Saturday, April 13, 2013

கடந்தவை

கடந்தவை
 ========
 பத்தி பத்தியாய்
 எழுதி வைக்கிறேன்.
 நல்லதென்றும் கெட்டதென்றும்
 நான் நினைப்பதை
 இலக்கிய இலக்கண
 வரையறையை
 வாழ்வியல் விசாரங்களை
 எது எழுதலாமென்பதை
 எப்படி எழுதலாமென்பதை
 யாருக்கு எழுதவேண்டுமென்பதை
 திறனாய்வா
 திரைப்படமா
 இல்லை
 வெறும் வியப்பா
 எதுவாயினும் அதை
 வார்த்தை கத்தைகளுக்குள்
 பொத்தி வைத்து
 என்னை வியந்து கொள்ளும்
 இறுமாப்போடு

விடுபட்டுப்போன அன்பும்
 மனிதமும் நேர்மையும்
 சிரிக்கின்றன வாசகனைப் பார்த்து.

என்றேனும் ஒரு நாள்
 எனக்கும் அது விளங்கக்கூடும்

காலம் கடந்த உண்மைகள்
 காயம் சொரிந்து கொள்ள
 சுகமான வலியே  தவிர
 வேறென்ன.
 பாலைவனத்து நிலவாக
 போனதெந்தன்
 பழுது நோக்கும் பார்வை

இளக்கம் இல்லாமல்
 இலக்கியமா..??

என்னவள் சொன்னது

பாட்டு கேட்டுவிட்டு
தனக்குள்ளே சிரித்ததற்கும் ,
காலணி மாற்றிப் போட்டு
தடுமாறி விழுந்ததற்கும் ,
நீளப் பின்னல் பார்த்துவிட்டு
கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும்,
புதுப்படத்து அரையிருட்டில்
கை தேடிக் கோர்த்ததற்கும்,
தலை சாய்த்து சிரித்தபோது
ஆகாயத்தில் வெறித்ததற்கும்,
"கடிதம் நன்றாய் எழுதுகிறாய் " என்றபோது
முகம் வறல தலை அசைத்ததற்கும்,
சிகை கோதி விளையாடினால்
சிலை போல் சமைந்ததற்கும் ,
அவளின் நினைவே காரணம் எனில்...
எனக்கான நினைவுக்காய்
என்ன உளது உன்னிடம்...
மனசு நுரைக்க ஸ்னேகித்து விட்டு
இன்று பிணமாய் என்னுடன்
கண்மூடி மோகிக்க..
உனக்கு இந்த வாழ்வெதற்கு.??.
என் பிரியம் உனக்கு புரிய...
நானும் உனை பிரிய வேண்டும் எனில்....
அதற்கு நான் தயாரில்லை...
இன்னொரு முறை உன் மனம் கொன்று
எனக்கந்த பிரியம் வேண்டாம்...
என் பிரியம் நிஜமெனில் ...
உனை உயிர்ப்பிக்கட்டும்...!!

அழகிப்போட்டி

நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
நெஞ்சு நிமிர்த்தி
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்
" புற அழகு
பொருட்டல்ல...!!"

நேற்றான நீ

கடிதங்களை பிரித்து
நாளாயிற்று
நிழற்படத்தை வருடி வருடி
நிஜம் மறக்க நேரமில்லை
இப்போதெல்லாம்
தினவாழ்வு அவசரத்தில்
எதிர்ப்படும்
சிறுசிறு நினைவுக்குமிழ்
வெளிச்சமெலாம்
வைரமென்று நெக்குருகி
நெகிழ்வதில்லை
நான் கூட
கண்முன் வாழ்வும்
அது தரும் சவாலும்
அடி வயிறு வரை தித்திக்கும்
உணர்வுக்கு உந்துதலாய்
ஜனித்த விதை வளர்வதையும்
அதை பாலூற்றி நீரூற்றி
என்னில் படர்ந்த கொடி
சீராட்டுவதையும் கண்டதில்
பொருக்குத் தட்டிய
வெளித்தோலுக்குள்
ரணம் மூடி வளர்ந்த
உள்தோலினுள் கிளரும்
நமைச்சலை மீறிய
சந்தோஷம்
நிஜம்....
திணிக்கப்பட்டதே
இத்தனை இதம் தந்தால்
நழுவிய கனவு
நனவாயின் எத்தனை
சுகித்திருக்கும்...??
வாழ்வு.....
இன்பக்கேணிதான்
முகரத்தான் மனக்குவளை
மலர வேண்டும்       

