Thursday, December 30, 2004

வதந்தீ

நேற்றிரவு "மறுபடியும் சுனாமி அபாயம்" என்று இனையப் பத்திரிக்கைகளில் பார்த்தவுடன் பதட்டத்துடன் பெற்றோரை தொடர்பு கொண்டேன். கடற்கரையோரத்தில் இருந்து மாயூரம் இருபத்தேழு கி.மி என்றாலும், இறக்கை கட்டிக் கொண்டு கிளம்பும் வதந்திகள் மக்களை மிகுந்த பீதிக்குள்ளாக்கி வருகின்றன.

முதல் தடவை அசட்டையாக இருந்ததால், இந்த முறை ஏதாவது சிறிய அபாயம் என்றால் கூட மக்களை முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினத்து அரசுகள் முனைவது புரிகிறது. ஆனால் காலம் கடந்த எச்சரிக்கை என்ன செய்யும்..?? புனே நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சீஸ்மாலஜிஸ்ட் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே அந்தமான் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி வந்ததாக இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. கடலலை தாக்கிய அன்று காலை, அதைப்பற்றி அந்தமானிலிருந்து சிலர் அனுப்பிய தகவல் முன்னாள் மத்திய அமைச்சருக்கு சென்றிருக்கிறது.இம் மாதிரியான எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த நமது மனம் இப்போது இழப்புகளை பற்றி நினைத்து துயருற்றுக் கொண்டிருக்கிரது.

அதுவும் எல்லோரும் அல்ல.

இங்கே பணியிடத்தில் என் தோழி, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், திங்கள் காலை வேறு ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில், " சுனாமி பற்றி கேள்விப்பட்டீர்களா..?? " என்று வினவினேன். "ஆமா..கேள்விப்பட்டேன். கடலோர மீனவர்களுக்குத்தான் பாதிப்பாமே..?? " என்றார் அசட்டையாக. " ஏன்..அவர்கள் மனிதர்கள் இல்லையா ..?? என்று நான் மறுபடி கேட்டவுடன்தான், தான் சொன்னதன் அபத்தம் அவருக்குப் புரிந்தது. அதே தோழி, மறுநாள் காலை பேசும்போது, தன் தம்பியும் அவன் தோழர்களும் மாமல்லபுரத்தில் சுனாமி அலையில் சிக்கி தப்பித்து வந்தது தனக்கு நேற்று வரை தெரியாது என்றும் இன்று காலைதான் விஷயம் தெரிந்தது என்றும் கண்கள் விரிய சொல்லிக் கொண்டிருந்தார்.

நம்மில் பலபேர் இப்படித்தான். ஒரு க்ரூப் ஃபோட்டோ பார்த்தால் கூட, ஃபோட்டோவில் தான் எப்படி இருக்கிறோம் என்றுதான் எல்லோரும் முதலில் பார்க்கிறார்கள். பிறகுதான் மனைவி, குழந்தை எல்லாம். ஆனால், இம் மாதிரியான பேரிடர் சமயங்களில் தன்னலத்தை இப்படி வெளிப்படையாக விரித்து சொல்வதுதான் பிரச்சினைக்குள்ளாக்கி விடுகிறது.

நானும், நீங்களும் கவலைபடுகிறோம். அதில் சந்தேகமில்லை. உதவுகிறோம். அதில் பொய்யில்லை. ஆனால் அதற்காக நம்முடைய தினசரி கடமைகளை மறக்கிறோமா..? அலுவலகத்துக்கு போகாமல் அஞ்சலி செலுத்துகிறோமா..?? இல்லை... அதில் தவறுமில்லை. ஆனால் இதற்கு அடுத்த கட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். சென்னையிலேயே, கடலுக்கு அதிக தூரத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் இதை பற்றி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று கேள்விப்படுகிறேன். ' நான் தப்பிச்சேன் பா. எனக்கெதுக்கு கவலை " என்கிற மனோபாவம்தான். அப்படி இருக்கும் மக்கள்தான் டீவியில் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு, சங்கீத சபாக்களுக்கு போய் பட்டம் வாங்கி பக்கோடா தின்று கொண்டு உடம்பில் உறைப்பு என்ற ஒன்றே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு, தொடர்ந்து வரும் சுனாமி பற்றிய வதந்திகளும், செய்தித்தாள்களில் வரும் படங்களும் இல்லை என்றால் இத்தனை மக்கள் மாய்ந்து போனார்கள் என்ற விவரமே கூட மறந்து போகும். சின்ன வயதில் என் தாத்தா வீட்டுத் தோப்பில், வயற்காட்டில் நான் மாடு மேய்க்கப்போவது வழக்கம். வயலில் ஒரு முளை அடித்து, ஒரு பெரிய கயிறை அதில் கட்டி, கன்றுக்குடியின் கழுத்தில் கட்டி விடுவோம். அந்த கயிறு இருப்பதே தெரியாமல் கன்றுக்குட்டி மேய்ந்து கொண்டிருக்கும். கயிறின் நீளம் தாண்டி, அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, கயிறு கன்றுக்குட்டியை பின்னோக்கி இழுக்கும். தன் வட்டமும், தான் மேய அனுமதிக்கப்பட்ட தூரமும் நினைவு வர, கன்றுக்குட்டி பின்னே வரும்.

சுனாமியின் பின் விளைவுகளையும், அது தொடர்பான வதந்திகளையும் நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன்.

வாழ்க வதந்தி.


Tuesday, December 28, 2004

உதவுங்கள்

ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் என்றாலும், இங்கே பிரசுரிப்பதற்கு இன்னொரு காரணம், இன்னும் கொஞ்சம் பேருக்காவது செய்திகள் தெரியாதா என்பதுதான்.

தமிழகத்தில் உள்ள வலைப்பதிவர் ராம்கி, நாகை மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு சென்று உதவுவதற்காக, இந்த உதவியை கேட்டிருந்தார்.

நண்பர் பி.கே.சிவகுமார் தன் உறவினர்கள் மூலமாக, கரூரில் இருந்து பெட்ஷீட்டுகளை தருவித்துத் தருவதற்காக, விருப்பப்படும் அன்பர்களிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு, பொறுப்பெடுத்து செய்வதாக காரியத்தில் இறங்கி இருக்கிறார். முப்பது பெட்ஷீட்டுகள் கொடுப்பதனால் கூட மூவாயிரம் ரூபாய் ஆகும். அமெரிக்க நண்பர்கள், நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள் இங்கே தொடர்பு கொள்ளுங்கள்.

நம்மால் வேறு என்ன செய்துவிட முடியும்..???

நண்பர்கள் ராம்கிக்கும், சிவகுமாருக்கும் நன்றி.

Monday, December 27, 2004

நொந்த"மான்"

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட ட்சுனாமி அலை வரும் வழியில் கிடைத்ததை எல்லாம் கபளீகரம் செய்து விட்டே தமிழ்நாட்டு கிழக்குக் கரையை தொட்டிருக்கிறது. கடல் தண்ணீர் கொஞ்ச தூரம் உள்ளே வந்து துக்கி அடித்ததற்கே கிட்டத்தட்ட 15 ஆயிரம் உயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால் கடல் தண்ணீர் தமிழக கரையை அடையும் முன் அந்தமான் நிகோபார் தீவுகளிலும், இலங்கையிலும் கோரத் தாண்டவம் ஆடிவிட்டே வந்திருக்கிறது.

சில விடயங்களை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாயிருக்கிறது.

என் இளைய சகோதரியின் கணவர் நாகையில் CSI பள்ளியில் பணிபுரிகிறார். அந்தப் பள்ளி கடற்கரையிலிருந்து மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்கள். சகோதரியின் மகன் மாயவர்த்தில் உள்ள பள்ளியில் +2 படிக்க விரும்பியதால், கடந்த ஒரு வருடமாக சகோதரி மாயூரத்தில்தான் இருக்கிறார். மாமா மட்டும் தினசரி இங்கிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்த களேபரம் எல்லாம் நடந்திருக்கும்போது, சகோதரி நாகையில் இருந்திருந்தால் ...., அப்பா...யோசிக்கவே முடியவில்லை



அதிகபட்ச பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மற்றோர் இடத்தில், கார் நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள கேம்பல் பே - இந்திரா பாயிண்ட் என்னுமிடத்தில் என்னுடைய மூத்த சகோதரி ஐந்தாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பின் மாமாவுக்கு இந்தியா மாற்றல் கிடைத்து இங்கே இருக்கிறார். எபி செந்தர் என்று அழைக்கப்படும் பூகம்ப மையத்திலிருந்து வெறும் 25 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பது இந்திரா பாயிண்ட். எங்கள் வீட்டில் இந்திரா பாயிண்டில் எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன. அந்தமானில் இருந்து வரப்போகும் செய்திகள், இன்னமும் முழுதாக வரவில்லை என நினைக்கிறேன். இழப்பின் வீரியம் ஆகக் கொடியதாக அங்கே இருக்கலாம் எனத் தெரிகிறது. எண்ணூறு கிமி பரப்பளவுக்கு அங்கே எல்லாம் மூழ்கி இருக்கிறதாம். கார் நிகோபார் முற்றிலும் அழிந்ததாக செய்திகள்.

மூன்றாவது சகோதரி வசிப்பது செய்திகளில் அதிகமாக அடிபட்ட சென்னையில். அவருடன் இன்று வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் தாம்பரம்- சேலையூரில் அவர் பத்திரமாக இருப்பதாக அறிந்தேன்.

இவர்களில் யாருக்காவது, ஏதாவது இதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வெறும் செய்திகளை மேய்ந்து மென்று கொண்டு, வக்கணையாக இப்படி எழுதிக் கொண்டிருந்திருக்க மாட்டேன்.

குடும்ப உறுப்பினர்களை, உடைமையை, வாழ்க்கையை இழந்து தவிக்கும் ஜீவன்களுக்கு என் அனுதாபங்களும், அவர்கள் வாழ்க்கை உயிர்க்க என் பிரார்த்தனைகளும்.

நடுங்கும் உள்ளம்

கடல் கொந்தளிப்பு என்பதெல்லாம் நமக்கு வெறும் செய்தி. மிஞ்சிப்போனால்
இரண்டு நாள் தூக்கம் கெடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அது வாழ்நாள் முழுக்க ஆறாத காயம். செத்துப்போனவர்களை கூட்டம் கூட்டமாக புதைக்கிறார்களாம். மொத்தமாய் எரிக்க பணிக்கிறார்களாம். கஷ்டம்தான். வேறொன்றும் செய்ய இயலாது அவர்களுக்கு. ஆனால் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் சோகத்தை விட்டு வெளியே வரும் வரைக்கும், மறுபடி கடலுக்கு போய் தொழில் நடத்த தைரியம் வரும் வரைக்கும், கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வசித்துக் கொண்டு மிச்ச சொச்ச நாட்களை ஓட்ட, அவர்களுக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் உதவ வேண்டும். இன்று இந்த செய்தியை படித்து விட்டு எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. கண்ணில் கண்ணீர் மல்கியது. இந்தியனாக இருப்பது என்னவென்று இன்று விளங்கியது.

தமிழ் வலைப்பதிவர் சமூகத்திலிருந்து அனைவரும் பத்ரியை தொடர்பு கொள்ளுங்கள். நம் அனைவர் மூலமும் நிதி திரட்டி கருணாலயா மூலம் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு சோறாவது இடுவோம். வங்கிக் கணக்கு எண் அவருக்கு கிடைத்தாலும், க்ரெடிட் கார்டு மூலமோ, பே பால் மூலமோ கொடுக்க முடிந்தால் இன்னமும் வசதி.

இது இல்லை என்றால் இனி எழுதுவதும், யோசிப்பதுமே அர்த்தமற்றது.

Sunday, December 26, 2004

நீர்க்குமிழி வாழ்க்கை

நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு செய்தி கேட்டு, இத்த்னை நேரம் மாயவரத்துக்கு தொலை பேச முயன்ரதில், சர்று நேரம் முன்புதான் பேச முடிந்தது. பெற்றோர் குரலில் பயத்தின் சுவடு. மாயவரத்திலிருந்து 27 கி.மி தூரத்தில் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார். அங்கிருந்து ஆக்கூர், சன்கரன்பந்தல் வரை தண்ணீர் வந்ததாக கூறினார்கள். ஆனால், கடல் தண்ணீர் இல்லையாம். பூமி வெடிப்பில் இருந்து பீய்ச்சி அடித்ததாக வதந்திகளாம். யாருக்கும் ஏது விவரம் என சரியாய் தெரியவில்லை. ஆனால் பீதியைத் தவிர்க்கும் பொருட்டு, செய்திகள் மழுப்பப்படுவதாக தெரிவித்தார்கள். நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் என் உறவினர் - கடற்கரையிலிருந்து 4 கி.மி - பற்றிய விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை ட்ராக்டர்களிலும், லாரிகளிலும் ஏற்றிவந்து, பள்ளிகளிலும், கோவில்களிலும் தங்க வைக்கிறார்களாம்.

செய்தியை முதலில் தினகரன்.காமில் சிவப்பு வண்ணத்தில் பார்த்தபோது வீரியம் தெரியவில்லை. பிறகு தட்ஸ்டமில்.காம் கொஞ்சம் விரிவாகத் தந்தது.
முழு விவரம் பத்ரி ப்ளாக்கிலும் ராயர் காப்பி க்ளப் முருகன் மடலில் இருந்தும்தான் படித்தேன்.

என்னென்ன செய்திகள் கிடைக்கிறதோ, அதனை தமிழக நண்பர்கள், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

மனசு கஷ்டமாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன செய்ய..??

Thursday, December 23, 2004

Person of the Year 2004




டைம் மாகஸீன் அமெரிக்க அதிபர் புஷ்ஷை இந்த வருடம் தேர்ந்தெடுத்து இருக்கிறது. படிக்க சுவாரசியமான கட்டுரை. கட்டுரையின் தொனியைப் பாருங்கள்.

Wednesday, December 22, 2004

ராஜு முருகன் - ஒரு சாம்பிள்

மதுரையில் கீர்த்தனாவை விட்டு பிரிந்தபோது, இனி இந்த மதுரைக்கே வரக்கூடாது, அப்படியே வந்தாலும் திருப்பரங்குன்றம் மலைக்கு வரவேக்கூடாது என்று ஆவேசமாக நினைத்தபடிதான் சென்னைக்கு வண்டியேறினேன். திரும்பரங்குன்றம் மலையுச்சியிலிருந்து பார்த்தால் கீழே ரயில்பாதை தெரியும். ரயில் போகும்போது மிகப்பெரிய மரவட்டை பூச்சி ஊர்வதைப்போல இருக்கும். பல நாட்கள் மாலை ஐந்தரை மணி ரயில் செல்லும்போது நாங்கள் மலையுச்சியில் உட்கார்ந்திருப்போம். ஒருமுறை கீர்த்தனா என் தோளில் இறுக்கமாக சாய்ந்துகொண்டு சினிமாத்தனமாக, ‘‘நம்ம காதலுக்கு இந்த ரயில்தான் பெரீய சாட்சி..’’ என்றாள். அது காணக் கிடைக்காத சித்திரம். அவ்வார்த்தைகள் எப்போதும் ஜீவித்திருக்கும். ஆனால் இப்போது அந்த ஆவேசமில்லை. மனம் கொஞ்சம் கனிந்திருக்கிறது. அப்போதுதான் துளிர்விட்ட பசலிக்கீரை இலையென ஒரு பக்கமாய் பச்சைவிட்டிருக்கிறது. ஒருமுறை மதுரை போய்வரலாம் போலிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று ஐந்தரை மணி ரயில் பார்த்து ‘‘எப்படியிருக்கிறாய் கீர்த்தனா’’ என்று கேட்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் கீர்த்தனா அளவிற்கு மலை, ரயில் எல்லாம்தான் முக்கியமென்று படுகிறது. உடலை ஒரு ராட்டினமாக்கி காதல் ஏறி சுற்றுகிறபோது எதுவுமே தெரிவதில்லை. மனம் வெளியற்ற வெளியில் மயங்கிச் சுழலும். திடீரென ராட்டினம் நிற்கிறபோது உலகம் நிலைகொள்ளும். மயக்கம் வாங்கிய உடலும் மனமுமோ உடனே நிலைகொள்வதில்லை. ‘‘தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும் வீணாகப் போகுமென்று யாரேனும் நினைத்ததுண்டோ’’ என பாடியபடி வானுயர்ந்த சோலை வழியெலாம் அலைந்து திரியும். ராத்திரியின் கனம் தாளாது குடித்து சரியும். ‘பிரித்து பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றி பிறிதொன்றில்லை’ என வானும், கடல்வெளி புவியும் துணைநினைவாய் ஏங்கி கவியெழுதும்..

மிகுதிக்கு இங்கே போகவும்...

என்னவோ பகிர்ந்து கொள்ள வேணுமென்று தோன்றியது...

ராஜு முருகன் கேள்விப்பட்ட பேரெனினும், எழுத்துக்கள் பரிச்சயமில்லை இதுவரை. தேட வேண்டும்.

பி.கு: இன்று 7G இரண்டாம் முறை. இன்னும் கொஞ்சம் உப்புத் தண்ணீர் செலவு.

ஆஹா...என்ன பூரிப்பு..??



தமாஷா இருக்கிறது. ஆயுசு முழுக்க தமிழ் தமிழ்னு பேசியும் எழுதியும் வந்த தாத்தா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி தமிழகத்தைத் கலக்கி, அதன் விளைவாக ஆட்சியையே பிடித்தவர், இப்போது தமிழகத்தில் இந்தியை புகுத்துபவராய் முதல்வரால் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார். ஜெவுக்கு சுக்கிர தசை தான்.

பதிலுக்கு "அமைச்சர் பாலுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்பதோடு நிறுத்தி இருக்கலாம். இதற்கு பதிலாக அவர் தந்திருக்கும் ஓரங்க நாடக பிரலாபம் சலிப்பூட்டூகிறது. ச்..சை !! பெரிசுக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா..??

