Wednesday, December 15, 2004

எப்படி ..எப்படி..உயர்ந்தது எப்படி..??

ஏற்கனவே என் கூட பணிபுரியும் ஆசாமிகள் எப்படி ஜாலி டைப் ஆக இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறேன். ( ஆமாம்..நீ மட்டும் என்ன ..?? என்று நீங்கள் கேட்பது புரிகிறது). அதில் இந்த சமயம் பண்டிகைத் தினங்கள் வேறு என்பதால், அலுவலகத்தில் ஈயடிக்கிறது. எல்லாரும் மூன்று மணிக்கே மூட்டையை கட்டி விடுகிறார்கள்.

என்னுடைய நண்பரும் நானும் இதை ஆச்சரியமாகவே பேசிக் கொண்டிருப்போம். கம்பியில்லாத் தந்தியிலிருந்து, தையல் மிஷின், கம்ப்யூட்டர், லைட் பல்பு டெலிஃஃபோன் வரை இத்தனை அறிவியல் உன்னதங்களை கண்டுபிடித்த நாட்டில், இத்தனை காலம் நாங்கள் தங்கி இருந்ததில், சீரியஸான அமெரிக்கர்கள், புத்திசாலிகள் என்று நாங்கள் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அருமையாக வாயடிப்பார்கள். அட்டகாசமாக ட்ரெஸ் பண்ணுவார்கள். வெளெரென்று உயரமும் அகலமுமாக ஆறடிக்கும் மேல் இருப்பார்கள். ஆனால் வேலை என்று வந்து விட்டால், " இது என்னுதில்லை என்கிற NIMBY - Not In My Back yard attitude தான் எல்லார்க்கும் இருக்கிறது. ஆஃபிஸில் பாதி நேரம் ஸ்போர்ட்ஸ் பற்றி, தான் கடைசியாய் போய் வந்த வெகேஷன் பற்றி, தன் செல்ல பூனைக்குட்டிக்கு தினம் தினம் இன்சுலின் ஊசி போடுவது பற்றி, மீட்டிங்கில் ஜோக் அடித்தது பற்றி, இந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் எந்த பாருக்கு போகலாம் என்பது பற்றி என்று பேசிப் பேசி பொழுதைக் கழிப்பதே பாதி நேரம். அட...இதெல்லாம் செய்வதோடு, கொஞ்சம் வேலையும் பார்க்கலாமில்லையா...அதான் இருக்கவே இருக்கிறார்களே கன்சல்டண்டுகள். அவர்கள் தலையில் கட்டி விட்டு ஒதுங்கி விடலாமே என்ற எண்ணம்தான் இதிலும்

அதுவும், இந்த அமெரிக்கத் தலைமுறையை நினைத்தால் இன்னமும்
கலவரமாக இருக்கிறது. ஏதோ ஒரு படிப்பு, எப்படியாவது ஒரு வேலை, எங்கேயாவது படுக்கை என்று கண்டதே காட்சி..கொண்டதே கோலம்தான். ஹைடெக் வேலையெல்லாம் அவுட்ஸோர்ஸ் பண்ணப்பட்டு, இனிவரும் காலங்களில் அமெரிக்காவில் இரண்டு விதமான வேலைகள்தான் இருக்குமாம். ஒன்று மேஸ்திரி(Management) வேலை - அயல்நாட்டு ஸ்வெட் ஷாப்பில் வேலைபார்க்கும் ஆசாமிகளையும், உள்ளூர் இம்ப்ளிமெண்டர்களையும் ( இவர்களும் ஆஃப் ஷோரில் இருந்து வந்தவர்கள்) கட்டி மேய்க்க. இரண்டாவது சேவை பிரிவு வேலைகள் ( Service Industry) - ஹோட்டல் வேலை, கடைகளில் விற்பனை வேலை என்றெல்லாம் தரம் பிரிக்கப்படும் Low tech Jobs.

ஒருவேளை நாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மட்டும்தான் இப்படி ஆட்கள் இருக்கிறார்களோ. பெரிய பெரிய பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சி
நிறுவனங்களிலும் இருக்கும் அமெரிக்கர்கள் எல்லாம் புத்தி ஜீவிகளோ..?? என்று கூட நாங்கள் யோசிப்பதுண்டு. இதையெல்லாம் அம்மாதிரி இடங்களில் பணிபுரியும் சுந்தரவடிவேல் மற்றும் வெங்கட் தான் சொல்ல வேண்டும்.

