Monday, February 28, 2005

என் பங்குக்கு ....



இளவரசிகள் அழகாக
இருக்கிறார்கள்.
செல்வத்தில்
மிதக்கிறார்கள்
எல்லா இளவரசிகளும்
ஸ்கூட்டி வைத்திருக்கிறார்கள்.
சோதனையாக அவர்களுக்கு
ஏழை வாலிபனைத்தான்
பிடிக்கிறது
வாலிபர்கள் கோழைகளாக
இருக்கிறார்கள்
ஆனால் ஆசை இருக்கிறது
அது கண்ணை மூடிக்கொண்டு
தேன் குடிக்கச் சொல்கிறது
கொஞ்ச நாள்.

மூழ்கியவர்கள்
"முருகன்" ஆகிறார்கள்

மீண்டவர்கள்
கவிதை எழுதுகிறார்கள்

ஹி..ஹீ..நேத்துதான் "காதல்" பாக்க ஆரமிச்சிருக்கேன்.

ஆஸ்கார் 2005

எந்தப் படங்கள் பார்க்கப்படவேண்டியவை என்ற தகவலுக்காகவும், யாரார் எப்படி எப்படி வருகிறார்கள் என்று பொது அறிவை விருத்தி செய்வதற்காகவும் வருடா வருடம் ஆஸ்கார் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பதுண்டு. நேற்றும் பார்த்தேன்.



E Channel ல் பார்க்க ஆரம்பித்தபோது விருந்தினர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேட்டி எடுத்த ஸ்டார் அம்மணி ஒவ்வொருவராக கூப்பிட்டு கலாய்த்துக் கொண்டிருந்தார். அம்மாவும், பொண்ணுமாக வரும் பேட்டியாளர்களைப் போல இல்லாமல் இவருடைய கேள்விகள் கொஞ்சம் சவ சவ என்று இருந்தன.

ஜெனிஃபர் லோபஸ், கேமரூண் டியஸ், டென்ஸல் வாஷிங்டன், டாம் ஹேங்கஸ், டாம் க்ரூஸ், நிகோல் கிட்மேன் போன்ற பெருந்தலைகள் மிஸ்ஸிங். க்ரிஸ் ராக் தன்னுடைய முன்னுரையில் புஷ்ஷை புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாமினேட் செய்யப்பட்டிருக்கும் படங்களை பார்த்தீர்களா என்று பொதுமக்கள் சிலரிடம் அவர் எடுத்த பேட்டி நடுவே ஒளிபரப்பப்பட்டது. நல்ல படங்களுக்கு ஹாலிவுடிலும் இருக்கும் "மதிப்பு" தெரிய வந்தது.

சில வருடங்கள் பரிசு வழங்கப்பட்டபோது, ஒரே படமே ஏகப்பட்ட பரிசுகளை அள்ளிக்குவிக்க மற்றவர்கள் விசனப்பட்டனர். அது போல அல்லாது, இந்த வருடம் நாமினேட் செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவில் பரிசு வென்றன. ஏவியேட்டர் படத்துக்காக மார்ட்டீக்கு பரிசுகிடைக்கும் என எதிர்பார்த்தேன். பாவம்..ஐந்தாவது முறை தவறவிடுகிறாராம். பரிசு கிடைத்த படங்களை குறித்து வைத்து ஒவ்வொன்றாக பார்க்க முயற்சிக்க வேண்டும்.

Oscar Acceptence speech எல்லாவற்றையும் இங்கே தொகுத்து வைத்து, எது நன்றாக இருக்கிறது என்று ஓட்டுப்போட சொன்னார்கள். தொண்டை தழு தழுக்க பேசிய டாம் ஹாங்க்ஸ் பேச்சும், என்ன பேசுவதென்றே தெரியாமல் திக்கித் திணறி பார்வையாளர்களை சிரிக்க வைத்த கருங்குயில் ஹாலிபெர்ரியின் பேச்சும் மிகப் பிரசித்தம். இந்த வருடம் ஹில்லாரி ஸ்வாங்க் நிதானமாக பேசினர். மார்கன் ஃப்ரீமேன் கம்பீரமாக பேசி மனதை அள்ளினார். ஜேமி ஃபாக்ஸைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ரமணிதரன் சொன்ன படம் ( Motorcycle diaries) ஒன்றின் பாடலை அந்தானியோ பண்டாரஸ் பாடினார். அந்த பாடலுக்கு ( original score) பரிசு கிடைத்தது. க்யூபாவின் புரட்சிக்கு வித்திடுமுன் சேகுவராவும், அவர் நண்பரும் தென்னமெரிக்க நாடுகள் முழுதும் மோட்டார் பைக்கிலேயே போய்வந்த நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்ட கதை என்று எழுதி இருந்தார். அதையும், ஹோட்டல் ருவாண்டாவையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

மேலும் தகவல்களுக்கு.

