Friday, April 29, 2005

சன் டீவி

ஆஹா...ஜென்ம சாபல்யம்.

வெகு நாட்கள் கழித்து சன் டீவி மறுபடி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ, கொஞ்சம் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது. காலை வேலைகளில் பார்க்க முடியாமல், சாயங்காலம் வந்தால் செல்வி, மனைவி, கணவனுக்காக என்று ஒரே சீரியல் மயம். விரும்பிப் பார்க்கும் செய்திகளும் சவ சவ என்று இருக்கிறது. செய்தி வாசிக்கும் அம்மணிகளின் அலங்காரம் தவிர்த்து.
மற்றபடி நண்பர்கள் சொன்னது போல பிளட்பிரஷர் ஏறும் அளவிற்கு எந்த செய்திகளின் விவரிப்பும் தற்போது இல்லை.

விளம்பரங்களில் ஏகப்பட்ட செல்ஃபோன்களையும், கார்கள்/suv களையும் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு நகைக்கடை விளம்பரத்தில் வந்த பெண்களை " ஹி..ஹி..இப்பல்லாம் மாடல்களே இவ்ளோ அழகா இருக்காங்களா" என்று வியந்தபோது, "ம்..நல்லா கண்ணாடிய தொடைச்சிட்டு பாருங்க. எல்லாருமே நடிகைகள்" என்று நங் என்று விழுந்தது. ஏகப்பட்ட பாட்டுகள் இரவு 10 மணிக்கு மேல் திரைமசாலாவில் ஒளிபரப்பாகிறது. கண் விழித்துப் பார்க்க முடியாததால், DVR ல் எல்லாவற்றையும் டைம் செட் பண்ணி ரெகார்ட் செய்து வைத்து விட்டு மறுநாள் சாயங்காலம் சீரியல் ஓடிக்கொண்டிருக்கும்போது, பார்க்கிறோம். "சன் டீவியின் கமல் மாலை" யும், "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டும் சூர்யாவின் நாவில் விளையாடுகிறது.

அன்று காலை யதேச்சையாக பார்க்கும்போது சத்யராஜ் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரிஜினல் ரங்கராஜ் கேள்வி கேட்க, டோப்பா மாட்டி பான்கேக் தடவிய ரங்கராஜ் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ரெகுலர் சத்யராஜ் பிராண்ட் லொள்ளு என்றாலும், அவர் சொன்ன பல விஷயங்கள், அவர் ஞாபகப்படுத்திய பல பழைய படங்கள் திறமைக்கு சான்றாக இருந்து இத்தனை வருடம் ஃபீல்ட் அவுட் ஆகாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் சொல்லிக் கொண்டிருந்தன. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி அத்தனை கண்டுகொள்ளாமல், கூத்தாடி ஸ்டைலில் "வெளியிலிருந்து" பதில் சொன்ன சத்யராஜ், நிஜமாவே நன்றாக பதில் சொன்னார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே, பாலைவன ரோஜாக்கள், போன்ற படங்களில் எல்லாம் நடித்து அசத்தியவர் தன்னுடைய விமரிசன லொள்ளால், மகாநடிகன் போன்ற படங்களில் - அவர் உண்மையை சொன்னாலும்- கூட, பல தரப்பில் இருந்தும் எதிரிகளை சம்பாதித்துக் கொள்வது வேதனைக்குரியது

******

கொஞ்ச நாள் ட்ராஃப்ட் ஆக வைத்திருந்து விட்டு இன்று மறுபடி தொடர்கிறேன் - தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சிகள் பார்த்து விட்டு.

*******

வழக்கம் போல தமிழ்ப்புத்தாண்டுக்கு சாமி கும்பிட்டு விட்டு, நெற்றியில் உள்ள விபூதியை அழித்து விட்டு ஆஃபிஸ் போவதற்குமுன், காலை ஏழரையில் இருந்து இரவு வரை எல்லாவற்றையும் ரெகார்ட் செய்யுமாறு செட் பண்ணிவிட்டுப்ப்போய், மாலையில் வந்து பார்த்தேன்.

இசைக்குயில்கள் என்ற பெயரில் நடிக நடிகைகளை பாடச்சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்தபோது ஸ்ரீகாந்த் ஆப்பிள் பெண்ணே நீ யாரோவை, கத்தரிக்கா வெண்டைக்கா ஸ்டைலில் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மீனா வந்தார். பீல்டவுட் ஆகி, தொழிலதிபர் கூட கல்யாணத்துக்கு காத்திருக்கும் வாட்டத்தோடு பாடினார் - ஒன்றா இரண்டா ஆசைகள் பாடலை. ஆல்பத்தில் எல்லாம் பாடி இருப்பவர் என்று நம்ப முடியவில்லை. காமெடி விவேக் வழக்கம் போல வந்து தானே எழுதிய பாடலை பாடி லந்து பண்ணிவிட்டுப் போனார்.
சங்கு ஊதுவேன் / ப்ளாட்ஃபாரம் தான் உனக்கு போன்ற வரிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். பின்னர் வந்தார் வசுந்தரா தாஸ். கொஞ்சும் நிலவு, கொஞ்சம் நெருப்பு பாடலை அத்தனை அநாயாசமாக ஹை பிட்ச்சில் பாடி மனதை கொள்ளை கொண்டது குழந்தை. காதல் சந்தியா தலை விரித்துப் போட்டுக் கொண்டு வந்து நினைத்து நினைத்துப் பார்த்தார். அதுவும் சுமார் ரகம்தான்.

