Friday, June 03, 2005

இப்போதும் எழுத வைப்பது...

வேறென்ன ...விகடன் தான்.

இந்த வார விகடனில் பல நல்ல பேட்டிகள். முக்கியமாய் என்னைக் கவர்ந்தது மணிரத்தினம் மற்றும் பாலு மகேந்திராவின் பேட்டிகள்.

டைம் பத்திரிக்கையால் நாயகன் படமும் இந்தியப் படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை படித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதில் முழுதாக ஒப்புதல் இல்லை. நாயகன் முதல் முறை பதின்ம வயதுகளில் பார்த்தபோது ஒரு பிரமிப்பு தோன்றியது நிசம். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான அப்ரோச் - தயாரிப்பாளருக்கே தெரியாமல் ஆழ்வார்பேட்டை பையன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்து விட்ட நல்ல படம் என்று கமல் ஒரு முறை சொன்னார். அதற்குப் பிறகு நாயகன் பலமுறை பார்த்து விட்டேன். அதன்பிறகு அதை விட நல்ல படங்கள் பலதை பார்த்து விட்டதாலோ அல்லது வெளிதேச படங்கள் பார்த்த பாதிப்போ - என்னவோ தெரியவில்லை - நாயகன் படத்தின் சில காட்சிகளில் இருந்த மிகையான ட்ராமடைசேஷன் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. கமர்ஷியல் ரசிகர்களுக்காக சேர்க்கப்பட்டிருந்த சில காட்சிகள் தனியாக தெரிந்தது. மணியே ஒத்துக் கொள்வது போல அவர் கமர்ஷியல் டைரக்டர்தான் என்றாலும், டைம் பத்திரிக்கை - காட்ஃபாதரை தழுவி எடுக்கபட்ட ஒரு இந்தியப்படத்திற்கு ( இதுவும் கமல் பேட்டியில் சொன்னதுதான்) கொடுத்திருக்கும் இடம் கொஞ்சம் அதிகம்தான் எனத் தோன்றியது. ஆனால் ஒன்று சொல்லவேண்டும், மணியின் அடக்கமான பேட்டி இருக்கிறதே அதுதான் என்னை மிக மிக ஆச்சரியப்படுத்திய விஷயம். ஒரு படம் எடுத்துவிட்டு அது ஜெயித்தவுடன் துள்ளுகின்ற ( தினகரன் பரிசு விழாவில் சிம்புவின் பேச்சு) ஆட்கள் நிறைந்த இந்த உலகத்தில், இத்தனை காலம் சொல்லிக்கொளும் வகையில் தரமான படங்களைக் கொடுத்தவர் பேசும் இத்தனை அடக்கமான பேச்சு - உண்மையில் நாயகன் மணிதான்

பாலுசாரின் பேட்டியும் இதம் - சிஷ்யன் பாலாவைப் பற்றி சொல்லும் சில வரிகள் கொஞ்சம் மிகையாக இருந்தால் கூட - உணர்வு ரீதியான ஆசாமி என்பதால் அதையும் மன்னித்து விடலாம். "அது ஒரு கனாக்காலம்" எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைக்கிற ( மார்க்கெட்டிங்கோ..??) சித்தரிப்பு கலந்த ஒரு பேட்டி. மற்றபடி கருப்பு கதாநாயகர்கள் ஜெயிப்பதைப் பற்றி அவர் சொல்வது கொஞ்சம் ஓவர்தான். மில்ஸ் அண்ட் பூன் கதைகளிலேயே கதாநாயக வருணனை Tall , dark and handsome என்றுதான் வருகிறது. தமிழ்நாட்டுப் பெண்களில் உளவியலும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுக்குத்தான் என்பதற்கான அந்தரங்கக்காரணங்கள் பாலுவுக்கு தெரியாததில்லை. ஆனால் சமையலையும் க்ரியேட்டிவிட்டியையும் இணைத்து அவர் சொன்ன வாக்கியம்தான் சிக்ஸர். எனக்கு அதில் பரிபூரணமான ஒப்புதல் உண்டு - நானே உணர்ந்திருக்கிறேன் என்ற வகையில். பாலுமகேந்திராவின் ஈழப்பின்புலம் எனக்கு சமீப நாள்வரை தெரியாது. அவருடைய கடைசி ஆசையும் படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது.

பொதுவாகவே விகடனின் விருந்து இப்போது கொஞ்சம் சுவைதான் என்றாலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமில் கணையாழி பற்றி, இஸ்லாம் பற்றி, நியூமராலஜி பற்றி, ராமாநுஜன் பற்றி எழுதி இருக்கும் எல்லாவற்றையும் விட்டு விட்டு கவிஞர் எஸ். வைத்தீஸ்வரனின் மிகச்சாதாரண ஒரு கவிதைக்கு போடும் இந்தப் படத்தில் இருக்கிறதுதான்

....நெம்பர் 1 க்கான ரகசியமோ..??

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...