Sunday, July 05, 2015




சமத்துவம் காண

ஆன்றோரே அவையோரே
அன்புள்ளம் கொண்டோரே...
சமத்துவ நாற்றாங்கால் தமிழகம் தன்னில்
வளமேவ வளர்ந்து விட்டு
தமிழ்நாட்டின்பால் கொண்ட நேசம்
இன்னமும் மாறாமல்
அயலக மண்ணில் நலமும் வளமும்
பலமும் பெற்று உரைபவரே...
தான் பெற்ற உதவியனைத்தும்
தன்னிலும் இன்னும் தாழ்ந்தோர்
பெறவேண்டுமென்ற உள்ளம் கொண்டு
தொண்டிலே பழுத்த பழமாகி விட்ட
தூய எண்ணம் கொண்டோரே.....
கேளுங்கள் நான் செப்புவதை...

கவியரங்க தலைப்புகளில்
இதுவரை எடுக்காத தலைப்பு என்று
வழங்கினர் இத் தலைப்பு..
சமத்துவம் காண...
அதுவே என் தலைப்பு..

என்னடா அதிசயம் இதுவா யாரும்
எடுக்காத தலைப்பு ?
அத்துணை இலகுவா இவ் விடயம் ?
என்று நான் வியக்கும் வேளையில்.....
வசிப்பது அமெரிக்கா என்பது
சிந்தையில் எட்டியது.
வெள்ளையும் பழுப்பும் கருப்பும்,
ஆணும் பெண்ணும்
திருநங்கையும்
சனநாயகம் குடியரசு
பச்சை கட்சிகளும்
சரிநிகர் சமானமாய்
சமத்துவம் பூண்டு
அரசாட்சி செய்யும் தேசத்தில்
சமத்துவம் காண -என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்?
வெள்ளை மாளிகையையே
நிறம் கடந்த மாளிகையாய்
மாற்றிய
நிஜமான தலைவர்கள்
இருக்கும் தேசத்தில்
சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் எப்படித் தோன்றும்??.
இல்லாது போனால் தானே
எல்லாரும் ஏங்குவர்..
இத்தலைப்பு நாடி
எல்லோரும் ஏகுவர்

சமத்துவம் காண என்பது
ஏக்கமாய் இன்னும் ஒலிக்க
இது என்ன இந்தியாவா...?  ...
நல் இமயமும் நலங்கொழிக்கும் கங்கைநதியும்
வெல்லத் தமிழ்நாட்டிம் மேன்மை மிகு பொதிய மலையும்
செந்நெல் வயல்களும் செழுங் கரும்புத் தோட்டங்களும்
தின்னக் கனிகளும் தெவிட்டாப் பயன்மரங்களும்
இன்பமும் செறிந்திருக்கும் இப் பெரிய தேசத்தில் ….
காவி அங்கே
மேவி வரும் வேளையிது
பிறப்புசார் தகைமைகள்
பல்லக்கேறும் தருணமிது
நம்நாடு நீங்கினாலும் விழிப்புடன்
சற்றே நாம் இருந்திடல் வேண்டும்
இல்லையேல் சமத்துவம் என்பதை
வீதியில் விட்டுவிட்டு
வலிமையுள்ளது எஞ்சும் என்ற
காட்டு வேதத்தை
நாட்டுக்குள் கொண்டு வந்து
பேதம் வளர்ப்பர்
வயிறு புடைத்தவனுக்கும்
வாழ்வே பசிப்போராட்டமாய்
போனவனுக்கும் ஒரே அளவில்
உணவு படைப்பர்...
பிறப்பிலேயே கால் இழந்த முடவனை
பந்தயத்தில் ஓடச் சொல்வர்.
இவர்கள் சொல்லும் சமத்துவம்
சமத்துகள் சொல்வது.....

சமத்துவம் அஃதன்று.