பிறகு நயனதாராவை பேட்டி கண்டார்கள். அதிகம் கேட்க ஸ்கோப் இல்லாததால் ஐயா பாடல்களாக போட்டு தாக்கி விட்டார்கள். சினிமாவில் ஹோம்லியாக இருக்கும் பெண், பேட்டியில் மகா மாடர்னாக இருக்கிறது. தமிழ் தெரிந்தும், பேசினால் மதிப்பில்லை என்பதால் ஆங்கிலத்தில் மிழற்றியது. சப் டைட்டில் போட்டாவது இவர்களை பேட்டி எடுக்கத்தான் வேண்டி இருக்கிறது- இல்லாவிட்டால் வாயைத் திறந்து கொண்டு பார்த்து ஜொள் விட்டு விட்டு இப்படி வக்கணையாக வந்து எப்படி குறை சொல்லி எழுதுவது..? :-)
சதாவின் பேட்டி கூட மேலே சொன்னது போல்தான். அங்கேயும் சப்டைடில்ததான். இருவருமே வளர்ந்து வருபவர்கள் என்பதால் கூட நடிக்கும் நடிகர்களை வஞ்சனை இல்லாமல் புகழ்ந்தார்கள்.

*********
மறுபடியும் இன்று தொடர்கிறேன்

**********



சன் செய்திகளைப் பற்றி சொன்னேன் அல்லவா..?? இப்போது போனஸாக அமெரிக்க பசிபிக் நேரம் இரவு ஒன்பதரைக்கு சன் நியூஸ் தொலைக்காட்சி செய்திகளை காண்பிக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்தோடு பெரும்பாலும் கருணாநிதியின் பெயரையோ அறிக்கையொ செய்தியில் வந்தௌ விடுகிறது. நேற்று வந்த செய்திதான் படு தமாஷ். அப்துல்கலாம் இளைஞர்களை கனவு காணச் சொன்னார் என்பதற்காக, ஒரு இளைஞர் "தூங்கினாராம்". அவருக்கு கருணாநிதி அறிவுரை சொல்வது போல ஒரு அறிக்கை. " குடியரசுத் தலைவர் விழித்துக் கொண்டே எதிர்காலத்தைப் பற்றி கனவு காணச் சொன்னதை இப்படி நேரடியாக பொருள் கொண்டாயே தம்பி" என்று ஒரு அறிக்கை. விகடன் ஜோக் படிப்பது போல இருந்தது. :-) . செய்தி வாசிக்கும் நபர்களின் அங்க சேஷ்டைகள் அதற்கும் மேல். எதுகை மோனை எக்கச்சக்கமாக கொட்டி வைக்கப்பட்ட வார்த்தைகளை, செய்தி சேகரிக்கப்போன இடத்தில், இவர்கள் கை/கால்களை ஆட்டி ஆட்டி பேசும்போது, திமுக பேச்சாளர்களை பிடித்துக் கொண்டு வந்து செய்தி வாசிக்க விட்டா மாதிரி இருக்கிறது. அதை விட கொடுமை - செய்தி வாசிக்கும் ஒருவர் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, உடம்பை குலுக்கி, இந்த கையில் இருக்கும் பேனாவை அந்தக் கைக்கு துக்கிப் போட்டு, நர்த்தன நடராஜனாக செய்தி வாசிக்கிறார். அங்க சேஷ்டைகளில் காட்டும் ஆர்வத்தை செய்திகளின் தரத்தில் காட்டினால் புண்ணியமா போகும் சூரியக்குஞ்சுகளே..

Thursday, April 28, 2005

(க)சளைப்பா..??

இன்று காலை எனக்கு ஒரு மின்மடல் வந்தது.

தாய்மையுற்றிருக்கும் என் நண்பனின் மனைவி பேறுகால சோம்பலைப் போக்கவும், தினப்படி வாழ்க்கையில் கொஞ்சம் ஸ்பைஸ் சேர்த்துதுக்கொள்ளவும், சுஜாதாவின் கதைப் பட்டியல் - உங்கள் சிபாரிசுப் பட்டியல் - எனக்கு அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். கண்டிஷன் - எல்லாக் கதைகளில்ம் கணேஷ்/வஸந்த கட்டாயம் இருக்க வேண்டும்.