Friday, February 25, 2005

செல்வமணிக்கு பிடிக்காத கவிதை



பச்சை நிற முட்களை
மறைக்கும் நினைவேயில்லாமல்
அடர்த்தியின்றி தளிர்த்திருக்கும்
இலைகளின் உச்சியில் ஒரு ரோஜா
வெள்ளை ரோஜா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்தபோது கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருக்கிறது.

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச் சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரே ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது

யாரும் பார்க்கும் முன்பு.

- பூமா. ஈஸ்வரமூர்த்தியின் " கடற்கரைக் கால்கள்" தொகுப்பில் இருந்து

நான் கொடுத்திருக்கும் தலைப்புக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் நிஜரோஜாவை பற்றிய இந்தக் கவிதை எழுதி இருக்கும் இதே கவிஞர்தான்

இருபது வரிகளில்
பதினைந்து வருஷம் முன்பு
கவிதையொன்று
எழுதியிருந்தேன்

என்று ஆரம்பித்து வெற்றுத்தாளில் முடியும் அந்த அடர்த்தியான, செறிவான, நிறைவான கவிதைக்கு சொந்தக்காரர். :-)

மின்னணு அரசியல்



" எலெக்ட்ரானிக் வோட்டுப் பதிவு முறையில் குறைபாடுகள் இருப்பதாக திரும்பத் திரும்ப சொல்லி இங்கே அரசியல் செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.

அந்த மெஷின் வடிவமைப்பில் பங்கு கொண்டவன் என்ற முறையில் நான் சொல்கிறேன்.... இந்தச் சந்தேகம் தேவையற்றது. இந்த இயந்திரத்தின் உள்ளே இருப்பது ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர். அது ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதில் உள்ள ராம் என்னும் ரீட் ஒன்லி மெமரியில் பொறிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அந்த ஈசனே வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஒரு எழவும் தெரியாது. இந்த நம்பருக்கு இத்தனை வோட்டு என்று போடப்போடக் கூட்டிக் கொண்டே செல்லும். இறுதி யில் இன்னாருக்கு இத்தனை வோட்டு என்ற பட்டியலைத் துல்லியமாக அறிவிக்கும்.

வேட்பாளரின் கட்சியெல்லாம் அதற்கு பொருட்டல்ல. சீரியல் நம்பர்தான் முக்கியம். இந்த சீரியல் நம்பர் ஆங்கில அகர வரிசைப்படி கொடுக்கப் படும். இதன் செயல்பாட்டை எந்தக் கட்சியும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாது. காரணம், அந்தக் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு நம்பரில் இருப்பார்கள். இந்த மெஷினை ஒரு தட்டு தட்டினாலே வேறு ஒருத்தருக்கு வோட்டு போய்விடும் போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் கோர்ட்டில் சொல்லப் பட்டபோது குபீரென்று சிரிப்பு வந்தது. மிக எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த மெஷினிடம் பொய்யோ, வஞ்சமோ, லஞ்சமோ கிடையாது. இது அமெரிக்கத் தேர்தல் முறையைவிடத் துரிதமானது. இதிலிருந்து பழைய வாக்குச்சீட்டு முறைக்குப் போவதென்ற பேச்சே தேவையற்றது.’’

என்ன கோபம் வருகிறது பாருங்கள் சயின்ஸ் வாத்தியாருக்கு..!!!. அசல் அக்மார்க் குவளகுடி சிங்கமய்யங்கார் கோபம்...

தாத்தாவின் புத்தகம் ஒன்றில், கேரளாவில் உள்ள பரூரில் முதன் முறை சோதனை முறையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி எழுதி இருந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதை பரவலாக உபயோகப்படுத்தி, வெற்றியும் பெற்று விட்ட இத்தனை ஆண்டுகாலம் கழித்து ஜெ இதை ஒரு பிரச்சினையாக கிளப்பி, தங்கள் பாராளுமன்றத்தேர்தல் தோல்விக்கு காரணம் தேடிக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். இப்படியெல்லாம் நொட்டை சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஜெ பேசாமல் இன்னும் உருப்படியாக ஏதாவது செய்தாலே போதும். இன்னும் எத்தனை போலி சாமியார்களும், சந்தனக்கடத்தல்காரர்களும், சைக்கிள் பாகங்களுக்கு தமிழ்பேர் தெரியாத மாஜி சைக்கிள் கடைக்காரர்கள் இருக்கிறார்கள். ??? :-)

அமெரிக்க தேர்தலில் இந்த இயந்திரத்தால் நடந்த குளறுபடிகளை காரணம் காட்டும் நம்ம அரசியல் அபிஷ்ட்டுகள் இதை எல்லாம் படித்தார்களா என்று தெரியவில்லை. எப்படியோ அம்மா சொன்னதற்கு ஜால்ரா ( சுப்புவின் பேட்டி) அடித்தால் போதும் என்பதுதான் பாதிபேருக்கு தினசரி வேலையாக இருக்கிறது.