மேலும், தினகரன் போன்ற திமுக சார்பு பத்திரிக்கைகளில், இந்த செய்தி வரும்போது, உபயோகப்படுத்தும் ஜெ வின் புகைப்படம், இந்த சினிமா ஸ்டில் புகைப்படம் !!! இவர்களுக்கு வேறு புகைப்படமே கிடைக்கவில்லையா..?? என்ன சொல்ல வருகிறார்கள்..?? ஆயுசுக்கும் நடிகரென்றும், மலையாளியென்றும் எம்ஜியாரை சொல்லி, அவரை இழிவுபடுத்துகிறோம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதுபோல், கடைசி வரை ஜெயலலிதா ஒரு நடிகை என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆளாளுக்கு தேர்தல் ஞாபகம் வந்துட்டுதுடோய்...!!

பி.கு: இரண்டு நாள் கழித்து விடுத்த இந்த அறிக்கையை முதலிலேயே சொல்லி இருந்திருக்கலாம்.

Tuesday, December 21, 2004

தூக்கம் தொலைத்த நேற்றிரவு...

நல்ல படம் ஒண்ணு பாத்தேன். அதனால தூக்கம் போச்சு.



படத்தின் ஆரம்பத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும், போகப் போக மெல்லிய சோகமாக மாறி, பின் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்து கடைசியில் படம் முடியும்போது கண்களின் ஓரங்களில் கண்ணீராக மாறி நின்றது. படத்தின் கதாநாயகன் தயாரிப்பாளர் மகனாம். யாராவது "தத்தி" மாதிரி நடித்தால், யாருப்பா அது..ப்ரொட்யூஸர் மகனா ..?? என்றுதான் கேட்போம். ஆனால் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் கிருஷ்ணா, பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி, கதிராகவே வாழ்ந்திருக்கிறார். நடிப்பிலும், டயலாக மாடுலேஷனிலும் அங்கங்கே தனுஷின் சாயல் தெரிவதை தவிர்த்திருக்கலாம். ரஷ் பார்த்த செல்வராகவனாவது திருத்தி இருந்திருக்கலாம். போகட்டும்...

சந்தேகமில்லாமல் யுவன் ஷங்கர் ராஜா தூள் கிளப்பி இருக்கிறார். ரீ ரிக்கார்டிங்கில் அப்பா ராஜாவை மிஞ்ச ஆள் கிடையாது என்று சொல்வார்கள். வரும் தலைமுறைக்கு யுவன் சரியான ஆளாக இருப்பார் என்று தோன்றுகிறது. படத்தில் பல இடங்களில் பின்னணி இசை என்ற ஒன்றே இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு, சூழலில் கலந்து படத்தின் பலத்தில் இசை ஒரு பாத்திரமாகவே ஆகி விட்டிருக்கிறது. பாடல் ஆரம்பிக்கும் இடங்களும், பாடலுக்கு என்று திணிக்கப்பட்ட காட்சிகள் போல இல்லாமல் படு இயல்பு - கிரிக்கெட் விளையாடும் கதிர், அனிதாவைப் பார்க்கும்போது ஆரம்பிக்கும் இது போர்க்களமா பாடல் போல ... !! செயற்கையாய் இருந்தது - படத்தின் இறுதியில் வரும் ஒரு மேடைப் பாட்டு. அதற்குப் பிறகு வருகிறேன்.




படத்தின் நாயகியும் அம்சமாக பண்ணி இருக்கிறார். நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி, சோனியா அகர்வால் இதற்கு சரியான தேர்வு. பொறுக்கித்தனமாக தன் பின்னே அலையும் ஹீரோவைப் பார்த்து பயந்து ஒதுங்கும்போதும் சரி, பின் கொஞ்சம் கொஞ்சமாக, அவனுடைய விவரமில்லாத அப்பாவித்தனம் கலந்த முரட்டுத்தனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, அவன் மேல் ஸ்நேகம் கொள்வதும் சரி, அவரது நடிப்பு ஹல்திராம்ஸ் ரசகுல்லா மாதிரி வழுக்கிக் கொண்டு போகிறது. சில இடங்களில் அவரது வசனம் கொஞ்சம் வள வள என்று இருக்கிறது. குறிப்பாக, கதிருக்கு தன்னையே நன்றியாக தர விரும்பும் காட்சியில். பண்பாடு கலாச்சாரம் எல்லாம் பேசும் தமிழ் கூறும் நல்லுலகில், நாயகியே முன் வந்து நாயகனுக்கு தன்னைத் தர விரும்பும் காட்சி, எந்த விதமான அதிர்வுகளை எழுப்புமோ என்று பயந்ததால், சரியாக ஜஸ்டிஃபை பண்ண வேண்டும் என்று முனைந்து, வசனங்களை அதிகப்படுத்தியதால் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. காதல் என்ற உணர்வில் விழுந்தபின், அன்பை, சந்தோஷத்தை, மற்ற விஷயங்களினை பகிர்தலில் பெண்களுக்கு இருக்கும் மனோபாவம் ஆண்களுக்கு இல்லை. இன்னமும் ஆண்களில் பெரும்பாலானோருக்கு செக்ஸ் என்பது கெட்ட வார்த்தைதான். அது காதலியின், மனைவியின் வாயிலிருந்து வந்தாலும் கூட. அதனால் தான் கதிரைப்போல பல ஆண்கள், இந்தப் பகிர்தல் வெறும் உடம்புக்காக எனத் தவறாகப் புரிந்து கொண்டு விடுகிறார்கள். பெண்கள் காதலுக்கு தரும் அங்கீகாரத்தை ஆண்கள் முழுக்க தர தயங்குவது வினோதம்தான். இந்த வினோதத்தை, விமரிசனங்களைப் பற்றி கவலைப்படாமல் தைரியமாகச் சொன்ன செல்வராகவன், கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய டைரக்டர்தான்.

ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" மற்றும் "கங்கை எங்கே போகிறாள்" என்ற நாவல்கள் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற ஒரே படமாக வந்த போது, வாழ்க்கையை தொலைத்து விட்ட கங்கா, தன் நிலைக்கு காரணமான நாயகனை பின்னாளில் சந்திப்பது போன்ற காட்சி வரும். அவனால் கெடுக்கப்பட்டதால், சாதாரண பெண்கள் போல வாழாமல் , தனிமரமாக வாழ்ந்து வரும்போது , குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகி விட்ட நாயகனிடம் " I would like to share my bed with you " என்று தன் பிரியத்தை சொல்லும் காட்சி, பலத்த ஆட்சேபத்தையும் அதிர்வுகளையும் அந்தக் காலகட்டத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இங்கோ, தன்னைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லும் நாயகி, தன் காதலனுடன் சேர்வதை பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. அவனுக்கு சந்தோஷம் தருமே என்பதற்காகவும், வாழ்நாள் முழுக்க வேறு யாருடன் இருந்தாலும் இந்த நினைவுகள் போதும் என்று சொல்லும்படியும் வைத்து, அதை விரசப்படுத்தாமல், மலினப்படுத்தாமல், மிகச் சரியாக சொல்லி, இன்னொரு சூட்சுமமான கதவைத் திறந்து காட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இவ்வளவு சொல்லியும் இது 7G ரெயின்போ காலனியின் விமரிசனம் என்று தெரியாதவர்கள், தமிழ்நாட்டு பத்திரிக்கை படிக்காத பாக்கியசாலிகள் . அநேகமாக நம்மில் யாருக்கும் அந்த பாக்கியம் இல்லை என்றே நினைக்கிறேன்.

படம் வந்தவுடன் ரோகிணிக்கு போய் பார்த்து உடன் பகிர்ந்து கொள்ளும் லக்ஸூரி, கடல் கடந்த என் போன்ற கணிணிக் கூலிகளுக்கு இல்லை. ம்...

Monday, December 20, 2004

அன்பழகன் 83 வது பிறந்தநாள்



நெ.2 :

தலைவரே....எம் பிறந்தநாளுக்கு 83 கிராம்ல செயின் போட்டிருக்கிங்களே..ஆனாலும் உங்க அன்பு கொஞ்சம் ஓவர்தான் . குனிஞ்ச தலையை நிமித்தவே முடியாத கனம்......!!!

நெ.1 :

அட..ஆமாய்யா...அதுக்குத்தான் போட்டேன். என் வாழ்நாள் முழுக்க கட்சி, கட்டுப்பாடுன்னு கப்ஸா விட்டு, உன்னை தலதூக்க விடாம பண்ணியாச்சு. என் புள்ளைக்கும் இதே மாதிரி வணங்கியே இருக்கணும்ல..அதான்..

நெ.2:

சரி..சரி..வேட்டியை கொஞ்சம் இறக்கி விடுங்க. அப்புகிட்ட வாக்குமூலம் வாங்கறாங்க. கொஞ்ச நாள்ல எப்படியும் டவுசர் போட வேண்டி இருக்கும் அப்ப போஸ் கொடுத்துக்கலாம்....என்ன நான் சொல்றது..??

Dedicated to Ramki and Rameshkumar

Saturday, December 18, 2004

Around the world in 80 Days

வயதாகி விட்டது. முகத்தில் வயோதிகத்தின் ரேகைகள் தெரிகின்றன. சற்றே பருமனாகக் கூட ஆகி விட்டார். ஆனால் அதே மின்னல் வேகம். அதே டைமிங். தான் ஆங்கிலம் தெரியாத ஆசியன் என்பதையே ஒரு ப்ளஸ் பாயிண்ட் ஆக, காமெடி பண்ண அதை உபயோகப்படுத்திக் கொண்டு ஹாலிவுடிலும் ஜாக்கி சான் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.



"Around the world in 80 days" என இன்று ஒரு படம் பார்த்தேன். சரியான ம்சாலா, ஆக்ஷன் காமெடி. தன் கிராமத்திலிருந்து கவர்ந்து செல்லப்பட்ட புத்தர் சிலை, ஒரு இங்கிலாந்து பேங்கில் இருக்க, அதை களவாடி, அதை பத்திரமாக சீனா கொண்டுவந்து சேர்க்க ஃபீலியஸ் ஃபாக் என்கிற ஒரு விஞ்ஞானியை உபயோகப்படுத்திக் கொள்கிறார் ஜாக்கி. உலகை 80 நாளில் சுற்றி வருகிறேன் என்று அந்த பிரபுவை வீராப்பாக சபதம் போட வைத்து, பாரிஸில் கவர்ச்சிக்கு ஒரு கதாநாயகியை பிடித்துப் போட்டுக் கொண்டு, துருக்கியில் எங்கள் "கவர்னர்" மன்னன் அரண்மணையில் குழப்பி விட்டு, பிறகு ஆக்ரா வந்து, சீனாவுக்கு போய் புத்தரை சேர்ப்பித்து விட , பிரபுவுக்கு விஷயம் தெரிந்து போகிறது. தனியே கிளம்பி, சான் பிரான்சிஸ்கோவில் பராசக்தி சிவாஜி ஸ்டைலில் பணத்தை பறிகொடுத்து, ரோட்டில் கிடக்கும் பிரபுவை தொடர்ந்து வந்து, அங்கிருந்து நியூயார்க் பிரயாணம் செய்யும் வழியில் ரைட் பிரதர்ஸை சந்தித்து, பிறகு நியூயார்க்கில் இருந்து கடல் மார்க்கமாக லண்டண் வர, பாதியில் கடலிலேயே ஒரு பறவை செய்து( விமானம்..??) தங்கள் உலகப்பயணத்தை முடிக்கும் கதை. (அப்பாடா...)

இடை இடையே காமெடிக்கெல்லாம் ரொம்ப புரிந்தவனாட்டம் சிரித்துக் கொண்டு சூர்யா ரொம்ப என்ஜாய் செய்து பார்த்தான். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப் படம். இங்கு ஓடியதா என்று தெரியவில்லை. ஆசிய நாடுகளில் நன்றாக ஓடும். அவ்வப்போது, இந்த மாதிரி ரொம்ப லைட்டாக படம் பார்ப்பது ரொம்ப பிடிக்கிறது.

Friday, December 17, 2004

காலம் தாண்டும் நடப்புகள்



ச்..ச்ச்...என்ன கண்றாவிப்பா இது...பாக்கவே கஷ்டமா இருக்கே..

இவர் பேரு சுப்ரமணியன். முன்னாடி ஜெயேந்திரர் ஜெயேந்திரர்னு இவரை கூப்பிடுவாங்க. ஆனா, இவருக்கு முந்தையவரை கூப்பிட்ட மாதிரி காஞ்சிப்பெரியவர்னோ, சங்கராச்சாரியார்னோ கூப்பிடறது ரொம்ப அபூர்வம்.

சரி..சரி..விஷயத்துக்கு வா..இவர் என்ன பண்ணினார்னு சிலுவை..ஸாரி..சூலம் சுமக்க வைக்கிறாங்க. கீழ்ஜாதி மக்களை கோயிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டாரா..??

இல்லையே...அவங்களுக்கு தனி கோயில் கட்டிக்கலாம்னு அறிவுரை சொன்னாரு.

அவங்க மடம் நடத்தற நிறுவனங்கள்ள எல்லாரையும் சமமா நடத்தினார்னு சொல்லி, மேல்ஜாதி சக்திகள் மாட்டி விட்டுடுச்சா..??

அப்படி ஒண்ணும் தெரியலையே..

பெண்களுக்கு மதிப்பு தரணும். அவங்கதான் குடும்பத்தோட வேர்ங்கிறதால, அவங்களை சமமா நடத்தணும்னு சொல்லி, அதனால ஆணாதிக்க கும்பல் இப்படி பண்ணிடுச்சா..??

அதுவும் இல்லை. பெண்கள் வேலைக்கு போறதயும், சுயசார்போட இருக்கறதையும் அவர் ஆதரிச்ச மாதிரி தெரியலை - தனக்கு வேண்டபட்ட பொண்குழந்தைகளுக்கு விவாகரத்து பஞ்சாயத்து பண்ணி வச்சதை தவிர. அது கூட வதந்திதான்.கூடவே எழுத்தாளர் அம்மா ஒண்ணும் கன்னா பின்னான்னு பேசுது. அதை இவங்க பைத்தியம்கிறாங்க. மோசமான பொம்பளைங்கிறாங்க. இதெல்லாம் தெரிஞ்சே அவங்களை மடத்தோட பத்திரிக்கைக்கு ஆசிரியரா கூப்பிட்டு இருக்காங்க...எதுக்கு..??

தமிழுக்காக ஏதாச்சும்..??

அட நீங்க வேற...தமிழ்ல மந்திரம் சொன்னா ஆண்டவனுக்கு தீட்டுன்னு சொன்ன சாமியார் இவரு..

அட கெரகமே.. பிற மதத்து மக்களுக்கு..??

அயோத்தி பிரச்சினையிலே சமரசம் பண்றேன்னு இறங்கினவர் வேற என்னமோ பண்ண ட்ரை பண்ணி இருக்கார். அதையும் தவிர , யாரும் மதம் மாறக்கூடாதுன்னு, ஆட்சியில் அப்ப இருந்த இன்ஃப்ளூயன்ஸை வச்சி சட்டமே போட வெச்சார்.

சரி..மத்தத விட்டுத் தள்ளு..மடத்தில் ஏதாவது..??

அங்கதான் பிரச்சினையே...மடத்தில் நடந்ததா சொல்லப்படற கண்றாவிகள்ள, பத்திரிக்கை சூட்டைக் கிளப்பறதுன்னே சொன்னாலும், அதில பத்து பர்சன்டேஜ்
உண்மையா இருந்தா கூட, அது மடமாவே இருந்ததில்லை போலிருக்கு. அடியாள்கள், சுவாமிகளின் நெருங்கிய உறவினர்கள், அரசியல் தொடர்புகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான முகாந்திரங்கள்னு மர்மப்படம் மாதிரி இருக்கு..

அடக் கருமமே..அப்புறம் எதுக்கு இந்த சிலை..?? எந்த மக்களுக்காக அவர் பாவங்களை இவர் சுமக்கிறார்..??

ஹுஸைனி அப்புவையும், ரவி சுப்ரமனியத்தையும், ரகுவையும் தவிர தமிழ்நாட்டுல வேற யாரும் பாவப்பட்ட மக்கள இல்லைன்னு நினைச்சிட்டார் போலருக்கு..!!

அது யாருப்பா ஹுஸைனி..??

அவர் ஒரு முஸ்லிம் ஃபிகர். ஸோ, ஒரு முஸ்லிம் ஃபிகர், ஏசு சிலுவை சுமக்கிற ஸ்டைல்ல, ஒரு இந்து சாமியாரை சூலம் சுமக்க வைக்கிறது எவ்ளோ பரபரப்பான, மயிர் சிலிர்க்க வைக்கிற நியூஸ்..??

ஆமாம்..ஆமாம். அவர் பேரை ஃப்ரமோட பண்ணிக்கிறதுக்கு மார்க்கெட்டிங் மாதிரி ஆச்சு. மூக்கனுக்கும், மாயவரத்தானுக்கும் ஒரு நாள் பொழைப்பாச்சு. ஹிந்துத்துவ சக்திகளுக்கு இன்னம் கொஞ்ச காலம் கழிச்சு ஆரத்தி காட்ற சிலைக்கு வழியாச்சு. ஏன்னா ஜெயேந்திரர் கடவுள் ஆய்டுவாறே..

அப்ப ஹுஸைனி..??

அவர் துலுக்க நாயன்மார் ஆயிடுவார். மதுரை அழகர் கோயில்ல துலுக்க நாச்சியார் கதை கேள்விப்பட்டதில்லை. அது மாதிரி. மத நல்லிணக்கத்துக்கு நம்மால் ஆன ஒரு தொண்டு.

அட..அட..அட.. புல்லரிக்குதுபா..கடைசில நீயே புரிஞ்சுகிட்டியே . அப்ப, நீயும் என்ன கடவுளை செருப்பால அடிக்கற ஆளா..??

இல்லப்பா.. I beleive in God. Not in Godmen. யாருக்கும் கெட்டது பண்ணாம இருக்கறதையும், யாரையும் இழிக்கவும் பழிக்கவும் செய்யக்கூடாதுங்கிறதையும் மனசாட்சிதான் கடவுள்னு சொல்றதையும் நம்பறவன். பெரிய புரட்சிக்காரனும் இல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. எல்லாவிதமான சலனங்களும் சபலங்களும் ஆசாபாசங்களும் உள்ள சராசரி மனிதன். அம்புடுதேன்.