இணையத்தில் தேடியபோது ஸாருக்கு ஒரு விக்கி பீடியா இருப்பது தெரிய வந்தது. அங்கு பிடித்து நம்ம தேசிகனின் சுஜாதா பக்கம் போனபோது சப்ஜாடாக அத்தனை கதைகளின் பட்டியல் கிடைத்தது. அத்தனையிலும் தேடி அனுப்பிய லிஸ்ட் கீழே. பதிலில் " இந்த அத்தனை கதைகளிலும் கணேஷ்/வசந்த வருகிறார்களா என்பது நினைவில் இல்லை. ஆனால், வராவிட்டாலும் பாதகமில்லை - மற்ற கதைகளும் சுவாரசியமானவைதான் என்ற குறிப்போடு அனுப்பி வைத்தேன்.

நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
ப்ரியா
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
கொலையுதிர் காலம்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
கரையெல்லாம் செண்பகப்பூ
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வசந்த் வசந்த்
வைரம்
ஜன்னல் மலர்
பிரிவோம் சந்திப்போம் 1
பிரிவோம் சந்திப்போம் 2
மேறெகே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு

யோசித்துப் பார்த்தால் - நான் உள்பட பெருவாரியான வாசகர்கள் கணேஷ்/வசந்தைப் பிடித்துதான் உள்ளே போனோம். கொஞ்ச நாள் கழித்து இந்த இலக்கியக் கடத்தல்காரர் என்னை வேறு பிரதேசங்களுக்கு கடத்திவிட, அவருடைய க்ரைம் கதைகளை விட சமூகக்கதைகளே அதிகம் பிடிக்க ஆரம்பித்தது. பிறகு அதுவும் குறைந்து அவரின் விஞ்ஞான சிந்தனைகள் மற்றும் கட்டுரைகள் பால் அதிகம் ஈர்க்கபட்டேன். யவனிகா படித்த போது கோபம் கோபமாய் வந்தது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் மறுபடி எழுதியபோது துள்ளல் குறைந்திருந்தது. ச ரி...தாத்தா மெல்ல நமத்துப் போகிறார் என்று எண்ணிக் கொண்டே அவருடைய கதைப் பட்டியலை எதையோ இழந்து விட்ட ஏமாற்றத்துடன் துழாவிக் கொண்டு, இன்றைய விகடனில் கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டே மானிட்டர் ஸ்க்ரீனைப் பார்த்து அரைப் பைத்தியம் போல சிரித்துக் கொண்டிருந்தேன்.

இவருக்கா களைப்பு..?? ம்ஹூம்.

Tuesday, April 26, 2005

Sideways

ஸ்ரீரங்கத்து தாத்தா ரெகமண்ட் பண்ணிய படம் என்பதனால் பார்த்தேன். அவர் முதல் சொன்ன ஃபோன்பூத் சுமார் ரகம் என்றாலும் ரசிக்க வைத்த முயற்சி என்ற வகையில் அவர் சிபாரிசுகளின் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.

படம் சோகையாக ஆரம்பிக்கிறது. பழைய வாடை அடிக்கும் வாத்திய ஓசைகளுக்கு நடுவே ஒரு நடுவயது குறுந்தாடி அவசர அவசரமாக எழுந்து, அத்தனை அவசரத்திலும் ஆய் போய்க்கொண்டே புத்தகம் படித்துவிட்டு, குப்பையாக கிடக்கும் வீட்டின் படுக்கையறையில் உள்ள உடைகளை அப்படியே சுருட்டி எடுத்து பைக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு, சான் டியாகோவிலிருந்து கிளம்புகிறது. சடுதியில் லாஸ்ஏஞ்சலிஸ் வந்து, ஒரு பார்ட்டியில் கடைசி ஆளாக குதித்து விட்டு, அங்கு தனது நண்பனை லபக்கிக் கொண்டு மறுபடியும் காரில் கிளம்புகிறது. ரெண்டு பேரும் கலிஃபோர்னியா வைன் கவுண்டி வழியே டூர் போகிறார்களாம். குறுந்தாடி ஒரு வித்தியாச எழுத்தாளன். மற்றவன் ஃபீல்ட் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் நடிகன்.