இந்த இடங்களிலும், நான் சொlவது மாதிரியே நிலை இருந்தால், இந்த நாடு எப்படி இத்தனை தூரம் முன்னேறியது என்ற கேள்விக்கு கண்டிப்பாக விடை தேட வேண்டும். ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் மட்டும் இத்தகைய அபார வளர்ச்சிக்கு காரனமாக இருக்கவே முடியாது. மக்கள் இப்படி Creatures of Comfort ஆக இருந்தால், அடுத்த தலைமுறை அமெரிக்கர்கள் கதி அதோ கதிதான்.

அதற்குள் நாட்டுப்பற்று எனக்கு பெருகி விட்டது என்று அபார பல்டி அடித்து தாயகம் இருக்கும் திசை நோக்கி பாய்ந்து விடவேண்டும்.ஹி..ஹி

தெரிந்தவர்கள், என் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.

7 comments:

  1. சுந்தர்,

    நான் அலுவலகத்திலும் இடையே வலைப்பதிவுகளில் உழல்வதும், தமிழ்மணம் போன்ற நேரமுழுங்கி வேலைகளில் இறங்குவதையும் இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் செய்திருந்தால் என் பணிகடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் இங்கே இந்த வருடம் நான் செய்த வேலை ஒன்று காப்புரிமைக்காகப் போகிறது, இன்னொரு வேலைக்காக எனக்கு ஒரு பொற்கிழி தயராகிக்கொண்டிருக்கிறது!

    ஏன்? இவர்கள் திட்டமிடுவதே கொஞ்ச நேரத்துக்குத்தான். ஒரு வார வேலை இவர்கள் கொடுத்தால் பல சமயம் ஓரிரு நாளுக்குமேல் ஆகாது. சில சமயம் ஓரிருமணிக்குள்கூட முடித்துவிடலாம். அப்படியானால் மீதிநேரம் வேறு வழிகளில் செலவிடுவது துரோகம் ஆகாதா? கடுமையான கொள்கைகளின்படி ஆம். ஆனால் நடைமுறையின்படி இல்லை. உண்மையில் நம்மால் முடியும் வேகத்தில் செய்ய ஆரம்பித்தால் நாம் அணியில் தனியனாகிவிடுவோம், கருங்காலியாகிவிடுவோம், நம்மை அணியிலிருந்தே தூக்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

    எனவே ஊரோடு ஒத்துவாழவேண்டி இப்படியே போகிறோம். மற்றபடி உங்கள் கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. ஆனாலும் சில வித்தியாசங்க்கள்:

    இவர்கள் மெதுவாக செய்தாலும் பெரும்பாலும் பிழைகள்/திருத்தங்கள் அதிகம் இன்றி இருக்கிறது. நம் ஊரில் நான் பார்த்தவரை மாங்குமாங்கென்று ஓடிஓடித் தப்புசெய்வோம். திருத்துவோம், மறுபடியும் திருத்துவோம். யார் இல்லாவிட்டாலும் நடக்கும்படி அமைப்பது. நாம் இன்னும் இதில் உசத்தியில்லை. பிறகு, எதிலும் உச்சம் காண்பது. அருண் சொன்ன மாதிரி. நாம் ஒரூ 90-95% வந்துவிட்டால் போதும், அதுக்குமேல் பூரணத்தை எதிர்பார்ப்பதில்லை.

    இவை என் கலர்க்கண்ணாடி போட்ட பார்வையில் தெரிந்த ரெண்டணா. அப்படியே உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
  2. "அதற்குள் நாட்டுப்பற்று எனக்கு பெருகி விட்டது என்று அபார பல்டி அடித்து தாயகம் இருக்கும் திசை நோக்கி பாய்ந்து விடவேண்டும்.ஹி..ஹி"
    :) :)

    ReplyDelete
  3. காசி சொன்னது போல் நம்மூரில் பெரும்பாலான வேலைகள் காலம் முழுவதும் 'fire fighting' ஆகவே இருக்கின்றன. இவர்கள் ஒன்றைச் செய்தால் அதற்கான ஆவணங்கள், செய்முறைகள் முதலானவற்றைப் பக்காவாகத் தயாரித்துவிடுகிறார்கள். அதனால்தான் அக்கடா என்று இருந்துவிடுகிறார்களோ என்னவோ! அருண் சொன்ன 'specialisation'மும் சரியான ஒன்று. நம்மைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா - jack of all trades.

