Wednesday, February 25, 2004

முருகன்,

இது ரொம்ப ஓவர்...

இந்த விவாதம் ஒவ்வோரு முறையும் இங்கே கிளம்பி, வேண்டாத திசையில் திரும்பி, பலத்த மனச்சேதத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

எல்லா இலக்கிய வடிவங்களிலும் தரமான படைப்புகள் உண்டு. மலிவான, கவைக்குதவாத சமாசாரங்களும் உண்டு. அது தங்களுக்கே தெரியும். முந்தைய விவாதங்களில் நீங்களே இதை இங்கே எழுதி இருக்கிறீர்கள்.ஆயினும் திரும்பத்திரும்ப புதுக்கவிதையை/ அதை எழுதுபவர்களை, சமயமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் தூற்றிக்கொண்டிருக்கிறீர்கள். இதை எழுதின சுஜாதாவே "புதுநானூறு" என்று ஒரு பகுதியில் புதுக்கவிதைகளை அறிமுகப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்.

அது மட்டும் அல்ல...உங்கள் குருநாதரே (மீரா) புதுக்கவிதையால் அறியப்பட்டவர்தான். நமது ராமின், கவிஞர்.வைத்தீஸ்வரனின், திரு. ஹரியின், புதுக்கவிதைகளை சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள். உங்களை நான் ரசிக்கத் தெரிந்து கொண்டதே உங்கள் புதுககவிதை தொகுப்பால் தான்.( ஒ.கி.பெ.தலைப்பிரசவம்...)

அப்படி இருக்¨காயில், புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவத்தை இந்த மிதி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் படங்களைப் பற்றி பேசுகையில் சோமன துடியைப் பற்றியும், செம்மீனைப் பற்றியும்,
தான் பேசுகிறீர்கள். இராம நாராயணன் படம் பற்றியும், (மலையாள)கே.எஸ். கோபால கிருஷணன் படங்களைப்பற்றி பேசி, அதனால் சினிமா எடுப்பதையே ** தடை** செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை.

கதைகளைப் பற்றி பேசுகையில் அசோகமித்திரன் பற்றியும், புதுமைப்பித்தனையும், தி.ஜா.ரா வையும் பேசுகிறீர்களே ஒழிய , அழகாபுரி அழகப்பனையும், புஷ்பா தங்கதுரை கதைகளுக்காக கதை எழுதுவதையே ** தடை** செய்ய வேண்டும் என சொல்வதில்லை.

புதுக்கவிதை பற்றி பேசும்போது மட்டும், பத்திரீகையில் வரும் தரமில்லாத புதுக்கவிதைகளுக்காக இதை தடை செய்ய வேண்டும் சொல்கிறீர்கள்.எனக்கு இந்த லாஜிக் சுத்தமாக புரியவில்லை.

எழுதுபவர்கள் செய்யும் தவறுகளுக்காக இலக்கிய வடிவங்களை குறை சொல்ல துவங்கினால், அதை எல்லாவற்றுக்கும் செய்யுங்கள். எழுதுபவர்கள் அதிகம், என்ணிக்கையும் அதிகம் என்பதற்காக பு.கவிதையை வையாதீர்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல, இதை பொதுப்படையாக "வார்த்தைக் கழிச்சல்" என வகைப்படுத்தும் எல்லா "பெரிசு"களுக்கும் ( வாத்தியார் உள்பட) சொல்கிறேன்.


- சுந்தரராஜன்



( புதுக்கவிதைக்கு வக்காலத்து வாங்கி, ரா.கா.கி யில் வீங்கியது)

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...