சுஜாதாத்தா ஜாக்கிரதையாக இருக்கவும். அம்மாவின் தொண்டர்கள் ஆட்டோ ஆட்டென்று ஆஆஆ...ட்ட்டி விடப் போகிறார்கள்...பாவம். வயசான காலத்தில் இதெல்லாம், இத்தனை கோபம் அவருக்குத் தேவையா..??

துள்ளித்திரிந்த காலம்



ஆடி மாதக் காவேரியில் குளித்த மாதிரி இருந்தது ஒரு வருடம் முன்பு.

நமக்கே நமக்கான இடம். அதிலே மற்றவர் கருத்தை தெரிந்து கொள்ள வசதி. நியாயமோ அநியாயமோ, தணிக்கை செய்யப்படாத கருத்துகள் என்று மிக சுதந்திரமாக இருந்தது. நிறைய எழுதினேன்.

என்னைப் பற்றி...என் நண்பர்களைப் பற்றி ... படைப்புகளைப் பற்றி ... கருத்து வேற்றுமைகள் பற்றி.

இப்போது கொஞ்சம் நிதானம் வந்திருக்கிறது( தா..??) . மனதில் எழும் உணர்வுகளை எல்லாம் எழுதுவது மட்டும் முக்கியமல்ல, அதை கூடியவரை நாசுக்காக தெரிவிக்க வேண்டும் என்கிற நிதானம். பளீரென்று முகத்தில் அறைந்தாற்போல எழுதுவது முன்னர் பிடித்த அளவுக்கு இப்போது பிடிக்கவில்லை. நமக்கு அது விடுதலை உணர்வை தந்தாலும், எதிராளிக்கு, சம்பந்தப்பட்டவருக்கு அது எப்படி இருக்கும் என்று சில தருணங்களில் புரிந்தது. சுற்றி சுழற்றி எழுதுவது தந்திரம்..அதில் உண்மையில்லை என நினைத்திருந்தேன். அது இப்போது கொஞ்சம் தணிந்து இருக்கிறது.

உலகத்தில் உண்மை என்றும், பொய் என்றும் நல்லதென்றும் கெட்டதென்றும் ஒன்றும் இல்லை. காலம் தான் எல்லாம். காலமே கடவுள்.

ஒரு வருட காலத்தை இன்றோடு கடந்திருக்கும் என் வலைப்பூ எனக்கு மறுபடியும் நினைவூட்டி இருக்கும் உண்மை இது.

நண்பர்களுக்கு நன்றிகள்... வணக்கங்கள்.

Wednesday, February 23, 2005

அப்படியா..???



கொஞ்ச காலம் கழிச்சி நான் இப்படி இருப்பேனோ..??

நெனைக்கவே தமாஷா இருக்கு..!!!!

படம்: முரசொலி கதாநாயகர் EVKS இளங்கோவன்

மருத்துவர் மாலடிமைக்கு யோசனைகள்

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.

பள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளை மூட வேண்டும்.
......
.......
.......

தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்

கோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.

விஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.

மேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.

பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.

பஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.

வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.

கட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.

மக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்

பாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் தடை செய்து விட வேண்டும்.

திருமாவளவன் சொல்வதை எல்லா தலித் மக்களும் கேட்க வேண்டும். அவர் நான் சொல்வதைக் கேட்பார்.

Tuesday, February 22, 2005

ஷோபா டே

இது சாத்தான்குளத்து "டே" இல்லை. வேற டே.

பம்பாயில் இருந்தபோது எனக்கு மிட் டே ரொம்ப பிடிக்கும். ( அடச்சே இன்னொரு டே...) அதில் இவர் ரெகுலராக எழுதுவார். கொஞ்சம் குஜால் கலந்து, இந்தி கலந்த ஆங்கிலத்தோடு எழுதும் தைரியமான பெண்மணி என்று நினைத்துக் கொண்டு ரசித்திருக்கிறேன்.

குஷ்வந்த்சிங் எழுதி இருக்கிற இந்த கட்டுரையின் கடைசி வரி, அதை ஏன் என்று புரியவைத்தது. மேலைத்தாக்கம் அதிகம் இருக்கிற பம்பாயின் மேட்டுக்குடி பெண் ஒருத்தி எழுதியது, ஒரு கீழ்மத்தியதர மதராஸிக்கு எப்படி பிடிக்காமல் போயிருக்கும்...??

நன்றி. குரு சுப்ரமணியம்

விளம்பரநேரம்- 123shots.com

பரதேசிகளுக்கு ஒரு நற்செய்தி

வெளிநாட்டில் எடுக்கும் ஃபோட்டோக்களை, இணையத்தில் எங்காவது அப்லோடி, ஊருக்கு லின்க் அனுப்பினால் வேலைக்காவலை. மாயவரம் மாதிரியான ஊர்களில் அந்த ஆல்பத்தைப் பார்ப்பதற்குள், ஜெயேந்திரர் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் போலிருக்கிறது.