    ReplyDelete
  4. காசி சொன்னது அனைத்தும் சரியே. இதையேதான் நானும் நினைப்பதுண்டு. இங்கே பல்கலைக்கழகங்களில் மட்டும் பெரிய வித்தியாசம் இல்லை. வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பதனால்தான், ஐந்து நிமிடம் வேலைசெய்தாலும் உருப்படியாகச் செய்யமுடிகிறது என்று நினைத்துக்கொள்வேன். ஒரு சொலவடை உண்டு: "ஒரு சாமானிய இந்தியன் சாமானிய அமெரிக்கனைவிடப் பலபடி மேல், ஆனால் ஒரு புத்திசாலி அமெரிக்கன் பல புத்திசாலி இந்தியர்களுக்குச் சமானம்" என்று. உண்மையா இல்லையா என்று பலகாலம் இருந்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களும்தான் சொல்லவேண்டும். மேலும், மடையனின் கருத்துக்கும் இங்கே platform கிடைக்கும் என்பதால், சொல்லவந்ததைச் சொல்லத் தயங்கவேண்டியதில்லை; 'நீ பெரிய இவனா' என்று இப்போதுவரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை.

    மேலும் முக்கியமான விஷயம், கல்லூரி முடித்து நான் வெளிவரும்போது நம்மூரில் எங்கள் பல்கலைக்கழகத்தில் அஸிஸ்டெண்ட் ப்ரொஃபசர் வேலை வாங்க ரேட்டு ஆறு-ஏழு லட்சம்! ஹிஹி, கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்ளவும்.

    ஜெர்மானியர்கள் இன்னும் குறைச்சலான நேரமே வேலைசெய்வதாக இங்குள்ள சில ஐரோப்பிய நண்பர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. காசி சொன்னதில் வெகு நிஜமானது - தவறுகள் அதிகமின்றி முதல்முறை செய்து முடிப்பது. அதுவே நேரவிரயம், பணவிரயம் போன்றவற்றைத் தவிர்த்து, மன உளைச்சலையும் அதைத் தொடரும் domino effect ஐயும் பெருமளவு தவிர்க்கும்.

    ReplyDelete
  5. அட, இது திரிமாதிரிப் போகும்போல இருக்கே:-)

    இந்த, பலசெயல்கள் 'பிழைகுறைவாய்/ஆளுக்காள் தனித்தன்மையின்றி' செய்யப்படுவதற்கு ஒரு உதாரணம். ஒரு CSR ஐ எடுத்துக்கொண்டால், 'How may I help you today?' என்று ஆரம்பித்து 'You are all set' என்றுதான் முடிப்பார்கள். கணினியில் Log-in, sign-out என்பதுபோன்ற பேசும்போதும் துல்லியமான சொற்பிரயோகம்! பன்மொழி/இன மக்கள் இருப்பதால் ஒவ்வொரு நடை/பாணியில் பேச ஆரம்பித்தால் விளங்கிக்கொள்ள தாமதமாகலாம். தவறு ஏற்படலாம். இவர்களின் ஆங்கில vocabulary மிகவும் சிறியது. ஏனென்றால் ஒரு சொல்லுக்கு இன்னொன்று எளிதில் பதிலியாக பாவிப்பதில்லை. அதெல்லாம் இலக்கியத்துக்குத்தான் உவமை, சிலேடை, அணி, எல்லாம். மொழிவளத்தை வளர்க்கவோ, பெருமைக்காக காட்டிக்கொள்ளவோ தேவையில்லாமல் புது சொற்பிரயோகங்கள் செய்வதில்லை.

    தொலைபேசி எண்ணை எடுத்துக்கொள்ளலலாம், xxx-xxx-xxxx என்ற வடிவம் எங்கும் என்றும் மாறுவதில்லை. நம் ஊரில் சென்னைக்கு 044-xxxxxxxxx (எத்தனை xன்னு தெரியலை, எனக்கு சென்னையில் யாரும் இல்லை), கோவைக்கு 0422-xxxxxxx, உடுமலைக்கு 04252-xxxxxx, புதுப்பாளையத்துக்கு 04795-xxxxx, பெதப்பம்பட்டிக்கு -0425286-xxxxx என்று எத்தனை வடிவங்கள். ஒரு ஒற்றை அரசு நிறுவனம்/துறையின் கட்டுப்பாட்டிலிருந்த விஷயத்திலேயே ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? ஒருவர் எளிதில் ஒரு இலக்கத்தை மறந்துவிட இருக்கும் வாய்ப்பை உணர்ந்து அதைத் தவிர்க்க எதாவது நடவடிக்கை எடுத்தோமா?

