Tuesday, April 05, 2005

எப்பவுமே குமுதம்தான்

தமிழ் வாசகர்களுக்கு எத்தனையோ பத்திரிக்கைகளின் பரிச்சயம் இருந்தாலும், ஆதிகாலம் தொட்டு குமுதம் மற்றும் ஆனந்தவிகடனுக்கு தனி மதிப்புதான். கொஞ்சம் பொறுப்பான நண்பனாக விகடன் நடந்துகொள்ள, ஜாலியான நண்பனாக குமுதம் நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் எஸ்.ஏ.பி இருந்தவரைக்கும் குமுதத்தின் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அடிப்படையில் அவர் குணம் வேறுமாதிரி இருந்தாலும், தன்னை ஒத்தவனுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பினருக்குமான இதழாகவே குமுதத்தை நடத்தி வந்தார். ஆயினும் விகடனோடு அதை ஒப்பிடுபவர்கள் யாரும் விகடனுக்கே ஜே போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றையை சன் டீவியோடு குமுதத்தை ஒப்பிடலாம் போல சினிமா சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக, வாசகனை ஜாலியாக பத்திரிக்கை வைத்திருந்ததால், வடநாட்டிலிருந்து டை கட்டிய எம்.பி.ஏ இளைஞர்கள் வந்து எப்படி இந்த பத்திரிக்கை ஆறு லட்சம் விற்கிரது என்று ஆராய்ச்சி நடத்தி செல்வார்களாம். தமிழ்நாட்டில் படத் தயாரிப்பாளரை, நடிக நடிகையை, எழுத்தாளரை, பாட்டுக்காரரை, அரசியல் தலைமையை, கட்சியை, முதல்வர் பதவியை காப்பாற்றும், தீர்மானிக்கும் சினிமா பத்திரிக்கயையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது.

எஸ்.ஏ.பியின் மறைவுக்கு பிறகு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மாலன், சுஜாதா ஆகியோரை குமுதம் உபயோகப்படுத்தி வந்தது. எதனால் விற்கிறது என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை இதனால் விற்கிறது என்று அடையாளப்படுத்த இவர்கள் இருவரும் செய்த முயற்சிகளும் அதன் சுகமான பின்விளைவுகளும் விகடன் வாசகர்களுக்கும் பிடித்துப் போக குமுதம் காட்டில் அடை மழை.

நாளடைவில் இவர்கள் விலக, இவர்களுக்கு பிறகு எஸ்.ஏ.பி ஜவஹர் பழனியப்பன் ஆசிரியராய் இருந்தார். பிறகு கொஞ்ச நாள் அவர் மகள் கிருஷ்ணா கூட ஆசிரியராக இருந்ததாக சொன்னார்கள். ஆனால் பத்திரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியத்தை இழந்துகொண்டே வந்தது. அட்டை பக்கத்தை கழற்றிவிட்டால் எல்லாமே ஒன்றுதானோ என்ற நிலை ஏற்படும் அளவுக்கு சொதப்பல்.

இந்தக் காலகட்டத்தில் விகடனிலும் மாற்றங்கள். தலைமையின் பெரும்பாலான முடிவுகள் திரு. பாலனின் மகன் ஸ்ரீனிவாசனின் கைக்கு வந்தது. அவர் விருப்பப்படி, விகடனில் பல அதிரடி மாற்றங்கள் புகுந்தன. பாரம்பரியமான அணுகுமுறையை கொண்டிருந்த விகடன் கலர் கலராய் படம் போட ஆரம்பித்தது. சினிமா கவர்ச்சிக்கும் குறைவு இல்லை. இப்போது வரும் விகடனைப் பார்த்தால், அது விகடன் போலவே இல்லை. விற்பனை ராக்கெட் வேகத்தில் ஏற ஆரம்பிக்க, தன் இணையதளத்தை பயனர்களுக்கு மட்டும் கொடுத்து சமீபத்தில் ஒரு பெரும்தொகையை ஆண்டுசந்தாவாக திரட்டிய விகடன், அவர்களையும் தன் வாசக லிஸ்டில் சேர்த்துக் கொண்டதனாலோ என்னவோ, விற்பனையில் நெம்பர் 1 வார இதழாக தேர்வாகி இருக்கிறது விகடன். அதற்கு குமுதம் கிண்டல் அடித்திருக்கிற கார்ட்டூனை போட்டு வருத்தபட்டிருக்கிறது.



குமுதம் வருத்தப்படவே தேவை இல்லை. ஏனெனில் இப்போதும் / எப்போதும் "குமுதம்" தான் நெம்பர் 1.

அட்டையில் ஆனந்தவிகடன் என்று எழுதி இருந்தால் மட்டும் போதுமா என்ன..??


பி.கு: என்னடா பெரிய இவனாட்டம் இதையெல்லாம் எழுதி இருக்கிறனேன்னு பாக்காதீங்க. உள்விவகாரங்கள் எல்லாம் எனக்கு முழுசா தெரிஞ்சு இதை நான் எழுதல. பாதி ஊகம். பாதி செவிவழி செய்தி. அம்புடுதேன். விகடன் பழைய மாதிரி இல்லைங்கிற கருத்து மட்டும்தான் என் யோக்கியமான கருத்து.

1 comment:

  1. I agree with you that Vikatan is not like it "self". If you remove sujatha's Katrathum Petrathum(even for a die hard sujatha fan like me, that article is getting a bit stale, perhaps Sujatha is writing a lot now a days?) and Ramakrishanan's "Katha Vilasam", the rest are piece of crap.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...