Thursday, December 16, 2004

நாத்திகம் பயில்

மறுபடியும் மரத்தடி மகாத்மியம். எந்த நேரத்தில் தேவை இன்னொரு பெரியார் என்ற இழை தொடங்கியதோ, அது இன்னமும் செயின் ரியாக்ஷன் மாதிரி வெவ்வேறு அவதாரங்கள் எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. புது தகவல்கள், சுட்டிகள், பேட்டிகள் என்று மக்கள் கைக்கு கிடைத்தை எல்லாம் போட்டுக் தாக்குகிறார்கள்.

இணையத்தில் எழுதுபவர்கள் முழுநேர எழுத்தாளர்களோ, அல்லது அதி தீவிர சிந்தனையாளர்களோ இல்லை - அட்லீஸ்ட் நான் இல்லை. எல்லோரும் எழுதப் பழகுவதோடு, எழுதும் விஷயத்தை எழுதுவதற்காகவாவது சிந்திப்பவர்கள் மற்றும் சிந்திக்கப் பழகுபவர்களே. எந்த இஸங்களையும் கட்டிக்கொண்டும், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அதில் தீவிர ஆராய்ச்சியும் செய்கிறவர்கள் அல்ல. சொல்லப்போனால், எந்த இஸத்துக்கும் அடியார்களாக இருப்பதை விடவும், எல்லாவற்றில் உள்ள நல்லது கெட்டதை ஆராயும் திறந்த மனம் இருப்பவர்களாக இருத்தல் நன்று. அப்படி இருக்கையில் இம் மாதிரி விவாதங்கள் நடக்கும்போது, மடலாடற்குழுவில் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் விவாதத்தின் போக்கை குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இப்படி நடந்தால் வெறும் சாம்பார் திரியாகவும், புதுக்கவிதை திரியாகவும், நவராத்திரி/தணுர் மாத திரியாகவும் போய்விடக்கூடிய அபாயங்கள் உள்ளன.

சமீபத்திய மரத்தடி விவாதங்களின் தொடர்ச்சியாக "வலைப்பூவுலகின் வால்ட் டிஸ்னி" அருள்செல்வன் கந்தசாமியின் கட்டுரையை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

தன் இளமையிலாவது ஒருவன் நாத்திகனாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.

1.


நாத்திகம் மனிதனை விடுவிக்கிறது. மூதையர் சிந்தனைக் கட்டுகள்தான் ஒவ்வொருமனிதனுக்கும் மிகப் பெரும் தளை. தந்தையை எதிர்ப்பது சிறுவன் மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. தந்தையை விட மதமும், கடவுள் எனும் கருத்துருவமும் அப்பாதையின் மிகப் பெரும் தடைகள். நாத்திகமே அவனுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறது.

2.


நாத்திகம் மனிதனை தூய்மைப் படுத்துகிறது. மனிதனின் சிந்தனைகள்குழு,இன,மத,தேச மாசுகளால் கறைபடாமல் துல்லியமான ஒரு சிந்தனைத் தளத்தைவழங்குகிறது. அவனை திரும்பத்திரும்ப இவ்வுண்மையை எதிர்கொள்ளச் செய்து சிந்தனையை வழிப்படுத்தி அவன் செயல்களை தூய்மையாக்குகிறது.

3.


நாத்திகம் மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவனை தன் செயல்களுக்குதன்னையே பொறுப்பேற்க கற்றுத்தருகிறது. எந்த முன்முடிபுகள் மிக்க சுமைதாங்கிகளையும் அவனுக்கு அது அளிப்பதில்லை. அவன் சுமையை அவன் தான் சுமக்கவேண்டும். இரக்கம் கொண்டு கடைத்தேற்ற யாரும் எதுவும் இல்லை.

4.


நாத்திகம் மனிதனை இரக்கமுள்ளவனாக, அன்புடையவனாக மாற்றுகிறது. பிற மனிதரை, பிற உயிர்களை தன்னைப் போலவே எண்ண வைக்கிறது. வாழ்வில் கிடைக்கும்ஒவ்வொரு கணத்தையும் இழக்காமல் அனைவரையும் நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதவாழ்வின் நிலையில்லாமையும் இலக்கில்லாமையும், அவனை ஏங்கோ என்றோ அடையும்சொர்க்கம் போன்ற புனைகதைகளில் இளைப்பார விடாமல் இக்கணத்தை, இச்சூழலை,இங்குள்ள உயிர்களை செல்வமாக போற்றும் மனதைத் தருகிறது.

5.


நாத்திகம் மனிதனை மனிதனாக்குகிறது. மதங்கள் மனிதனை மிருகம் என்கின்றன.பாவி என்கின்றன. அவனை தேவனாக்க முயல்கின்றன. மனிதனின் இருத்தல் நிலையை கீழானதாகக் காட்டி வசைபாடி அவனை குற்றவுணர்சியும் பய உணர்சியும்கொண்டவனாக்கி மனச் சமனை நிலைகுலைக்கின்றன.

6.


நாத்திகம் மனிதனை அறநெறியாளனாக ஆக்குகின்றது. விடுபட்ட மனமுடைய,தூய்மையான சிந்தனைகள் கொண்ட, பொறுப்புள்ள, அன்பு நிறைந்த ஒரு மனிதன்,சுய அறம் இன்றி வாழ இயலாது. மனிதனுக்கு அந்த சாத்தியத்தை நாத்திகம்வழங்குகிறது.

முழு நாத்திகனாக இருப்பது ஒரு அசாதாரணமான கடினமான ஒரு நிலை. ஒவ்வொருமனிதனுக்கும் இந்தநிலை வாழ்வின் இளமையிலாவது வாய்க்க எல்லாம் வல்ல இறைவன் வாய்ப்பளிக்கட்டும். (:-)


Wednesday, December 15, 2004

எப்படி ..எப்படி..உயர்ந்தது எப்படி..??

ஏற்கனவே என் கூட பணிபுரியும் ஆசாமிகள் எப்படி ஜாலி டைப் ஆக இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறேன். ( ஆமாம்..நீ மட்டும் என்ன ..?? என்று நீங்கள் கேட்பது புரிகிறது). அதில் இந்த சமயம் பண்டிகைத் தினங்கள் வேறு என்பதால், அலுவலகத்தில் ஈயடிக்கிறது. எல்லாரும் மூன்று மணிக்கே மூட்டையை கட்டி விடுகிறார்கள்.

என்னுடைய நண்பரும் நானும் இதை ஆச்சரியமாகவே பேசிக் கொண்டிருப்போம். கம்பியில்லாத் தந்தியிலிருந்து, தையல் மிஷின், கம்ப்யூட்டர், லைட் பல்பு டெலிஃஃபோன் வரை இத்தனை அறிவியல் உன்னதங்களை கண்டுபிடித்த நாட்டில், இத்தனை காலம் நாங்கள் தங்கி இருந்ததில், சீரியஸான அமெரிக்கர்கள், புத்திசாலிகள் என்று நாங்கள் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அருமையாக வாயடிப்பார்கள். அட்டகாசமாக ட்ரெஸ் பண்ணுவார்கள். வெளெரென்று உயரமும் அகலமுமாக ஆறடிக்கும் மேல் இருப்பார்கள். ஆனால் வேலை என்று வந்து விட்டால், " இது என்னுதில்லை என்கிற NIMBY - Not In My Back yard attitude தான் எல்லார்க்கும் இருக்கிறது. ஆஃபிஸில் பாதி நேரம் ஸ்போர்ட்ஸ் பற்றி, தான் கடைசியாய் போய் வந்த வெகேஷன் பற்றி, தன் செல்ல பூனைக்குட்டிக்கு தினம் தினம் இன்சுலின் ஊசி போடுவது பற்றி, மீட்டிங்கில் ஜோக் அடித்தது பற்றி, இந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் எந்த பாருக்கு போகலாம் என்பது பற்றி என்று பேசிப் பேசி பொழுதைக் கழிப்பதே பாதி நேரம். அட...இதெல்லாம் செய்வதோடு, கொஞ்சம் வேலையும் பார்க்கலாமில்லையா...அதான் இருக்கவே இருக்கிறார்களே கன்சல்டண்டுகள். அவர்கள் தலையில் கட்டி விட்டு ஒதுங்கி விடலாமே என்ற எண்ணம்தான் இதிலும்

அதுவும், இந்த அமெரிக்கத் தலைமுறையை நினைத்தால் இன்னமும்
கலவரமாக இருக்கிறது. ஏதோ ஒரு படிப்பு, எப்படியாவது ஒரு வேலை, எங்கேயாவது படுக்கை என்று கண்டதே காட்சி..கொண்டதே கோலம்தான். ஹைடெக் வேலையெல்லாம் அவுட்ஸோர்ஸ் பண்ணப்பட்டு, இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் இரண்டு விதமான வேலைகள்தான் இருக்குமாம். ஒன்று மேஸ்திரி(Management) வேலை - அயல்நாட்டு ஸ்வெட் ஷாப்பில் வேலைபார்க்கும் ஆசாமிகளையும், உள்ளூர் இம்ப்ளிமெண்டர்களையும் ( இவர்களும் ஆஃப் ஷோரில் இருந்து வந்தவர்கள்) கட்டி மேய்க்க. இரண்டாவது சேவை பிரிவு வேலைகள் ( Service Industry) - ஹோட்டல் வேலை, கடைகளில் விற்பனை வேலை என்றெல்லாம் தரம் பிரிக்கப்படும் Low tech Jobs.

ஒருவேளை நாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மட்டும்தான் இப்படி ஆட்கள் இருக்கிறார்களோ. பெரிய பெரிய பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி
நிறுவனங்களிலும் இருக்கும் அமெரிக்கர்கள் எல்லாம் புத்தி ஜீவிகளோ..?? என்று கூட நாங்கள் யோசிப்பதுண்டு. இதையெல்லாம் அம்மாதிரி இடங்களில் பணிபுரியும் சுந்தரவடிவேல் மற்றும் வெங்கட் தான் சொல்ல வேண்டும்.

இந்த இடங்களிலும், நான் சொlவது மாதிரியே நிலை இருந்தால், இந்த நாடு எப்படி இத்தனை தூரம் முன்னேறியது என்ற கேள்விக்கு கண்டிப்பாக விடை தேட வேண்டும். ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் மட்டும் இத்தகைய அபார வளர்ச்சிக்கு காரனமாக இருக்கவே முடியாது. மக்கள் இப்படி Creatures of Comfort ஆக இருந்தால், அடுத்த தலைமுறை அமெரிக்கர்கள் கதி அதோ கதிதான்.

அதற்குள் நாட்டுப்பற்று எனக்கு பெருகி விட்டது என்று அபார பல்டி அடித்து தாயகம் இருக்கும் திசை நோக்கி பாய்ந்து விடவேண்டும்.ஹி..ஹி

தெரிந்தவர்கள், என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.

Tuesday, December 14, 2004

டா கிங் மறைவு

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\daking

தலைக்கு தொப்பி போட்டு, முகத்துக்கு இன்னமும் கொஞ்சம் ரோஸ் பவுடர் தடவி இருந்தால், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் கலந்து செய்தது போல இருப்பார் ஃபெர்னாண்டோ போ . பிலிப்பினோ சூப்பர் ஸ்டார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களின் போது வழக்கமாக நடத்தப்படும் ஒரு பார்ட்டியில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து காலமானார். அவருக்கு வயது 65.

இத்தனை வயதிலும், படங்களில் நடித்துக் கொண்டு நம்மூரின் ஹீரோக்கள் போல ஏழைப்பங்காளன் வேடங்களில் நடித்து நடித்தே லட்சக்கணக்காண ரசிகர்களை பெற்றிருந்தவர். சமீபத்திய தேர்தலில் இப்போதைய அதிபர் எஸ்டராடாவை கிட்டத்தட்ட தோற்கடித்திருக்க வேண்டியவர், மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார். " Breakfast, Lunch, Dinner" என்ற கவர்ச்சியான கோஷத்தோடு தேர்தலை அணுகியவர், சரியான செயல் திட்டங்களை அறிவிக்காததால், படித்த வாக்காளர்களாலும், பத்திரிக்கைகளாலும் நிராகரிக்கப்பட்டு மண்ணைக் கவ்வினார். இப்போதைய அதிபர் அர்ரோயாவுக்கு முந்தைய அதிபர் எஸ்டராடாவும் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்றாலும், அதிபராவதற்கு முன் மேயராகவும் செனட்டர் ஆகவும் ஏகப்பட்ட காலம் பணி புரிந்தவர். ஆகவே சினிமா கவர்ச்சியோடு சேர்த்து, கொஞ்சம் மூளையும் இருந்ததால் மக்கள் நம்பினர். ஆனால் போவுக்கு எந்த விதமான அரசியற் பின்புலமும் இல்லை. வெறும் ரசிகர்களையும், சினிமா கவர்ச்சியையும் நம்பியே இத்தனை தூரம் முன்னேறி வந்ததற்கு, அவருடைய தனிப்பட்ட நல்ல குணங்கள், ரசிகர்களோடு நல்ல உறவைப் பேணுவது, ஒற்றை மனைவியோடு மட்டும் இத்தனை காலம் இருப்பது போன்ற பல நல்ல விஷயங்கள் காரணமாக காட்டப்படுகின்றன.

பெரும் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் திளைத்த அதிபர் மார்க்கோஸ் காலத்திலிருந்தே பிலிப்பைன்ஸின் தொல்லைகள் அதிகரித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது ஆரம்பித்த நெருக்கடியை அடுத்து வந்த எந்த அதிபர்களாலும் சரி செய்ய முடியவில்லை. வருடத்துக்கு ஏறக்குறைய இருபது சூறாவளிகளும், அதன் விளைவான வெள்ளங்களும் தாக்கும் பிலிப்பைன்ஸின் விநோதமான நிலப்பரப்பு, பலிகொள்ளும் உயிர்களும் ஏராளம்.

யார் வந்து சரி செய்வது என்று தெரியாமல், ஊழலிலும் நெருக்கடியிலும் சிக்கி சீரழிவதிலும், பவுடர் மூஞ்சுகளை பார்த்து ஏமாந்து போய் ஓட்டுப் போடுவதிலும் இருக்கும் ஒற்றுமைகள் இந்தியாவையும் பிலிப்பைன்ஸையும் ஏறக்குறைய ஒரே இடத்தில் வைத்திருக்கிறது. " இந்திய, இலங்கை, பிலிப்பினோ பணிப்பெண்கள் தேவையா" என்று சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையில் அடிக்கடி வாசித்த ஞாபகம் இருக்கிறது.இந்தியாவும், பிலிப்பைஸும் மட்டுமல்ல, ஏறக்குறைய பெரும்பாலான ஆசிய நாடுகளில் அரசியல் மற்றும் கலைத்துறைக்கு இருக்கும் தொடர்புகள் மற்றும் சீரழிவுகள் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய சமாசாரம்.

தகவல் உதவி தந்த பிலிப்பினோ நண்பர் டேனியல் பர்னஹாவுக்கு நன்றி.

Monday, December 13, 2004

கொலையும் செய்வார் மதி கெட்ட பதி...

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\1-scott-peterson-before

அமெரிக்க மீடியாக்களுக்கு அவ்வப்போது ஏதாவது பரபரப்பு செய்தி கிடைத்துவிடும். அதை ஊதிப் பெரிதாக்கி, நோண்டி நுங்கெடுத்து, பாடி பறக்கச்செய்து, எல்லாரும் அதைப் பற்றி பேச செய்து விடுவார்கள். எலெக்ஷன் பரபரப்பிலும், இராக் படையெடுப்பிலும் முக்கியத்துவம் இழந்து இருந்த செய்திகளில் முக்கியமானது லாசி பீட்டர்சன் கொலை வழக்கு.
அவரைக் கொன்றதாக அவர் கணவர் ஸ்காட் பீட்டர்ஸன் மீது குற்றச்சாட்டு நிரூபணமாகி, அவருக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. இடையில், ஜூரிகளில் ஒருவரை "வாங்க" முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்து, ஏகப்பட்ட பரபரப்புக்குப் பின் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தண்டணை நிறைவேறுகிறது. கிட்டத்தட்ட இதுவரை கலிஃபோர்னியா மாகாணத்திலேயே அறுநூற்றைம்பது பேருக்குத்தான் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது. கடைசியாய் தூக்குத்தண்டணை வழங்கப்பட்டது 2002 ஆம் வருடம்.

ஆரம்பத்தில் தன்னுடைய லாயர்களுடன் சோக முகத்தோடு ஷேவ் செய்யாமல் பரிதாபமாக வந்த ஸ்காட், பிறகு ஜம் என்று ட்ரிம் ஆக வர ஆரம்பித்தார். Scott is Hot என்றெல்லாம் டாப்ளாய்டுகளில் செய்தி வந்தது. இந்த வழக்கில் இருந்து மட்டும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தால், வெளியே வந்தவுடன் அவர் பிரபலமான புள்ளியாய், ஒரு சூப்பர் மாடலாய் ஆகியிருந்திருக்ககூடிய வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்ல, ஜூரர்கள் கூட இந்த பரபரப்பான வழக்கை அட்லீஸ்ட மூன்றுமாதங்களுக்கு, வெளியில் பேசி, பணமோ, அன்பளிப்போ பெறக்கூடாது என்று ஜட்ஜ் தடை போட்டிருக்கிறார்.

இதே மாதிரி ஓ.ஜே.சிம்ப்ஸன் என்ற ஒரு விளையாட்டு வீரர் பற்றிய கொலை வழக்கும் ஜவ்வாக இழுத்துக் கொண்டே போனது. கிட்டத்தட்ட அவருக்கும் இம் மாதிரி ஒரு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் அவர் விடுதலையானார். பேட்டி எடுக்கப்பட்ட ஒரு பார்வையாளர் உதிர்த்த வார்த்தை இது:

Man...!! I would hire his attorney, if I ever get in to trouble...!!!

நீதி எப்போதும் ஜெயிப்பதில்லை. பிரதிவாதியின் வக்கீல்கள் சொதப்பும்போது மட்டும்..!!

