசேகரன் மலேசியாவில் ஏதோ பந்தாவாக வாழ்வதாக நினைத்துவிடாதீர்கள் :-)) சம்பாதிப்பதில் சல்லிக் காசு விடாமல், எல்லாவற்றையும் பிள்ளைகளின் படிப்பிற்கென்று செலவழித்து, நடைமுறையில் மிகச் சதாரணமான நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மலாய்காரர் அல்லாத குடும்பங்களில் எங்களின் குடும்பமும் ஒன்று. அவ்வளவுதான்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால், நாங்கள் முன்பு யோசித்ததுபோல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடிபுகுந்தால், எங்களின் அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த படிப்பு பிரச்சனையெல்லாம் இருக்காது. அங்கு அபாரமான தரமுள்ள படிப்பு, PR பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட இனாமாகவே வழங்கப் பட்டு விடுகிறது. ஆனால் படிப்பிற்கென்று மட்டும் அங்கேயெல்லாம் குடிபுகுந்தால், வாழ்க்கையின் மற்ற கூறுகள் அடிபட்டுப் போய்விடுமே என்கிற எண்ணம்தான் எங்களுக்கு

வழிகாட்டிய விபத்து

சரி, விபத்து நடந்த கதைக்கு வருவோம். இந்த வருடம் மார்ச் மாதம் 2ஆம் தேதி எங்கள் குடும்பத்தார் யாரும் இலகுவில் மறக்க முடியாத ஒரு நாள். நான் பயந்து பார்த்திராத என் சுற்றத்தாரும், நான் அழுது பார்த்திராத என் பிள்ளைகளும் நான் கதிகலங்கி, முகம் வெளுத்து, கைகால்கள் நடுங்கி, முற்றாக செயல் இழ்ந்து, விக்கி விக்கி அழுததைப் பார்த்ததும் அன்றுதான்.

இரவு 9.30 மணி இருக்கும். குடும்பத்தோடு 'கெந்திங் ஹைலண்ஸ்' எனும் சுற்றுலாத்தலத்திற்கு பஸ்ஸில் போய்விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தோம். காரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், டாக்ஸி பிடிக்க வேண்டி நான் மட்டும் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தேன். என் மனைவியும், மூன்று பிள்ளைகளும் சாலையைவிட ஒரு அடிக்கு உயர்த்திக் கட்டப்பட்டிருந்த நடை பாதையில், அடைக்கபட்டிருந்த ஒரு கடை ஓரமாக, சாலை விளிம்பிலிருந்து 20 அடி தள்ளி பாதுகாப்பாக நின்று கேலியும், கிண்டலுமாக உரையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று கிரீச்சென்ற சத்தமும் அதை அடுத்து தட முட என்ற சத்தமும் என் பின்னிருந்து கேட்க, நான் சட்டென்று திரும்பினேன். அங்கு நான் பார்த்த காட்சி என் ரத்தமெல்லாம் உறைய வைப்பது போன்ற ஒரு பேய்த்திகிலை ஏற்படுத்தியது. தெருவில் போய்க் கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது தட முடா என்று தாவி ஏறி, என் குடும்பம் நின்று கொண்டிருக்கும் திக்கிற்கு நேராக பாய்ந்து கொணடிருந்தது.

கார் சத்தத்தையும், முக விளக்கின் ஒளி தங்களை நோக்கி வருவதையும் பார்த்த எங்களின் பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டு நின்ற இடத்திலிருந்து தாவி விழுந்தனர். என் மனைவியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் கடைசி மகள் தன் தாயின் கையை பிடித்து இழுத்து தாவ முயலுகையில் இருவரின் கைகளும் நழுவ, என் மனைவி திகிலடித்து நின்ற இடத்திலேயே மரத்து சிலையாக நின்று விட்டார். கட்டுபாட்டை இழந்த கார் நேராக என் மனைவியின் மீது மோத, அவரின் உடல் கடையின் இரும்பு ஷட்டரின் மேல் தூக்கி எறியப்பட்டு, தரையில் சாய்ந்தது. சுதாரித்தக் கொண்ட கார் ஓட்டுனர், காரை ஒரு கணப் பொழுது சட்டென்று நிறுத்தினார். ஆனால் அதன்பின் அந்த இந்தியப் பெண் ஒட்டுனருக்கு மறுபடியும் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, பிரேக்கிலிருந்து காலை நகர்த்தி ஆக்சிலேட்டரை மற்றொருமுறை அழுத்தி விட்டார். இந்த முறை கார் சீறிப்பாய்ந்து தரையில் கிடந்த என் மனைவியின் வலது கணுக்கால் மேல் ஏறி, கடையின் இரும்பு ஷட்டரை சடாலென மோதி நின்றது.

சிறிது நேரத்தில் மலேசிய பல்கலைக்கலக மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி வந்து சேர்ந்தது. நான் என் மனைவியோடு ஆம்புலன்ஸில் ஏறி, அவர் கோமாவில் போய்விடாதபடி சொருகும் கண்களை சொருக விடாமல் கன்னத்தை தட்டியபடி, அவரிடம் உரத்துப் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் பிள்ளைகள் மூவரும், விவரம் அறிந்து 15 நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்திருந்த என் மகனின் நண்பர்களுடன் வேறோரு காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து இமர்ஜென்சி தியேட்டரினுல் விரைந்து எடுத்துச் சென்றனர். நான் வெளியில் கதறி அழுதுகொண்டிருந்த என் பிள்ளைகளைத் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தேன். விவரம் அறிந்து சிறிது நேரத்தில் ஒருவர்பின் ஒருவராக எங்கள் சுற்றமும், நட்பும் மருத்துவமனைக்கு கண்களில் நீர் சொட்ட வந்துசேரத் தொடங்கினர். முதலில் என் மனைவியின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் வந்து சேர்ந்தனர், பிறகு அவரின் மூத்த சகோதரரும் மனைவியும், அதற்கு சிறிது நேரங்கழித்து என் இளய சகோதரன் குடும்பத்தொடு வந்து சேர்ந்தான் (பெரிய வங்கியியொன்றில் சீனியர் வைஸ் பிரசிடண்டாக உள்ளான். ஆனால் அன்று அவன் முகத்தில் நான் கண்ட அலங்கோலத்தை இன்று நினைவு கூர்ந்தாலும் என் கண்களில் நீர் சுரத்து விடுகிறது). அதன்பின் என் மனைவியின் மற்ற மூன்று சகோதரிகள், இரு சகோதரர்கள் அவர்களின் கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், என் பெரியப்பாரின் மகன், பெரியப்பாரின் பேரன்கள் அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், எனது நண்பர்கள், என் மனைவியின் நண்பர்கள், எங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் என்று அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

மனைவியை இமர்ஜன்சி தியேட்டருக்குள் கொண்டு சென்ற சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஒரு சீனியர் அறுவை சிகிச்சை மருத்துவர் - ஒரு சீனர், கதவை சிறிது திறந்தபடி "இந்த பேஷண்டின் கணவர் இருக்கிறாறா ?" என்றார். நான் எழுந்து உள்ளே சென்றேன். என் மனைவியின் மூத்த சகோதரரும், மருத்துவத் துறையில் அனுபவமுள்ள என் மனைவியின் மூத்த சகோதரியும் என்னோடு இமர்ஜன்சியினுள் வந்து மருத்துவர் என்ன சொல்கிறார் என்பதை பார்த்தபடி நின்றனர். சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் மருத்துவர் ஒரு கணம் எச்சில் முழுங்கினார். பிறகு, என் தோளைத் தொட்டு அணைத்தவாறு "உட்காருங்கள்" என்றார். எனக்கு லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது. நான் பக்கத்தில் இருந்த நாற்காலியின் நுணியில் அமர்ந்தேன்.

