Thursday, October 06, 2005

கிழட்டு அனுபவங்கள் - தொடர்கிறது



மலேசிய எஸ்டேட்டுகளில், வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், கூட்டமாக ஒரே இடத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று உறவினர்களோடு வாழும் வாழ்க்கை படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் இனத்திற்கு ஓரளவுக்கு போருத்தமானதாகத் தான் இருந்தது.

கூலிவேலையானாலும், அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை, எஸ்டேட் நிர்வாகம் கட்டிக் கொடுத்திருந்த வீடு, பிள்ளைகள் படிப்பதற்கென்று எஸ்டேட்டிலேயே ஒரு தமிழ் பள்ளிக்கூடம், அவர்களாகவோ, எஸ்டேட் நிர்வாகத்தின் துணையுடனோ கட்டிக்கொணட ஒரு கோவில், அருகாமையிலேயே ஒரு கள்ளுக்கடை, ஒரிரு பலசரக்குக் கடைகள், ஒரு மருத்துவ நிலையம், ஒரு இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறு பட்டினம், அதற்கு ஒர் இரு மாதங்களுக்கு ஒருமுறை போய்வர பேரூந்து வசதி, போழுது போக்கிற்கு மாதம் இருமுறை எஸ்டேட் நிர்வாகம் திரையில் போட்டுக் காட்டிய தமிழ் படங்கள், வருடத்திற்கு ஓரிரு முறை நடந்த கோவில் திருவிழாக்கள், பிறகு அவர்களுக்கிடையே நடந்த கல்யாணம், காது குத்து, இறப்பு, பிறப்பு என்று ஏதோ ஒரு மாதிரியாக, சிறிது சுவாரஸ்யமாகத் தான் எஸ்ட்டேடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டு இருந்தது.

ஆனால், என்று சூழ்நிலையால் உந்தப்பட்டு என்று தமிழர்கள் எஸ்ட்டேட் வாழ்க்கையை விட்டு மாநகரங்களுக்கு வரத்தொடங்கினார்களோ அன்றே அவர்களின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை நிலை மாறி, மாநகரங்களின் கீழ் மட்டவாழ்க்கையின் இயல்பான தாக்கம் அவர்களையும் பாதிக்க தொடங்கி விட்டது. 1957 ஆம் வருடம் மலேசியா சுத்ந்திரம் பெற்ற போது மலேசிய இந்தியர்களின் ஜனத்தொகையில் சுமார் 20 விழுக்காடு மட்டுமே நகர்புறங்களில் வாழ்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்று இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் நகர்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் கால்வாசிப் பேர் சேரிகளுக்கு ஒப்பான, வசதி குறைந்த பட்டண விளிம்புகளில் கள்ளத்தனமாக அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து சிறு சிறு MAKESHIFT குடிசைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வருகிறார்கள்.



உறவுகளோடு ஒன்றாய் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை சிதைந்து போகும்போது கேட்பாரற்ற சூழ்நிலை இயல்பாக ஏற்படுத்தும் தான்தோன்றித் தனமும், ஒழுக்கமின்மையும் மலேசியத் தமிழ் இனத்தில் மிகப் பரவலான பிரச்சனையாகிவிட்டது. பள்ளிகளில் பிரச்சனை கொடுக்கும் மாணாக்கர்களில் அதிகம்பேர் தமிழ் இன பிள்ளைகள்தான் . அதேபோல் சிறு வயதிலேயே குண்டர் கும்பல்களில் ஈடுபாடு கொள்பவர்களும் தமிழ்க் குழந்தைகள்தான். மலேசியாவில் உள்ள குண்டர் கும்பலகளில் அதிகமான கும்பல்கள் இந்திய (தமிழ் இன) கும்பல்கள்தான். இங்கு உள்ள தாதாக்களில் பெரிய தாதாக்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்.

அத்தோடு படிப்பிற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்காத எஸ்டேட் கலாச்சாரத்தின் அடிப்படையில் வாழ்ந்து, வளர்ந்த மக்கள் என்பதன் தாக்கம், இன்றும் நகர்ப்புற வாழ்க்கையிலும் நம் இன மக்களை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றது. உயர்நிலை பள்ளிகளில் படிப்பை பாதியிலேயே நிறுத்தி கொள்வோருல் இந்தியப் பிள்ளைகளின் விகிதாச்சாரமே கூடுதலானது. அத்தோடு பல்கழைக்கழக இட ஒதுக்கிட்டில் இந்திய பிள்ளைகளின் இன்றைய விகிதாச்சாரம் வெறும் 3-4 விழுக்காடு மட்டும்தான். சீனப் பிள்ளைகள் பொதுப் பல்கலைகழகங்களில் அடித்துப் பிடித்து 30-35 விழுக்காட்டு இடங்களை வென்று விடுவார்கள். (மலேசிய ஜனத்தொகையில் இந்தியர்கள் 7.7 விழுக்காடும், சீனர்கள் 23.5 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 65 விழுக்காடும் உள்ளனர்).