பி.கு: இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகு, அதே இரவில், இந்த கொலைவழக்கு சம்பந்தமாக ஒரு முழு நிகழ்ச்சி, Court TV என்ற சானலில் ஒலிபரப்பபட்டது. முழுதும் பார்த்து முடிப்பதற்குள் திகில் உச்சத்துக்கு போய் விட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த போது ஸ்காட் அளித்த டீவி பேட்டி, அவசர அவசரமாக அவர் விற்க முயன்ற லாசியின் கார் மற்றும் அவர்கள் மொடஸ்டோவில் வசித்த வீடு, அவர் காதலி ஆம்பர் அளித்த பேட்டி, பதிவு செய்யப்பட்ட அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், போலிஸ் வளைத்த விதம், பொதுமக்கள் எதிர்ப்பால் மொடஸ்டோவில் இருந்து ரெட்வுட் ஷோர்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றிய முடிவு, கோர்ட்டில் ஸ்காட்டின் உடல்மொழி, இறுதியில் தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன் கோர்ட் வெளியே மக்கள் ரியாக்ஷன் என்று மிக கலவையான வீடியோ பதிவு அது. கண்டிப்பாய் படமாக வரும் எனு தோன்றுகிறது.

Sunday, December 12, 2004

இங்க ஒரு போஸ் ....

C:\DSC00492

போஸ் குடுத்த புள்ளாண்டான், சோஃபாவுல கொஞ்சம் சரியா உக்காரக் கூடாதா..??

என்னமோ போங்க..!!

Saturday, December 11, 2004

இசைக்குயில் பறந்தது....

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\2004021500060302

சங்கீத மேதை டாக்டர் எம்.எஸ் மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தமிழ்நாட்டில் எத்தனை உள்ளங்கள் துடிதுடிக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எண்ணிலடங்கா பட்டங்களும், ஏகப்பட்ட ரசிகர்களையும் பெற்றிருந்த அவர், தனக்கு இசை மூலமாக வந்த எல்லா செல்வத்தையும் அறக்கட்டளைக்கும் அனாதை இல்லங்களுக்குமே கடைசி வரை அளித்து வந்தவர். மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என அழைக்கப்பட்ட அவர், கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர் திரு. சதாசிவம் அவர்களை மணந்து, அவருடைய மனமொத்த சகியாக இருந்து, ஐ.நா சபை வரை சென்று பாடும் பெரிய பேறு பெற்றிருந்தார்.

ஒரு சாயலில் இந்தக் கால ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் எம்.எஸ் அவர்களை ஸ்ரீ ரங்கபுர விஹாரா என்ற பாடல் மூலம் முதன் முறையாக அறிந்து கொண்டேன். என் தகப்பனார் இவருடைய சங்கீதத்தின் பரம் விசிறி. எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், போன்றவர்களின் பாடல்களும் அவருக்கு பிடிக்கும் என்றாலும், எம்.எஸ் கச்சேரி கேட்கும்போது தன்னை மறந்து விடுவார். கச்சேரிகளின் போது, ஏகப்பட்ட அங்க சேஷ்டைகள், அலட்டல்கள், முகபாவ மாற்றங்கள் எல்லாம் செய்யும் இசைக்கலைஞர்கள் மத்தியில் எம்.எஸ் அம்மாவின் கச்சேரியை ஒளிப்பேழையில் பார்த்தாலும் அவ்வள்வு அருமையாக் இருக்கும். கண்களை மூடி, லயிப்புடன், பாடகி ராதாவுடன் அவர் சேர்ந்து பாடுவது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. காஞ்சி மகாப்பெரியவர் எழுதிய பாடல்கள் சிலவற்றை அவர் பாடியிருப்பதாக அறிகிறேன்.

பாவயாமி ரகுராமம், ஸ்ரீரங்கபுர விஹாரா, காற்றினிலே வரும் கீதம் போன்ற உருக வைக்கும் பாடல்கள் இருக்கும் வரையில் எம்.எஸ் அம்மாவின் ஸ்தூல சரீரம் போனாலும், அவர் இசையுருவம் எங்கள் நெஞ்சங்களில் நின்றாடும்.

அந்த இசைமேதைக்கு என் அஞ்சலி...!!

அலாரம் அடிக்கும் நகரம்

நகரம்


தனியே இருத்தி
தென்னோலை அடைத்து
உலக்கை உருட்டி
ஊருக்கும் உறவுக்கும்
சொல்லி
சல்லடைத் தட்டு வழியே
மஞ்சள் நீரூற்றி
பூச்சூடி
பட்டுடுத்தி
புட்டு சுற்றி
நலங்கு வைத்து
திருஷ்டி கழித்து
"படம்" காட்டும்
தமிழ் சினிமா
மலைப்பாய்த் தான்
இருக்கிறது
பள்ளி நேர அவசரத்தில்
விழுந்தடித்து ஓடி
ஒன்பது மணிநேர
கசக்கலிலும்
நெரிசலிலும்
மூச்சுத்திணறி வியர்வை வழிய
மாநகர போக்குவரத்துக் கழக
23-C பேருந்தில்
பூத்த
என் செல்லத்துக்கு....


அலாரம்

அதிகாலைக் குளிர்
எழுந்து அணைத்து
விட்டுத்
தூங்கினேன்.
அரை மணி கழித்து
பையன்...

Friday, December 10, 2004

வாங்க..மக்கா...வாங்க !!!

images

பிச்சைப்பாத்திரத்தைப்
பார்த்து
வாந்தி எடுத்த மாதிரி
இருக்கிறது என்று
சாத்தான்குளத்திலிருந்து வேதம்
ஓதுகிறார்கள்
ஒலிக்கும் கணங்களை
உணராத பேதைகள்

என்ன நவீன கவிதை மாதிரி இருக்கா..?? ஹி..ஹி

திசைகள் நம்பி, ஸ்வஸ்திக் ஆட்ஸ்காரர், லொள்ளு பாய் மற்றும் கொல்கத்தா டீச்சரம்மாவுக்கு வரவேற்பு.

இரண்டு நாட்கள்....

கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு. Calpers ல் சேர்ந்து இரண்டு மாதங்களான பிறகு, புதிதாக சேர்ந்தவர்களுக்கான பயிற்சி வகுப்பு போவதென்பது - அதுவும் இங்கேயே மூன்று வருடங்களாக கன்சல்டந்த் ஆக பணி புரிந்த எனக்கு வித்தியாசமான அனுபவம்.

மற்ற பிரிவிலிருந்தும், மற்ற கிளைகளிலிருந்தும் வந்திருந்த புது மனிதர்களோடு பழகுவது வித்தியாசமாக இருந்தது. வந்திருந்தவர்களை குழு குழுவாக பிரித்து இருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஆறு பேர். எங்கள் குழுவில் ஒருவர் இந்தியர். ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர். ஒருவர் பிலிப்பினோ-ஸ்பானிஷ். ஒருவர் வியட்னமிஸ். ஒருவர் சீனர். ஒருவர் ஐரிஷ் அமெரிக்கர். கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் இதுமாதிரி கலவைதான் . ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் கூடி உட்கார்ந்து பேசும்போது, இத்தனை கலவையான சமூகத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிலும் நம்மாட்களை தவிர பெரும்பாலான இனத்தவர்கள், எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக பழகக் கூடியவர்கள். ரொம்ப ஜோவியனான ஆசாமிகள்.

பயிற்சியில் ஒரு நள் Trade Room என அழைக்கப்படும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். calpers ன் சொத்து மதிப்பு 160 பிலியன் டாலர்கள். அவற்றை சரியான இடங்களில், சர்வதேச ஸ்டாக் மார்க்கெட்டுகளில் முதலீடு செய்யும் முடிவுகளையும், செயற்படுத்தலும் நடக்கும் இடம் இந்த அறை. வெவ்வேறு தேச நேரங்களைக் காட்டிக் கொண்டு ஏகப்பட்ட கடிகாரங்களும், ஸ்டாக் மார்க்கெட்டில் காணப்படும் பேனல் போர்டுகளைப் போல மார்க்கெட் நிலவரம் சொல்லும் பேனல்களும், முக்கியமான செய்தி செனல்களின் டீவி ஒளிபரப்பும், எகப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களும், ராய்டர்ஸ் மற்றும் ப்ளூம்பர்க்கில் இருந்து செய்தியை தொடர்ந்து துப்பிக் கொண்டிருக்கும் டெலி பிரிண்டர்களும், ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் நான்கு மானிட்டர்கள் மற்றும் அவற்றில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் க்ராஃப்களும்...

பணமும் அது சார்ந்த முதலீடும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எத்தனை முக்கியம் என்பதை 5 நிமிடத்துக்குள் அற்புதமாக புரிய வைத்த அனுபவம். "பணம் சேக்கறது முக்கியம் இல்லை. சேத்த பணத்தை காக்கிறதும் இன்னமும் வளர்க்கிறதும் தான் முக்கியம்" என்று சின்ன வயசில் அப்பா சொன்னது மனதில் நிழலாடியது.

இரண்டு நாள் பயிற்சியில் ரொம்பவே கவர்ந்த பகுதி இது.

அட....

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\ada

சிம்புவின் பேட்டி இந்த வார விகடனில் சூப்பர். தனுஷ் கல்யானத்தை பற்றியும், தன் பழைய நட்பைப் பற்றியும் மிக அருமையாக பேசி இருக்கிறார்.
தன்னுடைய நட்பை, காதலை வெறும் புலம்பலாகவும், துவேஷமாகவும், கவிதைகளாகவும், தாடியாகவும், சுயபச்சாதாபமாகவும் பயிர் செய்யும் மக்களிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு இருக்கிறது இவர் அணுகுமுறை

இந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - ரோஸா வஸந்த் மனது வைத்தால் ....(ஹி..ஹி)

Wednesday, December 08, 2004

இன்னைக்கி லீவ்

காலைலேர்ந்து ஆஃபிஸ்ல ஒரே பிஸி. ட்ரெய்னிங் ஒண்ணு போக வேண்டி இருந்தது. நடுவுல நண்பர் அருணுக்கு மட்டும் அவர் பொட்டிக்குள்ள பதில் போட்டேன்.

சாயங்காலம் தான் வந்து சில விஷயங்களை படிச்சேன். வாய் விட்டுச் சிரிச்சேன். தகவலுக்கு என்று நேற்று சில விஷயங்களை இங்கே நான் எழுதி இருந்தாலும், வழக்கம்போல அவ்விடம் "தாவல்" தான் நடந்திருக்கு.

இருக்கட்டும்...

இதுவரை, தினம் தினம், அவருடைய "தாவல்களை" வைத்து என் வலைப்பதிவில் "பிழைப்பு" நடத்தியது போதும். இனிமேலாவது சொந்தமா ஏதாச்சும் எழுதறதுக்கு முயற்சி பண்ணுவம்.

அவருடைய காலட்சேப சங்கீதம் கனஜோரா நடக்கட்டும். உடுப்புகளை கிழிச்சிகிட்டு புலம்பற லெவல் வரைக்கும் போகாம இருந்தா சரிதான்.

பாவம்..!!!

Tuesday, December 07, 2004

மற(றை)க்கப்படும் மறுமொழிகள்

கற்றதும் பெற்றதும் தொடரில் எழுத்தாளர் சுஜாதா கீழ்கண்டவாறு ஆரம்பித்துவிட்டு ....

அகாடமியில் இந்த வருஷம் கச்சேரிகள் இல்லையென்றும், சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு மினி சீசன் நடத்தப் பிரயத்தனப் படுவதாகவும் அறிகிறேன். கர்நாடக சங்கீதம், சென்னையில் இன்று அப்பர் மிடில் கிளாஸ் பிராமணர்கள் மட்டும் வருஷத்துக்கு ஒரு மாசம் பேணிவரும் சங்கீதமாகக் கருதப் படுகிறது. கேரளாவிலும், ஒரு அளவுக்குக் கர்நாடகாவிலும் அப்படி இல்லை. ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் இதெல்லாம் அவாள் சங்கீதமாகி விட்டது!

தொடர்ச்சியாக பத்து யோசனைகளில் இவற்றையும் சொல்லி இருந்தார்.

8.கர்நாடக இசையை ஆதரித்து, நல்ல தமிழ்ப் பாடல்கள் இயற்றுவது.
9.ஆண்டின் திரைப்படங் களில் சிறந்த கர்நாடக இசை சார்ந்த பாடலுக்கு அவார்டு கொடுப்பது
.

சங்கீதத்தின் அவசியத்தையும், மனிதனை செம்மைப்படுத்தும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதனை எல்லார்க்கும் பரவலாக்க, தமிழிசையை ஊக்குவிப்பது என்று தொனி எழ அவர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.

போன வருடம் சங்கீத சீசனில் பா.ம.க ஏற்பாடு செய்த தமிழிசை விழாவில் தயிர் சாதப் பொட்டங்களுக்காக நடந்த அடிதடி பற்றி டாக்டர்.வாஞ்சி 01-01-2004 அன்று ராயர் காப்பி க்ளப்பில் எழுதி இருந்தது இங்கே :

இராம. கிருஷ்ணன் "முழுக்க பாரதிதாசனைக் கேட்கணும்னா, ஓவ்வொரு ஆண்டும் மாணவர் நகலகம் அருணாசலம் நடத்து இயலிசைநாடக மன்ற இசை விழாவுக்குப் போங்க! அதை இந்த ஆண்டு முதல் பா.ம.க. நடத்துறதாக் கேள்வி. "என்று எழுதியிருந்தார். மழைக்கு ஒதுங்குவது போல் நானும் இந்த பா.ம.க.வின் பொங்குதமிழ்ப்பண்விழாவிற்குச் சென்றிருந்தேன்.நான் பணிபுரியுமிடத்திலிருந்து பூசனிக்காய் எறிதூரத்தில் அந்த அரங்கம் இருந்ததால் சென்றேன்.மத்தியானம் குறவஞ்சிப்பாடல்கள் என்று ஊரெல்லாம் விளம்பரத்தை அடித்துஒட்டியிருந்தார்கள்.ரெனவே சரியாக 2 மணிக்கு அங்கே வந்து சேர்ந்தேன். அரங்கின் வெளியேயிருந்தஒலிபெருக்கி உள்ளே பாடியதைச் சாலையில் செல்பவர்கள் கேட்டு இன்புறும் நோக்கத்தில்சாலையைக் கடப்பதற்கு முன்பே எனக்கு வடமொழியும் தமிழும் மாறி மாறிப் பாடிக் காட்டியதைத் தந்துகொண்டிருந்தது. பாட்கர் தமிழில் வடமொழியைவிட எவ்வளவு அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறதுஎன்பதைத் தனது 100 % பிராமணியத் தமிழில் விளக்கிக் கொண்டிருந்தார்.சாலைப் போக்குவரத்து குறைந்து நான் அரங்கத்தில் நுழையும் முன்னே அவர் "2006 இல் பாட்டளி மக்கள்கட்சியே ஆட்சி பிடிக்க வேண்டும்" என்று வாழ்த்தி வணங்கி விடை பெற்றார்.

நான் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து நாற்காலியில் அமரும்போது போது மேடையில் ஒருவர்நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.பளபளக்கும் பட்டுப்புடவையுடன் எவரையும் அரங்கத்தில் காணும். வேஷ்டியுடன் நிறைய பேர் இருதனர்.எனக்கு அருகில் இருந்தவர், சாப்பாடு போட்ட பிறகு வள்ளுவர் கோட்டம் போய் பார்த்துவிட்டுவந்துவிடலாம் என்று கூட வந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். அடுத்து பாடப்போகிறவரைப் பற்றிஅறிமுகத்தை முடித்து பாடப் போகிறவர் தொண்டையைச் செரும அரங்கத்தில் ஏகப்பட்ட ரகளை. சாப்பாடுவிநியோகம் செய்து கொண்டிருந்தனர். எங்கள் கிராமத்தில் (புழுங்கலரிசிக்காக) நெல்லை வேகவைக்கப்பெரிய கொப்பரை வைத்திருப்பார்கள். அந்த கொப்பரை நிறைய சுட சுடச் செய்திகளோடுசாம்பார்சாதத்தையும் உள்ளடக்கியதினத்தந்திப் பொட்டலங்கள் இருந்தன.பால்கணியிலிருந்து ஒருவர் கிழ்நோக்கி "அண்ணன் இங்கே இருக்கார் இங்க இருபது பொட்டலம்அனுப்புங்கப்பா" என்றார். மேடையில் மீண்டும் பேச்சாளர் தோன்றி, "அனைவருக்கும் தேவையான அளவுஉணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்பர்கள் அமைதியாக அவற்றைப் பெற்று உண்டு இசையைரசிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்று இடைமறித்து அறிவித்தார்.இசைஞர் காவடிச் சிந்து எழுதியவர் அண்ணாமலை ரெட்டியார் என்று குறிப்பிட்டு பிறந்த இடம், தாய்தந்தை பெயர், அவருக்கு வந்த வியாதி போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். ("இசையும்அவரே, ஆய்வுரையும் அவரே" என்று முன்னதாக அவர் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்).
எல்லா நாற்காலிகளிலும் அங்கே விநியோகம் செய்யப்பட்டிருந்த அச்சடித்த துண்டுக் காகிதம் இருந்தது.மாம்பலத்தில், "பெரிய அய்யா, சின்ன அய்யா படங்களுடன் கூடிய லெட்டர் பேடுகள், வரவேற்பறையில்மாட்டிக் கொள்வதிலிருந்து பர்ஸில் வைத்துக் கொள்ளும் வரை எல்லா அளவிலும் அவரது புகைப்படங்கள்"எல்லாம் எங்கே மொத்தமாக வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.என்னுடைய முன் வரிசையிலிருந்தவர் தயிர் சாதம் தொண்டையை அடைக்கிறது, நிறைய தயிர்ஊற்றிப் பிசைந்திருக்கலாம் என்றார். ஐந்தாவது முறையாக மேடையில் உணவுப் பஞ்சமில்லா அரங்கத்தில்அமைதி காக்க வேண்டிப் பேச்சாளர் தோன்றிய போது எழுந்து வந்தேன். பா.ம.க. கட்சிப்பிரசுரங்கள்,கட்சித்தலைவர், தலைவரது புதல்வர் படம் பொறிக்கப்பட்ட சாவிக்கொத்துகள் வியாபாரம் சுறுசுறுப்பாகநடந்து கொண்டிருந்தது.


அதற்கு மறுமொழியாக இராம.கி அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தார்.

உங்களது பார்வை ஒருவிதமானது. சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பார்வை உங்களுக்கு! நண்பர்இரா.மு. வேறு நறுக்கென்றும் சுருக்கென்றும் சொல்லுகிறார்.