"உங்கள் மனைவியின் வலது காலில் ஐந்து ஆறு இடஙகளில் எலும்புகள் முறிந்திருக்கின்றன, அவற்றில் மூன்று open comminuted fracture எனப்படும் நொறுங்கிய நிலை முறிவுகள். அத்தோடு, கார் டயர் ஏறியதில் அவர் கீழ்க் காலின் பெரும்பகுதி சதை, நரம்பு, டெண்டன் எல்லாம் மோசமாக பாதிக்க பட்டிருக்கிறது........" என்று கடைசி நான்கைந்து வார்த்தைகளின் போது என் கண்ணைப் பார்க்க முடியாமல், பக்கத்திலிருந்த தூணைப் பார்த்தபடி இழுத்தார்.

எனக்கு தலை சுற்றி, மயக்கம் வருவதுபோல் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு, "ஆதலால்....." என்று மருத்துவர் சொல்ல வந்து, விட்ட வார்த்தையை எடுத்துக் கொடுத்தேன். மருத்துவர் ஆறுதலாக என்னைப் பார்த்து..."ஆதலால், உங்கள் மனைவியின் காலை முழங்காலுக்கு கீழ் வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்னும் அரை மணி நேரத்தில் அவரை ஆபரேஷன் தியட்டருக்கு கொண்டு செல்கிறோம். அங்கு திறந்து பார்க்கும்போதுதான் காயங்களின் உண்மையான நிலைமை தெரியும். எக்ஸ்ரேகளைப் பார்க்கும்போது அவரின் காலைக் காப்பற்றுவதற்கு 30 விழுககாடு வாய்ப்புக்களே இருப்பதாக இப்போதைக்கு எங்களுக்குப் படுகிறது. உங்கள் மனனவியின் காலைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனாலும் உங்கள் மனத்தை கடினமாக்கி, எதற்கும் தயாராக இருங்கள்", என்று கூறி என் தோளை ஆதரவாக தடவி விட்டு சென்றார்.

அருகில் நின்றிருந்த என் மனைவியின் சகோதரியும், சகோதரரும் என்னை ஆதரவாக அனைத்தபடி நின்றனர். எனக்கு உலகமே என்னைச் சுற்றி சுழல்வது போன்ற ஒரு பிரமை. பக்கத்தில் நிற்கும் இருவரையும் அண்ணாந்து பார்த்து, எதோ சொல்ல வாய் எடுத்தேன். "அப்பா!! " என்று குரல் தளும்ப என் மூன்று பிள்ளைகளும் கதவை பிளந்தபடி உள்ளே நுழைந்தனர். அவ்வளவு தான். அதற்கு மேல் அணைபோட்டு தடுத்து வைத்திருந்த அழுகையை அடக்க முடியாமல், இரு கைகளாலும் கண்களை மூடியபடி விக்கி, விக்கி அழத்தொடங்கினேன். என் அழுகையைப் பார்த்த பிள்ளைகள் அவர்களின் அழுகையை அடக்கிக் கொண்டு, அவர்களின் மாமா அத்தை துணையோடு என்னை கைத் தாங்கலாய் தாங்கி இமர்ஜன்சி ரூமிற்கு வெளியே கொண்டு வந்தனர். நான் அழுவதைப் பார்த்த என் பந்துக்கள் அனைவரும் ஏதோ ஒருமித்த சக்தியால் உந்தப் பட்டதுபோல என்னையும் பிள்ளைகளையும் வட்டமாகச் சூழ்ந்து கொண்டு அனைத்து கொண்டனர்.

அன்றுதான் "இந்த பந்தபாசங்களை விட்டு விட்டு, எந்த காரணத்திற்காகவும், மலேசியாவை விட்டு வேறு எந்த நாட்டிலும் குடிபுகுவது இல்லை" என்ற முடிவை நாங்கள் தீர்க்கமாக எடுத்தோம்

(கடைசியாக காலை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இரண்டு மாதங்கள், மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெற்று, மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு அப்புறம் இப்போது ஒரு அளவு தேறி, வீல்சேரின் உதவியோடு நகர்ந்து, என் மனைவி வீட்டில் இருந்து வருகிறார். இன்னும் சிறிது வாரங்களில் நடக்க ஆரம்பித்து விடுவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. அவரை பக்கதிலேயே இருந்து பார்த்து கொள்வதனால்தான் இத்தனை பதிவுகளைக் கொண்ட ஒரு தொடரை என்னால் எழுத முடிந்தது).

************************

வலையுலக நண்பர்களுக்கும் இந்தத் தொடரின் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


மலேசியா ராஜசேகரன்

Tuesday, October 25, 2005

ரோசா..ரோசா..


அமெரிக்காவில் நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த முதல் கறுப்பின பெண்மணி ரோசா பார்க்ஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சிக்காக போராடியவர்கள் என்ற முறையில் எப்போழுதும் மார்ட்டின் லூதர் கிங்கையும், ஆப்ரஹாம் லிங்கனையும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக இவர்கள் பங்களிப்பு என்றால், சமூகரீதியில் தன்னுடைய எதிர்ப்புக் குரலை பதிவு செய்தவர் ரோசா.

இன்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் என்ற இடத்தில் தையல்கடையில் பணிபுரிந்து வந்தார் ரோசா. தன்னுடைய பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஐரோப்பியருக்கு உட்கார இடம் தர மறுத்து, தொடர்ந்து அமர்ந்தே பிரயாணம் செய்து "புரட்சி" செய்தார்.

இன்றைக்கு இதை புரட்சி என்று சொன்னால் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறத்துவேஷம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலகட்டங்களில் அது நிஜமாகவே புரட்சிதான். கறுப்பின மக்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பலவித அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருந்த காலமது. முன்வழியாக ஏறித்தான் இங்கே பஸ்ஸில் டிரைவரிடம் டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே வர வேண்டும். ஆனால் கறுப்பின மக்கள் மட்டும் முன்னே டிக்கெட் வாங்கி விட்டு, கீழே இறங்கி பஸ்ஸின் பின்புற கதவு வழியாக உள்ளெ நுழைய வேண்டுமாம். சில சமயங்களில் பஸ் டிரைவர் அவர்களை ஏற்றிக் கொள்ளாமலேயே பஸ்ஸை எடுத்து விடுவாராம்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தனிப்பட்ட முறையில் ரோசா சந்தித்த கொடுமைகள் அநேகம். பலமுறை பஸ்ஸில் இருந்து அவர் வெளித்தள்ளப்பட்டிருக்கிறாராம். பஸ் டிரைவருடன் பலமுறை வாக்குவாதங்கள். ஆனால் பின்னாளில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமரியில் நடந்த பஸ் புறக்கணிப்பு போராட்டத்திற்கு விதையாக இதுவே அமைந்தது

இணையத்தில் அவரைப் பற்றி விக்கியது இது

கிளிண்டன் அதிபராக இருந்த போது, 1992 ஆம் வருடம் ரோசா அம்மையாருக்கு Congressational Gold Medal of Honor வழங்கப்பட்டது.

