Sunday, October 16, 2005

கிழட்டு அனுபவங்கள் (7) - மலேசியா ராஜசேகரன்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு

பணிபுரிவதற்கு என்று வந்த நாட்டிலேயே நிரந்தர குடியுரிமை பெற்று தங்கி விடுவதா? அல்லது ஒரு காலகட்டத்தில் பிறந்த நாடான இந்தியாவிற்கு திரும்புவதா? என்ற இயல்பாக, ஒவ்வொரு NRI க்கும் அவ்வப்போது மனதில் ஏற்படும் எண்ணத் தாக்கங்களை பிரதிபலித்து, அவற்றை ஆய்வு செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டதுதான் 'கிழட்டு அநுபவங்கள்' தொடர். இது வெளிநாடு சென்ற இருபது ஆண்டுகளில், தமிழை மறந்து, பாதி வெள்ளையராக மாறிவிட்ட ஒருவர் எழுதினால் எடுபட மாட்டாது. அவரால் இப்படியெல்லாம் எழுதவும் முடியாது.

நான்கு தலைமுறைகளாக பதினெட்டு லட்சம் இந்திய வம்சாவளியினருடன், மலேசியா போன்ற ஒரு நாட்டில் குடிபுகுந்து, ஆண்டு, அநுபவித்து, கேடிகளையும் கோடிகளையும் பார்த்து, அதலபாதாளத்திலும் விழுந்து, புரண்டு, எழுந்து, அரசியல், தொழில், நிறுவனம், வரவு, செலவு, பட்டம், படிப்பு, பிறப்பு, இறப்பு, குடும்பம், பிள்ளை, குட்டி, வீடு, வசதி, வாகனம், நிலம், பலம், பணம், கோர்ட்டு, கேஸு என்று வெளி நாட்டில் வசித்து வந்தாலும், வாழ்கையின் சகல பரிமாணங்களையும் அநுபவ பூர்வமாக அறிந்த, உணர்ந்த, ஒரு சிந்திக்கக் கூடிய, அதே நேரத்தில் தமிழ் தெரிந்த ஒரு இந்தியனால் மட்டும்தான் இப்படி ஒரு தொடரை எழுத முடியும். அதிலும் அவர் என்னைப் போல் இன்னமும் இந்தியாவுடன் ஆழமான குடும்ப, பாரம்பரிய தொடர்புகளைப் பேணிக் காத்து வருவராக இருந்தால் மட்டுமே அவரின் எழுத்து, தமிழ் அறிவு கொண்ட பிற NRI களுக்கு பொருத்தமானதாக அமையும்.

சுருங்கச் சொன்னால் தமிழ் வாசகர்களாகிய உங்களைப் பொறுத்தவரை என்னைப் போன்று பல தலைமுறைகளுக்கு முன்பே பிற நாடுகளில் குடியேறி, தங்கள் சுய அநுபவங்களை வைத்து வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஆராய்ந்து தமிழில் அநுபவ பூர்வமாக எழுதக் கூடிய ஒருவர் ஒரு அபூர்வ ஜந்து . எப்போதாவது எங்காவது ஒருவர்தான் தென்படுவார். இதை நான் என் தற்பெருமைக்காக இங்கு சொல்லவில்லை. தமிழ் வாசகர்களான உங்களுக்கும் சில கடமைகள் உள்ளன என்பதை உங்களுக்கு நினைவுகூரத்தான் சொல்கிறேன். புதிதாக இணைய ஊடகப் பதிவுகளை எழுதும் எனனைப் போன்றோரை சில நேரங்களில் காப்பதும், ஊக்குவிப்பதும் வாசகர்களாகிய உங்களின் கடமைகளின் ஒன்று. \'இது என்ன லாஜிக்\' என்கிறீர்களா ? இது பழைய லாஜிக்.... யோசித்து பாருங்கள்...நான் சொல்வதன் ஆழம் புரியும். (என் எழுதுக்களை சமீபத்தில் காத்து கருத்துரைத்து எழுதிய நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்).

ஏற்கனவே என் தொடரில் கூறியுள்ளதைப் போல் "நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அறிந்தால்தான் எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது வாசகருக்குப் புரியும்". என் தொடரில் இதுவரை நான் கூறி வந்தது எல்லாம் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் சுட்டி காட்டத் தான். எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது இத் தொடரின் கடைசிப் பகுதியில் (பதிவு 9) வெளிநாட்டில் வசிக்கும் தமிழன் என்ற முறையிலும், இந்தியன் என்ற முறையிலும், குடும்பத் தலைவன் என்ற முறையிலும், தகப்பன் என்ற முறையிலும் நான் அன்றாடம் எதிர்கொள்ளும் 'டிலைமாக்களுக்கு' எழுத்து வடிவம் கொடுக்கும்போது வெளிப்படும்.

