Sunday, July 19, 2015

இடமாற்றம்


விண்மீனொன்று
வீதியிறங்கி வந்தது ...
வாசல் மாந்தர்க்கது
வெறும் விளக்காய் தெரிந்தது
அண்மித்த விண்மீனின்
வெம்மை தகிக்க
விளக்கெண்ணை எரித்து
வெளிச்சம் கண்டோர்க்கு
விண்மீன் புரியவில்லை
அதியுஷ்ணம் அதன்
இயல்பென்று விளங்கவில்லை
அவருள்ளில் பொருந்தா
விண்மீன் பாவமாயினும்..
இங்குறைய விதிக்கப்பட்ட
சாபம் அதன் வாழ்வு
தனைநொந்த அது
நுகரப்படா வீரியத்தை
வெளியில் வெறுமனே
வெறுப்புடன் பாய்ச்ச
மண்ணின் மெளடீகம்
தாக்கி அகாலத்தில்
விண்வீதி திரும்பியது
வெந்நீர் அடுப்புகளிலும்
சோற்றுப்பானை சூட்டிலும்
சுருட்டுக் கங்கிலும்
ஆலையின் ஜூவாலையிலும்
சூளையின் தணலிலும்
விளக்குகளிலும்
விழாப் பந்தங்களிலும்
விடா பந்தங்களிலும்
பிறர் அறியாது
தன் வீரியஇயல்பை
பகிர்ந்துவிட்ட
தரையிறங்கிய
மற்றெல்லா விண்மீன்கள்
வான்நோக்கி தேம்புகின்றன.
விண்மீன்கள் வீதிக்கு
இறங்கிவர வேண்டாம்
சுயம் கெடாமல்
அவை இங்கே
இருக்கக் கடவதில்லை
சார்ந்தோர்க்கிரங்கி
சுயம் கெட்டவை
விண்மீனாய்
தொடர்வதில்லை.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...