நானொன்றும் பா.ம.க ஆளில்லை. அதே பொழுது, இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் பார்ப்பதுபோல் பார்க்கமாட்டேன். மேலே இருந்து கீழே பார்ப்பது ஒருவகை. கீழே இருந்து, பக்கவாட்டில் பார்த்து கூட இருக்கும்உடன்நெஞ்சன் (எப்படிச் சொல்லுவீர்கள்? சக ஹ்ருதயன்....இல்லையா?) பார்வை உயர தன்னால் இயன்ற படிவழி சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகை. கானாப் பாடுகிறவன் ஆர்வ மிகுதியில் கரகரப்பிரியாபாடும் போது தப்பும் தவறுமாகத் தான் தொடங்குவான். ஏனென்றால் அவன் நடக்க வேண்டிய தொலைவு கூட.
இசை பற்றி ஒரு காலத்தில் சற்றும் தெரியாத நான் கூட "அலை பாயுதே" வைத் தட்டுத் தடுமாறித்தான்தொடங்கினேன். கூடவே புரிந்து நகர "வேயுறு தோளி பங்கனும்" " மன்னுபுகழ் கோசலைதன் .... என்னுடையஇன்னமுதே இராகவனே தாலேலோ" வும், மானா மதுரைக்குப் போகும் மச்சான் - எங்க சின்ன மச்சான், எங்கபெரிய மச்சானும் " கைகொடுத்தன. ஓசை சற்றே கை வந்தது.
இது போன்ற முயற்சிகள் தொடங்கும் போது முதலில் முட்டாள் தனமாகத் தான் இருக்கும். பெர்னாட்சாவின்பிக்மேலியன் நினைவிற்கு வருகிறது. கால காலமாக இந்த இசையின் அருமை தெரியாது ஒதுக்கி/ஒதுங்கிஇருந்த கூட்டம், நீங்கள் அந்த அரங்கில் பார்த்த கூட்டம், தட்டுத் தடுமாறி எழுகிற கூட்டம், திடிரென்றுநடந்துவிடாது. பட்டு விழுந்துதான் நடை போடும்; அதனால் என்ன? விழுந்து எழாமல் மிதிவண்டி கற்றவர்யார்? இத்தனை கால அழிம்புகளுக்கும் பிறகு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை டாக்டர்அய்யாவிற்காகக் கேட்க முற்படுகிறார்கள் அல்லவா? இது ஒரு தொடக்கம், வாஞ்சி. இதற்குப் பலன்கிடைக்கும். கேள்வி ஞானம் ஒரு நாள் அடிப்படை ஞானமாக மாறும்; நாளடைவில் அவர்களில் நூற்றில் ஒருத்தன்சிந்து பாடுவதில் பெரிய ஆளாக வருவான். வரட்டுமே? சிந்து பாடுவதில் JKB மட்டும் தான் இருக்கவேண்டுமா, என்ன?

கீழை நாட்டுக் கிழவன் ஒருத்தன் (அவன் தலைவனும் கவிஞனும் கூட) சொன்னானாம்; புரட்சி என்பது ஓவியம்அல்ல; இரவுச் சாப்பாட்டு விருந்தும் அல்ல; அது நளினமாகவும் ஒயிலாகவும் என்றைக்கும் இருக்க முடியாது; அதுமாந்தர்களால் நடத்தப் படுவது.


ஈதிப்படி இருக்க சமீபத்தில் அரவக்கோன் க்ளப்பில் எழுதி இருந்த இந்தக் கடிதத்திற்கு, அன்பர் திருமலை கருணாநிதியின் தமிழிசைப்பற்றைப் பற்றி சோ அடித்த கமெண்ட்டை போட்டுவிட்டு, கடந்த தமிழிசை விழாவிலே தயிர்சாதப் பொட்டலங்களுக்கு நடந்த அடிதடி பற்றி டாக்டர் வாஞ்சி சொன்னது நினைவு வருகிறது என்பதோடு மட்டும் நிறுத்தி விட்டார்.

என் கேள்வி மிக எளிமையானது. தமிழிசை பற்றி பேசவில்லை. கர்நாடக இசை , தனித்தமிழ் பற்றியும் வாக்குவாதம் வேண்டாம். பா.ம.க ஏன் தமிழிசையில் திடீர் ஆர்வம் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குள்ளும் புக வேண்டாம். அட...ஒரு விவாதம் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நடந்த அத்தனை தகவல்களையும் மறந்து விட்டு தமிழிசை விழாவில் தயிர்சாத அடிதடி என்பதை மட்டும் வணிக நாளேடுகள் போல ஃப்ளாஷ் பண்ண வேண்டுமா..?? என்பதுதான்.

எகலப்பை உள்ளவர்கள் இந்த திரியில் உழுது பாருங்கள். முழு விவரம் இங்கே உள்ளது - மறுமொழி மறுவாதங்களுடன்.

உங்கள் தகவலுக்காக. வேறு தாவல்களுக்கு இல்லை.



Monday, December 06, 2004

பண்டிகை தினங்கள்

கடேசி குவார்ட்டர் என்று ஏற்கனவே இங்கே எழுதி இருந்தேன். இது கிட்டத்தட்ட அதனுடைய தொடர்ச்சிதான்.

கிறிஸ்துமஸ் வர இன்னமும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. குளிர் அதிகம். பண்டிகை கூட்டமும் அதிகம். இரவில் எங்கள் குடியிருப்புப் பகுதியே விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. எல்லா கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது வருவதைப் போலவே, இப்போதும் ஒரு படம் வந்திருக்கிறது என்றாலும், இதைப் போல இன்னொரு படம் வர முடியாது என் டீம்மேட் ஜீன் தாத்தா சொல்கிறார். இன்னமும் நான் இரண்டையும் பார்க்கவில்லை.

போன கிறிஸ்மஸ் நாங்கள் அபார்ட்மெண்டில் இருந்தோம். வாங்கிவந்த கலர் பல்புகளை வாசலில் உள்ள பந்தல் மாதிரி உள்ள roof ல் தொங்கவிட்டு விளக்கெரிந்தபோது ஜூனியர் மூஞ்சில் சூரியகோடி பிரகாசம். எங்களுக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை என்றாலும், கிறிஸ்மஸ் மரம் வைத்து, புகை போக்கி வழியாக தாத்தா இறங்கி வந்து கிஃப்ட் கொடுப்பார் என்றெல்லாம் கதை விட்டு, கிறிஸ்மஸ் காலையில் எழுப்பி, பரிசு கொடுத்தோம். மறுபடியும் அண்ணாச்சி மூஞ்சு முழுக்க 1000 வால்ட் பல்பு போட்டார்.

இந்த வருடம் இன்னமும் கிறிஸ்மஸ் மரம் வைக்கவில்லை. போனமுறை லோக்கல் சித்தி விநாயகர் கோவிலில், கிறிஸ்மஸ் மரத்தைப் பற்றி அங்கு உள்ள ஐயர் ஒருவர் உயர்வாக சொல்ல, ( நம் புராணங்களில் இந்த தேவதாரு மரத்தைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அதிலிருந்து வரும் காற்று உடம்புக்கு நல்லது...) , போனமுறை ஒரிஜினல் மரம் வாங்கினோம். வருடா வருடம் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், இந்த முறை ப்ளாஸ்டிக் மரம்தான் வாங்க வேண்டும். இன்னம் கொஞ்சம் கலர் பல்பு வாங்க வேண்டும். அபார்ட்மெண்டில் போட்டிருந்த துளியூண்டு பல்பு மாலையை இந்த வீட்டின் முன் போட்டால், சரத்குமாருக்கு நாலு முழ வேஷ்டி கட்டியது மாதிரி இருக்கிறது.

அமெரிக்க பண்டிகைகளின் கோலாகலம் இப்படி இருக்க, நம் பண்டிகைகள் கொண்டாடுவது ரொம்ப சோகம் இங்கே. ஜே ஜே என்று கொண்டாடிய தீபாவளியையும், பொங்கலையும், மற்ற பண்டிகைகளையும் தனியாக கொண்டாட வேண்டி இருக்கிறது. கிறிஸ்மஸ் கேக்கையும், தேங்க்ஸ் கிவிங் பரங்கியையும் வெளியுலகில் கிடைக்கும் வெளிச்சத்திலிருந்து சுவீகரித்துக் கொள்ளும் பையன், முறுக்கையும், அதிரசத்தையும் தீண்டவே மாட்டேன் என்கிறான். வேண்டாம் என்று நாசுக்காக மறுத்து விடுகிறான். அவனுக்காகவாவது எல்லாவற்றையும் கொண்டாடி காட்ட வேண்டும் என்று தோணுகின்ற சமயத்திலேயே, அதெல்லாம் அவனுக்கு தேவைப்படுமா என்றும் கேள்வி எழுகிறது. எனக்காவது, கொஞ்ச காலம் கழித்து மாயவரத்தில் போய் செட்டில் ஆகும் நப்பாசை இருக்கிறது. இந்த சூழலில் வளரும் அவனுக்கு, இங்கிருக்கும் ஆட்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுதான், கலந்து பழக ஏதுவாக இருக்கும் என்றும் யோசனை தோன்றுகிறது இந்த ஒரு காரணத்திற்காகவே, இதுவரை தமிழில் சரளமாக பேச எழுத சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாமல் இருக்கிறது.

மனித வாழ்க்கை என்பது இத்தனை கேள்விகளால் உருவாக்கப்பட்டது என்று யாரும் எனக்கு சொல்லி இருந்தால், வண்ணத்துப்பூச்சியாக பிறந்து வர வரம் கேட்டிருப்பேன்.

டூ லேட்...!!


இதன் தொடர்பில், முன்னர் எழுதியவைகள் :

பாலம்

ஜீஸஸ் க்ரைஸ்ட் யாரப்பா
கேட்டான் பிள்ளை..
முருகன் தம்பியோ..??
சந்தேகம் அவனுக்கு....
பள்ளியில் நண்பரெல்லாம்
கிறிஸ்மஸ் கொண்டாடயில்
சர்ச்சில் ஜபிக்கையில்
கிறிஸ்மஸ் மரம் வைக்கையில்
சான்டா க்ளாஸ¤டன் பேசுகையில்
வீட்டில்
'தனந்தரும் கல்வி தரும்'
சொல்லும் குழப்பம் அவனுக்கு...
அலைந்து தேடி
கிறிஸ்மஸ் மரம் வாங்கி
அலங்கரித்து
லைட் பொருத்தி
ஓய்ந்து போய்
போர்ச்சுகல் ஒயினும்
கோழி வறுவலுமாய்
உட்காருகையில் போன் வந்தது
..'அண்ணாமலை தீபம்டா இன்னைக்கு..
பெரிய கார்த்திகை..
வாசல்ல ரெண்டு
வெளக்கேத்தி வை.
.இன்னைக்காவது 'சுத்தமா' இரு..
என்றார் அப்பா..

தனியே

கிறிஸ்துமஸ¤க்கு ஜெபிக்கவில்லை
லேபர் டே வீக் எண்ட்
ஒரு அர்த்தமும் தரவில்லை
ஹலோவீன் வேஷமும்இல்லை எனக்கு..!!
தாங்ஸ் கிவிங்...
கேட்கவே வேண்டாம்...

தீபாவளியும்..சரஸ்வதிபூஜையும் ...
பொங்கலும்..கொண்டாடிவிட்டு
காரில் போகையில்
பரபரவென்று நெற்றி சந்தனத்தை
அழித்தழித்து
திரு திரு வென விழித்தபடி
ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள்...!!

Saturday, December 04, 2004

NaaCh - A Movie by RGV

" Ye Gandha hai. Lekin ye Dhandhaa hai" என்று ராம் கோபால் வர்மா ஒரு டைரக்டர் கதாபாத்திரம் மூலமாக பேசி இருக்கிறார். உண்மையில் தனக்குள் இருக்கும் பல துண்டுகள் தொடர்ந்து நடத்தும் வாக்குவாதங்களையே இதில் படமாக்கி இருக்கிறார் எனத் தோன்றுகிறது.

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\Naach1

(படத்தில் டைரக்டர் மற்றும் அந்தரா மாலி)

ராம்கோபால் வர்மாவின் ட்ரீட்மெண்ட் இப்போது கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கிறது. ரங்கீலா படத்தைப் போல இதற்கும் சினிமாத் துறை தான் களம். ஆனால் அதில் உள்ள ட்ராமா இதில் கிடையாது. பாத்திரங்கள் அழுத்தமானவர்கள். (ஒரே ஒரு இடத்தை தவிர) அதிகம் பேசாமல், வெறுப்பானாலும், கோபமானாலும், காத்லானாலும், திமிரானாலும் அடர்த்தியான செறிவான மெளனத்தில் ( தாங்க்ஸ் ஆசிப்பு :-) ) காட்டி விடுகிறார்கள்.

சிறுகதையை நாவலாக்கினால் என்ன கொடுமை நடக்குமோ, அதை விட கொடுமை இந்தப் படத்துக்கு நடந்திருக்கிறது. சங்கரமடத்தின் புனிதம் போல மகா வீக்கான, நோஞ்சலான ஸ்டோரி லைன். நடிகர்களின் நடிப்பில் சின்ன சுவாமிஜியின் அழுத்தம். அங்கிருக்கும் பணத்தைப் போல க்தாநாயகியின் கவர்ச்சி. விஷயம் வெளியே வந்த வேகத்தைப் போல மகா ஸ்லோவான திரைக்கதை.

அபிஷேக் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார். அவர் ஆகிருதிக்கும், உயரத்துக்கும், ஸ்கூல் பையன் மாதிரி மாலியின் முன் I love you..I love you என்று சொல்லிச் சொல்லி அவர் அவமானப்படுத்தப் படுகையில் நமக்கே ஐயோ பாவமே என்றிருக்கிறது. நெய், பச்சை கற்பூரம் போட்டு அல்வா சாப்பிட என்றே பிறந்த மாதிரி ஒர் மூஞ்சோடு சஜித் தேஷ்முக். அந்த்ரா மாலி..?!!! - நான் காலி. சில க்ளோஸ் அப்புகளில் எங்கள் தெருவில் இட்லி வியாபாரம் செய்த ஜானகி அம்மாள் போல வயதான களை. பாலுமகேந்திராவின் கதாநாயகிகள் எல்லாம் கொஞ்சம் கிராமத்து லட்சணமாக இருப்பது போல, ராமின் கதாநாயகிகள் எல்லாம் "கோவா" களையாக இருக்கிறார்கள். சர்...ர்ரியான கட்டை. கூடப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி "உரித்த கோழி மாதிரி இருக்கிறாள்" என்றார்.
சிக்கனமான ரிப்பன் உடைகள். அதைவிட சிக்கனமான சிரிப்பும், இடையும். ஆனால் உடம்புக்கும், முஞ்சிக்கும், படத்தில் அவர் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை. சரியான தலைகனம் பிடிச்ச டீச்சரம்மா...!! இசை அருமையாக இருக்கிறது . யாரென்று தெரியவில்லை. காமிராவும் அருமை.

படம் ஸ்லோவாக இருப்பது ஒரு குறையில்லை எனில் தாராளமாக முயற்சிக்கலாம்.

Friday, December 03, 2004

இடைவெளி

முகமே தெரியவில்லை
முதல் முதலாய் பார்த்தபோது
முகடுகள் தெரிந்து விட்டால்
முகமெங்கே தெரிகிறது.

வெறித்துப் பார்த்தலில்
விவேகம் இல்லை என
பலவீனமாய் மூளை நினைவுறுத்த
மனசு மட்டும் இடைவெளியில்
தெரிந்த
தரிசனத்துக்கு சண்டித்தனம் செய்யும்

பேனாவுக்கு கை நீட்டியும்
பேச்சுக்கு புன் சிரித்ததிலும்
வணக்கத்துக்கு தந்த தலையசைப்பிலும்
பேர் சொன்ன அறிமுகத்திலும்
குறைந்தது
இடைவெளி மாத்திரமில்லை
கொஞ்சம் வெம்மையும் கூட

பழகவும் பேசவும்
பகிரவும் மலரவும்
இறகாச்சு மனசெனக்கு.
பேசாத விஷயம் அங்கே
ஏதும் மீதம் இல்லை
இப்போதெல்லாம்.
மணிக்கணக்கில்
பேசிப் பிரிகையில்
எங்காவது தெரிந்திருக்கலாம்.
ஏதும் விலகி இருக்கலாம்.

யாரதைப் பார்த்தார்கள்.

மனசும் மூளையும்
சேர்ந்திணையும் மாயாஜாலம்
தோழமை தந்த வரம்.

Thursday, December 02, 2004

மாதர் சங்கம் - 1982

கண்ணாடி என்கிற பிரயோகத்தையே சந்தேகப்படுத்தும் விதமாக எப்போதும் மணல்கயிறு கிஷ்மு மாதிரி மூக்கிலேயே தொங்கிக் கொண்டிருக்கும் சோடாபுட்டி. மெலிந்த தேகம். எப்போதும் கலைந்து கிடக்கும், அம்மா தேய்த்துவிட்ட yendeluxe தேங்காய் எண்ணையோடு கோரை முடித தலை. நெற்றியில் பளிச்சென்று தெரிய வேண்டுமென்பதற்காக பாண்ட்ஸ் பவுடரில் (விபூதிக்) கீற்று. வாய்க்குள் சதா ஏதாவது ஒரு பாட்டு. தெருவில் நடந்து கொண்டே கதைப் புத்தக வாசிப்பு. சட்டைப் பையில் "சிவந்த மண்" வாங்கித் தின்ன, பெருஞ் சண்டைக்குப் பிறகு அம்மா கொடுத்திருக்கும் அஞ்சு காசு. மேற்சொன்னவைகளோடு சுற்றிக் கொண்டிருந்த ஒரு பொடியன் சடாரென்று ஒரு நாள் பிரபலமானான்.