இதற்கு முன்பு நான் எழுதிய 6 பதிவுகளும் மேற்கூறிய குறிக்கோளுக்கு நேரடி ஏற்ப்புடையனவாக அமைந்தன. ஆனால் இந்த 7 ஆவது பதிவு, சில வாசகர்கள் சீன மக்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று காட்டிய ஆர்வத்திற்கு இணங்க வெறும் செய்தியாக இங்கு சேர்க்கப் பட்டுள்ளது. ஆதலால் இவற்றை வெறும் துணுக்கு செய்திகளாகக் கருதி, ஆனந்த விகடன் பாணியில். ஒன்று, இர்ண்டு, மூன்று...என்று துணுக்கு, துணுக்காக வழங்கியிருக்கிறேன்.

1. சீனர்கள் தங்கள் நாடுதான் சகல உலகத்திற்கும் மையமானதென்றும் (middle kingdom), தங்கள் கலாச்சாரத்தை மிஞ்சிய கலாச்சாரம் என்று ஒன்று இல்லை என்றும் பல நூறு ஆண்டுகளாக ஆழமானதொரு நினைப்பிலிருந்து வந்துள்ளனர். ஆதலால் சீனர் அல்லாத பிற இனத்தவர் யாவரையும் 'காட்டுமிராண்டிகள்' என்றுதான் சமீப காலம்வரை அவர்கள் கூறியும், கருதியும் வந்துள்ளார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே தம்மைப் பற்றி ஒரு உயர்வான கருத்து எப்போதும் இருந்து வந்துள்ளது.

இதனால்தானோ என்னவோ நடைமுறையில் மற்றொரு சீனரோடு பழகும்போது அவர்கள் காண்பிக்கும் மரியாதை, நேர்மை, தன்மை யாவும் சீனர் அல்லாதவர்களோடு பழகும்போது குறைந்து காணப் படுகிறது. இந்த இயல்பை இன்றும் மலேசிய சீனர்களிடமும் பார்க்கலாம், சிங்கப்பூர் சீனர்களிடமும் பார்க்கலாம், சீனாவில் உள்ள சீனர்களிடமும் பார்க்கலாம். இதனால் பொதுவாக சீன இனத்தவருக்கு பிற நாடுகளில் வரவேற்பு என்பது என்றுமே சற்றுக் குறைவுதான்.



2. சீன இனத்தவரின் ஆன்மாவிற்கு 'தங்கள் குடும்பம்' என்பததுதான் மையக் கரு. குடும்பத்திற்கு அப்புறம்தான் சகலமும். அவர்களில் குடும்பம் என்பது தாய், தகப்பன், மனைவி, மக்கள் மட்டும் அல்ல. மூதாதையர்கள், சிற்றப்பார், பெரியப்பார், அத்தை, மாமன், மச்சான், பஙகாளியிலிருந்து, சீனாவில் அவர்களின் கிராமத்தைச் சார்ந்த மக்களில் இருந்து, அவர்களைப் போன்ற முதற் பெயர் கொண்ட அனைவரும், வெவ்வேறு முக்கியத்துவம் கொண்ட குடும்ப அங்கத்தினர்களே. குடும்ப உறுப்பினர்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்வார்கள். செய்ய வேண்டியதை ஒரு கடமையாகவே நினைப்பார்கள். இந்த எண்ணம் மிக ஆழமாக ஒவ்வொருவர் மனதிலும் இருப்பதனால், ஒரு சீனர் மற்ற யாருடனும் எப்படி நடந்து கொண்டாரேயானாலும், குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் மிகவும் முறையோடு சொன்னது சொன்னபடி நடந்து கொள்வார்.

இதை இப்படிச் சொல்லிவிட்டு போனால், மேற்குறிப்பிட்ட இரு தன்மைகளின் தாக்கமும் வாசகர்களுக்கு சரிவர புரியாது. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள் இந்தோனீசியாவிலோ, பிலிப்பீன்சிலோ வசித்து அங்கு ஒரு பிசினஸ் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பணத்தேவையினால் அங்குள்ள ஒரு வங்கியை அணுகி கடன் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி சீனர்களுடைய வங்கியாக இருந்தால், நீங்கள் வங்கியிடம் சமர்ப்பித்த ப்ராஜெக்ட் பேப்பரின் நகல் அன்று இரவே உங்களின் சீன காம்பட்டிட்டரின் கையில் போய் சேர்ந்துவிடும். "அது எப்படி? எத்திக்ஸ் என்று ஒன்று இல்லையா?" என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. சீனருக்கும் சீனருக்கும் இடையில் இருக்கிறது. நீங்கள்தான் 'காட்டுமிராண்டி' கேட்டகரியைச் சேர்ந்தவராயிற்றே, உங்களிடம் என்ன எத்திக்ஸ் வேண்டி இருக்கு ? :)-.

