Wednesday, April 21, 2004

ருசி கண்ட பூனை
=============

நண்பர்கள் மன்னிக்கவும். முக்கியமான காரியமாக நேற்று அலைய வேண்டி இருந்ததால் ஏதும் எழுத முடியவில்லை. குளித்துமுடித்து, ஒன்பது மணிக்கு மேல், என் வலைப்பதிவை பார்த்தபோது ஏதோ இழந்தாற்போல இருந்தது நிஜம்.

எழுத ஆரம்பித்த இத்தனை குறுகிய காலத்திற்குள்ளாகவே, என்னுள் படரும் நிம்மதியை, லேசாக எனக்குள் படரும் தெளிவை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார் போலிருக்கிறது. லேசாக சீட்டி அடித்துக் கொண்டே, பூந்தூறல் அடிக்கும் மலைப்பாதையில், மனசுக்குப் பிடித்தவளின் சூடிதார் துப்பட்டாவை பிடுங்கி இடுப்பில் கட்டிக் கொண்டே அவளுடன் நடப்பது போலிருக்கிறது

'தமிழ் இத்தனை காலம் எனக்கு சோறு போட்டது. தமிழுக்கு நான் இப்போது சோறு போடுகிறேன் " என்று கவிப்பேரரசு ஒருமுறை சொன்னாராம். அவரைப் பார்த்து எனக்கு பரிதாபமாக சிரிக்கத் தோன்றுகிறது. தமிழை வைத்து பாட்டெழுதிப் பிழைத்து விட்டு, கையில் காசு சேர்ந்தவுடன் இப்படிச் சொல்லுவது அவரின் அதீத நம்பிக்கையா அல்லது அறியாமையா என்று தெரியவில்லை. ஆனால் துளியூண்டு பொடியன் , எனக்குத் தோன்றும் இந்த விடுதலை உணர்வு அவருக்கும் வந்திருக்கும். சில படிகள் தாண்டியவுடன், எல்லாம் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளும் உணர்வு வந்து விட்டது. நாக்கு புரண்டு விட்டது.

எழுதும்போது, எனக்காக எழுதினாலும், அதைப் படித்து விட்டு நீங்கள் பின்னூட்டம் கொடுக்கும்போது, பாராட்டும்போது , சந்தோஷமாய் இருக்கிறது. அதை மறுப்பத்ற்க்கில்லை. நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாமல், அரிதாரம் களைத்து நான் ஆனந்தப்படும்போது, என்னைத் தவிர இன்னும் சில ஜீவன்களும் அதில் ஆனந்திப்பது அபூர்வமான அனுபவமாய் இருக்கிறது. பல நண்பர்களை இது எனக்கு புதிதாய் தந்திருக்கிறது. குழுமங்களில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் என்னிடம் பாரா முகமாக இருந்த பல நண்பர்கள் அடையாளமற்று நான் இங்கே எழுத ஆரம்பித்ததும் இன்னமும் இங்கே நெருங்கி வந்திருக்கிறார்கள். என் கல்லூரி நண்பர், என் சீனியர், என்னைபோலவே ஜீ.வி யில் பணிபுரிந்தவர், தமிழ்நாட்டில் இ.ஆ.ப ( மாவட்ட கலெக்டர்) ஆக இருப்பவர், இத்த்னை வருடம் கழித்து இணையத்தில் மேயும் போது , என்னை இனம் கண்டு, ' நாந்தாண்டா..காலேஜ் பெரிசு' என்று தனிமடல் இட்டிருக்கிறார். இங்கு பின்னூட்டங்கள் தந்திருக்கிறார்.

சரி..வாத்யாரே..இன்னாதான் சொல்ற நீ இப்போ என்று கொஸப்பேட்ட குப்ஸாமி கேட்பதற்குள் முடித்து விடுகிறேன்.

நான் இன்னமும் தீவிரமாக எழுத நினைக்கிறேன். 'குங்குமமோ', "ஜில் ஜில்" லோ, அதை தொடர்ந்து செய்யப்போகிறேன்.

நீங்கள் வசமாக மாட்டிக் கொண்டீர்கள்...

cat

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...