இவருடைய வாழ்க்கையை ஹாலிவுட் படமாக எடுத்தது. நிறவேறுபாட்டை எதிர்த்து குரல் கொடுத்த வீராங்கனையின் வாழ்வில், பின் என்ன நிகழ்ந்தது என்று கண்டுகொள்ளாத உலகத்துக்காக, அந்த அம்மையாரின் வாழ்க்கையை நுணுக்கமாக பதிவு செய்ய நினைத்ததன் வெளிப்பாடு என்பதாக சொல்கிறது ( நான் இன்னும் பார்க்கவில்லை)

அது சரி..?? பெயர்க்காரணம் இதுதானா..?? :-)

Sunday, October 23, 2005

கிழட்டு அனுபவங்கள்(8) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு


1) பள்ளியில் கண்ட பல இன ஒற்றுமை

1959 , ஜனவரி மாதம். ஒரு திங்கட்கிழமை. அன்றுதான் பள்ளி ஆண்டின் முதல் நாள். என் தந்தை முன்பே பதிந்து வைத்திருந்த பாலர் வகுப்பில் என்னன சேர்த்துவிட்டு, பிற பெற்றோர்களோடு வகுப்பிற்கு பின்புறமாக வெளியே நின்று கொண்டிருந்தார். நான் மருள மருள விழித்துக் கொண்டும், தந்தை வெளியில் தொடர்ந்து நிற்கின்றாரா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்தபடி, வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தேன் " கரும்பலகையில் எழுதியிருப்பதைப் போல நீங்களும் 'A' எழுதுங்கள் பார்க்கலாம்" என்று ஆசிரியர் சொல்ல, எல்லாக் குழந்தைகளும் அவரவர் சிலேட்டு பலகைகளில் 'A' எழுத ஆரம்பித்தோம். நான் பழக்க ஊந்தலால், என் தந்தை நின்று கொண்டிருந்த இலக்குவை சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அங்கு தந்தையைக் காணோம்! உடனே என் பிஞ்சு மனதை பீதி ஆட்கொள்ள இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்தேன். திரும்பி நின்று சுற்று முற்றும் பார்த்தால், தந்தையை எங்கேயும் காணவில்லை. ஆசிரியர், வகுப்பின் பின்புறம் ஒரு மாணவனின் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது. அழுகையையும் அடக்க முடியாமல், அதே நேரத்தில் பிற சிரார்கள் முன் உரத்து அழ தன்மானமும் இடங்கொடுக்காத நிலையில் கண்களில் லேசாக நீர் சுரக்க, உதடுகள் விதும்ப என் இருக்கையில் மெதுவாக அமர்ந்தேன். அப்போது பின்னிருந்து ஒரு சிறு கரம் என் தோளைத் தொட்டு இறுக்கியது. 'அழாதே' என்று ஆதரவாக ஆங்கிலத்தில் ஒரு குரல் சொல்ல, திரும்பிப் பார்த்தேன், ஒரு சீனச் சிறுவன். அவன் பெயர் 'ஒங் ச்சௌ ப்பெங்'. பள்ளி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் நண்பன். முதுநிலைப் பள்ளி முடியும் வரை பனிரெண்டு வருடங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்தோம். சட்டையெல்லாம் கிழிந்து போகும் அளவிற்கு நான்காம் வகுப்பில் புழுதியில் புரண்டு சண்டையும் போட்டிருக்கிறோம், எழாம் வகுப்பில் சக நண்பன் ஒருவன் லாரி மோதி இறந்தபோது கட்டிப் பிடித்து கொண்டு ஓவென்று அழுதும் இருக்கிறோம். மீசை முளைத்த பருவத்தில், சைக்கிளில் ஊரைச் சுற்றி என்னோடு சேர்ந்து அவனும் இந்தியப் பெண்களை சைட் அடித்திருக்கிறான். அவனோடு சேர்ந்து நானும் சீனப் பெண்களை சைட் அடித்திருக்கிறேன்.

இன்றும், என்னுடைய எத்தனையோ பிற இன நண்பர்களுல் அவனும் ஒருவன். நான் படித்து வளர்ந்த ஊரில் இப்போது ஒரு பெரிய மரக்கரி வியாபாரியாக (charcoal trader) உள்ளான். வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்கிறான். இன்றும் உறவினரைப் பார்க்க அந்த ஊருக்கு போகும்போதெல்லாம் அவனோடு உட்கார்ந்து இரண்டு பீர்களாவது அருந்தி, ஒருமணி நேரமாவது அரட்டை அடித்து விட்டு வந்தால்தான் என் மனதில் ஊருக்கு போய் வந்த நிறைவு ஏற்ப்படும்.

இது 1959 ல் ஆரம்பித்த கதை. எந்த நாட்டிலும், ஊரிலும் ஏற்படுவது போல ஏற்பட்ட ஒரு இயல்பான பள்ளி நட்பு. ஆனால் இந்த மாதிரி கதைகளையெல்லாம் இப்போது நீங்கள் மலேசியாவில் கேள்விப்பட முடியாது. 1970 ல் நானும் \'ஒங் ச்சௌ ப்பெங்\' கும் பள்ளிப் படிப்பை முடித்து, வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் இந் நாட்டு வரலாற்றின் மிகப் பெரிய இனக் கலவரம் நடந்தது. அந்த இனக் கலவரத்தோடு முடிந்தன என் சிறு வயதில் நான் பார்த்த, அநுபவித்த அழகான ஆழமான அந்த பல இன நட்பும், ஒற்றுமையும்.

2. இன ஒற்றுமை, இன அனுசரிப்பானது 1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் இடையில் தொடங்கிய இனக் கலவரத்தில் இரு தரப்பிலும் சுமார் 3,000 பேர் மாண்டனர். அந்த கலவரத்தின் சூடு தணியுமுன்பே நான் ஏற்கனவே கூறிய NEW ECONOMIC POLICY யும் அமல்படுத்தப் பட்டது. அத்தோடு நாடே தலைகீழாக மாறியது. இப்போது இங்கு இனங்களுக்கு இடையே காணப்படுவதெல்லாம் வெறும் அனுசரிப்புத் தன்மை மட்டும்தான். இதை இன ஒற்றுமை என்று கூற முடியாது. ஓரளவுக்கு எல்லா இனத்தவருக்கும் ஏதோ ஒரு வழியில் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டிருக்கிற படியால் யாரும் வேறு எந்த இனத்தவரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்து கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டு போகிறார்கள்.

ஆனால் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக எந்த ஒரு இனப் பிள்ளைகளும் பிற இன பிள்ளைகளோடு சேர்வதுமில்லை, எங்கள் காலத்தை போல் நெருங்கி பலகுவதுமில்லை. உள்ளூர ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த இனத்தின் மீது ஒரு சிறு வெறுப்பு, ஒரு தாழ்ப்புணர்ச்சி என்ற நிலமை உறுவாகி விட்டது. இது அரசாங்கத்திற்கும் நன்கு தெரிகிறது. இந் நிலையை சரி செய்ய அவர்களும் அவர்களால் ஆன என்னென்னவோ செய்து கொண்டுதான் வருகின்றனர். ஆனால் அவர்களின் எந்த முயற்ச்சியும் இதுவரை பயன் அளிக்கவில்லை.