வாழும் இறப்பாய்

வாழும்போது ஒரு விதமாயும்,
அவன் உயிர் போய் வீழ்ந்தபின்னே
ஒருவிதமுமாய்
மாற்றிப் பேசும் மாந்தரின் செயலுக்கு
நரம்பில்லா அவன் நாக்குதான் காரணமோ
என நான் வியந்ததுண்டு ஒரு காலம் ...!!
**********
நாடாண்ட நடிகன் அவன்..
வாழுங்கால் வல்லவனாய் வாழ்ந்தானே ஒழிய
நல்லவனாய் வாழ்ந்திலன்...
விமரிசனம் தாண்டியவனும் அல்ல..
தாங்கியவனும் அல்ல...
காலன் அவனை அழைத்தபோது
ஊர் கூடி ஓலமிட்டது பொன்மனம் பூமியில் புதைந்ததாக...
ஆதிக்க வெறி பிடித்த ஆண்டை என்பர்
குலகல்வி திணிக்கப் பார்த்த குல்லூகப் பட்டரென்பர்
குறைகள் இல்லாமல் இல்லை, உண்டு அனேகம்
பூவுடல் நீத்தபின் மூதறிஞர் உதிர்ந்தார் என்பர்..
வஞ்சமுள்ள நெஞ்சம் உண்டு கஞ்சம் எனப் பழியும் உண்டு
குற்றமற்ற குணக்குன்று அல்ல..
திரையில் நடித்து , நிஜத்திலும் நடிக்கும்
மாபெரும் நடிகன்,
இயல்பாய் இருக்கப் பணித்தால் கூட
அதைப்போல் நடிக்க மட்டுமே முடிந்தவன்...
தலை சாய்ந்தபோது வையமே வாடியது
சிம்மக்குரலோன் சிதைந்ததாக
அரக்கி எனபர், கொடுங்கோலன் என்பர்
பல அரசுகளை பந்தாடும் படுபாவி என்பர்
நெருக்கடி நிலை கொண்டு வந்த நீலி என்பர்
கணவனை தானே கொன்ற காதகி என கதைப்பர்
தோட்டாக்கள் துளைத்து துடி துடித்து வீழ்ந்தபின்
அவரையே அன்னை என்பர்..
***************
மரணம்....
காலதேவன் தரும் இவ் விசேஷ அந்தஸ்து
மாய்மாலக்காரர்களை கூட
மகாத்மா ஆக்கி விடுகிறது...
மரணம் தின்றபின் மனிதனைப் பாடுவது
அதன் மீது மனிதனுக்கு இருக்கும் பயம் பொருட்டே...
செததபின் ஒலிக்கும் இந்த சிந்து
"எனக்கின்ணும் காலம் உண்டு"
என்றெண்ணும் விடுதலை உணர்வே..
**********
இறப்பில் அல்ல..இருப்பிலேயே நாம்
எப்போது
நேசிக்கப்படப்போகிறோம்...
இரஙகல் கூட்டத்தில் மட்டுமின்றி
இருக்கும்போதே நாம் எப்போது
பாராட்டுப் பெறப்போகிறோம்
உண்மையாய்....
பாராட்டுக்கள் பிணமாலை போலன்றி
நிஜமாலையை நேர்மையாய் பெறும்
அந்த நியாயமான கழுத்து
நம்மில் யாருடையது...???

மிடில் க்ளாஸ்

மூன்று சக்கர சைக்கிளுக்கும்
பாலியஸ்டர் சட்டைக்கும்
பைநிறைய தீபாவளி வெடிக்கும்
முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும்
கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும்
அட்மிஷனுக்கு பணம் கேட்ட
விருப்பமான கல்லூரிக்கும்
சம வயசு நண்பர்களுடன்
ஆடித்திரிய சுற்றுலாவுக்கும்,
மனசுக்கு பிடித்தவளை மணப்பதற்கும்
மறுப்பாய் அம்மா சொன்ன பதில்
"நாம மிடில் க்ளாஸ் டா.."
அலுப்படைந்த மனசுக்கு
உருவேற்றி வெறியேற்றி
கணிணி கற்று
மானேஜனுக்கு ஊற்றிக் கொடுத்து
கண்டவனை காக்காய் பிடித்து
தூதரக வாயிலில் பகீரதம் பண்ணி
அயல் தேசம் வந்திறங்கி
லட்சங்களில் கார் வாங்கி
டாலரில் சம்பாதிக்கும் நான்
இன்று வாழ்வதும்
அமெரிக்காவில் அதே வாழ்வுதான்...
வசதி உசந்தது என்னவோ வாஸ்தவம்..
ஐம்பது ரூபாய் கடன் வாங்கினவன்
ஐந்நூறு டாலர் கடன் வாங்குகிறேன்...
மத்தியவர்க்கம் வகை அன்று;குணம்..!!