நடிகனுக்கு வார இறுதியில் (போன வருட டைவர்ஸுக்கு பிறகு) மறுபடியும் கல்யாணம். ரெண்டு பேரும் கல்லூரி கால நண்பர்கள்....ஆச்சா..களம் ரெடி. ரெண்டு பெரும் வாழ்க்கையிலும்/தொழில் ரீதியாகவும் அத்தனை வெற்றி பெற்றவர்களாக இல்லாதிருந்தும் நடிகன் எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ளும் பேர்வழி. எழுத்தாளனுக்கு எல்லாமே சீரியஸ். எதையும் மறக்காததால், எதையும் புதுசாக செய்ய/ முயல ஏலாமல் சுயபச்சாதாபத்தோடு சுற்றி வரும்
ஒரு ஸினிகல் பஸ் மண்டை. எழுதும் கதை பப்ளிஷரால் ரிஜெக்ட் ஆகிறது. தண்ணி அடித்து விட்டு விவாகரத்தான மனைவியை அகாலத்தில் கூப்பிட்டு, இவன் பினாத்த முயல, அவள் ரெண்டாங் கல்யாணம் கட்டிக் கொண்டு, பிள்ளை பெத்துக் கொண்டிருக்கிறாள். ஒயின் மீது அபாரமான ஆர்வம். பின்னவனுக்கு எல்லாமே அந்த க்ஷணத்துக்கான சமாசாரம். பாரில் பார்க்கும் ஸ்டெஃபனியில் இருந்து ரெஸ்டாரெண்டில் அம்பு போட முயலும் பணிப்பெண் வரை. ரெண்டு துருவங்களை காட்டி, கடைசியில் எழுத்தாளனை கொஞ்சம் சராசரி லெவலுக்கு இறங்கச் செய்து, அவன் தன் புது காதலியின் வீட்டுக்கதவை தட்டும் ஷாட்டில் படம் முடிகிறது.

டைரக்டர் அலெக்ஸாண்டர் பெய்ன். அண்ணனின் மற்ற படங்கள் எதுவும் நான் கண்டிலன். ஆனால் ஒரு சீரியஸான, சோகமான ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை, அவனுடைய - நல்லவனாக , கோழையாக இருப்பதானல் அமெரிக்க ஆள் விழுங்கி சமுதாயத்தில் தனியனாகப் போகும் - சோகத்தை அழகாக சொல்லி இருக்கிறார். வசனம் நிறைய இடங்களில் ஆழமாக இருக்கிறது. ஒயினைப் பற்றி ஒரு தீஸிஸ் பண்ணும் அளவுக்கு அத்தனை விவரங்கள். எனவே எனக்கு ரொம்ப பிடித்தது. (இந்தியாவில் இருந்த காலங்களில் கொல்கொண்டா என்று ஒரே ஒரு ஒயின் தான் கிடைக்கும் லோக்கல் பார்களில். அதுவும் கழுதை மூத்திரம் மாதிரி இருக்கும். இங்கோ ஸின்ஃபாண்டல், மெர்லோ, பைனட் நாய்ர், போர்ட் என்று விதம் விதமாக ஸ்ட்ராபெர்ரி பழத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறேன் :-) ).

படத்தில் நடித்த நடிகர்களை நான் இதுவரை பார்த்த படங்களில் பார்த்ததில்லை என்பதனால் அவர்களுடைய இந்தப் பட பர்ஃபாமென்ஸ் மட்டும்தான் தெரிகிறது. அது நேர்த்தி. எழுத்தாளனின் காதலியாக வரும் அம்மணி வேஷத்துக்கு நம்மூரில் சுகாசினி பொருந்தி இருப்பார்.

பரபரப்பான சம்பவங்கள், கஜ கஜ துரத்தல்கள், அதிவேக இச் இச் கள் தேவை இல்லாமல், ஒரு மழை நேர மத்தியானத்தில் த்ந்தூரி சிக்கனுடன், ஒயின் சப்பிக் கொண்டே பார்க்க விரும்பும் சோம்பேறி ஆத்மாக்களுக்கு நிறைவான படம்.

Monday, April 25, 2005

எல்லாம் நேரம் ....

கமல் படங்களை பொறுத்தமட்டில் வெகுஜனங்களுக்கு இருக்கும் அபிப்ராயம் நமக்குத் தெரிந்ததுதான். மசாலா படங்களைப் பார்த்து கை தட்டி, குதூகலித்து குழந்தையாகி குதிக்கும் ரசிகமனசுகள், கமல் தரும் படங்களுக்கு அத்தனை விருப்பப்பட்டு மாலை சூடுவதில்லை. அது தெரிந்தே கமல், தனக்கென்று ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டு, நகைச்சுவை என்றாலும், சீரியஸ் படம் என்றாலும் வித்தியாசமான முயற்சிகளை அவ்வப்போது தந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவருடைய முயற்சிகள் ரசிக்கப்படுவது, அவர் தருவதைவிட அதே காலகட்டத்தில் மற்றவர் தருவதை வைத்துதான் என்று நிரூபணமாகி இருக்கிறது.



மும்பை எக்ஸ்பிரஸ் விமரிசனங்களை நமது விவரமான நண்பர்கள் சிலர் கூட காட்டமாக தந்திருந்தாலும், கமல் மீது நம்பிக்கை வைத்து போய் பார்த்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கமல் ஏற்படுத்தி வைத்திருக்கிற எதிர்பார்ப்புகளிலும், அளவுகொள்களிலும் இம்மி குறைந்தால் கூட நிர்தாட்சண்யமாய் ஒதுக்கும் மக்கள், வேறு எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் தொடர்ந்து மசாலாக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நாயகர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பதன் மர்மம் புரியவில்லை. எல்லாம் சுழிதான்...