3). ரோஷம் கெட்ட பிழைப்பு

மலேசிய நாட்டில் இலைமறை காயாக இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்தாலும், கடந்த 36 வருடங்களாக பெரிய இனப் பிளவு எதுவும் அப்பட்டமாக ஏற்படாமல் இந்த நாடு தப்பித்தற்கு, இதுவரை மலேசியா அடைந்து வந்துள்ள பொருளாதார வளப்பம்தான் முழுக் காரணம். ஏதாவது ஒரு கால கட்டத்தில் இந்த பொருளாதார வளப்பத்திற்கு பங்கம் ஏற்பட்டால், அன்று இங்குள்ள இனங்களுக்கு இடையே பிரச்சனைகள் எழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, மலேசியாவின் தற்போதைய 3 விழுக்காடு வேலையில்லா குறியீடு, 6 விழுக்காடு அனாலேயே பிரச்சனைகள் தொடங்கிவிடும் என்பது என் கணிப்பு. காரணம் 35 வருடங்களாக தங்களுக்கு கிடைத்து வந்துள்ள 'முதற் சலுகைகளை' மலாய் இனத்தவர்கள் அவர்களின் பிறப்புரிமையாக கருத ஆரம்பித்து விட்டதுதான். தங்க தாம்பாளத்தில் வைத்து அவர்களுக்கு ஊட்டி, ஊட்டி கெடுத்துவிட்டு, இனிமேல் போய் "நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை ஆதலால் உங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கி வரப் படும் சலுகைகளை நாங்கள் நிறுத்த வேண்டியுள்ளது", என்று கூற இங்கு எந்த அமைச்சருக்கும் துணிவு வராது. மற்ற இனத்தவருக்கு சாப்பிட அரிசி இருக்கோ இல்லையோ, மலாய் இனத்தவரின் நலத்தை அமைச்சரவை காபந்து பண்ணியே ஆகவேண்டும். இல்லையென்றால் அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போய்விடும்.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால், மலேசியாவில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் எந்த அரசியல் பலமும் கிடையாது. "ஏதோ மலாய்காரர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழ்வதற்கு தயாரானவர்கள் தொடர்ந்து இந் நாட்டில் வசிக்கலாம். அதற்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் அவரவருக்கு உசிதமான வேறு எந்த நாட்டிலாவது குடியேறிக்கொள்வது நல்லது", என்று பார்லிமெண்டு மெம்பரிலிருந்து தெருக் கூட்டும் மலாய்காரர் வரை எங்களைப் பார்த்து அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் ரோஷம் கெட்டு அவர்கள் சொல்வதை கேட்டும் கேட்காததுபோல் எங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுதான் வருகிறோம். இதுதான் இங்குள்ள மலாய்காரர் அல்லாத 80 லட்சம் இந்திய / சீன வம்சாவளியினருடைய உண்மையான நிலைமை.

ஆனால் உலகம் முழுவதும் குடும்ப, கலாச்சார தொடர்புகளை உடைய சீன வம்சாவளியினருக்கு இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. மேலும் எந்த நாட்டில் குடிபுகுந்தாலும் சிறப்பாக வேலை செய்தோ, தொழில் புரிந்தோ வாழ்க்கையை நலமுடன் வாழ்வதற்கான நடைமுறை அநுபவங்களும், திறமைகளும் சீனர்களிடம் நிறையவே உள்ளன. இப்போதும் வருடா வருடம் பல பத்தாயிரம் மலேசிய சீனர்கள், குறிப்பாக வெளிநாடுகளுக்கு படிக்க போகும் இளைஞர்கள், மலேசியாவிலிருந்து பிற நாடுகளில் சரமாரியாக குடி பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இந்தியாவில் கூட குடும்ப தொடர்புகள் இல்லாத, படிப்பு அறிவு குறைந்த இங்குள்ள பதினைந்து லட்சம் தமிழர்களின் நிலை ??

4). செட்டியாரிடம் படித்த பாடம்

தமிழ்நாட்டிலிருந்து , பத்தொன்பதாம் நுற்றாண்டிலேயே இந்த நாட்டிற்கு வணிகர்களாக வந்து சீனர்களையும் மிஞ்சி அபாரமாக பணம் சம்பாதித்த இனம் 'நாட்டுக் கோட்டை செட்டியார்கள்' இனம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் 1969 இனக் கலவரத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக இந்த நாட்டின் தொடர்பை முழுமையாக அறுத்துக் கொண்டு இந்தியா திரும்பி விட்டனர். இப்போது செட்டியார்கள் இனத்தில் மிஞ்சி போனால் மலேசியா முழுவதும் ஒரு 800 பேர் தான் இருப்பார்கள். இப்படி மலேசிய தொடர்புகளை முழுமையாக அறுத்துக் கொண்டு சில நாட்களில் தாயகம் திரும்ப இருந்த ஒரு முதிய செட்டியாரிடம் எனக்கு 20 வயது இருக்கும்போது நானும் என் உறவினர் ஒருவரும் "ஏன் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இந்தியா திரும்புகிறீர்கள்?", என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அன்று எனக்கு சரிவர புரியவில்லை. ஆனால் 32 வருடங்கள் கழித்து இன்று நினைத்துப் பார்க்கையில் அது ஏதோ அசரீரி சொன்ன தேவ வாக்குப் போல் தோன்றுகிறது.

"தம்பீ, முதலெ நாம எதுக்கு நாடு விட்டு நாடு வந்தொம் என்கிற மூல காரணத்தை மனதிலெ ஏத்திக்கனும். 100 வருஷங்களுக்கு முன்னாலெ எங்க தாத்தா இந்த நாட்டுக்கு வந்தப்ப இங்க பணம் சம்பாதிக்க நெறைய வாய்ப்பு இருந்திச்சு. மலாய்காரங்கலெல்லாம் நல்ல மனுஷங்களா இருந்தாங்க. நாமளும் நெரைய சம்பாதித்தோம். ஆனா இப்ப எல்லாமே மாறிப் போச்சு. இனிமே இந்த நாட்டை நம்பி, நாம பொலப்பு நடத்தவும் முடியாது, குடும்பங்குட்டியோட இங்க வாழவும் முடியாது. இவனுங்க இப்பச் சொல்றானுங்களே 20 வருஷத்துக்கு மட்டும் எங்களுக்கு 'முதற்சலுகை' கொடுத்தா போதும், அதுக்கு அப்புறம் அது எங்களுக்கு வேண்டாம்ன்னு. அதை நீ நம்புறே ? அதெல்லாம் புருடா. நடக்காதுப்பா. இவனுங்க இனிமெ ஜன்மத்துக்கும் இவனுங்களோட சலுகைய விட்டுக் கொடுக்க மாட்டானுங்க. இஙக உள்ள தமிழங்களுக்கெல்லாம் இந்தியாவை சுத்தமா மறந்துட்டு இந்த நாட்டிலேயே செட்டில் ஆகனுன்னு நெனைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பத் தெரியாது. ஒரு இருவது முப்பது வருசம் போனதுக்கு அப்புறம்தான் தோணும், அடடா தப்பு பண்ணிட்டமேன்னு.

இந்தியாவுக்கு என்னப்பா கொறச்ச? நூறு வருஷத்துக்கு முன்னாலெயே நாம மலாயா, சிங்கப்பூர், பர்மான்னு இத்தனை நாடுகளுக்கும் கொண்டிவிக்க வந்து பணம் சம்பாதிச்சம்ன்னா, அதுக்கான கெட்டிகாரத்தனத்தையும், பக்குவத்தையும், வித்தையையும் எங்கேருந்து கத்துகிட்டோம் ? இந்தியாவில இருந்துதானே.