3. சீன கலாச்சாரத்தில் 'FACE' என்பது மிக மிக முக்கியமானதொரு அம்சம். (இதை நுணுக்கமாக ஒட்டிய கருத்தோ வார்த்தையோ தமிழிலோ, பிற இந்திய மொழிகளிலோ இருக்கின்றனவா என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'. இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று. இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.

இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் பல விதமாக வெளிப்படும். உதாரணத்திற்கு பிறர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து கூறுவது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக கூறுவது, ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிப்பது, தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் LOSING OF FACE ஆக கிரகிக்கபடும்.

அதேபோல் ஒரு சீன ஸ்தாபனத்தின் தலைவர் ஒரு தவறான வியாபார முடிவை எடுத்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஸ்தாபனத்தில் உள்ள எல்லோருக்கும் அவர் எடுத்த முடிவு தவறானது என்று நன்றாக தெரிந்த பட்ச்சத்திலும், அதை வெளிப் படையாக யாரும் சொல்ல மாட்டார்கள். பண நஷ்டம் ஏற்பட்டாலும் பாதகமில்லை என்று அதன் தலைவர் FACE LOSE பன்னாமல் தற்காத்து அவருக்கு முட்டுக் கொடுப்பார்கள்.

இந்தியர்களை சீனர்கள் தாழ்வாக கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம். "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு கூறு. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிடும் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். ஆனால் சீனர்களின் பார்வையில் இது ஒரு அநாகரீகமான சமுதாய அனுகுமுறை.

4. பெரும்பாலான சீனர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களைப் போல் MORAL JUDGEMENT எல்லாம் செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு கவர்மண்டு ஆபீஸுக்கு ஒரு வேளை விசயமாக ஒரு சீனர் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். சட்டப்படி 1.00 மணிக்கு சாப்பாட்டு பிரேக் எடுக்க வேண்டிய குமாஸ்தா 12.30 க்கே நாற்காலியை காலி செய்து கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்ற இனத்தவராக இருந்தால் என்ன நடக்கும் ? "சூப்பர்வைசரைக் கூப்பிடு. 12.30க்கே சாப்பாட்டு பிரேக்கா? " என்று சட்டம் பேசுவார்கள். ஆனால் ஒரு சராசரி சீனர் என்ன செய்வார் தெரியுமா? ஒன்று அங்கிருந்து போய்விட்டு மற்றொரு நாள் வருவார். அல்லது, கிளம்பி கொண்டிருக்கும் குமாஸ்தாவை தனியாக கூப்பிட்டு, அவர் நார்மலாக வாங்கும் லஞ்சத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து வேலையை முடித்துக் கொண்டு போய்விடுவார்.

சுருக்கமாகச் சொன்னால், எங்கு எப்படிப் பட்ட சூழ்நிலை இருந்தாலும் "இங்கு இதுதான் இயல்பு போலும்" என்று ஏற்றுக் கொண்டு, தங்களை அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்வதும் சீனர்களின் பாரம்பரிய இயல்புகளில் ஒன்று.

5. சீனர்களும் அதிர்ஷ்டத்தை மிகவும் நம்புபவர்கள். நாம் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுபோல் அவர்களும் fengshui என்று அழைக்கப் படும் சீன வாஸ்துக்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்வார்கள்.



6. சீனர்கள் பயங்கரமான சூதாடிகளும் கூட. அவர்களின் கலாச்சாரத்தில் சூதாட்டம் என்பது மிக மிக இயல்பான ஒன்று. அவர்களின் மிகப் பெரிய திருவிழாவான புதுவருடப் பிறப்பின்போது பார்த்தால் காலையிலேயே குடும்பத்தோடு சுற்றி உட்கார்ந்து கொண்டு தாய், தகப்பன், பிள்ளைகள், சிற்றப்பார், பெரியப்பார், தாத்தா, பாட்டி யாவரும் பணம் கட்டி சீட்டுப் ஆடும் காட்சியை இன்றும் மலேசியா இந்தோனீசியா போன்ற நாடுகளில் காணலாம்.



