Thursday, June 16, 2005

நந்தா எனும் நண்பர்

கூடப் பழகியவர்களை கொலை வழக்கில் சிக்கியதாக பத்திரிக்கைகளில் படிக்கும்போது எப்படி இருக்கும் உங்களுக்கு...??

எனக்கு திக் என்று இருந்தது.

திருவாரூர் முரா.சன்ஸ் ஜவுளிக்கடை எங்கள் நெக்ஸஸ் கம்யூட்டர்ஸ் வாடிக்கையாளர்கள். 1997/98 லேயே ஏறத்தாழ இருபத்தி இரண்டு டெர்மினல்கள்/பிரிண்டர்கள் மற்றும் ஒரு நாவெல் சர்வர் இருந்தது அவர் கடையில். வியாபாரம் சொல்லி மாளாது. கும்பகோணத்தில் இருந்து பஸ் பிடித்து எப்போது திருவாரூர் போய் இறங்கினாலும் கடை ஜே ஜே என்றுதான் இருக்கும். அத்தனை வேலை நெருக்கடியிலும் உபசாரம் பலமாக இருக்கும். பக்கத்து ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட காஃபி டிபனுக்கு பிறகுதன் வேலையே. வருஷத்துக்கொருதரம் சுளையாக மெயிண்டனன்ஸ் காண்ட்ராக்ட் பணமும் வந்து விடும்.

அப்போதுதான் எனக்கு நந்தகோபாலைத் தெரியும். அவர்தான் இப்போது கொலைவழக்கு/ விசாரனை என்று அலைக்கழிந்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்துவதாக ஜூ.வி சொல்கிறது. பேர் நந்தகோபால் என்றாலும், நான் நந்தா என்றுதான் விளிப்பேன். மற்ற எல்லாருக்கும் சின்னதம்பி. உயரமான உருவம். ஆளை மயக்கும் பேச்சு. நெற்றியில் நீளக்கீற்றாக குங்குமம். பிஸினஸில் கெட்டி. அந்தக் குடும்பமே வேதாத்ரி மகரிஷியின் பக்தர்கள். என்னைக்கூட ஒருமுறை ஆசிரமத்துக்கு வரும்படி அழைத்தார்கள்

சுற்றுப்பட்ட ஊர்களில் இருந்து திருவிழாவுக்கு வருவது போல கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால் பணத்துக்கும், வியாபாரத்துக்கும், ஊர் செல்வாக்குக்கும், புகழுக்கும் குறைவே இல்லை. வேண்டும் என்று சொன்னால், தானாகவே வருவதற்கு ஆட்கள் அவருக்கு உண்டு. பெண்ணை ஏமாற்றி, கடைசியில் கொலை செய்து விட்டதாக வழக்கு இப்போது. இதில் உள்ளூர் திமுக தலைகளும் ஏகபட்டது தெரிகின்றன.

என்ன ஆகிறது மனிதனுக்கு..?? எல்லாம் கிடைத்தவுடன் எதையாவது வலிந்து பிடித்து இழுக்கச் சொல்கிறதா..?? தானாக கிடைப்பதை விட, வலிய மேலே போய் விழுவதுதான் ஒசத்தி என்று தொன்றிப் போய் விடுகிறதா..?? ஆன்மிகம், அருமையான குடும்பம் எல்லாம் போதவில்லையா..?? இல்லை எதிலும் ஆழ்ந்து ஈடுபடாமல் உலகத்துக்காக நடித்துக் கொண்டிருக்கிறோமா..??
அண்ணாச்சி, பெரியவால்(ள்) தொடங்கி ஜவுளிக்கடை அதிபர் எல்லோருமே மகளிர் விஷயத்தில் தாறுமாறாக இருப்பதாக செய்திகள் வருவது, என்னை ஒத்த சபல புத்திகாரர்களுக்கு எல்லாம் தலையில் நங் என்று தட்டி வைக்கத்தானா..?? இல்லை மேற்சொன்னவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு கட்டுப்படாமல் சந்தனக்காப்பு/வைரவேல் அணிந்த பொம்மைகளை ஆராதிக்கிறவர்களா..??

கடிக்கக் கற்றுக் கொள்ளுமுன் பல் விழுந்துவிடும் போலிருக்கிறது.

2 comments:

  1. என் சித்தப்பா பெண்கள் அனைவருக்கும் பிரசவம் ஈ.வி. கல்யாணி ஆஸ்பத்திரியில்தான் நடந்தது. அவர்கள் எல்லோருக்கும் நளினியின் அம்மா பத்மாவை நன்றாகத் தெரியும். அவர் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தெரிந்த போது என் தங்கைகள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    ப்ளாக்கர் எண் 4800161
    (எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

    ReplyDelete
  2. நண்பர்களுக்கு நன்றி.

    மூர்த்தி, விகடன் காசு வாங்க ஆரமிச்சது உமக்குத் தெரியாதா..??
    முதல்ல காசு கட்டி, உறுப்பினரா சேருய்யா :-)

    செளந்தர், உங்கள் மின்னஞ்சல் முகவரி எங்கும் காணவில்லை. sundar23@yahoo.com க்கு அன்ப்பி வையுங்கள். யாரந்த இரண்டாவது ஆள் என யோசித்துக் கொண்டே இருக்கிறேன். :-(

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...