நமக்கு தான் தொழில் செய்யிறது எப்படின்னு தெரியுமே! நம்ம ஊருக்குபோய் எதாவது தொழில் ஆரம்பிச்சா முதல்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். அப்புறம் எல்லாம் சரியா வந்திரும். சொல்லப் போனா பணம் இருந்தால் இந்தியா மாதிரி சொகுசான எடம் எங்கேயும் கெடைக்காதுப்பா.

தம்பீ....நீ உன்னெ மட்டும் வச்சு பார்த்தேன்னா அஞ்சு, பத்து வருஷ காலம்லாம் ரொம்ப நாளாட்டம் தெரியும். ஆனா பாரம்பரியம், குடும்பம், குட்டின்னு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்னா அப்புறம் இந்த நாட்டுல இருக்கிறதா, இந்தியா திரும்புறதான்னு நீ போடுற கணக்கு முப்பது வருஷத்திலே இருந்து அம்பது வருஷ கணக்கா இருக்கணும். ஒன்னுடைய பேரன் பேத்தி வரைக்கும் கணக்குப் போட்டு பாக்கனும். நீ மட்டும் நல்லா வாழ்ந்துட்டு, ஒன் புள்ளை, பேரன்கல்லாம் அவனுஙக் காலத்திலே இந்த நாட்டுல உருப்படாமப் போயிட்டான்கள்னா, நீ வாழ்ந்த வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போயிரும்" என்று சொல்லி முடித்தார்.

Tuesday, October 18, 2005

சுந்தர ராமசாமி பற்றிய என் பாமர எண்ணங்கள்

பசுவய்யா கவிதைகள் என்ற புத்தகத்தைத் தவிர இன்றுவரை மறைதிரு சுந்தர ராமசாமியின் வேறெந்த படைப்புகளையும் புத்தக வடிவத்தில் படித்ததில்லை- இணையத்தில் வந்த அவருடைய கட்டுரைகளைத் தவிர. வழக்கம்போல சுஜாதாதான் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற நாவலை தன்னுடைய கட்டுரைகள் ஒன்றில் அறிமுகம் செய்திருந்தார். காமதேனு மூலம் நான் வாங்கி இருந்த சுராவின் புத்தகங்கள் இந்தியாவில் என் சகோதரியின் வசம் இருக்கிறது. இனிதான் படிக்க வேண்டும்.

கலை கலைக்காகவே என்று ஒரு குழுவும் கலை மக்களுக்காகவே என்று ஒரு குழுவும் பிரிந்து நின்ற தமிழிலக்கியத்தில், சுரா கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்று நினைக்கிறேன். " எல்லாரும் கூலிக்காரன் , பூட்ஸ் துடைக்கிறவன், வண்டித் தொழிலாளி மாதிரி ஆட்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே ஒழிய இலை போட்டு சாப்பிடுகிறவனை பற்றி யாரும் எழுதக் காணோம்" என்று அவர் சொன்னதாக பாஸ்டன் பாலாஜியின் வலைப்பூவிலிருந்து எப்போதோ படித்த ஞாபகம் இருக்கிறது. இந்த ஒரு வாக்கியம் அவரைப் பற்றி பல விஷயங்களை சொல்லாமல் சொன்னது.

அவரைப் பற்றி இன்னமும் அதிகம் தெரிய அவருடைய எல்லாப் படைப்புகளின் ஆழமான வாசிப்பும், கலந்துரையாடலும் உதவியிருக்கலாம். ஆனால் ஒருவரைப் பற்றி பொதுவெளியில் உருவாகின்ற பிம்பம் முற்றும் பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை. " ஒருத்தனைப் பத்தி இருபது பேர் பிராப்ளம்னு சொன்னா, பிரச்சினை இருபது பேர்கிட்ட இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் கம்மி" என்று என் நண்பன் சொல்வான்.

சுராவின் பிம்பம் அவரை ஒரு கிண்டல்கார, இலக்கிய அரசியல் செய்கிற, காலச்சுவடு என்கிற நிறுவனத்துக்காக சமரசங்கள் செய்கிற ஒரு சராசரி மனிதனாகத்தான் என்னைப் போன்ற பாமரர்களின் மனதில் உருவாகி இருக்கிறது. அவருடைய இலக்கிய ஆளுமை என்னவிதமாக இருந்தாலும்,
இன்டெலக்சுவல் என்ற ரீதியில் அறியப்பட்டாலும் அந்த காரணிகள் எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமல்ல. சொல்லப்போனால் வேறு பல வேறுபாடுகள் இருந்தாலும், ஜெயகாந்தனின் எழுத்துகள், அவற்றின் சமூகரீதியான பரிவான அணுகுமுறைக்காக எனக்குப் பிடிக்கும். ஒரு அறிவுஜீவி என்று சொல்லப்படுபவருக்கு சமூகத்தை பற்றிய கருணைப் பார்வை இல்லை என்றால் அதில் என்ன பிரயோசனம் என்று எனக்குத் தெரியவில்லை .

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு என் அஞ்சலிகளும் அவரின் குடும்பத்தாருக்கு
என் அனுதாபங்களும்.

Monday, October 17, 2005

End of Affair

நேற்று End of affair என்ற என்ற படம் ஒன்று பார்த்தேன். ஆழமான படம். அமைதியான படம். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவே....ஏ முடியாத படம்.
இரண்டாம் உலகப் போர். குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும் பின்னணியில்
ஒரு எழுத்தாளன் திருமணமான மாதுவிடம் காதல் கொள்கிறான். இன்பமாக போய்க் கொண்டிருக்கும் வாழ்வில், திடீரென்று அவள் அவனை விட்டு விலகுகிறாள். காரணங்கள் சொல்லாத இந்த திடீர் விலகல் எழுத்தாளனை மிகவும் பாதிக்கிறது. ஏற்கனவே கணவன் போர் அடித்தததால், தன்னிடம் வந்த அவளுக்கு தானும் போர் அடித்து விட்டேன் போலும் என்று தானாகவே எண்ணிக் குமைந்து கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறான்.



கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் அவளை சந்திக்கிறான். அவள் பேச முனைந்தும், வெறுப்பில் அவளுக்கு முகங்கொடுக்காமல் இருக்கிறான். கணவனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, " வேறு யாருடனோ அவள் சுற்றிக் கொண்டு இருப்பதாக" நினைத்து கணவன் ச்ந்தேகப்படுவதை சொல்ல, இதுதான் சாக்கு என்று கணவன் சார்பில் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் அமர்த்தி, அவளை வேவு பார்க்க தலைப்படுகிறான்.

விசாரணை முடிவு அவனுடைய மனத்தினை உலுக்க, அவனுடைய மனம் கடவுளின் பக்கம் திரும்புகிறது.

விருமாண்டியில் கமல் பிழிந்த ஜிலேபியை ஹாலிவுட்டில் பல பேர் பல படங்களில் பிழி பிழி என்று பிழிந்து தள்ளி இருக்கிறார்கள். வித்தியாசமான படைப்பாக்கம் என்ற வகையிலும், நல்ல ட்ரீட்மெண்ட் என்ற வகையிலும் கதை/படம் ரொம்ப பிடித்திருந்தது.