மாயவரம் மாதர் சங்கம் சார்பாக நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் " மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்ற தலைப்பில் 1982 ஆம் வருடம் பேச்சுப் போட்டி. அப்போது அவன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். உருவத்துக்கு சம்பந்தமில்லாத கணீர் குரலோடு அப்பா எழுதி கொடுத்த தமிழ், சரளமாக நாவில் விளையாட, அந்தப் பேச்சுப் போட்டியில் அவனுக்கு முதல் பரிசு. பாரதி புண்ணியத்தில் கழுத்தில் விழுந்த முதல் மாலை. தமிழில் பேசினால், திறமையை காட்டினால், கைதட்ட, பரிசு தந்து ஊக்கப்படுத்த நான்கு பேர் இருக்கிறார்கள் என்று புரிந்து போக, புகழ் போதைக்காக, மேலும் மேலும் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள் என்று கலந்து கொண்டு வளர்ந்தாலும், விவரம் தெரியாத வயதில் பேச்சுப் போட்டிக்காக நெட்டுரு பண்ணிய பாரதி மட்டும் இன்று வரை தொடர்கிறான். கவிஞனாக வசீகரித்த அவன், இப்போது, விவரம் தெரிந்த இந்த வயதில் கவிஞன் என்ற எல்லையைத் தாண்டி தமிழ் சமூகத்தில் அரிதாகத் தோன்றும் மாமனிதர்களில் ஒருவனாக மனதுள் இருக்கிறான். இணையம் முழுக்க விரவிக் கிடக்கும் அவன் பற்றிய தகவல்கள், அவன் மேல் வெறிபிடித்த பாரதி பித்தர்கள் தரும் செய்திகள் என்று ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க அதிசயமாய்த்தான் இருக்கிறது. வாங்கி வைத்த பாரதி கவிதைகள் தொகுப்பை என்றாவது ஒரு நாள் ஹரிமொழியின் துணையோடு முழுதாய்ப் படித்து விட முடியும் என்கிற பேராசை இன்னமும் பாக்கி இருக்கிறது.அது நீண்டகாலத் திட்டம் . திசைகள் தந்திருக்கும் பாரதி சிறப்பிதழ் அமர்க்களமாக வந்திருக்கிறது. அது இன்றைய திட்டம்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Subramaniya+Bharathi

பாரதிக்கு, நல்லவனாய்ப் பிறந்து தொலைத்ததால் கிறுக்குப் பார்ப்பான் என்று இகழப்பட்ட அந்த விராட் புருஷனுக்கு, இந்தத் துரும்பின் நினைவு அஞ்சலி...

Wednesday, December 01, 2004

பெங்களூரும், டெல்லியும்

நல்ல விஷயமே கண்ணுல படாதா என்று கேட்காதீர்கள். பெங்களூரி பிஷப் காட்டன் பள்ளியில் ராக்கெட் விட்ட சேதியை படிச்சதும் நெஞ்சு கொள்ளாத பூரிப்பு வந்தது. டெல்லி கொடூரத்தைப் பத்தி படிச்சதும், காணாப் போச்சு.

சவுத் டெல்லி ஸ்கூல்ல +1 படிக்கிற ரெண்டு பிள்ளைகள் ஸ்கூலை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். கூடப் படிச்ச, பழகின, காதலிச்ச பொண்ணோட தான் தப்பு பண்ணியதை வீடியோ எடுத்து வித்திருக்கிறான் ஒரு அயோக்கிய நாய். 100 ரூவா விலை. 'சாமி ' படம் விக்கிற வீடியோ கடையில எல்லாம் இப்ப இதான் ஹாட் ஐட்டமாம். வெளிநாட்டுல பொம்பிளை பிள்ளைகளை வளத்தா, சீரழிஞ்சு போய்டுவாங்கன்னு, வயசுப்பிள்ளைகளை இந்தியா கூப்பிட்டுட்டு போயிடணும்னு அமெரிக்காலேர்ந்து கிளம்பற எத்த்னையோ குடும்பங்களை எனக்குத் தெரியும். இந்தியா நாம் விட்டுட்டு வந்த மாதிரியே இருக்குன்னு நினைச்சுகிடாதீங்க...!! எதை எதை காப்பி அடிக்கக்கூடாதோ, அதை எல்லாம் நம்ம பிள்ளைங்க கத்துக்கிடுது.

இந்த மாதிரி தப்பு பண்ணிணதுக்கு, அந்த பையன் மூச்சா கூட போக முடியாதபடி லுல்லாவை வெட்டி அரபி ஸ்டைல் தண்டணை கொடுக்கணும்.

ஆதவன் தீட்சண்யா

இவர் பெயரை நேசமுடன் வெங்கடேஷோ அல்லது பா.ராகவனோ எழுதிப் படித்திருக்கிறேன். இவருடைய சில கவிதைகளை தட்ஸ்டமில்.காமில் இன்று படிக்க நேர்ந்தது. அருமையாக எழுதப்பட்ட கவிதைகள். உங்கள் வாசிப்புக்கு

ராயர் காப்பி க்ளப் மூலமாக ஏற்கனவே அறிமுகமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் நா.முத்துநிலவன் கவிதையும் அற்புதம்.

நாத்திகம் பரப்ப நாமே ஒரு கருவியாவோம் என்று ஜகத்குரு(?!!!) சற்றேனும் நினைத்திருப்பாரா..??

Monday, November 29, 2004

இருள்நீக்கி சுப்ரமணிய சேவை

கருணாநிதி செய்யாததை ஜெ செய்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டேன். பெரியார் செய்ய முடியாததை இருள்நீக்கி சுப்ரமணியன் (எ) ஜெயேந்திரர் செய்து விடுவார் போலிருக்கிறது. இன்று காலை உஷாவைப் பற்றியும், அனுராதா ரமணணைப் பற்றியும், ஸ்வர்ணமால்யாவைப் பற்றியும், இன்னமும் சந்தேக லிஸ்டில் இருக்கும் பல அழகிகளைப் பற்றியும் என் மராட்டிய நண்பரிடம் பிரஸ்தாபித்த போது, " அட...விஸ்வாமித்ரரே மேனகையிடம் மயங்கலையா..?? இதற்கெல்லாம் புராணத்திலேயே முன்னுதாரணங்கள் இருக்கிறதே" என்றார் குசும்பாக சிரித்தவாறே.

"வென்றால் அண்ணா வழி. தோற்றால் பெரியார் வழி" என்பார் கருணாநிதி அடிக்கடி. சாகற காலத்தில் சங்கரா சங்கரா என்று கத்தாமல், பிராமணர்களின் ஓட்டுகளுக்காக சங்கரமடத்துக்கு பரிதாபப்படுவது போல நடித்து ஓட்டுப் பொறுக்கி வேலை பார்க்காமல், இதைப் போல ஜெ எடுத்திருக்கும் உருப்படியான நடவடிக்கைகளையும் குறை சொல்லாமல் கட்சி நடவடிக்கைகளையும், தேர்தல் ஜாலங்களையும் உருப்படியான ஆட்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, ரிடையராவது நல்லது.

இல்லாவிட்டால் மக்கள் 2005 தேர்தலில் அனுப்பத்தான் போகிறார்கள்.


வெகுநாள் கழித்து.....

அப்படி ஒன்றும் பெரிய ஊர்சுற்றல் இல்லை கடந்த நான்கு நாட்களில். ஆயினும் குடாப்பகுதி வரை செல்ல வேண்டி வந்தது. சென்னையில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் B1 விசாவில் வேலைவிஷயமாக வந்திருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு, வசமாக Blade போட்டுவிட்டு, வந்ததற்கு Mysteryspot மற்றும் Santacruz Beach பக்கமாக ஒதுங்கிவிட்டு, வரும் வழியில் இரவில் CA-17 மலைப்பாதை வழியாக அவரை பயமுறுத்திக்கொண்டேகாரை ஒட்டிவந்து, தமிழ் வழக்கப்படி நண்பனின் வீட்டில் மாயவரத்தானால் "பாடல்" பெற்று வரும் சன் டீவி பார்க்க நேர்ந்தது. ( ஹப்பா...ஹப்பா..எவ்ளோ பெரிய்ய்ய்ய வாக்கியம்...)

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\img1040112020_1_1

சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் பலமாக அடிபட்டு வரும் ஸ்வர்ணமால்யாவின் இளமை புதுமை நிகழ்ச்சி. அவர் கல்யாணம் செய்து கொள்ளும் முன் இந்த நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். சப்பையாக நாலு பேரை தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பயங்கர நக்கல் அடித்த அவர், அப்போது "பேபி" போல இருந்தார். இப்போது, ஒரு கல்யாணம், அமெரிக்க வாசம், விவாகரத்து, மற்றும் சாமியார் செய்திகளுக்கு பின், கொஞ்சம் கறுத்து, பயங்கர ஒல்லியாகிப் போய், Glamour கூடினாலும், இன்னமும் அதே நக்கல். சுற்றிலும் அதே சப்பை பையன்கள்/பெண்கள். என்றாவது ஒரு நாள் இவர் சிட்டி பையன்கள்/பெண்களுடன் இதே மாதிரி உட்கார்ந்து, இப்படியே பேசி பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சாதாரண கோடை பெரிய கோடாக காட்ட, பக்கத்தில் சின்ன சின்ன கோடுகளை வரந்து காட்டும் பீர்பால் தந்திரம்தான் இதுவும். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் ஜூனியர் விகடன் கழுகு இந்த வாரம் ஸ்வர்ண்மால்யாவைப் பற்றி வெளியிட்டுள்ள செய்திகள் நினைவுக்கு வந்து நெருடியது. செய்திகள் உண்மையானால் எதற்காக இந்தப் பெண் இந்த மாதிரி வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறது என்று தோன்றியது. சினிமா ஆசையா..?? புகழா..?? பணமா..?? எதை விரும்பினாலும் , அது கிடைத்தவுடன், உடனே தேடியது இதைத்தானா என்று சடாரென்று அலுப்பு வந்து அடுத்ததை தேடும் மானிட வாழ்க்கையின் அந்தமில்லா, அர்த்தமில்லா வேட்டை இந்தப் பெண்ணுக்கு, இத்தனை படித்த பெண்ணுக்கு தெரியாதா..?? அப்படியானால் படிப்பினால் என்ன பயன்...?? சோதனைச்சாலையில் பியூரெட்/பிப்பெட்டுடன் மல்லாடுவதும், கம்ப்யூட்டர் புரொக்ராம் எழுதுவதுடன் படிப்பு நின்று விடுகிறதா..???. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\402833416

மற்றபடி சன் டீவி அதே ஸ்டைல். எல்லாவற்றிலும் நடுநடுவே சம்பந்தமே இல்லாமல் சினிமா பாட்டு, இலவச தேங்காய் எண்ணெய் வழங்கும் பெஸ்ட் கண்ணா பெஸ்ட், என்று வியாபாரம் இன்னமும் கனஜோராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மாறன் பிரதர்ஸ். சர்ச்சைக்குரிய எதையும் நான் பார்த்த வரையில் பார்க்கவில்லை.

சன் டீவி இணைப்பை கூடிய சீக்கிரம் துண்டிக்காவிட்டால், மாயவரத்தானுக்கு ரத்த அழுத்தம் கூடும். துண்டித்துவிட்டால் பாவம் அவர் வலைப்பூவில் என்னத்த எழுதுவார் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

பதில் - அவர் வலைப்பூவின் தலைப்பிலேயே இருக்கிறது.

Thursday, November 25, 2004

உடன்பிறப்பே...மகிழ்ச்சி...

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\TG

அமெரிக்காவில் நியூயார்க் மாநகரிலே வருடா வருடம் நன்றியறிவித்தல் தினத்தன்று ஒரு பேரணி நடக்கும். அண்ணாவும், நானும், பெரியாரும் நடாத்திய பேரணி போலல்லாமல், குழந்தைகள் மனத்தை கொள்ளை கொள்ளும் விதமாக நையாண்டி முக நாயகர்களும், நளின உடை நாரீமணிகளும் , அலங்கார ஊர்திகளும், வண்ண வண்ண பலூன்களும் அணிவகுத்து வரும். இரண்டே முக்கால் மைல் நீளமாய் வந்த அந்த பேரணியிலே, இன்று "ஷககலக்க பேபி,...ஷக்கலக்க பேபி " என்று தமிழன் இசையமைத்த பாட்டுக்கு மங்கையரும், காளையரும் இந்திய முறையில் நடனமாடி, உடல் குலுக்கி, ஆடிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழன் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவத்தை பாடாமல், வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பாடியது நயவஞ்சக நெஞ்சம் கொண்ட வடவரின் சதி என்றாலும், தமிழன் வரும் காலங்களில் அதையும் முறியடிப்பான் என்று கூறி , உன்னை நான் வாழ்த்துகிறேன் இந்த நாளில்.

- மு.க

( சொன்ன ஆள்தான் நம்ம ரீலு. நியூஸ் நெஜம்தானுங்க...வசுந்தரா தாஸ் வந்திருக்காங்க என்று எல்லே வில்லோன் சொன்னதுக்கும், இதுக்கும் ஏதும் லிங்க் உண்டுங்களா..?? ஹி..ஹி..)

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\v12


Wednesday, November 24, 2004

என்ன தேடறீங்க..??

C:\Thanksgiving

Thanksgiving Dinner ல் கட்டாயம் இடம்பெறும் ஐட்டங்கள் வரிசையில் வான்கோழிக்கும், பூசணி கேக்கிற்கும், சோளரொட்டிக்கும் பெரிய இடம் உண்டு. பொங்கல் அன்று பானையைப் போல், தீபாவளியன்று பட்டாசைப் போல், காரடையான் நோன்புக்கு கயிறு போல் ( அடை போல்..??!!) , இங்கே இன்று வான்கோழி.

இப்போ படம் புரிகிறதா... ?? டின்னர் டேபிளுக்கு போக பயந்து, வேறு டேபிள் லாம்ப் ஆக கோழி.

ஸார் கீழே தேடிக் கொண்டிருக்கிறார்.

Thanksgiving Holidays

அடுத்த நான்கு நாட்களுக்கு அமெரிக்காவில் விடுமுறை. இன்னொரு நீள்வாரயிறுதி. இன்னொரு Sale மேளா. இன்னொரு பரபரப்பு நெடுஞ்சாலைத் தினங்கள். வான்கோழியோடு விருந்துகள்.

இந்த விடுமுறையின் அர்த்தம் தெரிய வேணுமாயின்,

இங்கே க்ளிக் குங்கள்.

Happy Thanksgiving Holidays...!!!

Tuesday, November 23, 2004

பிரபஞ்சன் தொடங்கி அந்துமணி வரை ....

கல்லூரி முடிந்த மூன்று வருடங்களில் இணையத்தில் ஒரு ஈமெயில் சுற்றிக்கொண்டிருந்தது. அமெரிக்கா செல்ல, ஆந்திர தேச மக்களுக்குப் பிறகு நம்மவர்கள் ஆர்வம் காட்டிய சமயம் அது. பொதுவாகவே கேரள மக்கள் மத்தியக்கிழக்கு நாடுகளுக்கும், தமிழக மக்கள் சிங்கப்பூர்/ மலேசியாவுக்கும், ஆந்திர மக்கள் அமெரிக்கா நாடுகளுக்கும் அதிக அளவில் சென்று கொண்டிருந்த காலமது. அமெரிக்கா சென்ற ஒருவன், எப்படி செலவு செய்தான். வரவு அதிகமானதால் செலவும் அதிகமாகி, எப்படி கஷ்டப்பட்டான் என்பதை விளக்கும் விதமாக, அந்தக் கதையின் முடிவில், அவன் அப்பா சேர்த்து வைத்திருந்த வீட்டோடு ஒரே ஒரு எக்ஸ்ட்ரா ரூமும்தான் கட்ட முடிந்தது என்று சொல்லப்பட்டது. கொஞ்சம் மிகைதான் என்றாலும், படித்தவர்களை யோசிக்க வைக்க, அந்தக் காலகடத்தில் அந்த ஒரு விஷயம் போதுமானதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படும் எல்லா விஷயங்களிலும் இதுபோன்ற மிகையுணர்ச்சி அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, சொந்தக்காரர்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற தனிமை உணர்வைத் தவிர, கிட்டத்தட்ட இங்கிருக்கும் மற்ற எல்லா அசெளகரியங்களும் எல்லா இடத்துக்கும் பொதுவானவையே. தமிழன் என்றொரு இனமுண்டு.தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நம் மக்கள் தனித் தனி தீவுகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்மன்றம், அஸோஸியேஷன் என்று வைத்துக் கொண்டால் சச்சரவுகள் இருக்கத்தான் இருக்கின்றன. கோஷ்டி கீதங்கள் இருக்கின்றன. இவையும் இங்கு காணப்படும் புதிய விஷயமில்லை. சுயமாய் சிந்திக்ககூடிய மக்கள் எங்கெல்லாம் கூடி ஒரு செயலில் ஈடுபடுகிறார்களோ அங்கெல்லாம் நிகழக்கூடிய இயல்பான உரசல்கள் அவை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கும் குழப்பம், தமிழில் தொடருவதா..தெலுங்கில் மாட்லாடுவதா.. இல்லை வடமொழியில் கழறுவதா என்பது வரையில் தொடர்கிறது. பார்ட்டிகளில் ஸ்டாக் மார்க்கெட்டைப் பற்றி பேசுகிறார்கள். பச்சை அட்டை கிடைக்காதவர்கள், prioriy date பற்றி பேசுகிறார்கள். வீடு வாங்கிய லோன் APR பற்றி பேசுகிறார்கள். "எப்ப ஊருக்கு போறிங்க. ஐடியா இருக்கா " என்று கேட்டால் மனிரத்னம் ஸ்டைலில் "தெரியலை" என்கிறார்கள்.

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\prabanjan_with_kavithapub

பிரபஞ்சன் அமெரிக்கா வந்துவிட்டு ஊருக்குப் போய் ஆற்றிய ஒரு கேவலமான உரையின் சாராம்சத்தை வெங்கடேஷ் எடுத்துப் போட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு வருகிற 15-30 நாட்களில், அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு கருத்து, அதை சரியாகக்கூட அலசிப் பார்க்காமல், ஊருக்குப் போய் மற்றவர்களிடம் இந்த பிமபத்தை பற்றி பகிர்ந்து கொண்டு, அவ்வப்போது "கொல்" என்ற சிரிப்புச் சத்தம் எழ ஒரு பேருரையை நிகழ்த்தி இருக்கிறார்.