பழைய தோசைமாவில் கொஞ்சம் ஜெகஜ்ஜால வித்தை காட்டி, ஊத்தப்பம் ஆக்குவது போல, 123shots.com வேலை செய்கிறது. உங்கள் ஃபோட்டொக்களை இங்கே அப்லோட் செய்து, ஆல்பத்தில் லிங்கை அனுப்பி விட்டு, அங்கேயே Photo printsக்கான ஆர்டரும் கொடுத்து, உங்கள் ஊட்டு அட்ரசும் கொடுத்து விட்டால், photos உங்கள் வீட்டுக்கு போய் விடும்.

ஒரு முறை பரிசோதித்து விட்டு இதை எழுதுகிறேனாக்கும். :-)

பி.கு:

நல்லா இருக்கீங்களா...?? தமிழ்மணத்துல, இப்பல்லாம் நெறைய படிக்க கிடைக்கிறதால ஒண்ணும் எழுதத் தோணலை. ஏதாவது சுவாரசியமா கிடைச்சா எழுதுறேன்.

உன்ன யாரு கேட்டாங்கிறீங்களா...?? ஹி..ஹி..சும்மா ஒரு தகவலுக்கு.

Wednesday, February 16, 2005

நீங்களும் சேர்ந்து குழப்ப...

இரண்டாவது கார் வாங்க, உங்கள் ஆலோசனை தேவை.



Accord - 2000

என்னுடைய முதல் கார் ஹோண்டா அக்கார்ட் ஈ.எக்ஸ் v-6. லெதர் ஸீட்டுடன், சன் ரூஃப், மூன் ரூஃபோடு 2000 ஆம் வருடத்தில் வாங்கியது. விலையே அதிகமென்றாலும், லோன் வாங்கின இந்த்ரெஸ்ட் எல்லாம் கட்டி முடிந்தபோது அய்யோ என்றிருந்தது. ஏனெனில் என்னதான் ஜப்பான் காராக இருந்தாலும், என்ன கருமமாக இருந்தாலும், முதல் மூன்று வருடங்களில் அதன் மதிப்பு 40% குறைந்து விடுகிறது. எனவே இரண்டாவது கார் வாங்கினால் இரண்டு மூன்று வருட பழசுதான் வாங்க வெண்டும் என்று நினைத்திருந்தென்.



Mini Van

முதலில் மினி வேன் வாங்கலாம் என நினைத்தேன். ஆனால் மூட்டைப் பூச்சியை நீளவாக்கில் தரையில் தேய்த்த மாதிரி உள்ள அதன் தோற்றத்தை பார்த்தவுடன் சின்ன தடுமாற்றம். ஆனால் வீட்டு வேலைகளுக்கும், ஊரிலிருந்து அம்மா அப்பா வந்தால் அழைத்துப் போகவும் அதுதான் வசதி. ஆனால், ஏற்கனவே பெரிய கார் வைத்திருப்பதால், இந்த ஒரே வசதிக்காக மினி வேன் வாங்க முடியாது. தவிரவும் உடனே 30000$ கொடுத்து வேன் வாங்கி இன்னொரு கடனாளியாய் ஆக வேண்டாம் என்றுதான் ஒரு குட்டியூண்டு கார் வாங்கலாம் என நினைத்தேன்.



Beetle



Mini Cooper

அதை நினைத்தவுடனெயே ஹோண்டா , டொயோட்டா என்று தேசி மாடலாக வேண்டாம் என்று வோக்ஸ்வாகன் பீட்டில் இல்லாவிட்டால் மினி கூப்பர் வாங்கலாம் என ஆசை. பீட்டில் அதிக வேலை வைக்கும் கார் என்பதால் கூப்பருக்கு முடிவானது. ஆனால் கூப்பர் விலையை பார்த்தால், அதற்கு கொஞ்சம் கூட காசு போட்டு மினி வேனே வாங்கி விடலாம். நடு நடுவில் BMW 3 Series மேலும் கொஞ்சம் மையல் வந்து போனது

என்ன குழப்புகிறேனா..?? அதான் பிராப்ளம். ஒரு வழி சொல்லுங்கள்.

இல்லாவிட்டால் ஒரு டொயோட்டா கரோலா வாங்கிவிட்டு, ஒரு வருடம் கழித்து அதை விற்று விட்டு மினி வென் வாங்கிக் கொள்ளட்டுமா..??