படைப்புகளில் வரும் இம் மாதிரியான திருமணத்தை தாண்டிய உறவுகளில்
தாண்டுபவர் ஆணாயிருந்தால் ஒரு மாதிரியும், பென்ணாயிருந்தால் வேறு மாதிரியும் படைக்கப்படுகிறது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட், தெலிவுட் என்று எதுவுமே இதற்கு விதிவிலக்கில்லாமல் இருக்கிறது.
தவறு செய்யும் ஆண் ஜாலி பேர்வழியாகவும், குறிப்பிட்ட பெண் என்றல்லாது எவர் வந்தாலும் ஜொள் வடிய நிற்பவராகவும், அந்த மூன்றாவது பெண்ணின் குணம் அல்லாது, இளமைக்கும் கவர்ச்சிக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வேலி தாண்டுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார். மிகச் சில படங்களில் சொந்தவாழ்க்கை(த்துணை) சரியாக அமையாதவர்கள் வேலி தாண்டுவதைக் கூட மிக குற்றவுணர்வோடு செய்வதாகவும், அதனால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து வாழ்க்கையில் அடி பட்டுப் போவதாகவும் தான் சித்தரிக்கப் படுகிறார்கள்.
ஆனால் திருமன உறவுதாண்டும் பெண்கள் பற்றிய படங்கள் எல்லாம் அதற்கான வலுவான காரணங்களோடும், ஏதோ அதை விட்டால் வேறு வழியே இல்லாததால் தான் அப் பெண் இப்படி முடிவெடுக்க நேர்ந்தது என்றும் வலுவாக நிறுவப்பட்டிருக்கிரது சுருங்கச் சொன்னால், படைப்புகளை பொறுத்த வரையில் வரைவு தாண்டிய உறவுக்கு ஆணுக்கு அளிக்கப்படும் கரிசனத்தை விட பெண் பாத்திரங்களுக்கு அதிகமாக அளிக்கப்படுகிறது.

என் வீட்டம்மாவிடம் இது பற்றி கேள்வியபோது, " ஜொள்ளு விடும் ஆண்களின் விகிதாசாரத்தை ஒப்பிடும்போது, பெண்கள் எண்ணிக்கை இப்போது குறைவாக இருக்கிறது. அதனால்தான் எங்காவது தென்படும் இந்த மாதிரியான விவகாரங்களில் கூட அவளுக்கு இதற்கான சரியான காரணம் உண்மையாகவே இருக்கிறது. படைப்புகளில் இவ்வாறு வலிந்து காட்டப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது சரியல்ல. அந்தக் காலத்திலிருந்தே ராஜாக்களுக்கு நூற்றுக்கணக்கில் ராணிகள் இருக்கிரார்கள் என்று சொல்லப்படுகிரதே தவிர எங்காவது ஒரு ராணிக்கு அந்தப்புரம் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறோமா. எனவே இதுதான் norm என்று ஆண்கள் சரமாரியாக ஜொள் விடுகிறார்கள். விதிவிலக்காக எங்கோ எப்போதோ வரைவு தாண்டும் பெண்களுக்கும் காரணங்கள் வலுவாக இருக்கிறது" என்றாள்.

எனக்கென்னமோ, ஆண்கள் தங்களின் ஒழுக்க விதிகளைப் பற்றி கவலைப்படுவதை விட, தங்களின் ஒழுக்கம் மீதான நம்பிக்கையை விட தங்கள் தாய், சகோதரி, மனைவி என்று நம் வாழ்க்கையில் இருக்கும் பெண்களின் ஒழுக்கம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அதற்காகத்தான் கதைகளில்/ படங்களில் கூட நமக்கு சகஜமாக/ காரணமே இல்லாமல் வெறும் உடல் ரீதியாக வரும் இச்சைகள் இல்லாம் அவர்களுக்கு வராது என்று நம்ப விரும்புகிறோம். ஆம் ..விரும்புகிறோம். அதனால்தான் குஷ்பு மாதிரி பெண்கள் பேசும்போது நம்முடைய நம்பிக்கைகள் தகர்கிறதே என்ரு பயமாக இருக்கிறது.

வெறும் உரத்த பேச்சால் வரும் மட்டும் பயமல்ல அது.

Sunday, October 16, 2005

கிழட்டு அனுபவங்கள் (7) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

பணிபுரிவதற்கு என்று வந்த நாட்டிலேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விடுவதா? அல்லது ஒரு காலகட்டத்தில் பிறந்த நாடான இந்தியாவிற்கு திரும்புவதா? என்ற இயல்பாக, ஒவ்வொரு NRI க்கும் அவ்வப்போது மனதில் ஏற்படும் எண்ணத் தாக்கங்களை பிரதிபலித்து, அவற்றை ஆய்வு செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டதுதான் 'கிழட்டு அநுபவங்கள்' தொடர். இது வெளிநாடு சென்ற இருபது ஆண்டுகளில், தமிழை மறந்து, பாதி வெள்ளையராக மாறிவிட்ட ஒருவர் எழுதினால் எடுபட மாட்டாது. அவரால் இப்படியெல்லாம் எழுதவும் முடியாது.

நான்கு தலைமுறைகளாக பதினெட்டு லட்சம் இந்திய வம்சாவளியினருடன், மலேசியா போன்ற ஒரு நாட்டில் குடிபுகுந்து, ஆண்டு, அநுபவித்து, கேடிகளையும் கோடிகளையும் பார்த்து, அதலபாதாளத்திலும் விழுந்து, புரண்டு, எழுந்து, அரசியல், தொழில், நிறுவனம், வரவு, செலவு, பட்டம், படிப்பு, பிறப்பு, இறப்பு, குடும்பம், பிள்ளை, குட்டி, வீடு, வசதி, வாகனம், நிலம், பலம், பணம், கோர்ட்டு, கேஸு என்று வெளி நாட்டில் வசித்து வந்தாலும், வாழ்கையின் சகல பரிமாணங்களையும் அநுபவ பூர்வமாக அறிந்த, உணர்ந்த, ஒரு சிந்திக்கக் கூடிய, அதே நேரத்தில் தமிழ் தெரிந்த ஒரு இந்தியனால் மட்டும்தான் இப்படி ஒரு தொடரை எழுத முடியும். அதிலும் அவர் என்னைப் போல் இன்னமும் இந்தியாவுடன் ஆழமான குடும்ப, பாரம்பரிய தொடர்புகளைப் பேணிக் காத்து வருவராக இருந்தால் மட்டுமே அவரின் எழுத்து, தமிழ் அறிவு கொண்ட பிற NRI களுக்கு பொருத்தமானதாக அமையும்.

சுருங்கச் சொன்னால் தமிழ் வாசகர்களாகிய உங்களைப் பொறுத்தவரை என்னைப் போன்று பல தலைமுறைகளுக்கு முன்பே பிற நாடுகளில் குடியேறி, தங்கள் சுய அநுபவங்களை வைத்து வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஆராய்ந்து தமிழில் அநுபவ பூர்வமாக எழுதக் கூடிய ஒருவர் ஒரு அபூர்வ ஜந்து . எப்போதாவது எங்காவது ஒருவர்தான் தென்படுவார். இதை நான் என் தற்பெருமைக்காக இங்கு சொல்லவில்லை. தமிழ் வாசகர்களான உங்களுக்கும் சில கடமைகள் உள்ளன என்பதை உங்களுக்கு நினைவுகூரத்தான் சொல்கிறேன். புதிதாக இணைய ஊடகப் பதிவுகளை எழுதும் எனனைப் போன்றோரை சில நேரங்களில் காப்பதும், ஊக்குவிப்பதும் வாசகர்களாகிய உங்களின் கடமைகளின் ஒன்று. \'இது என்ன லாஜிக்\' என்கிறீர்களா ? இது பழைய லாஜிக்.... யோசித்து பாருங்கள்...நான் சொல்வதன் ஆழம் புரியும். (என் எழுதுக்களை சமீபத்தில் காத்து கருத்துரைத்து எழுதிய நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்).