//அமெரிக்கத் தமிழர்களில் பலர் 30 வருடக் கடன்காரர்கள். வீடு, கார் ஆகியவற்றுக்கு அவர்கள் வாங்கும் 30 ஆண்டுக்கடன், அவர்களைத் திரும்பி வரவே விடாது //

திரும்பி வரவேண்டும் என்று விரும்பி விட்டால், வீடு, கார் ஆகியவற்றை விற்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும், அது எத்தனை எளிது என்பதையும், அத்ல் எத்தனை லாபம் வரும் என்பதையும் யாராவது பிரபஞ்சனுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஒரு நான்கு வருடம் வாங்கிய வீட்டில் இருந்து விட்டு , பிறகு அதை விற்றால் போதும், ஊருக்கு வந்துவிட்டு பிறகு ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

//பெரும்பாலான தமிழ் வீடுகளில், வாரத்திற்கு ஒரு முறை சமைக்கிறார்கள். சனிக்கிழமை இரவு. அதையே அடுத்து வரும் மூன்று நான்கு நாள்களுக்கு வைத்துக்கொண்டு ஓட்டிவிடுகிறார்கள்.//

தினசரி சமைக்க வேண்டும் என்று எந்த ஸ்மிருதியில் எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணுக்கு சமையல்அறையில் இருந்தும், பிள்ளைபேறிலிருந்தும் விடுதலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள் பிறந்த மண்ணில்தான் இவரும் பிறந்திருக்கிறார் என்று நினைக்கவே ஆச்சரியமாயிருக்கிறது. அது சரி...இரண்டு பேரும் வேலை பார்க்கும் சென்னை இல்லங்களில் நிதமும் சமைக்கிறார்களா என்ன..?? பாதி நேரம் Eat-out என்கிறான் தோழன்.

//சமீபத்திய பெரிய சீரழிவு, சன் டிவி. //

சன் டீவி கட்டாயம் இல்லிங்கோவ். இலவசமா கனெக்ஷன் குடுக்கறதில்லை. வேணுன்னா பாக்கலாம். என் வீட்டில் இல்லை. வேலியிற போற ஓணாணை எடுத்து ..சரி சரி..புரியும்.

// நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை //

ஹெஹ்..ஹெஹ்..ஹே....!!!

//அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது //

இதை சென்னவர்தான் இதையும் சொல்லி இருக்கார். நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

1950, 60களில், அந்தணர்கள் படித்தவிட்டு, அமெரிக்காவுக்கு முதலில் குடிபோனார்கள். அவர்களைத் தொடர்ந்து, 70களில், அந்தணர்கள் அல்லாத பிற முற்பட்ட வகுப்பினர் - முதலியார்கள் போன்றோர் - குடியேறினார்கள். அதன் பின்னரே, பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குடியேறினார்கள்.

//நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்//

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி நவீன இலக்கியவாதிகளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எல்லாருக்கும் அவர்களைத் தெரிகிறது. இல்லையா எழுத்தாளர் ஸார்...??

அமெரிக்கா ஒரு பரந்த நாடு. குடியேறிகளின் நாடு. திறமையும், வாக்கு வன்மையும், adaptability யும் இருந்தால் இங்கு கனஜோராக இருக்கலாம். இந்தியர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். எத்த்னையோ துறைகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். மூன்றாவது பெரிய/ வசதியான
வந்தேறி சமூகம் என்று குறுகிய காலத்தில் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆதி நாள்களில் உழைத்த உழைப்பை பார்த்து விட்டுத்தான், இன்னமும் குறைந்த விலையில் இந்த அறிவை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே என்று வேலைகள் கடல்தாண்டி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தியாவின் அந்நியச்செலாவணி கூடி இருக்கிறது GDP அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களை இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு பகுதி காசில்தான் கூட்டி வந்து பேச வைக்கிறார்கள்.

நாமக்கல் ராஜா எழுதியதைப் படித்ததும் தோன்றிய விஷயங்கள் இவை. அது சரி...அந்துமணி கமெண்டைப் பற்றி ஒண்ணும் சொல்லலையே என்று கேட்கிறீர்களா...

ஸாரி... அந்துமணிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை...டைம் வேஸ்ட்.

Monday, November 22, 2004

எல்லே ராம் - யார்..??

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\Ram_CloseUp3

தட்ஸ்டமில்.காம் என்கிற தமிழ் வலைப்பக்கத்தில் நைட் எஃபக்ட்டில் ஏஞ்சல் ராமச்சந்திரன் என்று(ம்) அழைக்கப்படும் எல்லே ராமின் பேட்டிக்(?)கட்டுரை.


C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\la-ram300

அன்றும், இன்றும் - அவரே -

ச்சே..காலம்தான் எத்தனை குரூரமானது - ஆள் இப்படி மாறிட்டாரே...

தேவையா...???

மிகப் பழமையான சரித்திரம் உள்ள தெரு அது. அழகு கொஞ்சும் தோட்டங்களுடன் வீடுகள். ஏற்கனவே வெவ்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து தொந்தரவுபடுத்தி விட்டுப் போயிருந்தாலும், தெருவின் அமைதிக்கு அந்த அளவு பங்கமில்லை. கடைசியாய் உள்ளே வந்த மனிதர்கள் கத்தி எடுத்து சண்டை போடவில்லை. கொள்ளை அடித்துக் கொண்டு ஓடவில்லை. அந்தத் தெருவில் ஏற்கனவே இருந்த வீடு ஒன்றில் குடி புகுந்து இருக்கத் தலைப்பட்டார்கள். எதனாலோ அவர்களை வீட்டில் இருந்தவர்களுக்கும் பிடித்துப் போனது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதாலோ, நாடோடிகளுக்கு உலக ஞானம் இருக்கும் என்பதாலோ, நிறத்தாலோ, நாகரீகத்தாலோ, தங்களுடைய ஒற்றுமை இன்மையாலோ, எது வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். வீட்டுக்கு வந்தவர்கள் தங்களிடம் உள்ள அறிவாலும், தீட்சண்யத்தாலும் கற்பிக்கும் தொழிலை ஏற்றனர். இதனால் தெருவில் உள்ள பணக்காரத் தலைமையிடமும் செல்வாக்கு பெற்றனர். எல்லோரும் போற்றிப் புகழ்ந்ததுவும், புகழ் தந்த போதையிலும், தங்களுக்கு தகுதி அதிகம் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், வீட்டில் ஏற்கனவே இருந்தவர்களை ஆள விழைந்தார்கள். அவர்களுக்குள் அடுக்குகளை, பல்வேறு நிலைகளை கற்பித்து,
நீ கழிப்பறையை சுத்தம் செய், நீ கொல்லையில் வேலை பார்த்து, மாடு கன்றுகளை பார்த்துக் கொள். நீ வீட்டை நிர்வகித்து , வியாபாரம்
பார்த்துக் கொள். நான் பூஜை செய்து, ஊருக்கு கற்பிக்கிறேன். உங்களுக்குள்ளேயே பல்வேறு நிலையில் உள்ளவர்களை நீங்கள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மேலானவாக இருந்து நான் மேய்த்துக் கொள்கிறேன் என்றார்கள். பூஜை செய்தவர்களுக்குள் புகுந்த புல்லுருவிகள், பின்கட்டுக்காரர்களை இன்னமும் அடக்கி வைக்க என்னென்ன வழிகள் உண்டோ, அத்தனைக்குமான காரணங்களை வீட்டு உறுப்பினர்களின் கடமை/விதிமுறைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட புத்தகத்தில் புகுத்தினர். பின்கட்டுக்காரர்களில் பிழைக்க விருப்பிய புல்லுருவிக் கூட்டமும், பூஜை செய்தவர்களை அண்டிப் பிழைத்தால், தாங்கள்
பின்கட்டுக்காரர்களிடையே சண்டியர்த்தனம் செய்யலாம் என்று யோசிக்க, வழக்கம்போல ஒற்றுமையின்மை குடிகெடுக்க, காலம் உருண்டோடியது. பூஜைக்காரர்கள் தங்களுக்குள்ளேயே சிலரை பூஜைக்காரியங்களுக்கும், கற்பிக்கும் வேலைக்கும் அமர்த்திவிட்டு, அவர்களில் ஒரு தலைவரை ஏற்படுத்திவிட்டு வெளிவிவகாரங்களில் கவனம் செலுத்தலாயினர். அவர்கள் வேறு வேலை செய்தாலும், தாங்கள் இன்னார்...இன்னது செய்து கொண்டு இருந்தோம் என்பதற்கு அடையாளமாக பூஜைக்காரியத் தலைவரை அடையாளப்படுத்தி வைத்திருந்தனர். அவ்வப்போது முன்கட்டுக் காரர்களிடையே பின்கட்டுக்காரர்களுக்காக பரிதாப்படுபவர்களும் ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தனர். இந்த வாழ்வு இனி ஏலாது என்று பின்கட்டுக்காரர்களில் சிலர் வீட்டை விட்டு வெளியேறி வேறு வீடு செல்லவும் விழைந்தனர். கடைசியில் ஒரு நாள், பூஜைக்காரர்களிடையே, பூஜை ரூமுக்குள்ளேயே நடந்த தகாத காரியங்கள் வெளிவந்தன. இத்தனை நாள் உயர்வென்றும், தெய்வீகமென்றும், தங்களுக்கு உரியதும், உகந்ததும் ஆகும் என்று சொல்லி கற்பிக்கப்பட்ட ஒரு விஷயத்தில் நடந்த அநியாயம் கண்டு பின்கட்டுக்காரர்கள் எள்ளி நகையாடினார்கள். தங்கள் மேன்மையை உணர்த்துவதற்கான அடையாளமாக தான் வைத்திருந்த ஒரு அமைப்பின் முகம் கிழிந்தது கண்டு கொதித்தார்கள் பூஜைக்காரர்கள். " இத்தனை கேள்விகள் இங்கே கேட்கிறாயே..பக்கத்து வீட்டு மனிதர்கள் இவ்வளவு அநியாயம் எல்லாம் செய்தார்களே...அங்கு போய் கேட்க முடியுமா..?? என்று கேட்கிறார்கள்.

தன் வீட்டுக்குள் இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு, அந்நிய வீட்டானைப் பற்றி என்ன சொல்ல...?? தாங்கள் இழந்த தங்கள் வீட்டின் உரிமையை, தங்களுக்கு தகுதி அதிகமாக இருக்கிரது என்று தாங்களே சொல்லிக் கொண்ட ஒரு கூட்டம் தவறிழைத்த பிறகும் விட்டுக் கொடுத்து விட்டு பஜனை பாடிக் கொண்டிருக்க முடியுமா..?? இனி வேறு எந்த வெளிக்கூட்டம் வந்து இதே வேலையை செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்பக்கூடாது என்பதற்காக, இந்தக் கூட்டம் செய்த வேலையை பின்கட்டுக்காரர்கள் தோண்டித் துருவி அகழ்வாராய்ச்சி செய்கிறார்கள்.

( சங்கராச்சாரி- யார் என்ற பேட்டிக்கட்டுரையிலிருந்து - கீழே ஒரு பகுதி - நன்றி. பி.கே. சிவகுமார்)

ஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே" என்றார்.

சின்னக்குத்தூசி: "ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்."

ஸ்வாமிகள்: "இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்."

சி.கு.: "தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.மற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.எனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.கிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே! அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்."

முடியுமா என்று கேட்கும் நண்பர் அருணுக்கு என் பதில் தேவையா என்பதுதான்....!!!

மற்றபடி நான் சன் டீவி பார்க்கவில்லை. அவற்றில் உள்ள விமர்சனப் பிரசாரம் எந்த அளவு என்பது எனக்குத் தெரியாது. சன் டீவி இந்துக்களின் பிரச்சார பீரங்கியல்ல. தன் பிழைப்பை இன்னமும் வளப்படுத்த விரும்பும் ஏமாற்றுக்காரர்களில் இன்னொரு பகுதி அவர்கள்.

Saturday, November 20, 2004

லேட்டா அடிச்ச ஷாக்

வாட்ச்மேன், வேலைக்காரி முதற்கொண்டு, விட்டு புரோக்கர், ஓனர் வரை எல்லாரும் திரு திரு என்று முழித்துக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில் பேசுவது நலம். அதிலும் பெண் கதாபாத்திரங்கள் உத்தரவாதமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, ( சிலருக்கு கண்ணில் கான்டாக்ட் லென்ஸ்) எழுத்தெழுத்தாக எண்ணிப் பேச வேண்டும். கூடியவரை இரவுநேர சீன்களாக படத்தை எடுத்து விட்டால் பெட்டர். மழை இருப்பின் இன்னமும் விசேஷம். திருட்டு முழியோடும், அச்சு பிச்சு வசனங்களோடு ஒரு இன்ஸ்பெக்டர்.

ஆச்சா...ஒரு பேய்ப்படம் ரெடி....!!

'ஷாக்' இப்படியொரு படம். புதுசாக கல்யாணமான தம்பதிகளைக் காட்டும்போதே, கதை ஆரம்பத்திலேயே இறுக்கமாகத் தான் காண்பிக்கிறார்கள். ஒரு வேளை பேய்ப்படத்தில் இப்படித்தான் இருக்கும் போலும். அதோடு சேர்ந்து மேற்சொன்ன அத்தனை அபத்தங்கள். சரத்பாபு, சுகாசினி, "அந்த நாள் அம்மன்" நடிகை கே.ஆர்.விஜயா, மம்பட்டியான் தியாகராஜன் ( இவர் International Man of Mystery யின் Mike Myers மாதிரி உறைய வைத்த மாதிரி அதே மூஞ்சோடு இருக்கிறார்) என்று நட்சத்திர பட்டாளம். நன்றாக நடிக்கக்கூடிய கலைராணி பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார். மீனா..ம்ஹூம்..என்ன்மா இருந்த பொண்ணு...sintex Tank மாதிரி ஆயிட்டுது.

அந்தக் காலத்தில் குமுதத்தில் வந்த "கோஸ்ட்" ( கிருஷ்ணகுமார் - ரா.கி.ரங்கராஜன்..??) மற்றும் குங்குமம்/சாவியில் வந்த "துளசிதளம்" - எண்டமூரி வீரேந்திரநாத கதைகளும் எவ்வளவோ தேவலை. ராஜேந்திரகுமார் கூட " இயங்கினான்.இயங்கிக்கொண்டே இருந்தான்" என்று A சமாசாரங்கள் தூவி கொஞ்சம் பேய்க்கதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு சின்ன வயதில் எல்லாம் பேய்ப்படங்கள் பார்க்கும்போது பீதியில் பேதியே ஆகிவிடும். "நூறாவது நாள்" படத்தைக்கூட என் அண்ணனின் மடியில் படுத்துக் கொண்டேதான் பார்த்தேன்.

இத்த்னை அபத்தங்கள் இருந்தாலும் மேற்சொன்ன படத்தைக்கூட இரவில் பார்க்க ஆரம்பித்து, பாதியிலேயே அணைத்து விட்டு காலையில்தான் பார்த்தேன்.

அது சரி...பெயரென்ன "ஷாக்". மீனாவுக்கு ஷாக்..?? மீனாவால் பிரசாந்துக்கு ஷாக்..?? திரும்பி வந்த மஞ்சுவால் வாட்ச்மேனுக்கு ஷாக்..?? சரத்பாபுவுக்கு..?? தியாகராஜனுக்கு..?? அப்பாஸுக்கு..?? அப்பாஸ் அப்பாவுக்கு..??

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\meena010

எனக்கென்னவோ, இத்தனை குண்டா ஆயிட்டுதே மீனா..?? என்று "கர்ணன் பட நாயகி" மீனாவின் தாய்க்குலம், ராஜ்மல்லிகாவுக்குத்தான் ஷாக் ஆக இருந்திருக்கும்.

சீக்கிரம் மஹிளா காங்கிரஸ் பதவி இடம் மாறலாம்.

Friday, November 19, 2004

எங்கெங்கோ செல்லும்....

இரண்டு நாளாக மடலாடற்குழுவில் ஒரு திரியில் உள்ளிழுக்கப்பட்டேன். ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இருந்த அவநம்பிக்கையும், பேரமைதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவருக்கு ஆதரவான வாதங்கள் வரத்துவங்கி விட்டன. காஞ்சி காமாட்சி தன் பக்தன் ஒருவனை இப்படியா வைத்திருக்கிறாள் என விசனப்பட்ட வெங்கடேஷ் கூட, பக்தனின் வண்டவாளங்களை அம்பலப்படுத்திய காமாட்சியை நம்பாமல், இப்போது ஜெயேந்திரருக்கு ஆதரவாக கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார். மடம் இதை எதிர்கொண்டு சாமியாரைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார். வடமாநிலங்களை போலல்லாமல் அமைதியாக இருக்கும் தமிழகத்தில், ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று கூட ஊகிக்கப்படுகிறது.

கொங்கு ராசாவின் வலைப்பூவில் துவங்கிய விடயம், மடலாடற்குழுவில்
விரிவுபடுத்தப்பட்டு, ஆராதிக்கப்பட்டு, இப்படி, இப்படி, இப்படி, என்று எப்படி எல்லாமோ சென்று கொண்டிருக்கிறது.

மடலாடற்குழு விவாதங்களை படிக்க உங்களுக்கு எ-கலப்பை தேவைப்படலாம். இறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அப்படியும் படிக்க இயலவில்லை எனில் என்னைக் கேளுங்கள்.

இன்னைய பாடு முடிஞ்சது.

இல்லாட்டி புடலங்காய் பொறியல் எப்படி செய்வது என்று எழுதி இருக்க வேண்டி இருந்திருக்கும்.

Thursday, November 18, 2004

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\is_p1

அட..அட..அட...

கலர் என்னமா மாறீட்டுது...

( முதல்வரோட பச்சை கலர், திருமதி ரஜினி புடைவையில்....அதைச் சொன்னேன்)

எப்படி கட்டுப்படியாகிறது...???