படத்தில் ஒளிப்பதிவு மோசம் என்கிற ஒரு குறையத்தவிர ( அதுவும் டிஜிடல் தொழிநுட்பத்தின் ஆரம்பகட்ட முயற்சி என்கிற வகையில் மன்னிக்கப்படக் கூடியதே...) வேறு குறை ஒன்றும் இல்லை. தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்களும் நிஜமாகவே ரசித்துப் பார்த்தார்கள். கமலின் வசனமும், பசுபதி/வையாபுரி/ரமேஷ் போன்றவர்களை அவர் பயன்படுத்தி இருக்கும் விதமும் யார் கன்ணிலும் சரியாகப் படவில்லை போல. படத்தில் நிறைய இடங்களில் காமெடிக் காட்சிகள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கின்றன. வெறும் துணுக்குத் தோரணங்களிலும், ஒருவர் மற்றொருவரை அடிப்பதை வைத்தும் காமெடிக் காட்சிகளை பார்த்து பழக்கப்பட்ட ரசிக மகாஜங்களுக்கு இது சிரமமாகி விட்டது . டிராஃபிக் கான்ஸ்டபிளை மடக்கி விட்டு, அவரிடம் ரீல் ரீலாக சுற்றி விட்டு, பசுபதியிடம் அழைத்து வரும்போது, அவர்கள் மூவருக்குள் நடக்கும் உரையாடல், அந்த சமயத்தில் சட் சட்டென்று மாறும் பசுபதியிம் முகபாபவங்கள் ...என்று படம் முழுக்க இனிமையான ரகளை.

ம்..என்ன சொல்ல... "அண்ணணோட" முந்தின படம் ஊத்திக்கிட்ட சோகத்துல, சந்திரமுகி( இன்னம் நான் பாக்கலை - அடுத்த வாரம் தான்) யை ஹிட்டாக்கின
ரசிகர்கள், மும்பை எக்ஸ்பிரஸுக்கு பிகிலு ஊதிட்டாங்க.

விகடன்ல/குமுதத்தில் பாராட்டினா போதுமா..?? பேசாம ஒரு மாசம் கழிச்சி ரிலீஸ் பண்ணி இருக்கலாம். ...ஹூம்..

Monday, April 11, 2005

Ozymandias


I met a traveler from an antique land
Who said: Two vast and trunkless legs of stone
Stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown,
And wrinkled lip, and sneer of cold command,
Tell that its sculptor well those passions read,
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them, and the heart that fed,
And on the pedestal these words appear
"My name is Ozymandias, King of Kings:
Look upon my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.
- Percy Bysshe Shelley1792-1822
மாறுதலுக்கு இன்று ஒரு ஆங்கில கவிதை. படம் நடிகை கஜாலா.
எதிர்பார்ப்புகளுக்கு நான் குறையே வைப்பதில்லை :-)

Friday, April 08, 2005

சூரியனைப் பார்த்து குலைக்க ....


விகடன் ஜெயகாந்தன் பேட்டியும், அதி கறுப்பிலும்/சிவப்பிலும் எனது அவதானிப்புகளும்

‘‘தமிழ்ப் பாதுகாப்புக்காக ஒரு இயக்கம் தொடங்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார்களே...’’

‘‘திருவாளர் ராமதாஸ் போன்றவர்களுக்குப் பிடித்திருப்பது பற்றல்ல... அது அரசியல்! எதையும் யார் மீதும் திணிக்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். அது தமிழாக இருந்தாலும்..! எப்படிப் பெயர் வைப்பது என்பதெல் லாம் அவரவர் விருப்பம். நீங்கள் உங்கள் கருத்தைப் பிரசாரம் செய்யுங்கள். ஆனால் யார் மீதும் உங்கள் கருத்தைத் திணிக்காதீர் கள். மிரட்டாதீர்கள். அது காட்டு மிராண்டித்தனம்! நினைத்தால் இங்கே யாரும் எப்போதும் சண்டியர் ஆகலாம். சான்றோர்கள் நினைக்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆமாமாம்..ரவி சுப்ரமணியமும், அப்புவும், கதிரவனும் இருந்தால் ,,,

‘‘திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள்தான் இன்று ஓரளவாவது தமிழைக் காப்பாற்றி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?’’

‘‘முதலில் திராவிட இயக்கம் என்றால் எது? அவர்களின் கொள்கைகள் என்ன? சொன்னவற்றில் இதுவரை எதையெல்லாம் அவர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள்? திராவிட இயக்கத்தவர்கள் தமிழை வைத்து தற்கொலை செய்துகொண்டவர்கள். ‘ஐயோ பாவம்!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!’’