தாகம்

சாலையில் வாகனம் சற்றே முந்தினும்
சரசரவென்று கிளம்பும் கோபமும்
கற்ற வித்தை குறைவெனினும் நண்பன்
குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும்
மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர
உள் எரிந்துகொண்டே இருக்கும் வெறியும்
கூட்டமாய் ஓடுகையில் இலக்கு பற்றியெண்ணாது
எதிராளியின் வேகத்தினான பதட்டமும்
பெரியரென சொல்பவர் சிறுமையின்
அடையாளமாய் இருத்தலால் வரும் சீற்றமும்
கட்டியதோடு பெற்ற செல்வமும் அகத்திருக்க
கணநேர தவறலில் தறிகெட விழையும் சிறுமனமும்,
உயிரனைய உறவின் சுயநலம் புரியினும்
கோழையாய் எதிர்கொள்ளும் புரியாப் பொறுமையும்
சரியா.....சரியா...சரியா....??
பதில் கிடைக்கும் நேரம்
அவசியம் இல்லாது போகும்..
வரும் தலைமுறைக்காய் பதில்களை ஈந்தால்
தந்த பதில்களில் நூறு கேள்விகள் முளைத்தெழும்...
கேட்டதும், கிடைத்ததும் , தேடியதும் வீணென
மன்ணில் மண்டியிட்டழ ...
காதருகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கும்
சிரித்த குரல் இதுவே வாழ்க்கையென விளம்பிப் போகும்.!!

வெளி

முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற *
மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில்
சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும்
கேள்வி முளைக்கும்....
***
வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில்
அதன் நிலையாமயின் நினைவு வந்து சுரீரென்று தைக்கும்
நன்று செய்தாய் நம்பி என பணியிடத்தில் புகழப்படுகையில்
என்னிலும் கூர்மையானோர் நினைவு வரும்
தோற்றப்பொலிவு கண்முண் தெரிகையில் இதனால்
தோற்றோர் பட்டியல் நினைவு வரும்
சுயநலமற்று விட்டு கொடுத்தோமே என இறுமாந்திருக்கையில்
தனைப் பெற்ற தாயவளின் நினைவு வரும்
நாள் முழுக்க வேலை செய்தும் கூலிக்கே அல்லாடும்
ஏழையொருவனின் சாயந்திர நேரத்து சதிராட்டத்தை
விளைவுகளை யோசியாமல் அவன் வீசி வீசி பேசுவதை
மனத்துள் கனம் கொள்ளாது அக் கணத்துக்காய் அவன் வாழ்வதை
சிந்தனைக்குள் குறுகாமல் அவன் குதியாட்டம் போடுவதை
அன்றைய நாளில் அவன் வெற்றியை மனதார ருசிப்பதை
காணுகையில்............
புலம்பலில் இறங்கும் மனது, பொருமலில் தொடர்ந்து
கேள்வியில் திணறும்
*******************
சுதந்திரமென்றெதனைச் சொன்னார்....??
பிரச்சினைகளினின்றும் சுதந்திரமா...
சூழல்களின் சுழல்களினின்றும் சுதந்திரமா...
சிந்தனையற்று சும்மா இருக்கும் சுதந்திரமா...
எனில் இதுவே துறவோ...??

வளர்சிதை மாற்றம்

கிட்டிப்புல் செய்து தரவும்
பள்ளியில் விட்டு வரவும்
கிரிக்கெட்டு மட்டைக்கு
வண்ணம் பூசவும்
தோளில் தூக்கி சாமி ஆடவும்
ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும்
காட்டாமணக்கில் குமிழி ஊதவும்
பால்யத்தில் பாதி நேரம்
என் தாத்தாவின் வயதை ஒத்த
வீட்டாள் முனுசாமி கூடத்தான்
சாப்பிடும் நேரம் மட்டும்
அவன் கொல்லை நடையிலும்
நான் கூடத்திலும்...
அவன் நீர் குடித்த குவளை கூட
நீர் தெளித்தே வீட்டுள் வரும்
வளர்ந்து , கிளைத்து
முதிர்ந்து வெளிப்படர்ந்து
திரைகடலோடி
வெள்ளையை தவிர
மற்றதெல்லாம் கறுப்பெனவே அறிந்த
அயலகத்து மக்களுள்
இத்தனை கலந்தும்கூட
கண்ணுக்குத் தெரியாதொரு
சுவரை கடந்து விட்டு
தூக்கி வெளி வீசப்பட்ட
அந்த ஓர் நாளில்
சட்டென
கனவு கலைந்தது..

