Thursday, October 13, 2005

டாண்டியா ஆட்டமும் தசரா கூட்டமும்

பத்ரியின் இந்த பதிவு பல சீட்டுகளை தொடர்ச்சியாக தள்ளி,
கீபோர்ட் முன்னே என்னை தள்ளி விட்டது. உடனடியாக தோணியது அடடா..அப்பவே தெரியாத போச்சே என்பதுதான்.

எப்பவே..??

பம்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்த 92-93 வருடங்களில் எல்லாம் நிறைய மராத்தி/குஜராத்தி நண்பர்கள் உண்டு. எந்த மெட்ரோவுக்குமே ஒரு வித்தியாசமான முகம் உண்டு. எந்த குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்தாலும், மெட்ரோவில் மட்டும் பல மொழியினர்/ இனத்தவர்/ மதத்தவர், ஏன் நாட்டினர் கூட கலந்து கட்டியாக இருப்பர். அவ் விதத்தில் பம்பாய் ஒரு பலபட்டறை.( நன்றி : சாரு)

ஆனால் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு வகையினர் அதிகமாக இருப்பார்கள். பம்பாயை எடுத்துக் கொண்டால் தாதர்/குர்லாவில் மராத்தியர்கள், செம்பூர்/ மாதுங்காவில் தென்னிந்தியர்கள்( தமிழர்கள்), மாஹிம்/ மஸ்ஜித் பந்தரில் முஸ்லிம்கள், விலே பார்லேவில்/பாந்தராவில் ஆங்கிலோ இந்தியர்கள், என்று இலகுவாக பிரித்து விட முடியும். அப்படிப் பார்த்தால் காட்கோபரில் பெரிதும் குஜராத்திகள். கெம்ச்சு..கெம்ச்சு என்று பேசிக் கொண்டு லாந்திக்கொண்டிருக்கும் பம்பாயின் வியாபார பிரிவின் மூளைகள் - மார்வாடிகள் போல.



தசரா காலங்களில் எங்கெங்கும் ஒரே கோலாகலமாக இருக்கும். கூட வேலை பார்க்கும் குஜராத்தி பாபுகள் எல்லாம் குஜாலாகி விடுவார்கள். ஆபிஸில் வேலை பார்க்கும் நண்பிகளையே கூட்டிக்கொண்டு கர்பாவுக்கு போய் விடுவார்கள். என்னையும் கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் போனதில்லை
" அட...இந்த வயசுல என்னத்த போய் கோலாட்டம் ஆட வேண்டி இருக்கு..?? " என்று நினைத்ததுதான்.

இதில் இவ்வளௌ சூட்சுமம் இருப்பது தெரியாத போச்சே என்ற விசனம்தான் இப்போது வருகிறது

இங்கே சாக்ரமண்டோவில் அஷோக் படேல் என்ற நண்பர் போன வாரம் கர்பாவுக்கு கூப்பிட்டுக் கொண்டிருந்தார். " வாங்க சுந்தர்..நல்லா இருக்கு" என்று. சரி..சூர்யாவுக்கு கொஞ்சம் கலர் காட்டிய மாதிரி இருக்குமே ( ஹி..ஹிஹி) என்று நினைத்துக் கொண்டு போகலாம் என்றிருந்தேன். வாரம் வாரம் தள்ளிக் கொண்டே வந்தது.

இன்று காலை பத்ரி ஆர்டிக்கிள் பார்த்து விட்டு, அஷோக்கிடம் தயங்கி தயங்கி, " என்னய்யா...இப்படி எல்லாம் நடக்குதாமே" என்று வினவ, ஒஹ்ஹோஹ்ஹோ என பெரிதாக சிரித்துவிட்டு
" என்னய்யா..சூரப் பழமா இருப்ப போலிருக்கு. பாம்பேல இருந்திருக்க. கர்பாவுல என்ன நடக்கும்னு தெரியாதா" என்று மானத்தை வாங்கினார்.

சரி இங்கே சாகரமண்டோ கர்பாவாவது போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டு " இங்கயும் கர்பா இப்படித்தானா..?? " என்று நான் அசடுவழிய " இல்லை சுந்தர்..இங்க ரொம்ப ட்ரெடிஷனலா பண்றோம். சினி ம்யூசிக் கிடையாது. ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இங்கயும் பல கல்யாணங்கள் கர்பால நிச்சயிக்கப்படுது" என்றார்.

தொடர்ந்து " ஆனா சாக்ரமண்டோல இந்த வருஷம் இனி கர்பா கிடையாது. ஏன்னா போன வாரம் ஆடிக்கொண்டிருக்கும்போதே 26 வயது பெண் ஒருவர் மயங்கி விழுந்து ஸ்பாட்டிலேயே காலி. 911 கூப்பிட்டு ஆட்கள் வருவதற்குள் ஹார்ட் அட்டாக். பாவம் ..கர்ப்பிணி வேறு" என்றார்.

"கல்யாணம் ஆனவங்கதானே" என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...