தமிழை வைத்துப் பிழைத்துவிட்டார்கள் என்று சொல்கிறார் ஓரிடத்தில் இன்னொரு பக்கம் தற்கொலை என்கிறார். ஸார் தெளிவாத் தான் இருந்தாரா..??


‘‘திராவிட இயக்கங்களால் நன்மையே விளையவில்லையா?’’

‘‘தி.மு.க. பதவி ஏற்றதிலிருந்து தமிழகத்தின் ஒழுக்கமும், நற்பெயரும் சீரழிந்துபோனது என்பதுதான் நிதர்சனம். வளர்ச்சி இவர்கள் இல்லா விட்டாலும் ஏற்படும். நாம் வளர்கிற நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அரசியலுக்கும், ஆட்சியதிகாரத்துக்கும் லாயக்கற்றவர்கள் என்பது தமிழர்தம் அனுபவம்!
இதை அப்போதே, ‘தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று காமராஜர் எல்லாருக்கும் போதித்தார். யாரும் கேட்கவில்லை. மட்டைகள் என்றால் அந்தக் கட்சிகள். குட்டை என்றால் என்ன? ஊழல் குட்டை!
திராவிடர் கழகம் போல இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் அரசிய லில் இருந்து இனியாவது விலகி இருந்தால், தமிழகத்தின் எஞ்சிய மானமாவது மிஞ்சும்!’’

இவர்கள் இல்லாவிட்டாலும் வளர்ச்சி இருந்திருக்கும் என்பவர், இவர்கள் இல்லாதிருந்தால் ஊழலும் இல்லாதிருக்கும் என்று அறுதியிட்டு சொல்வாரா..??வரலாற்றை தான் விருப்பியபடி திருத்த தோழருக்கு முடிந்திருக்குமா..??


‘‘நீங்கள் ஆதரித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியே, திராவிட இயக்கத்துடன்தான் கூட்டணி வைத்திருக்கிறது?’’

‘‘இல்லையில்லை! தி.மு.கதான் காங்கிரஸ§டன் கூட்டணி வைத்திருக் கிறது. அ.தி.மு.க&வைத் தவிர, தி.மு.க. கூட்டணி வைக்காத கட்சி இங்கே வேறு என்ன இருக்கிறது?’’

காங்கிரஸைத் தேடி தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறதா..?? ஏதாவது ஒரு மாநிலக்கட்சிகளின் மீது சவாரி செய்வதில் பா.ஜ.கவுக்கும், காங்கிரஸுக்கும் போட்டி அல்லவா நடக்கிறது..??

‘‘பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிடப் பாரம்பரியத்தையே நீங்கள் அடியோடு மறுக்கிறீர்களா?’’

‘‘அந்த வரிசை, எப்படி படிப்படியாகக் கீழே இறங்கி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது தெரியவில்லையா?’’

நேரு, இந்திரா காந்தி, சஞ்சய்காந்தி, ராஜிவ்காந்தி , சோனியா காந்தி என்பது மட்டும் வளர்ச்சியாக்கும்..?? ஆமாம்..குடும்பத்தின் வளர்ச்சிதான்

‘‘தமிழகத்தின் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?’’

‘‘அந்த ஆட்சி நடந்து முடியட்டும்!’’

எல்லா ஆட்சி நடந்தபோதும் இதைத்தான் சொன்னாரா..??

‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி...’’

‘‘ஏன் வம்பு?’’

அடேங்கப்பா...என்ன பயம்...?? திராவிடத்தலைவர்கள் எல்லாம் ஜெயலலிதாவைப் போல அராஜக ஆசிட் அரசியல் நடத்தினால் ஜெயகாந்தன்களின் வீரமுழக்கம் இப்படித்தான் இருக்குமோ..?? அவர்களையும் தொடாதோ..??


‘‘பயமா?’’

‘‘பயம் அல்ல... பெண் என்பதால் ஒரு மரியாதை!’’

அடேங்கப்பா...ஜெயகாந்தனின் இந்த பல்டித்திறமை கூட அரசியலில் அவரைக் காப்பாற்றவில்லையா..ஆச்சரியம்தான்.

‘‘தி.மு.கவை விமர்சிக்கிற அளவு அ.தி.மு.க\வை விமர்சிக்கத் தயங்குவது ஏன்?’’

‘‘என் எழுத்துக்களை, கட்டுரைகளை, விமர்சனங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியே வராது.’’

‘‘முன்னுதாரணமாகத் திகழும்படியான தலைவர்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமா?

‘‘யாரும் பின்பற்றத் தயாராக இல்லாததால் அப்படியாகிறது. ஏன் யாரும் பின்பற்றவில்லை என்று கேட்பீர்களானால், தலைமையின் லட்சணம் அப்படி இருக்கிறது.’’

‘‘ஆன்மிகம் தனது ஒழுக்கத்தையும், கௌரவத்தை யும் காத்து வருகிறதா?’’