ஆலோசனை உதவியும், உங்கள் நண்பர்கள் யாராவது கரோலா விற்கும் யோசனையில் இருந்தால் இங்கே தள்ளி விடவும். வெகுமதிகள் உண்டு. ( வெகுமதி - நீங்கள் என்னதான் இறகு பிய்ப்பது மாதிரி சொற்களை பிய்த்துப் பிய்த்துப் போட்டு கவிதை எழுதினாலும், நான் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டேன் - மரவண்டு இல்லாமலேயே :-) }

Monday, February 14, 2005

இன்றைக்கு போட்டே ஆகவேண்டிய பதிவு



காதலர் தினம் வலைப்பதிவுகளில் தூள் பறந்து கொண்டிருக்கிறது. என்னதான் காதலர் தினம் கொண்டாடுவது நமது கலாசாரத்திற்கு சம்பந்தமில்லையென சொன்னாலும், உண்ணும் உணவு, உடுக்கும் உடை, பருகும் "நீர்" முதற்கொண்டு, மேற்கு நம்மை அண்டி தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காதலர் தினம் கொண்டாடுவதில் மட்டும் என்ன தவறு வந்து விட்டது..?? . காதலிகளுக்கு கொண்டாட்டம். காதலன்கள் பர்ஸுக்கு அன்று திண்டாட்டம் என்று சொன்னாலும் கூட சுகமான சுமைகள் அவை. வேண்டித்தான் இருக்கிறது. அதுவும் ஆண் பெண் ஈர்ப்புக்கு காரணமான ஒரிஜினல் அர்த்தங்கள், ( It is nature's way of ensuring pregnancy என்பார் சுஜாதா) இளைய தலைமுறைக்கு இத்தனை அப்பட்டமாக தெரிந்து விட்டபிறகு, காதல் போன்ற கனவு கலந்த பொன்னிறமான வஸ்துகள் கண்டிப்பாக வேண்டும்.

ஏனெனில் காதலில் புனைவையும் கனவையும் எடுத்து விட்டால், வெறும் உடம்பு மட்டும்தான். எனவே அவை ஜீவிதமாக இருக்கட்டும். கலந்தே இருக்கட்டும்.

அன்பர்களுக்கு காதலர் தின வாழ்த்துகள் - கீழுள்ள பாலகுமாரன் கவிதையோடு

ஓய்வு பெற்று ஊரோடு அழுந்தி விட்ட அப்பாவுக்கு
ஏதேனும் சாமி படம்
தலைநகரில் கொழிக்கின்ற தமையனுக்கு
நியூயார்க்கின் ஒரு கோணம்
மணமாகி மறந்துவிட்ட தங்கைக்கு நினைவோடே
பொக்கை வாய்க் குழந்தைகள்.
காணாத போது
என் கவிதையை,
முன்பல்லை விமர்சிக்கும் நண்பர்க்குக்
கற்சிலைகள்
அதிகார மேனேஜன் பார்வைக்கு ஸீனரிகள்
அடியே - போன ஜனவரியில்
புதுப் படத்து அரையிருளில்
காதோரம் ·நீயிட்ட நீர்த் தடங்கள் காயும் முன்
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப் போய்
மரபைக் காட்டி
கொண்ட ஒரு கனவையும்
குலைத்து விட்ட
உனக் கென்ன அனுப்ப?
மொட்டை மரம் ..?
புத்தர் படம் ..?
கற்றை குழல் ஜானகியின் தனியுருவம்?
இல்லை - அட்டைக் கறுப்பில்
நீல மசி தோய்த்து
நீங்காத நினைவோடே
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப் புரிந்து கொள் !

Friday, February 11, 2005

தமிழும் தங்கமணியும்

ஒரு பெண் பெரியவளாகும்போது அதை வீடும் வெளியுலகமும் பார்க்கும் விதங்கள் வித்தியாசமானவை. வண்ணமயமானவை. தாய்மைக்காக இயற்கை நிகழ்த்தும் ரசவாதம் என்கிற கனிவான நோக்கோடு பார்க்கப்படுபவை. பெரியவளாக இருப்பதற்காக, அந்தக் குழந்தை அணைத்துக் கொள்ளப்படும் விதங்கள் இதமூட்டுபவை. லா.ச.ரா வின் "புத்ர" வில் இதை அழகாக சொல்லி இருந்தது பிடித்திருந்தது.



ஒரு பையனுக்கு இது நிகழ்வது கிட்டத்தட்ட அவனுக்கே தெரிவதில்லை. ஜல்லடைக் கண்களின் வழியே இறங்கும் வெல்லப்பாகு போல மெல்ல மெல்ல நிகழ்கிறது இது. சில விவரமானதுகளைத் தவிர பெரும்பாலான விடலைச் சிறுவர்கள் இந்த விஷயத்தில் மக்குகள். சக மக்குகளிடம் பேசியும், தகுதியில்லா புத்தகங்களால் அறிவுறுத்தப்பட்டும், தனக்கு நிகழ்வதையே கூட்டி கழித்து புரிந்து கொள்வதிலும், சினிமாக்களைப் பார்த்து கிளுகிளுத்துக் கொள்வதிலுமேதான் அவனுடைய "அறிவு" விரிகிறதே தவிர சக வயதொத்த பெண்ணுக்கு கிடைக்கும் தனிப்பட்ட கவனிப்பும் அறிவுரைகளும் அவனுக்கு கிடைப்பதில்லை.

