Wednesday, February 25, 2004

அன்புள்ள மாலன்,


"மே" மாத திசைகள் கண்டேன்...

மாணவர்களிடம் சமூகப் பொறுப்பு குறைந்து விட்டதாய் உங்கள் கட்டுரை விசனப்பட்டிருந்தது.சமூகப்பொறுப்பு என்று எதை சொல்கிறீர்கள்...வீதியில் இறங்கி போராடுவதையா..?? கொடி பிடித்து கோஷம் போடுவதையா..?? கொடுமை கண்டு பொங்கி எழுந்து , தன் மானசீக ஹீரோ போல மைக் பிடித்து பேசுவதையா..??

மாலன், இப்போதும் , எப்போதும் இளைய தலைமுறை விழிப்புடன் தான் இருக்கிறது. எதிர்ப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அது உங்கள் காலத்தைப் போல் வெளிப்படையாகத் தெரியாமல் அடங்கிய எதிர்ப்பாய் கனன்று கொண்டு இருக்கிறது.

இல்லாவிடில் இந்நேரம் ரஜினி கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்திருப்பார். ப.சிதம்பரம் கட்சியை கலைத்து விட்டு அவரோடு ஐக்கியமாகி இருப்பார். ஜாதிக் கட்சிகளை பிராந்திய கட்சிகளும் அகில இந்திய கட்சிகளும் வால் பிடித்துக் கொண்டிருக்கும்.

விவாதங்கள் நிகழவில்லை என்கிறீர்களா..?? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்...இணைய வெளியில் கிடைக்கும் எவ்வளவோ மலிவான விஷயங்களை விலக்கி விட்டு , எத்தனை இனையக்குழுகளில் எப்படிப்ப்பட்ட விவாதங்கள் நடக்கிறது தெரியுமா..? தனக்கு சரி என்று படும் கொள்கைக்காகவும் , சரியான தீர்வை இனங்காணுதல் பொருட்டும் . கண்ணுகுத் தெரியாத மதிப்புக்குரிய நண்பர்களுடன் எத்தனை "மானசீக " மல்யுத்தம் நடக்கிறது தெரியுமா..??

சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தில் , அடுத்த ப்ராஜெக்ட் கிடைக்குமா என்ற நிலையற்ற வாழ்வில் , வேலைப் பளு நிறைந்த ஒரு திங்கட்கிழமை காலையில், எந்த தட்டச்சும் தெரியாத என்னை எந்த சக்தி இப்படி ஆவேசமாக இயக்கிக் கொண்டிருக்கிறது..??

எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் மாலன்...

"அரசியல் எல்லாம் வேண்டாம் சார்" என்று உங்கள் மாணவ நண்பரை எது சொல்லவைத்தது. இன்றைய அரசியல் நிலைமை அல்லவா..அதற்கு நீங்களும் ஒரு காரணம் தானே. பண்ணையார்களிடமும், ஜமீன்களிடமும் இருந்த அரசியலை சாமான்யனுக்கும் கொண்டு வருகிறோம் என துடை தட்டிக் கிளம்பிய திராவிட இயக்கங்கள், தனிமனித மதிப்புகள் கூட இல்லாத குப்பனுக்கும் , சுப்பனுக்கும் பதவி கொடுத்து அவர்களையும் ஊழல்வாதிகளாய் ஆக்கியத்துதான் மிச்சம். அந்த நோக்கம் நிறைவேற , மொழியின் பெயரால் உங்களைப் போன்ற மாணவ சக்திகளை உபயோகப்படுத்திக்கொண்டார்கள். திராவிட அரசியலை ஆரம்பித்து வைத்த பொறுப்பு உங்கள் தலைமுறை செய்த காரியம். அந்த காரியத்தின் விளைவை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நொந்து போன நாங்கள், எங்கள் வாழ்க்கைக்கான தேவையாக உள்ள பணத்தையும் அது தரும் பாதுகாப்பையும் தேடிவதில் என்ன குறை கண்டுவிட்டீர்கள்?. வீட்டை குறையுள்ள இடமாக விட்டு விட்டு நாட்டை திருத்த புறப்பட வேண்டுமா..? பின் எங்கள் தேவைகளுக்காக பொதுப்பணத்தில் கை வைக்க வேண்டுமா..?? என்ன மாற்றம் நேர்ந்து விடும் இத்னால்..தனி மனிததேவைகள் தீராமல் பொது வாழ்க்கை புனிதம் எங்கிருந்து வரும்.

நேர்மையான முறையில் எங்கள் தேவைகளை தீர்த்து விட்டு, பின் சேவைக்கு வருகிறோம் மாலன்.

எல்லாத்துறைகளிலும் ஒழுங்கின்மை தான். மறுக்கவில்லை. ஆனால், மற்ற துறையில் உள்ள ஒழுங்கின்மையைவிட அரசியல் துரையில் அதிகம் அல்லவா..?? மற்ற எல்லாவற்றிலும் உள்ள ஒழுங்கின்மை எங்கிருந்து வந்தது. எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடிய அரசியல் ஒழுங்கற்றுப் போனதன் அவலம் தானே இது. "யதா ராஜா...ததா பிரஜா" என்பது உங்களுக்குத் தெரியாததா..??

இந்த தலைமுறை பொருள் தேடட்டும் மாலன்...சென்னையிலும், ஜெர்மனியிலும் , லண்டனிலும், அமெரிக்காவிலும் தன் வாழ்க்கைக்கான ஸ்திரத்தன்மையை தேடட்டும். வெள்ளை மேலாளர்களை பணிந்து சுந்தர்ராஜன் சேர்க்கும் இந்த டாலர்கள், சூர்யாவுக்காவது ஸ்திரத்தன்மை தந்து, அவன் சமூகப்பொறுப்பு வெளிவரட்டும்.

இப்பொதைய எங்கள் "அடங்கிய" எதிர்ப்பு எல்லாம் எதிர்கால நன்மைக்காகவே...

பொறுங்கள்...மாலன்..தூரம் அதிகமில்லை..


சுந்தரராஜன்
சாக்ரமண்டோ
கலி·போர்னியா.

பிகு:

திசைகள் மாலனுக்கு எழுதிய கடிதம்....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...