‘‘ஆன்மா இல்லாததற்குப் பெயர் சவம்! ஆன்மிக வாதிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சரி... தவறு பற்றி அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!’’

திராவிட அரசியல்வாதிகளின் சரி/தவறு மட்டும் நான் பேசுவேன்.

‘‘உங்கள் அளவுகோல்படி எது சரி... எது தவறு?’’

‘‘அது அவனவன் புத்தி!’’

இது நழுவும் நேரம்

‘‘ஒரு படைப்பாளியாக நீங்கள் கண்ட கனவெல்லாம் நிறைவேறிவிட்டனவா?’’

‘‘படைப்பாளி கனவு கண்டுகொண்டு இருப்ப தில்லை. அவனே கனவுகளைப் படைத்துவிடுகிறான். நான் கண்ட கனவுகள்தான் என் எழுத்துக்கள்!’’

நிறைவேறாத கனவைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே..? அது ஸஹ்ருதயர்களுக்கு மட்டும்தானா..??

‘‘அறிவாளிகளைத் தமிழகம் சரியாகப் போற்ற வில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?’’

‘‘அறிவு வரும்போது போற்றும். அதற்கு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது?’’

அறிவு என்பதை விருது என்ற வார்த்தையாக மாற்றினாலும் வாக்கியம்
சரிதான். அது சரி ..ஜெயகாந்தன் சொல்லும் பதில் ஆச்சே..

‘‘சங்கர மடம் தொடர்பாக நீங்கள் எழுதி இருக்கும் ‘ஹர ஹர சங்கர’ நாவல், உங்களின் பிரியமான வாசகர்களிடமேகூட அதிருப்தியை உண்டுபண்ணி இருக்கிறதே?’’

‘‘எழுதுவது மட்டும்தான் என் வேலை!’’

அதில் ஜால்ரா/ஜிஞ்சா சேர்ப்பது கூட என் உரிமைதான்

‘‘சமீபத்தில் கலவை சென்று ஜெயேந்திரரை சந்தித்தீர்களே... என்ன பேசினீர்கள்?’’

‘‘ஆம், அவர் எனக்குக் கௌரவம் செய்தார். ஆசீர்வதித்தார்! என்ன பேசினோம் என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை!’’

இலக்கியப் பங்களிப்பை விடுங்கள். இந்த விசுவாத்திற்காவது இவருக்கு பல வருடங்களுக்கு முன்னேயே ஏகப்பட்ட விருதுகள் கொடுத்திருக்க வேண்டும்.

‘‘இத்தனை வருட வாழ்வில் தாங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?’’

‘‘இழப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால் பெற்றதுதான் எல்லாம்!’’

பெற்றது தன் எழுத்துத்திறமை மூலம் ( நான் உள்பட) ஏகப்பட்ட வாசகர்களை. இழந்தது, தன் கண்மூடித்தனமான திராவிட அரசியல் எதிர்ப்பு மூலம் நடுநிலையாளர்களின் நம்பிக்கையினை.

************************

சமீபத்தில் ஜெயகாந்தன் விருது பெற்றதை ஒட்டி திசைகள், சிவசங்கரியின் ஒரு பழைய கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதன் மூலம் ஜெ.கேவைப் பற்றி ஓரளவு தெரியும் என்றது திசைகள். அதன் நீட்சியாக வந்திருக்கும் இந்த வார விகடன் பேட்டி, அவரது முழு உருவத்தையும் காட்டி இருக்கிறது. திராவிட அரசியலின் சாதக பாதகங்கள் நம் எல்லோருக்கும் தெரியுமென்றாலும், அதன் மாற்றாக ஏதோ ஒரு ஆட்சி இருந்திருந்தால் அது நல்லது மட்டுமே செய்திருக்கும் என்று நாம் யாருமே சொல்ல முடியாது. ஆனால் ஜெ.கே அதையே திரும்பத் திரும்ப இத்த்னை ஆண்டுகளாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரே சொல்கிறபடி இந்திவாலாக்கள், பதில் மரியாதை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். மேலிருந்து கொண்டு தாங்கள் நினைத்தபடி கீழிருப்பவரினை அலைக்கழிப்பவர்களை விட, இங்கிருந்து கொண்டு மாற்றானுக்கு பாதம் தாங்குபவர்கள் அவனை விட அபாயகரமானவர்கள்.