7. நம்மைப் போல் சீனர்கள் கல்யாணத்திற்காக அதிகமான பணம் செலவு செய்வதில்லை. கல்யாண வைபவம் என்பது பெண் மாப்பிள்ளை குடும்பத்துக்கு உள்ளேயே ஒரு சிறு தேனீர் சடங்கோடும், ரிஜிஸ்ட்டிரேசனோடும் முடிந்து விடும். பிறகு நண்பர்களையும், உறவினர்களையும் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுப்பார்கள். அது சாதாரணமாக எட்டிலிருந்து பத்து உணவு ஐட்டங்களையும் அளவில்லாத மது ஓட்டத்தையும் கூடிய ஒரு பெரிய விருந்தாக அமையும். அப்போது விருந்திற்கு வந்திருப்பவர் ஒவ்வொருவரும் விருந்துக்கு நபர் ஒருவருக்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்பதை அவர்களே அனுமானித்து அதற்கு குறையாத அல்லது அதற்கு நெருங்கிய 'மொய்யை' ஒரு சிவப்பு உறையில் வைத்து 'மொய்' வாங்குவதற்கென்று நியமிக்கப் பட்டுள்ள நபரிடம் கொடுத்துவிடுவார்கள். விருந்து முடிந்தவுடன் எல்லா சிவப்பு உறைகளையும் திறந்து பார்த்து. குறிப்பெடுத்துக் கொண்டு, மொத்த வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று கணக்குப் பார்த்து விருந்துக்கான பில்லை அங்கேயே செட்டில் செய்துவிடுவார்கள். பெரும்பாலும் வந்த மொய்க்கும் ஆன செலவுக்கும் கணக்கு சரியாகிவிடும். சில நேரங்களில் மணமக்கள் கையைவிட்டு பணம் எடுக்க வேண்டியதும் வரலாம். சில நேரங்களில் செலவு போக இரண்டாயிரம், மூவாயிரம் மணமக்கள் கைக்கும் வரலாம். ஆனால் நம்மைப் போல் 'போண்டியாகும்' அளவுக்கான கலயாண செலவுகளெல்லாம் சீனர்களுக்கு கிடையாது.

************************************

இது இழுத்துக் கொண்டே போகிறது........... இத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். வாசகர்களுக்கு சீனர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தால், உங்கள் ஆர்வததை வெளியிடுங்கள் இந்த தொடர் முடிந்ததும் அவர்களைப் பற்றி மேலும் ஒரு பதிவு எழுதுகிறேன்

8 comments:

  1. I will say that to Rajasekaran..!!

    I am just a composer/ copy editor :-)

    ReplyDelete
  2. இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன் ச்சீனர்களின் கலாச்சாரம் , வாழ்க்கைமுறைகள் எல்லாம்.

    ReplyDelete
  3. To Mr. Rajesekaran

    Unmayil neengal ezhudhum sambavangal migundha swarasyamaga irukiradhu.. Naan singapore matrum malaysiavil siridhu kaalam irundha podhu kooda ivvalavu nunukamaana vishayangalai therindhu kolla iyalavillai.....

    Sundarukum enndaya nandrigal.. for being a copy editor / composer..

    Mikka Nandri..adutha pagudhikaga kaathukondirukum..

    Prakash Palani.

    ReplyDelete
  4. பதிவு நன்றாக இருக்கிறது.எனினும் தம்மைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு உலக மக்களினங்கள் எல்லோரிடமும் உண்டு.அது சீனர்களுக்கு ´மட்டுமாக இல்லை.ஜேர்மனியில் கிட்டத்தட்ட 68 மக்களினங்கள் வாழ்கிறார்கள்.இவர்களில் பலரிடம் தம்மைத் தவிர வேறு இனங்களிடம் பண்பாடு கிடையாதென்ற திமிருண்டு.இது ஒவ்வொரு இனங்களுக்குள்ளுமிருக்கும் ஆளுமையுடையவர்களின் பொய்யுரைகளால் வந்த வினை.நம்மிடமில்லையா?'கல்தோன்றி மண்(மன்?:நீதி பரிபாலனம்!)தோன்றாக் காலத்து வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி' இப்படிப் பல புருடாக்களை மக்களினங்கள் சுமக்கிறார்கள்.அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தொடர்ந்தும் அதைத் தக்க வைப்பதற்கெடுக்கும் முயற்சியே அது.

    ReplyDelete
  5. Sundar,

    Please request Mr. Rajasekaran to write more about his experience with Chinese. With our nation starts encountering China and Chinese everywhere, it would be great to know about them from a person who has been closely observing them for a long time.

    ReplyDelete
  6. I also interested to know more about the chinese

    ReplyDelete
  7. அடுத்த பகுதி தாயாராக..ஹி..ஹி தயாராக உள்ளது திங்களன்று சுடச் சுட பதிப்பிக்கிறேன்

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...