Tuesday, June 22, 2004

பெண்மொழி

===========

normal_Cute


ஆழமாய் வேர்பரப்ப முடியாதபடி
பதியமிடும் குரோட்டன்களாய்
போயிற்று வாழ்க்கை

சத்தமிட்ட என் சிரிப்புகளிலிருந்து
சந்தோஷத்தை கிள்ளியெடுத்து
அதிராத சிக்கன முறுவல்களை
பதியமிட்டாள் பொட்டற்ற பாட்டி

முழங்கால் தெரிந்த ஆடையையும்
கதவு தாண்டிய பாண்டியாட்டத்தையும்
ஜன்னலுக்குள் பார்வைகளாய் சிறைவைத்து
வேர்களோடாது பதியமிட்டார் அப்பா

சரியாத ஆடைகளை சரிசெய்து
சுழலும் விழிகளை தணிக்கைக்குட்படுத்தி
தொடைவலிக்கக் கிள்ளி வெட்கம் கற்பித்து
வட்டத்துக்குள் பதியம் வைத்தாள் அம்மா

அவனிஷ்டத்துக்கு பூத்து காய்த்து
கனியும்படி, நீர் கசிய துளையுமின்றி
குடும்பப் பாத்திரத்தில்
பதியமிட்டிருக்கிறான் கணவன்

சந்தோஷம் துக்கமென அவர்களுக்காய்
வாழச்செய்திருக்கின்றன தொப்புள்கொடி உறவுகள்
மழைவிரும்பினாலும் இவர்களுக்கென
கான்க்ரீட் குடைகளுக்குக் கீழ் பதியமாய்

கிளைபரப்பி விழுதிட்டு தாங்கி நின்றாலும்
சார்ந்து வாழும் கொடியென
வீட்டுக்குள் பொய்ப்பதியமிட்டு
அழகிற்காய் வைத்திருக்கிறது சமூகம்

வேர்களை தொலைத்து விட்டு பதியங்களில்
கழிகிறது குரோட்டன்ஸ் வாழ்க்கை.


கவிஞர் பாலா எழுதி இருக்கும் கவிதை பெண்களின் வாழ்க்கை குரோட்டன்ஸ்களாய் சிறுப்பதாய் சொல்கிறது. இன்னொரு பாலா இருபது வருடம் முன்பு, கல்யாணமாகாத ஒரு முதிர்கன்னியின் வாழ்க்கையை "கல்யாண முருங்கை" என்ற நாவலாய் எழுதினார். பெண்வாழ்க்கை இப்படியல்ல என்று சொல்ல என் கண்முன்னே ஏராளமான உதாரண்ங்கள் உள்ளன. என்றாலும், இன்னமும் எங்காவது ஒரு மூலையில் இம்மாதிரி இன்னமும் வாழும் பெண்களும் இருக்கிறார்கள்.

சுகிர்தாராணியின் கவிதைகளை படித்தவுடன், எனக்கு இதை இங்கே இடத் தோன்றியது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...