அப்படியொரு பையன் ஒம்போதாம்ப்பு தமிழ் வகுப்பில் உட்கார்ந்திருந்தான். பையன்கள் தங்களுக்குள் கிளுகிளூத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தால் இம் மாதிரி லீலைகள் எல்லாம் கஷ்டம் என்பதால் ஆவலை அடக்க முடியவில்லை. ஆனால் தமிழ் டீச்சர் திட்டுவார்களே என்ற கவலை வேறு. ஒரு வழியாக தமிழ் வகுப்பு முடிகிற தருணத்தில் நண்பன் "மசால்வடை" சிவக்குமார் க்ளாஸுக்கு புதிதாக வந்திருந்த சிங்கப்பூர் பெண் தங்கமணி, கடைசி பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டு வகுப்பு நடக்கும் போதே டிபன்பாக்ஸை திறந்து சாப்பிட்ட கதையை கிசு கிசுத்தான். அப்போதுதான் வடிவேலுக்கு ஆம்பிளை வேஷம் போட்டாற் போலிருக்கும் அந்த பெண், அவர்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சியை கடந்தது. அதைப் பார்க்க ஆரம்பித்த அவன், அது நடந்து போய், வகுப்பு சுவரை விட்டு வெளியே மறையும் வரை வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை துரத்திய திக்கைப் பார்த்த தமிழாசிரியை, "பிஞ்சிலே பழுத்தால்....வெம்பிவிடும்" என்று சம்த்காரமாக சொல்லிவைக்க வகுப்பறை சிரிப்பில் குலுங்கியது.

அவனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அடடா... இப்படி தவறாக நினைத்து, உண்மையை தெரிந்து கொண்டார்களே என்ற அவமானம். கொஞ்சம் வெளைஞ்சவனாக இருந்திருந்தால், கண்டுகொள்ளாது போயிருப்பான். தான் சின்ன பையனா, பெரிய பையனா என்பதே தெரியாத சுள்ளான். நேராக டீச்சர்ஸ் ரூமுக்கு போய், சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசரியையிடம் " நான் அப்படி எல்லாம் இல்லை டீச்சர்" என்று பூசி மெழுகும் அவசரத்தில் தான் எதற்காக பார்த்தோம் என்று சொல்வதற்காக, தங்கமணி சாப்பிட்ட கதையை டீச்சரிடம் போட்டுக் கொடுத்தான். டீச்சர் சிரித்துக் கொண்டே " உன்ன மட்டும் சொல்லலைப்பா...எல்லா பையன்களும் கிட்டத்தட்ட அப்படித்தான் பாக்கிறீங்க" என்று கூறியது ஆறுதலாக இருந்தது என்று நினைத்துக் கொண்டான்.

மத்தியான வகுப்பு ஆரம்பிக்கு முன், போட்டுகொடுத்த விஷயம் தங்கமணிக்கு போனது. அந்தப் பெண் கோபாவேசமாக வந்து, சிங்கப்பூர் ஆங்கிலத்தில் தாட்டு பூட்டென்று கத்தினாள். இவனுக்கு என்ன சொல்வதென்றே விளங்காமல், டெஸ்கில் படுத்துக் கொண்டு விசும்ப ஆரம்பித்து விட்டான். டீச்சர் அடித்த கமெண்ட் என்னெவென்று தெரிந்து விட்ட மற்ற பெண் சொன்னாளோ என்னமோ, கொஞ்ச நேரம் கழித்து தங்கமணியே வந்து சாரி சொன்னாள். இவனுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.

கொஞ்ச நாள் கழித்து பஸ்ஸில் தன் அம்மாவுடன் தஞ்சாவூர் போகும்போது, அதே பஸ்ஸில் வந்த தமிழாசிரியையோடு ஒரே இருக்கையில் உட்கார்ந்து போக நேர்ந்தது. அந்த 72 கிலோமிட்டரும், எந்த நேரத்தில் ஆசிரியை தங்கமணி மேட்டரை பேசுவார்களோ என்கிற அசட்டுத்தனமான பதை பதைப்புடன், ஜன்னலுக்கு வெளியேயே பார்த்துக் கொண்டு அவன் கழித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அந்த மாதிரி எதுவும் சொல்லாமல் மானத்தை காத்த தமிழாசிரியையிடம் அவனுக்கு வந்த மதிப்புதான், எதை விட்டாலும் தமிழை மட்டும் விடாமல் இன்னமும் துரத்திக் கொண்டிருக்க சொல்கிறதாக்கும். :-)

இப்போதுகூட "என் முரசு" படிக்கும்போது அவனையும் அறியாமல் எழுந்து நின்று கொண்டே படிப்பது கூட அதனால்தானோ. :-) . ஆனா இந்தத் தங்கமணி மீசை வச்ச பெங்களூர் தங்கமணிங்கிறது ஒரு ஆறுதல்.

