Sunday, May 15, 2016

குப்பத்து ராஜா

இதுதான் ஊடக அறமா என்ற தலைப்பில் மதுரைப் பல்கலைகழகத்தின் இதழியல் துறைப் பேராசிரியர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்யாருக்கு நாற்காலி என்கிற தலைப்பில் விகடன் ஏடு வெளியிட்ட கட்டுரை எவ்வாறு திமுக சார்பு நிலை எடுத்திருக்கிறது என்பதையும் விகடன் ஏன் மக்கள் நலக்கூட்டணியை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும்  கேள்வி கேட்டு இருக்கிறார்.



தமிழ்மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்கிற ஒரு பத்திரிக்கை தமிழர்களின் கருத்தை மாற்றி அமைக்கிற, தன் சார்பு நிலை பற்றி சொல்கிற வேலையிலிருந்து வெளிவந்து மாமாங்கம் ஆயிற்று பேராசிரியர் அவர்களே. தற்கால வெகுஜன ஊடகங்கள் ( அரசியல் கட்சிகளால் ஆதரிக்கப்பட்டோ / நடத்தப்பட்டோ வெளிவருபவை தவிர)  பொதுமக்கள் நினைப்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளும் நுகர்வோர் கலாசாரத்தின் கூறாகி விட்டன.  விகடனில் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பங்கு இப்போது இருக்கிரது என்ற அடிப்படையில் பலருக்கு கட்டுரையைப் பற்றிய  சந்தேகம் வந்தாலும் கடந்த பல தேர்தல்களாக விகடனின் குரல் எப்படி எதிரொலித்து இருக்கிறது என்று கூர்ந்து அவதானித்தால் உண்மை விளங்கும்

மக்கள் நலக்கூட்டணி  ஒரு பலமான மூன்றாம் அணியாக உருவெடுக்காததற்கு அவர்களே காரணம்.
அங்கு இருக்கும் தலைவர்கள் ஒருவருக்கும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் தாக்கும் அருகதை இல்லை. இரண்டு கரைகளிலும் ஒதுங்கித்தான் அந்த தலைவர்கள் இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறார்கள். வைகோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட   தலைவர். வானவில்லின் ஏழு நிறங்களையும் தாண்டி அரசியல் அரங்கில் நடனம் ஆடும் வினோதர். இம் என்றால் அழுகை , ஏன் என்றால் கர்ச்சனை என்று காட்டி தன்னை தொடர்பவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் கோமாளி. உப்புசப்பிலாத காரணத்துக்காக இத் தேர்தலில்    அவர் போட்டியில் இருந்து விலகினார். அது ஒருபெரிய பின்னடைவு. விஜயகாந்தின் தேமுதிக இன்னொரு சர்க்கஸ் கூடாரம். விஜய்காந்தின் தற்போதைய உடல்நிலை, மனநிலை, அவர் குழறல் எல்லாமே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பாதித்தன. கேப்டனை பிடித்தவரகள் கூட சுதீஷுக்கும் பிரேமலதாவுக்கும் பட்டம் கட்டவா நாம் பிறந்தோம் என்று ஒதுங்கும் அலவுக்கு அவர்கள் இருவரும் பவனி வந்தனர். பத்திரிக்கையாளர்களை தாக்குவது, பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வது, கேலிக்கூத்தான தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து  கேப்டனும் செல்லாக்காசாகிப் போனார். திருமாவளவனுக்கு அரசியல் அரங்கில் இருக்கும் மதிப்பு ஓட்டுகளாக திரள கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வளரவேண்டும். அது இத்தேர்தலில் சாத்தியமில்லை. தவிரவும் திருமா சாதி ரீதியாக மேடைகளில் பேசும்போது பொது வாக்காளர்களின் ஆதரவை இழக்கிறார். மிச்சம் அந்த அணியில் உள்ள தமாகவும். கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களால் பொருட்படுத்தக் கூடிய கட்சிகளாக இல்லை. மொத்ததில் மூன்றாம் அணி  களையிழந்து போனதற்கு அவர்களே காரணம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக திகழ வேண்டுமெனில் அவர்களை எந்த தேர்தலிலும் சாராமல் தனிப்பெரும் சக்தியாக தமிழகத்தில் வளரவேண்டும்.