காரைக்குடி காலேஜில் படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். சுப்ரமணியபுரம் சுகுமார் பில்டிங் அருகே உள்ள ஒரு ஷாப் கடையில் ( ஹி... ஹி..நடு செண்டர், க்யூ வரிசை மாதிரி) ஒரு ஹீரோ பேனா வாங்கினேன். 15 ரூபாய். வீட்டுக்கு கொண்டு வந்து இங்க் போட்டுவிட்டு, சட்டைபையில் செருகிக் கொண்டு காலேஜ் போனேன். போய் இறங்கியவுடன் பார்த்தால், பாக்கெட் எல்லாம் இங்க். என்னடா இது என்று டென்ஷனாகிப்போய், சாயங்காலம் மறுபடியும் அதே கடைக்குப் போய், " என்னங்க இது..?? நேத்துதான் உங்க கடையில பேனா வாங்கிப்போனேன். இப்படி ஒழுகுதே. இப்படி ஏமாத்தலாமா நீங்க..? " என்று நியாயம் கேட்க, அந்த வீணாப்போன கடைக்காரன் ஒரு முன்னாள் ரெளடியாம். கடையை விட்டு வெளியே வந்து ஓங்கி ஒரு அறை விட்டான். " என்னடா சொல்ற...?? ஏமாத்திட்டேன்னா..?? ஆமாம்..இப்ப என்னங்கிற..என்ன வேணா பண்ணிக்கோ.." என்றான் பாதகன். நேராக போய் போலிஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, பிரச்சினையாக்கிய பின், ஸ்டேஷனுக்கு வந்து மன்னிப்பு கேட்டு விட்டு, புது பேனா கொடுத்தான். பின்னாளில் என் நண்பர்களிடம் இதைப் பற்றி பேசியபோது கூட " என்னா மச்சி ..இப்படி விட்டுட்ட..ஒரு வார்த்தை சொல்லி இருந்தா கடையில பூந்து நாஸ்தி பண்ணி இருக்கலாமே" என்றார்கள். முக்கியமாய் எங்கள் "தலை" சகாயமணி. கேவலம் ஒரு பதினைந்து ரூபாய் பேனாவுக்காக, இத்தனை லொள்ளு பண்ணினான் அந்தக் கடைக்காரன்.

அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் குறித்து நண்பர்களிடம் இருந்து எத்தனையோ கேள்விப்பட்டு இருந்தாலும், நேற்று எனக்கு நிகழ்ந்ததை பார்த்தவுடன், என்னால் நம்பவே முடியவில்லை. மூன்றரை வருடங்களுக்கு முன் காஸ்ட்கோவில் ஒரு யுரேகா வேக்குவம் க்ளீனர் வாங்கினேன். இத்த்னை காலம் ஜம் என்று வேலை செய்து கொண்டிருந்தது. சமீப காலமாக கார்ப்பெட்டில் உள்ள குப்பைகளை சரியாக எடுப்பதில்லை. சரி..புதுசு வாங்க வேண்டியதுதான் என்று மார்க்கெட் வேட்டையை ஆரம்பித்தேன். இதற்கிடையில், யாரோ " காஸ்ட்கோவுக்கே கொண்டுபோனால், அவன் யுரேகாவுடன் தொடர்பு கொண்டு ஏதாவது செய்வான்" என்று சொல்ல, நேற்று எடுத்துச் சென்றேன். ரசீது இருக்கா என்று கேட்டவன், இல்லை என்றதும், என்னுடைய மெம்பர்ஷிப் ஹிஸ்டரியை கம்ப்யூட்டரில் பரிசோதித்து, அந்தப் பொருளை அங்கேதான் வாங்கி இருக்கிறேன் என்று ஊர்ஜிதம் செய்து விட்டு.......நம்பினால் நம்புங்கள்...அதன் மொத்த விலை மற்றும் வரியையும் சேர்த்து $150 ஐ எண்ணி என் கையில் வைத்தான். நம்பவே முடியாமல் திரு திரு என்று விழித்து விட்டு உடனடியாக அங்கேயே ஒரு புது வேக்குவம் க்ளீனர் வாங்கி விட்டு மப்பாகிப்போய் வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகுதான் மக்கள் சொன்னார்கள், காஸ்ட்கோவில் வாங்கும் - அனேகமாக - எல்லா பொருளுக்கும் Life time warranty யாம். வீட்டு உபயோக சாமான் லிஸ்டில் இங்கு கிடைக்காத பொருளே இல்லை எனலாம். costco வில் மேட்ரிமோனியல் சர்வீஸ் கூட ஆரம்பித்தால் தேவலை...ஹி ஹி..

இதன் தொடர்பில் சில அராஜகங்கள்:


1. January 2000: Kathleen Robertson of Austin Texas was awarded $780,000.00 by a jury of her peers after breaking her ankle tripping over a toddler who was running amuck inside a furniture store. The owners of the store were understandably surprised at the verdict, considering the misbehaving tyke was Ms. Robertson's son.

2. June 1998: A 19 year old Carl Truman of Los Angeles won $74,000.00 and medical expenses when his neighbor ran his hand over with a Honda Accord. Mr. Truman apparently didn't notice someone was at the wheel of the car whose hubcap he was trying to steal.

3. October 1998: A Terrence Dickson of Bristol Pennsylvania was exiting a house he had finished robbing , by way of the garage. He was not able to get the garage door to go up, because the automatic door opener was malfunctioning. He couldn't re-enter the house because the door connecting the house and garage locked when he pulled it shut. The family was on vacation, so Mr. Dickson found himself locked in the garage for eight days. He subsisted on a case of Pepsi he found, and a large bag of dry dog food. This upset Mr. Dickson, so he sued the homeowner's insurance claiming the situation caused him undue mental anguish. The jury agreed to the tune of half a million dollars and change.

4. October 1999: Jerry Williams of Little Rock Arkansas was awarded $14,500.00 and medical expenses after being bitten on the buttocks by his next door neighbor's beagle. The beagle was on a chain in it's owner's fenced-in yard, as was Mr. Williams. The award was less than sought after because the jury felt the dog may have been provoked by Mr. Williams who, at the time, was shooting it repeatedly with a pellet gun.

5. May 2000: A Philadelphia restaurant was ordered to pay Amber Carson of Lancaster, Pennsylvania $113,500.00 after she slipped on a spilled soft drink and broke her coccyx. The beverage was on the floor because Ms. Carson threw it at her boyfriend 30 seconds earlier during an argument.

6. December 1997: Kara Walton of Claymont, Delaware successfully sued the owner of a night club in a neighboring city when she fell from the bathroom window to the floor and knocked out her two front teeth. This occurred while Ms. Walton was trying to sneak through the window in the ladies room to avoid paying the $3.50 cover charge. She was awarded $12,000.00 and dental expenses.

7. And just so you know that cooler heads do occasionally prevail: Kenmore Inc., the makers of Dorothy Johnson's microwave, were found not liable for the death of Mrs. Johnson's poodle after she gave it a bath and attempted to dry it by putting the poor creature in her microwave for, "just a few minutes, on low," The case was quickly dismissed.

நண்பர் ஒருவர் அளித்த பின்னுட்டத்தில் இருந்து, மேலே குறிப்பிட்டவை
ஜோக் என தெரிகிறது. அதன் தொடர்பாக இதோ

Wednesday, November 17, 2004

மரத்தடி தந்த யோசனை

மரத்தடியில் இந்தத் திரியில் வலைப்பூக்க்ளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது வைக்கப்பட்ட கருத்துகள் முக்கியமானவை என நினைக்கிறேன். எனக்குக் கூட காசியின் தமிழ்மணம் வருவதற்கு முன சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டுமே செக்குமாடு மாதிரி ( நன்றி : சுரேஷ்) சென்று படிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தமிழ்மணத்திற்குப் பின், ஒரு பரவலான வாசிப்பு அனுபவம் கிடைத்து, அதன் மூலம் புது தளங்களின் அறிமுகம் கிட்டியது.

இன்று யதேச்சையாக காசியின் ஒரு பழைய தொடரைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதும்தான், சில முக்கியமான கட்டுரைகளின் சுட்டியை தெரிவு செய்து முக்கியமான இடம் ஒன்றில் சேமித்து வைத்து, அதன் இணைப்பை தமிழ்மணத்தில் கொடுக்கும் யோசனையும் வலுப்பெற்றது. அந்த சுட்டிகள் எவை எவை என்று தேர்ந்த்டுப்பது கூட மிக எளிது. ஒவ்வொரு வலைப்பதிவாளரிடமும், உங்கள் படைப்புகளில், நீங்கள் அனுபவித்து எழுதியதும், வாசகர்களிடம் அதிக வரவேற்கப்பட்டதுமான கட்டுரைகளை தாருங்கள் என்று கேட்டு வாங்கி அந்தந்த பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதை மறுபடியும் வடிகட்டி, பிறகு அதை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வலைப்பதிவரிடமும், மற்றவர் கட்டுரைகளில் உங்களுக்கு பிடித்தது எது எனவும் கேட்டால், அந்தத் தகவலும் உதவும்.

இப்படிப்பட்ட தகவல்களை சேர்த்து வைத்தாலே போதும். படிக்கத் தோதான வலைப்பூக்களை தேர்ந்தெடுப்பதும், எப்படி மதிப்பிடுவது என்பதும், வாத்தியார் தேர்ந்தெடுக்க சொல்வதும் தேவை இல்லை. ஏனெனில், நாம் எழுதும் பல கட்டுரைகளை நாமே கால ஓட்டத்தில் மறந்து விட வாய்ப்பிருக்கிறது. கண்ணுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வைக்காவிட்டால் இணையத்தில் கோஷ்டி அரசியல் நடக்கிறது. முகமூடி கலாசாரம் தாங்கவில்லை. தனிமனித தாக்குதலும், ஜாதி சண்டைகளும் தான் நடக்கிறது என்று மேலோட்டமாக அறிக்கை விடுபவர்கள் சொல்வதுதான் உண்மை என்று எல்லோரும் நினைக்கும் அபாயம் இருக்கிறது.

மரத்தடி மடலாடற்குவில் கிடைக்கும் விஷயங்களை மரத்தடி.காம் சேகரித்து வைத்து இருப்பது போல, வலைப்பூக்களில் இருந்து தேர்நதெடுக்கப்பட்ட கட்டுரையின் சுட்டிகளை தமிழ்மணம்.காம் தளத்தில் வைக்கலாம்.

இந்த முயற்சிக்காக என் உழைப்பும் பங்களிப்பும் யார் கேட்டாலும், எந்த விதத்திலும் செய்கிறேன்.

Tuesday, November 16, 2004

இந்த நூற்றாண்டு இளவரசர்கள்

நான் கல்யாணம் செய்து கொள்ளும்போது எனக்கு வரப்போகிற பெண் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. என்னுடைய பெற்றோர்களுக்கு வேறு மாதிரியான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கலாம். தெரிந்த வட்டாரத்தில் உள்ள, நல்ல குடும்பத்துப் பெண்ணாக, தன் முசுட்டுப் பிள்ளையோடு அனுசரித்துப் போகிறவளாக, நீளநாக்கு உள்ள பையனுக்கு நன்றாக சமைத்துப் போடக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், மணப்பெண் இவள் என்று முடிவு செய்கையில் இந்த விதமான குணங்கள் முழுதாக உள்ள, அவற்றில் கூடக்குறைய இருந்தாலும் எல்லாமும் கொஞ்சம் இருப்பவளாகத் தான் பார்த்தார்கள். உருவ அமைப்பெல்லாம் அப்புறந்தான். என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும்போது பெண்ணின் படிப்பு கூட தேவையான அம்சங்கள் என்கிற பட்டியலில் வந்திருக்காது. தன் குழந்தைகளுக்கு ஒரு அளவிற்குமேல் படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்று என் தாயார் பட்ட வருத்தம்தான் பட்டப்படிப்பு படித்த பெண்ணாக என்னைப் பார்க்க தூண்டியது. ஏன் தகப்பன் படிப்பு சொல்லித் தரக்கூடாதா என்று கேட்பவர்களுக்கு " கல்வியில்லாத பெண்கள் களர்நிலம். அங்கே புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை" என்று பாவேந்தரைத்தான் துணைக்கு அழைக்க முடியும்.

நிற்க. என் தமக்கைகளை வீட்டில் நன்றாக படிக்க வைத்தார்கள். ஆயினும் அதுவும் போதாமல் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கணவ்ர்களின் ஒப்புதலோடு தொடர்ந்து அஞ்சல் வழி கல்வி பயின்று, பிறகு அவர்களிடம் சண்டை பிடித்து வேலைக்கும் செல்லத் தலைப்பாட்டார்கள். பெணகளை வேலைக்கு அனுப்பவது கவுரவக் குறைச்சல் என்ற மனோபாவம் உடைய தன் கணவர்களை சமாதானப்படுத்தி, வேலைக்கு செல்ல என் சகோதரிகள் பட்ட பாடு கொஞ்சம் அதிகம்தான். வேலை செய்ய ஆரம்பித்து இத்தனை வருடம் கழித்து, அதனால் விளைந்த பொருளாதார, சமூக பயன்களைப் பார்த்து, தன் குழந்தைகளை பொறியியல் படிக்க வைத்தார்கள் என் சகோதரிகளின் வீட்டில்.

பொறியியல் படித்து முடித்து என் சகோதரியின் மகள் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். முன்னைபோல படித்து முடித்தவுடன் கல்யாணம் என்றில்லாமல் வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்க முயல்கின்ற பெண்களின் காலம் இது என்று என் சகோதரியும் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து கூடத் தங்கிக் கொண்டு இருந்தார். A job is something which keeps you warm between college and marriage என்று பெண்களை பார்த்து பெரியவர்கள் சொல்கின்ற காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.
எல்லா பட்டதாரிகளுக்கும் ஏற்படுகின்ற சிரமங்கள் - வேலையில் முன் அனுபவம் - அவளுக்கும் ஏற்பட்டதால் வேலை கிடைக்காமல் NIIT கோர்ஸ் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்த இடைவெளியில், சரி வேலைதான் கிடைக்கவில்லை. நல்ல பையனாக பார்த்து கல்யானம் பண்ணிக் கொடுத்து விடலாம் என்று விளம்பரம் செய்த போது அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பழைய காலத்தில் சொல்லப்பட்ட (பெண்களின்) கல்யாணத் தகுதிகளோடு இப்போது பெண்ணுக்கு கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் வேலையும் குறைந்த பட்ச தேவையாகி விட்டது. கேட்பவர்கள் தங்கள் தகுதியைக் கூட அதற்கு முன் நினைத்துப் பார்ப்பது இல்லை. பெண்ணின் சுயசார்புக்காக நாம் உபதேசித்த படிப்பும், வேலையும் அவளுடைய சுதந்தரத்தை பாதித்து, அவள் தகுதியையே கீழிறக்குவது நல்லதற்கா, கெட்டதற்கா என்று தெரியவில்லை. வேலைக்குப் போவதும் , போகாததும் அவளுடைய இஷ்டம் என்றில்லாமல், இவையாவும் அவளாய் தேடிப் பூட்டிக் கொண்ட கொள்கின்ற
பொன் விலங்காய் ஆகிப் போகுமோ..??

ஏகத்துக்கும் எல்லாரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்க நேற்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு நேற்று வேலை கிடைத்த செய்தி அறிந்தேன். இனி குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்காவது என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டாள் அந்தக் குழந்தை.

இனி வருவார்கள் ....21 ஆம் நூற்றாண்டின் இளவரசர்கள் வரிசை வரிசையாய்.

Friday, November 12, 2004

கண்ணெதிரே ஒரு கொள்ளை

வடிவேலு ஒரு வாரப்பத்திரிக்கை தொடரில் சின்ன வயதில் தீவாளி சந்தையில் தான் "ஆட்டைய" போட்ட அனுபவங்களை சொல்லி இருக்கிறார்.
படிக்கும்போது, சிரிப்பு தரும் இம் மாதிரி விஷயங்களை சின்ன வயசில் என் நண்பர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன். அதுவும், இது நல்லது; இது கெட்டது என்று சரியாக தெரியாத சிறுவயதில், ஜாலிக்காக பண்ணிவிட்டு, உதார் விடும் கிராக்கிகளை எனக்குத் தெரியும். " அந்தாள் Ph.d பண்ணியிருக்கிறான். அந்த மெஷின் அதைப் பண்ணும்; இதைப் பண்ணும்னு, முட்டாளாக்கி, இதை அவன் தலைல கட்டிட்டேன்" என்று பீட்டர் ஸ்காட்ச் சப்பிக்கொண்டே உதார் விட்ட என் பின்னாளைய HCL நண்பன் ராஜெஷ் சக்லானியின் இளவயது பிம்பங்களாகவே அவர்களையும் நான் பார்க்கிறேன்.

நேற்று ஒரு ஸ்டோர் போயிருந்தோம். பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் இடத்தில் சிறிய தள்ளுமுள்ளு. தான் முன்னர் வாங்கிய பொருளை திருப்பித்தர வந்த ஒரு அம்மணி, விலையை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு இரண்டு டாலர் சமாசாரத்துக்காக சரியான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது பதினைந்து நிமிஷமாக. திடீரென்று வாயிற்புறத்தில் உள்ள அலார்ம், பணம் கொடுக்காமல் யாரோ பொருளை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதை சொல்லும் விதமாக பீப்.பீப் என்றது. ( சிங்கப்பூரில் உள்ள ஸ்டோர்களில் இது கொஞ்சம் சத்தமாகவே கத்தும். தொடர்ந்து கேட்டால் " ஓடறான். ஓடறான்." என்று கத்துவதுபோல் இருக்கும்)
உடனே கவுண்டர் அம்மணி, ஓடினாள். ஒரு மெக்ஸிகன் இளைஞன், இரண்டு தோள்களிலும் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு சர்வசாதாரனமாக நடந்து போனான். கவுண்டர் அம்மணி ஓடிவருவதிப் பார்ததும், சர்வசாதாரணமாக ஓவர் கோட்டை நெகிழ்த்தி, முழங்கைக்கும் சற்றே நீளமான கத்தியை எடுத்துக் காட்ட, கவுண்டர் அம்மணி, பேச்சடைத்து நின்று விட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மூச்சு நின்று விட்டது. அத்த்னை பெரிய பளபளப்பான வாளை சமீபகாலங்களில் நான் எங்கும் பார்த்ததில்லை. நல்லவேளை துப்பாக்கி வைத்துக்கொண்டு தாறுமாறாக சுட்டுவிட்டு ஓடியிருந்தால் என்ன ஆகி இருக்கும். "கடைக்குப் போனால் பர்ஸில் பனம் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று நெனைச்சுகிட்டு இருந்தேன். வாள் எடுத்துகிட்டு போனா போறும்போலிருக்கே " என்று திரும்ப காரில் வரும்போது மனைவியிடம் கமெண்ட் அடித்தாலும், கொஞ்சம் உதறலாகவே இருந்தது.

போலிஸுக்கு ஃபோன் பண்ணிவிட்டு, கவுண்டர் அம்மணி மறுபடியும் இரண்டு டாலருக்காக தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்தது தனிக்கதை.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...