Monday, January 24, 2005

ரெய்ன்கோட்

படத்தை பற்றி ஏற்கனவே இணைய நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்ததால், எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. படம் என்ன வகை என்று தெரியாதது ஒரு விதத்தில் நல்லதாய் போனாலும், ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதித்தது.



நீருவின் வீட்டு வாசலில் மன்னு அழைப்பு மணியை அடிக்கும் நிமிடத்தில் இருந்து படம் ஒரு கச்சிதமான சிறுகதை. ஐஸ்வர்யா(நீரு) அழகாக கலைந்த ஓவியம் போல் இருக்கிறார் - மனசுக்குள் கடலூர் ஹீரோவைத் திட்டிக் கொண்டேன். மன்னுவுடன் பேசிக் கொண்டே நீரு, தன் வாழ்க்கையை, தன் சந்தோஷத்தை விளக்கும் போது, அவர்களுடைய கடந்த காலத்தினை கோஷ் நடு நடுவே துளித் துளியாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். சம்பாஷணைகள் நடுவே ஐஸ்வர்யாவின் விநோதமான சில செய்கைகளை, அவள் பதட்டத்தை காட்டுவதன் மூலம், "என்னவோ இடிக்கிறதே" என்ற எண்ணம் எழுமாறு செய்திருக்கிறார். ஜன்னல் மூலம் கூப்பிட்டு உள்ளே வந்த ஆசாமி ஒருவர் பேசும் காட்சிகளில் எல்லாம் சஸ்பென்ஸை இன்னமும் வளர்க்கிறது

மெல்ல முடிச்சு அவிழ்ந்து, இருவருடைய பாவனைகளும் இருவருக்கும் தெரிந்து போய், அதை சொல்லிக் கொள்ளாமல் இருவரும் தொடர்ந்து பொய்ப்பந்தலை இறுக்கிக் கட்ட முனையும்போது, பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஐயோ பாவமே என்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் நீரு உடைந்து போய் அழ ஆரம்பிக்க,
தேற்றுவது தெரியாமல், மன்னு முகத்தில் இயலாமையோடு அவளிடம் ஏதேதோ சொல்லிவிட்டு, நண்பனின் வீட்டுக்குள் வந்து இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறார். அவர் போட்டு சென்ற ரெய்ன்கோட்டை சோதிக்கும் நண்பனின் மனைவி படத்தை முடித்து வைக்கிறார்.

அஜய் தேவ்கன் 'கலக்கி' இருக்கிறார். அமைதியான, மிகையற்ற நடிப்பு. ஆதிகாலத்தில் இவரை ' பொணத்துக்கு ஷேவ் பண்ணா மாதிரி இருக்கான்" என்று கிண்டல் அடித்ததுண்டு. தொடர்ச்சியாக அஜய் அசத்தி வரும் படங்களை பார்த்து வருவதில், அந்த விதமான நடிப்பின்மேல் விருப்பம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. ஐஷ்வர்யாவை பற்றி ஏற்கனவே ஜொள்ளி இருக்கிறேன். சொல்ல வேண்டிய இன்னொரு நபர், நண்பனின் மனைவியாக வரும் அம்மணி. துக்கத்தை விழுங்க தான் செய்யும் முயற்சிகளை எல்லாம் அஜய்க்கு அவர் நாசுக்காக அவ்வப்போது சொல்லிக்கொண்டு வர, அஜய் உடனே அவரிடம் அந்தக் கேள்வியை கேட்டு விட, அதை நாசுக்காக வளைத்து ஓட்டும் அவர் நடிப்பு ...ஒண்ணாங்ளாஸ்.

படத்துக்கு இடையே ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு பாடல் மனதைப் பிசைகின்ற ராகத்திலும் சரி, அர்த்தத்திலும் சரி. அருமை. பொறுமையாக உட்கார்ந்து பார்த்தால், அனுபவித்துப் பார்க்க முடிகிற அருமையான முயற்சி.

1 comment:

  1. Hi Sundar,
    I saw your links in the previous posts. It is nice to know(See !!) you. Soon i will also come out ;)..

    This review is interesting. I am looking forward to watch this movie. Few stills i saw and they are great..

    ReplyDelete

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...