படம் : அய்யய்யோவ்..இங்கேர்ந்து எடுத்தது. அது ஃபோட்டோவா, ஓவியமா ஒண்ணும் தெரியாதுங்கோவ்....

Wednesday, February 09, 2005

செட் தோசை

இந்த இரண்டு கவிதைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் காலதேச வர்த்தமானங்களைத் தாண்டியதென நினைக்கிறேன். இரண்டும் ஒரே சமயத்தில் திண்ணையில் பிரசுரமானது கண்டிப்பாய் தற்செயல் இல்லை போல ஒரு எண்ணம்.

மனைவியின் தோழனைப் பற்றிப் பேசும் கணவனின் கவிதை எங்கும் லேசாக ஒரு சந்தேக மூட்டமும், பொஸஸிவ்நெஸ் இருப்பதும் புரிகிறது. அதே சமயம் கணவனின் தோழியரைப் பற்றி பேசும் மனைவியின் கவிதையில், தன் உரிமைக்கான லேசான ஆதங்கத்தை தவிர வேறு சந்தேக சாயல் வீசவே இல்லை ( அல்லது கவிஞர் அதை முதன்மைப்படுத்தவில்லையோ..??.)

யார் வீக்கர் செக்ஸ்..?? ( Weaker Sex)

மேப் போடறான் ...மேப்

கூகிள் மேப்ஸ் புதிய வரவு.

zoom செய்யும் வசதியும், எலியை நகர்த்தி இருக்கும் ஏரியா பூரா மேய்வதும் செம வசதியாயிருக்கிறது. கொடுக்கும் Driving directions சுருக்கமான வழியா அல்லது வேகமான வழியா என்பது மட்டும் போகப் போக விளங்கும்.

நன்றி: Lazygeek

Tuesday, February 08, 2005

பசுவய்யா கவிதைகள்

வலைப்பூக்களின் வீச்சும் ரீச்சும் பல்கிப் பெருக்கொண்டிருக்கும் இந் நேரத்தில் கொஞ்ச நாள் படித்துக் கொண்டே இருந்ததில் வாய் பிளந்து கிடந்து விட்டேன். "ஒரு வாரம் ஸ்டாரானா, பத்து நாள் லீவா" என்று தனி மடலில் நங் என்று விழுந்தது ஸ்நேகத்திடமிருந்து ஒன்று.

மறுபடியும் மெல்லத் துவங்கலாம் என்று ஒரு எண்ணம்.

"கதவைச் சுண்டாதே தயவுசெய்து" என்று ஒரு கவிதையோடு

நான் இங்கு இருக்கிறேன்
இங்கு
இச்சிறிய அறையில், சிறிய சன்னல், சிறிது வெளிச்சம்

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பது தெரியும்

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும் பாரம் சரித்துவிட்டுப் போவாய்

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜன்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலில் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து

Friday, February 04, 2005

கவிப்பகைவன்

கே.வி.ராஜா கல்யாணத்துக்கு, போய்வந்தவர்கள் எல்லாம் விவரணைகளோடு , படங்களும் போட்டு மடலாடற்குழுக்களிலும் வலைப்பூவிலும் தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள். படித்துக் கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட மடல் இது. மரவண்டு கணேஷ் இதை எழுதியிருக்கிறார்.

" அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகின்றாய்என்னென்னவோ உன் ஆசைகள் " என்ற திரை இசைப் பாடல் (திருக்கல்யாணம்-ஜெயச்சந்திரன்&ஜானகி)என் நினைவுக்கு வந்தது .சொற்பமான எண்ணிகையிலான மக்களே கடற்கரையில் உலாத்திக்கொண்டிருந்தார்கள் , சுனாமியின் கோரச் சுவடுகள் ஓரளவுக்கு மறைந்துவிட்டன . அண்ணா சமாதியின்சுற்றுச் சுவர் மட்டும் கொஞ்சம் இடிந்த நிலையில் காணப்பட்டது , அதைப் பார்த்ததும் எனக்கு கவிதை கொப்பளித்துக் கொண்டு வந்தது ..உடனே மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது , அய்யய்யோ வேண்டாம் சாமின்னு மூடிட்டு இருந்துட்டேன் "

அவருக்கு மூக்கு சுந்தர் ஞாபகம் வந்தது எதற்கென்று எனக்குத் தெரியாது. ஆனால் சொல்கின்ற இடத்தையும், பொருளையும் வைத்து அவர் சுனாமி மொழிகள் சம்பந்தமாக எனக்கும் கவிஞர் புகாரிக்கும் நடந்த மடலாட்டத்தை சொல்கிறார் என்று யூகிக்கிறேன்.