ஏற்கனவே என் தொடரில் கூறியுள்ளதைப் போல் "நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அறிந்தால்தான் எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது வாசகருக்குப் புரியும்". என் தொடரில் இதுவரை நான் கூறி வந்தது எல்லாம் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் சுட்டி காட்டத் தான். எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது இத் தொடரின் கடைசிப் பகுதியில் (பதிவு 9) வெளிநாட்டில் வசிக்கும் தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும், குடும்பத் தலைவன் என்ற முறையிலும், தகப்பன் என்ற முறையிலும் நான் அன்றாடம் எதிர்கொள்ளும் 'டிலைமாக்களுக்கு' எழுத்து வடிவம் கொடுக்கும்போது வெளிப்படும்.

இதற்கு முன்பு நான் எழுதிய 6 பதிவுகளும் மேற்கூறிய குறிக்கோளுக்கு நேரடி ஏற்ப்புடையனவாக அமைந்தன. ஆனால் இந்த 7 ஆவது பதிவு, சில வாசகர்கள் சீன மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று காட்டிய ஆர்வத்திற்கு இணங்க வெறும் செய்தியாக இங்கு சேர்க்கப் பட்டுள்ளது. ஆதலால் இவற்றை வெறும் துணுக்கு செய்திகளாகக் கருதி, ஆனந்த விகடன் பாணியில். ஒன்று, இர்ண்டு, மூன்று...என்று துணுக்கு, துணுக்காக வழங்கியிருக்கிறேன்.

1. சீனர்கள் தங்கள் நாடுதான் சகல உலகத்திற்கும் மையமானதென்றும் (middle kingdom), தங்கள் கலாச்சாரத்தை மிஞ்சிய கலாச்சாரம் என்று ஒன்று இல்லை என்றும் பல நூறு ஆண்டுகளாக ஆழமானதொரு நினைப்பிலிருந்து வந்துள்ளனர். ஆதலால் சீனர் அல்லாத பிற இனத்தவர் யாவரையும் 'காட்டுமிராண்டிகள்' என்றுதான் சமீப காலம்வரை அவர்கள் கூறியும், கருதியும் வந்துள்ளார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே தம்மைப் பற்றி ஒரு உயர்வான கருத்து எப்போதும் இருந்து வந்துள்ளது.

இதனால்தானோ என்னவோ நடைமுறையில் மற்றொரு சீனரோடு பழகும்போது அவர்கள் காண்பிக்கும் மரியாதை, நேர்மை, தன்மை யாவும் சீனர் அல்லாதவர்களோடு பழகும்போது குறைந்து காணப் படுகிறது. இந்த இயல்பை இன்றும் மலேசிய சீனர்களிடமும் பார்க்கலாம், சிங்கப்பூர் சீனர்களிடமும் பார்க்கலாம், சீனாவில் உள்ள சீனர்களிடமும் பார்க்கலாம். இதனால் பொதுவாக சீன இனத்தவருக்கு பிற நாடுகளில் வரவேற்பு என்பது என்றுமே சற்றுக் குறைவுதான்.



2. சீன இனத்தவரின் ஆன்மாவிற்கு 'தங்கள் குடும்பம்' என்பததுதான் மையக் கரு. குடும்பத்திற்கு அப்புறம்தான் சகலமும். அவர்களில் குடும்பம் என்பது தாய், தகப்பன், மனைவி, மக்கள் மட்டும் அல்ல. மூதாதையர்கள், சிற்றப்பார், பெரியப்பார், அத்தை, மாமன், மச்சான், பஙகாளியிலிருந்து, சீனாவில் அவர்களின் கிராமத்தைச் சார்ந்த மக்களில் இருந்து, அவர்களைப் போன்ற முதற் பெயர் கொண்ட அனைவரும், வெவ்வேறு முக்கியத்துவம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களே. குடும்ப உறுப்பினர்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். செய்ய வேண்டியதை ஒரு கடமையாகவே நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாக ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதனால், ஒரு சீனர் மற்ற யாருடனும் எப்படி நடந்து கொண்டாரேயானாலும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் மிகவும் முறையோடு சொன்னது சொன்னபடி நடந்து கொள்வார்.

இதை இப்படிச் சொல்லிவிட்டு போனால், மேற்குறிப்பிட்ட இரு தன்மைகளின் தாக்கமும் வாசகர்களுக்கு சரிவர புரியாது. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள் இந்தோனீசியாவிலோ, பிலிப்பீன்சிலோ வசித்து அங்கு ஒரு பிசினஸ் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பணத்தேவையினால் அங்குள்ள ஒரு வங்கியை அணுகி கடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி சீனர்களுடைய வங்கியாக இருந்தால், நீங்கள் வங்கியிடம் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் பேப்பரின் நகல் அன்று இரவே உங்களின் சீன காம்பட்டிட்டரின் கையில் போய் சேர்ந்துவிடும். "அது எப்படி? எத்திக்ஸ் என்று ஒன்று இல்லையா?" என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. சீனருக்கும் சீனருக்கும் இடையில் இருக்கிறது. நீங்கள்தான் 'காட்டுமிராண்டி' கேட்டகரியைச் சேர்ந்தவராயிற்றே, உங்களிடம் என்ன எத்திக்ஸ் வேண்டி இருக்கு ? :)-.

3. சீன கலாச்சாரத்தில் 'FACE' என்பது மிக மிக முக்கியமானதொரு அம்சம். (இதை நுணுக்கமாக ஒட்டிய கருத்தோ வார்த்தையோ தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ இருக்கின்றனவா என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'. இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று. இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.

இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் பல விதமாக வெளிப்படும். உதாரணத்திற்கு பிறர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக கூறுவது, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிப்பது, தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் LOSING OF FACE ஆக கிரகிக்கபடும்.

அதேபோல் ஒரு சீன ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு தவறான வியாபார முடிவை எடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஸ்தாபனத்தில் உள்ள எல்லோருக்கும் அவர் எடுத்த முடிவு தவறானது என்று நன்றாக தெரிந்த பட்ச்சத்திலும், அதை வெளிப் படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். பண நஷ்டம் ஏற்பட்டாலும் பாதகமில்லை என்று அதன் தலைவர் FACE LOSE பன்னாமல் தற்காத்து அவருக்கு முட்டுக் கொடுப்பார்கள்.

இந்தியர்களை சீனர்கள் தாழ்வாக கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம். "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு கூறு. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிடும் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். ஆனால் சீனர்களின் பார்வையில் இது ஒரு அநாகரீகமான சமுதாய அனுகுமுறை.

4. பெரும்பாலான சீனர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களைப் போல் MORAL JUDGEMENT எல்லாம் செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கவர்மண்டு ஆபீஸுக்கு ஒரு வேளை விசயமாக ஒரு சீனர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். சட்டப்படி 1.00 மணிக்கு சாப்பாட்டு பிரேக் எடுக்க வேண்டிய குமாஸ்தா 12.30 க்கே நாற்காலியை காலி செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இனத்தவராக இருந்தால் என்ன நடக்கும் ? "சூப்பர்வைசரைக் கூப்பிடு. 12.30க்கே சாப்பாட்டு பிரேக்கா? " என்று சட்டம் பேசுவார்கள். ஆனால் ஒரு சராசரி சீனர் என்ன செய்வார் தெரியுமா? ஒன்று அங்கிருந்து போய்விட்டு மற்றொரு நாள் வருவார். அல்லது, கிளம்பி கொண்டிருக்கும் குமாஸ்தாவை தனியாக கூப்பிட்டு, அவர் நார்மலாக வாங்கும் லஞ்சத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து வேலையை முடித்துக் கொண்டு போய்விடுவார்.

