Thursday, February 15, 2007

இறக்கும் இதயம்

நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்க
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்

சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது

ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான் .........

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...