யாதுமாகி

தவறவிட்ட தருணங்கள்
தழும்பாகி
சொரிந்துகொள்ள
உணக்கையான
காயமாகி
உள்ளுக்குள் அடிபட்ட
ஊனமாகி
அவசியத்தை
வலிக்குள் பொதித்த
நிகழ்கால தேடலின்
மையமாகி.......
டாஹோ
மலைத்தொடரில்
க்ராண்ட் கான்யான்
பள்ளத்தாக்கில்
கோல்டன் கேட்
பாலத்தில்
நயாகரா
நீர்வீழ்ச்சியில்
எங்கேயோ கூடப்படித்த
கருணாநிதியும்
அகஸ்மாத்தாய் சந்தித்த
ஆராவமுதனும்
அப்பாவின் பால்ய
நண்பரும்
சிங்கப்பூர் செல்வசேகரனும்
தட்டுப்பட
எங்கே நீ....???

உனக்காக

அருகே கிடத்தி
கதை சொல்லி தூங்க
வைக்க தகப்பனுக்கு
சமயமில்லை
ஆதுரமாய் சோறூட்டி
விக்கலுக்கு நீர் தர
அன்னைக்கும்
வாய்க்கவில்லை
ஆண்டுக்கோர்முறை
தூர தேசத்தில் இருந்து
பரிவோடு எனை பார்க்க
பாட்டி மட்டும் வருவாள்..
பள்ளியில் என் ப்ரிய
மெக்ஸிகன் ஸ்நேகிதி
பின் என் கறுப்பின
விளையாட்டு தோழன்
அரிதாய் சில ஐரோப்பிய
சகாக்கள்
பகலின் தனிமையில்
என் ஜன்னலோரக் குருவி
கலர் கலராய் முகம் காட்டி
வெறுமை கொல்லும்
கார்ட்டூன் டீ.வி
திடுக்கென்ற விழிப்பு
தரும் துர்சொப்பனங்கள்
இத்தனை மட்டுமே
இருக்கும் என் சிறு உலகுள்
அம்மா . அப்பா மட்டும் ஓடி ஓடி
பொருள் சேர்ப்பர்
எல்லாம் எனக்காம்....!

நெறி

ஸ்நேகம் கொண்டவளையே
மணமும் சேய்து நிறைவாய்
வாழும் நண்பனை கண்டு
எரிச்சல் மூண்ட போதும்
இத்தனை காலமும் கண் மூடி
ரசித்த பாட்டுக்கள் திடீரென
அபத்தமாய் போனதும்
பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில் நிற்க
அடமாய் உட்கார்ந்திருந்த போதும்
எத்தனை குவளை விஸ்கியிலும்
ஏறவே ஏறாத போதையிலும்
கடையாள் விநோதமாய் பார்க்க
நீ தடுத்திருந்த பளீர் பச்சையில்
உடுத்த எடுத்தபோதும்
சாலை கடக்க சிரித்து நடக்கும் ஜோடியொன்று
தினவு தீரவே அலைவதாய் நினைத்தபோதும்
தேடித்தேடி பட்டினத்தாரில் நட்டதையும்
தொட்டதையும் படித்தபோதும்
சட்டென்று எழுத கவிதைகளே கிடைக்காது
போனபோதும்தான்
தெரிந்தது...
உன்னை இழந்ததில் உண்மையில்
நான் இழந்தது எதுவென்று....

மகாபலி

நிகழ்கால உவப்புகளும்
எதிர்கால கனவுகளும்
நெஞ்செலாம் நிறைந்துவழிய
நுரைக்க நுரைக்க காதலிக்க
எனக்கும் ஆசைதான்....
வாலிப உச்சத்தில்
காணாத உயரங்களும்
போகாத தூரங்களும்
எட்டிவிட,
வார இறுதி விடுமுறைகள்
எனக்கும் வேண்டும்தான்...
வேலைநாட்களில் கணிப்பொறியும்
ஓய்வுவேளையில் ஒயின் குப்பியும்
காரோடு  வீடுமாய்
பூந்தொட்ட நடுவில்
புதுசாய் கட்டின பெண்ணோடு
சொகுசாய் குடியிருக்க
எனக்கும் விருப்பம்தான்...
மனிதனாய் வாழ விடவில்லை
இம் மண்ணுலகம்
மாவீரனாய் சாகிறேன்
சாதாரணனாய் வாழ இயலவில்லை
ரணப்பட்ட நிணமாகி
சரித்திரனாய் சாகிறேன்
மனிதம் செத்து மரணம்
தழுவும் என்னை
உலகம் அழைப்பதோ
மனிதவெடிகுண்டு
என்று....!!!

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...