பி.கு :

கறுப்பு/சிவப்பு வண்ணங்களும், பதிவின் தலைப்பும் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் வசதிக்காக. என் கோணத்தில் இருந்தும் தலைப்பு சரிதான் :-)

Tuesday, April 05, 2005

எப்பவுமே குமுதம்தான்

தமிழ் வாசகர்களுக்கு எத்தனையோ பத்திரிக்கைகளின் பரிச்சயம் இருந்தாலும், ஆதிகாலம் தொட்டு குமுதம் மற்றும் ஆனந்தவிகடனுக்கு தனி மதிப்புதான். கொஞ்சம் பொறுப்பான நண்பனாக விகடன் நடந்துகொள்ள, ஜாலியான நண்பனாக குமுதம் நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் எஸ்.ஏ.பி இருந்தவரைக்கும் குமுதத்தின் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அடிப்படையில் அவர் குணம் வேறுமாதிரி இருந்தாலும், தன்னை ஒத்தவனுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பினருக்குமான இதழாகவே குமுதத்தை நடத்தி வந்தார். ஆயினும் விகடனோடு அதை ஒப்பிடுபவர்கள் யாரும் விகடனுக்கே ஜே போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றையை சன் டீவியோடு குமுதத்தை ஒப்பிடலாம் போல சினிமா சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக, வாசகனை ஜாலியாக பத்திரிக்கை வைத்திருந்ததால், வடநாட்டிலிருந்து டை கட்டிய எம்.பி.ஏ இளைஞர்கள் வந்து எப்படி இந்த பத்திரிக்கை ஆறு லட்சம் விற்கிரது என்று ஆராய்ச்சி நடத்தி செல்வார்களாம். தமிழ்நாட்டில் படத் தயாரிப்பாளரை, நடிக நடிகையை, எழுத்தாளரை, பாட்டுக்காரரை, அரசியல் தலைமையை, கட்சியை, முதல்வர் பதவியை காப்பாற்றும், தீர்மானிக்கும் சினிமா பத்திரிக்கயையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

எஸ்.ஏ.பியின் மறைவுக்கு பிறகு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மாலன், சுஜாதா ஆகியோரை குமுதம் உபயோகப்படுத்தி வந்தது. எதனால் விற்கிறது என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை இதனால் விற்கிறது என்று அடையாளப்படுத்த இவர்கள் இருவரும் செய்த முயற்சிகளும் அதன் சுகமான பின்விளைவுகளும் விகடன் வாசகர்களுக்கும் பிடித்துப் போக குமுதம் காட்டில் அடை மழை.

நாளடைவில் இவர்கள் விலக, இவர்களுக்கு பிறகு எஸ்.ஏ.பி ஜவஹர் பழனியப்பன் ஆசிரியராய் இருந்தார். பிறகு கொஞ்ச நாள் அவர் மகள் கிருஷ்ணா கூட ஆசிரியராக இருந்ததாக சொன்னார்கள். ஆனால் பத்திரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியத்தை இழந்துகொண்டே வந்தது. அட்டை பக்கத்தை கழற்றிவிட்டால் எல்லாமே ஒன்றுதானோ என்ற நிலை ஏற்படும் அளவுக்கு சொதப்பல்.

இந்தக் காலகட்டத்தில் விகடனிலும் மாற்றங்கள். தலைமையின் பெரும்பாலான முடிவுகள் திரு. பாலனின் மகன் ஸ்ரீனிவாசனின் கைக்கு வந்தது. அவர் விருப்பப்படி, விகடனில் பல அதிரடி மாற்றங்கள் புகுந்தன. பாரம்பரியமான அணுகுமுறையை கொண்டிருந்த விகடன் கலர் கலராய் படம் போட ஆரம்பித்தது. சினிமா கவர்ச்சிக்கும் குறைவு இல்லை. இப்போது வரும் விகடனைப் பார்த்தால், அது விகடன் போலவே இல்லை. விற்பனை ராக்கெட் வேகத்தில் ஏற ஆரம்பிக்க, தன் இணையதளத்தை பயனர்களுக்கு மட்டும் கொடுத்து சமீபத்தில் ஒரு பெரும்தொகையை ஆண்டுசந்தாவாக திரட்டிய விகடன், அவர்களையும் தன் வாசக லிஸ்டில் சேர்த்துக் கொண்டதனாலோ என்னவோ, விற்பனையில் நெம்பர் 1 வார இதழாக தேர்வாகி இருக்கிறது விகடன். அதற்கு குமுதம் கிண்டல் அடித்திருக்கிற கார்ட்டூனை போட்டு வருத்தபட்டிருக்கிறது.



குமுதம் வருத்தப்படவே தேவை இல்லை. ஏனெனில் இப்போதும் / எப்போதும் "குமுதம்" தான் நெம்பர் 1.

அட்டையில் ஆனந்தவிகடன் என்று எழுதி இருந்தால் மட்டும் போதுமா என்ன..??


பி.கு: என்னடா பெரிய இவனாட்டம் இதையெல்லாம் எழுதி இருக்கிறனேன்னு பாக்காதீங்க. உள்விவகாரங்கள் எல்லாம் எனக்கு முழுசா தெரிஞ்சு இதை நான் எழுதல. பாதி ஊகம். பாதி செவிவழி செய்தி. அம்புடுதேன். விகடன் பழைய மாதிரி இல்லைங்கிற கருத்து மட்டும்தான் என் யோக்கியமான கருத்து.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...