சமத்துவம் காண என்பது
வாடிய பயிரைக் கண்டு தானும்
வாடிய வள்ளலார் போல
கடையனுக்கும் அன்பு காட்டும்
கருணைப் பெருங்கடலாய் உறைவதே
வரப்புயர நீர் உயரும் நாட்டில்
சிலர் மட்டும் தன் தரப்பு உயர
தன் அறிவு உயர உயர
வறண்டு போவர்
கனியாது இருண்டு போவர்.....
காயிலேயே வெம்பிப் போவர்.   
நாயினும் கீழாய் போவர்.
ஒதுக்கீடு வேண்டாம் என்ற
எண்ணத்தோடு சமத்துவம்
சாகடிக்கும் இவர் சொல்லட்டும்
எந்த ஒதுக்கீடு கொண்டு
அமெரிக்காவில் இத்தனை
எளியர் சிறக்கின்றார்
விண்ணிலேறி பறக்கின்றார்

சமத்துவம் காண என்பது
நலம் பயக்கும் செயல் செய்ய
விழையும் நானிலத்தின்
தலைவனுக்கு
ஒரு தீராப் பெருங்கனவு
தன்குடிகள் அனைவர்க்கும்
நாட்டின் வளங்களை
சரியாய் பகிர்ந்து தரும்
உத்தம யோசனை இது
இல்லையேல்
பள்ளிக்கு வரமுடியாத
பசிவாதை தீர்க்க
மதிய உணவு எங்கே கிடைத்திருக்கும்?
நிஜ வாழ்க்கை நியாயங்களுக்கு
நெருங்கியும் வராத
நீச ஞாயங்களால்
ஒரு தலைமுறையே
தவித்திருக்கும்
அறிவொளி கிட்டா
அந்தகாரத்தில் ...
கிளரொளி இளமை
கெட்ட பின்னும்......

சமத்துவம் காண என்பதே அரசின்
தலையாய தத்துவம் என்ற
பெருங்கொள்கையாய் போன
நாற்பதாண்டில்
தமிழகம் கல்வியில் தலை
நிமிர்ந்து நிற்கிறது.
செல்வத்தின் சாயல்
செம்மையாய் விழுகிறது.
வறியவர்கெல்லாம் வாழ்வு
வந்தது
எனவே இப்போதே
எழுதி வைப்போம்
எளியவர்களின் சரித்திரம்
கடையனுக்கும் கலைமகளும்
தனலட்சுமியும்
தயை செய்தார்ளென..
இல்லையேல் களப்பிரர்களின்
காலம் மீண்டு எழுந்தது என்று
முதுகுடுமி பெருங்கனவான்
மீளவும் எழுதி வைப்பர்.

சமத்துவம் காண என்பது
பிறப்பிலே பெற்ற இழிவை
பெற்ற கல்வி வாயிலாக
துடைத்தெறியும் தூய வேள்வி...
பெற்ற கல்வியை ஆதாரமாக்கி
அதிகாரம் படைத்தோரை
கேள்வி கேட்கும் அற்புத வேள்வி
நிலத்திலே பார்க்கின்ற கண்களை
நிமிர்ந்து நேரே நின்று
நிலவு பார்க்கச் சொல்லும்
நிசமான அக்கறை கொண்ட
நீண்டநாள் ஆசையில் விளைந்த
வசமான யோசனை.

சமத்துவம் காண என்பது
பிறப்பு தாண்டியும்
ஆண் பெண்
சாதி மதம்
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
உடல் மன  ஊனமுற்றோர்
என்ற எல்லைகள் கடந்து
பெருங்கடலாய் பொங்கும்போது
நாடு சிறக்கும் வீடு சிறக்கும்
நம்பிக்கை பிறக்கும்
நீதி பிழைக்கும்
நானில மாந்தர்க்கு.
அதுவரை கொண்ட உறுதி
குறையாமல்
வரும் தலைமுறைக்கும்
அளித்து வருவோம்
எம் படிப்பினைகள்.
நாற்றங்காலில் பயிர்கள்
செழிக்கட்டும்.
பிறப்பின்பால்  இழிவுறாத
இறுதி உயிர் வளரும்வரை
சமத்துவம் காண என்பது
நம் கொள்கையாய் தொடரட்டும்



நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...