    இங்கே தெருவில் கதவு எண்களை எடுத்தால் ஒருபக்கம் ஒற்றைப்படை, இன்னொரு புறம் இரட்டைப்படை, ஏறுமுகம் என்றால் ஏறுமுகம், இறங்குமுகமென்றால் இறங்குமுகம், ஒரு குறுக்குத்தெருவுக்கும் அடுத்த குறுக்குத்தெருவுக்கும் இடையே ஒரு ப்ளாக், குறுக்குத்தெரு தாண்டினால் அடுத்த ப்ளாக். நம் ஊரில் ஒரு எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு ராத்திரியில் போய் ஒரு வீட்டைக் கண்டு பிடிக்க முடியுமா? ஒரு நகருக்குள் ஒரே பெயரில் தெருப்பெயர் வராது இங்கே. அபப்டி வந்தால், road, lane, avenue, street, circle, என்று அடுத்து வரும் சொல்லில் மாற்றம் செய்து அதன் தனித்துவத்தை நிறுவுகிறார்கள். அதனால்தானே mapquest துல்லியமாக வழிகாட்டுகிறது. தெருவில் கிழக்கு மேற்கை எத்தனை உறுதியாகப் பாவிக்கிறார்கள். வழிகேட்டாலே கிழக்கே போ மேற்கே போ என்கிறார்கள். நான் அப்படி ஊரில் சொன்னேனென்றால் என்னை கிராமத்தான் என்பார்கள், நம்ம ஊர் படித்த முட்டாள்கள். (இந்த ஒரு விஷயத்தில் என்னால் பதவிசான சொல் சொல்லமுடியாது, திசை உணர்வு இல்லாதவன் படித்த மிருகம், மனிதன்கூட இல்லை) இதையெல்லாம் கவனிக்காமல் அவுட்சோர்சிங்கினாலோ, அம்புலிக்கு ராக்கெட் விடுவதாலோ எதுவும் நடக்காது.

    இயல்பான, வாழ்க்கைக்கு தேவையான எதையும் படித்தவர் செய்வது இல்லை, வறட்டு வேதாந்தம் பேசி, கதை கவிதை (இப்போது சினிமா,சீரியல்) என்று தான் படித்தவர் தம் 'திறமை'யைக் காட்டுகிறார். என்னத்தை சொல்ல.

    ReplyDelete
  6. // 'நீ பெரிய இவனா' என்று இப்போதுவரை யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. //montresor and kaasi are right..
    உண்மை தான்..ஆபீஸரைப் பார்த்து கூனி கும்பிடு போடுவதில்லை...வாட்ச்மேனையும் மரியாதையாக நடத்துவார்கள்...மற்றும் திட்டமிடுதல்...Norms எல்லாம் இருக்கிறது. வேலையை தவிர பொழுது போக்குகளுக்கும் கவனம் செலுத்துவதால் வேலையும் நன்றாகவே நடக்கிறது என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் ஐரோப்பாவில் மிக குறைவாகவே வேலை செய்கிறோம். :))

    ஆமாம்..ஐயா ஊரில் அரசாங்க அலுவலங்களுக்கு போனதில்லையா?

    ReplyDelete
  7. நன்றி மக்களே. ஆனால் விவாதம் கிளை பரப்பி வேறு தளங்களில் நீண்டு விட்டது என்று நினைக்கிறேன். நான் வேலை பார்க்கும் ஸ்டைல் பற்றி சொல்லவில்லை. மாற்று கருத்துகளை மதிக்கும் , காது கொடுத்துக் கேட்கும் குணத்தையும் சொல்லவில்லை. பொதுவாகவே வேலை சார்ந்த விஷயங்களில் சீரியஸ் ஆக இருக்கும், இது தன்னுது என்று ஓனர்ஷிப் எடுத்துக் கொண்டு மெனக்கெடும், டெடிகேஷன் உள்ள ஆத்மாக்கலை இவ்வளவு குறைவாக வைத்துக் கொண்டு, எப்படி இவர்கள் இத்த்னை சாதித்தார்கள் என்று கேட்டேன்.
    வெங்கட் எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். பார்ப்போம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...