இதை யோசிக்கும் போது சீமான் நினைவுக்கு வருகிறார். சீமானின் உணர்ச்சி வேகமும், அவர் பாசிசப் பேச்சும் இப்போது வேண்டுமானால்  கூட்டம் சேர்க்கும். அந்த வெறுப்பரசியல் நெடிய நாள் வேலைக்கு ஆகாது. பதட்டம் குறைந்து, பக்குவம் கூடி இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்து, கழகங்களின் மாற்றாக திகழ அவர் கனிந்து வர வேண்டும். ஹிட்லரைப் போல பேசுவதும், மாற்று இன/ மொழி மக்களை விரட்டுவதும், திராவிடத்தை பழித்துகொண்டே பெரியாருக்கு சாமரம் வீசுவதும், முப்பாட்டன் முருகன், பாட்டன் பெரியார் என்று வாதிப்பதும் வெறும் உணர்ச்சி வேகங்களே. உணர்ச்சி வேகங்களுக்கும்  நாற்காலிகளுக்கும் தூரம் அதிகம்.

தேர்தல் நெருக்கத்தில் மே 14/15 தேதிகளில் திமுகவே வோட்டுக்கு பணம் கொடுத்ததை நான் அறிவேன். ஜெயலலிதாவின் ஆட்சி மீது  இததகைய வெறுப்பு மக்களுக்கு இருந்தும் கூட அத்தகைய ஆட்சியை அப்புறப்படுத்தும் ஜனநாயகக் “கடமையை” செய்ய  வைக்கக் கூடமக்களுக்கு கட்சிகள்   லஞ்சம் தரும் காலமாகி விட்டது. தேர்தல்களை வாங்கும் போக்கு இரு கழகங்களுக்கும் உள்ளது என்பதே கசப்பான உண்மை. ஆனால், மக்களுக்கு  மாறி மாறி வாக்களிக்க ஒரு மாற்றுக் கட்சியாவது இருக்கிறதே என்று ஆறுதல் மட்டுமே மிச்சம். இப்போது  ஆட்சிக்கு வரும் ஸ்டாலின் தவறு செய்தால் ஐந்தாண்டுகளில் ஜெ கம்பெனிக்கு வாய்ப்பு கிட்டும் அவ்வளவே. ஆனால் இவ்விரு கட்சிகளை தாண்டி தலையெடுக்க தமிழ் மண்ணில்  இம்முறையும் வாய்ப்பு இல்லை.

  திமுகவுக்கு/ ஸ்டாலினுக்கு இத்தேர்தல் ஒரு வாய்ப்பு. அடுத்த தேர்தலுக்குள் கருணாநிதி இருக்கிறாரோ என்னமோ , இத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால், மத்தியிலும் , வட மாநிலங்களிலும் , மற்ற துறைகளிலும் ஊடுருவி உள்ள வலதுசாரி சக்திகளை கட்டுக்குள் வைக்க திமுகவின் எழுச்சி உதவும். ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொண்டால்   ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக தன்னைக் கூறிக்கொள்ளும், ஓட்டுக்களுக்காவது அவர்களை குறிவைக்கும் ஒரு இயக்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள அது உதவும். மற்றபடி திமுகவின் ஊழல்களையும் , குடும்ப அரசியலையும் வாக்காளர்கள் திமுகவால் தங்களுக்கு கிடைக்கும் அரசியல் பலத்துக்கான “கமிஷன்/தண்டல்” தொகையாகவே பார்க்கிறார்கள்.

குப்பத்து தாதா அக்கம்பக்கத்து பெருந்தனக்காரர்களுக்கு வேண்டுமானல் பொறுக்கியாக தெரியலாம்.
குப்பத்துக்கு ராஜா அவன்தான்

2 comments:

  1. எதார்த்தமான கருத்துக்கள்! உண்மை நிலை அழகாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...