சுனாமி மொழிகள் சம்பந்தமாக நான் சொன்னது அது மரத்தடியில் இடப்பட்டதாலும், அந்த சமயத்தில் நான் மரத்தடி உறுப்பினனாகவும் இருந்ததால்தான். சொன்ன கருத்து கவிதையின் மீதே ஒழிய கவிஞர் மீது அல்ல.
இன்றளவும் புகாரியின் கவிதைகள் எனக்கு தனிமடலில் வந்துகொண்டு தான் இருக்கிறது. அக் கவிதை பற்றி சொன்னது கூட சொற்குற்றமென்றோ, பொருட்குற்றமென்றோ, சொல்லவில்லை. உணர்வுரீதியாக, அந்த உணர்வை வெளிப்படுத்திய விதம்பற்றிய என் புரிதல்கள் மட்டுமே. அந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது ஒன்றும் எழுதாத மக்கள் நான் இணைய தாதா ஆக விரும்புகிறேன் என்று இன்னொருவர் சொன்னாரென்று (?!!) வேறு சந்தர்ப்பங்களில் தன் நிஜமுகத்தை தரிசனப்படுத்துகிறார்கள்.

நண்பர் மரவண்டு கணேஷ் மூக்கு சுந்தரை பற்றி எல்லாம் கவலைப்பட்டு மூடிக்கொள்ளும் அளவுக்கு மூக்கன் தாதா இல்லை. இவ்விடம் நல்ல கவிதைகளுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று நான் உபதொழில் ஏதும் செய்யவில்லை.

எனவே யாராருக்கு என்னென்னெ எழுத வேண்டுமோ அத்தனையும் எழுதிப் பார்க்கலாம். இந்த சமயத்தில் நான் எழுதிய கவிதைகள், நான் ரசித்த நம் இணைய நண்பர்களின் கவிதைகளை எல்லாம் எடுத்துப் போட்டு
நானும் கவிரசிகன் தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புகிறேன்.

பார்வைகள் பலவிதம்

தென்செய்தி தலையங்கம் கேரள எழுத்தாளர் சுகுமார ஆழிக்கோடு எழுத்தச்சன் விருதை புறக்கணித்திருப்பதன் எதிர்ப்புப் பின்னணியையும், புதுச்சேரி மாநில எழுத்தாளர்களின் மொழிப்பற்றையும் சொல்லி தமிழர்களுக்கு துணிவு வருமா என்று வினவி இருக்கிறது.

காஞ்சி சாமியார்கள் வி(வ)காரத்தில் பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் அறிக்கை உடனே ஞாபகம் வர, " ஏன் இப்படி கேட்கிறார் நெடுமாறன்..?? எழுத்தாளர்களுக்கு இங்கே ஏகப்பட்ட பொறுப்பு இருக்கிறதே" என நினைத்தேன்

சுளீரென்று சவுக்கடி பட்டாற்போலிருந்தது நேற்று படித்த எஸ்.ராவின் செவ்வியின் இந்த பதில்.

18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?

சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகபோராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளை போல ஆங்காங்கே தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டு பிடிக்கபடவேயில்லை. எத்தனை எழுத்தாளர்கள் அந்த முகாம்களுக்கு சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள். தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம். குஜராத் கலவரம் என எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் ஆல்லை.

உண்மையை சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை. நான் இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது பதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளுமளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை துôக்கமற்று செய்திருக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கபட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடிவைத்து தகர்க்கபடுவதும். கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், சாதி கிராமங்களில் முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில் கூட மதவாதம் கலக்கபட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பபடுவதையும் சமூகபிரச்சனைகளாக நாம் கண்டுகொள்வதேயில்லை. அதைப் பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.

நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சீரழிவுகளை தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வைகளை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.

எல்லாம் முடிந்து இதைப் படித்தால் இன்னமும் புல்லரிக்கிறது. கடைசிப் பத்தியில் தமிழக எழுத்தாளர்களின் போக்குகளாக சிலவற்றைக் குறித்து இருக்கிறார்.

எத்தனை பார்வைகள்..எத்தனை அர்த்தங்கள்..??

Thursday, February 03, 2005

சிங்கப்பூர் விஜயம்

I am visiting Singapore, Malaysia, Indonesia during Feb 2005. Those who want to contact mail me.

I am having a literary meeting with readers on coming Saturday 05 February at 2:30 PM at Woodlands Library, Singapore


என்று இங்கே சொல்லி இருக்கிறார் சாரு. நமது இணைய நண்பர்கள் பலருக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. சிங்கை நண்பர்கள் விருப்பம் இருந்தால் சென்று வாருங்கள்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...