சுருக்கமாகச் சொன்னால், எங்கு எப்படிப் பட்ட சூழ்நிலை இருந்தாலும் "இங்கு இதுதான் இயல்பு போலும்" என்று ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வதும் சீனர்களின் பாரம்பரிய இயல்புகளில் ஒன்று.

5. சீனர்களும் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புபவர்கள். நாம் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுபோல் அவர்களும் fengshui என்று அழைக்கப் படும் சீன வாஸ்துக்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்வார்கள்.



6. சீனர்கள் பயங்கரமான சூதாடிகளும் கூட. அவர்களின் கலாச்சாரத்தில் சூதாட்டம் என்பது மிக மிக இயல்பான ஒன்று. அவர்களின் மிகப் பெரிய திருவிழாவான புதுவருடப் பிறப்பின்போது பார்த்தால் காலையிலேயே குடும்பத்தோடு சுற்றி உட்கார்ந்து கொண்டு தாய், தகப்பன், பிள்ளைகள், சிற்றப்பார், பெரியப்பார், தாத்தா, பாட்டி யாவரும் பணம் கட்டி சீட்டுப் ஆடும் காட்சியை இன்றும் மலேசியா இந்தோனீசியா போன்ற நாடுகளில் காணலாம்.



7. நம்மைப் போல் சீனர்கள் கல்யாணத்திற்காக அதிகமான பணம் செலவு செய்வதில்லை. கல்யாண வைபவம் என்பது பெண் மாப்பிள்ளை குடும்பத்துக்கு உள்ளேயே ஒரு சிறு தேனீர் சடங்கோடும், ரிஜிஸ்ட்டிரேசனோடும் முடிந்து விடும். பிறகு நண்பர்களையும், உறவினர்களையும் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுப்பார்கள். அது சாதாரணமாக எட்டிலிருந்து பத்து உணவு ஐட்டங்களையும் அளவில்லாத மது ஓட்டத்தையும் கூடிய ஒரு பெரிய விருந்தாக அமையும். அப்போது விருந்திற்கு வந்திருப்பவர் ஒவ்வொருவரும் விருந்துக்கு நபர் ஒருவருக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்பதை அவர்களே அனுமானித்து அதற்கு குறையாத அல்லது அதற்கு நெருங்கிய 'மொய்யை' ஒரு சிவப்பு உறையில் வைத்து 'மொய்' வாங்குவதற்கென்று நியமிக்கப் பட்டுள்ள நபரிடம் கொடுத்துவிடுவார்கள். விருந்து முடிந்தவுடன் எல்லா சிவப்பு உறைகளையும் திறந்து பார்த்து. குறிப்பெடுத்துக் கொண்டு, மொத்த வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று கணக்குப் பார்த்து விருந்துக்கான பில்லை அங்கேயே செட்டில் செய்துவிடுவார்கள். பெரும்பாலும் வந்த மொய்க்கும் ஆன செலவுக்கும் கணக்கு சரியாகிவிடும். சில நேரங்களில் மணமக்கள் கையைவிட்டு பணம் எடுக்க வேண்டியதும் வரலாம். சில நேரங்களில் செலவு போக இரண்டாயிரம், மூவாயிரம் மணமக்கள் கைக்கும் வரலாம். ஆனால் நம்மைப் போல் 'போண்டியாகும்' அளவுக்கான கலயாண செலவுகளெல்லாம் சீனர்களுக்கு கிடையாது.

************************************

இது இழுத்துக் கொண்டே போகிறது........... இத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். வாசகர்களுக்கு சீனர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தால், உங்கள் ஆர்வததை வெளியிடுங்கள் இந்த தொடர் முடிந்ததும் அவர்களைப் பற்றி மேலும் ஒரு பதிவு எழுதுகிறேன்

Saturday, October 15, 2005

மறுபடியும் தங்கர் சாமி

மறுபடியும் எங்க வட்டார வழக்கோட ஒரு படம். சன்னமா மழை பெய்யும்போது ஜன்னலருகே உக்காந்தா மாதிரி வாசம்.

கொஞ்சம் இடிச்சத்தம் ஜாஸ்தி. அவ்வளவுதான்.!!!



நேத்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாத்தேன். கூச்சல் அதிகமா உள்ள ஒரு குடும்பக்கதை. கொஞ்சம் அசந்தாலும் வி.சேகர் படமாயிடும் போல ஒரே சலசலப்பு படம் முழுசும். அழகி படத்தில் இருந்த மென்மை, சொல்ல மறந்த கதையில் கொஞ்சம் குறைந்து, சி.ஒ.அ.சாமியில் துள்..ளியுண்டு ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

நாயகர்கள் யாரும் கிடைக்காததால், தான் நடிதேன் என்கிறார் தங்கர். காமிராவைப் பார்க்காமல் பேசும் கான்ஷியஸ்நெஸ்ஸை தவிர்த்து விட்டால் காரெக்டர் அவருக்கென்றே தைத்த மாதிரியான சவடால் கேரக்டர். இந்த மாதிரி பொறுப்பத்த ஷோக்கு தகப்பன்களை மாயவரம் ஏரியாவில் நிறையப் பார்க்கலாம். நிலபுலன்களோடு வாழ்ந்த அப்பா/தாத்தா காலத்தின் சொகுசுகளை விட முடியாமல், அதே சமயம் நிலம், தோப்பு, துரவு வழியாக வந்து கொண்டிருந்த வருவாய் மடை அடைந்து, இந்த தலைமுறையிலோ, போன தலைமுறையிலோ மாத சம்பள அரசு வேலைக்கு போகத் தலைப்பட்டிருக்கும் பெரிய வீட்டுப் பிள்ளைகள் இப்படித்தான் திரிவார்கள். அவர்களுக்கு இப்படித்தான் குத்துவிளக்கு கணக்காக மனைவி இருப்பாள் - எல்லாப் பக்கமும் இடி வாங்கிக் கொண்டு.

நவ்யா நாயர் பாந்தம். குரல் கொடுத்த அம்மணி மறுபடியும் ஸ்கோர் பண்ணி இருக்கிறார். போகிற போக்கில் ஐயப்ப சாமிக்கு மாலை போடும் சாமிகள் பற்றியும் நிறைய நக்கல். ஆனால் தேவையில்லாமல் தனுஷை வம்புக்கு இழுத்திருக்கிறார். தங்கருக்கு தான் படம் எடுப்பதை விட மற்றவனெடுப்பதெல்லாம் படம் அல்ல என்று தோண ஆரம்பித்திருப்பது கஷ்டகாலம். ஒன்று தங்கரின் அரசியல் சகவாசம் குறைய வேண்டும்.அல்லது பேய்க்கதைகளில் வருவது மாதிரி கொஞ்ச காலத்துக்கு அவர் நாக்கு மேலண்ணதோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.

" துறவு என்பது எல்லாவற்றையும் விட்டு விலகி ஓடுவதல்ல. எல்லாவற்றையும் அணைத்துக் கொள்வது என்றார் சுவாமி.அவன் தடேரென்று காலில் விழுந்தான்" ' என்று மாலன் எழுதின கதையின் கடைசி வரிகள் நினைவுக்கு வருகின்றன படத்தினை பார்த்து விட்டு.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...