இதேபோல் மதுப் பழக்கத்திற்கும் வெகுவாக அடிமையாபவர்களும் இந்தியர்கள்தான். மலேசியக் கன்ஸ்யூமர் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி கண்ட உண்மை என்னவென்றால், 65 விழுக்காட்டு இஸ்லாமிய ஜனத்தொகையை உடைய மலேசியா உலகிலேயே அதிகமாக மது அருந்தும் நாடுகளில் 10 ஆவது இடத்தில் இருக்கின்றது என்பதுதான். எப்படி ?? ஜனத்தொகையில் 65 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் மதுவை தொடுவதே இல்லை, 23 விழுக்காடு சீனர்களும் விலை உயர்ந்த மதுவை அவ்வப் போது அளவோடு அருந்துவார்களே ஒழிய பெரிய அளவில் குடிப்பவர்கள் இல்லை, பிறகு யார் இவ்வளவு மதுவையும் அருந்துகின்றனர் என்று பார்த்தால்.......நாம் தான்.....நம் இந்திய மக்கள்தான் இந் நாட்டில் 'பெருங் குடி மக்கள்"..!!!!

சிறு பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைத்து கள்ளத்தனமாக விற்கப் படும் 'சம்ஸு' என்று பொதுவாக அழைக்கப் படும் பட்டைச் சாராயத்தில் இருந்து விலை உயர்ந்த ஸ்காட்ச் விஸ்கி வரை குடித்து தீர்ப்பது இந்தியர்கள்தான். ஆனால் இந்த ஒரு பிரச்சனையில் மட்டும் ஜாதி, மொழி, அந்தஸ்த்து யாவற்றையும் மிஞ்சிய ஒரு சமத்துவம் இந்தியர்களுல் உள்ளது. குப்பை அள்ளும் தொழிலாளியும் ஓவராக தண்ணி அடிப்பார், பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணரும் ஓவராகத் தண்ணி அடிப்பார். இதனால் இந்தியர்கள் என்றால் \'குடிகாரர்கள்\' என்ற ஒரு தாழ்வான கண்ணோட்டம் மற்ற இன மக்களின் மத்தியில் வெகு காலமாக வேரூன்றி விட்டது.

இப்படி இங்குள்ள இந்தியர்களின் (தமிழர்களின்) அவல நிலையைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். இந்தியர்களின் குறைவான LIFE EXPECTANCY RATE டிலிருந்து, அறியாமையின் காரணமாக குறித்த காலத்தில் குடியுரிமை பெறத் தவறியதால் பல தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளிலிருந்து, நகர்ப்புறங்களில் வீட்டு வசதி இன்றி தவிப்பவர்களிலிருந்து, பிள்ளைகளால் அனாதைகளாக கைவிடப் படும் பெற்றோர்களின் பிரச்சனைகளிலிருந்து, குடும்பத்தை இடையில் கைவிட்டு விடும் கணவன் / மனைவிமார்களிலிருந்து இந் நாட்டில் பெரும்பாலன சமூகப் பிரச்சனைகள நம் இனத்தைச் சார்ந்தவையாகத் தான் உள்ளன.ஆனால் மலேசியாவில் இந்தியர்களுக்கு எல்லாமே சூன்யமாக உள்ளதாகவும் நினைத்து விட முடியாது இங்கு உள்ள மொத்த டாக்டர்களில் 28 விழுக்காட்டினரும், வழக்குரைஞர்களில் 27 விழுக்காட்டினரும், பல் மருத்துவர்களில் 21 விழுக்காட்டினரும், விலங்கின மருத்துவர்களில் 29 விழுக்காட்டினரும், இஞ்சினியர்களில் 7 விழுக்காட்டினரும், கணக்காய்வாளர்ளில் 6 விழுக்காட்டினரும், சர்வேயர்களில் 3 விழுக்காட்டினரும், கட்டிடக் கலை நிபுணர்களில் 2 விழுக்காட்டினரும் இந்தியர்கள்தான். எப்படியோ இவ்வளவு கடுமையான சூழ்நிலையிலும் இந்தியர்களில் ஒரு பகுதியினர் (குறிப்பாக மலையாளிகள், சிலோன் தமிழர்கள், சீக்கியர்கள், வட இந்தியர்கள், தமிழர்களில் சில வகுப்பினர் முண்டி அடித்துக் கொண்டு முன்னேறி வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் இந்தியர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இங்கு நம் இனத்தின் வருங்காலம் மிகுந்த கவலைக் குறிய கேள்விக்குறிதான்.

என்னைப் போல இங்குள்ள நடுத்தர இந்திய குடும்பஸ்தர்களுக்கு, எங்களின் அடுத்த அடுத்த தலைமுறை வாரிசுகளின் எதிர்காலம் குறித்து எண்ணம்தான் எப்பொழுதும்.



- மலேசியா ராஜசேகரன்

1 comment:

  1. I hope the economically sound Tamils would extend their helping hand to the needy.

    டத்தொ சாமிவேலு அப்படின்னு ஒருத்தர் இருக்காரே? அவரு என்ன பண்றாரு? தமிழ்னாட்டுல இருந்து வர்ர திரை ஸ்டார்சுக்கு விருந்து கொடுக்கரதுக்கும், சென்னைல விழாக்கள்ல கலந்துக்கறதுக்கும் நேரம் போயிடுதோ?

    பத்திரிகை, பதிவுகளில் படித்ததை வைத்துக் கேட்கிறேன். என் கண்ணோட்டம் பிழையாகவும் இருக்கலாம்.
    பக்கோடா பக࠼ Email | Homepage | 10.09.05 - 10:18 am | #

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...